World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Champaign, Illinois Electoral Board places SEP candidate on ballot

சாம்பைன், இல்லினோய், தேர்தல் வாரியம் SEP வேட்பாளர் வாக்குப்பதிவில் கலந்துகொள்ள அனுமதி

By a reporting team
3 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

சாம்பைன் கவுண்டி தேர்தல் வாரியம் திங்களன்று SEP வேட்பாளருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனைகள் திரும்பப்பெறப்பட்டதை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு, இல்லினோய் தேர்தல் வாரியத்திற்கு நவம்பர் 2-ல் நடைபெறும் தேர்தலில் மக்கமன்னின் பெயரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டது. SEP வேட்பாளரின் நியமன மனுக்களில் கையெழுத்திட்டிருந்த சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட கையெழுத்துக்களை இரத்து செய்வதன் மூலம் SEP வேட்பாளரை வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஜனநாயகக் கட்சியால் ஒரு மாதகாலமாக நடத்திவரப்பட்ட பிராச்சாரம் இதன் மூலம் முடிவிற்கு வந்தது.

தேர்தல் வாரியத்தின் முடிவு SEP-க்கு ஒரு வெற்றியாகும் மற்றும் மக்கமனும் அவரது ஆதரவாளர்களாலும் மக்கமன் நியமன மனுக்களுக்கு எதிராக ஜூன் 28-ல் முன்னணி சாம்பைன் கவுண்டி, ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் ஆட்சேபனையை தாக்கல் செய்ததிலிருந்து எடுத்துவரும் நிலைப்பாட்டை சரி என்று நிரூபிக்கிறது. ஜனநாயகக் கட்சிக்காரர்களின் ஆட்சேபனை அடிப்படை இல்லாதது, கெட்ட நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டது என்று ஆரம்பத்திலிருந்தே மக்கமனும், SEP-ம் கூறிவருகின்றனர் மற்றும் மக்கமன் வாக்குப்பதிவு தகுதிபெறுவதற்கு தேவைப்படும் கையெழுத்துக்களுக்கு மேற்பட்ட அளவில் கையெழுத்துக்கள் சேகரித்துள்ளதாக அவர்கள் கூறிவந்தனர்.

ஒரு மாதம் வரை அவர்கள் இப்படி இடையூறுகளை செய்த பின்னர், இறுதியாக ஜூலை 27-ல் தேர்தல் வாரியத்தின் விசாரணையின்போது நூற்றுக்கணக்கான கையெழுத்துக்களை அவர்கள் ஆட்சேபித்ததை அவர்கள் நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது, அவர்களது பிரதிநிதிகள் அவ்வாறு செய்யமுடியவில்லை. அதற்கு சில நாட்களுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தங்களது ஆட்சேபனையை திரும்பப்பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திங்களன்று நடைபெற்ற தேர்தல் வாரியக்கூட்டத்தில் மக்கமன்னை வாக்குப்பதிவில் கலந்து கொள்ளவிடாது தடுக்கும் முயற்சியில் சம்மந்தப்பட்ட ஜனநாயகக்கட்சி அதிகாரிகள் அல்லது அவர்களது வழக்குரைஞர்கள் கலந்துகொள்ளவில்லை. கூட்டம் பகல் 1:00 மணிக்கு தொடங்கியது. ஆட்சேபனையை தொடக்கிய, சாம்பைன் கவுண்டி ஜனநாயகக் கட்சிக்காரர்களின் துணைத்தலைவர் Geraldine Parr சென்றவாரம் ஆட்சேபிப்பவர் மனுவை திரும்பப்பெறுவதற்காக வழக்குரைஞர் மூலம் அனுப்பியிருந்த அறிக்கையை வாரியம் ஏற்றுக்கொண்டது. Parr மக்கமனின் மனுக்களில் 2,003 கையெழுத்துகளில் பாதிக்கு மேற்பட்டவற்றை செல்லாது என்று ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

அதற்குப்பின்னர் தேர்தல் வாரியம் SEP வேட்பாளர் பெயரையும் அவரது கட்சி சின்னத்தையும் மாநில தேர்தல் வாரியத்தில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டது. அந்த இரண்டு முடிவுகளும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன, சில நிமிடங்களில் விசாரணை முடிந்துவிட்டது, தேர்தல் வாரியம் கட்டளையில் கையெழுத்திட்டு மக்கமனுக்கு ஒரு பிரதியை தந்தது.

