World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

நிமீக்ஷீனீணீஸீஹ்: ழிமீஷ் மீபீuநீணீtவீஷீஸீ stணீஸீபீணீக்ஷீபீsஜீமீக்ஷீயீமீநீtவீஸீரீ tலீமீ sஹ்stமீனீ ஷீயீ sஷீநீவீணீறீ sமீறீமீநீtவீஷீஸீ

ஜேர்மனி : புதிய கல்வித்தரங்கள் - சமூகத் தேர்வை சீரமைக்கும் முறை

By Dietmar Henning
30 January 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனியின் கல்வியமைச்சர்கள் மாநாடு (Kultusministerkonferenzரிவிரி) வரும் கல்வியாண்டில் நாடு முழுவதிலும் ஒரே சீரான கல்வித்தரத்தை நிலைநாட்டும் உடன்படிக்கைக்கு படு அவசரமாக வந்திருக்கிறது. ஜேர்மன் கல்வி முறையில் தெளிவாகத்தெரியும் தவறுகளைத் திருத்துவதற்குப் பதிலாக இந்தத் தரநிர்ணயம், பரவலான அடிப்படையில் கல்வியைத் தனியார்மயமாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜேர்மன் பள்ளிக் கல்விக் கட்டுப்கோப்பானது சமுதாயத்தில் வசதி படைத்தவர்களுக்கு சலுகையளிப்பதாக அமைந்துள்ளது. இது மிகத்தீவிரமான நிலைப்பாட்டை செம்மையாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

எடுத்துக்காட்டாக மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெற்றாக வேண்டிய திறமைகளை கல்வித்தரம் திட்டவட்டமாக விளக்குகிறது. பத்தாண்டு கல்விக்குப்பின்னர் மாணவர்கள் தமது வயதிற்குரிய பல்வேறு கல்வித் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதில் இளம் வாசகர்களுக்கான சிறப்பான ஆசிரியர்கள் எழுதிய இலக்கியம், புராண கற்பனைக்கதைகள், நாடோடிப்பாடல்கள், நாவல்கள், நாடகங்கள் மற்றும் கவிதைகளில் தகுதி பெற்றிருக்கவேண்டும். இதைத்தவிர ஊடகங்களில் நவீன தொழில் நுட்பங்கள் கையாளப்படுவது மற்றும் விளம்பரம், திரைப்படம் ஆகியவற்றிலும் இளம் மாணவர்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் நோக்கங்களையும் அவற்றின் தாக்கங்களையும் அறிந்து மதிப்பீடு செய்கின்ற ஆற்றலையும், பல்வேறு ஊடகங்களில் வருகின்ற தகவல்களை புரிந்துகொண்டு அவற்றை ஒப்புநோக்கி ஆராய்ந்து மதிப்பீடு செய்கின்ற வல்லமையையும் பெற்றாக வேண்டும். அத்துடன் தகவல்களை திரட்டுகின்ற மூலோபாயங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

அத்தகைய அறிவை ஒவ்வொரு மாணவருக்கும் புகட்டுகின்ற வகையில் ஆசிரியர்களும் பள்ளிகளும் செயல்படுமானால் அது மகத்தான சாதனையாக அமையும். கல்வித்துறையில் நிலவுகின்ற பலவீனங்களை போக்கி தரத்தை நிலைநாட்டுகின்ற வகையில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் உட்பட கல்விக் கட்டுக்கோப்பு முழுவதையும் கண்காணிப்பதில் தவறு எதுவும் இல்லை. சமுதாயத்தின் மிக முக்கியமான சொத்து குழந்தைகளாகும். எனவே அந்தக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுகின்றவர்களை மதிப்பீடு செய்வது, புரிந்து கொள்ளவேண்டிய நடவடிக்கைதான்.

ஆனால், பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து பல கேள்விகளை இது எழுப்புகின்றது. எல்லா மாணவர்களுக்கும் நல்ல கல்விக்கு அவர்கள் உறுதிசெய்து தரமுடியுமா? அவர்கள் கல்வியில் பலவீனமான மாணவர்களை போதுமான அளவிற்கு ஆதரிப்பார்களா? அல்லது பலவீனமான மாணவர்களை தரம் குறைந்த பள்ளிகளுக்கு அனுப்புவதன்மூலம் தங்களது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பார்களா? எந்த முறைகள் பயன்படுத்தப்படுகின்றன? பள்ளிக்கூடங்களும் மற்றும் ஆசிரியர்களும் தங்களது கடமைகளை எந்தக் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்கிறார்கள்? இந்த வகையில் கல்வியின் தரம், அது செயல்படுகின்ற பள்ளிகளின் திறமை ஆகியவை முழு கல்விக்கட்டமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாட்டு முறைகளைப்பொறுத்தே அமையும்.

