World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : போர்த்துக்கல்

Thirty years since the Portuguese Revolution Part 3

போர்த்துக்கல் புரட்சியிலிருந்து முப்பது ஆண்டுகள்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

By Paul Mitchell
17 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

மூன்று பகுதிகள் கொண்ட தொடரின் கடைசிக் கட்டுரை கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மத்தியதர வர்க்கமும் தீவிரவாதக் குழுக்களும்

FUR என்பது மிகவும் நெருக்கடியான காலத்தில் புரட்சியை காட்டிக்கொடுக்க உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் முன்னணியாகும். அது மிகத் தீவிரமான குழுக்களின் ஆதரவைப் பெற இருந்தது. இந்தக் குழுக்கள் MFA (ஆயுதப் படையினரின் இயக்கம் --Movimento das Forças Armadas) /COPCON (கண்டங்களின் நடவடிக்கைகள் ஆணையகம் -Continental Operations Command) கூறிக்கொள்ளும் முன்மொழிவுகள் "ஒரு புரட்சிகரமான அரசியல் வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய சரியான அடிப்படை" யைக் கொண்டுள்ளன என்ற கருத்தைக் கூறின; மேலும் சட்ட மன்றங்கள் "மக்களுடைய அதிகார தன்னாட்சி அமைப்புக்கள்" என்றும், அவை "புரட்சிகர நிகழ்ச்சிப்போக்குக்கு ஒரு முன்னேற்றப் பாதையை" கொண்டிருக்கும் என்றும் கூறின.

"ஐக்கிய உடன்பாட்டில்" கையெழுத்திட்டு FUR இல் சேர்ந்திருந்த கட்சிகள் பலவற்றுள் ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்று கூறிக்கொண்டிருந்த சர்வதேச அமைப்புக்களின் பிரிவுகளும் இருந்தன.

சர்வதேச சோசலிஸ்ட் (IS) அமைப்பு (இன்றைய பிரிட்டனின் சோசலிச தொழிலாள கட்சி), அப்பொழுது பாட்டாளி வர்க்க புரட்சிகர கட்சியால் (Revolutionary Party of the Proletariat --PRP) பிரதிநிதித்துவம் கொள்ளப்பட்டது. சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் நிறுவனர்கள் நான்காம் அகிலத்தில் இருந்து 1940 இல் முறித்துக்கொண்டு, சோவியத் ஒன்றியத்தில் உள்ள ஸ்ராலினிச அதிகாரத்துவம், மற்றும் அதன் பிரிவுகள் ஒரு புதிய சமுதாய அமைப்பில் ஒரு புதிய வர்க்கம் என்று கோரின (அரசு முதலாளித்துவம்). இது ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு குறிப்பிட்ட சட்டபூர்வத் தன்மையை, அதன் ஒட்டுண்ணித்தனத்தால் கொடுத்தது மட்டும் இன்றி ஏகாதிபத்தியத்தின் போருக்குப் பிந்தைய ஸ்திரத்தன்மைக்கு முன் சரணடைவதையும் வெளிப்படுத்தியது. சர்வதேச சோசலிஸ்ட் இன் தீவிர வார்த்தை ஜாலங்களான தொழிற்சங்க சிண்டிக்கலிசத்தை புகழ்ந்து பாடியதும் மற்றும் அதனது அரை அராஜகவாத நிலைப்பாடும் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்துவம் தொழிலாள வர்க்கம் மீது கொண்டுள்ள ஆதிக்கத்திற்கு சவால் விட மறுக்கும் நிலையை மூடிமறைக்கத்தான் பயன்பட்டது.

இராணுவப் படையினரின் இயக்கத்திற்கும் COPCON இற்கும் நிபந்தனையற்ற ஆதரவை பாட்டாளி வர்க்க புரட்சி கட்சி (PRP) கொடுத்தது. "இராணுவப் படையினரின் இயக்கத்திற்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய இராணுவப் படையினரின் இயக்கத்தின் முன்மொழிவை" வாழ்த்தியும் அதுபோல "பல மாதங்களாக புரட்சிகர சபைகளை அமைக்க வேண்டும் என்று போராடியவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி" என்று கூறியது. "கட்சிகளற்ற ஓர் இராணுவ அரசாங்கம்" என்ற இராணுவப் படையினரின் இயக்கத்தின் முன்மொழிவும், தன்னுடைய கோஷமான "கட்சிகளற்ற ஒரு புரட்சிகர அரசாங்கத்துடன்" இயைந்த தன்மை உடையதாகவும் என்று அது கூறியது.

நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகம் (USec), போர்த்துகல்லில் இரண்டு அமைப்புக்களைக் கொண்டிருந்தது -- அதிகாரபூர்வமான சர்வதேச கம்யூனிஸ்ட் லீக் (லிசிமிமிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ சிஷீனீனீuஸீவீst லிமீணீரீuமீ) மற்றும் ஒரு ''ஆதரவு'' பிரிவான தொழிலாளர் புரட்சி கட்சி (Workers Revolutionary Party- PRT) என்பவையுமாகும். 1953ல் நான்காம் அகிலம் பிளவுற்றதிலிருந்து நான்காம் அகிலத்தின் ஐக்கியச் செயலகம் தோன்றியது. மிசேல் பப்லோவின் தலைமையில், பெரும்பான்மையான நான்காம் அகிலத்தின் தலைமை ஸ்ராலினிசம் முதலாளித்துவ அதிகாரத்தை தூக்கிவீசும் திறனை நிரூபித்துள்ளது என்ற முடிவிற்கு வந்திருந்தனர். இதையொட்டி கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஏற்படுத்தியிருந்த ஊனமுற்ற தொழிலாளர் அரசுகள்தான் எதிர்காலத்திற்கு முன்மாதிரிகளாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதிகாரத்துவத்தின் மீதான அழுத்தம் ---சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு மூன்றாம் உலகப் போர்கூட -- அதனை அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மேலும் அரசியல் போராட்டத்திற்குள் தள்ளும், மற்றும் "நூற்றாண்டுகாலம் நிலைத்திருக்கும் ஊனமுற்ற தொழிலாளர் அரசுகளை" நிறுவும் என்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சர்வதேச சோசலிஸ்ட் மற்றும் நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தால் ஸ்ரானிசம் படர்ந்து சக்திவாய்ந்ததாக திகழ்வதாக வந்த மேலெழுந்தவாரியான முடிவை நிராகரித்து, ஒட்டுண்ணி அதிகாரத்துவத்தை ஒரு அரசியல் புரட்சிமூலம் தொழிலாள வர்க்கம் அகற்றும் அல்லது அதிகாரத்துவத்தின் மேற்பார்வையில் முதலாளித்துவம் மீட்சி பெறும் என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆய்வைக் காத்தது.

Intercontinental Press என்ற தன்னுடைய சர்வதேச ஏட்டில், ஐக்கிய செயலகம், இராணுவப் படையினரின் இயக்கத்தின் சட்ட மன்ற ஆலோசனைகள், Otelo Saraiva de Carvalho Carvalho-ஆல் "கட்சியற்ற இராணுவ சர்வாதிகாரத்தை" நிறுவ முற்படுகிறது என்று கூறி நிராகரித்தது.

இது பொதுவாக சரியே என்றாலும், ஐக்கியச் செயலகம், போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் அரசியல் நிர்ணயசபை சார்ந்து அதை "வெகுஜனங்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதிக்கக் கூடிய ஒரே அரங்கம்" என்று புகழ்ந்தது. உண்மையான சுதந்திரமான தொழிலாளர்கள் குழுக்களை அமைப்பதற்கு அழைப்பு விடுவதற்குப் பதிலாக, ஐக்கிய செயலகம் சோவியத்துக்களுக்கு அழைப்பு விடுப்பது "ஜனநாயக விரோதமானவை", "யதார்த்தமற்றவை" என்று கூறியது.

