World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS : Tamil : வரலாறு : நாம் காக்கும் மரபியம்

அத்தியாயம் 8 : பின்னோக்காளர்களின் "மூன்று பொருள் விளக்கங்கள்"

Use this version to print | Send this link by email | Email the author

பண்டா, யுத்த வருடங்களைப் பற்றிக் கையாளும் பொழுது, "ஜரோப்பிய பகுதிகள் (நான்காம் அகிலத்தின்) எதிர்ப்பு இயக்கத்தில் பங்கு கொள்ளாது ஒதுங்கியிருந்தன", போன்ற பதங்களைப் பயன்படுத்துகின்றார். நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் படிக்கச் சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் மத்தியில், நான்காம் அகிலத்தைப் பற்றி ஒரு வெறுப்பு மனப்பான்மையைத் தூண்டிவிடத் திட்டமிட்டு இவை அவரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நான்காம் அகிலம், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை "ஜனநாயக'' ஏகாதிபத்தியத்தின் வேலைத் திட்டத்திற்குக் கீழ்படியவிட மறுத்தும், எதிர்ப்பு இயக்கங்கள் சம்பந்தமாக ஒரு கோட்பாடு ரீதியான நிலைப்பாட்டை வகுக்கவும், அதுகொண்டிருந்த உறுதிப்பாட்டை, ஒரு பொய்யான குற்றச்சாட்டாக பண்டாவால் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது: எப்பொழுதும் போல, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் அரசியல் கோழைகள், அவர்கள் "பங்கு கொள்ளாது ஒதுங்கியிருந்தனர்!" அனைத்துலகக் குழுவைப் புதைக்க மற்றொரு காரணம் ! ட்ரொட்ஸ்கிசம் ஒழிக !

இரண்டாம் உலக யுத்த எதிர்ப்பு இயக்கங்கள் சம்பந்தமாக நான்காம் அகிலத்தினுள் இருந்த கருத்துவேறுபாட்டின் வரலாற்றுத் தோற்றுவாய்களைக் கண்டறிய பண்டா எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்பது அதிசயமானதொன்றல்ல. அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கம் தொடர்பான இதை ஒத்த விமர்சனங்களை 1940ம் ஆண்டுகளில் யார் கிளப்பியது என்பதை ஆராயவோ, அல்லது அப்படியான விமர்சனங்களுடன் இணைந்துள்ள அரசியல் நிலைப்பாடுகளைக் கூர்ந்து படிக்கவோ, எந்த ஒரு அக்கறையும் காட்டவில்லை.

இதற்குப் பதிலாக பண்டா, கோல்ட்மன்- மொறோ கன்னைக்கு எதிராகக் கனன் தொடுத்த போராட்டத்தை நன்கு ஆராயாமல், அதை "மிக மோசமான வகையைச் சேர்ந்த செய்முறைவாதத்திற்கு சறுக்கிச் செல்வதைத் தடுத்து நிறுத்த எதையும் செய்யாத பிறிதிடமிருப்புவாதம் (வேறு இடம் இருப்புவாதம் -Alibi), மற்றும் வசதியாகக் கவனத்தை வேறுவழியிற் திருப்பும் முயற்சி", என்று கூறுகின்றார். ஜேப்படித் திருடன், திருடிய இடத்திலிருந்து தப்பத் துடிப்பது போல, பண்டாவும் உடனடியாக இடத்தை விட்டு நகருகின்றார். ஏன் இந்த அவசரம்? இந்த உடனெழுச்சயாகக் (Offhand) கூறிய கூற்றிலிருந்து, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் ஏற்பட்ட, எந்த ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவமும் இல்லாத சில்லறையான காலப் பகுதியைப் பற்றிப் பேசப்படுகின்றது என்று கருதிவிட முடியும்.

ஆனால் நிலமை எவ்வகையிலும் அதுவல்ல. ஃபிலிக்ஸ் மொறோ மற்றும் அல்பேட் கோல்ட்மனுக்கு எதிராக கனன் வழிநடத்திய போராட்டம், 1939 -40ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் சோசலிசத் தொழிலாளர் கட்சி, சட்மன், பேர்ண்ஹாம் மற்றும் அபேன் இற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியை, மற்றும் அதன் ஆழப்படுத்தலையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மொறோ - கோல்ட்மன் சிறுபான்மை கன்னைக்கு எதிரான போராட்டம் இறுதியில் நான்காம் அகிலம் முழுவதிலும் குட்டி முதலாளித்துவ மற்றும் வலதுசாரிப் பகுதிகளுக்கு எதிரான சர்வதேச ரீதியான போராட்டத்தின் வடிவத்தைப் பெற்றது.

பண்டா இப்போராட்டத்தை மழுப்பி, அதை வெறுமனே "பிறிதிடமிருப்புவாதம்", என்றும், "வசதியாகக் கவனத்தை வேறுவழியில் திருப்பும் முயற்சி" என்றும் கூறுவது, இரு அம்சங்களில் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

முதலாவதாக அது, மீண்டும் ஒருமுறை பண்டா நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் பற்றியும் அதன் உட் கட்சிப் போராட்டங்களைப் பற்றியும் அவர் கொண்டுள்ள கருத்துருவானது முற்று முழுதாக அகநிலை ரீதியானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தினுள் உள்ள போக்குக்களுக்கு இடையிலான போராட்டங்களுக்கும், உலக முதலாளித்துவ நெருக்கடியின் வளர்ச்சிக்கும் மற்றும் வர்க்கப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள புறநிலை ரீதியான உறவை வெளிப்படுத்திக் காட்ட ஆற்றலற்றவராவார். நான்காம் அகிலத்தினுள் உள்ள தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புறநிலை ரீதியாக நிலவும் சமூக உறவுகளின் முரண்பட்ட முறையிலான பிரதிபலிப்பாகக் கூர்ந்தாராய்வதற்குப் பதிலாக, பண்டா அவற்றை நல்லவை, கெட்டவை மற்றும் அவலட்சணமானவை என்றுதான் பார்க்கின்றார்.