ஸ்கன்டிநேவியா நாடுகளில் கல்விமுறை நல்ல பயன்களை தந்திருக்கிறது. அந்நாடுகளில் OECD திட்டத்தின் கீழ் சர்வதேச மாணவர் மதிப்பீட்டு முறை (PISA) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையில் கல்வித்தரத்தில் பலவீனம் ஏதாவது காணப்பட்டால் அதை சரி செய்துவிட முடியும். கல்வித்தரம் முறையாக சோதனையிடப்படுகிறது, திருத்தப்படுகிறது. பலவீனமான மாணவர்களை ஆதரிக்கும் நோக்கம் கொண்டது. எனவே ஆராய்ந்து கல்வி கற்பிக்கும் முறைகளைத் திருத்திக் கொள்கிறார்கள். அந்நாடுகளில் வறுமையும், செல்வமும், இருந்தாலும் அங்கு உண்மையான சமவாய்ப்புக்களுக்கு வழியில்லாத நிலையிலும் கல்விமுறை இந்த முரண்பாடுகளை ஓரளவிற்கு மட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது. பத்து முதல் பதினாறு வயதுவரையுள்ள இளைஞர்களுக்கான பள்ளிக்கல்வி மிகவும் ஒன்றுபட்ட அளவில் ஒருங்கிணைந்து நடத்தப்படுவதால் பள்ளிக்கல்விக்கு பிந்திய வகுப்புகளில்தான் சம்பிரதாய மதிப்பெண்கள் வழங்குகின்ற முறை வருகிறது. ஒரே வகுப்பில் மாணவர் இரண்டு வருடம் படிக்க வேண்டியதில்லை. தரம் குறைந்த மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவதில்லை.

அதற்கு மாறாக ஜேர்மனியில் கல்விக்கட்டுக்கோப்பு நேரடியாக சமுதாய வேறுபாடுகளை நிலைநாட்டுவதாக உள்ளது. அடிப்படையிலேயே கல்வி முறையில் நிலவுகின்ற கண்ணோட்டத்தை மாற்றாத நிலையில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பது சமுதாய வேறுபாடுகளை இன்னும் கூர்மையாக நிலைநாட்டவே உதவும். இந்த முறையில் கல்வித்தரமும் அவற்றை நிலைநாட்டுவதற்காக நடைபெறுகின்ற சோதனை முறைகளும் தடைக்கற்களாக அமைந்துவிடும். ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு செல்வது அல்லது இறுதி தேர்வுகளில் வெற்றி பெறுவது மற்றும் பள்ளியில் உயர்ந்த வகுப்பிற்கு நுழைவது பெருந்தடைக்கற்களைக் கடந்துவரும் நடவடிக்கையாக அமையும். ஆரம்பத்தில் 10 வது வகுப்பிற்கே இந்தத்தரம் நிலை நாட்டப்படுவது இந்த உண்மையை தெளிவுப்படுத்துகிறது. இப்படிப்பட்ட தலையீடுகள் மாணவர் நலன்களை கருத்தில் கொண்டதாக இனி அமையாது.

உத்தேச கல்வித்தரத்தை நிலைநாட்டுவதன் மூலம் என்ன பயன்கள் ஏற்படும்? என்பதை கல்வி அமைச்சர்கள் தெளிவுபடுத்துவதற்கு தவறிவிட்டார்கள். தயங்கி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதைப்பற்றி அதிக அக்கரை எடுத்துக்கொள்ளவில்லை. உத்தேசத்திட்டங்கள் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு கண்ணோட்டத்தைத் தருகின்றனவா அல்லது அவற்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்களா? ஜேர்மன் கூட்டாட்சியின் 16 மாகாணங்களும் கல்வித்தர நிர்ணயத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தனிப்பட்ட பள்ளிக்கூடமும் அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டிவிட்டதா? என்பதை சோதித்து அறிந்து கொள்ள விரும்புகின்றன. இந்த சோதனைகளில் ஆலோசனைகள் மட்டுமே வழங்கப்படுமா? இதைத்தான் கல்வி நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஏனென்றால் பிரிட்டனில் நடைபெறுவதுபோல் பள்ளிகளின் தரம் விபரமாக பிரசுரிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகின்றனர். பிரிட்டனில் ஏற்கெனவே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதைப்போல், அதேபோன்று ஜேர்மனியிலும் சீர்திருத்தங்களுக்கு திட்டமிடுகிறார்களா?

