World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Professor Chomsky comes in from the cold

அக்கறையற்ற நிலையிலிருந்து பேராசிரியர் சோம்ஸ்கி வெளிப்படுகிறார்

By David Walsh
5 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக்கூடத்தில் (Massachusetts Institute of Technology -MIT) மொழி இயல் பேராசிரியராக உள்ள, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைபற்றி தீவிரவாத திறனாய்வும் நடாத்தும், நோம் சோம்ஸ்கி, ஜனநாயகக் கட்சியின் வரக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியை, ஜோர்ஜ் புஷ்ஷிற்கு எதிரான தேர்தலில் ஆதரித்துள்ளார். கெர்ரிக்கு ஆதரவாக சோம்ஸ்கி திரட்டியுள்ள வாதங்கள் வெறுமையாகவும் பயனற்றதாகவும்தான் உள்ளன என்பது மிகக்குறைவான மதிப்பீடு ஆகும். சில அரசியல் மற்றும் சமூக இயல்நிகழ்ச்சிகளை பற்றி அவதானித்துவரும் MIT பேராசிரியரை இது பற்றிய கருத்துக்கள் இரு-கட்சி முறையின் இழிவான காப்பாளராகத்தான் வெளிப்படுத்தியுள்ளன.

"இருதீமைகளில் குறைந்த தீமை" என்ற வாதத்தின் இன்னொரு வகையைத்தான் சோம்ஸ்கி கொடுத்துள்ளார்; இந்த வாதம் பல பத்தாண்டுகளாக அமெரிக்க தொழிலாளர்களை, பெருவர்த்தக கட்சிகளின் பிடியில் இருத்தி, அவர்களுடைய சமுதாய நிலைமைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆளும் வர்க்கத்தின் தாக்குதலை எதிர்கொள்கையில், அவர்களை செயலற்ற நிலையில் வைக்கத்தான் உதவியிருக்கிறது.

பிரிட்டனுடைய கார்டியன் நாளேட்டிற்கு மார்ச் 16ம் தேதி கொடுத்த பேட்டி ஒன்றில், சோம்்ஸ்கி, "கெர்ரி சில சமயம் புஷ்ஷின் தன்மையைக் கொண்டுள்ளவராகத்தான் விவரிக்கப்படுகிறார்; இது தவறானது அல்ல; பொதுவாகவே அமெரிக்காவில் அரசியல் நிறமாலை மிகக் குறுகியது; மக்கள் அறிகின்றவாறு தேர்தல்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிடுகின்றன. ஆயினும் உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளில், குறுகியதென்றாலும், வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த மிகப்பெரிய அதிகார முறையில், சிறு வேறுபாடுகள்கூட, மிகப்பெரிய விளைவுகளை கொடுக்க முடியும்.

ரால்ப் நாடெர், மற்றும் ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் டெனிஸ் குசினிச், இருவர் பற்றியும் அவர்கள் "பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்ற அளவில் மற்றும் கல்வி, நிறுவன அமைப்பு செயற்பாட்டை மேற்கொள்கின்ற அளவில்", பாராட்டுதலை சோம்ஸ்கி வெளிப்படுத்துகிறார். தேர்தல் "வர்த்தக கட்சியின் இரு பிரிவுகளில் எது" என்ற தேர்வுதான் தேர்தல் என்றாகிவிட்டாலும், சில சமயம்... இதுவே ஒரு வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடும்" என்றும் ஒப்புக்கொள்ளுகிறார்.

உண்மையில், Guardian பேட்டி பல தலையங்கங்களுக்கு வழிவகுத்தாலும், சோம்ஸ்கி, ஏற்கனவே Left Hook என்னும் வலைத் தளத்திற்கு ஒரு மாதம் முன்பு கொடுத்திருந்த பேட்டியில் தன்னுடைய நிலையை தெளிவாக்கியிருந்தார்: "இன்னும் ஒரு முறை அதிகாரத்தின்மீது பிடி கொடுக்கப்பட்டால், ஒருவேளை இப்பொழுதுள்ளவர்கள் கடுமையான, மாற்றிவிடக்கூட முடியாத அளவு கூட, அழிவை கொண்டு வரலாம் -- ஒரு மிகச்சிறிய பிடி கொடுத்துவிட்டால்கூட, அவர்கள் அதை மிக இழிவானதும், ஆபத்து நிறைந்ததுமான முடிவுகளை கொண்டுவர அதைப் பயன்படுத்துவார்கள். மிக சக்திவாய்ந்த ஒரு அரசில், சிறு வேறுபாடுகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், பாதிக்கப்பட்டவர்கள்மீது கணிசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பவர்களுக்கும், இதைவிடக் கூடுதலாக எதிர்கொள்ள இருப்பவர்களுக்கும் இந்த உண்மையை தாண்டி பார்ப்பது எளிதான செயல் இல்லை. புஷ் கூட்டத்தை வெளியேற்றுவது என்பது ஒருவர் மூச்சை இறுகப் பிடித்துக்கொண்டு, எவரேனும் ஜனயநாயகக் கட்சி வேட்பாளருக்கு வாக்கு அளிப்பது போலாகும்..."