இரண்டாவதாக, மொறோ, கோல்ட்மன் மற்றும் அவர்களது சர்வதேச பரிவாரங்களுக்கு எதிரான போராட்டத்தில் எழுந்த பிரச்சனைகளை ஆராய்ந்தால், இப்பொழுது பண்டா நான்காம் அகிலத்திற்கு எதிராகச் சுமத்தும் குற்றச் சாட்டுகளின் பிற்போக்கு அரசியல் மற்றும் தத்துவார்த்த மூதாதையர் மரபை அம்பலப்படுத்தப்படுகின்றது. நாம் இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியபடி, நீண்ட காலத்திற்கு முன்னர் அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் திருப்திப்பட, ஆனால் இப்பொழுது தெரிய வந்துள்ளபடி பண்டாவை தவிர, அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளும் திருப்திப்பட, பதிலளிக்கப்பட்ட பழைய திருத்தல்வாத வாதங்களின் துண்டுகளையும், துணுக்குகளையும் கையாளும், ஒரு திரட்டுவாதிதான் பண்டா.

உத்தியோகபூர்வ எதிர்ப்பு இயக்கங்கள் தொடர்பாக நான்காம் அகிலம் கொண்டிருந்த மனப்பான்மையைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமல்லாது, பண்டாவின் குற்றச்சாட்டு ''யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் இருந்த நிலைமை பற்றி -ட்ரொட்ஸ்கியின் இயங்கியல் ஆற்றலும் மற்றும் கூரிய தொலை நோக்கும் இல்லாத நிலைமையில்- நான்காம் அகிலம் முழுவதும் முழுமையாகக் குழப்பம் அடைந்திருந்தது. ஏனென்றால் கனன் போன்ற முன்னணி ட்ரொட்ஸ்கிஸ்டுகள், ட்ரொட்ஸ்கிசத்தை மூடபக்தியுடன் முடிந்த முடிவுவாதமாக்கி (Dogmatism) விட்டிருந்தனர்", என்ற ஃபிலிக்ஸ் மொரோவின் வாதங்களை பண்டா மீண்டும் கூறுகின்றார்.

1946 இல், நான்காம் அகிலத்தின் மரண நெருக்கடியின் ஊற்றுக்கால் என்று அவர் கருதியதை, ஃபிலிக்ஸ் மொறோ இப்படித்தான் விளக்கினார்:

நைந்துபோன சூத்திரங்களைப் பைத்தியக்காரத்தனமாக இப்படிப் பற்றிக் கொள்ளுதல்தான் - நமக்கிடையில் உள்ள கருத்து வேறுபாடுகளின் ஊற்றுக்காலாகும். தோழர் கனன் இதைத்தான் நமது "மாறா வேலைத்திட்டம்", என்று அழைக்கின்றார். இதுதான் கருத்து வேறுபாட்டின் மையம். கனனுக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் வேலைத் திட்டத்தின் மேல் கரடு முரடான கரங்கள் படக்கூடாது; அது புனிதமானது, அது மீறக் கூடாதது.....

கருத்துவேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாயின், அதற்கு மையமாக இருப்பது ட்ரொட்ஸ்கியின் மரணம் உருவாக்கியுள்ள நிலைமையைப் புரிந்து கொள்ளுதலாகும். ட்ரொட்ஸ்கியின் மரணம், விரைவில் அல்லது பின்னர், நான்காம் அகிலத்தினது அரசியல் நெருக்கடிக்கு இட்டுச் செல்லும். இதைத்தான் நாம் இன்று எதிர் கொள்ளுகின்றோம் - அனைத்துலக அளவிலான ஒரு அரசியல் நெருக்கடி, தவிர்க்கமுடியாத முறையில் ஏற்படவேண்டியதாகும். ஏனென்றால் ட்ரொடஸ்கியின் மறைவு உருவாக்கி உள்ள இடைவெளியைத் தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது கூட்டாகவோ, எவராலும் நிறைவு செய்ய முடியாது.1

கனனின் "மாறா வேலைத் திட்டத்தைப்" பற்றி மொறோவின் தூற்றல் - அல்லது ட்ரொட்ஸ்கிசத்தை மூடபக்தியுடன் முடிந்த முடிவுவாதமாக்கல்" என்று பண்டா கூறுவதும் - நான்காம் அகிலத்தின் வேலைத் திட்டத்தை கவிழ்த்துவிட எடுக்கும் முயற்சியாகும். இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை, மேலோட்டமானதோ அல்லது தற்செயலானதோ அல்ல. நான்காம் அகிலத்தின் குட்டி முதலாளித்துவ எதிராளிகள் தரித்துவந்த தத்துவார்த்த உடை, தலைமுறை தலைமுறையாக கைமாறி வழிவந்த அதே பழைய கையளிப்புகளேயாகும். இருந்தபொழுதும், திருத்தல்வாதிகளின் ஒவ்வொரு புதிய தலைமுறையும் - 1940 இல் சட்மனிலிருந்து, 1986 இல் பண்டாவரை, முழு நெடுங்கிலும் - ட்ரொட்ஸ்கிசத்தின் மரண ரீதியான குறைபாட்டை (Fatal Flaw) மீண்டும் புதிதாக தாம் கண்டுபிடித்துள்ளதாக தம்மை தாமே அளவுக்கு மீறிப் புகழ்ந்து வந்துள்ளனர்.

மொறோ - கோல்ட்மன் கன்னைக்கும் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் எதிராக நான்காம் அகிலத்தினுள் தொடுக்கப்பட்ட போராட்டத்தின் தோற்றுவாயை நாம் மீளாய்வு செய்வோமாக, இது பண்டாவின் அன்பிற்குரிய கிராண்டிசோ முனிசையும் மற்றும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரை அன்று கொண்டிருந்த பிரிட்டிஷ் பகுதியின் ஜொக் ஹஸ்ரனையும் உள்ளடக்கும்.