கிரேட் பிரிட்டன்

பிரிட்டனில் தேசிய கல்வித்தரங்களை மேலெழுந்தவாரியாக பார்த்தாலே எத்தகைய மாற்றங்களை கண்டு ஜேர்மன் கல்வி நிபுணர்கள் அஞ்சுகின்றனர் என்பது தெளிவாகத் தெரியும். டோனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் 1998 ல் எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் தேசிய தரத்தை செயல்படுத்த தொடங்கியது. அதற்கு பின்னர் தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் மாணவ மாணவியர் வெற்றி பெறுவது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெரும் துன்பம் தருகின்ற சோதனையாக மாறிவிட்டது. 7 வயது, 11 வயது பள்ளிப்பிள்ளைகள் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத்தில் பரீட்சைகளை எழுதியாகவேண்டும். அதற்குப் பின்னர் அவர்களது 14 வது வயதில் ஆங்கில மொழி மற்றும் கணிதத்தில் தேர்வு எழுதியாக வேண்டும்.

இந்த தேர்வு முடிவுகள் ஒவ்வொரு இளவேனிற்காலத்திலும் பட்டியலாக வெளியிடப்படுகிறது. அவற்றை ''league tables'' என்று அழைக்கிறார்கள். பலவீனமான பள்ளிகள் என்று அழைக்கப்படுபவை ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டதால் ''நல்ல'' பள்ளிகள் பணக்காரப் பெற்றோர்களை ஈர்க்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் ஜேர்மனியின் வாரப் பத்திரிகையான Die Ziet கீழ்கண்டவாறு எழுதியிருந்தது: ''குறிப்பாக லண்டனிலும் அதைத்சுற்றியுள்ள இடங்களிலும் சொத்துக்களின் விலைகள் பூகம்பமானியைப்போல் (seismograph) ஏற்ற, இறக்கத்தோடு சென்று கொண்டிருக்கிறது. பள்ளிக்கூட தேர்வு முடிவுகளுக்கு ஏற்ப இந்த ஏற்றம் அல்லது வீழ்ச்சி அமைகிறது. பெரிய நகரங்களில் நல்ல பள்ளிகள் அபூர்வமாக உள்ளன. ''எந்தெந்த இடங்களில் ஒரு பள்ளி தனது செயல்பாட்டில் திறைமையைக் காட்டுகிறதோ அந்த இடங்களுக்கு அருகாமையில் வீடுகளை வாங்குவதற்காக பெற்றோர்கள் மிகுந்த ஆவலோடு ஓடி வருகின்றனர்.''

அதே நேரத்தில் தரத்தை நிலைநாட்டும் பள்ளியாசியர்களுக்கு ஊதியம் என்று பிரிட்டனின் அரசாங்கம் கல்வித்தரத்தையும், ஆசிரியர் ஊதியத்தையும் தொடர்புபடுத்தியுள்ளது. ஒரு பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதில் சங்கடப்படுகின்ற மாணவர் அந்த சங்கடம் துவக்க நிலையிலிருந்தாலும் அல்லது குறுகிய காலசங்கடமாக இருந்தாலும் அந்த மாணவர் அவரது வகுப்பு ஆசிரியருக்கு பொருளாதாரப் பிரச்சனையாக ஆகிவிடுகிறார். மேலும் வசதிக்குறைவான மாவட்டங்களில் ஏழைக்குடும்பங்கள் மிகப்பெருமளவில் வாழ்கின்ற பகுதியில் அந்த குடும்பங்கள் இந்த வகையான கல்வி மதிப்பீட்டு முறையினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது சங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்கின்ற வகையில் அதிகமான ஆசிரியர்களையும் கூடுதல் நிதி ஒதுக்கீடுகளையும் தருவதற்கு பதிலாக நிதி ஒதுக்கீட்டில் அவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். தொடர்ந்து இரண்டாண்டுகள் தேர்வுகளில் மோசமான முடிவுகளை சந்திக்கின்ற பள்ளிகளை உள்ளூர் கல்வியதிகாரிகள் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கின்றனர். ''அவர்களது முதலாவது பணி திறமையில்லாத ஆசிரியர்களை வேலையிலிருந்து நீக்குவதும், ஒழுங்கில்லாத மாணவர்களை பள்ளியிலிருந்து விரட்டுவதும்தான்'' என்று Die Zeit பத்திரிகை மேலும் எழுதியுள்ளது.

