World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington to use UN to select puppet regime in Iraq

ஈராக்கில் பொம்மை ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கு ஐ.நா- வை வாஷிங்டன் பயன்படுத்திக்கொள்ளும்

By James Conachy
20 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் தற்போது தோன்றியுள்ள பொதுமக்களது கிளர்ச்சியின் விளைவாக அரசியல் நெருக்கடி தோன்றியிருப்பது ஐ.நா தலையிட்டு பாக்தாத்தில் தனக்கு கீழ்படிந்து நடக்கும் ஆட்சியை உருவாக்க புஷ் நிர்வாகமானது ஐ.நாவை நாடுமாறு நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறது. படையெடுப்பிற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் ஐ.நா அமைப்பை ஓரங்கட்டி வந்த புஷ்-ம் பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர்-ம், சிறப்புத்தூதர் Lakhdar Brahimi ஜூன் 30-ந்தேதி பதவி ஏற்குமாறு திட்டமிடப்பட்டுள்ள "இடைக்கால" ஈராக் அரசாங்கத்தின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் ஐ.நா. பிரதான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை ஏப்ரல் 16அன்று அங்கீகரித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நிலவரம் வேறுவகையாக இருக்குமென்று மதிப்பிடப்பட்டது. ஆரம்பத்தில் வெள்ளை மாளிகை தீட்டியுள்ள திட்டத்தின்படி இந்நேரம் கிளர்ச்சி பெரும்பாலும் நசுக்கப்பட்டிருக்க வேண்டும், பேரழிவு ஆயுதங்கள் (WMD) முன்னரே மறக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவிற்கு ஆதரவான ஈராக்கியர்களை கவனமாக ஆராய்ந்து இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். புஷ் மறுதேர்தலுக்கு நிற்கும் நேரத்தில் ஜூன் 30-ல் பொம்மை ஆட்சியின் தலைவர் ஈராக் "விடுதலை செய்யப்பட்டதற்காக" ஜனாதிபதியை பாராட்டுவார் என்றெல்லாம் வெள்ளை மாளிகை திட்டமிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஈராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்க கார்ப்பரேஷ்ன்களுக்கு தந்துவிட்டு நீண்டகால அடிப்படையில் அமெரிக்க இராணுவத்தளங்களை உருவாக்கும் உண்மையான செயல் திட்டமும் மிக வேகமாக செயல்படுமென்று எதிர்பார்த்தார்கள்.

அதற்கு மாறாக, பாக்தாத்தின் குடிசைப்பகுதிகளில் கிளர்ச்சி தோன்றி இரண்டுவாரங்களுக்குப்

பின்னர் ஈராக்கில் அமெரிக்காவின் ராணுவபிடி இறுக்கமாகவோ, பாதுகாப்பாகவோ இல்லை. பலுஜாவில் 3,000- அமெரிக்க கடற்படையினரையும் மீறி பல்லாயிரக்கணக்கான ஈராக் போராளிகள் அந்த நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். நஜாப் நகரம் ஷியாத் தலைவர் மொக்தாதா அல் சதருக்கு விசுவாசமான ஆயிரக்கணக்கான ஷியா போராளிகள் வசம் உள்ளது. 2,500- அமெரிக்கத்துருப்புக்கள் நகருக்கு வெளியே குவிக்கப்பட்டுள்ளன. அவை நகருக்குள் நுழைய முயன்றால் ஆயுதந்தாங்கிய தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக முக்கிய ஷியா மத போதகர்கள் எச்சரித்துள்ளனர். பாக்தாத் நகரிலேயே தெருச்சண்டைகள், வேலை நிறுத்தங்கள், அமெரிக்காவிற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. அமெரிக்காவின் அளிப்பு வழித்தடங்கள் மற்றும் இராணுவத்தளங்கள் மீது நுட்பமான கொரில்லா தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஏற்கனவே இந்த மாதத்தில் ஏராளமான அமெரிக்கத்துருப்புக்கள் பலியாகியிருக்கிறார்கள் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். 2003- மார்ச்-ஏப்ரலில் படையெடுப்பு நடைபெற்ற நேரத்தில் மூன்று வாரங்களில் நிகழ்ந்த சாவுகளைவிட இந்த ஒரு மாதத்தில் அதிக துருப்புக்கள் பலியாகியிருக்கிறார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால மத்தியகிழக்கு திட்டம் தொடர்பாக அதிக கவலை உருவாகிவிட்டது. ஈராக் மக்களின் கிளர்ச்சி ஏற்பட்ட பின்னர், ஈராக்கில் வாஷிங்டனின் அரசியல் செல்வாக்கு அடிப்படை மிகக்குறுகிய வட்டத்திற்குள் இருந்தது, அந்த அடிப்படையும் பொறிந்துவிட்டது. அமெரிக்க கூட்டணி இடைக்கால நிர்வாகம் (CPA) பாக்தாத்தில் தனது பாதுகாப்பான கொத்தளத்தின் தலையகத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது.

