World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : நான்காம் அகிலம்

Meetings on 50 years of the International Committee of the Fourth International

The split with the WRP and the ascendancy of Trotskyism

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50-வது ஆண்டு பற்றிய கூட்டங்கள்

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் பிளவும் ட்ரொட்ஸ்கிசத்தின் மேம்பாடும்

Chris Marsden
8 December 2003

Use this version to print | Send this link by email | Email the author

1953, நவம்பர் 16ம் தேதி, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டு, உலகெங்கிலும் உள்ள மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளை, அப்பொழுது நான்காம் அகிலத்தினுடைய செயலாளராக இருந்த மிசேல் பப்லோவின் தலைமையில் நடந்த ஒரு திருத்தல்வாதப் போக்குக்கு எதிராக ஒன்று திரண்டு போராட ஓர் அழைப்பை விடுத்தது. ஜேம்ஸ் P. கனனால் எழுதப்பட்ட இப் பகிரங்கக் கடிதம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நிறுவப்படுவதற்கு வழிவகுத்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மனிய மற்றும் பிரிட்டிஷ் பகுதிகளான Partei fur Soziale Gleichheit மற்றும் Soclialist Equality Party (SEP), பிராங்பேர்ட்டிலும், லண்டனிலும், நவம்பர் 23, 30 தேதிகளில் இந்த நிகழ்ச்சியை நினைவு கூருதற்கும், கடந்த 50 ஆண்டுகளின் அரசியல் பணியின் முக்கியத்தை ஆய்வு செய்வதற்கும் கூட்டங்களை நடாத்தின. இரு கூட்டங்களிலும், அனைத்துலகக் குழுவின் செயலாளரான பீட்டர் சுவார்ட்சும், SEP (பிரிட்டனுடைய) தேசியச் செயலாளருமான கிறிஸ் மார்ஸ்டனும் பேச்சாளர்களாக இருந்தனர்.

இங்கு நாம் கிறிஸ் மார்ஸ்டனுடைய சிறப்புரையைப் பிரசுரிக்கிறோம். பீட்டர் சுவார்ட்சின் கருத்துக்கள் டிசம்பர் 6ம் தேதி வெளியிடப்பட்டன. காண்க [பீற்றர் சுவார்ட்ஸ்: "அடிப்படைக் கோட்பாடுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன"]

1986ல் பிளவை ஏற்படுத்த வழிவகுத்த, தொழிலாளர் புரட்சி கட்சியின் (WRP) ஓடுகாலிகளுக்கு எதிரான போராட்டத்தின் மையப் பிரச்சினை, 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பட்டுத்தப்படக் காரணமாக இருந்த பப்லோவாத திருத்தல்வாதம் தலைதூக்குதலாகும். தொழிலாள வர்க்கத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சியை கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், இது ஒரு செயல்படுத்தமுடியாத, குறுகிய மனப்பான்மையினரின் கற்பனையென்று நம்பியவர்களுக்கும் இடையில் நடந்த பூசலாகும்.

இன்று தொழிலாளர்கள், உலகெங்கிலும் மில்லியன் கணக்கில் வாழும் மக்களை அச்சுறுத்தும், அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் இராணுவக் காட்டுமிராண்டித்தனம் தலைதூக்கியுள்ளதை எதிர்கொண்டுள்ளனர், மற்றும் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக வர்க்கப் போராட்டத்தில் பாடுபட்டுப் பெற்ற வாழ்க்கைத்தரங்கள், ஜனநாயக உரிமைகள் இவற்றின் எஞ்சிய பகுதிகளையும் தகர்ப்பதற்காக நடத்தப்படும் தாக்குதல்களையும், எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளனர். இலாபமுறையை எதிர்ப்பது போன்ற பாசாங்கைக் கூட கைவிட்டுவிட்ட அரசியல்கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் சுமையையும் சேர்த்து இப்போராட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை எடுத்துக்கூறும் ஒரு முன்னோக்குடனும், அமைதியையும், வளத்தையும் அனைவருக்கும் வழங்கக் கூடிய மாற்றுச் சமூக ஒழுங்கினை அமைக்கும் வாய்ப்பையும் கொண்டுள்ள, ஒரு புதிய சோசலிசத் தலைமையைக் கட்டி எழுப்புதலில்தான் எல்லாமே தங்கியுள்ளது.

எனவேதான், 1986ல் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்கும், அனைத்துலகக் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட பிளவு, வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக மட்டுமின்றி, வர்க்கப் போராட்டத்தின் போக்கில் நீண்டகாலவிளைவுகளைக் காணக்கூடிய உட்குறிப்பாக அமைந்தது. WRP ஓடுகாலிகளின் தோல்வி, அனைத்துலகக் குழுவின் பப்லோவாத சந்தர்ப்ப வாதத்திற்கெதிரான பல பத்தாண்டுகால போராட்டத்தின் ஒரு திருப்புமுனையாக இருந்து, அடிப்படையில் பாதுகாப்புப் போராட்டமாக இருந்து, பின்னர் தாக்குதலில் இறங்கி, ட்ரொட்ஸ்கிசம் ஏறுமுக உயர்விற்குச் செல்ல முடிந்தது.

நாம் பாதுகாத்து, விரிவுபடுத்தியுள்ள, உலக சோசலிச புரட்சி முன்னோக்கிற்கு, சர்வதேசத் தொழிலாளர்கள் இயக்கத்தை மீண்டும் ஒன்றிணைத்து உருவாக்குவதற்கான புதிய அச்சு ஒன்றை அமைக்க, முன்கண்டிராத வாய்ப்பை இது கொடுத்துள்ளது.

அரசியலில் சிறிதுகாலம் ஈடுபாடு உடையவர்களுக்கு, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும், சோசலிசத்தின்மீது பரிவு உணர்வு கொண்டிருப்போருக்கும்கூட, ஏன் பிளவு ஏற்பட்டது என்பதை விளக்குவது கடினமான பிரச்சினைகளில் ஒன்று என்பது தெரியும்.

பல இடதுசாரிக் குழுக்கள், அடிப்படையில் ஒரே விஷயத்தைத்தானே நம்புகிறவர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, நம்முடைய வேறுபாடுகளை மறந்து இருக்க முடிந்தால், நாம் மாறுதலுக்கான மிக சக்திவாய்ந்த ஒருமித்த இயக்கமாக கூட்டாக மாறமுடியும் என நம்புகின்றனர்.

வரலாற்றில், 1903ல் தொடங்கிய போல்ஷிவிக்குகளுக்கும், மென்ஷிவிக்குகளுக்குமான பிளவு ஒன்றுதான் தேவையும் சரியானதுமான பிளவு என்று பொதுவாகக் கருதப்படுகிறது. பின்னர் நடந்த நிகழ்ச்சிகள், ரஷ்யப்புரட்சிக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா என்ற, அரசியல் போக்குகளின் தடுப்புக்களில் எந்தப்புறம் என்பதை, அந்தப் பிளவு நிர்ணயித்தது. அது வெறும் தத்துவார்த்த பிரச்சினையாக இல்லை.

இதன் விளைவாக, வரலாற்றில் சோசலிஸ்டுகளுக்கு லெனின், தன்னுடைய அரசியல் தொலைநோக்கினால் உலகின் முதல் தொழிலாளர் அரசை நிறுவ வழிவகுத்தவர் என்ற பெயர் கிடைத்தது. அல்லது மாறாக, சோசலிசத்தின் விரோதிகளுக்கு, அவர் ரஷ்யா ஒரு முதலாளித்துவ ஜனநாயக அரசாகச் செல்லும் முயற்சியை முறியடித்துவிட்ட விரோதி என்ற கருத்து இருக்கும்.

ஏதேனும் ஒரு காரணத்தால் அக்டோபர் புரட்சி தோல்வியில் முடிந்திருந்தால், சோசலிசக் கருத்துடையவர்கள்கூட லெனினை, சில அருவமான கோட்பாடுகளுக்காக, விலைமதிப்பற்ற தொழிலாளர் இயக்கத்தின் ஐக்கியத்தை தூக்கி எறிந்துவிட்ட, ஒரு குறுகிய சூழ்ச்சியாளர் என்றும், ஒற்றுமையைக் குலைத்தவர் என்றும் கருதியிருப்பர்.

அப்பொழுதிலிருந்தே, சந்தர்ப்பவாதத்தைவிட கொள்கைகள்தான் உயர்ந்தவை என்று கருதிய எல்லோருக்கும் எதிராகவே, குறுகுழுவாதம் என்ற குற்றச் சாட்டுத்தான் சுமத்தப்பட்டு வந்துள்ளது; அத்தகைய தூற்றுதலுக்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைச் சார்ந்தவர்களைவிட வேறுஎவரும் கூடுதலாக ஆளாகியதில்லை.