இவை திவாலான வாதங்கள், அமெரிக்க மக்களை எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான அரசியல் பிரச்சினைகளை தவிர்த்து பேசப்படுபவையாகும். கெர்ரியும், புஷ்ஷும் ஒரே ஏகாதிபத்திய செல்வந்தத்தட்டின் இரு பிரதிநிதிகள்தான் என்று சோம்ஸ்கி ஒப்புக்கொள்ளும்போது, இவர்களில் ஒருவருக்கு ஆதரவைக் கொடுங்கள் என்று ஏன் நியாயப்படுத்திப் பேசவேண்டும்? இந்தப் பிற்போக்கானவர்களில், ஒருவருக்கோ அல்லது மற்றவருக்கோ ஆதரவளிப்பது எவ்வாறு அரசியல் தெளிவிற்கு கொடுக்கும் பங்கு ஆகும் அல்லது அமெரிக்காவின் உழைக்கும் மக்களுடைய நீண்டகால நலன்களுக்கு உகந்தது ஆகும்?

"சிறு வேறுபாடுகள்" இரு கட்சிகளுக்கிடையே இருப்பது "பெரிய விளைவுகளுக்கு" வழிவகுக்கும் என்ற கருத்து, அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடியின் தீவிரத்தை குறைப்பதற்கு, முற்றிலும் தீவிரமான பொருளாதார சமூக மாற்றத்தை விட ஏதோ ஒரு வழி இருக்கிறது என்றும், அந்த தீர்வு "வர்த்தக கட்சியின்" மற்ற பிரிவிற்கு (கன்னைக்கு) ஜனநாயகக் கட்சியினருக்கு அதிகாரத்தை கொடுப்பதில் உள்ளது என்ற கருத்தைக் கூறுகிறது.

கட்சிகளுக்குள் வேறுபாடு உள்ளன என்பது தெரிந்ததே. இல்லாவிடின், அவை ஏன் தனி அமைப்புக்களாக செயல்படவேண்டும்? அமெரிக்காவிலுள்ள இரு முதலாளித்துவ கட்சிகளுக்கும் தனி வரலாறுகள் உள்ளன, அவற்றின் மக்களுக்கான அழைப்பில் வேறுபாடுகள் உள்ளன, அவை பொது இலக்கான முதலாளித்துவத்தின் நலன்களை உள்நாட்டிலும், வெளிநாட்டு கொள்கைளிலும் தொடர்வதில் பிரத்தியேகமான தனி உத்திகளைத்தான் கையாள்கின்றன.

இந்த வரலாற்றுக்கட்டத்தில், ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களின் குறிப்பான இலக்குகளில் ஒன்றும், ஹோவர்ட் டீன், டெனிஸ் குசினிச், ஆல் ஷார்ப்டன் இவர்களுடைய சமீபத்திய முற்சிகளும் எடுத்துக்காட்டு மூலம் இதனை விளக்கிக் காட்டுவதும், இருக்கும் அரசியல் வடிவமைப்பிற்குள் மாறுபட்ட கருத்து அல்லது எதிர்ப்பு இருக்கக் கூடும் என்பதுதான். சோம்ஸ்கி தனது "இடது" நற்சான்றிதழ்களை இந்த மோசடியை நிலைநிறுத்தும் முறைக்கு தானே முன்வந்து உதவுகிறார்.

ஆளும் தட்டிற்குள்ளே எழும் பூசல்கள் சிலசமயம், கிளின்டன் பதவி நீக்க விசாரணை அவதூறு, நிரூபித்ததுபோல், மிகவும் கடுமையாக இருக்கக் கூடும். ஆனால் இந்த வேறுபாடுகள், உழைக்கும் மக்கள் தங்களுடைய சொந்த சமூக நலன்களுக்கான தங்கள் போராட்டத்தை நடத்துவதற்கு எந்த முறையான அடிப்படையையும் கொடுக்கவில்லை. மாறாக, ஜனநாயகக் கட்சிக்கு அடிபணிந்து நிற்பது ஒன்றுதான் அத்தகைய சுயாதீனமான நலன்களை நெரித்து அடக்குவதற்கு முக்கிய கருவியாக விளங்கி வருகிறது.