பேர்ண்ஹாம், சட்மன் மற்றும் அபேனிற்கும் எதிராக ட்ரொட்ஸ்கியும், சோசலிசத் தொழிலாளர் கட்சியும், தொடுத்த போராட்டமானது, சோசலிசத் தொழிலாளர் கட்சியை மார்க்சிசப் பாட்டாளி வர்க்கக் கட்சியாக உருமாற்றம் செய்யும் போராட்டத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப் போராட்டம், தொழிலாள வர்க்கத்திற்கு அன்னியர்களாக இருந்த மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தினுள் அமெரிக்கா சேரும் தறுவாயில் புரட்சிகர முன்னணியின் மேல் ஏகாதிபத்தியம் கொண்டுவந்த வர்க்க அழுத்தத்திற்கு அடிபணிந்த, குட்டி முதலாளித்துவ பிரச்சாரவாதிகளுடன் சோசலிசத் தொழிலாளர் கட்சி செய்த ஒரு தீர்க்கமான முறிவைக் குறித்தது.

1940 ஏப்பிரல் பிளவின் ஒரு மாதத்திலும் சிறிது அதிகமான காலத்தின் பின், சிறுபான்மையினரின் தத்துவார்த்த தலைவரான ஜேம்ஸ் பேர்ண்ஹாம் இயங்கியல் ஜடவாதத்திற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, அவர் ஜனநாயக ஏகாதிபத்தியத்திய பிற்போக்கு முகாமிற்கு விட்டோடினார். தன்னைத் தொழிலாளர் கட்சி என்று அழைத்துக் கொண்ட சட்மனின் குழு, நான்காம் அகிலம் சோவியத் ஒன்றியத்தை தொழிலாளர் அரசு என்று பண்புருப்படுத்தியதை நிராகரித்த வண்ணம் ஏகாதிபத்திய தாக்குதலக்கு எதிராக அதைப் பாதுகாக்க மறுத்தவண்ணம், தொடர்ந்தும் தன்னையும் ட்ரொட்ஸ்கிஸ்ட் என்று அழைத்துக் கொண்டது.

சட்மனின் ஓடுகாலித்தனதிற்கு அடிப்படையானது, பரந்த குட்டி முதலாளித்துவ புத்திஜீவித தட்டினரின் ஐயுறவுவாதமாகும். இத் தட்டு, பாட்டாளி வர்க்கத் தோல்விகளின் தாக்கங்களின் கீழும், மற்றும் சோவியத் அதிகாரத்துவத்தின் வெளித்தோற்ற பலத்தின் கீழும், சோசலிசப் புரட்சியின் முன்நோக்கில் எல்லா நம்பிக்கையையும் இழந்தது. ட்ரொட்ஸ்கி விளக்கியது போல:

போலி மார்க்சிசத்தின் பல்வேறு வகையான நம்பிக்கை இழந்த மற்றும் திகிலடைந்த பிரதிநிதிகள் அனைவரும் ஆரம்பிப்பது ... "பாட்டாளி வர்க்கம் அதன் புரட்சிகர குறிக்கோளை நிறைவேற்ற ஆற்றல் அற்றமையை, தலைமையின் திவால் "பிரதிபலிக்கின்றது" என்ற கற்பிதத்தில் இருந்தேயாகும். ஆனால் நமது எதிர்ப்பாளர்கள் அனைவரும் இதைத் தெளிவாக எடுத்துக் கூறாதபொழுதும், அவர்கள் அனைவரும் -அதி தீவிர இடதுசாரிகள், இடைநிலைவாதிகள், மற்றும் ஸ்ராலினிஸ்டுகளைப் பற்றியும் சமூக ஜனநாயகவாதிகளைப் பற்றியும் கூறவேண்டியதில்லை- அனைவரும் தோல்விகளின் பொறுப்பை தமது தோள்களில் இருந்து பாட்டாளி வர்க்கத்தின் தோள்களுக்கு மாற்றிவிடுகின்றனர். இவர்களில் எவரும் திட்டவட்டமாக எந்த நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கமானது சோசலிச முறையிலான கவிழ்வை (Socialist overturn) செய்ய ஆற்றல் உள்ளதாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டவில்லை.2

அரசியல், தத்துவம் மற்றும் இயக்க அமைப்பு என்பனவற்றின் நிலைப்பாட்டில் இருந்து, சட்மனுடனான பிளவு தீர்க்கமானதாக இருந்திருந்தபோதும், இது சட்மனின் சீரழிவு மற்றும் காட்டிக் கொடுப்புகளை உண்டாக்கிய சமூக அழுத்தங்கள் ஓய்ந்துவிட்டன என்றோ, அல்லது நான்காம் அகிலமானது தனது அணியிலுள்ள குட்டி முதலாளித்துவப் பகுதியினருடன் முழுமையாக முறித்துக் கொண்டு விட்டது என்றோ, அர்த்தப்படுத்தாது. முதலாளித்துவம் இருக்கும்வரை மற்றும் சோசலிசப் புரட்சிக்குப் பின் உடனடியாகத்தன்னும், திருத்தல்வாதத்திற்கு எதிரான ஒரு "இறுதிப் போராட்டம்" ஒன்று இருக்காது. யுத்த வெடிப்பும், அதன் தரைமட்டமாக்கும் தாக்கமும், நான்காம் அகிலத்தினுள் புதிய வேறுபாடுகளை உருவாக்கியது.