ஆனால், 1903லும் 1953லும் அதே அடிப்படைப் பிரச்சினைகள்தான் பிளவை உறுதிசெய்தன; இரண்டுமே சமூக புரட்சியின் வெற்றிக்குத் தேவையான முன்னோக்கை விளக்குவதற்குப் போராடியதன் விளைவுகள்தாம். உண்மையில், ஏதாவது இருக்குமாயின், 1953ல் பிளவு லெனின் மென்ஷிவிசத்துடன் கொண்ட பூசலை ஆரம்பக் கட்டங்களிலாவது, அதிக அளவில் வரையறுத்தது; ஏனென்றால், லெனினுடைய காலத்திலிருந்து மார்க்சிச இயக்கத்தின் முழு வேலைத்திட்ட மரபுகளை அது காத்ததுடன், சிறப்பாக ஸ்ராலினிசத்திற்கு எதிரான, ட்ரொட்ஸ்கியின் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டத்தையும் காத்து நின்றது.

உலகம் என்றும் பார்த்திராத மிகச் சக்திவாய்ந்திருந்த அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டமாக ட்ரொட்ஸ்கிசம் உதித்தெழுந்தது. ஸ்ராலினிசத்தின் தனி ஒரு நாட்டில் சோசலிசத்தைக் கட்டல் என்ற தேசியவாத முன்னோக்கை சவால் செய்ததன் மூலமும் அவர்களின் ஒவ்வொரு திரித்தல் மற்றும் திரும்புதலையும் ஈவிரக்கமற்ற அரசியல் விமர்சனத்திற்குக் கீழ்ப்படுத்தியதன் மூலமும் மிக இருண்ட பிற்போக்கின் காலங்கள் வழியாக அது சர்வதேச சோசலிச முன்னோக்கை பாதுகாத்தது.

ஸ்ராலினிஸ்டுகள் அவர்களுடைய எதிர்ப்பாளர்களைவிட அதிக சக்திவாய்ந்தவர்களாக காணப்பட்டதால், அவர்களின் மில்லியன் கணக்கிலான ஆதரவாளர்களைக் குழப்புவதற்கு அக்டோபர் புரட்சியின் வரலாற்று செல்வாக்கை அபகரித்துக் கொள்ள முடிந்தது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தில் "உண்மையில் நிலவும் சோசலிசம்" என்று இடைவிடாமல், தங்களுடைய திட்டங்களைப் பறைசாற்றிக்கொண்டு, அதற்கு எதிரான விமர்சனத்தை, குறுங்குழுவாதிகளின் செயல் என்றும், பாசிச முகவர்களின் வேலையென்றும் அடையாளப்படுத்தினர்.

எல்லா மக்களையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றுவது ஒருபோதும் முடியாது. உண்மையில், ட்ரொட்ஸ்கிசம், மிகச் சிறந்த மிக மதிநுட்பமுடைய, மிக உயர்ந்த சிந்தனைப்போக்கும் ஈடுபாடும் உடையவர்களை, ஸ்ராலினிசத்தின் தூற்றுதல்களையும் மீறி, சொல்லப்போனால் அவற்றினாலேயே, கவர்ந்தது. நாளடைவில், ஸ்ராலினிசத்துடைய செயல்கள் அவர்களுடைய சோசலிசக்கூற்றை மதிப்புக்குறைவிற்கு உட்படுத்தியதால், வளரும் தார்மீக செல்வாக்கையும் அது பெற்றது. மேலும், மிகக் கஷ்டமான காலங்களிலும்கூட, தனிமைப்படுத்தப்பட்டு, இடைவிடாத தொல்லைகளுக்கு ஆளாகியும் கூட நான்காம் அகிலத்தின் காரியாளர்களை ஒருபொழுதும் கலக்கத்திற்கு உட்படுத்தியது கிடையாது. அவர்களுடைய முன்னோக்கு சரியானது என்ற புரிதலிலும் வரலாற்றுச் சூழ்நிலை பிற்போக்கிலிருந்து நாளடைவில் இடம் பெயர்ந்துவிடும் என்பதிலிருந்தும் அவர்கள் நம்பிக்கை பெற்றனர்.

அரசியல் கொள்கைகளுக்கான பூசல், பரந்த மக்களுக்கு வழிகாட்டக்கூடிய தன்மையைப் பெறும் சூழ்நிலைகள் உருவாகும். வரவிருக்கின்ற புதிய புரட்சி அலையினால், அதிகாரத்துவ தொழிலாளர் இயக்கத்தில் ஒருகல் கூட எஞ்சியிருக்காது என ட்ரொட்ஸ்கி முன்கூட்டியே கணித்திருந்தார்; நான்காம் அகிலத்தின் உறுப்பினர்கள் நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு உயர்நிலைக்கு வரமுடியும் என்பதை நிரூபித்திருந்தனர்.

இந்த நம்பிக்கை, சோசலிசம் அமைக்கப்படுவது, ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்த அதிகாரத்துவத்தின் ஆற்றலைவிட மிக சக்திவாய்ந்த, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்வியூட்டல், அணிதிரட்டல் இவற்றில்தான் தங்கியுள்ளது என்ற வரலாற்று ரீதியாகப் பெறப்பட்ட புரிந்துகொள்ளும் தன்மையின் அடிப்படையில் அமைந்தது.

பப்லோவாதத்தின் வெளிப்பாடு

மேற்கூறிய முன்னோக்கை நிராகரித்த மற்றும் பார்த்தால் வலிமையுடையது போல் தோற்றமளிக்கும் ஸ்ராலினிசத்தின் வலிமையையும், ஸ்ராலினிச காட்டிக்கொடுப்பால் உதவப்பட்டு, கொண்டுவரப்பட்ட போருக்குப்பிந்தைய முதலாளித்துவ ஸ்திரத்தன்மையையும் ஏற்ற இந்த சக்திகளிலிருந்து, 1940களின் கடைசி ஆண்டுகளில், பப்லோவாதம் வெளிப்பட்டது. மாஸ்கோவுடைய சோசலிசத்திற்கெதிரான கருத்தியல் தாக்குதலை, முதலில், ஸ்ராலினிசத்திற்கும், பின்னர் சமூக ஜனநாயகத்திற்கும், முதலாளித்துவ தேசியவாதத்திற்கும் புகழ்பாடும் போலி ட்ரொட்ஸ்கிச கருத்தாக மாற்றியதும், பப்லோவாதத்தின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். அரசியல் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்துவதுதான் மீண்டும் பிரச்சினையாக இருந்தது: புரட்சிகரமான நடவடிக்கைகள் போல் தோன்றியவற்றை, நிறைவேற்றுவதற்கு ஸ்ராலினிசம் நிர்பந்திக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்ராலினிச உலகம் ஒன்றுதான், அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்திற்கு உண்மையான எதிர்ப்புக் காட்டும் அடிப்படையை உடையது என்பதுதான் அது.

இன்னும் பொதுவாகச் சொல்லப்போனால், தொழிலாள வர்க்கம் சமூக ஜனநாயக, ஸ்ராலினிச மற்றும் அல்லது தேசியவாத பண்புடைய பரந்த கட்சிகளிடமும் இயக்கங்களிடமும்தான் பற்றைக் காட்டுகின்றனர். எனவே யதார்த்தமானது சுயாதீனமான மார்க்சிச இயக்கத்தைக் கட்டி அமைப்பதற்கான வீண்முயற்சிகளைவிடவும் இந்தக் கட்சிகளை புரட்சிகர கருவிகளாக மாற்றும் பணியே நடைமுறையில் கூடுதலான பலனளிக்கும் என அறிவுறுத்துகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு, இந்த உலகப் பார்வைக்கு எதிரான ஒன்றாகும். எதிரான சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் என்பதனால், பிளவின் மூலமோ அல்லது அமைப்புமுறைகளின் மாற்றத்தின் அடிப்படையிலோ இதற்கு தீர்வு காணமுடியாது. பப்லோவாதிகளுடைய கருத்துக்கள், மார்க்சிசத்திற்குப் புறம்பானவை, தத்துவார்த்தரீதியாக தவறு என நிரூபித்துக்காட்டப்படக்கூடியவை. ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மீதாக மேலாதிக்கம் செய்யும் சோசலிச எதிர்ப்பு சக்திகளிடமிருந்து பலத்தைப் பெற்றது மற்றும் அவை தொழிலாளர் இயக்கத்தின்மீது ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்திற்கான நகர்ந்து செல்லும் பட்டைநாடா (Conveyor Belt) போல செயல்பட்டன.

தான் மரபுவழி ட்ரொட்ஸ்கிசத்தைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வலியுறுத்தல் மறுக்கப்பட முடியவில்லை. இருந்தாலும் கூட, பப்லோவாத வியாதிக்கு நிபந்தனையின்றிச் சரணாகதி அடைந்தவர்கள் பெரும்பான்மையாகப் போய்விட்ட நிலையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மிகச்சிறிய, தாக்குதலுக்குட்பட்டுவிட்ட சிறுபான்மையினராகப் போய்விட்டனர். ஜேம்ஸ் P. கனனும், SWP யின் தலைமையும்கூட 1953ல் தங்கள் நிலைப்பாட்டைக் கைவிடநேர்ந்ததோடு 1963ல் பப்லோவாதிகளுடன் கோட்பாடற்ற முறையில் மறு இணைப்பில் ஒன்றுபட்டனர்.

