World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Suicide bomb blast in Sri Lanka threatens ceasefire

இலங்கையில் தற்கொலை குண்டுவெடிப்பு யுத்த நிறுத்தத்தை அச்சுறுத்துகிறது

By K. Ratnayake
9 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கைத் தலைநகர் கொழும்பின் மையப்பகுதியில் கடந்த புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் நாட்டின் வலுவற்ற யுத்த நிறுத்தத்திற்கு மேலும் குழிபறித்துள்ளது. இந்த தாக்குதலின் இலக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் விவசாய, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவாகும் என பெரும்பாலும் நம்பப்படுகிறது.

பொலிசாரின் கருத்தின்படி, அமைச்சரை பொதுமக்கள் சந்திக்கும் நாளான புதன் கிழமை, அரசாங்க அலுவலகத்திற்கு வந்த ஒரு தமிழ் பெண் தேவானந்தாவுடன் பேச வேண்டும் எனக் கூறினார். சந்தேகப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குண்டுதாரியை சரீர பரிசோதனைக்கு அழைத்தனர். அவர் மறுத்தபோது அவரை அருகில் உள்ள கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் பரிசோதனைக்கு கட்டுப்பட மறுத்த அவர் குண்டை வெடிக்கச் செய்து தன்னை மாய்த்துக்கொண்டார். மேலும் நான்கு பொலிசார் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். குறைந்த பட்சம் 12 பேர் காயமடைந்தனர்.

இது, 2001 அக்டோபரின் பின்னர் கொழும்பில் நடந்த முதலாவது தற்கொலை குண்டுத்தாக்குதலாகும். அத்துடன் இது ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்தத்தை கடுமையாக மீறுவதாக அமையும். இதற்கு முன்னரும் விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள போதிலும், குறிப்பிட்ட தாக்குதல்களுக்கு பகிரங்கமாக பொறுப்பேற்றதில்லை.

இந்த விடயத்தில், விடுதலைப் புலிகள் இந்த தாக்குதலை "கடுமையாக கண்டனம் செய்து" வியாழக் கிழமை ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட்டனர். இந்த சம்பவத்தில் எந்தவொரு தலையீட்டையும் நிராகரித்த விடுதலைப் புலிகள், இந்த குண்டுத் தாக்குதல் "சமாதான முயற்சிகளை குழப்புவதற்காக செயற்படும் சில சக்திகளின் நடவடிக்கையாகும்" என குற்றஞ் சாட்டியது.

அந்த அறிக்கை, கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற குழுவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பாகும் என மறைமுகமாக சுட்டிக்காட்டியதோடு, அவர்களோடு கூட்டு வைத்திருப்பதாக அரசாங்கத்தையும் இராணுவத்தையும் குற்றஞ் சாட்டியது. "இந்த குழுக்களுக்கு புகலிடமும் மற்றும் அவர்களுக்கு கொழும்பில் சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் கொழும்பில் நடந்த நேற்றைய தாக்குதலுக்கு வழிசமைத்தது என நாம் சந்தேகிக்கின்றோம்," என அது பிரகடனம் செய்துள்ளது.

எவ்வாறெனினும், கருணா குழு சம்பந்தப்பட்டுள்ளது என்பது மிகவும் நிகழ்தற்கரியதாகும். தேவானந்தா, கருணாவின் அரசியல் எதிரியாக இருப்பதற்கு பதிலாக, இந்த கிளர்ச்சித் தலைவரின் குழுவை ஒரு அரசியல் கட்சியாக மாற்றுவது பற்றி அண்மையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார். இந்த அமைச்சர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தின் பக்கம் சார்ந்து போராடிய ஈழமக்கள் ஜனாநயக கட்சியின் (ஈ.பி.டீ.பி) தலைவராவார்.

கருணாவுடனான கொடுக்கல் வாங்கல்களையிட்டும் மற்றும் கிழக்கில் அதன் காரியாளர்கள் கொல்லப்படுவதை நிறுத்துமாறு அரசாங்கத்துக்கும் இராணுவத்திற்கும் விடுக்கும் வெளிப்படையான எச்சரிக்கையாகவே விடுதலைப் புலிகள் இந்த தற்கொலை தாக்குதலை திட்டமிட்டதாக தோன்றுகிறது.