நான்காம் அகிலத்தினுள் புதிய திருத்தல்வாதப் போக்குகள் பற்றிய மிக ஆரம்ப அறிகுறிகள் "அரசியல் நிலமை மற்றும் அரசியல் பணிகள் பற்றிய மூன்று பொருள் விளக்கங்கள்" என்று தலைப்பிடப்பட்ட பத்திரத்தை குடிபெயர்ந்த ஜேர்மன் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் 1942ல் வெளியிட்டதுடன் தோன்றின. இந்தப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்ட நிலைப்பாடு, குட்டி முதலாளித்துவ ஐயுறவுவாதம் தவிர்க்க முடியாது ஒரு அரசியல் முட்டுச் சந்திற்கு இட்டுச் செல்லும் என்று 1939ல் ட்ரொட்ஸ்கி விடுத்த எச்சரிக்கையை மீண்டும் நினைவுபடுத்தியது: "தோல்விகளுக்கான காரணி பாட்டாளி வர்க்கத்தின் சமூகப் பண்புகளிலேயே வேர் ஊன்றியுள்ளது என்பது உண்மையானது என்று நாம் ஒப்புக் கொள்ளுவோமாயின், அப்பொழுது நாம் நவீன சமுதாயத்தின் நிலை எந்த ஒரு நம்பிக்கைக்கும் இடம் தரவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்".3

ஏறக்குறைய இந்த நிலைபாட்டிற்கே "மூன்று பொருள் விளக்கங்களின்" ஆசிரியர்கள் அவர்களது "பின்னோக்கிய வளர்ச்சி" (Retrogression) தத்துவத்துடன் வந்து சேர்ந்தார்கள். ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் தோல்வி மற்றும் நாசிகள் ஐரோப்பாவைக் கைப்பற்றியது மீண்டும் மாற்றமுடியாதவை என்று நம்பிய IKD (ஜேர்மன் சர்வதேசக் கம்யூனிஸ்டுகள்) "பின்னோக்காளர்கள்" (Retrogressionists) எதிர் நோக்கக் கூடிய எதிர்காலத்தின் நிகழ்ச்சி நிரலில் இருந்து சோசலிசம் என்கின்ற முன்னோக்கு அகற்றப்பட்டுவிட்டது என்று முடிவு செய்து கொண்டார்கள். யுத்தம் தசாப்தங்களுக்குத் தொடர்ந்து நடந்துகொண்டேயிருக்கும், என்று அவர்கள் நம்பினார்கள். அவர்களது தோல்வி மனப்பான்மை இறுதி ஊழ்வினையின் அளவுகளை எட்டியது. "ஒருவர் எங்கு பார்த்தாலும் அழிவும், அழுகிக் கெட்டுப் போதலும், அச்சப்படும் மட்டத்திற்கு அராஜகமும்தான் உள்ளன. இவை கலாச்சாரத்தின் கதிக்கு முடிவின் முத்திரையைப் பதிக்கின்றன",4 என்று அவர்கள் எழுதினார்கள்.

ஹிட்லரிசம் இற்றுப் போகும் முதலாளித்துவத்தின் விளைபயன் அல்ல, ஆனால் புதிய சமூக அமைப்பினுடைய பிறப்பின் அடையாளமாகும். சிறைக் கூடங்கள், யூதர்கள் வாழும் புதிய பகுதிகள், பலாத்காரமாக வேலைவாங்கல், ஒதுக்கி வைக்கும் குடியேற்றப் பகுதிகள், ஏன் யுத்தக் கைதிகளின் முகாம்கள் கூட, எல்லாம் புதிய அடிமை சமுதாயம் நோக்கிய வளர்ச்சியுடன் கூடச் சேர்ந்த புதிய பொருளாதாரச் சுரண்டலாகும். இது மனித இனத்தின் கணிசமான பகுதியினருடைய நிரந்தரமான கதி என முன் முடிவிடப்பட்டுள்ளது."5

வர்க்கப் போராட்டதைப் பற்றிய பழைய கருத்துருக்கள் எல்லாம் செல்லாதனவாகியுள்ளன. ''அரசியல் நிலமை... எல்லாவற்றிலும் மேலாகத் தொழிலாள வர்க்கக் கட்சிகளின் மற்றும் பாசிசமல்லாத அனைத்து முதலாளித்துவக் கட்சிகளின் அழிவினால் குணாம்சப்படுத்தப்பட்டுள்ளது... ஒரு குறிப்பிட்ட விதிவிலக்குகளைத் தவிர சுதந்திரமான மரபு ரீதியன முதலாளித்துவ அல்லது பாட்டாளிவர்க்க அரசியல் அல்லது தொழிலாளர் இயக்கம் தொடர்ந்தும் இல்லை... "தேசிய" முதலாளித்துவ வர்க்கமும் மேலும் மேலும் நசுக்கப்பட்டு வருகின்றது... அப்படியான நிலமைகளின் கீழ், வளர்ந்துவரும் துன்பங்களிற்கு எதிரான எதிர்ப்புகள் வேறு வெளிச் செல்லும் வழியைக் கண்டு பிடிக்க வேண்டும்."6

இந்தப் புதிய இயக்கமானது "அனைத்து வர்க்கங்கள் மற்றும் தட்டுக்களைக்" கொண்டுள்ளதாக, ஐரோப்பாவின் "தேசி விடுதலைக்காக" ஐக்கியப்பட்டதாக இருக்கும். முதலாளித்துவத்தைத் தூக்கி வீசுவது பற்றிய பேச்சுகள் எல்லாம் பொருளற்றன. அடிப்படையில் ஒரு ஜனநாயகப் புரட்சிக்குச் சமமானதாக உள்ள இடைப்பட்ட கட்டம் ஒன்றில்லாமல் பாசிசத்திலிருந்து சோசலிசத்திற்கு இடை மருவுவது என்பது வெறும் கற்பனையானதாக இருந்து வருகின்றது.7

1942 இன் முடிவுக் காலத்தில், ஜேர்மன் பாசிசத்தின் முடிவின் ஆரம்பத்தை அடையாளம் இட்ட ஸ்டாலின்கிராட்டில் ஹிட்லரின் தோல்வி - "மூன்று பொருள் விளக்கங்களின்" , முடிவுபெறா யுத்தம் மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நீடித்த மேலாதிக்கம், என்றமைய தத்துவக் கூற்றைத் தகர்த்தது. பின்னோக்காளர்கள் தமது பழைய தத்துவத்தைக் கைவிடுவதற்குப் பதிலாக, அவர்கள் வெறுமனே அதை, மேலும் அனைத்தையும் அரவணைக்கும், சோசலிசப் புரட்சி முன்னோக்கை மேலும் ஆணித்தரமாக நிராகரிக்கும், தத்துவமாக மறு ஆய்வு செய்து மாற்றியமைத்துக் கொண்டார்கள்.