புஷ்ஷின் ஆட்சி பிற்போக்கானதும் ஆபத்தானதும்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இதனுடைய தன்மை, இதன் பல பிரதிநிதிகளின் தனிப்பட்ட குணநலன்களால் எழுச்சி பெறவில்லை; அவை அமெரிக்க, உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியிலிருந்து விளைந்தவை. இந்த நெருக்கடி ஜனநாயகக் கட்சி தேர்ந்தெடுக்கப்படுவதால் தீர்ந்துவிடப் போவதில்லை. மாறாக, இரு பெருவர்த்தக கட்சிகளில் எது அதிகாரத்திற்கு வரினும், சூழ்நிலையானது கூர்மையாக வளரும். உண்மையில், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் அனைத்துப் பிரிவினருக்கும் (கன்னைகளுக்கும்) எதிராக, அமெரிக்க சமுதாயத்தின் நெருக்கடியை தீர்க்க, உழைக்கும் மக்கள் தங்களுடைய சொந்த சோசலிச, சர்வதேச தீர்வுகளை, முன்வைப்பதில்தான் அனைத்தும் தங்கி இருக்கிறது. ஒரு பழைமையான முதலாளித்துவ அரசியல்வாதியான, ஈராக்கிய போருக்கு வாக்கு அளித்துள்ள, தேசபக்த சட்டத்திற்கு வாக்களித்து உள்ள, கெர்ரியும் கூட பிற்போக்கானவர் மற்றும் ஆபத்தானவர்தான்.

ஈராக்கில் தொடர்ந்த காலனித்துவ ஆக்கிரமிப்பிற்கு கெர்ரியின் இடைவிடாத ஆதரவை எடுத்துக் கொண்டால், சோம்ஸ்கி தன்னுடைய கெர்ரிக்கான ஆதரவு மூலம், அவருடைய பழைய ஏகாதிபத்திய எதிர்ப்பு நற்பெயர்கள் எதுவாயினும், ஒரு மிருகத்தனமான மற்றும் குற்றஞ்சார்ந்த ஏகாதிபத்திய அமைப்பிற்கு ஆதரவையும், பரிவுணர்வையும் இப்பொழுதும் தரும் வகையில் முடிக்கிறார்.

மேலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு ஒப்புதல் அளிப்பதுடன், கை மூக்கைப் பிடித்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும், கெர்ரி நிர்வாகம் பதவிக்கு வந்தால் அதற்கான பொறுப்பையும் சோம்ஸ்கி ஏற்றுக்கொள்ளவேண்டும். அத்தகைய அரசாங்கம் தன்னுடைய காலனித்துவ படையெடுப்புக்களை, "மனிதாபிமானத் தலையீடு" என்ற பெயரில் நடத்தும்போது, அந்த அரசியல் பொறுப்பில் சோம்ஸ்கியும் ஒரு பங்கை ஏற்றாகவேண்டும்.

MIT பேராசிரியருக்கு, ஏற்கனவே இது தொடர்பாக ஐயத்திற்குரிய பெருமை இருக்கிறது. கிளின்டன் நிர்வாக காலத்தில், சோம்ஸ்கி, 1994ல் ஹைட்டியில் அமெரிக்க இராணுவம் தலையிட்டு ஜனாதிபதி ஜீன் பெர்ட்ரான்ட் அரிஸ்டைட்டை பதவியில் மீண்டும் இருத்தியதையும், டேய்ரன் உடன்படிக்கைகளை அடுத்து பால்கனில் 1995 களின் கடைசியில் தலையிட்டதையும் ஆதரித்துள்ளார். அமெரிக்க இராணுவ நடவடிக்கை ஒருவேளை ஹைட்டியில் "பயங்கரவாதத்தைக் குறைத்தது" என்றும் அமெரிக்கத் தலையீடு பழைய யூகோஸ்லாவியாவில் இல்லாவிடின் இரு பிரிவுகளும் "ஒன்றை ஒன்று படுகொலை செய்து கொண்டிருந்திருக்கும்" என்றும் கூறியிருந்தார்.

சமீபத்திய நிகழ்ச்சிகள், இந்த இரு விஷயங்களிலுமே இவருடைய வாதத்தை நிராகரித்துள்ளன. ஹைட்டியில் உள்ள பயங்கரவாத அச்சமும், பழைய யூகோஸ்லாவியாவில் இனப் படுகொலைகளும் இன்னும் நிற்கவில்லை. வெளிநாட்டுத் தலையீடும், ஆக்கிரமிப்பும் இன்னும் கூடுதலான குருதி கொட்டுதலுக்கு வகை செய்துள்ளதுடன், சோம்ஸ்கி போன்ற ஏகாதிபத்தியத்தின் "மனிதாபிமான தன்மை" யில் பொய்த்தோற்றங்களை துதிபாடுபவர்களினால் எழும் நிலைமைகளில், மக்கள் மேலும் நோக்குநிலை தவறியதையும், அரசியல் ரீதியாய் என்றுமிராத வகையில் நிராயுதபாணியாகிய நிலையில் ஒடுக்குமுறையை மேலும் கூட்டியுள்ளது.