போர்த்துக்கல்லில் இரண்டு பப்லோவாத அமைப்புக்களும் இராணுவப் படையினரின் இயக்கத்தினையும் மற்றும் COPCON இவற்றை ஆதரித்து, அவற்றை "ஒரு உண்மையான, நிலைத்திருக்கக் கூடிய சுரண்டப்பட்டுள்ள வெகுஜனங்களின் ஒன்றுபட்ட அமைப்பாக" மாற்ற அழைப்பு விடுத்தது. தான் முன்பு இராணுவப் படையினரின் இயக்கத்தின் தன்மை பற்றி "அது ஒரு முதலாளித்துவ இயக்கம்... மூலதனத்தின் அடிப்படை நலன்களைக் காப்பது" எனக் கூறியிருந்தது தவறு என்றும், இப்பொழுது அது "இரட்டை அதிகாரத்தை" அறிமுகப்படுத்தியது என்றும், இராணுவக் குழுக்கள் "சோவியத் அதிகாரத்தை தோற்றுவிப்பதில் ஒரு முயற்சியாகும்" என்றும் அறிவித்தது.

மிக முக்கியமான நெருக்கடியான காலங்களில் மற்றும் போர்த்துக்கல்லின் நிகழ்வுகள் பற்றி சரியான ஆய்வை வழங்காத ஐக்கிய செயலகத்தின் ஆற்றலின்மை 1975 ஆகஸ்ட் 4ம் தேதி Intercontinental Press இல் நன்கு புலப்படுத்தப்பட்டது. ஒரு கட்டுரையில் இராணுவத்தினால் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்படக்கூடிய அச்சம் இல்லை என்றும், அதேவேளை மற்றொரு கட்டுரையில் நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கும் போக்கு ஓர் இராணுவ சர்வாதிகாரத்தை தோற்றுவிக்கக் கூடும் என்றும் குறிப்பிட்டிருந்தது. செப்டம்பர் 8ம் தேதி வெளியீட்டில், ஒரு ஆசிரிய தலையங்கத்தில் ஐக்கிய செயலகத்தின் தலைமை தத்துவார்த்தவியலாளர் ஏர்னஸ்ட் மண்டேல் தன்னுடைய பழைய நிலைப்பாட்டிலிருந்து மாறி, Intercontindntal Press ஐ அரசியல் நிர்ணய சபை அமைப்பிற்கு ஆதரவு கொடுப்பதற்கு கண்டனத்தை தெரிவித்து, RUF-ல் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைக்கும் விதம் பற்றி சர்வதேச கம்யூனிஸ்ட் லீக்கை விமர்சனம் செய்தும் எழுதினார்.

ஸ்ராலினிச எதிர்-புரட்சிகர தலைமையிலிருந்து தொழிலாள வர்க்கம் முறித்துக்கொண்டு சமரசமற்ற போராட்டத்தில் ஈடுபடுவது அவசியமென்னும் கருத்தை உருவாக்கும் விமர்சனம் இது இல்லை. ஆனால் ''புரட்சியின் முன்னேற்றத்திற்கு அவசியமான பணியை அமுல்படுத்துவதற்கு கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பத்தில் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கி அதிகாரத்தை எடுக்கும்'' என்பதில் போர்த்துகல் தோல்வி என்று மண்டேல் நம்பினார்.

இராணுவப் படையினரின் இயக்கத்திற்கும் COPCON இற்கும் கிட்டத்தட்ட 70 தீவிரவாதக் கட்சிகளில் இருந்து ஆதரவு வந்திருந்தது.

1973ல் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டதை அடுத்து தோன்றியிருந்த சோசலிஸ்ட் இடது இயக்கம் (Movement of the Socialist Left (MES)), "தொழிலாள வர்க்கம் ஆயுதப் படையினரின் இயக்கத்திற்கு கொடுக்கும் ஆதரவு, தொழிலாள வர்க்கத்திற்கு ஆயுதப்படையினரால் கொடுக்கப்படும் ஆதரவுடன் கட்டாயம் கைகோர்த்துக் கொண்டு செல்லவேண்டும்" என்றது. ஒரு கட்சி அமைப்பதற்கு அது சரியான நேரம் இல்லை என்றும் அது கூறியது; அதனால்தான் அது ஒரு இயக்கம் என்று மட்டுமே கூறப்படவேண்டும்--- போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சி "ஒன்றுதான் மக்களை அணிதிரட்டக் கூடிய ஒரே கட்சியாக உள்ளது" என்றும் அது கூறியது.