அமெரிக்கா உருவாக்கிய உள்ளாட்சி குழுக்கள் தலைநகரிலும் தெற்கு ஈராக் முழுவதிலும், அரசாங்கக் கட்டிடங்களையும், இதர சொத்துக்களையும், Al Sadr- க்காக போராடி வரும் போராளிகள் வசம் ஒப்படைத்துவிட்டனர். ஆயிரக்கணக்கான போலீசார் சிவில் பாதுகாப்புப்படையினர் ஈராக் இராணுவத்திலிருந்து அமெரிக்கா தேர்ந்தெடுத்த படையினர் ஆகியோர் எழுச்சிக்கு எதிராக போரிட மறுத்து பல்வேறு இடங்களில் போராளிகளுடன் சேர்ந்து கொண்டனர். குடிமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா நியமித்துள்ள ஈராக் ஆளும் குழு உறுப்பினர்கள் (IGC) ராஜிநாமா செய்திருக்கின்றனர். பல்லூஜாவை சமாதானப்படுத்த மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளை ''சட்ட விரோதமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை'' என்று ஒரு உறுப்பினர் கூறியுள்ளார்.

ஈராக் கிளர்ச்சி அமெரிக்காவிற்கு உள்ளேயும் எதிர்ப்பிற்கு தூபம் போட்டிருக்கிறது. பேரழிவு ஆயுதங்கள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களோடு ஈராக்கின் தொடர்பு பற்றிய பொய்கள் அம்பலத்திற்கு வந்திருப்பதற்கு மேலாக இப்போது ஈராக் மக்கள் தங்கள் நாட்டிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. வாஷிங்டனின் நட்பு நாடுகளிடையேயும் கூட இப்போது பீதி ஏற்பட்டுள்ளது. ஸ்பெயின் மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய இரண்டு நாடுகளும் தங்களது துருப்புக்கள் விரைவில் ஈராக்கிலிருந்து விலக்கிக்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கின்றன.

புஷ் நிர்வாகமும் அதன் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் கட்டுக்கோப்பும் தற்போது அமெரிக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான அடிப்படையை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கின்றன. ஆயினும், அதேநேரத்தில் ஆக்கிரமிப்புப்படைகள் திணிக்கும் ஈராக் அரசாங்கம் எதுவாகயிருந்தாலும், அதனை முற்றிலும் சட்டவிரோதமானது என்றே ஈராக் மக்கள் கருதுவார்கள். இதன் விளைவாக அமெரிக்கா ஐ.நா-வின் சேவைகளைப் பெறுவதற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

சென்ற அக்டோபர் மாதம் ஐ.நா அதிகாரிகள் ஈராக்கிலிருந்து வெளியேறினார்கள், ஈராக்கில் இருப்பதால் ஐ.நா-விற்கு மிச்சமிருக்கும் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும் என்பதால் அவ்வாறு வெளியேறினார்கள். ஆகஸ்ட் மாதம் பாக்தாத்திலுள்ள ஐ.நா தலைமை அலுவலகங்கள் மீது குண்டு வீச்சுத்தாக்குதல்கள் நடந்தது, ஈராக் மக்களில் பெரும்பாலோர் கண்களில், ஐ.நா-வை அமெரிக்க ஏகாதிபத்தியம் புரிந்து வரும் குற்றங்களின் உடந்தையாள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்ற உண்மை எதிரொலிக்கிறது. ஐ.நா- தான் 10- ஆண்டுகளுக்கு மேலாக ஈராக் மீது பொருளாதார தடைகளை நியாயப்படுத்தியதன் மூலம், பேரழிவு ஆயுதங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை முறைமை ஆக்கியது, அமெரிக்கா படையெடுப்பதற்கு ஒரு காரணம் கிடைத்தது மற்றும் படையெடுப்பு முடிந்த பின்னர் அதற்கு ஒப்புதலையும் ஐ.நா வழங்கியது.