சோம்ஸ்கியின் கருத்துக்களில் புதுமையானவை ஒன்றும் இல்லை. அவை பல ஆண்டுகளாக சீர்திருத்தவாதிகளாலும், சந்தர்ப்பவாதிகளாலும் கூறப்பட்டு வருகின்றன. "பாதிக்கப்பட்டவர்கள்" என்று சோம்ஸ்கியால் வர்ணனைக்குட்படுபவர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆளும் தட்டின் தாராளப்பிரிவை நம்பினால், இன்னும் மோசமான நிலை அவர்களுக்கு வராமல் காத்துக் கொள்ளலாம் என்பதுதான் அவர் வாதம். இந்த மூலோபாயம் பலமுறை தோல்வியைத்தான் கண்டுள்ளது.

கொள்ளையடிக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைமுறையின் கடுமையான விமர்சகர் என்று பெயர் பெற்றுள்ள சோம்ஸ்கி, ஜோர்ஜ் புஷ் "பயங்கரவாதத்திற்கு எதிராக" "மிகக் குறைவான நடவடிக்கைகள்தான் எடுத்துள்ளார்" என்று குறைகாணும், "நாம் கண்டிப்பாக... இஸ்ரேலுடைய நலன்கள் அமெரிக்காவுடைய நலன்கள்தாம் என்று.. உறுதியளிக்கவேண்டும்" என்று கூறும் ஒரு வலதுசாரி ஜனநாயகக் கட்சியாளருடன் தன்னை இணைத்துக்கொள்ளுவதில் ஒரு விந்தைதான் இருக்கிறது.

வெளிப்படையாக போர்ஆதரவும், சியோனிச ஆதரவும் உடைய, கன்னெக்டிக்கட் செனட்டர் ஜோசப் லிபர்மன் அண்மையில், "செனட்டர் கெர்ரியும், ஜனாதிபதி புஷ்ஷும் இவ்வாரம் வெளியுறவுக் கொள்கை பற்றிய உரைகளை ஆற்றினர். சொல் அலங்காரத்தையும், செய்தி ஊடகம் முயற்சி செய்து காணும் வேறுபாடுகளையும் கருதாமல் அவற்றை ஆராய்ந்தால், இருவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றிகொள்ள விழைகிறார்கள் என்பதும், ஈராக்கில் வெற்றிகாண வேண்டும் என்றும் விரும்புவதும் நன்கு புலனாகும்" என்று சமீபத்தில் இறுமாப்புடன் கூறியிருக்கிறார்.

மேலே குறிப்பிட்டுள்ள பேட்டிகளில், சோம்ஸ்கியின் வாதம், புஷ்ஷின் கூட்டம் "ஒரு மிகுந்த ஆபத்தான குழு", "குறிப்பிடத்தக்க வகையில் கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது" என்பவை ஒவ்வொரு அமெரிக்க "இடது" எதிர்ப்பாளரும் பயன்படுத்தும் சொற்றொடர்கள்தாம். வலதுசாரி அச்சுறுத்தல் எப்பொழுதும் "மிகுந்த ஆபத்து நிறைந்தது", நிலைமைகள் இன்னும் "கனியவில்லை" ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக்கொள்ளுவதற்கு என்று கூறுவதுதான். நாம் இவற்றைப் பலமுறை கேட்டுவிட்டோம், சொல்லப்போனால் அதிகமாகவே கேட்டுவிட்டோம். சோம்ஸ்கிகளுக்கும், மைக்கேல் மூர்களுக்கும் அவர்கள் போன்றவர்களுக்கும், இருகட்சி முறைக்கு மாற்றாக ஒரு சோசலிசத்திட்டம் கொண்டுவருவதற்கு நேரம் "சரியாகவே" இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது ஒருபோதும் சரியாக இருக்கப்போவதும் இல்லை.

சோம்ஸ்கியின் இழிந்த அரசியல் நிலைப்பாடு ஒரு சர்வதேசப் போக்கு ஆகும். அதிதீவிர வலதுடன் போராடுகிறேன் என்று கூறிக்கொண்டு, உலகளாவிய நடுத்தரவகுப்பு "முற்போக்காளர்கள்" (இவர்களுடைய அரசியலை முற்போக்கு என்பதைவிட வேறு எப்படி வேண்டுமானாலும் விவரிக்கலாம்) முதலாளித்துவ அரசியலின் சுற்றுவட்டத்திற்குத்தான் ஈர்க்கப்பட்டுள்ளனர். சோம்ஸ்கியின் வாதம், மே 2002 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் ஜனாதிபதி ஜாக் சிராக்கிற்கு ஆதரவு கொடுப்பதற்காக பிரான்சின் "தீவிர இடது"களால் முன்னெடுக்கப்பட்ட வாதத்தைத்தான் ஒப்புமையாகக் கொண்டுள்ளது.