அக்காலகட்டத்திலுருந்து, மரபுவழி ட்ரொட்ஸ்கிசத் தலைமை, ஜெரி ஹீலி, மைக்கல் பண்டா, கிளீவ் சுலோற்றர் ஆகியோரின் தலைமைக்குட்பட்டிருந்த, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) பொறுப்பிற்கு மாறிவிட்டது.

இதன் அரசியல் எதிர்ப்பாளர்களின் விடை காட்டுமிராண்டித்தனமான, கடுகளவேனும் குறையாத விரோதப் போக்காக இருந்தது. "ஹீலீயிசம்" மிகமோசமான குறுங்குழுவாத பிரிவாகக் கருதப்பட்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அரசியலில் தீண்டத்தகாதவர்கள் போல் நடாத்தப்பட்டது நியாயப்படுத்தப்பட்டது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியுடைய முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகம், அத்தகைய கடினமான சூழ்நிலைகளில், மிகப்பெரிய அரசியல், மற்றும் அமைப்புமுறைகளில் முன்னேற்றம் கண்டதின் அடிப்படையில்தான், இளம் சக்திகள் பிரிட்டனிலும், சர்வதேச அளவில் மற்ற நாடுகளிலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். சோசலிச தொழிலாளர் கழகத்தினால் தலைமை கொடுத்த ஊக்கத்தினால் உந்தப்பெற்ற பலரும் இன்று அனைத்துலகக் குழுவின் பிரிவுகளில் அவர்களே தலைவர்களாக உள்ளனர்.

SLL உடைய வரலாறு நிரூபிப்பது, கொள்கைகளைப் பாதுகாப்பதானது தனிமைப்படுத்தலுக்கு வழியாகாது என்பதேயாகும். இன்னும் சொல்லப்போனால் மார்க்சியவாதிகள் தனிமையை அனுபவிக்கவேண்டும் என்பது வரலாற்றுரீதியாக நிர்ணயிக்கப்பட்டது. ஸ்ராலினிசம் இடது எதிர்ப்புக்களில் உள்ள ட்ரொட்ஸ்கியின் ஆதரவாளர்கள்மீது முறையான அரசியல் இனப்படுகொலைகளை செய்ததன் மூலம் மற்றும் அதன் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் மீது தோல்விகளை சுமத்தியதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டை உத்திரவாதப்படுத்திக் கொண்ட பரந்த அதிகாரத்துவக் கருவியால் தொழிலாளர் இயக்கம் மேலாதிக்கம் செய்யப்பட்டதில் அது பிரதிபலிக்கிறது.

அரசியல் யதார்த்தம் என்று கூறப்படுவதை, புத்திசாலித்தனமான தந்திரோபாய ஏற்றுக் கொள்ளலினால், தனிமைப்படலை கடந்துவிட இயலாது; நீண்ட காலம், அதில் பலநேரம் துயரம் நிறைந்த போராட்டம் நடாத்தப்பட்டு தொழிலாள வர்க்கத்திற்கு, அதன் தவறான தலைவர்களுக்கு எதிராகப் போராடித்தான் ஒரு பாதை அமைக்கப்படவேண்டும்.

SLL/WRP உடைய சந்தர்ப்ப வாதமும் சீரழிவும்

WRP இன் துன்பியல், --எந்தத்தனிப்பட்ட நபரைப்பற்றி நாம் எப்படி நினைத்துக் கொண்டாலும், நடந்தவற்றில் ஒரு பெருந்துன்பம் இழையோடும்-- கட்சி எதிர்நோக்கியிருந்த அழுத்தங்களும், மிகமுக்கியமான அரசியல் பலவீனங்களும் சேர்ந்து, அதன் தலைவர்களை முன்பிருந்த கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டைத் துறக்க வைத்தன.

அமைப்புக்களின் வெற்றிகளில் இதுகாறும் அதுகொண்ட சாதனைகள் பப்லோவாதத்திற்கெதிரான தத்துவார்த்த போராட்டத்தைவிட முக்கியமானது என்றும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெருமளவில் பரந்த பிரிட்டிஷ் இயக்கத்தின் ஈர்ப்பின் மூலம் வளர்க்கப்படும் என்றும், SLLக்குள் ஒரு கருத்துரு வளர்ந்தது.

ஆகையால், அமைப்பின் வெற்றியைக் கருதி, கட்சி உள்பூசல்கள் தவிர்க்கப் பெற்றன. எனவே, SLL மற்றும் WRP தலைமைக்குள்ளே சிலர், பப்லோவாதத்தைப் போன்ற நிலைப்பாடுகளைப் பேசத்தொடங்கியவுடன், அவை எதிர்க்கப்படவில்லை. இறுதியில், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தன்னுடைய சுயாதீனமான மார்க்சிசக் கட்சியை அமைக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, எது அதிகமான வலிமை வாய்ந்த போக்குகள் என்று கருதியதோ, அவற்றுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டது.

இங்கு அடுத்த இருபது ஆண்டுகளில் நடந்த SLL/WRP -ன் சீரழிவின் ஒவ்வொரு கூறுபாட்டையும் விளக்கிக்கூற இயலாது. ஆனால் அது பப்லோவாதத்திற்கெதிரான போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி வெளிப்படையான கேள்வியை எழுப்பியதிலிருந்து தொடங்கி, கிளிவ் சுலோற்றர் டிராட்்ஸ்கிசத்தின் முக்கியத்துவத்தையே வெளிப்படையாக கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு வளர்ந்து, பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு (PLO) போன்ற தேசிய இயக்கங்களில் இருப்பதாகக் கருதப்பட்ட புரட்சித் தன்மை பற்றித் துதிபாடுதலிலும், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நோக்குநிலையோடு ஒத்துப்போனதிலும் முடிந்தது.

சந்தர்ப்பவாதத்திற்குள் இந்த அரசியல் இறக்கமானது, அனைத்துலகக் குழுவிற்குள்ளேயே SLL உடைய முந்தைய போராட்டங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருந்த அமெரிக்காவில் உள்ள தொழிலாளர் கழகத்திலிருந்து (WL) எதிர்ப்பைச் சந்தித்தது.

WRP, ட்ரொட்ஸ்கிச முன்னோக்கைத் துறந்தது பற்றிய அனைத்துவிதமான விமர்சனத்தையும் டேவிட் நோர்த் (அமெரிக்காவில் சோசலிச சமத்துவக்கட்சியின் முன்னோடியான தொழிலாளர் கழகத்தின் தேசியச் செயலாளர்) கூறியது அடக்கப்பட்டது. WRP இன் தலைவர்கள் தங்களுடைய பொதுவிரோதியென உணர்ந்ததற்கு எதிராக, தங்களுடைய கன்னைவாத பூசல்களைத் தற்காலிகமாக மறந்தனர். ஆனால் 1985 அளவில், WRP மிகுந்த உட்பூசல்களினால் நிறைந்ததோடு, ஒரு பாலியல் இழிவினாலும் சரிந்தது. வேர்க்கர்ஸ் லீக்கின் விமர்சனங்களையும், அதன் ட்ரொட்ஸ்கிச நிரந்தரப்புரட்சித் தத்துவத்தினைப் பாதுகாத்தலையும் நசுக்க முடியவில்லை. நோர்த்துடைய விமர்சனம் அனைத்துலக்குழுவின் பெரும்பான்மையைத் தன்பக்கம் வெற்றிகொண்டதோடு, அப்பொழுது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவுச் சிறுபான்மையாக இருந்து, இன்றைய பிரிட்டிஷ் SEP-யாக உள்ளவர்களின் ஆதரவையும் பெற்றது.

மேம்போக்காகப் பார்த்தாலும், அரசியல் செயல்முறைவாதிகளின் பொது அறிவுக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும், இது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு மிகப்பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்கும் என்றுதான் ஆகும். இதன் பப்லோவாத அரசியல் விரோதிகள், மிகப்பெரியதும் எங்கும் நன்கு அறியப் பெற்றதுமான பிரிட்டிஷ் பகுதியின் வெடித்துச் சிதறிய முடிவைப் பார்த்து, தங்கள் களிப்பை அடக்கிக் கொள்ளமுடியாது என்பது உறுதி. தங்கள் பங்கிற்கு, ஹீலி, பண்டா மற்றும் சுலோற்றர் ஆகியோர் பழைய குறுங்குழுவாதத்திடமிருந்து விடுதலைபெற்று விட்டதாகவும், "உண்மையான மக்கள் இயக்கங்கள்" பால் தங்களை நோக்குநிலைப்படுத்திக்கொள்ளத் தொடங்கலாமென்றும் பறைசாற்றிக்கொண்டனர்.