ஒற்றுமை மற்றும் புரட்சி நடவடிக்கைக் குழு (The League of Unity and Revolutionary Action (LUAR)) என்னும் அமைப்பு 1967 இல், உள்ளூர் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதற்கு "கீழிருந்து சோசலிசம்" என்ற கோஷத்தின் கீழ் தோன்றியிருந்தது. இந்த அமைப்பு இராணுவப் படையினரின் இயக்கத்திற்கு அதன் "முற்போக்கு நடவடிக்கைகளுக்கு" நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கியது; தொழிலாளர்கள் "மாற்றீடான முறையிலான சமூக அமைப்பிற்கான கருக்களை தோற்றுவிக்க" அவர்கள் அனுமதிப்பார்கள் என்றும் கூறியது.

ஏராளமான மாவோவாத குழுக்களும் இருந்தன; அவற்றில் முக்கியமானது போர்த்துகலின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கமாகும் (Revolutionary Movement of the Portuguese Proletariat-MRPP), போர்த்துகலின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கம் 1970ல் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிளவுற்றது, இப்பொழுது "சமூக பாசிசம்" என்று அழைக்கப்படுகிறது. இக்குழு முதலாளித்துவத்துடன் நேரடியாக அணிவகுத்து நின்றது. ஜூன் 1976 ஜனாதிபதி தேர்தல்களில், போர்த்துக்கலின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கம் தன்னுடைய ஆதரவாளர்களை போர்த்துகல் சோசலிச கட்சி ஆதரவு கொடுத்திருந்த சட்டம்- ஒழுங்கு வேட்பாளரான Ramalho Eanes க்கு வாக்களிக்கமாறு கூறியது. போர்த்துகலின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கத்தின் தலைவர் Arnaldo Matos, COPCON ஐ "உலகிலேயே மிக ஜனநாயகமான போலீஸ் படை" என்று அழைத்திருந்ததார்; அதுவோ பின்னர் 1975 மே மாதம் 400 போர்த்துக்கலின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கம் போராளிகளை லிஸ்பன் பகுதியில், பழைய போலீஸ் கோப்புக்களில் இருந்த தகவலின் உதவியைக் கொண்டு கைது செய்தது.

போர்த்துக்கலின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கத்தின் நீடித்த "பாரம்பரியம்" புரட்சியின்போது இந்த அமைப்பில் ஒரு தலைவராக இருந்த Jose Manuel Durao Barroso, இப்பொழுது ஒரு வலதுசாரி தலைமையிலான சமூக ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் பிரதம மந்திரியாக இருப்பதுதான்.

COPCON கரைந்து போகிறது

1975ம் ஆண்டு "கடுங்கோடையில்" நிலவிய தொடர்ந்த அமைதியற்ற நிலைமையில், புரட்சிகர குழுவில் Melo Antunes- ஐ சுற்றியிருந்த "ஒன்பது பேர் குழு", அரசாங்கம் ''குழப்பத்தினுள் சீரழிவிற்குள்ளாகும்" அபாயத்தில் இருப்பது பற்றி எச்சரிக்கை விடுத்தது; மேலும் பெரும்பாலான இராணுவப் பிரதிநிதிகள் Vasco Gonçalves ஐ அகற்றுமாறும் அறிவுறுத்தியது. தன்னுடைய பெரும்பான்மையை இழந்த நிலையில் பிரதம மந்திரி Gonçalves ராஜிநாமா செய்துவிட்டார். போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஐந்தாம் இடைக்கால அரசாங்கம், தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளுமாறு அழைப்பு விடும் நிலையை எதிர்கொண்ட போது, Goncalves உடன் சேர்ந்து ராஜிநாமா செய்துவிட்டது.

போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் பாசிச மக்கள் முன்னணி ஜனநாயகக்கட்சி ஒரு ஆறாம் இடைக்கால அரசாங்கத்தில், மீண்டும் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்தன; கடற்படை தலைவரான José Baptista Pinheiro de Azevedo இதற்கு தலைமை தாங்கியிருந்தார். ''தளபதிகளின் திட்டம்'' என்ற ஒரு இரகசிய திட்டத்தை அரசாங்கம் உடனடியாக சுற்றிக்கைக்கு விட்டது; இதில் தனியார் துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கும் அரசாங்கத்துறையை மறுசீரமைக்கவும் திட்டங்கள் இருந்தன; Antunes உடைய பொருளாதாரத் திட்டம் சாதாரண மக்கள் ஆயுதம் ஏந்தியிருந்தால் தண்டிப்பதற்கான சட்டங்களும், இராணுவத் தலையீட்டுக் குழுக்கள் அமைப்பதற்கும் COPCON ஐ கலைப்பதற்கும், இடது செல்வாக்கில் உள்ள பல இராணுவப் பிரிவுகளை அகற்றுவதற்கும் குடியரசை போர்த்துக்கல் சோஷலிஸ்ட் கட்சிக்கு திரும்பகொடுக்கவும், Radio Renascenca உடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் அது அழைப்பு விடுத்தது. Radio Renascenca வில் தொழிலாளர்கள், நிலையத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டுவிட்டனர்; இது கத்தோலிக்க திருச்சபையின் உடமையாக இருந்தது; பின்னர் FUR இன் முக்கிய ஒலிபெருக்கிபோல் செயல்பட்டு வந்திருந்தது.

இந்த நெருக்கடி கடுஞ்சுர வேகத்தை அடைந்தது. புதிதாக அமைப்பட்டிருந்த ஆறாம் இடைக்கால அரசாங்கமும், புரட்சிக் குழுவும் சமுதாயத்தின் பல பிரிவுகளாலும் எதிர்க்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இரட்டை அதிகார நிலைமை உருவாகியிருந்தது.

செப்டம்பர் 29 அன்று பிரதம மந்திரி Pinheiro de Azevedo இராணுவத்திற்கு அனைத்து வானொலி நிலையங்களையும் ஆக்கிரமிக்குமாறு உத்தரவிட்டார். COPCON "தொழிலாளர்களை பாதுகாப்போம்" என்று உறுதிமொழி கொடுத்தது.

நவம்பர் 7ம் தேதி Radio Renascenca இன் ஒலிபரப்புக் கருவிகள் தகர்க்கப்பட்டன. மறுநாள் எதையும் கற்றிராத PRP, "பல தரைப்படை, கடற்படை அதிகாரிகளின் புரட்சி வழிவகைக்கான பற்றை நன்கு அறிந்துள்ளதாலும், கட்டுப்பாட்டுப் பிரிவுகளில் அவர்கள் கொண்டுள்ள உயர்மட்ட நிலையை நன்கு அறிந்துள்ளதாலும், ஏப்ரல் 25 அன்று நடந்தது போன்ற நடவடிக்கையில் இப்படைகளால் நடத்தப்படும் தாக்குதல்களின் அடிப்படையிலான ஒரு திட்டம் பற்றி எண்ணுவது எளிது" என்று கூறி, ஆயுதப் படையினரில் உள்ள அதிகாரிகளுக்கு ஒரு ஆயுதமேந்திய எழுச்சிக்கு தலைமை வகிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

"அனைத்து வரலாறும் காட்டுவதுபோல், முதலாளித்துவம் தன்னுடைய நலன்களைக் காப்பதற்காக உள்நாட்டுப்போரை தூண்டும். மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் போர்த்துகீசிய வலதுசாரியிடம் ஒரு இராணுவம் இல்லை. அவர்கள் ஸ்பெயினை தளமாகக் கொண்டுள்ள கூலிப்படையை அல்லது அமெரிக்க, நேட்டோ படைகளைத்தான் நம்பியுள்ளனர்" என்று பாட்டாளி வர்க்க புரட்சி கட்சி தொடர்ந்து எழுதியது.