சாம்பைன் கவுண்டி நீதிமன்றத்திற்கு வெளியில் மக்கமன் பத்திரிகை மாநாட்டில் பேட்டியளித்தார். அதில் இல்லினோய் மாணவர் செய்தி பத்திகையான Daily IIIini, மற்றும் NBC- TV செய்தி நிறுவனத்துடன் இணைந்த WILL வானொலி உட்பட பல்வேறு தொலைக்காட்சி வானொலி மற்றும் பத்திரிகை நிருபர்கள் கலந்து கொண்டனர். மக்கமன் தயாரித்து வைத்திருந்த அறிக்கையை படித்தார், SEP கொள்கைகள் மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்களின் கெட்ட நோக்கங்கொண்ட சவாலை நிலைகுலையச் செய்ய அது போராடியது தொடர்பாகவும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

SEP நியமன மனுக்களுக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்புவதற்கு ஜனநாயகக்கட்சி மாநில அரசாங்க ஊழியர்களை பயன்படுத்திக்கொண்டது தொடர்பாக WILL வானொலி நிருபர் கேட்டார். SEP இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்திற்கு புகார் தாக்கல் செய்ததாகவும், தேர்தல் நெறிமுறைகளையும் இல்லினோய் மாநில சட்டமன்ற நெறிமுறை கமிஷன் மாநில ஒழுங்குமுறை விதிகளையும் மீறலுக்கு சாத்தியமான விசாரணையாக இது திரும்பியுள்ளது என்றும் மக்கமன் குறிப்பிட்டார்.

மக்கமன் தனது அறிக்கையில், SEP மேற்கொண்ட போராட்டத்தின் முக்கியத்துவத்தையும், அது அமெரிக்கா முழுவதிலும் சர்வதேச அளவிலும் ஜனநாயக உரிமைகளை காத்து நிற்போரிடமிருந்து வலுவான ஆதரவை வருவித்ததையும் விளக்கினார். அவர் கூறினார்: ''இந்த முடிவு ஜனநாயக உரிமைகளுக்கும் சாம்பைன் - உர்பனா வாக்காளர்களுக்கும் அதன் மூலம் எல்லா வாக்காளர்களுக்கும் ஒரு வெற்றியாகும். இந்த மாவட்டத்தில் வாக்காளர்களது உரிமைகளை மிதித்து நசுக்கிவிட்டு இந்த நகரத்தின் வாக்காளர்களுக்கும், மாணவர்களுக்கும் இரண்டு பெரிய வர்த்தக் கட்சிகளுக்கும் அவர்கள் சரிசமமாக ஏற்றுக்கொண்டுவிட்ட போர் செயற்திட்டத்திற்கும், ஜனநாயக உரிமைகளை இரத்து செய்வதற்கும், மற்றும் இந்த நாட்டில் மிச்சமிருக்கும் சமூக பாதுகாப்பு மற்றும் கல்வி வசதியை சிதைப்பதற்கும் அரசியல் மாற்று கிடைக்காமல் தடுக்க தங்களால் முடியுமென்று நினைத்த சபாநாயகர் Michael Madigan உட்பட இல்லினோய் ஜனநாயக்கட்சி அமைப்பின் தலைவர்களுக்கு இது ஒரு தோல்வியாகும்.

''ஜனநாயகக் கட்சி அதிகாரிகள் சோசலிச சமத்துவக் கட்சியின் உறுதியை மட்டுமல்ல இல்லினோயிலும், அமெரிக்கா முழுவதிலும் மற்றும் உண்மையிலேயே, உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களால் உணரப்பட்ட ஜனநாயக உறுதிப்பாடுகளையும் புரிந்துகொள்ள தவறிவிட்டனர். இதற்கு ஜனநாயகக் கட்சிக்காரர்களிடம் எந்த பதிலும் இல்லை. அவர்கள் மூடிய கதவுக்கு பின்னால், இருட்டறையில் இரகசியமாக பணியாற்றினார்கள், இந்த முழு விவகாரத்தின் பாரபட்சத்தன்மை தெளிவாக தெரிவதை எப்போதுமே மறுத்து வந்தார்கள்.