இந்த உட்பூசல்கள் இருந்தபோதிலும்கூட, 1986ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) பிரிந்தவர்கள், பலவிதங்களில், பழைய அதிகாரத்துவத்தின் ஆதரவிற்குள் தங்களை இணைத்துக் கொள்ள வழிதேடினர். ட்ரொட்ஸ்கி ட்ராகனின் பற்களை விதைத்தார் ஆனால் தத்துக்கிளிகளை அறுவடை செய்தார் என்று அறிவித்துத் தொடங்கிய பண்டா, அவர் உண்மையில் தத்துக்கிளிகளை விதைத்தார் என்றும், "பாட்டாளி வர்க்கத்தின் போனபார்ட்" ஜோசப் ஸ்ராலின்தான் முதலிலிருந்தே சரியான வழியைப் பின்பற்றினாரென்றும் முடிவுகூறத் தலைப்பட்டார்.

ஹீலி, மிகையில் கோர்பச்சேவ், பின்னர் போரிஸ் யெல்ட்சினுடைய அதிகாரபூர்வமான ஸ்ராலினிச எதிர்ப்பைத் தழுவி, அதிகாரத்துவத்தின் முதலாளித்துவ மீட்புப்பிரிவை, அரசியல் புரட்சியை அடையவல்ல மற்றும் சோவியத் ஜனநாயகத்தின் மறுபிறப்பையும் எடுக்க வைத்த "நனவற்றவகையிலான ட்ரொட்ஸ்கிஸ்ட்" என்று சித்தரித்தார்.

சுலோற்றர், ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிசத்தின் இடைநிலைவாத விரோதிகளோடு மறுகுழுச் சேர்தலாக மாற்றிக்கொள்ள விரும்பி, அவர்கள் மூலமாக ஸ்ராலினிசத்துடன் ஒரு பெரிய அமைப்பின் பகுதியாக கூட்டுவைக்க விரும்பி, குறிப்பாக ஆர்ஜென்டினாவின் சோசலிசத்தை நோக்கிய இயக்கத்தை (Argentina's Movement towards Socialism -MAS) இலக்காகக் கொண்டார். இந்தத் திட்டத்தில் பல பெரும் பின்னடைவுகளைக் கண்டபின்னர், மிக சீரழிந்த அராஜகவாதக் குழுக்களைப் புகழ்வதிலும், தன்னியல்பு சித்தாந்தத்தை துதிபாடுவதற்குமாக, தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமை அமைக்கக் கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் அவரது குரோதத்தை அறிவித்ததன் மூலம் அவருடைய அரசியல் தொடுவரைகோட்டை மார்க்சிசத்திலிருந்து தள்ளிவைத்து முடித்துக் கொண்டார்.

இவர்கள் அனைவருக்குமே, "வெள்ளையிலும் வெண்மையும், புனித நீரும், குறைந்த எண்ணிக்கையுமுடைய சோசலிசம்" என்பதில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்ற அனைத்துலகக் குழு மீதான ஹீலியின் விமர்சனத்திற்கும், "அவருக்கு மிக முக்கியமான கேள்வி எவ்வாறு கொள்கைத் தூய்மையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதும், அது ஒரு மிகச்சிறிய விவாதக் குழுவில்தானே முடியும் என்பதிலும், அதிக எண்ணிக்கை கோட்பாடு, தூய்மையற்ற நிலையை ஊக்கிவிடும்" என்ற அவருடைய நோர்த் மீதான தாக்குதலிலும், நிறைய பற்றுக் கொள்வது கடினமாக இல்லை.

ஆயினும் ஒரு விந்தையான நிகழ்ச்சி நடந்தது. வெற்றிக்குப் பதிலாக, WRP உடைய பிளவுகள், ஓர் அதிர்ச்சியை அடுத்து அடுத்த பின்னடைவின் அதிர்ச்சியைத் தாங்கவேண்டியிருந்தது. மீண்டும், மீண்டும் அவர்கள் பிளவுற்றனர்; இன்று அரசியல் ராடார் திரையில் ஒரு சிறுபுள்ளியாகத்தான் இருக்கமுடிகிறது.

இதற்கு மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, வலிமையிலிருந்து, கூடுதலான வலிமைக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது. இன்று உலக சோசலிச வலைத் தளம் உலகம் முழுவதிலும் பரந்த அளவில் படிக்கப்படும் புரட்சிகர சோசலிச இதழாக உள்ளது, பலராலும் சோசலிச சர்வதேசியத்தின் அதிகாரபூர்வ குரலாக அறியப்பட்டுள்ளது.

இது எப்படி விளக்கப்பட முடியும்?

WRP ஓடுகாலிகளின் விதி, உலகளவிலான அரசியல் மற்றும் சமூக உறவுகளில் ஏற்பட்ட அடிப்படை மாற்றத்தின் விளைவாகும். அவர்கள் சுயாதீனமான, ஒரு மார்க்சியத் தலைமைக்கான போராட்டத்தைத் துறந்ததும், ஸ்ராலினிச நோக்கு நிலை கொண்டதும், தொழிலாளர் இயக்கத்தில் பல பத்தாண்டுகள், அதிகாரத்துவ மேலாதிக்கம் செலுத்தியிருந்ததன் அரசியல் விளைவாக இருந்தது.

ஆனால் WRP உடைய காட்டிக்கொடுப்பு, சமன்பாட்டின் ஒருபக்கமே ஆகும். காட்டிக்கொடுப்புக்கள் மட்டுமே புறநிலை வேர்களையும், காரணங்களையும் கொண்டுள்ளன என்பதை விளக்குவதற்கு நாம் இங்கு கூடவில்லை. தொழிலாளர் கழகத்தால் (WL) மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் புறநிலை முக்கியத்துவம் கொண்டிருந்தது, WRP ஓடுகாலிகள் குருடராக பாராதிருந்த, உலகின் பெரிய அளவிலான சமூக மற்றும் அரசியல் உறவுகளின் மாற்றத்தை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தத்துவார்த்த ரீதியாக ஆய்வு செய்ய முடிந்தது.

ஸ்ராலினிசத்திற்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி ஒட்டுமொத்தமாய் சரணாகதி அடைந்தது, முழுகிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து எலிகள் குதிப்பதை சிறந்த உதாரணமாகக் கொண்டிருந்தது. சோவியத் அதிகாரத்துவம் கண்ட மிகப்பெரிய, ஆபத்தான நெருக்கடியுடன், இது பிணைந்தது. தனி ஒரு நாட்டில் சோசலிசம் என்ற முன்னோக்கும், நீண்ட காலம் ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு கொண்டதும், சோவியத் ஒன்றியத்தை முட்டுச் சந்திற்குக் கொண்டு வந்து விட்டிருந்தது. இதற்கு, புரட்சிச் சிந்தனையிலிருந்து வெகுதொலைவிலிருந்த அதிகாரத்துவத்தின் கோர்பச்சேவ் பிரிவின் விடையானது, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை, தேசிய மயமாக்கப்பட்ட சொத்துடைமை உறவுகளைத் தகர்ப்பதன் மூலம் உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள் மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதாயிற்று; இந்த முன்னோக்கு, இன்னும் கூடுதலான விறுவிறுப்புடன் அவருக்குப் பின் பதவிக்கு வந்த யெல்ட்சினால் தொடரப்பட்டது.

ஸ்ராலினிசத்தால், சோவியத் ஒன்றியம் தகர்க்கப்பட்டமை, அனைத்துப் பழைய அதிகாரத்துவங்களும், முற்றிலுமாகச் சோசலிசத்தைத் துறந்துவிடுவதற்கு, கருத்தியலளவில் முன்னோடியாகப் போய்விட்டது. தங்கள் பங்கிற்கு, தொழிற் கட்சியும் மற்றய சமூக ஜனநாயக அமைப்புக்களும், தங்கள் பழைய சீர்திருத்தவாதத் திட்டங்களைத் தகர்த்துவிட்டு தாட்சரிச தடையற்ற சந்தைமுறை பணக்கொள்கைவாதத்தின் பலபிரிவுகளுக்கும் மாறின.

தொழிற்சங்க அமைப்புக்களும் இதைப்பின்பற்றியதால், மிகக் கணிசமான அளவு வாழ்க்கைத்தர சரிவுகளுக்குத் தலைமை தாங்கி, அவ்வகையில் மில்லியன் கணக்கான உறுப்பினர்களை இழந்தன. தேசிய இயக்கங்களும் ஏகாதிபத்தியத்துடன் அமைதியை மேற்கொண்டன; மிகவும் அறிந்த முறையில் இது தென்னாபிரிக்காவில், ஆபிரிக்க தேசியக்காங்கிரஸ் (ANC) முதலாளித்துவ நலன்களுக்கு பொறுப்பு எடுத்துக்கொண்டதில் தெரியவந்தது.

ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், தேசிய விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றை மாறுதல்களுடன் ஏற்பது ஒன்றுதான் பெரும்பாலான மக்களுக்கு உள்ள ஒரே வழியென்று கூறியதன் மூலம் ஓடுகாலிகள் தங்களின் சந்தர்ப்பவாதத்திற்கு பப்லோவாத நியாயப்படுத்தலை மீண்டும் முயற்சித்தனர். ஆனால், இந்தத் தலைமைகள் தொழிலாள வர்க்கத்தின் மீதான பிடியை இறுதியாக இழந்தன, இவற்றின் போக்கில் தங்கள் நோக்குநிலையை மாற்றிக்கொண்ட அமைப்புக்கள் அனைத்தும் தங்கள் திட்டங்களும் மற்றும் பலநேரம் அமைப்புக்களும், தங்கள் கண்முன்னேயே பொறிந்து போனதைப் பார்த்தனர்.

இந்தச் சூழ்நிலையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் "வெண்மையை-விட-வெண்மையான சோசலிசம்", கோட்பாடுகளையும், மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றுரீதியான நெறியையும் அது பாதுகாத்ததும், மிக மதிப்புவாய்ந்த அரசியல் பண்டமாகவும், முன்னேற்றப் பாதையைக் காணவிரும்புவோருக்கு, ஆற்றல் மிகுந்த ஈர்ப்பு முனையாகவும் அமைந்தது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் பாதுகாக்கப்பட்டது என்னவெனில், தொழிலாள வர்க்கம் தங்களுடைய இலக்கான சோசலிச உலகைத் தோற்றுவிப்பதற்கான வேலைத்திட்டம் மட்டுமே ஆகும், இது வெறுமனே உட்கார்ந்து நடப்பவற்றை அசைபோட்டுக் கண்டுபிடிக்காமல், பல பத்தாண்டுகள் இப்பொழுது தெளிவாகத் தோல்வியுற்ற கட்சிகள் மற்றும் முன்னோக்குகள் இவற்றுடன் போராடியதன் விளைவில் பெறப்பட்டதாகும்.

இன்று, சோவியத் ஒன்றியத்தின் அழிவினால், பெருமளவு அரசியல் குழப்பமும், நோக்குநிலை தவறலும் உண்டுபண்ணப்பட்டிருக்கின்றன மற்றும் பழைய சீர்திருத்தவாதக் கட்சிகளிடையேயும் அமைப்புக்களிடையேயும் வலதுபுற சாய்வும் தோன்றியுள்ளன. செய்தி ஊடகங்களும், படித்த புலமையுடையோரும் சோசலிசம் தோற்றுவிட்டது என இடைவிடாமல் வலியுறுத்தி வருவது, சந்தைமுறைக்கு மாற்று இல்லை என்ற இவ்வுலகின் பிளேயர்களின் செய்தியையே மேலும் வலுப்படுத்திக் கூறுவதாகும்.

ஆனால், எத்தனை காலம் இச்செய்தியான அனைத்து நம்பிக்கையையும் துறந்து பணவலிமைக்கு முன் மண்டியிடு என்பது ஏற்கப்படும் என்பதற்கும் வரம்புகள் உள்ளன. புரட்சிகர அச்சாணியில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பெரும் அரசியல் மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும் முறையில், சக்திமிக்க புறநிலைக்காரணிகள் செயல்பட்டு வருகின்றன.

உலக ஏகாதிபத்தியத்திற்கும் ஸ்ராலினிசத்திற்கும் இடையே, இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து வரலாற்றளவில் தனிச்சிறப்பாக நிலவிய சூழ்நிலைகளில் இலகுவற்ற உடன்பாடு கொள்ளப்பட்டதன் விளைவாக - குளிர் யுத்தத்திற்கு ஒர் அரசியல் ஏற்பாக பப்லோவாதம் வெளித் தோன்றியது.

இந்த நேரத்தில்தான், அரசியல் சொல்லாட்சியில், நாடுகளிடையே நிலவுகின்ற மனக்கசப்பினை நீக்கும், அப்படியே ஒற்றுமையுடன் இருப்பது, " சமாதான சகவாழ்வு" ஒரு புறமும், "ஆயுதங்களின் போட்டி", அணுவாயுத அச்சுறுத்தல் மற்றும் "பரஸ்பரம் உறுதிசெய்யப்பட்டுவிட்ட அழிப்புமுறை" போன்ற சொற்கள் புழக்கத்திற்கு வந்தன. பாஸ்டியன் பேரத்திற்கான விலை, முதலாளித்துவ அமைப்பு உயிர் பிழைத்திருப்பதில் செலுத்தப்பட்டது, அது அரசியல் காட்டிக்கொடுப்புக்கள், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர எழுச்சியை ஸ்ராலினிசமும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவோரும் அடக்கியது போன்றவற்றின் மூலம் சாத்தியமாக்கப்பட்டது.

உலகை மறு பங்கிடலுக்கு ஏகாதிபத்தியத்தின் உந்துதல்

குளிர்யுத்த கால முடிவானது, இலாப அமைப்புமுறையின் இன்றியமையாத முரண்பாடுகள் வெடிக்கும் வகையில் மீண்டும் வெளிப்பட்டதைக் கண்டது. பெரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையே, சோவியத் முறையினால் ஓரளவு மூடிவைக்கப்பட்டிருந்த உலகப்பகுதிகள், அல்லது சோவியத் ஒன்றியத்தின் இருப்பே ஏகாதிபத்தியத்தின் கொள்ளைமுறைகளுக்கு ஒரு தடுப்பாக இருந்த மத்திய கிழக்கு, ஆபிரிக்கா போன்ற பகுதிகளின் மீது குவிப்புக் கொண்டு, அவற்றை மறுபங்கீடு செய்து கொள்ளுவதற்கான கடுமையான தீவிரத்துடன் கூடிய மோதல் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவின் புஷ் நிர்வாகம், தன்னுடைய இராணுவ வலிமையையும், இப்பொழுது சவால்விடமுடியாத பெரும் வல்லரசு என்ற நிலையையும் பயன்படுத்தி, இந்த பதைபதைப்புச் செயலில் முன்னின்றாலும், மற்ற ஐரோப்பிய நாடுகளும், இதற்கு விடையிறுக்கும் வகையில் தங்கள் இராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்ள முற்பட்டுள்ளன.

வர்க்கப் போராட்டமும், கூடுதலான மிருகத்தனமான மற்றும் நேரடி வடிவத்திற்குத் திரும்பியுள்ளது. தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக, முந்தைய காலத்தில் சோசலிச அச்சுறுத்தலைத் தவிர்க்கும் பொருட்டு கொடுக்கப்பட்ட சலுகைகளை பிராண்டிப் (விராண்டி) பிடுங்கி மீண்டும் எடுத்துகொள்ளுவதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் சமுதாயத் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இந்த உண்மை கட்டாயம் எதிர்கொள்ளப்படவேண்டும்; இன்றளவும் தொழிலாள வர்க்கம், இந்த சமூக உறவுகளில் ஏற்பட்டுள்ள வரலாற்று ரீதியான மாறுதலுக்கு அரசியல் ரீதியாக விடையிறுக்க, சூத்திரப்படுத்த முடியாதிருக்கிறது.

ஒரு ஈவிரக்கமற்ற மற்றும் குற்றஞ்சார்ந்த, நிதிக்குழுவினர் ஆட்சி, உலகெங்கிலும் செயல்படும் பெருநிறுவனப் பேரரசுகளால், உலகம் முழுவதையும் சூறையாடி மட்டிலடங்கா செல்வத்தைத் தனக்காகவே, குவித்து வருகிறது. தொழிலாள வர்க்கம் ஒவ்வொரு நாட்டிலும் எவ்விதமான அரசியல் பிரிதிநிதித்துவமும் அமைப்பும் கொள்ளாமலுள்ள நிலையில் இருப்பதால்தான் அது இவ்வாறு செய்ய முடிகிறது.

தொழிலாளர்கள் கட்டிக்காத்த கட்சிகள் இப்பொழுது, ஒரு சிலவரது குழு ஆட்சியின் சார்பில் தொழிலாளர்களையே விரோதிகளாக எதிர்த்து நிற்பதோடு, அவர்களுடைய கெள்கைகளையும் ஜனநாயகமுறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் விருப்பத்தையும் பகிரங்கமாக மீறிச் செயல்படுகின்றன. இதன் மிகப்பெரிய வெளிப்பாடு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஈராக்கிற்கெதிராகப் போர்க்கோலம் பூண்டதும், அமெரிக்காவோடு சேர்ந்துகொண்டு அந்நாட்டை ஆக்கிரமித்துள்ளதுமாகும். ஆனால், பொதுவாக நடைபெறும் இந்த, வலதுபுறம் தலைதெறித்து உச்சி இடத்தைப்பிடிக்கும் முயற்சிகளில், ஜேர்மனியின் ஹெகார்ட் ஷ்ச்ரோடரும், மற்றவர்களும் அடங்கிய ஓட்ட பந்தயத்தில், பிளேயர்தான் முன்னணியில் வந்துகொண்டிருப்பவராவர்.

