World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German reactions to Aznar defeat: Die Zeit insults Spanish voters

அஸ்னர் தோல்விக்கு ஜேர்மனியில் எதிர்விளைவுகள்: டி சைற் ஸ்பெயினின் வாக்களிப்பை அவமதிக்கிறது

By Ulrich Rippert
30 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

மாட்ரிட்டில் பெரும் அழிவை தந்திருந்த குண்டு வீச்சுக்களுக்கு பிறகு நடந்த, ஸ்பெயின் பாராளுமன்ற தேர்தல் ஐரோப்பிய தலைநகரங்கள் அனைத்திலும் ஆக்கிரோஷம் மிகுந்த எதிர்விளைவுகளை சந்திக்கிறது. பழமைவாத அஸ்னர் அரசாங்கம் தோல்வி அடைந்தது, லண்டன், ரோம் மற்றும் வார்சாவில் அரசாங்கங்களை பெரும் அதிர்ச்சிக்கு உட்படுத்தியுள்ளது; இவை போர் தொடுக்க விரும்பும் அச்சு நாடுகளின் முக்கிய நட்புநாட்டை இழந்து விட்டன. மேலும், ஈராக்கிய போர் இன்னும் தீவிரமாக விமர்சனத்திற்குட்பட்டிருந்த பாரிசிலும், லண்டனிலும், தேர்தல் முடிவுகள் ஓர் அதிர்ச்சியையே கட்டவிழ்த்துள்ளன.

இடது, வலது என்ற இருபுறத்து அதிகாரபூர்வ கட்சிகளை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்திய ஏதோ ஒன்று நடந்துள்ளது. ஸ்பெயினுடைய மக்கள், ஆளும் செல்வந்தத் தட்டின் தேர்தல் சூழ்ச்சிகளைத் தகர்க்கும் வகையில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவரை, அரசியல் வாதிகளும், கட்சி பற்றிய ஆராய்ச்சியாளர்களும் ஒரு பகை நாட்டு இராணுவ தாக்குதலைப்போல் ஒரு கணிசமான பயங்கரத் தாக்குதலை எடுத்துக் கொண்டால், அது பெரும்பான்மையான மக்களை தேசிய அடையாளங்களுக்குள் ஒன்றுபடுத்தி விடும் என்றும், தற்காலிகமாகவேனும் உள்நாட்டு முரண்பாடுகளை குறைத்துவிடும் என்றும், நாட்டின் பழமைவாத சக்திகளை வலுப்படுத்தும் என்றும் உறுதியாக கருதியிருந்தனர்.

இந்த அடிப்படையில், பயங்கரவாத தாக்குதல்களை பல அரசாங்கங்கள் பயத்தைக் கிளப்பி விடுவதற்கும், தேசிய போக்குகளை வளர்ப்பதற்கும் பயன்படுத்தி, அதேநேரம் ஜனநாயக உரிமைகளை குறைப்பதற்கும் உபயோகித்தன.

ஷரோன் அரசாங்கம் இஸ்ரேலில், தற்கொலைப்படை தாக்குதலை தூண்டிவிடும் தன்னுடைய அரச பயங்கரவாதத்தை பயன்படுத்தாமல், ஒரு நாள்கூட ஆட்சியில் தொடர்ந்து இருக்கமுடியாது. சில நாட்களுக்கும் முன் மிருகத்தனமான முறையில் ஷேக் அகமது யாசின் கொலை செய்யப்பட்டது இதை கோடிட்டுக் காட்டுகிறது. புஷ் நிர்வாகம், ஈராக்கிற்கு எதிரான தன்னுடைய போரை நியாயப் படுத்துவதற்கு, செப்டம்பர் 11, 2001 தாக்குதலைப் பயன்படுத்தியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சில குண்டுகள் மாஸ்கோவில் குடியிருப்புப் பகுதிகள் அழிந்து, 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, பொதுமக்கள் பெரும் பீதியில் இருந்ததை அடுத்து அதிகாரத்திற்கு வந்தார். இந்த தாக்குதல்களின் பின்னணியை கண்டுபிடிக்க முயற்சி செய்திருந்த இரண்டு செய்தியாளர்கள், புதிர் நிறைந்த சூழ்நிலையில் பின்னர் இறந்து போயினர்.