1944ல் வெளிவந்த "முதலாளித்துவமா அல்லது காட்டுமிராண்டித்தனமா" என்று தலைப்பிடப்பட்ட புதிய பத்திரம் ஒன்றில் அவர்கள், "நவீன அடிமை அரசு நோக்கிய வளர்ச்சியானது, ஒரு உலக இயல் நிகழ்வாகும். இது முதலாளித்துவம் இற்றுப் போதலில் இருந்து எழுகின்றது",8 என்று அவர்கள் வாதிட்டனர்.

மனித இனத்தின் அபிவிருத்தி, நூற்றாண்டுகளுக்கு இல்லாவிட்டாலும் பல தலைமுறைகளுக்குப் பின்நோக்கி வீசப்பட்டுள்ளது. இது தொழிலாள வர்க்கத்தின் முன், சோசலிச அபிவிருத்திக்கான முன் நிபந்தனையாக தேசிய விடுதலையை மீண்டும் கைப்பற்றும் பணியை முன் வைத்துள்ளது என்று அவர்கள் வாதிட்டார்கள். பின் நோக்கிய அபிவிருத்தியானது

மரணமடைய ஊழ்வழியினால் உந்தப்பட்ட சமுதாயம் ஒன்று, தற்பேணலுக்கான கோரப் போராட்டத்தில் பின்னோக்கி நெறிக் கிரமத்தில் மத்திய காலப் பகுதிக்கு, "புராதன திரட்சி" சகாப்தத்திற்கு, முப்பதுவருட யுத்தத்திற்கு, முதலாளித்துவ புரட்சிக்கு, மற்றும் இன்னோரன்னவற்றிற்கும், மீண்டும் அழைப்புவிடும் ஒரு மாற்றுப் போக்காகும். அந்தக் காலத்தில் காலாவதியாகிப்போன பொருளாதார வடிவம் ஒன்றைத் தகர்ப்பது பற்றிய பிரச்சனையாக இருந்தது - இப்பொழுது சுதந்திரத்தை ஒழித்துக் கட்டி மத்திய காலத்துக் காட்டுமிராண்டி நிலைக்குச் சமுதாயத்தைத் தள்ளிவிடுவது பற்றிய பிரச்சனையாகும்...

கடந்த காலத்தினுள் ...சோசலிசம் உறிஞ்சப்பட்டுள்ளது... பாட்டாளி வர்க்கம் முன்பிருந்தது போல, ஒரு உருவற்ற திரள் நிலையில், அது உதித்த பொழுதும், உருவுற்ற பொழுதும் கொண்டிருந்த அதன் தனிச் சிறப்புப் பண்புகளை அது இழந்துவிட்டது.9

''அடிமை முறையில் இருந்து, அடிமைத்தனம், தேசிய சுதந்திரம் இன்மை, தொழிற்துறையிற் பிறரில் தங்கியிருத்தல் மற்றும் பின்தங்கிய நிலமை என்பனவற்றிலிருந்து தொழிற்துறை ரீதியான பின் தங்கிய நிலையினுள்ளும் மற்றும் பிறரிற் தங்கியிருத்தல், தேசிய சுதந்திரம் இன்மை, கட்டுண்ட நிலையும் மற்றும் அடிமை முறையினுள்ளும் செல்லுதல்," என்ற சூத்திரத்தில் பின்னோக்கிய நிலைக்குச் செல்லுதலின் வரலாற்று உள்ளடக்கம், தொகுக்கப்பட்டுள்ளது.10

எந்த ஒரு போலியான தளரா நம்பிக்கைக்கும் இடம் கொடுப்பதைத் தவிர்ப்பதற்காக IKD யின் தத்துவவாதிகள், "பின்னோக்கிய வளர்ச்சியின் ஆரம்பத்தை, வெற்றியீட்டிய அக்டோபர் புரட்சியின் ரஷ்யாவில் நாம் கணிசமானளவு ஸ்தூலமாக நிலைநாட்டியுள்ளோம். எனவே நாம் வெற்றியீட்டிய அக்டோபர் புரட்சியை அதன் உள் முரண்பாடுகளின் அடிப்படையில்பார்த்து, அது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட புரட்சியாக, அதை அதன் எதிர்புரட்சி உருமாற்றத்தில் பின்னோக்கிய வளர்ச்சியினுள் நாம் கூட்டிணைத்துள்ளோம் (Incorporated)"11, என்று பெருமையுடன் பிரகடனப் படுத்தினார்கள்.

ஜேர்மன் பாசிசத்திற்கு பதிலாக பின்னோக்காளர்கள், பிரபஞ்ச ரீதியான "அடிமை அரசின்" உடமையாளன் என்ற பங்கை ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு உரித்தாக்கினார்கள். இப்பொழுது சமுதாயத்தில் உள்ள அடிப்படையான மோதல் தேசங்கள் தமது சுதந்திரத்தை அடைவதற்கான போராட்டமாகும்.

ஐரோப்பா தன்னை ஒரு "சோசலிச அரசாக" ஐக்கியப்படுத்துவதற்கு முன்னர் அது முதலில் தன்னைச் சுதந்திர மற்றும் சுய ஆதிபத்தியம் உள்ள அரசுகளாகப் மீண்டும் பிரித்துக் கொள்ள வேண்டும். அது பிளவுபடுத்தப்பட்ட, அடிமைப் படுத்தப்பட்ட, பின்னே தூக்கிவீசப்பட்ட மக்களும் மற்றும் பாட்டாளி வர்க்கமும் தம்மை ஒரு தேசிய இனமாக அமைத்துக் கொள்வது முற்று முழுதாக அவர்களது பிரச்சனையாகும்....