இதன் பொருள், முன்னொருபோதும் இல்லாத முறையில் மக்கள் போருக்கு பெரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும், ஆளும் செல்வந்தத் தட்டுடைய இராணுவ நிகழ்ச்சி நிரலில் குறித்தபடி, பாக்தாத்தில் குண்டுவீச்சு நடத்தியதிற்கும் மேலான குற்றங்களைப் புரியத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதாகும். உள்நாட்டில் வர்க்கப் போராட்டம், தொழிற்சங்கங்களால் பெருமளவில் நகரமுடியாதபடி செய்யப்பட்டுள்ள மற்றும் அரசியல் பிரதிநிதித்துவமும் செல்வாக்கும் மறுக்கப்பட்டுள்ள தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ வர்க்கத்தால் முன்கண்டிராத ஒருதலைப்பட்ச தாக்குதல் என்ற வடிவத்தை எடுக்கிறது.

இதன் விளைவாக, பல தொழிலாளர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் ஒரு புதிய கட்சி அமைக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டுள்ளது.

இந்த மார்க்சிச இயக்கத்தால் பாதுகாக்கப்பட்ட புரட்சிகர முன்னோக்கு ஒன்றுதான் அத்தகைய கட்சியை வளர்ப்பதற்கு ஒரே அடிப்படையாகத் தன்னை நிரூபித்து உள்ளது. போருக்குப் பிந்தைய காலம், வர்க்கப் போராட்டத்தில் வினோதமான வரலாற்று நிகழ்வாக இருந்திருக்கிறதே ஒழிய, சோசலிச முன்னோக்கை கைவிடவேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருக்க வேண்டிய புதிய சகாப்தமாக இருந்ததில்லை. இருந்தபோதிலும், இப்பொழுதும்கூட, பப்லோவாதிகள் மீண்டும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மார்க்சிச தலைமையை ஏற்படுத்துவதற்குத் தடை செய்யும் முயற்சிகளில்தான் ஈடுபட்டுள்ளனர். பழைய தேசிய, சீர்திருத்தவாத அதிகாரத்துவங்களின் வீழ்ச்சிக்கு அவர்களுடைய பதில்விளைவு, புரட்சிகரமான சோசலிசத் வேலைதிட்டத்தை முன்வைக்க காலம் கனியவில்லை என்று சொல்லிக்கொண்டே, ஒரு புதிய சீர்திருத்தக் கட்சியை அமைப்பது என்ற பரபரப்பான முயற்சியாக இருக்கிறது.

அவர்கள் கருத்தில் கொண்டுள்ள கட்சி, வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வடிவங்கள் கொள்ளும் என்றாலும், அவர்களுடைய வலதுபுறப் பாய்ச்சலுக்கு முன் சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் இவற்றிற்குப் பழைய விசுவாசத்தையே காட்டும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான அதிருப்தியாளர்கள், கடினப்போக்கு கொண்டவர்கள், பழைய கட்சியை விட்டுச் சென்றவர்கள் ஆகிய இவர்களுக்குத்தான் பெருமை வாய்ந்த முதலிடம் கொடுக்கப்படுகிறது.

இது தொழிலாள வர்க்கத்தின் தலைமைப் பொறுப்பை, சர்வதேசத் தொழிலாளர் இயக்கம் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைக்குக் காரணமாகயிருந்தவர்களிடமே கொடுப்பது என்பது மட்டுமல்ல அதைவிட முக்கியமாக, இது தொழிலாள வர்க்கத்தை தோல்வியுற்ற தேசிய சீர்திருத்தவாத முன்னோக்குடன் பிணைத்து வைப்பதும் ஆகும்.

பிரிட்டனில், சோசலிச தொழிலாளர் கட்சி (SWP), அதுவாகவே வரையறுத்துக் கொள்ளும் "போரெதிர்ப்பு" கட்சியை அடுத்த ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பியத் தேர்தலில் தோற்றுவிக்க முயன்று வருகிறது. இது ஒரு குறைந்தபட்சக் கோரிக்கைத் திட்டத்தை அநேகமாக எல்லோரும் ஏற்கக்கூடியதைக் கொண்டு வரக் கருதுகிறது. ஆனால் இது சீர்திருத்தவாத பண்பைக் கொண்டிருப்பினும், இதனை SWP ஒரு சோசலிச திட்டமாக முன்னெடுப்பதுடன், மற்றவர்களோடு, திரைப்பட இயக்குனர் கென் லோச்சின் ஆதரவையும் பெற்றுள்ளது. ஆனால், இது தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் காலேவேயைப் பெயரளவுத் தலைவராக ஏற்றுள்ளது; அவருடைய முன்னோக்கு இந்தக் குறுகிய திட்டத்தையும் வெளிப்படையாகவே எதிர்ப்பதாகும்.

காலோவே, பிளேயர் ஈராக்கிற்கெதிராகப் போர்தொடுப்பதை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் ஆவார்; ஆனால் அவருடைய வரலாறு அரேபிய முதலாளித்துவத்துடன் சந்தர்ப்பவாத உறவுகளைக் கொண்டிருக்கிறது; 33 ஆண்டுகளாக தொழிற் கட்சிக்கு அரசியல் விசுவாசத்தையும் கொண்டது. "பிரிட்டன் வெவ்வேறு திசைகளில்" என்ற தலைப்பில் லோச்சும் காலோவேயும் உரையாற்றிய, ஷெப்பீல்டில் நடந்த கூட்டத்திற்கு நான் ஒரு முறை சென்றிருந்தேன்.

லோச், பெயரளவிற்குப் புரட்சிக் குழுக்கள் எனக் கூறிக்கொள்ளும் அமைப்புக்கள் கலந்து கொண்டு தொழிற்பட அனுமதிக்கப்படும் வகையில், அடிப்படையில் சீர்திருத்தக் கட்சியின் முன்னோக்கை முன்னெடுத்து, அதில் காலோவே போன்றவர்களும் பல இடது தொழிற்சங்கத் தலைவர்களும் தலைமையிடம் பெறுவர் எனக்கூறினார்.

அவருடைய ஒரு முன்மொழிவு, கட்சியானது தொழிலாளர்கள் நலனும் வர்த்தகத்தின் நலனும் இயைந்து செயல்படாதென்பதை உணரவேண்டும் என்பதாகும்; இதுதான் தொழிற் கட்சியின் தோல்விக்கு காரணம் என்றும் அவர் வாதிட்டார். முதலாளித்துவ தேசிய அரசின் அரசியல் கட்டமைப்புக்குள்ளே செயல்படுவதற்கெதிராக, சர்வதேச அளவில், தொழிலாள வர்க்கம் புரட்சிகரமாக அணிதிரட்டப்படவேண்டிய அடிப்படையின் தேவையைப் பற்றி அவர் ஏதும் கூறவில்லை. லோச் அவருடைய வழக்கப்படி, தொழிலாள வர்க்கத்தின் இன்றியமையாத அமைப்பாகத் தொழிற்சங்கங்களைப் புகழ்ந்து எந்தப் புதிய கட்சிக்கும் அது இயல்பான அடிப்படையாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

இதுகூட காலோவேயினால் நிராகரிக்கப்பட்டது. லோச் போலில்லாமல், அங்கு கூடியிருந்தவர்களிடம் அவர் ஒரு மார்க்சிசக் கட்சியோ, லெனினிச கட்சியோ அல்லது ஒரு சோசலிச கட்சியோ கூட தேவையில்லை என்று கூறினார். இவர் ஒரு சோசலிஸ்டாகத்தான் இருந்ததாகவும், மில்லியன் கணக்கில் சோசலிசத்தில் இல்லாதவர்களை, முஸ்லீம்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய டோரிகள் என்று அனைவரையும் ஈர்க்க விரும்பினார். தன்னுடைய புதுக்கட்சிக்கு தொழிற்கட்சி ஆதரவாளர்கள் ஜூன் 10 தேர்தலில் ஆதரவு கொடுத்து, மறுநாளே பிளேயரின் கட்சிக்குத் திரும்பினாலும் கூட, தாம் பெரிதும் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்- என்ன சாதிக்கப்பட முடியும் என்பது அவரால் நிரூபிக்க முடிந்தது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தற்கு பிரதிநிதித்துவம் பெறத் தேவையான வெறும் 10 சதவிகித வாக்குகளை மட்டும் தான் விரும்பவில்லை என்று கூறினார். அவர், "அதிகாரம்" வேண்டும் என்றார், அதுவும் அடுத்த ஆண்டு ஜூன் 10க்குள், அதற்குக் குறைவானது தேவை அல்ல! என்றார்.