இதேபோல், மாட்ரிட் தாக்குதல்களை தன்னுடைய நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள அஸ்னர் அரசாங்கம் உடனடியாக முயற்சி செய்தது. பிரதம மந்திரி, தானே நேரடியாக செய்தியாளர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, பாஸ்க் தேசிய கட்சியான ETA தான் இதற்குப் பொறுப்பு என்று கூறினார். ஆனால் ஸ்பெயினுடைய வாக்காளர்கள், தங்கள் வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்தி, பல அரசியல் சிடுமூஞ்சியாளர்கள் நம்புவதுபோல், வாக்காளர்கள் முடிவு தெரியாத காலம் வரை ஏமாற்றப்படமுடியாது என்பதைக் காட்டியுள்ளனர். அதிர்ச்சி, துக்கம் ஆகியவை நிறைந்த சூழ்நிலையிலும், பெரும்பான்மையான மக்கள், அரசாங்கத்தின் போர்க்கொள்கைதான் பயங்கரவாத தாக்குதல்களுக்குக் காரணம் என்ற அரசியல் விடையைக் கொடுத்தனர்.

ஸ்பெயின் நாட்டுத் தேர்தல், வரவுள்ள அரசியல் வளர்ச்சிகளில் கூடுதலான முக்கியத்துவத்தின் தொடக்கங்களை வெளிப்படுத்தியுள்ளன: பெரும்பாலான மக்கள் சுதந்திரமான முறையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர் என்பதே ஆகும் அது.

இதுதான் எல்லா அரசாங்கங்களையும் பெரிதும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது.

எனவேதான், தேர்தல்களை அடுத்து உடனடியாக, நிகழ்வுகளுக்கு மறு விளக்கம் கொடுக்கும் நோக்கில் தீவிர செய்தி ஊடக பிரச்சாரம் ஆரம்பமானது. குறிப்பாக ஜேர்மனியில், கீழ்மட்டத்தில் அரசியல் இயக்கம் சுதந்திரமாக வருவது பெரும் சந்தேகத்துடன் கருதப்படும் நிலையில், செய்தி ஊடகம் பெரும் குரலுடன் முழக்கமிடத்தலைப்பட்டது. அனைத்துவிதமான வர்ணனையாளர்களும், அடிக்கடி அமெரிக்க செய்தி ஊடகத்தையும் புஷ் நிர்வாகத்திற்கு அவை தாழ்ந்து நிற்பதையும் விமர்சிக்க தயாராக இருந்தவர்கள், தங்களுக்கென வரும்போது தாங்களும் அமெரிக்கச் சகாக்களை போல் அரசாங்கம் கிழிக்கும் கோட்டை தாண்டாமல்தான் இருப்போம் என்று தெளிவாக்கி இருக்கின்றனர்.

இந்த முயற்சி தன்னை ஜேர்மன் செய்தி ஊடகத்தின் தலைமை கப்பல் என்று கூறிக்கொள்ளும் வெளியீடான, வாராந்திர ஏடான Die Zeit ஆல் தலைமை ஏற்கப்பட்டது. "இஸ்லாமிய பாசிச தாக்குதலுக்கு சமாதானப்படுத்துதல் விடையல்ல: ஸ்பெயின் நாட்டவர்கள் மாட்ரிட் தாக்குதல்களிலிருந்த தவறான படிப்பினைகளை கொண்டுள்ளனர்" என்ற தலைப்பில், ஆசிரியர் Josef Joffe ஸ்பானிய வாக்காளர்களை இலக்கு கொண்டு கனல்கக்கும் கட்டுரையை வெளியிட்டார்.