கடந்த மார்ச் மாதம், வன்னியை தளமாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் வடக்கு தலைமைத்துவம் யுத்த நிறுத்தத்தின் பயன்களில் ஏகபோக உரிமைகொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய விடுதலைப் புலிகளின் கிழக்கு இராணுவ தளபதியாக இருந்த கருணா, அதிலிருந்து பிரிந்து சென்றார். விடுதலைப் புலிகள், ஏப்ரல் நடுப்பகுதியில் மட்டக்களப்பு- அம்பாறை பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றிய போதிலும், கடந்த இரண்டு மாதங்களாக ஒரு தொகை படுகொலைகளுடன் இந்த இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

கிழக்கில் தமது நிலைமையை கீழறுக்கவும், தமது போராளிகள் மற்றும் அலுவலர்களை படுகொலை செய்யவும் கருணா குழுவை பயன்படுத்திக்கொண்டிருப்பதாக விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தை குற்றம் சாட்டுகின்றனர். இராணுவமும் அரசாங்கமும் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த போதிலும், கடந்த இரு வாரங்களாக வெளியான ஒரு தொகை விடயங்கள், கருணா கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்ததையும் இராணுவ புலனாய்வுத் துறை பாதுகாப்பு இல்லத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததையும் அம்பலப்படுத்தியுள்ளன.

இந்த அம்பலப்படுத்தல்கள் எந்தளவுக்கு இழிவு ஏற்படுத்திய என்றால், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அதிகாரம் அளித்திருக்கவில்லை என ஒரு மறுப்பு அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக வெளியிடத் தள்ளப்பட்டார். ஆயினும் அவர், இராணுவம் அல்லது அதன் ஒரு பகுதி கருணா குழுவுக்கு உதவுவதில் ஈடுபட்டிருந்தது என்ற விடுதலைப் புலிகளின் குற்றச்சாட்டுடன் முரண்படவில்லை.

குமாரதுங்கவின் அறிக்கை வெளிவந்த பின்னர், உடனடியாக மட்டக்களப்பு நகரில் இரண்டுக்கும் மேற்பட்ட கடும் தாக்குதல்கள் நடைபெற்றன. திங்களன்று, விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் தலைவர் சேனாதியும் அவரது தோழனும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தனர். அதேதினம் நடந்த வேறு ஒரு சம்பவத்தில், வாசு என்றழைக்கப்படும் இன்னுமொரு விடுதலைப் புலி காரியாளர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவர் உடனிருந்தவர் காயமடைந்தார். இரு தாக்குதல்களும் இராணுவ கட்டுப்பாட்டிலான பிரதேசத்திலேயே நடைபெற்றுள்ளன.

இதன் பிரதிபலிப்பாக, விடுதலைப் புலிகள் ஆவேசமாக வெளியிட்டிருந்த அறிக்கையில்: "இந்தக் கொலைகள், பாதுகாப்பு படைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை) கீழறுக்க விரும்புவது தெளிவாக சுட்டிக்காட்டப்படுவதோடு, அவர்கள் யுத்தத்திற்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றார்கள்," என பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. தற்கொலைக் குண்டுதாரி, மிக சக்திவாய்ந்த எல்லா சாத்தியமான பக்கங்களிலும் எச்சரிக்கையை வெளிப்படுத்த, கொழும்பில் உள்ள கருணாவின் மிக நெருக்கமான அரசியல் ஒத்துழைப்பாளரை இலக்கு வைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

கொழும்பில் பிரதிபலிப்புகள்

குமாரதுங்க குண்டுத் தாக்குதலை மூடிமறைத்தார். அரசாங்க கட்டுப்பாட்டிலான சுயாதீன தொலைக்காட்சி சேவையில் பேசும்போது, ஏப்பிரல் 2 தேர்தலில் வெற்றி பெற்றது முதல் தனது அரசாங்கம் நிறைவேற்றியவற்றை பட்டியலிட்ட அவர், பின்னர்: "சமாதான முன்னெடுப்புகள் பெரும் விரிவாக்கத்துக்குள் இடப்பட்டுள்ளது. இத்தகைய சிறு சம்பவங்களால் (குண்டு வெடிப்பு) அதை தடம்புரளச் செய்யமுடியாது," என தெரிவித்தார்.

சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதான பங்காளியான, சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரதிபலிப்பு மெளனம் காப்பதாக இருந்தது. ஜே.வி.பி பேச்சாளரான விமல் வீரவன்ச, இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களை மீண்டும் தொடங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் தடங்கல் ஏற்படுத்தாது என ஊடகங்களுக்கு தெரிவித்தார். அது ஒரு தனிப்பட்டவரை இலக்காகக் கொண்டது. அது சமாதான முன்னெடுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்த காரணங்கள் இல்லை, எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் எச்சரிக்கையுடையதாக இருந்தாலும், கொழும்பில் உள்ள அரசியல் நிறுவனம், நாடு யுத்தத்திற்கு மீண்டும் திரும்பும் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்பதை நன்கு அறியும். கருணா குழுவால் தமது போராளிகளும் காரியாளர்களும் வரையறையற்று கொல்லப்படுவதை விடுதலைப் புலிகளால் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. கிழக்கில் இராணுவத்தின் சதி வேலைகளில் குமாரதுங்க தனிப்பட்ட முறையில் தலையீடு செய்திருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, தற்போதைய நெருக்கடியை உருவாக்கி விட்டதற்கு அவர் நேரடி பொறுப்பாளியாகும்.

ஏப்பிரல் 2 தேர்தலுக்கு முன்னதாக, குமாரதுங்க சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிராக ஒரு நீண்ட பிரச்சாரத்தை குவித்தார். அவர், ஜே.வி.பி மற்றும் ஏனைய சிங்கள தீவிரவாத கும்பல்களுடன் சேர்ந்து, தேசிய பாதுகாப்பை ஆபத்துக்குள் தள்ளுவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு அளவுக்கு மிஞ்சிய சலுகைகள் வழங்குவதாகவும் முன்னைய ஐ.தே.மு அரசாங்கத்தை குற்றம்சாட்டினார். அவர், யுத்த நிறுத்தம் சட்டவிரோதமானது என பிரகடனம் செய்ததோடு, சமாதான பேச்சுக்களுக்கு குழி பறிப்பதற்காக இராணுவத்துடன் கூட்டாக செயற்பட்டார்.

தேர்தலுக்கு பின்னர், யுத்த நிறுத்தத்தை பேணுவதற்கும் மற்றும் பேச்சுக்களை மீண்டும் தொடங்கவும் பெரும் வல்லரசுகள் மற்றும் பெரு வர்த்தகர்களது அழுத்தத்திற்கு சுத்நதிர முன்னணி அரசாங்கம் உடனடியாக முகம்கொடுத்தது. யுத்தத்தை நோக்கி மீண்டும் திரும்புவதானது, ஏற்கனவே வரம்பு மீறியுள்ள நாட்டின் பொருளாதார நெருக்கடியில் கடுமையான உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தும். குமாரதுங்க தலைகீழாக மாறி, சமாதான பேச்சுக்களுக்கு மீண்டும் மத்தியஸ்தம் வகிப்பதற்காக நோர்வே நாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

எவ்வாறெனினும், ஐ.தே.மு மீதான குமாரதுங்கவின் தாக்குதல்கள் நிச்சயமான அரசியல் தாக்கத்தை கொண்டுள்ளன. சமாதான பேச்சுவார்த்தைகள் பற்றிய அவரது கண்டனங்கள், விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு பேச்சுவார்த்தை மூலமான தீர்வையும் அரச துரோகமாக கருதும், பலவித சிங்கள தீவிரவாத குழுக்களையும் மற்றும் இராணுவத்தின் சில பிரிவுகளையும் உற்சாகமூட்டி துணிவுகொள்ளச் செய்துள்ளது. நாட்டை மீண்டும் யுத்தத்துக்குள் தள்ளிவிட அச்சுறுத்தும் கொழும்பில் நடைபெற்ற அண்மைய குண்டுத்தாக்குதல்களை தூண்டிவிட்டதும் அவர்களின் கிழக்கு சதிதிட்டங்களேயாகும்.

Top of page