ஓர் அரசியல் சந்தர்ப்பவாதி அவசரப்படுவதைவிடப் பார்க்கச் சகியாத, அருவருக்கத்தக்க காட்சி ஏதுமில்லை. காலோவேயும் SWP உடைய திட்டமும், அனைத்துவிதமான சொல் அலங்காரங்களையும் ஒரு சோசலிச கட்சி அமைப்பதற்குத் தேவையான படிக்கட்டிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் அவையெல்லாம் சோசலிச முன்னோக்குக்கு அவற்றின் எதிர்ப்பை விளக்குகின்றன. தீவிரப்போக்கினரின் பங்கு இந்த உண்மையை மறைத்து, இழிவிற்கு ஆட்பட்டுவிட்ட, மிக மிகச் சிறிய பழைய தொழிலாளர் அதிகாரத்துவத்திற்கு ஒரு இடது போர்வையை வழங்கி, அதாவது ஓர் அரசியல் கருவியை ஏற்படுத்தி, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொறி வைப்பதாக இருக்கிறது.

தனக்கு வரக்கூடிய ஒரே அரசியல் சவால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்துதான் என்பது காலேவோவிற்குத் தெரியும். சமீபத்தில் லீட்ஸில் நடந்த கூட்டம் ஓன்றில், நாங்கள், கூட்டத்திலிருந்தவர்களுக்கு, பப்லோவாதத்திற்கெதிரான போராட்டத்தின் முக்கியத்துவத்தை சுருக்கமாக விளக்கிய ஒரு துண்டுப்பிரசுரத்தை வழங்கினோம். வேறுவிதமான கட்சியை அமைப்பதற்குத் தன்னுடைய அறைகூவலுக்கு இதையே மையப் பொருளாக காலேவே எடுத்துக் கொண்டுவிட்டார்.

தான் இந்த பிரசுரத்தைப் படித்துவிட்டதாகவும், "சிலர் தனித்த சிறிய குழுக்களில் இருப்பதை விரும்புவதாகவும், தொலைபேசிக் கூண்டிற்குள் இருக்கும் தூய தன்மையில் நடத்தப்படும் கூட்டத்தைச் சிலர் விரும்புவதாகவும்" தான் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு மாறாக, "மில்லியன் கணக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளின் நிகழ்ச்சிகளினால் தீவிரமயாமாக்கப்பட்டுள்ளவர்களை அரசியல் மயமாக்கும் முயற்சியில்", "ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவான, ஆனால் மிக முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பெற்றுள்ள" உடன்பாட்டிற்குத் தான் பாடுபடப்போவதாக அறிவித்தார்.

"1953ல் பப்லோவாதம் கனனால் கண்டனத்திற்கு ஆளானது போன்ற பிரச்சினைகள், இந்த துண்டுப்பிரசுரங்களுள் ஒன்றில் இப்பொழுது நான் படித்தது, அல்லது மாற்று கருத்தியல் ரீதியான அல்லது இறையியல் ரீதியான அல்லது மனோதத்துவ ரீதியான வேறுபாடுகள், இவையெல்லாம் மிக முக்கியமான சில விஷயங்களுக்கு ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையில் அவற்றுக்கு வெளியில் இருக்கின்றன, அவற்றை இப்பொழுது ஒதுக்கிவைத்துவிட்டு பார்க்க உடன்படுவோமேயானால், கனனோ அல்லது பப்லோவாதமோ அல்லது வேறு ஏதேனும் சிறுபான்மைப் பிரச்சினையோ, இவையெல்லாம் நாளடைவில் மற்றவர்களுடனான தொடர்பில், அவர்களுக்கு நம் கண்ணோட்டம் பற்றித் தெளிவாக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தால், நாம் அந்த வழியில் அதை அணுகினால் பெரிய மக்கள் இயக்கத்தை அமைக்கமுடியும் என நான் நம்புகின்றேன்."

அவர் புதிய கட்சிக்குத் தேவையான மூன்று முக்கிய தளங்களைப்பற்றிப் பேசினார்: போர், ஆக்கிரமிப்பு இவற்றிற்கு எதிர்ப்பு, தொழிற்சங்க அமைப்புக்களுக்கு எதிரான சட்டங்களைக் கைவிடுதல், அரசாங்க ஓய்வூதியத்திற்கும் வருமானத்திற்கும் இடையேயிருந்த தொடர்பை மீட்டல் என்பவையே அவை.

இத்தகைய கோரிக்கைகளோடு எவர் உடன்பட முடியாது? "தூய்மையை" நாம் பின்பற்றுவதில் அத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளில் இருந்து நம்பிக்கையற்று கழன்று கொண்டுவிடுவதாக நம்மை காலோவே சித்தரித்துக்காட்ட முயற்சித்த போதிலும், நிச்சயமாய் சோசலிச சமத்துவக் கட்சி அக்கோரிக்கைக்கு எதிரானது அல்ல.

போருக்கெதிரான சக்திகள், முதலாளித்துவத்தின் கொள்ளையை எதிர்க்கும் சக்திகள் எல்லாவற்றுடனும் ஒன்றிணைய, நாங்கள் விரும்புகிறோம். ஆனால், இதற்காக வரலாற்றளவிலும், அரசியலளவிலும் மறதிநோய்வாய்ப்பட்டு, காலோவே முன்வைக்கும் முன்னோக்கை ஏற்கவேண்டும் என்பது இல்லை.

எந்தத் தவறுக்கும் இடமளிக்காதீர்கள். இவர் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒற்றுமைக்கு அழைப்பு விடவில்லை; அவற்றை, தன்னுடைய ஆதிக்கத்திற்குட்பட்ட போரெதிர்ப்பு இயக்கத்திற்காக கைவிடச் சொல்லுகிறார். சோசலிசத்திற்கெதிராக ஆள்சேர்ப்புப்பணியின் தீவிரத்தை நிறுத்திவைக்கும் விருப்பமும் கிடையாது, முதலாளித்துவ ஆதரவு முன்னோக்கை ஒதுக்குவதற்கு விருப்பமும் அவருக்குக் கிடையாது.

அவருடைய புதிய கட்சியை, அக்டோபர்29ம் தேதி, லண்டனின் Friend's Meeting House-ல் ஆரம்பித்த கூட்டத்தில், SWP யின் நாணத்தைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காகவேனும், சோசலிசத்தின்பால் தான் கொண்டுள்ள விரோதப் போக்கை மறைக்க எந்த முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை.

ஏகாதிபத்தியத்திற்கெதிரான அவருடைய எதிர்ப்பு, "என்னுடைய தீவுகளின்பாலுள்ள ஆழ்ந்த நாட்டுப்பற்றிலிருந்து வெளிவருகிறது" என்று அவர் அறிவித்தார். "இறைமை மக்களிடம் உறைந்திருப்பதாகவும், 1688ன் ஆங்கிலப் புரட்சியின் பணி இன்னும் முடியாமல்தான் இருப்பதாக தான் கருதுவதாகவும்" அவர் நம்பிக்கை தெரிவித்தார்; "அரசு மக்களுடைய வேலையாளாக இருக்கவேண்டும், வெளிப்படையாவும், பொறுப்புக்கூறவும் வேண்டும்" என்பதோடு, "இன்றைய அரசியல் அரசின் ஒழுக்கநெறி, சட்டமுறைமைநெறி இவற்றின் பிரச்சினைக்கு வந்துவிட முடியும்" என்றும் குறிப்பிட்டார்.

மீண்டும் மீண்டும், அவர் தன்னை "மரபு வழியிலான பிரிட்டிஷ் சோசலிசத்தில்" நம்பிக்கையுடைய ஒரு "ஜனநாயக சோசலிஸ்ட்" என்று அறிவித்துக்கொண்டார்.

"என்னுடைய சோசலிசம் 'இரத்தக்களரியான புரட்சியாளர்களுடையதோ' அல்லது வெளிநாட்டுச் சிந்தனையின் இறக்குமதியோ அல்ல, அது இந்த நாட்டில் வேரூன்றியது." என அவர் பிரகடனப்படுத்தினார்.

புதிய தொழிற்கட்சி "தன்னுடைய தன்மைகளான தேசியப்பணிமுறைகளை, ஆர்வமிகுந்த தேசிய ஜனநாயக மரபுகளை வெளிநாட்டு ஆளும் செல்வந்த தட்டின் வெளிறிவிட்ட பூகோள பதிப்பான இளஞ்சிகப்பு நுகர்விற்காக இழந்து விட்டது".

இதைவிடத் தெளிவாக காலோவே கூறியிருக்கமுடியாது. இவர் மார்க்சிசத்திற்கு, அது "வெளிநாட்டு இறக்குமதியென்பதால்" விரோதி என்பதோடு, "வெளிநாட்டு செல்வந்த தட்டின்" நலன்களுக்கு அவை பணிபுரிகின்றன என்பதால் புதிய தொழிற்கட்சிக்கு விரோதியாகவும், தொழிற்கட்சி சீர்திருத்தவாதம் முழுவதற்கும் பாதுகாவலராகவும் இருக்கிறார்.