ஜோபே, மிகவும் ஒருதலைப்பட்சமாக, அனைத்துப் பிரச்சினைகளிலும் அமெரிக்க, இஸ்ரேலிய கண்ணோட்டத்தை ஆதரிக்கிறார் என்பதும் அவருடைய தீவிர ஆர்வமான தூண்டிவிடுதல் Die Ziet ல் வேலை செய்யும் எல்லோராலும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்பதும் தெரிந்ததே. ஆனால், பழைய சான்ஸ்லர் ஹெல்முட் சிமித் (சமூக ஜனநாயகக் கட்சி) அவரும் வாராந்திர ஏட்டின் வெளியீட்டாளர் ஆவார்.

"ஒரு கட்டுரையை மிகப்பெரிய பொய்யுடன் தொடங்கு!" என்ற அரிய நோக்கத்திற்கு ஏற்ப, ஜோபே, தன்னுடைய கட்டுரையை, "ஸ்பெயினில், பயங்கரவாதம் முதல் முறையாக ஒரு தேர்தலை வென்றுள்ளது" என்று தொடங்கியுள்ளார்; பெரும்பாலான ஸ்பானிய வாக்காளர்களை, இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு துணைநிற்பவர்கள் என்று கூறியுள்ளார். இதற்குப்பின் இந்த மதிப்பீடு வருகிறது: "இதுவரை பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது, ஒவ்வொரு மேலை ஜனநாயக நாடும் அதன் தலைமையை ஆதரித்துள்ளது, அது இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, இத்தாலியோ அல்லது இஸ்ரேலோ எந்த நாடாயினும் சரி. ஆனால் ஸ்பெயினில் அவ்வாறு அல்ல; அங்கு சர்வதேச பயங்கரவாதம் இருவிதத்தில் மகிழ்ச்சி அடையலாம்: பயங்கரவாதத்திற்கெதிரான கூட்டில் ஒரு தூணை அது தகர்த்தது மட்டும் அல்லாமல், சமாதானம் வேண்டும் என்று கூறவைக்கும் முறைக்கு, உளவியிலில் பெரும் வெற்றியையும் அது கண்டுள்ளது. இந்த வெற்றி பயங்கரவாதத்தைக் குறைக்காது, இன்னும் கூடுதலான தாக்குதல்களைத்தான் கொண்டுவரும்."

ஒரு வாக்கியத்தில் எத்தனை முட்டாள்தனங்களைச் சுருக்கிக் கூறமுடியும்? ஸ்பெயினில் பெரும்பாலான வாக்காளர்கள், அஸ்னருடைய பழமைவாத People's Party க்கு வாக்களித்திருந்தால், ஜோபேயின் கூற்றின்படி, "ஜனநாயகம்" (அதாவது "மக்கள்") "தங்கள் தலைமைக்கு" ஆதரவு கொடுத்தது போல் ஆகும். ஏன்? கடந்த ஆண்டு, ஸ்பெயினில், பல்லாயிரக்கணக்கான மக்கள், சில சமயம் மில்லியன் கணக்கில்கூட, பலநேரம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும் சமுதாய நலத்திட்டங்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளனர். அப்பொழுது தலைமையைப் பற்றி, மக்களுடைய நலன்களைப்பற்றிப் பிரதிபலிக்கும் தலைமையைப் பற்றி என்ற உணர்வில் பேச்சு ஏதும் வரவில்லை. அஸ்னருக்கும் அவருடைய Partido Popular க்கும் தீவிரமான மாற்று இருந்திருந்தால், அது இன்னும் சீக்கிரமாகவே வெளியே அனுப்பப்பட்டிருக்கும்.