உதாரணமாக, அலன் கிறிவினுடைய Ligue Communiste Revolutionnaire (LCR), ஊழல் மிகுந்த பிரான்சின் முதலாளித்துவத்தின் பிரதிநிதியான சிராக்கிற்கு வாக்கு அளிக்குமாறு வலியுறுத்தியது. "தெருக்களில் அவர்களைத் தடுத்தது போல் (அதி-வலது) தேசிய முன்னணி வராமல் வாக்குச்சீட்டில் செய்துவிடவேண்டும் என எல்சிஆர் பிரெஞ்சு வாக்காளர்களை அழைத்தது. மே 5 அன்று (தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன் மேரி) லூ பென்னிற்கு எதிராக வாக்கு அளியுங்கள்." இது இரு-மனிதருக்கான போட்டியில் கூறப்பட்டது.

சோம்ஸ்கி இப்பொழுது, "மூக்கைப் பிடித்துக் கொண்டு", கெர்ரிக்கு வாக்களிக்குமாறு பரிந்துரை செய்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு LCR உடைய ஜனாதிபதி வேட்பாளர் Olivier Besancenot, "எல்லா வாக்காளர்களும் ஞாயிறு மாலை (அதாவது சிராக்கிற்குத் தங்கள் வாக்குகளை அளித்த பின்னர்) கைகளைக் கழுவிவிட வேண்டும்" என்று ஆலோசனை கூறியிருந்தார். உடல்கூறின் பகுதிகள் வேறு ஆயினும், சந்தர்ப்பவாத மருத்துவக்குறிப்பு -போலி வருத்தம் தோய்ந்த குரலின் தன்மை கூட- ஒன்றுதான்.

வரலாற்றின் படிப்பினைகள்

கெர்ரிக்கு, சோம்ஸ்கி ஒப்புதல் அளித்துள்ளதை "அவருடைய எதிர்க்கும் தன்மை பாசாங்குகளை அகற்றிவிட்டது" அல்லது அந்த வகையிலான ஏதோ ஒன்று என்று கூறினால் மிக எளிமைப்படுத்தலாகிவிடும். அமெரிக்க மக்கள் உட்பட, உலகம் முழுவதும், துன்பங்களையும், துயரங்களையும் சுமத்துவது பற்றிய MIT பேராசிரியரின் தொடர்ந்த விரோதப்போக்கைப் பற்றி சந்தேகப்படத் தேவையில்லை.

ஆனால் அரசியலுக்கும் ஒரு தர்க்கம் உள்ளது. டிராட்ஸ்கி குறிப்பிட்டுள்ளதுபோல், "இதுவரை எவரும் வர்க்கப் போராட்டத்தின் விளைவுகளை முடக்குவதற்கு வழி ஒன்றையும் கண்டுபிடித்து விடவில்லை." அரசியல் நெருக்கடியின் வளர்ச்சியின் உந்துதலால் கூறும் சோம்ஸ்கியின் பார்வை, கற்றோர் செல்வந்தத்ட்டில் அவருடைய உறுப்பான்மையால் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை; இது முதலாளித்துவ சங்கொலி முழக்கத்தின் பாதிப்பிற்கு அவரை உட்படுத்தியுள்ளது.

நடைமுறையின் "குறைந்த தீமை" யை நம்புவோம் என்ற உத்திக்காக வாதிடுவதால், சோம்ஸ்கி, தற்கால வரலாற்றின் மைய அரசியல் படிப்பினைகளுள் ஒன்றை நிராகரிக்கிறார்: தாராளக் கொள்கை, கீழிருந்து, தொழிலாள வர்க்கத்தால் வைக்கப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கையில், தன்னுடைய உள்ளுணர்வின் எச்சரிக்கையையும் மீறி, தவிர்க்கமுடியாத வகையில் வலதுபுறம் திரும்பும் மற்றும் சீரழியும் என்பதே அது.

ஆனால், பேராசிரியர் சோம்ஸ்கியோ இருபதாம் நூற்றாண்டின் பல முக்கியமான படிப்பினைகளைக் கண்ணெடுத்தும் பாரார். தன்னுடைய வாழ்க்கையின் பணியாக இந்தப் பார்வையற்ற தன்மையை, நிரந்தரக் கூறுபாடாகக் கொண்டுள்ளார் என்று கூட கூற இயலும்.

