World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Greetings from David North to Australian SEP:

A devastating blow to the myth of American invincibility

அவுஸ்திரேலிய சோ.ச.க விற்கு டேவிட் நோர்த்திடமிருந்து வாழ்த்துக்கள்:

தோற்கடிக்க முடியாத அமெரிக்கா என்ற மாயைக்கு ஒர் அழிவுகரமான தாக்குதல்

12 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான டேவிட் நோர்த்தால், ஏப்பிரல் 10-11ல் நடந்த அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சியின் அங்கத்தவர் கூட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட வாழ்த்துக்களை கீழே பிரசுரிக்கின்றோம்.

அன்பின் தோழர்களே,

சிட்னியில் உங்களது வார இறுதிக் கூட்டத்தை ஆரம்பிக்கும் வேளையில், அமெரிக்காவில் உள்ள உங்களது தோழர்கள் மற்றும் சக சிந்தனையாளர்களதும் மனமுவந்த வாழ்த்துக்களை தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டமானது, வரலாற்று இயக்கத்தில் வல்லமைமிக்க காரணியாகும் என்ற மார்க்சிசத்தின் தனித்தன்மை வாய்ந்த மூலக்கூற்றை கடந்த வார சம்பவங்கள் சக்திவாய்ந்த முறையில் நிரூபிக்கின்றன. பக்தாத்திற்குள் நுழைந்து ஓரு வருடம் பூர்த்தியாகும்போது, ஈராக்கிய மக்களின் கிளர்ச்சிக்கு முகம்கொடுத்திருக்கும் அமெரிக்க இராணுவம், முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் போராட்டத்தின் உடனடி விளைவுகள் என்னவாக இருந்தாலும், தோற்கடிக்க முடியாத அமெரிக்கா என்ற மாயை தகர்ந்து போயுள்ளது. மிகவும் சுருக்கமாகக் கூறின், இந்த எழுச்சி, ஈராக்கை அமெரிக்காவின் ஒரு காலனித்துவப் பகுதியாக மாற்றும் புஷ் நிர்வாகத்தின் மூலோபாயத்திற்கு ஒரு அழிவுகரமான தாக்குதலாகும்.

சுன்னி முஸ்லிம் மற்றும் சியா முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான பிளவை வலுப்பெறச் செய்து, மற்றும் அதைச் சுரண்டிக்கொள்வதன் மூலம், இந்த இரு குழுக்களும் அமெரிக்க ஆதிக்கத்தை விளைபயனுள்ள வகையில் எதிர்த்து நிற்பதைத் தடுக்க முடியும் என்பது வாஷிங்டனின் அடிப்படை ஊகமாகும். அது மட்டுமன்றி, வெறுமனே அயதுல்லா அலி அல்-சிஸ்தானியை குழுவாக சூழ்ந்துள்ள சிறு பிரபுத்துவ தட்டினருடனான உடன்படிக்கையின் அடிப்படையில், சியா சமூகத்தவர்கள் மத்தியிலான ஆற்றல் மிக்க எதிர்ப்பை செயலற்றதாக்க முடியும் எனவும் அமெரிக்கா நம்பியது. திரு. எல். போல் பிரிமர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் மொக்டாதா அல்-சதாருடன் ஒரு மோதலை ஏற்படுத்திக்கொள்ள தீர்மானித்த வேளையிலும், இந்த இளம் மதகுருவைச் சூழ்ந்துகொண்டுள்ள இயக்கத்தை நசுக்குவது ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருக்கும் என நம்பினார்.

அல்-சதாரை பாதுகாப்பதற்காக தன்னிச்சையாக தோன்றிய எழுச்சி, பிரேமரை முற்றிலும் திடுக்கிடச் செய்ததுடன், அது புஷ் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு மூலோபாயத்தின் அரசியல் வங்குரோத்தை மட்டுமன்றி, அதன் இராணுவ நிலைமையின் வலுவற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியது. தற்கால நிலைமையை பற்றி ஸ்றாட்போர் இணையம் நேற்றைய (ஏப்பிரல்11) வர்ணனையில் எச்சரித்தவாறு:

"தற்போதைய போக்குகள் துரிதப்படுத்தப்பட்டால், பேரழிவுக்கு வழிவகுக்கும் கடுமையான இராணுவ சவாலை அமெரிக்கா எதிர்கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு, பரந்த அடிப்படையிலான ஷியா முஸ்லிம்களின் எழுச்சியை நிறுத்தவும், அதேபோல் சுன்னி முஸ்லிம்களின் கிளர்ச்சியை நசுக்கவும் அவசியமான படைகள் கிடையாது. தற்போதைய எழுச்சி காணப்படுகின்ற பிரதேசங்கள், தற்போது இராணுவம் நிலைகொண்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் மேலதிகமாக இராணுவங்களைப் பயன்படுத்தக்கூடிய பிரதேசங்களையும் விட பெரிதாக உள்ளது. அமெரிக்கா ஏற்கனவே சில இடங்களில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றது. தர்க்கரீதியான விளைவு ஒரு கைப்பற்றப்பட்ட பிரதேசத்திற்குள் சிக்கிக் கிடக்கும் மூலோபாயமாகும். இங்கு, நாட்டின் பெரும் பகுதி கெரில்லாக்களுக்கு விட்டுக்கொடுக்கப்படுவதோடு, அமெரிக்க இராணுவம் ஈராக்கிய மக்களுக்கு நுழைவதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை வலுப்படுத்தப்பட்ட அரண்களுக்குள் சிக்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, அமெரிக்க இராணுவத்துக்கு நாட்டுக்குள்ளேயோ அல்லது அதன் எல்லைக்கு அப்பாலோ வெற்றிகரமான அழுத்தத்தை திணிக்க முடியாத நிலையில், அமெரிக்க இராணுவம் ஈராக்கினுள் தங்கியிருக்க சிரமப்படுவது ஏன் என்ற கேள்விகூட நிச்சயமாக எழும்பும்.

