World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian general election begins

Polls indicate race tightening

இந்திய பொதுத் தேர்தல் ஆரம்பிக்கிறது

வாக்குப் பதிவுகள் போட்டி கடுமையடைந்து வருவதாய் சுட்டிக்காட்டுகின்றன

By Keith Jones
22 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐந்து கட்டங்களாக நடைபெற்று, மே 10ந் தேதியுடன் வாக்குப்பதிவு முடிவடைய இருக்கின்ற இந்திய பொதுத் தேர்தல்கள் செவ்வாய் அன்று தொடங்கின. 13 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 140 பாரளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தியாவில் தற்போது ஆட்சி புரிந்துவரும், தேசிய ஜனநாயக முன்னணி (NDA), இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையில் பல கட்சிகளை கொண்ட கூட்டணியாகும். திடீரென ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, பாகிஸ்தானுடனான சமாதான பேச்சு வார்த்தைக்கான தொடக்கம், மற்றும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸில் ஏற்பட்டுள்ள குழப்பம், ஆகியவற்றை பயன்படுத்தி வெற்றிபெற்றுவிட முடியுமென்ற BJP யின் தூண்டுதலால் NDA, செப்டம்பரில் நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்த இணங்கியது.

நேற்று நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவு தொடர்பான பல்வேறு கருத்துக்கணிப்புகள், வாக்குப்பதிவிற்குப் பிந்திய மதிப்பீடுகளின்படி NDA வெற்றியை முன்கணித்தாலும், NDA வாக்குகளின் அளவு சுருங்கிக்கொண்டு வருகிறது. மக்களவையில் BJP தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெறாது என்று பத்திரிகைகளில் அதிகரித்த அளவில் ஊகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதன் பிரதான கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம், இதற்கு ஒரு பகுதி காரணமாகும். இந்த இரண்டு கட்சிகளும், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய இரண்டு தென்மாநிலங்களில் ஆளும் கட்சிகள் ஆகும், 1991-முதல் இந்தியாவில் பெரும் வர்த்தக நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளோடு இவ்விரு கட்சிகளும் வலுவான தொடர்பு கொண்டவை.

NDA பெரும்பான்மை பெறத் தவறுமானால், ஆட்சியிலிருந்து போய்விடும் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் எந்த அணியையும் சேராத, ஜாதி அடிப்படையிலான மற்றும் பிராந்திய அடிப்படையிலான கட்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் ஆட்சியை முடிவு செய்வார்கள். இதில் NDA கூட்டணி கட்சிகள், தங்களது ஆதரவிற்கு அதிக விலையை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்ற NDA-வுடன் சேர மறுத்த கட்சிகள் உட்பட அடங்கும்.

BJP-யைப்போல், காங்கிரஸ் கட்சியும் தனது சொந்த வலுவில், மக்களவையில் பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்பில்லை. இந்தத் தேர்தல் வரை இந்தியாவின் பாரம்பரிய முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அரசியலை அகில இந்திய அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அதே கட்சி பீஹார், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில், தனது தலைமையிலான கூட்டணி மூலம் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டிய அளவிற்குச் செல்வாக்குச் சரிந்துவிட்டது, இரண்டாவது இடத்திற்கு வரச் சம்மதித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உண்மையிலேயே, ஆட்சிக்கு வருவதற்குத் தேவையான சீட்டுக்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆட்சிக்கு வரவேண்டுமென்ற அதன் எதிர்பார்ப்பு "வெளியில்" 50 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது முன்னணியிலிருந்து ஆதரவு பெறுவதைப் பொறுத்தே இருக்கிறது. இரண்டுமே, BJP-யைப் பதவியிலிருந்து இறக்குவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகள் அவற்றின் கணிப்பிற்கு வருமானால், ``மதச்சார்பற்ற அரசை`` அதாவது காங்கிரஸ் தலைமையிலான அரசை நிறுவ முயலும்.