தேர்தலில் PSOE (சோசலிசக் கட்சி) தேர்ந்தெடுக்கப்பட்டது சோசலிஸ்டுகள் மீதான ஒரு நம்பிக்கை வாக்களிப்பு இல்லை. கடைசி நிமிஷம் வரை, பல ஸ்பானிய மக்களும் சமூக ஜனநாயகவாதிகளை நிராகரித்துத்தான் வந்திருந்தனர். ஐரோப்பாவில் மற்ற சோஷல் டெமக்ராடிக் அரசாங்கங்களின் பங்கு ஒரு புறம் இருக்கட்டும், அவர்கள் பின்னால் அஸ்னர் பதவிக்கு வர உதவிய Gonzales உடைய அரசாங்கத்தின் பங்கையும், அதன் கணக்கிலடங்கா ஊழல் அவதூறுகளையும் மறக்கவில்லை. ஸ்பெயினில் தேர்தல் நடந்த அன்றே, ஆஸ்திரிய மாநிலமான கோரிந்தியாவில் வலதுசாரி தீவிரவாதி ஜோர்ஜ் ஹைடருடன் ஒரு கூட்டரசாங்கம் அமைப்பதற்கு சமூக ஜனநாயகவாதிகள் உடன்பட்டனர்.

ஸ்பானிய தேர்தல், ஒரு வெறுப்பிற்குட்பட்டிருந்த அரசாங்கத்திற்கெதிரான வாக்கெடுப்பு, அதிலும் பொதுமக்களுடைய நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துதற்கு வேறு எந்த அமைப்பும் இல்லாதபோது, இது PSOE க்கு ஆதரவு வாக்கு என்ற வடிவத்தை கொண்டது.

ஜோபேயின் இரண்டாவது முட்டாள்தனம், "சர்வதேச பயங்கரவாதம்" இந்த தேர்தலின் முடிவினால் வலுப்பெற்றுள்ளது என்ற கருத்தை அவர் கூறியுள்ளதாகும்; அது "பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டை தகர்த்துவிட்டது" மட்டுமின்றி, "தணிக்க வேண்டும் என்று கோருவோருக்கு ஆதரவாக பலத்த அடியாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார். இங்கு, ஜோபே புஷ் நிர்வாகத்தின் மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் சொல்லை சொல்லுக்கு சொல் பயன்படுத்தியுள்ளார்; அது ஈராக்கிய போரையும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்பு, மூலப்பொருட்களை கொள்ளையடித்தல் ஆகியவற்றை "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை காரணம் காட்டி நியாயப்படுத்துகிறது.

உண்மையில், பயங்கரவாதத்தின் மூலாதாரம் அமெரிக்காவின் பிற்போக்கான அரசியலில்தான் உள்ளது; எந்த நாட்டிலும் குண்டுபோடவும் அதை அச்சுறுத்தவும் அது தனக்குத்தானே அதிகாரத்தை எடுத்துக்கொண்டுகொண்டுள்ளது; அதுவும் ஒருநாடு வாஷிங்டனுடைய புவிசார் மூலோபாய மற்றும் அரசியல் நோக்கங்களுக்கும் நலன்களுக்கும் ஒத்துப்போகவில்லை என்றால் இதுதான் நிலை. சதாம் ஹுசைனுடைய ஆட்சியில் மிக இருண்ட ஆண்டுகளில்கூட, ஈராக்கிய மக்களின் நிலை, இப்பொழுது ஓராண்டாக இருப்பதுபோல், போர் மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருப்பது போல் இருந்ததில்லை.

ஸ்பெயின் தேர்தலின் முக்கியத்துவம், பெரும்பாலான மக்கள், மாட்ரிட் குண்டுவீச்சுக்களுக்கு இறுதிப்பொறுப்பு உடையவர்கள், பென்டகனிலும், வெள்ளைமாளிகையிலும் அமர்ந்திருக்கின்றனர் என்பதை அறிந்ததும், அவர்களுடைய கோழைத்தனமான எடுபிடிகள் லண்டன், ரோம், வார்சோ, மாட்ரிட்டிலும் உள்ளனர் என்பதையும் உணர்ந்தது ஆகும். மேலும், ஐரோப்பிய மக்கள், அமெரிக்கப் போர்க்கொள்கையை எதிர்க்க முற்றிலும் திறன் உடையவர்கள் என்பதையும், புஷ் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்க உழைக்கும் வர்க்கத்திற்கு உதவிக்கரம் நீட்டவும் வல்லவர்கள் என்பதையும் நிரூபித்துள்ளது.