ஈராக் மீதான படையெடுப்பலும் ஆக்கிரமிப்பிலும் அதன் செல்வாக்கை அதிகளவில் முதலீடு செய்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், எழுச்சியை நசுக்குவதற்கு மிகவும் மிலேச்சத்தனமான வழிமுறைகளை கையாள்வதில் இருந்து பின்வாங்காது. உண்மையில், ஆளும் கும்பலின் முழு அரசியல் நிறுவனத்தாலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்வதையிட்டு சிந்திக்கவும் முடியாது. புஷ் நிர்வாகத்தைப் பற்றிய ஜனநாயகக் கட்சியின் பிரதான விமர்சனம், ஈராக்கை கட்டுப்படுத்துவதற்காக தேவையான அளவு இராணுவத்தை அது பயன்படுத்தவில்லை என்பதாகும். எவ்வாறெனினும், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் உறுதியான நம்பிக்கையில் அக்கறை செலுத்தாமல், ஈராக்கிய சம்பவங்கள் --வோல்ஸ்றீட் ஜேர்னலின் சொற்களைப் பாவித்தால்-- "பலம் வேலைசெய்கின்றது" என்ற முன்நோக்கின் வரையறைகளை முற்றிலும் நாடகபாணியில் வெளிப்படுத்தியுள்ளன.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் மீதான ஈராக்கிய வெகுஜனங்களின் வீரம் செறிந்த எதிர்ப்பானது, அனைத்துலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவைப் பெற தகுதியுடையதாய் இருப்பதுடன் மனமார்ந்த கெளரவத்திற்கும் பாத்திரமாகின்றது. ஆயினும், தவிர்க்க முடியாத பிரதிகூலங்களுக்கு முகம்கொடுக்கும் ஈராக்கிய மக்களின் போராட்டம் எமது கெளரவத்திற்கு பாத்திரமாகும் அதேவேளை, ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கக் கூடிய ஒரே சக்தியான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமைத்துவம் பற்றிய முக்கிய பிரச்சினை தீர்க்கப்டாததையிட்டு எம்மால் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. ஏகாதிபத்தியத்தின் தோல்வி இந்தப் பிரச்சினை தீர்க்கப்படுவதிலேயே தங்கியுள்ளது. அனைத்துலகக் குழுவினதும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தினதும் மிகச் சிறந்த வரலாற்று முக்கியத்துவம் இங்குதான் இருக்கின்றது.

அல் சதார் அமெரிக்க மக்களுக்கு விடுத்துள்ள அழைப்பை நாம் கூர்மையாக அவதானித்தல் வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு ஏக பலம்பொருந்தியது அல்ல என்பது பற்றியும் அமெரிக்கா உள்முரண்பாடுகளால் கிழிந்துபோயுள்ளது பற்றியும் ஒரு புதிய விழிப்புணர்வு ஈராக்கிய மக்கள் மத்தியில் தோன்றியிருப்பதை இந்த அழைப்பு பிரதிபலிக்கின்றது. ஈராக்கிய மக்கள் தமது தேச எல்லைகளுக்கும் அப்பால் ஆதரவு திரட்ட வேண்டும் என்ற முன்னுணர்வையும் இது வெளிப்படுத்தியுள்ளது. இந்த நனவுபூர்வமான அபிவிருத்தி, 2003 பெப்ரவரியில் இடம்பெற்ற யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிலேயே இது முன்னுணரப்பட்டது. இது சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டியெழுப்புவதில் புதியதும் மிகவும் சாத்தியமானதுமான நிலைமைகள் தோன்றியிருப்பதை மெய்ப்பித்துள்ளது.

ஸ்ராலினிசத்தின் தசாப்த காலங்களாலான காட்டிக்கொடுப்புகளின் விளைவாக சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஏதாவது ஒரு வழியில் 20ம் நூற்றாண்டின் முழு சமூக அரசியல் உரிமையையும் மற்றும் வரலாற்று பதிவுகளையும் அழித்தொழித்துவிட முடியும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் நம்பிக்கொண்டிருந்தது. புதியதும் சவால் செய்ய முடியாததுமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மாபெரும் வெற்றியை இருபதாம் நூற்றாண்டு மெய்ப்பிக்கும் என அது கற்பனை செய்துகொண்டுள்ளது.

ஏகாதிபத்தியம் இப்போது அதற்கு மாறாக தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகர இயக்கத்தின் மிகவும் ஆரம்பப் படிகளின் தோற்றத்தை காண்கின்றது. உலக முதலாளித்துவ அமைப்பின் தீர்க்கப்பட முடியாத பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளால் புறநிலையில் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த இயக்கத்தின் தலைவிதியானது, கடந்த நூற்றாண்டின் வரலாற்றுப் போராட்டங்களின் படிப்பினைகளை கற்றுக்கொள்வதிலேயே தவிர்க்கமுடியாத விதத்தில் தங்கியிருக்கின்றது. இந்தப் படிப்பினைகளை கற்றுக்கொள்ள வகை செய்வது எமது கட்சி மாத்திரமேயாகும். இது பற்றிய எமக்குள்ள நனவிலேயே எமது அனைத்துலக இயக்கத்தின் நடவடிக்கைகளின் பிரதான முக்கியத்துவம் தங்கியிருக்கின்றது.

இனிய வாழ்த்துக்களுடன்,

டேவிட் நோர்த்,

அமெரிக்க சோ.ச.க வின் அரசியல் குழு சார்பில்

Top of page