''ஆயிரமாயிரம் மக்கள் இந்த விவகாரங்களை தினசரி உலக சோசலிச வலைதளத்தில் படித்தனர், ஜனநாயகக் கட்சிக்காரர்களின் போலி ஆட்சேபனைகளை தூக்கி எறியவேண்டுமென்று கோரி சாம்பைன் கவுண்டி எழுத்தருக்கு 150-க்கு மேற்பட்ட மின்ஞ்சல்களும், கடிதங்களும் அனுப்பப்பட்டன. இந்தக்கடிதங்கள் இல்லினோயில் இருந்தும் இதர டஜன் கணக்கான அமெரிக்க நகரங்களில் இருந்தும் இங்கிலாந்து, ஜேர்மனி, இந்தியா, இலங்கை, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, மற்றும் பிற நாடுகளில் இருந்தும் வந்தன. கவுன்டி எழுத்தருக்கு இப்படி கடிதம் எழுதிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் இந்த சர்வதேச அளவிலான பரிசோதனை தீர்க்கமான முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

''எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் அமெரிக்காவின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் முக்கிய சர்வதேசப் பிரச்சினை மற்றும் அது அமெரிக்க இராணுவ வாதத்தால் உலகிற்கு முன்வைக்கப்படும் ஆபத்துடன் விடுவிக்கமுடியாதபடி பிணைந்துள்ளது என்று ஆழமாக உணர்கின்றனர். 2002-ல் ஈராக் போரை எதிர்ப்பதற்காக உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் கண்டனப் பேரணிகளை நடத்தினர். அவர்கள் அமெரிக்காவின் இராணுவவாத கொள்கைகளையும், தங்களது சொந்த அரசுகளின் கொள்கைகளையும் எதிர்த்து நின்றனர் மற்றும் இந்த குற்றம்தோய்ந்த போரை நீட்டிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க மக்களது விருப்பையும் மீறியதை பார்த்தனர்.

''உழைக்கும் மக்கள் இந்தப்போரை எதிர்ப்பதற்கும் தங்களது மிக அடிப்படையான நலன்களை தற்காத்து நிற்பதற்கும் குரல் கொடுப்பதற்கான உரிமையை பறிப்பதற்காக என்னை வாக்குப் பதிவிலிருந்து நீக்கிவிட ஜனநாயகக் கட்சிக்காரர்கள் விரும்பினர். ஏனென்றால் எல்லா மிக அடிப்படையான பிரச்சனைகளும் ஜனநாயகக் கட்சி கொள்கைகள், புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்களின் கொள்கைகளில் இருந்து வேறுபடுத்திப்பார்க்க முடியாதவையாக அமைந்திருக்கின்றன. கெர்ரி நிர்வாகம் சூறையாடும் போர்க் கொள்கைகள் மற்றும் சமுதாய பிற்போக்குத்தனத்தை தீவிரப்படுத்தாவிட்டாலும் நீட்டித்துக்கொண்டு செல்லும் என்பதை அமெரிக்க பெருநிறுவன செல்வந்தத் தட்டினருக்கும் எடுத்துக்காட்டும் வகையில் போஸ்டனில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு இருந்தது.

''அந்த மாநாட்டில், புஷ் மற்றும் போருக்கெதிரான கடுமையான விமர்சனங்கள் தடுக்கப்பட்டன. போர் எதிர்ப்பு பதாகைகளை பிடித்துக்காட்ட முயன்ற பிரதிநிதிகள் தூக்கி எறியப்பட்டனர். கெர்ரி கடந்த காலத்தில் ஒரு போர் எதிர்ப்பாளர் என்ற தடமே துடைத்தெறியப்பட்டது. ஜனநாயகக்கட்சி வேட்பாளர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளை ஒவ்வொரு அம்சத்தையும் நிறைவேற்றுவதற்கு புஷ் நிர்வாகத்தைவிட கொடூரமாகவும் மற்றும் பயனுள்ளவகையிலும், கொண்டு செலுத்த அவரை நம்பலாம் என்று நிரூபித்துக்காட்டினார்.