"அடிமட்ட தீவிரப்போக்கினர் தத்தி நடந்து அரசை கைப்பற்றி, அதை மக்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, இதுவரை முற்றுப்பெறாத முற்போக்கு ஜனநாயகப் புரட்சியைக் கொண்டுவரும்" மற்றும் "இது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், சோசலிஸ்டுகள், தாராளவாதக் கொள்கையுடையவர்கள், இருப்பதுபோதும் என்று நினைப்பவர்கள், ஆண்கள், பெண்கள், வெவ்வேறு குறையுடையவர்கள் அனைவரையும் ஜனநாயக விடுதலை என்ற ஓர் இயக்கத்திற்குள் ஐக்கியப்படுத்தும்" கட்சி என இவர் அழைக்கும் ஒரு கட்சியை, அவருடைய தீவிர ஒத்துழைப்பாளர்கள் ஏற்கவேண்டும் என்று கோருகிறார்.

உண்மை, SWP உம் அத்தகைய போரெதிர்ப்புக் கட்சி கருத்தை ஆதரிக்கும் மற்றவர்களும், காலோவேயுடைய கருத்து ஒரு தனிமனிதனின் கருத்து என்றும் திட்டமிடப்படும் போரெதிர்ப்புக் கட்சியின் பின் உள்ள சிந்தனையை இதற்காக இழிவுபடுத்தக் கூடாதென்றும் வாதிடலாம். உண்மையில், காலோவேயின் பார்வைதான், போரெதிர்ப்புக் கட்சியின் போக்கையும் அதன் அரசியல் தன்மையையும், இச்செயல்திட்டத்தைக் கொண்டுவருவதற்காக எப்பொழுதாவது பயன்படுத்தப்படும் சோசலிசச் சொற்றொடர்களைவிட, அதிகமாக வடிவமைக்கும்.

காலோவேயின் கோரிக்கைகளை SWP ஏற்கும்; ஏனென்றால், இவருக்குப் புதிய வீடு வசதியற்றது என்று தோன்றாமல் இருந்தால் அது அவரை தொழிற்கட்சியிடமிருந்து வென்றெடுக்கப்படக் கூடிய எண்ணிறைந்த சாத்தியமான பெரிய பெயர்களில் முதலாவதாக வைத்திருக்கக்கூடும் என்ற நோக்கத்தில் உள்ளது. அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவுடனான இந்த உடன்பாட்டிற்காக, இதனால் தொழிற்சங்க அரசியல் வரியிலிருந்து ஒரு பங்கு என்ற முறையில் அது கொண்டுவர இருக்கும் பணமும் ஒருபுறம் கருத்திற் கொள்ளப்படவேண்டும்; தொழிலாள வர்க்கம், மீண்டும் உண்மையான சோசலிச கட்சி அமைப்பதற்காகக் கட்டாயம் காத்திருக்க வேண்டும். சுருக்கமாக, பழைய சீர்திருத்தவாதக் கட்சிகளின் அதிகாரத்துவங்களின் சரிவிற்கு தீவிரவாதக் குழுக்களுடைய பதில், அவர்களை அகற்றுவதை நாடாமல், கடையில் கசங்கிய துணிபோன்ற காலோவேக்கள் மற்றும் காலத்தே சேவைசெய்யும் சோசலிசத்தின் எதிரிகள் போன்றாரின் புகழை உயர்த்துவதன் மூலம், அவர்களின் அதிகாரத்தையே மீண்டும் கட்டியமைக்கும் வகையில் செயல்படுவதாக இருக்கிறது.

முற்றுப்பெறாத ஜனநாயகப் புரட்சிகளைப்பற்றிய தீப்பொறி பறக்கும் சொல் அலங்காரங்கள் ஒருபுறமிருக்க, அத்தகைய கட்சி ஒரு குறைப்பிரசவம் போன்றது ஆகும்; சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்கட்சி ஆரம்பித்த தரத்தை விட தாழ்ந்த அரசியல் மட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது காலோவே, மற்றும் அவருடைய நண்பர்களின் அரசியல் வாழ்வின் முன்னேற்றத்தைவிட வேறு எதையும் முன்னேற்றுவிக்காது.

சோசலிசமும் ஜனநாயகத்தின் தலைவிதியும்

தொழிலாள வர்க்கம், உண்மையில் ஜனநாயகத்திற்காகப் போராடவேண்டும் என்பது மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்கள் அரசியல் உரிமை இழப்பதை எதிர்த்தும் போராடவேண்டும். ஆனால் இதைத் தன்னுடைய வழியில் செய்யவேண்டுமே அன்றி, டோரிகளுடைய தாராளப்பிரிவு என்ற கற்பனையின், அச்சுறுத்தலில்லாத, ஏற்கத்தக்க நண்பன் என்ற முறையிலோ, பிரிட்டனின் முஸ்லீம் சங்கம், அணுவாயுதக் கலைப்பு போராட்ட குழு போன்றவற்றின் துணைக் குழுவாக மாறிச் செயல்படக்கூடாது!

19ம் நூற்றாண்டின் இறுதியில், ரோசலுக்சம்பேர்க், "உலகச் சந்தையின் மீதான போட்டியின், பொதுநிலை மற்றும் சினமூட்டுதல்" இவற்றின் ஆதிக்கம் கொண்ட அரசியல் சகாப்தத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதையொட்டி தவிர்க்க முடியாதவகையில் இராணுவ வாதமும், வர்க்கப் போராட்டத்தின் தீவிரமும் வரும் என கூறினார். இதன் அர்த்தமானது, "முதலாளித்துவ ஜனநாயகம் தர்க்க ரீதியாக கீழிறங்கிச் செல்லும் என்பதுதான்."

"சோசலிச இயக்கம் முதலாளித்துவ ஜனநாயகத்தோடு பிணைந்து இராது, மாறாக, ஜனநாயகத்தின் தலைவிதி சோசலிச இயக்கத்துடன்தான் பிணைந்து இருக்கும்.... ஜனநாயகத்தை வலுப்படுத்த விழைவோர், சோசலிச இயக்கத்தை வலுப்படுத்த நினைக்க வேண்டுமே ஒழிய, வலுவிழக்கச் செய்யவேண்டும் என்று கருதக்கூடாது. சோசலிசத்தை துறப்பவர்கள், தொழிலாளர் இயக்கத்தையும், ஜனநாயகத்தையும் துறக்கின்றனர்" என்று அவர் முடிவாகக் கூறினார்.

இந்த வாதமும், மார்க்சிசத்தின் முழு தத்துவார்த்த பாரம்பரியமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன; இது தொழிலாளர்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும், இளைஞர்களுக்கும் எடுத்துக் கூறப்படவேண்டும்; அவர்களால் இக்கருத்துக்கள் செயல்படுத்தப்பட வேண்டும். கடந்த காலத்தின் படிப்பினைகளைக் கற்கவேண்டும், அந்த அடிப்படையில் எத்தகைய கட்சியை உருவாக்குவது தேவைப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை ஆகும்.

நாங்கள் ஒற்றுமையை அந்த அடிப்படையில்தான் விழைகிறோம். முதலாளித்துவத்துக்கு ஒரு புரட்சிகரமான மாற்றீடு தேவை என தேடுபவர்கள் எங்கள் மரபிலிருந்து மட்டும்தான் வரமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்; ஒரு பொதுப்போராட்டத்திற்கு முன் நிபந்தனையாக நாங்கள் எல்லாவற்றிலும் அந்த முன் உடன்பாட்டை கோரமாட்டோம். ஆனால், நாங்கள் எங்களுடைய அரிய மரபியத்தை, வெறும் குறைந்த நேரம் உயிர்வாழும் தற்காலிக ஆரம்ப வெற்றிகளுக்காக துறக்கத் தயாராக இல்லை.

மாறாக, எங்கள் இயக்கம் ஸ்ரானிசத்திற்கு எதிராகவும், சமூக ஜனநாயகத்திற்கு எதிராகவும், முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிராகவும் நடத்திய வரலாற்றுப் போராட்டம்தான், சர்வதேச தொழிலாளர் இயக்கத்தை அரசியல் ரீதியாக மறுஆயுதபாணியாக்க ஒரே அடிப்படை என வலியுறுத்துகின்றோம். இந்த நிலைப்பாடானது, எங்களை தனிமைப்படுத்தாது என நம்புவதோடு, முன்னேறிய தொழிலாளர்களினதும் இளைஞர்களினதும் கண்களில் எங்களுடைய கட்சிதான் அவர்களுக்கான கட்சியென்று உறுதிப்படுத்தும் என்பதில் நம்பிக்கையாய் உள்ளோம்.

See Also :

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மத்தியில் டேவிட் நோர்த் உரை

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 50 ஆண்டுகள் பற்றிய கூட்டங்கள்
பீற்றர் சுவார்ட்ஸ்: "அடிப்படைக் கோட்பாடுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன"

 

Top of page