1928ல் பிறந்த சோம்ஸ்கி, தன்னுடைய மிகச்சிறிய வயதில், (தன்னுடைய முதல் கட்டுரையை அவர் 10 வயதே நிரம்பியபோது எழுதியிருந்தார்), ஸ்பெயினின் உள்நாட்டுப் போரின் போக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் (1936-39). "அப்பொழுது ட்ரொட்ஸ்கிச-எதிர்ப்பாளராக இருந்து பின்னர் டிராட்ஸ்கியவாதியான"வர்), செல்வாக்கிற்குட்பட்டு, சோம்ஸ்கி, மார்க்சிசம், போல்ஷிவிசம் இவற்றிற்கு அராஜகவாத முறையில் விரோதத்தை காட்டத் தலைப்பட்டவர், இன்றளவும் அதைப் பின்பற்றுகிறார்.

அக்டோபர் புரட்சிக்குக் சோம்ஸ்கி கொண்டுள்ள எதிர்ப்பு நன்கு அறியப்பட்டதே ஆகும். "தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று" என்றும் "ஒரு எதிர்ப்புரட்சிகர சதி" என்றும் அதை அவர் விவரித்துள்ளார். பிந்தைய வர்ணனை, ரிச்சார்ட் பைப்ஸ் போன்ற கம்யூனிச எதிர்ப்புவெறியர்களின் கூற்றோடு இயைந்து உள்ளது. தொழிலாள வர்க்கம், மற்றும் மிகுந்த முன்னேற்றமுடைய தொழிலாளர்கள் 1917ன் உட்கட்சி விவாதங்களை பெரும் கவனத்துடன் விரிவாகக் கற்று அதன் தன்மையை உணர்ந்திருந்தவர்கள் எவ்வாறு போல்ஷிவிக் செல்வாக்கின் தாக்கத்தை கொண்டிருந்தனர் என்பதை ஆழ்ந்து படித்தவர்கள், இத்தகைய அறியாமையான கருத்துக்களை நிராகரித்துள்ளனர்.

1995ம் ஆண்டு ஒரு பேட்டியாளரிடம் சோம்ஸ்கி, "சோசலிசத்தின் மிகப்பெரிய விரோதிகளில் லெனினும் ஒருவர்" என்றும், "தொழிலாளர்கள் குதிரைப் பந்தயத்தில்தான் அக்கறை காட்டுகிறார்கள் என்ற எண்ணத்தையும் அவர் கொண்டிருந்தார்" என்றும் கூறினார். உண்மையில், 1917 புரட்சியின்போது வெளிப்பட்ட, சுயாதீனமான, சுய நனவுடைய தொழிலாளர்களின் இயக்கமும், அதற்கு முந்தைய சோசலிச தொழிலாளர்கள் இயக்கமும், குட்டி முதலாளித்துவ பேராசிரியரை கலக்கி கோபமூட்டியுள்ளது.

(ஜோன் ரீட்டின் உலகை உலுப்பிய பத்து நாட்கள் என்ற புத்தகத்தில் வரும் நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது [http://www.marxists.org/archive/reed/works/1919/10days/ch7.htm]: இதில் ஒரு போல்ஷிவிக் ஆதரவு வீரர் பொறுமையுடன், தன்னைத்தானே "புரட்சியாளர்" என்று பறைசாற்றிக் கொண்ட ஒரு இளைஞர் "இறுமாப்புடன்" லெனினையும், போல்ஷிவிக்குகளையும் இழிவாக தாக்கிப் பேசியதைக் கேட்டுக் கொள்ளுகிறார். ஒவ்வொரு வசைவும் முடிந்தபின், வீரர் பொறுமையுடன் அடிப்படைக் கேள்வியை பழையபடி எழுப்புகிறார்: "இரு வர்க்கங்கள் உள்ளன, தொழிலாளர்கள், முதலாளித்துவத்தினர் என்று, நீங்கள் பார்க்கவில்லையா?". இந்த வாதமும், வீரரின், தனக்காக, நிமிர்ந்த போக்குடன் சிந்தித்துக் கொள்ளும் தன்மையும், ஆணவமுடைய "சோசலிஸ்டை" கோபத்தின் உச்சகட்டத்திற்குத் தள்ளுகிறது.)

சோம்ஸ்கி மார்க்சிசம் மற்றும் மார்க்ஸ் பற்றிய தன்னுடைய கருத்துக்களைப் பற்றி தெரிவிக்கும்போது, தான் "மார்க்சிச அறிஞர்" என்ற நிலையிலிருந்து வெகு தொலைவில் இருப்பவர், தன்னுடைய கருத்துக்கள் "உணர்வு வடிவில் வந்தவை" போன்ற அடைமொழிகளால் வரம்பு கொடுக்கிறார். அதாவது இந்த விஷயம் ஒப்புமையில் அதிக ஆர்வம் காட்டவேண்டிய தேவையற்றது என்ற கருத்தை தெரிவிக்கிறார். இத்தகைய பிரச்சினைகளில், சற்று உயர்மட்டமாக, பெரும் நிலையில் இருந்து கருத்துத் தெரிவிப்பதுபோல் பேசுகிறார். ட்ரொட்ஸ்கியை பற்றி, அவரும் லெனினும் கொண்டிருந்த கொள்கைகள்தாம், நேரடியாக ஸ்ராலினிச சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்தது என்பதைத் தவிர, இவர் அதிகம் கூறவில்லை