NDA-வின் சாதனையும், BJP-யின் கூற்றும்

அடிக்கடி NDA-வில் சேரும் சிறிய கட்சிகளின் அணி மாறிக்கொண்டிருக்கின்ற போதிலும்,1998 முதல் தொடர்ந்து பதவியிலிருக்கும் BJP தலைமையிலான NDA-வை விரும்புவதாக பெரு வர்த்தக அமைப்புகள் தெளிவுபடுத்திவிட்டன. இந்தியாவில் தேசிய அளவில் நெறிமுறைப்படுத்தப்பட்டு வந்த பொருளாதாரம் சிதைக்கப்பட்டு, அரசுத் தொழில்கள் தனியார் மயமாக்கப்பட்டு, வங்கிகள், இன்சூரன்ஸ், மற்றும் இதர துறைகளில் நேரடியாக வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படுவதை தேசிய ஜனநாயக முன்னணி முன்னெடுத்து வருகிறது மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஊழியர்கள் ஆட்குறைப்பிற்கு இலக்காகி, ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நடைபெறுவதற்கான தடைகளை அகற்றுவதில் குவிமையப்படுத்தும் இரண்டாவது கட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கிக் கொண்டிருக்கிறது.

NDA அரசாங்கம், அமெரிக்காவுடன், ``மூலோபாய பங்காளி`` கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையெடுப்பை ஆதரித்தது. புஷ் நிர்வாகத்தின் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது. இந்தியா ஒரு வல்லரசு என்கிற நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக, இந்திய அரசாங்கம் பதவிக்கு வந்த சில வாரங்களுக்குள்ளேயே இந்தியாவின் இராணுவ வலிமையை மிகப் பெருமளவிற்கு பெருக்கியது. இந்தியா ஒரு அணு ஆயுத நாடு என்று 1998-ல் பிரகடனப்படுத்தியது.

அதிகாரபூர்வமாக NDA, BJP-ன் ஹிந்து மேலாதிக்க இந்துத்துவ கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருந்தும், BJP தலைமையிலான அரசாங்கம், இந்தியா ஒரு இந்து நாடு என்ற கருத்தை வளர்ப்பதற்காக பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்தது. மிக முக்கியமாக இந்திய வரலாற்றையும் பண்பாட்டையும் இந்து மேலாதிக்க பாணியில் விமர்சனம் செய்யும் வகையில் கல்விப் பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது.

1991-96-ல் காங்கிரஸ் கடைசியாக ஆட்சி நடத்தியபோது இந்தியாவின் தேசிய ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட பொருளாதாரத்தைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகளைத் துவக்கியது. எனவே இந்தியாவின் மிகப் பரவலாகக் கிடைக்கின்ற மலிவு ஊதிய தொழிலாளர்களை இந்திய மற்றும் சர்வதேச முதலாளிகள் சுரண்டுவதில் BJP-NDA அளவிற்கு சற்றும் குறையாது காங்கிரஸும் உடன்பட்டே உள்ளது. இந்த வாரம் டைம்ஸ் ஆப் இந்தியா தனது தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல் "பொருளாதார முனையில்" BJP-ம் காங்கிரஸும் குலவிக்கொண்டிருக்கும் இரட்டைக் குழந்தைகளைப் போல் செயல்பட்டு வருவதாகக் கூறியது. இரண்டு கட்சிகளுமே பொருளாதார சீர்திருத்தங்களில் வேகம் காட்டி வருவதாகவும், வேகமான பொருளாதார சீர்திருத்தங்களில் இரண்டுமே உரிமை கொண்டாடி வருவதாகவும் அந்தப் பத்திரிக்கை குறிப்பிட்டிருக்கிறது. எனவே நிபுணர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு முக்கிய கொள்கைப் பிரச்சனைகளில், வரி நிர்வாகம் நிதி நிர்வாகம், வர்த்தகம் வேளாண்மை மற்றும் தொழில் சம்மந்தமான கொள்கைகளில் இரண்டும் ஒன்றுபட்டிருக்கின்றன என்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் எந்த இடத்திலும் NDA செய்துவருவதை ரத்து செய்வதாக அச்சுறுத்தல்கள் எதுவும் விடுக்கவில்லை.

