World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Lessons of the European elections

ஐரோப்பிய யூனியன் தேர்தல் படிப்பினைகள்

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி

1 July 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜூன் 13ல் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் ஐயத்திற்கிடமின்றி ஒரு செய்தியை விநியோகித்துள்ளது: மிகப்பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ஐரோப்பிய ஒன்றியமும், ஐரோப்பிய அரசாங்கங்களும் பின்பற்றிவரும் போக்கை கூர்மையாக புறக்கணித்திருக்கின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமான ஐரோப்பாவின் அரசியலமைப்பு செயற்திட்டமாக உள்ள சுதந்திர-சந்தை பொருளாதார கொள்கைகள், நலன்புரி வெட்டுக்கள் மற்றும் இராணுவ வாதத்திற்கு எதிரான மக்களது ஒட்டுமொத்தமான கருத்தை எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு பக்கம் பார்க்கையில் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 56 சதவீத வாக்காளர்கள், வாக்குப்பதிவிற்கு வராமல் தவிர்த்துள்ளனர், மற்றொரு பக்கம் வாக்குச்சீட்டை பயன்படுத்திய மக்கள் தற்போது அதிகாரத்திலுள்ள அரசாங்கங்களுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். டோனி பிளேயரின் தொழிற்கட்சி, ஷ்ரோடரின் சமூக ஜனநாயக கட்சி ஜாக் சிராக் மற்றும், ஜோன் பியர் ரஃப்ரனின் UMP, சில்வியோ பெர்லுஸ்கோனியின் Forza Italia மற்றும் போலந்தின் ஸ்ராலினிச அரசாங்கத்திற்கு பிந்திய கட்சிகள் ஆகியவை படுதோல்வியடைந்துள்ளன.

சில சந்தர்ப்பங்களில் வலதுசாரி பேரினவாதக் கட்சிகள் இந்தத் தோல்விகளிலில் இருந்து பயனடைய முடிந்திருக்கிறது என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த தேர்தல் முழுவதும் வலதுசாரி பக்கம் நோக்கிய திருப்பத்தை காட்டவில்லை. தேர்தல் முடிவுகள் சமூக சீர்திருத்தம் என்று அழைக்கப்படுபவர்களுக்கு கணிசமான எதிர்ப்பு நிலவுவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று எல்லா ஆய்வுகளுமே ஒப்புக்கொள்கின்றன---- குறிப்பாக இங்கிலாந்திலும், இத்தாலியிலும் ஈராக் போரில் பங்கெடுத்துக்கொண்டதற்கு எதிராக விளைவுகள் ஏற்பட்டுள்ளது. ஸ்பெனியில், மூன்று மாதங்களுக்கு முன்னர் போருக்கு ஆதரவு தெரிவித்ததற்காக பழமைவாத அரசாங்கம் வாக்குப் பதிவால் வெளியேற்றப்பட்டது, அந்த வியப்பூட்டும் வாக்குப்பதிவு முடிவை நாடாளுமன்ற தேர்தல் உறுதிசெய்திருக்கிறது.

ஓராண்டிற்கு முன்னர், ஜேர்மன் அரசாங்கம் தத்துவமேதை Juergen Habermas 2003 பெப்ரவரி 15 இல் ஒரு அறிக்கையில் வெளியிட்ட கருத்தை பல அறிவுஜீவிகள் ஆதரித்தனர். ''இது வரலாற்று நூல்களில் ஐரோப்பிய ஒன்றியம் பொதுவாழ்வை ஆரம்பித்த சம்பவத்தை பதிவு செய்யும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அன்றைய தினம், ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் ஈராக் போருக்கு எதிராக கண்டனப்பேரணிகளை நடத்தினர்.

இந்தப் பேரணிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தருவது என்று Habermas கருதினார். ''இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஐரோப்பா இரண்டு பிரச்சனைகளுக்கு முன் மாதிரி தீர்வுகளை கண்டிருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தேசிய அரசுகளுக்கு மேலும், அப்பாலும் ஆட்சி செலுத்தும் ஒரு முன்மாதிரி அரசாளும் வடிவத்தை உருவாக்கிவிட்டதுடன்'', ஒரு குறிப்பிட்டளவு கட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தின் எதிர்கால கொள்கைகூட பின்பற்ற தவறமுடியாத ஒரு வரையறையை ''ஐரோப்பிய நலன்புரி முறையை'' உருவாக்கிவிட்டது'' என்று அவர் கருத்துத்தெரிவித்திருந்தார்.

2004- ஜூன் 13 Habermas இன் கருத்தை மறுத்திருக்கிறது. அவரது சொந்த வார்த்தைகளிலேயே சொல்வதென்றால், இந்த தேர்தல் முடிவு ''ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்றுக்கொள்கின்ற ஐரோப்பிய பொதுக்கருத்து பிறந்ததை'' மட்டும் எடுத்துக்காட்டவில்லை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் எடுத்துக்காட்டியிருக்கிறது. ''ஐரோப்பிய நலன்புரி முறையை'' பாதுகாத்து நிற்பது மற்றும் இராணுவவாதம், போர் ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஐரோப்பிய அரசாங்கங்களையும், பிரஸ்ஸல்சிலுள்ள அதிகாரங்களையும் தவிர்க்கமுடியாதவாறு புறக்கணித்துள்ளனர்.