மிகவும் நிர்ப்பந்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனை எதுவென்றால் -நூற்றாண்டு காலமாக தொழிற்துறை முதலாளித்துவம் மற்றும் விஞ்ஞான சோசலிசம் ஆகியவற்றின் வசந்தகாலத்திய பழைய பிரச்சனையாகும்- அதாவது (ரஷ்யாவையும் சேர்த்து) தேசிய விடுதலைக்கும் தொழிலாள இயக்கத்தைத் தொடங்குவதற்கும் இன்றியமையாத முன் நிபந்தனை எதுவென்றால் அரசியல் சுதந்திரத்தைக் கைப்பற்றுவதும் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதுமாகும்.12

சோசலிஸ்டுகள் ஏற்றுக் கொள்ள வேண்டியது எதுவென்றால்:

பின்னோக்கிய இயக்கம் ஒரு பெரிய அளவில் முழு முதலாளித்துவமும் முன்னேறி வளர்ந்த வரலாற்றில் மற்றும் அதன் வராலாற்றுக்கு முந்தைய காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் நெருக்கி சுருக்கியுள்ளது.... முதலாளித்துவத்தின் மற்றும் சோசலிசத்தின் உலக நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு இன்றியமையாததாக உள்ள சம்பிரதாய ரீதியான வழிவகைகள், பின்னோக்கிய ரீதியில் தரப்பட்டுள்ளன -இந்த வழிவகைகளைப் பெற புரட்சியாளர்கள் தமது கரங்களை மட்டும் நீட்ட வேண்டியுள்ளது- இதுதான் தேசிய சுதந்திரம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் தொழிலாளர் இயக்கத்தையும் மற்றும் சோசலிசப் புரட்சியையும் திரும்பவும் முழுமையாக அமைக்க, ஒரு மூலோபாய ரீதியான இடைமருவு புள்ளியாக தேசியப் பிரச்சனையானது இன்றியமையாது ஒரு வரலாற்று இடைக்கதையாக உள்ளது என்ற பொருள்பட நாம் கூறுகின்றோம். இந்த வரலாற்று ரீதியாக இன்றியமையாது உள்ள இடைக்கதையை புரியாதவர்கள் மற்றும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள், மார்க்சிசம் - லெனினிசத்தைப் பற்றி எதையும் புரியாதவர்களாகும்.13

பின்னோக்காளர்களின் வதைக்கப்பட்ட முன்னோக்கின் வழியாக, அவர்கள் அடிப்படை மார்க்சிச கருத்துருவான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிலை மறுத்தலுக்கும் மற்றும் "மக்கள் முன்னணிவாத" வர்க்க ஒத்துழைப்பிற்கும், புதியதொரு நியாயம் கற்பித்தலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஐரோப்பாவில் 1942-45ல் நிலவிய சூழ்நிலமையின் கீழ், இது தொழிலாளர்கள் இயக்கத்தை முழுமையாக முதலாளித்துவ வர்க்கம் வழி நடத்தும் எதிர்ப்பு இயக்கங்களுக்குக் கீழ்ப்பட்ட நிலைக்குக் கொண்டுவருது என்று அர்த்தப்படுத்தியது: "புரட்சியாளர்கள் ஒன்றில் இந்த இயக்கங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிப்பதை அல்லது அவர்கள் முற்று முழுதாக அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.14

IKD யின் பின்னோக்காளர்களால் தீர்க்கப்பட கூடியதென்று வலியுறுத்தப்பட்ட முன்னோக்கானது, புதிய தேசியஜனநாயகப் புரட்சியின் சகாப்தம் ஒன்று தோன்றியுள்ளது, இதில் தொழிலாள வர்க்கமானது எதிர்ப்பு இயக்கத்தின் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைவர்களைப் பின் தொடர்வதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கு இல்லை,என்றது: "முதலாளித்துவ காட்டுமிராண்டித் தனத்தில் என்றாலும் சரி அல்லது மூன்று பொருள் விளக்கங்களில் அல்லது வேறு எங்கென்றாலும் சரி, 'பாட்டாளி வர்க்க' புரட்சிகர சாத்தியக் கூறுகள் பற்றி நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்ற உண்மை, சிந்தனையை தூண்டிவிடுவதற்கு ஒரு நல்ல அடித்தளத்தை கொடுத்துள்ளது. நாம் எழுதியவற்றில் இகழ்ச்சி மற்றும் வெறுப்பைத் தவிர இந்த நான்காம் [அகிலத்தின்] புரட்சிக் குப்பையை பற்றி ஒரு வார்த்தையைக் கூடக் கண்டு பிடிக்க முடியாது."15

பின்னோக்காளர்களின் முன்னோக்கானது வெளிச்சத்திற்கு வந்த கணத்திலிருந்தே அது சோசலிச தொழிலாளர் கட்சியினால் எதிர்க்கப்பட்டதோடு கண்டனத்திற்கும் உள்ளாக்கப்பட்டது. சோசலிச தொழிலாளர் கட்சி, 1942ம் ஆண்டு கட்சித் தீர்மானம் ஒன்றில் விடுத்த எச்சரிக்கையில்:

சுரண்டல்காரர்களின் வர்க்க நலன்களை மறைப்பதற்கான வெறும் முகமூடியாக உத்தியோகபூர்வ தேசப்பற்று சேவை செய்கின்றது. இதை அடிவேர் வரை, பின்னர் பிரெஞ்சு முதலாளித்துவம் ஹிட்லருக்கு சரணாகதியடைந்தமை, நிரூபித்துள்ளது.