தற்போது பெரிய வர்த்தக நிறுவனங்கள் காங்கிரஸை விட்டுவிட்டு NDA தலைமையிலான அணியை ஆதரிப்பதற்குக் காரணம் இடதுசாரிகள் எதிர்க்கட்சி வரிசைகளிலேயே இருக்க வேண்டும் என்பதும், நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், தேசிய வளர்ச்சி மூலோபாயத்தை வகுத்த பழைய காங்கிரஸின் நிழல்கள் இன்னமும் நீடிப்பதாகக் கருதுவதும் காரணமாகும். இந்தியாவின் முதலாளித்துவ வர்க்கத்தின் சுதந்திரத்திற்குப் பிந்தைய தேசிய அபிவிருத்தி மூலோபாய அடிப்படையில் காங்கிரஸ் உருவாக்கிய வளர்ச்சித் திட்டத்தில் சுமாரன சமூக நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் தலைவரும், பிரதம மந்திரி வேட்பாளர் என்று கருதப்படுபவருமான சோனியா காந்திக்குள்ள ஒரே தகுதி நேரு - காந்தி குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி என்பது தான். ராஜீவ் காந்தி இந்திரா காந்தியின் புதல்வர் மற்றும் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரன் ஆவார்.

சர்வதேச அளவில் மதிக்கப்படுகின்ற மூத்த அரசியல் தலைவரும், அனுபவம் மிக்க அரசியல்வாதியுமான அட்டல் பிகாரி வாஜ்பாயியை BJP - NDA இந்தியாவின் ஸ்திரத்தன்மையின் சின்னமென்று சித்தரித்துக்காட்டி வருகிறது. உண்மையிலேயே BJP தலைமையிலான அரசாங்கம் ஒன்றின்பின் ஒன்றாக பல்வேறு நெருக்கடிகளில் இடறி விழுந்தது, இந்தியத் துணைக் கண்டத்தை போரின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது. 2001-2002-ல் அணு ஆயுதப் போர் மூளலாம் என்ற நிலை உருவாயிற்று மற்றும் குஜராத்தில் படுமோசமான துயரத்தை விளைவிக்கின்ற வகுப்பு மோதல்களை 2002 பிப்ரவரி/மார்ச்சில் BJP தலைமையிலான மாநில அரசாங்கம் தூண்டிவிட்டது, அதில் பல்லாயிரக் கணக்கானனோர் பலியானார்கள்.

80 வயதான, வாஜ்பாயி, பாசிச, இந்து தேசியவாத ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க (RSS) உறுப்பினர். அவர் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானிக்கு, இணையாக "மிதவாதியென்று" திறத்தை வழங்குகிறார். அத்வானி தலைமையில் நடைபெற்ற கிளர்ச்சியில் 1992ல் பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டது மற்றும் 1947 பிரிவினைக்குப் பின்னர் இந்திய துணைக்கண்டம் கண்டிராத மிகப்பெரிய இரத்தக்களரி மோதல் நடைபெற்றது. பாபர் மசூதியின் சாம்பல் மேட்டில் ஒரு இந்து கோயிலை கட்டுவதற்கு "தேசிய சமரச இணக்கம்" உருவாக வேண்டுமென்று வாஜ்பாய் கூறி வருகிறார்.

இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார வல்லரசாகவும், பொருளாதார வளர்ச்சி உந்து சக்தியாகவும், விரைவில் மாற்றுவதற்கு BJP, NDA கொள்கைகள் வழிவகுக்கும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறி வருகிறார். இந்தியா வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற, காந்த சக்தியாக மாறும் என்றும் அதன் மூலம் பூகோள பொருளாதாரத்தில் அலுவலக (Office) பகுதியாக மற்றும் மென்பொருட் சேவை வெளியில் கிடைக்க (Outsourcing) தனக்கு இந்தியாவில் ஒரு முக்கிய இடம் கிடைக்கும் என்றும் இந்திய முதலாளி வர்க்கம் நம்புகின்ற நிலைமையின் கீழ், இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரம், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் உற்சாக போக்கை காட்டுகிறது. இந்தியாவின் மத்திய தர வர்க்கத்தில் சலுகை பெற்ற தரப்பினர் மேற்கு நாடுகளின் ஆடம்பர நுகர் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

ஆனால் இந்திய மக்களில் மிகப்பெரும்பாலோர், சர்வதேச மூலதனத்திற்கு இந்தியாவை கதவு திறந்துவிடல், தனியார் மயமாக்குதல் கொள்கைகள், பொருளாதார கட்டுப்பாடுகள் தளர்வு சமூகநலத்திட்ட செலவினங்கள் குறைப்பு ஆகியவற்றால், வறுமைக்கும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். வாஜ்பாயியேகூட "இந்தியாவின் மற்றொரு பக்கம் ஒளிரவில்லை, ஒளியிழந்து இருண்ட பகுதியாக உள்ளது" என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. BJP சம்மந்தபட்ட ஒரு லக்னோ நிகழ்ச்சியில் இலவச சேலைகள் வாங்குவதற்குச் சென்று மிதிபட்டு இறந்த 20 ஏழைப் பெண்கள் தொடர்பாக அவ்வாறு அவர் கருத்துத் தெரிவித்தார்.