''வெளிநாடுகளில் நடத்தப்படும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் தீவிரமாக தாக்குதலுக்குள்ளாகப்படவேண்டும் என்பது தவிர்க்க முடியாத தேவையாகும். இப்படி செய்வதன்மூலம் தான் இந்த மற்றும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் போர்களில் மனித உயிர்கள் மற்றும் நிதியிழப்பு ஏற்படுவதை அதில் விருப்பமில்லாத மக்கள் மீது திணிக்க முடியும்.

''இங்குதான் சாம்பைன்-உர்பானாவில் வாக்களிக்கும் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது. போஸ்டனில் அல்கோர் போன்ற ஜனநாயகக் கட்சி பேச்சாளர்கள் ஒப்புக்காக 'ஒவ்வொரு வாக்கும்,' முக்கியமென்று பேசினாலும், இங்கே இல்லினோயில் ஜனநாயகக்கட்சி 2000- தேர்தலில் புளோரிடாவில் குடியரசுக் கட்சிக்காரர்கள் தேர்தலையே திருடுவதற்கு கடைப்பிடித்த அதே ஜனநாயகவிரோத நடைமுறைகளைப் பின்பற்றினார்கள். ஆனால் SEP மட்டுமே அவர்களது இலக்கல்ல, மடிகன் மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரால்ப் நாடார் தாக்கல் செய்துள்ள 32,000 கையெழுத்துக்களில் 20,000- த்தையும் கூட ஆட்சேபித்து வருகின்றனர்.

''மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது, ஜனநாயகக் கட்சிக்கும், SEP க்கும் இடையிலான மோதல் பொருத்தமற்றதாகத் தோன்றும். எப்படி இருந்தாலும் ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு வலுவான ஊழல்மிக்க அரசியல் இயந்திரம் அவர்களது கையிலுள்ளது, மில்லியன் கணக்கான டாலர்கள் பணபலம் உள்ளது, அதிக சம்பளம் வாங்கும் வழக்கறிஞர்கள் உள்ளனர், மாநில அரசு ஊதியம் பெறும் ஊழியர்கள் அவர்கள் வசம் இருக்கின்றனர்-----இந்த அத்துமீறல்பற்றி தற்போது சட்டமன்ற நெறிமுறை கமிஷன் விசாரித்துக்கொண்டிருக்கிறது.

''இவ்வளவு தடைக்கற்களையும் SEP எப்படி கடந்து வர முடிந்தது? நாங்கள் மிகப்பெரும்பாலான மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறோம்--- உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள், மாணவர்கள் ஆகியோரை பெரிய வர்த்தக நிறுவனங்களுக்காக, குரல் கொடுக்கும் கட்சிகள் அரசியல்ரீதியாக வாக்களிக்கும் உரிமையில்லாதவர்களாக்கிவிட்டனர். அவர்களது வளங்கள் எவ்வளவுதான் இருந்தாலும் இந்தக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்த அளவில் மிகக் குறுகிய சமூக அடித்தளத்தில் உள்ளது என்பதை நாம் அறிவோம். அவர்களது போர் ஆதரவு மற்றும் வர்த்தகர் ஆதரவுக் கொள்கைகளால் பொது மக்களிடையே நிலவுகின்ற இந்த குறுகிய வட்ட ஆதரவும் படிப்படியாக அரித்துக் கொண்டு வருகிறது.

இந்த ஜனநாயக விரோதத்தாக்குதல் தோல்வியடைந்தது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். ஆனால் தீவிரப்படுத்தப்பட வேண்டிய, நடைபெற்றுக்கொண்டுள்ள போராட்டத்தில் இது ஒரு அத்தியாயம்தான். சாம்பெய்ன் - அர்பனா அனுபவம் சிறிய அளவில் நமக்கு சமூக சமத்துவம், சமாதானம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றை தற்காத்து நிற்க நேர்மையான உறுதிகொண்ட உழைக்கும் மக்களின் பரந்த இயக்கத்தை செயலூக்கத்துடன் கட்டி எழுப்ப வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. அதில்தான் சோசலிச சமத்துவக் கட்சி தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது, எனவேதான் இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்."

See Also :

ஜனநாயகக் கட்சியினர் சோசலிச சமத்துவக் கட்சியின் மனுக்களுக்கு ஆட்சேபனைகளை திரும்பப் பெறற்றனர்: ரொம் மக்கமன் இல்லினோயில் வாக்குச்சீட்டில் இடம்பெறுவார்

Top of page