2003- ஆண்டு முழுவதிலும் ஐ.நா-வை ஓரங்கட்டி வந்த புஷ் நிர்வாகம், இந்த ஆண்டு ஈராக்கில் நேரடியாக அரசியல் பங்களிப்பு செய்யுமாறு ஐ.நா-வை கேட்டுக்கொண்டது. ஜனவரி மாதம் அல்சதர், அயத்துல்லா-அலி-அல் -சிஸ்தானி தலைமையின் கீழுள்ள ஷியா மத போதகர்கள் போன்ற அமெரிக்க எதிர்பாளர்களின் நிர்பந்தம் காரணமாக பொதுமக்களது வாக்குப்பதிவு மூலம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படாத எந்த அரசாங்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் அறிவித்த பின்னர், ஐ.நா- வை அனுகியது. இந்த மாத கிளர்ச்சியை எதிர்பார்த்து ஜனவரியில் பல்லாயிரக்கணக்கான ஈராக் ஷியாக்கள், குழு மூலம் இடைக்கால ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான அமெரிக்கத்திட்டத்திற்கு எதிரான கண்டனப்பேரணிகளை நடத்தினர்.

ஷியாக்களது கிளர்ச்சியை எதிர்கொண்டு, மக்களது உணர்வுகளுக்கு எதிராக புஷ் நிர்வாகம் ஐ.நா-விற்கு ஒரு கோரிக்கை விடுத்தது. ஈராக்கிற்கு Brahimi -யை "உண்மை அறியும் குழுவாக" அனுப்பி ஆய்வு செய்து எவ்வாறு இறையாண்மையை மாற்றித்தருவது என்று "சுதந்திரமாக" பரிந்துரைகளை செய்யுமாறு புஷ் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

பல்வேறு தெளிவான அடிப்படைகளால் Brahimi தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பின்னர், அவர் அந்நாட்டில் முக்கியமான ராஜியத்துறையில் பங்களிப்புச்செய்தார். அமெரிக்கா விரும்பி தேர்ந்தெடுத்த, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கத்தின் தலைவராக Hamid Karzai-ஐ ஏற்றுக்கொள்ளுமாறு பல்வேறு போர் பிரபுக்களையும், அரசியல் பிரமுகர்களையும் சம்மதிக்கச் செய்தார் மற்றும் சில நேரங்களில் மிரட்டவும் செய்தார். ஈராக்கில் அதையே அவர் செய்ய முடியுமென்று புஷ் நிர்வாகம் நம்புகிறது.

பெப்ரவரியில் ஐ.நா உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள் வாஷிங்டனை ஏமாற்றிவிடவில்லை போதுமான அவகாசமில்லை, நாடு மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது, எனவே ஜூன் 30-ந்தேதிக்கு முன் தேர்தல்கள் எதையும் நடத்துவதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று Brahimi குறிப்பிட்டார். இப்போது உள்ள ஈராக் ஆளும் குழுவை 150-முதல் 200-பேர் அடங்கிய குழுவாக விரிவுபடுத்தலாம். அது "இடைமருவு நாடாளுமன்றக் குழுவாக" செயல்படும் என்று Brahimi தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். சிஸ்தானி இதற்கு உடன்படுவதாக கோடிட்டுக் காட்டிய பின்னர் புஷ் நிர்வாகம் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

அப்படியிருந்தும் அமெரிக்கத்திட்டங்கள் ஒன்றின்பின் ஒன்றாக வெளிவரத்தொடங்கின. மார்ச் 8-ல் இடைக்கால ஈராக் அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது இதற்கு அதில் கையெழுத்திட்ட IGC உறுப்பினர்களே பகிரங்கமாக கண்டனம் தெரிவித்தனர். சதரும் அதற்கு பின்னர் சிஸ்தானியும் சட்ட விரோதமானது என்று அறிவித்தனர் மற்றும் அதை திருத்தக்கோரி பல்லாயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மார்ச் கடைசியில் சதர்மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்ததற்கு சரியான காரணங்கள் உள்ளன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. அந்த நடவடிக்கை இந்த மாதம் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டது. இடைக்கால அரசியல் சட்டத்திற்கு மிகத்தீவிரமாக எதிர்ப்புத் தெரிவிக்கும் ஷியா தலைமையை நீக்கிவிட்டால் அதனால் எதிர்ப்பு வலுவிழந்துவிடும் என்று அமெரிக்கா நம்பியது.

கிளர்ச்சி வெடித்த ஏப்ரல் 4-ல் Brahimi ஈராக்கிற்கு திரும்பினார். 10 நாட்கள் தங்கியிருந்தார். ஜூன் 30-ந்தேதி இறையாண்மையை எப்படி ஒப்படைப்பது என்பது தொடர்பாக பலதரப்பு ஈராக் பிரதிநிதிகளோடு அவர் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பாக்தாத் நகரத்தை விட்டுவெளியில் எங்கும் செல்லவில்லை. ஷியா மத குழுக்களில் எந்தப்பிரிவையும் அவர் கலந்தாலோசிக்கிவில்லை.