இந்துத்துவ மத்தளம் முழங்கல்

சென்ற பெப்ரவரி மாதம் மக்களவை கலைக்கப்படுவதற்கு முன்னர், வாஜ்பாய் மற்றும் BJP தலைவர்கள் கட்சியின் தேர்தல் பிரச்சார இயக்கம், பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் பாக்கிஸ்தானுடன் சமாதானம், ஆகியவற்றையே முக்கியமாக வலியுறுத்தும் என்றும் இந்துத்துவ கொள்கையை அடக்கி வாசிப்பதாகவும் குறிப்பிட்டார். இதை அவர்கள் கூறியதன் அடிப்படை, இந்திய பெரு வர்த்தக நிறுவனங்களும் சர்வதேச மூலதனமும் BJP-ன் வகுப்புவாத செயல்திட்டம் மற்றும் பாக்கிஸ்தானுடன் மேற்கொள்ளும் மோதல் போக்கு ஆகியவற்றால் குழப்பம் ஏற்படும் என்றும் பொளாதார சீர்திருத்தங்கள் தடைபடுமென்றும் பயந்தன, அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உறுதிமொழி தந்தது. BJP-ன் போர் வெறிக் கூச்சலை விட தெற்கு ஆசிய சுதந்திர வர்த்தக அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பாக்கிஸ்தானை அடக்கிவிட முடியும் என்று இந்தியாவின் பெரு வர்த்தக நிறுவனங்கள் கருதின.

என்றாலும், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியதும் BJP அடிக்கடி இந்திய பிற்போக்குவாத இந்து மேலாதிக்க வாதங்களை எழுப்பியது. BJP-ன் வற்புறுத்தலால் NDA-யின் தேர்தல் அறிக்கை இந்தியர் அல்லாதவர், இந்தியாவில் உயர் பதவி வகிப்பதற்கு தடை விதிக்க சட்டம் இயற்றக் கோருகிறது -இது இத்தாலியில் பிறந்த ரோமன் கத்தோலிக்கரான சோனியா காந்தியையும் குறிப்பிடுகிறது- அயோத்தி பிரச்சனைக்கு தேசிய முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணவும் கேட்டுக்கொள்கிறது. BJP-ன் முன்னணித் தேர்தல் இயக்கத் தலைவர்களில் ஒருவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி இவர் 2002-ல் முஸ்லீம்களுக்கெதிராக வகுப்புவாத தாக்குதல்களை தூண்டிவிட்டு அதற்கு சமாதானமும் சொன்னவர்.

இந்து மத்தளத்தை ஒலிக்க BJP முடிவு செய்ததற்குக் காரணம் அவர்கள் நம்பிய வழியில் பிரச்சாரம் அமையவில்லையென்பதுதான். தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் பாக்கிஸ்தானுடனான அமைதி முயற்சி மற்றும் "தாராளமயமாக்கல்" செயற்பட்டியல் இந்திய முதலாளித்துவத்தின் மிகப் பலமான பகுதியினருக்கு சேவைசெய்யும் என்பது நிச்சயம், ஆனால் குட்டி முதலாளித்துவ குழுக்களுக்கு BJP கொள்கைகளால் அழிவுகர பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அவர்களது தொண்டர்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டது. விஸ்வ இந்து பரிஷத் (VHP) அயோத்தி கிளர்ச்சியை முன்னின்று நடத்தியது. BJP-ஐ கண்டிக்கும் பல அறிக்கைகளை வெளியிட்டது. RSS மற்றும் அதன் இணை அமைப்புக்களை BJP தேர்தல் இயக்கத்தில் பணியாற்ற செய்வதற்காக முன்னணி RSS தலைவர்கள் வாஜ்பாயையும் இதர மூத்த BJP தலைவர்களையும் மார்ச் ஆரம்பத்தில் பிரதமரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இதற்கிடையில் காங்கிரஸ் தேர்தல் இயக்கம் சிதைவடைந்தது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில், அது ஆளும் சமாஜ்வாதிக் கட்சி (SP) அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறிக்கொள்ளும் BSP ஆகிய ஏதாவது ஒரு கட்சியுடன் உடன்பாடு செய்துகொள்ள முயன்றது. இரண்டு கட்சிகளுமே காங்கிரசை ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் எந்த அளவிற்கு வெற்றுத்தன்மையுடன் செயல்படுகிறது, என்பதை எடுத்துக்காட்டுகிற வகையில் தனது தொண்டர்களுக்கு உற்சாகமூட்ட சோனியாவின் புதல்வருக்கு உத்திரப் பிரதேசத்தில் இடம் கொடுத்திருக்கிறது. அவரது சகோதரியும் காங்கிரஸ் பிரச்சார இயக்கத்தில் முக்கிய பங்களிப்புச் செய்கிறார்.