இதன் விளைவு கல்விக்கட்டுப்கோப்பில் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் மேலும் அதிகரிக்கின்றது. உயர்ந்த கல்வித்தரம் உள்ளவர்களுக்கும் தாழ்ந்த கல்வித்தரம் உள்ளவர்களுக்கும் இடையேயான இடைவெளியானது அதிகரித்துக் கொண்டே போகிறது. பதினோரு வயதான ஆண்- பெண்களில் 25 சதவிகிதமானவர்கள் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத்தில் போதுமான கல்வியைப் பெறாமல் உள்ளனர்.

இந்த தேர்வுகள் குழ்ந்தைகளைத் துன்புறுத்துவதாக அமைந்திருக்கின்றன. இந்த தேர்வுகள் நடத்தப்படுவதற்கு பெருமளவில் பணம் செலவிடப்படுவதால் குழந்தைகளுக்கு மிகப்பெருமளவில் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. பலவாரங்கள் அவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறும் பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படுகிறது. 11 வயதான மாணவ - மாணவிகள் பற்றி நடத்தப்பட்ட ஒரு ஆய்வானது, இரண்டாவது தேர்விற்கு செல்லுகின்ற மாணவர்களின் திட்டவட்டமான கொந்தளிப்பு மனப்பான்மையை காட்டுகின்றது. கை கால்களை உதறிக்கொண்டு கூச்சலிடுவது, பீதி உணர்வுகள், மற்றும் கவனக்குறைவு போன்ற நெருக்கடிகளுக்கு உள்ளாவதாக விவரிக்கின்றது. ஆசிரியர்களுக்கும் அதே நிலைதான் ஏற்படுகிறது.

தேர்வுகளும் அவற்றின் முடிவுகள் "League-tables" ஆக வெளியிடப்படுவதும் மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கக் கூடியது. தற்பொழுது இதற்காக ஆண்டிற்கு 3 மில்லியன் பவுன்கள் (4.32 மில்லியன் ஈரோக்கள்) செலவிடப்படுகின்றன. இந்தப் பணத்தைக்கொண்டு இடிந்து கொண்டிருக்கும் பள்ளிகளை கட்டலாம், காலாவதியாகிவிட்ட கருவிகளையும் புதுப்பிக்கலாம்.

பிரிட்டனின் கல்வி ''சீர்திருத்தங்களை'' மேற்கொள்வதில் பேர்லின் முன்நிற்கிறது

எவரும் ஜேர்மனியில் பிரிட்டனின் கல்விமுறையை பின்பற்ற வேண்டுமென்று பகிரங்கமாக வாதாட மாட்டார்கள். ஆனால் அந்த வழியில்தான் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை எல்லா சமிக்கைகளும் கோடிட்டுக்காட்டுகின்றன. கல்வித்தரம் அறிமுகப்படுத்தப்படுவது ஜேர்மனியின் கல்வி கட்டமைப்பை மாற்றுவதற்கான விரிவான திட்டங்களின் ஒரு பகுதிதான். இந்த வகையில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (CDU - FDP) ஆகியன மிகவும் வெளிப்படையாக கருத்துத் தெரிவித்துள்ளன. கல்வித்தரத்தை செயல்படுத்துவதும் தேசிய அளவில் தேர்வுகளை நடத்துவதும், பள்ளிகளையும் அதற்கெல்லாம் மேலாக மாணவ மாணவியர்களையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையென்றும் அக்கட்சிகள் கருதுகின்றன. மாணவர்களை தெரிவு செய்யும் முறைதான் இந்த ஏற்பாட்டின் ஒரே நோக்கமாகும்.