பொதுவாக இருபதாம் நூற்றாண்டின் கடினமான அனுபவங்களில் இருந்து படிப்பினைகள் பெற முயற்சிப்போரை உதறித்தள்ளும் போக்கைத்தான் சோம்ஸ்கி கொண்டுள்ளார். பலமுறை ஸ்பெயின் புரட்சியைப் பற்றிய அவருடைய கருத்துக்களும், அராஜகவாத இயக்கத்தினரின் பங்கு பற்றிய கருத்துக்களும் மேம்போக்கானவை, தவறான திசையிலும் திருப்பக் கூடியவை; கேட்பவர்கள், படிப்பவர்கள் உண்மை அனுபவம் இல்லாமல், அறியாமையில் இருப்பார்கள் என்ற நினைப்பில் கூறப்பட்டவை.

1970களில், "ஸ்பெயின் நாட்டில் மக்கள் புரட்சியின் சாதனைகள்" என்பதைப் பற்றி, சோம்ஸ்கி எழுதினார்; அது அராஜக தொழிற்சங்கவாத (Anarcho-Syndicalist) இயக்கத்தினரின் படைப்புக்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. 1995ல் ஒரு பேட்டியாளரிடம், "ஸ்பெயினின் தொழிலாளர்கள், விவசாயிகளுடைய சாதனைகள், மிகச்சிறந்த முறையில் இருந்தபோதிலும், புரட்சிக்கு முன்னர் நசுக்கப்பட்டது, பல வகைகளில் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது.

ஸ்ராலினிசத்திற்கு ஒரு முக்கிய எதிர்ப்புரட்சிகர பங்கை சரியான முறையில் தெரிவிக்கிறார் சோம்ஸ்கி; இது ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சி, NKVD இவற்றின் மூலம், ஸ்பானிய உழைக்கும் வர்க்கம், "தாராள" முதலாளித்துவ வர்க்கத்திற்கு கீழ்ப்படுத்தப்படுவதற்கு உதவியது. (இதே மூலோபாயத்தைத்தான் இன்றைக்கு சோம்ஸ்கி தேவை என்கிறார்!); அது தொழிலாள வர்க்கம் ஆலைகளை கைப்பற்றியதை எதிர்த்ததுடன், அனைத்து இடதுசாரி எதிர்ப்புக்களையும் முற்றிலும் அழிக்கவும் உதவியது.

ஆனால் சோம்ஸ்கியின் பயனற்ற சொற்றொடர்கள், அராஜகவாதிகளின் தலைமையினுடைய பங்கைப் பூசி மெழுகுகிறது; இது ஸ்பானிய மக்களுக்கு மயக்க மருந்து கொடுப்பதில் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளைத்தான் ஆதரித்திருந்தது. ட்ரொட்ஸ்கிசவாதியான பீலிக்ஸ் மோரோ, இந்த வரலாற்றை தக்க ஆவண ஆதாரங்களுடன் தன்னுடைய ஸ்பெயினில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் (Revolution and Cpounter-Revolution in Spain) என்ற நூலில் (http://www.marxists.org/archive/morrow-felix/1938/revolution-spain/ online ல் காணலாம்) நன்கு கூறியுள்ளார். எவ்வாறு அராஜகவாதம் CNT-FAI (National Confederation of Labor and the Ararchist Iberial Federation) உடைய கார்சியா ஒலிவருடைய தலைமை, பெரிய அளவில், ஸ்பானிய நிகழ்ச்சிகளில் சோதனைக்குட்படுத்தப்பட்டது என்றும், அது எவ்வாறு தோல்வியில் முடிவடைந்தது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

மோரோ எழுதினார், "அராஜகவாதம் எப்பொழுதும், முதலாளித்துவ அரசுக்கும், தொழிலாளர்கள் அரசுக்கும் இடையே வேறுபாடு உள்ளது என்பதை மறுத்து வந்துள்ளது. லெனின், ட்ரொட்ஸ்கியின் காலத்தில்கூட, அராஜகவாதம், சோவியத் ஒன்றியத்தை ஒரு சுரண்டுபவர்களின் ஆட்சி என்று கண்டனத்திற்கு உட்படுத்தியது. முதலாளித்துவ மற்றும் தொழிலாளி வர்க்க ஆட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் காண்பதில் தோல்வியுற்றது, CNT ஐ 1931ல் அதன் புரட்சி தேன்நிலவு காலத்தில் கூட, சீர்திருத்தவாதிகள் போல், அதே போன்ற சந்தர்ப்பவாத தவறுகளை செய்யவைத்தது; அவர்களும் இப்படித்தான் குட்டி முதலாளித்துவ முறைக்கும் தொழிலாளர் அரசாங்கங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டினை காணவில்லை....