இதன் விளைவாக புதிய ஐ.நா பரிந்துரைகள் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை முழுமையாக பிரதிபலிக்கின்ற வகையிலும் ஈராக் மக்களது ஜனநாயக மற்றும் சமுதாய எதிர்பார்ப்புகளை மீறுகின்ற வகையிலும் அமைத்துள்ளன.

அமெரிக்க மற்றும் இதர வெளிநாட்டுப்படைகள் ஈராக்கைவிட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை அடிப்படையில் கிளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஜூன் 30-ல் இடைக்கால அரசாங்கத்தை அமைத்துவிட முடியுமென்று Brahimi ஆலோசனை கூறியுள்ளார். ஐ.நா, புஷ் நிர்வாகம் மற்றும் IGC- ன் நடப்பு உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தி இடைக்கால அரசாங்கத்தை அமைத்துவிட முடியும் என்று அவர் கருதுகிறார். ஆண்டு இறுதியில் தேர்தல்கள் நடத்தப்படும். ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக நேரடியாக போரிட்டவர்களை இந்தத்தேர்தலில் கலந்து கொள்ள முடியாதபடி தடைவிதிக்கப்படும்.

ஈராக்கின் இறையாண்மை கொண்ட அரசாங்கம் என்று அழைக்கப்படும் ஆட்சிக்கு அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புப்படைகள் மீது எந்தவிதமான அதிகாரமும் இருக்காது ஈராக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு அவர்கள் சுதந்திரமாக செயல்படுவார்கள். Brahimi நிருபர்களுக்கு பேட்டியளிக்கும்போது ''இறையாண்மை கொண்ட அரசாங்கம் இருக்கும், அந்த அரசாங்கம் தனது இறையாண்மையை செயல்படுத்தும் என்றாலும் உண்மை நிலவரத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். இறையாண்மை ஒப்படைக்கப்படும். ஆனால் இங்குள்ள 1,50,000- படையினரும் ஜூலை முதல்தேதி மறைந்துவிட மாட்டார்கள்'' என்று குறிப்பிட்டார்.

எதிர்பார்த்தபடி புஷ், Brahimi-ன் முன்மொழிவுகள் பற்றி ஆர்வம் கொண்டார், "இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்திருக்கிறது, ஈராக் மக்கள் விரிவான அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்வார்கள்" என்று குறிப்பிட்டார். என்றாலும், உண்மையான தாக்கம் எதுவாக இருக்குமென்றால் பெரிய அரசாங்கங்கள் சொல்வதை கேட்காமல் நடுநிலையோடு செயல்படுவதாக கூறிக்கொள்ளும் ஐ.நா-வின் கூற்றுக்களை மேலும் சீர்குலைப்பதாகவும், இழிவுபடுத்துவதாகவுமே இந்த நடவடிக்கை அமைந்துவிடும். இந்த அமைப்பு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒத்தூதும் ஒரு கருவியைத் தவிர வேறொன்றுமில்லை என மில்லியன் கணக்கான மக்கள் முன் முற்றிலும் அம்பலப்படுத்தும்.

ஐ.நா அதிகாரியே கூட ஈராக்கில் தங்களுக்கு இருக்கும் வரவேற்பு குறித்து பகிரங்கமாக தனது நடுக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐ.நா- பொதுச்செயலாளர் கோபி அன்னானின் மூத்த உதவியாளர் John Mortimer, நியூயோர்க் டைம்ஸிற்கு பேட்டியளிக்கும்போது குறிப்பிட்டார்: ''தேவையற்றவர்கள், அவைக்கு உதவாதவர்கள் என்று புறக்கணிக்கின்றவர்களே நம்மை வரவேற்கும் போது, திடீரென்று அவர்கள் மண்டியிட்டு 'நீங்கள் தேவைப்படுகிறீர்கள், திரும்ப வாருங்கள்' என்று அழைக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக நம்மை ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் வன்முறை நிகழ்ச்சிகளுக்கிடையே கொண்டுபோய் இறக்கும்போது நாம் எப்படி சித்தரிக்கப்படுகிறோம் என்றால் மிகப்பெருமளவில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்தின் நம்பிக்கையான சேவகன் அல்லது ஏஜெண்ட் என்று கருதப்படும்போது அது நமக்கு மிகவும் பீதியூட்டுவதாக இருக்கிறது."

Top of page