மீண்டும் பசுமைக் கட்சியினர் இந்தக் கொள்கைகளுக்காக சப்பைகட்டும் விரிவான சொல்லலங்கார அறிக்கையை விட்டுக்கொண்டிருக்கின்றனர். மிக ஆடம்பரமான அறிக்கைகளை குழப்பமான சொற்களில், கொச்சையான முட்டாள் தனங்களை மறைத்து அறிக்கை விடுகிறார்கள். பசுமைக் கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில் கல்வித்தர நிர்ணயம் பள்ளிக்கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்று கருதுவதாக விளக்கியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் பள்ளிகளின் செயல்பாட்டில் தன்னாட்சி உரிமையும், சுதந்திரமும் வழங்கப்படுகிறது. அத்துடன் பாடத்திட்டம் குறைக்கப்படுகிறது. பள்ளிகள் தங்களது தரத்தை உயர்த்திக்கொள்ளவும் சுதந்திரமாக செயல்படவும் பள்ளிக்கு உள்ளேயும், வெளியிலிருந்தும் மதிப்பீடுகள் செய்வதற்கு வழிவகை செய்வதாக விளக்கியிருக்கின்றனர். பசுமைக் கட்சியினர் தெரிவித்துள்ள ஆலோசனைகள் என்பன, தவிர்க்க முடியாத அளவிற்கு தற்போது பிரிட்டனில் நிலவுகின்ற கல்வி சூழ்நிலையையே இங்கும் கொண்டு வருகின்றது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக சோசலிசக் கட்சிக் (SPD - PDS) கூட்டணி பேர்லின் நகரத்தை ஆட்சி செய்து வருகிறது. ஜேர்மனியின் பல முனைகளில் இந்தக் கூட்டணி முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே இந்தக் கொள்கைகள் பேர்லினில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தன்னாட்சிப் பள்ளிகள் முன்மாதிரித்திட்டம் (Autonomous Schools Model Project - MeS) என்ற பெயரில் 2003-2004 மற்றும் 2005-2006 ஆகிய கல்வியாண்டுகளில் ஒரு சோதனைமுறையாக கொண்டுவரப்படுகிறது. இது பள்ளிக்கல்வி கட்டுக்கோப்பை தனியார்மயமாக்கும் ஏற்பாடாகும். சென்ற ஜூனில் பேர்லின் நகர சட்டசபை இந்த முன்மாதிரித் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதற்காக 28 பள்ளிக்கூடங்ளை தேர்ந்தெடுத்தது.

பேர்லின் நகர அரசாங்க இணையத் தளம் இதுபற்றி குறிப்பிட்டிருப்பதாவது: ''எதிர்காலத்தில் பள்ளிகளுக்கு அதிக தன்னாட்சி உரிமைகள் இருக்க வேண்டுமா? என்பது பற்றி அல்ல. அந்த தன்னாட்சி உரிமைகள் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே MeS ன் திட்டமாக இருக்கும். அத்தோடு, வரும் ஆண்டுகளில் பள்ளி கல்வித் கொள்கைகள் தொடர்பான முக்கிய திட்டமாக Mes இருக்கும். பேர்லின் நகர சட்டசபையானது கல்வி செயல்பாட்டு கொள்கையை மாற்றி தரத்திற்கான இலக்குகளையும் செலவுக்கட்டுப்பாட்டையும் நிர்ணயித்திருக்கிறது. தனிப்பட்ட ஒவ்வொரு பள்ளியும் தங்களது கல்வியை தருவதன்மூலம் நிதிவகையில் செலவில் மிச்சம் காட்டவேண்டிய பொறுப்பாகும்.''

பிரிட்டனை போன்று கல்வித்திட்டத்தை செயல்படுத்த வேண்டியது பள்ளிகளின் கடமையாகின்றது. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பானது, கல்வித்தரத்தின் அளவுகோலைக் கொண்டு பள்ளிகள் மதிப்பீடு செய்யப்படும். கல்வித்தரத்தை நிலைநாட்ட முடியாத பள்ளிகளுக்கு அச்சுறுத்தும் மிரட்டல்கள் பற்றி விளக்கம் தரப்படவில்லை. ஆனால் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதில் தனி நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படும் என்பதால், கல்வி வளர்ச்சிக்கும் சாதனங்களுக்கும் அரசாங்கத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