இந்த வெற்றுப் போர்ப் பிரச்சாரம் நிலைகுலைந்து வருவது என்பதை உணர்ந்துள்ள, ஜோபே, மற்றும் ஒரு வாதத்தை தொடக்குகிறார். அவர் கூறுவதாவது: "இஸ்லாமிய பாசிச கண்ணாடியை பார்த்து, அங்கு தங்களுடைய வரலாற்றின் கூறுபாடுகளைக் காண்பதை கடினமாக கொண்டுள்ளனர்." இந்த வாதம், உண்மையை முற்றிலும் தலைகீழாக வைத்துள்ளது. ஸ்பெயின் உட்பட, பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள், பாசிச சர்வாதிகாரங்கள், மற்றும் போர்களின்கீழ் நேரடியாக பெருந்துன்பத்திற்கு உட்பட்டிருந்ததால், அவர்கள் புஷ் நிர்வாகத்திடமும், அதன் ஆக்கிரோஷமான போர் அரசியலுக்கும் மிகுந்த விரோத உணர்வைக் காட்டுகின்றனர்.

ஒரு தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி, மிக உயர்ந்த நீதிமன்றத்தின் துணையுடன் அதிகாரத்தை கைப்பற்றியவர், செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை, நீண்டகால போர்த்தயாரிப்புக்களுக்கு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தியவர், அனைத்து சர்வதேசிய அமைப்புக்களையும், சர்வதேச சட்டங்களையும் துச்சமாக ஒதுக்கி ஒர சட்டவிரோத ஆக்கிரமிப்பு போரில் ஈடுபட்டவர், கைதிகளை விலங்குகள் போல் கூண்டில் அடைத்து வைப்பவர், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் தரவும் மறுப்பவர், தன்னுடைய நாட்டிலேயே குடிமக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகளை தகர்த்தவர், தன் ஆட்சியில் சர்வாதிகார போக்கின் தளங்களை அமைத்துக் கொண்டுள்ளவர் -- இத்தன்மைகள் அனைத்தும் ஐரோப்பாவில் முசோலினி, ஹிட்லர், பிராங்கோ காலத்திலிருந்தே நன்கு அறியப்பட்டவைதாம்.

மேலும், பல அமெரிக்க அரசாங்கங்கள், குறிப்பாக புஷ் குடும்பம், மிகநெருக்கமான உறவுகளை, பின் லேடன் குடும்பத்துடன் கொண்டு, பின் லேடனுக்கு முதலில் இஸ்லாமிய சதித்திட்ட அமைப்பு ஏற்பாடு செய்யக் கணிசமான உதவியையும் செய்திருந்தன. அவ்வமைப்பு, ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும் மற்றும் எங்கிலும் தாக்குதல்கள் நடத்தியபொழுது, அவை அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்டு, CIA ஆல் போர் தந்திர உதவிகளையும், நவீன கருவிகளையும், நிதி உதவியையும் பெற்றன.

மேலும், ஜனநாயகம், சுதந்திரம் இவற்றின் பாதுகாவலர்கள் என்று ஜோசப் ஜோபே கருதி வாதிடுவோரை பற்றி அவர் சற்று கவன பார்வை செலுத்துவது உகந்தது. ஜோஸ் மரியே அஸ்னருடைய தகப்பனார் பிராங்கோவின்கீழ் நிதி அதிகாரியாக இருந்தவர்; தன்னுடைய Partido Popular கட்சியில் ஏராளமான பழைய பாசிச கட்சியின் உயர் அலுவலர்களையும் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டவர்; இவருடைய அண்டை நாடான இத்தாலியில் அமெரிக்க ஜனாதிபதிக்காக கொடி அசைத்துக் கொண்டிருக்கும் சில்வியோ பெர்லுஸ்கோனி, ஐரோப்பிய அரசின் மிகக் குற்றஞ்சார்ந்த கூறுபாடுகளின் மொத்த உருவம் ஆவார், புதிய பாசிஸ்டுகளுடன் தேசியக் கூட்டணியில் உள்ளார், இவற்றையெல்லாம் நினைவில் கொள்ளட்டும்.

Top of page