பிரான்சில் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் உள்ள பரந்த மக்களின் தேசிய விடுதலைக்கான அபிலாசை, மிகவும் பிரமாண்டமான புரட்சிகர விளைபயன்களைக் கொண்டுள்ளது. ஆனால் பாசிச விரோத உணர்வுகளைப் போல, அதுவும் தவறாக ஏகாதிபத்தியத்தின் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட முடியும். முதலாளித்துவ தேசியவாதத்தின் முழக்கங்கள் மற்றும் தலைமையின் கீழ் இயக்கம் செல்லுமாயின், அது அப்படித் தவறாகப் பயன்படுத்தப்படுவது, தவிர்க்க முடியாததொன்றாகும். பாசிச கொள்ளை கூட்டத்தினரால் தம்மிடம் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடமையை மீட்டுக் கொள்வதில்தான் "ஜனநாயக" ஏகாதிபத்திய கொள்ளைக்கூட்டத்தினர் அக்கறை கொண்டுள்ளனர்.

அவர்கள் இதைத்தான் தேசிய விடுதலை என்று அர்த்தப்படுத்துகின்றார்கள். பரந்த மக்களின் நலன்கள் பிரமாண்டமான அளவு வேறுபட்டவை. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் பணி என்னவென்றால், கிளர்ந்தெழும் இயக்கத்தின் தலைமையில் தம்மை நிறுத்திவைத்து, ஐரோப்பாவை சோசலிச மறு ஒழுங்கமைக்கும் போராட்டத்தை நோக்கி வழி நடத்த வேண்டும். இப் போராட்டத்தில் அவர்களது நண்பர்கள், ஆங்கிலோ - அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், சுதேசிய முதலாளித்துவ வர்க்கத்தினருள் அவர்களை நம்பி இருப்பவர்களும் அல்ல, ஆனால் ஜேர்மனியின் தொழிலாளர்களாகும்... புரட்சிகர போராட்டத்தின் மையமானதும் மற்றும் ஐக்கியப்படுத்துவதுமான முழக்கம், "ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள்" ஆகும். இதற்கு மற்றைய அனைத்து முழக்கங்களும் இரண்டாம் படியானவையாக்கப் பட வேண்டும்.16

கருத்து வேறுபாட்டின் நோக்கெல்லை மற்றும் விளைபயன்கள் விரிவடைந்தன. IKD பின்னோக்காளர்களின் உலக நோக்கை அரவணைத்துக் கொண்டது வேறு யாருமல்ல சோசலிச தொழிலாளர் கட்சியின் இராணுவக் கொள்கையை "வெறி கொண்ட சமூகப் பற்றின்" ஒரு வடிவம் என்று கண்டனம் செய்த சட்மனும் அவரது தொழிலாளர் கட்சியுமாகும். அது சோசலிசத் தொழிலாளர் கட்சியின் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற முழக்கத்தைப் '' படுமோசமான அருவவாதம் மற்றும் முடிந்த முடிவுவாதம்" என்று தூற்றியது... பரந்த மக்கள் "ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை" யதார்த்த ரீதியான முழக்கமாக பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் தம்வசம் சுதந்திரமான தேசிய அரசுகளை வைத்திருக்க ஐயப்பாடின்றி விரும்புகின்றார்கள்."17

எதிர்பார்த்தபடி சட்மனின் பதிவுவாதம் மிகவும் எல்லை மீறிய மிகைப்படுத்தப்பட்ட அரசியல் விளைபயன்களை உண்டு பண்ணியது. நிஜமான ஜனநாயகப் பணிகள் தீர்க்கப்பட வேண்டியிருக்கும் ஆசியாவில், முதலாளித்துவ சியாங் காய் ஷேக்கிற்கு எந்த ஒரு ஆதரவும் கொடுக்க முடியாது என்ற அடிப்படையில், ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சீன மக்கள் தொடுத்து வந்த தேசியப் போராட்டத்தைத் தொழிலாளர் கட்சி எதிர்த்தது. ஆனால், நீண்ட காலத்திற்கு முன்னரே, முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி முழுமை பெற்ற ஐரோப்பாவில், ஆக்கிரமிக்கப் பட்டுள்ள நாடுகளில் பிற்போக்குத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்குப் பாட்டாளி வர்க்கம் கீழ்ப்படுத்தப் பட வேண்டும் என்று சட்மன் வலியுறுத்தினார்.

உத்தியோகபூர்வ எதிர்ப்பு இயக்கங்களில் தம்மை முற்று முழுதாகப் புதைத்துக் கொண்டு, அவற்றின் முதலாளித்துவ வேலைத் திட்டங்களுக்குத் தம்மை இயைந்து போகின்றவர்களாக்கிக் கொள்ள மறுத்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளை, அவரின் இயல்புக்கு ஏற்ப சட்மன் தூற்றினார். "நான்காம் அகிலத்தின் பகுதிகள் ...அரசியல் ரீதியில் மலடானவை என்று நிரூபணமாயிற்று...[ஏனென்றால் அவை] இந்தப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் மைய இலக்கான தேசிய விடுதலையின், மிகவும் ஆர்வம் மிக்க, மற்றும் சளையாத வீரமிக்க, ஆதரவாளர்களாக மாறத் தவறினார்கள்."18 சோசலிச தொழிலாளர் கட்சி, சட்மனின் நிலைப்பாட்டை பற்றிய அதன் ஆய்வில் நாசிகளுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் ட்ரொட்கிஸ்டுகள் பங்குகொள்ளலாமா அல்லது இல்லையா என்பதல்ல நிஜமான பிரச்சனை என்பதை தெளிவுபடுத்தியது.