நிதி ஒதுக்கீட்டில் ''தன்னாட்சி'' என்பது பள்ளிகள் இதர வழிகளில் நிதி திரட்ட வேண்டும் என்பதுதான் பேர்லின் மாடல் திட்டத்தின் வெளிப்டையான நோக்கமாகும். பள்ளிகளின் உரிமைகள் என்ற தலைப்பில் தனிப்பட்ட பட்ஜெட்டுகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பள்ளிக் கட்டடங்களை அதன் உரிமையாளர் என்ற முறையில் பயன்படுத்திக் கொள்வதுபற்றியும், ஆலோசனை மற்றும் ஆதரவு திட்டங்கள் பற்றியும், ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது பற்றியும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரு வகுப்பு கல்வி முறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. வசதிமிக்க மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் ''தன்னாட்சி'' உரிமைகள், பள்ளிகளின் பொறுப்புக்கள் மற்றும் தர நிர்ணயத்திற்கு அதிகமான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. வசதிமிக்க மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்கள் பெற்றோர்களிடமிருந்தும், சுற்றியுள்ள கம்பெனிகளிலிருந்தும் நிதிகளை வசூலிக்கலாம். எடுத்துக்காட்டாக பள்ளிக்கூடங்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டலாம் அல்லது இதர வகையில் விளம்பரங்கள் செய்யலாம். இந்த விளம்பரங்களில், ''இந்தப் பள்ளிக்கூடத்தின் வழிபாட்டு மண்டபத்தில் வருகின்ற சனிக்கிழமை சீமன்ஸ் (Siemens) குழுவை சந்திக்க வாருங்கள்'' என்பது போன்ற பதாகைகளை தொங்கவிட்டு பணம் வசூலிக்கலாம்.

பேர்லின் நகர சட்டசபை தேர்வு முடிவுகளை அறிவிக்கக்கூடும். அப்படி அறிவிக்காவிட்டால் கூட தன்னாட்சி உரிமை கொண்ட பள்ளிக்கூடம் தனது தேர்வு முடிவுகளை பகிரங்கமாக அறிவித்து அதன்மூலம் பணக்கார பெற்றோர்கள் மற்றும் கம்பெனிகள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளை கவர முடியும்.

இத்தகைய பள்ளி விளம்பரங்கள் கூட சமுதாய வேற்றுமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமையும். வசதிமிக்க பள்ளிக்கூடங்கள் சில விளம்பரங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடும். அதன் விளைவு என்னவென்றால் ஏழைக் குழந்தைகள் படிக்கும் வசதிக் குறைவான மாவட்டங்களிலுள்ள பள்ளிகளின் விளையாட்டு மைதானங்களில் Mc Donald உடைய விளம்பரங்கள் மட்டுமே தொங்கும் அவலநிலை ஏற்படும். வசதியுள்ள பள்ளிகளில் சீமன்ஸ்சின் புதிய கம்யூட்டர் பயிற்சி நிலையங்கள் அமையும் அல்லது பெரிய கம்பெனிகளின் கூட்டங்கள் நடக்கும்.

இப்படி கூடுதலாக பெரிய வர்த்தக நிறுவனங்கள், வசதிமிக்க பெற்றோர்கள் தருகின்ற பணத்தைக்கொண்டு வசதியான பள்ளிகள் கூடுதல் ஆசிரியர்களை, திறமைமிக்கவர்களை நியமிக்க முடியும். ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்கின்ற தகுதிபடைத்த பள்ளிகள் தங்களது மாணவர்களையும் தேர்ந்தெடுக்கத்தானே செய்வார்கள்?

கல்லூரிகளுக்கு அதிக ''தன்னாட்சி'' உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் பல்கலைக்கழக ''சீர்திருத்தங்கள்'' தொடங்கின. இப்போது கல்லூரிகளுக்கு தனிப்பட்ட பொறுப்பு என்கின்ற அடிப்படையில் வசதிமிக்க, திறமைமிக்க பல்கலைக்கழகங்கள் பற்றி பேசப்படுகிறது. இதுபோன்ற பேர்லினின் முன் மாதிரித் திட்டம் முழுவதும், "மோசமான" (ஏழை) மற்றும் "நல்ல" (பணக்கார) பள்ளிகள் என்று மேலும் மேலும் வேறுபாடுகள் வளர்ந்து கொண்டே போகின்ற நிலையில்தான் முடியும்.

Top of page