இப்பொழுது, இன்னும் அதிகமான கனலான "ஜூலை (1936) புரட்சியில்", வழக்கமாக காணப்படும் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் பாட்டாளி வர்க்க பிரிவுக் கோடுகள் தற்காலிகமாக மறைந்துள்ள நிலையில், அராஜகவாதிகள் மரபுவழியே, முதலாளித்துவ வர்க்க அரசுக்கும் பாட்டாளி வர்க்க அரசுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக்காண மறுப்பது, அவர்களை, மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக, முதலாளித்துவ அரசின் அமைச்சர் குழுவிடம் செல்ல வைக்கிறது."

அராஜகவாதிகள், காட்டலோனிய அரசாங்கத்திலும், லார்கோ காபெல்லெரோ தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திலும் சேர்ந்தனர். அரசைப் பற்றி கவலையில்லாததால், ஏதேனும் ஒன்றில் ஏன் சேரக்கூடாது என்பது அவர்கள் வாதம். அரசாங்கத்தில், அராஜகவாதிகள், முதலாளித்துவ அமைச்சர்கள் போல் நடந்துகொண்டு தனிச்சொத்துடைமைகளையும், முதலாளித்துவ சமுதாய ஒழுங்கையும் காத்தனர்.

1937, மே மாதத்தில் தொழிலாள வர்க்கம் பார்சிலோனாவில், தன்னுடைய நலன்களைக் காப்பதற்கு எழுச்சி செய்தபோது, கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக பல தடுப்புக்களை போட்டபோது, கார்சிய ஒலிவரின் தலைமையில் அராஜகவாதிகள் போராட்டத்தை நசுக்கியும், தொழிலாளர்களை தெருவிலிருந்து வெளியேற்றக் கோரி, "ஒழுங்கு" மீட்கப்படவேண்டும் என்றும் கூறினர். இடது எதிர்ப்பாளர்கள், அராஜகவாத இளைஞர்கள் உட்பட, இந்தக் காட்டிக் கொடுத்தலை நிராகரித்தவர்கள், ஆத்திரமூட்டும் முகவர்கள் என்று கண்டிக்கப்பட்டனர். புரட்சி வாய்ப்பு இழக்கப்பட்டது, எதிர்ப்புரட்சி கூடுதல் மேலோங்கியது. அதிகாரபூர்வமான ஸ்பானிய அராஜகம், இந்த இழிவான பங்கைக் கொண்டிருந்தது.

அராஜகவாத சோம்ஸ்கியின் சொந்த பரிணாம வளர்ச்சியிலும் ஒரு மெதுவான, ஆனால் உறுதியான தர்க்கம் உள்ளது. வரலாறு, கொள்கைகள் பற்றிய பிரச்சினைகளை புறக்கணித்து, தொழிலாளர்களின் முதல் முயற்சியாகிய தங்கள் சமுதாயத்தை படைத்தலுக்கும் தீவிர எதிரியாக இருத்தல், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கை நிராகரித்தில், என்ற கருத்துக்களில் ஆழ்ந்துள்ள சோம்ஸ்கி, நடைமுறையில் உள்ள இரு கட்சிப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தவிர வேறு எங்கு செல்ல முடியும்?

கடினமான காலங்கள், இந்த வேதனைதரும், ஆனால் ஒழுங்கையும் தரும் விளைவைக் கொண்டுள்ளன: அமைப்புக்களும் தனிமனிதர்களும் சோதனைக்கு உட்படும் நிலை ஏற்படுகிறது. எது பொய்யோ, தீர்வு இல்லையோ, கொள்கையற்றதோ, அது தன்னை தவிர்க்கமுடியாமல் வெளிப்படுத்திக்கொள்ளும். அமெரிக்காவில் வளர்ந்து வரும் அரசியல் நெருக்கடி, பெரு வர்த்தக கட்சிகளையும், செய்தி ஊடகத்தையும் செல்வாக்கிழக்கும் நிலைமைக்கு தள்ளும் அச்சுறுத்தலை கொண்டிருக்கிறது; இதன் ஆழ்ந்த அழுத்தமானது இப்போதிருக்கும் நிலை மாறவேண்டும் என்று கூறுவோர் அனைவர்மீதும் கொண்டுள்ளது. சோம்ஸ்கியும் அவரைப் போன்றவர்களும், இந்த நெருக்கடியின் முதல் கட்டங்களுக்கு விடையாக தங்கள் விதியை அதிகாரத்தில் இருப்பவர்களுடன் பிணைத்துக் கொள்ளுகின்றனர். இதிலிருந்து தக்க அரசியல் படிப்பினைகளை பெறுவது தேவையானது.

Top of page