புரட்சியாளர்கள் எல்லா இயக்கங்களிலும் அவை பரந்துபட்ட பண்பை பெறும் பொழுது, அவற்றில் பங்குகொள்ளுகின்றார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் செய்வது, தமது சொந்தப் புரட்சிகர வேலைத் திட்டம் மற்றும் முறைகளின் (Methods) மூலமே. இருந்த பொழுதும், தொழிலாளர் கட்சியின் தீர்மானமோ, இந்த மக்கள் முன்னணிகளுடன் அரசியல் ஐக்கியத்திற்கும், மக்கள் முன்னணி இயக்கங்களில் ஒரு மக்கள் முன்னணியாளனாக பங்கு கொள்ளவும், அழைப்பை விடுத்தது. தொழிலாளர் கட்சியின் நம்பிக்கைக்குரிய IKD. அறிவுரையாளர்கள், இந்த இயக்கங்கள் "நிபந்தனையின்றி ஆதரிக்கப்பட வேண்டியவை", என்று எழுதியுள்ளார்கள். நமக்கும் சட்மன்வாதிகளுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டின் கருப் பொருள் இதுவேயாகும்.19

ஒரு சில வருடங்களுக்கு முன்னர்தான் ட்ரொட்ஸ்கி, பதிவுவாதத்தின் விளைபயன் தத்துவார்த்த சிந்தனையின் சிதைவு என்று எச்சரித்திருந்தார். இது IKD யின் பத்திரங்களில் ஸ்தூலமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மிகப் பெரும் வரலாற்றுச் சம்பவங்களின் தாக்கங்களின் கீழ், இப்பத்திரங்களின் ஆசிரியர்கள் அடியோடு அப்படியே அள்ளிச் செல்லப்பட்டு, அவர்கள் தலை கீழாக தலைகளில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஏறக் குறைய ஊடுருவ முடியாத சிக்கல்மிக்க உரை நடை, மற்றும் படிப்புப் புலமையைப் பகட்டாகக் காட்டும் பகட்டுச்சொற்கள் என்பன கையாளப்பட்ட பொழுதும், IKD யின் தத்துவார்த்த முறைப்படுத்திக் கூறல்கள், சாராம்சத்தில் அகநிலை ரீதியான கட்டமைப்பாகவும், அரசியல் அபிவிருத்திகளை அவற்றின் மேற்பரப்பின் தோற்றங்களின் ஒரு தலைப்பட்சமான பதிதலில் இருந்து நேரடியாக செல்லும் வரலாற்று எறிவுத் தெறிவுகளே (historical projections) அன்றி, அவை வேறு ஒன்றும் அல்ல. தவிர்க்க முடியாது இந்தப் பதிவுவாத முறையின், வர்க்க உள்ளடக்கம், அதன் அரசியல் முடிவுகளின் மூலம் தன்னை அம்பலப் படுத்திக் கொண்டது. இந்த முடிவுகள், முதலாளித்துவ ஜனநாயகத்திற்குச் சரணாகதியடைய வேண்டும் என்று வாதிட்டன. இதன் மூலம் அவை ஸ்ராலினிஸ்டுகளின் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் காட்டிக் கொடுப்புகளுக்கு உதவி செய்தன.

பதிவுவாதிகளைப் பொறுத்தவரை மாறாத வழக்காக இருந்துவருவதைப் போல, அவர்களும் வரலாற்று மாற்றுப் போக்கை தாம் விளக்குவதாகக் கூறிக்கொண்டிருந்த பொழுதும், அது நிஜமாக நடைமுறையில் அவிழ்ந்து அபிவிருத்தி அடைந்த பொழுது, அவர்கள் அது சம்பந்தமாக குருடர்களாக இருந்தார்கள். கண்டம் முழுவதும் 1943 இல் இருந்து பாட்டாளி வர்க்கமானது முன் சென்று கொண்டிருந்தது.

சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட வியப்பூட்டும் சமூக சக்தியினால் எழுச்சி ஊட்டப்பட்ட தொழிலாள வர்க்கம், ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அதன் முதலாளித்துவ நட்பு நாடுகளுக்கு எதிராகவும் வல்லமைமிக்க எதிர் தாக்குதல் ஒன்றைத் தொடுத்தது. குறிப்பாகப் பிரான்சில், இத்தாலியில், மற்றும் கிரீசில், ஆயுதம் ஏந்திய பரந்த மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொள்ள சந்தர்ப்பம் இருந்ததோடு, அவர்கள் ஆட்சி அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவும் நாடினார்கள். சோவியத் அதிகாரத்துவத்திற்கும் மற்றும் ஆங்கிலோ - அமெரிக்க ஏகாதிபத்தியத்தியங்களுக்கும் இடையில், கிரீஸ் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சி முறையை பேணுவதை ஏற்றுக் கொண்ட உடன்பாடுகளை தமது அடிப்படையாகக் கொண்டிருந்த ஸ்ராலினிஸ்டுகளால், இப் போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டன.

குறிப்புகள்:

1. சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உட்கட்சி வெளியீடு, தொகுதி 8, எண் 8, ஜூலை 1946, பக்கங்கள் 28 - 29.

2.லியோன் ட்ரொட்ஸ்கி, மார்க்சிசத்தைப் பாதுகாக்க (லண்டன்: நியூ பார்க் வெளியீடுகள், 1971), பக்கம் 15.

3. அதே நூல், அதே பக்கம்.

4.சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உட்கட்சி வெளியீடு, தொகுதி 8, எண் 10, ஆகஸ்ட் 1946, பக்கம் 15.

5.அதே வெளியீடு, அதே பக்கம்.

6.அதே வெளியீடு, அதே பக்கம்.

7.அதே வெளியீடு, அதே பக்கம்.

8.ஜேர்மனியின் சர்வதேசக் கம்யூனிஸ்ட்டுகள், "முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் அல்லது சோசலிசம்" புதிய அகிலம், பிற் சேர்க்கை, அக்டோபர் 1944, பக்கம் 331.

9.அதே வெளியீடு,பக்கங்கள் 333-34.

10.அதே வெளியீடு,பக்கம் 333.

11.அதே வெளியீடு,பக்கம் 334.

12.அதேவெளியீடு,பக்கம்340.

13.அதே வெளியீடு, அதே பக்கம்.

14.சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உட்கட்சி வெளியீடு, தொகுதி 8, எண் 10, ஆகஸ்ட் 1946, பக்கம் 16.

15.அதே வெளியீடு, அதே பக்கம்.

16.அதே வெளியீடு,பக்கங்கள் 16 - 17.

17.அதே வெளியீடு,பக்கம் 18.

18.அதே வெளியீடு,பக்கம் 19.

19.அதே வெளியீடு, அதே பக்கம்.

* * * *