பாட்டாளி வர்க்க புரட்சி கட்சி எவ்வளவு தவறாக நிலைமையை எடை போட்டுள்ளது என்பதை சில நாட்களுக்குள் வலதுசாரிகள் காட்டினர். தளபதி ஆன்டானியோ டோ சான்டோஸ் ரமல்கோ ஏன்ஸ், 1975 நவம்பர் 25ல் நெருக்கடி நிலைமையை அறிவித்தார். இராணுவமும், போர்த்துகலின் பாட்டாளி வர்க்க புரட்சிகர இயக்கம், Antunes, Ramalho Eanes இவர்கள் இருந்த, ஒன்றுபட்ட இராணுவ முன்னணியும் (்FMU) இணைந்து அநேகமாக ஒரு குண்டுகூட போடாமல் செயலாற்றி, தடுப்புக்களையெல்லாம் அகற்றி, தொழிலாளர்களிடம் இருந்த ஆயுதங்களை பறித்து விட்டனர். COPCON முற்றிலுமாக, அதனதன் ''தொண்டர்'' இராணுவ அமைப்புக்களான Soldiers United Wil Win (SUV) --முந்தைய வாரங்களில்தான் ஆயிரக்கணக்கான பேரை ஆர்ப்பாட்டங்களில் அணிதிரட்டியிருந்தது-- 200 கமாண்டோக்களை எதிர்த்து நிற்கமுடியாமல் கரைந்து போயிற்று.

ஜனவரி 1976ல் உணவுப் பொருட்களின் விலை 40 சதவிகிதம் உயர்ந்தது; Radio Renascenca மீண்டும் திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டது; PIDE யில் இருந்த பெரும்பாலான இரகசியப் போலீசார் விடுவிக்கப்பட்டனர்.

சோசலிசத்தை நாடு அடையும் என உறுதிமொழி கூறிய ஒரு புதிய அரசியல் அமைப்பு 1976 ஏப்ரல் 2ம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. தேசியமயமாக்கப்பட்டதும், நில பறிப்புக்களும் இனி மாற்றத்தக்கவை அல்ல என்று அது அறிவித்தது. பல வாரங்களுக்குப் பின்னர் ஒரு புதிய பாராளுமன்றமான குடியரசின் சட்டமன்றத்திற்கு, தேர்தல்கள் நடத்தப்பட்டன; இதல் போர்த்துக்கல் சோசலிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைத்தது. உடனேயே Soares, சர்வதேச நாணய நிதியத்தைநாடி கட்டமைப்புகளில் ஒழுங்குபடுத்துதல் வேலைத்திட்டத்தை அமுல்படுத்தத் தொடங்கினார்.

அடுத்த பல ஆண்டுகளில் முதலாளித்துவம் கட்டாயத்தின்பேரில் கொடுத்த சலுகை எல்லாம் திருப்பப் பெற்றுக் கொண்டது. தற்போதுள்ள Durao Barroso இன் அரசாங்கம் ஒட்டுமொத்தமாக சமூக நிலைமையை அழித்தும் அதனுடைய கொள்கையை தொடர்ந்து, தொழிலாளரிடம் வளைந்து கொடுக்கும் தன்மை (சுரண்டுதல்), செல்வந்தருக்குச் செல்வத்தை மறு பகிர்வளித்தல், தனியார்மயமாக்குதல் ஆகியவற்றை முழுமை அடையச் செயலாற்றி வருகிறது.

போர்த்துகீசிய முதலாளித்துவம் புரட்சிச்சூழ்நிலையை கடக்க முடிந்ததற்கு காரணம் போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியும் அதைச் சூழ்ந்துள்ள தீவிரவாதிகளும் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சி, அரசு இயந்திரங்கள், இராணுவப் படையினரின் இயக்கத்துடனும் கட்டிப்போட்டதாலாகும். போர்த்துகீசிய புரட்சியின் வெற்றி சர்வதேச மூலதனத்திற்கு பெரும் தாக்குதலாக இருந்திருப்பதுடன், உலகம் முழுவதும் 1970 களில் வளர்ச்சியுற்றிருந்த இயக்கங்களுக்கு ஊக்கத்தையும் அளித்திருக்கும்.

Top of page