காங்கிரஸ், BJP-ஐ வலது மற்றும், இடது ஆகிய இரண்டு முனைகளிலும் இருந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. BJP-ன் பிற்போக்குத் திட்டங்களின் விளைவு தான் இது. வேலையில்லாத் திண்டாட்டம் தான் முதல் தேர்தல் பிரச்சனை என்று காங்கிரஸ் கூறுகிறது மற்றும் NDA கூறுகின்ற இந்தியா ஒளிர்கிறது என்பதைக் கண்டித்து வருகிறது. காங்கிரஸ் தான் உண்மையான தாராளமயமாக்கல் கொள்கை கட்சி என்று கூறிவருகிறது. அதே போன்று, 1970-களில் வாஜ்பாய் ஜனதாக் கட்சி அமைச்சராக இருந்தபோது இந்தியாவின் அணு ஆயுதத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் என்று விமர்சித்து வருகிறது.

சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) இரண்டும் காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்திருப்பதை, அது பிஜேபியை விட தீமை குறைந்தது என்ற அடிப்படையில் நியாயப்படுத்தியுள்ளன. BJP மிகத் தீவிரமான அரசியல் பிற்போக்கமைப்பு, இந்தியாவின் உழைக்கும் மக்களது நலன்களுக்கு முற்றிலும் விரோதமானது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இதே ஸ்ராலினிஸ்டுகள் பல தலைமுறைகளாக இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளுக்கு, உழைக்கும் மக்களை திட்டமிட்டு, அடிப்பணியச் செய்திருக்கின்றனர். இதில் சில நேரங்களில் BJP மற்றும் அதன் முன்னோடியான ஜன சங்கம் ஆகியவையும் அடங்கும், இதுபோன்ற நடவடிக்கைகளால் தான் BJP அரசியல் அதிகாரம் பெரும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.

கடந்த காலத்தில், ஸ்ராலினிஸ்டுகள் ஏதாவதொரு முதலாளித்துவக் கட்சியோடு கூட்டு சேர்வதை நியாயப்படுத்தும்போது ஏகாதிபத்திய எதிர்ப்பு அல்லது தேசிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மூலோபாயம் என்று சொல்லி வந்தனர். இப்போது, இந்திய முதலாளித்துவம் தேசிய அபிவிருத்திக்கான அதன் பாசாங்குகளை கைவிட்டுவிட்டு பகிரங்கமாக சர்வதேச மூலதனத்துடன் கூட்டு வைத்துள்ளது, இன்னும் வெட்கமற்ற முறையில் தொழிலாளர் விரோத செயற்பட்டியலை பின்பற்றுகிறது, ஸ்ராலினிஸ்டுகள் இப்போது அதே அடிப்படை கொள்கையை ஆனால் மதச்சார்பின்மையை நிலைநாட்டுவதற்காக என்ற பெயரில், வகுப்புவாத அடிப்படையிலான துணைக் கண்டம் பிரிவினை செய்யப்பட்டதன் மூலம் நிறுவப்பட்ட அரசை தூக்கிப் பிடித்து வருகிறார்கள்.

தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மற்றும் சோசலிச சர்வதேசிய அடிப்படையில், இந்திய தொழிலாளர்கள் ஒரு புதிய முன்னோக்கை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்திய தேர்தல்கள் வலியுறுத்திக் காட்டுகின்றன.

Top of page