வெகுஜன மக்களிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலை பிரித்துவைக்கும் மிக ஆழமான இடைவெளியை இந்தத் தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் தேசிய நாடாளுமன்றத்திலும் மேலாதிக்கம் செலுத்தும் எந்தக் கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்த எந்த சமூக அடிதளமும் கொண்டவையாக இல்லை. ''மக்கள் கட்சிகள்'' என்று கூறப்படுபவை, தமது சொந்த தொழில்நலனை கொண்டவர்களினதும் மற்றும் அதிகாரத்துவ வாதிகளினதும் வெறும் கூடாகும். குறுகிய பொருளாதார செல்வந்த தட்டு நலனை அது பிரதிபலிக்கிறது, அவர்களது எதிர்காலம், வருமானம், வாழ்க்கைத்தரம், ஆகியவை சாதாரண பொதுமக்களிடமிருந்து பிரிந்து நின்று உயரே சென்றுகொண்டிருக்கிறது. அவர்கள் தங்களை சோசலிஸ்டுகள், சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள், பசுமைகள், தாராளவாதிகள் அல்லது பழமைவாதிகள் என்று எந்த பெயர்சொல்லி அழைத்துக்கொண்டாலும், அவர்களது கொள்கைகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை.

இந்தத் தேர்தல் முடிவிற்கு பின் அவர்களில் அனைவரும் விதிவிலக்கு எதுவுமில்லாமல் மேலும் வலது பக்கம் திரும்பியுள்ளனர். தேர்தலில் தோல்வியடைந்த ஷ்ரோடர், பிளேயர் மற்றும் ரஃப்ரன் வாக்காளர்களுக்கு எந்த சலுகையும் காட்டப்போவதில்லை என்றும், தங்களது கொள்கைகளை தொடர்ந்து கடைபிடிக்கப்போவதாகவும் கூறியுள்ளனர். போலந்து, ஜேர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் எதிர்கட்சிகள் சக்திவாய்ந்த நிலைக்கு இந்த தேர்தல் மூலம் வந்திருந்தாலும் அதே நடவடிக்கைகளை மிக வேகமாக கடைபிடிக்கப்போவதாக கூறியுள்ளனர்.

சில நாடுகளில் தீவிர வலதுசாரி கட்சிகள் சமூக வாய்வீச்சால், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தங்களது சொந்த நலனுக்காக முழு அரசியல் அமைப்பினையும் வலதுசாரிப்பக்கம் நகர்த்துகின்ற பங்களிப்பை செய்து வருகின்றன.

அவர்களுக்கு பின்பலமாக செல்வாக்குமிக்க பிரிவான செல்வந்த தட்டு, அதாவது மிகப்பெரும் பணக்கார தனிநபர்கள் இருக்கின்றனர். எனவே வாக்காளர்களின் எதிர்ப்புக்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் அத்தகைய கட்சிகள் மிகவும் ஸ்திரமற்ற நிலையில் சென்றுகொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நெதர்லாந்தில் 2002 தேர்தல் வியப்பளிக்கும் வகையில் வெற்றிபெற்ற பின்னர் Pim Fortuyn List சிதைந்துவிட்டது, ஆஸ்திரியாவில் Jörg Haider சுதந்திரக்கட்சி சென்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களுக்குப் பின்னர் தனது வாக்குகளில் 75% இழந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் இனவெறியையும், சட்டம் ஒழுங்கு அரசியலையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக மாறி, நலன்புரி கொள்கைகள் மீது கடும் தாக்குதல்களை தொடுத்து வருவதையும் தம்முடன் சேர்த்துக்கொண்டன. இதுபோன்ற கட்சிகள் மேற்கொள்ளும் தீவிர வலதுசாரி கொள்கைகளை நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளும் பின்பற்றுகின்றன.

இதே பங்களிப்பை பிரிட்டனில் சுதந்திரக் கட்சியும், பெல்ஜியத்தில் Vlaams Blok-ம் பிரான்சில் தேசிய முன்னணியும் போலந்தில் தீவிர-தேசியவாத கட்சிகளும் மேற்கொண்டுள்ளன. இவைகள் அனைத்தும் ஐரோப்பிய தேர்தல்களில் கருத்தில் கொள்ளத்தக்க வாக்குகளை பெற்றிருக்கின்றன. அதிகாரபூர்வமான தொழிலாளர் அமைப்புக்கள் தோல்வியடைந்துவிட்ட காரணத்தினால் அரசியல் சீரழிவு முற்றி கொண்டுவருவதைத்தான் அவர்களது வெற்றி எடுத்துக்காட்டுகிறது. தொழிலாள வர்க்கம் அரசியல் முன்முயற்சிகளை எடுக்க தவிர்ப்பதால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

அதிகாரபூர்வமான அரசியலுக்கும் வெகுஜன மக்களுக்கும் இடையில் நிலவுகின்ற ஆழமான இடைவெளி ஐரோப்பாவை வன்முறை வர்க்கப் போராட்டத்திற்கு கொண்டுசெல்கிறது. கூர்மையான சமூக முரண்பாடுகளால் அத்தகைய போராட்டங்கள் நடப்பது, முற்றிலும் தவிர்க்க முடியாதது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், ஆளும் குழுக்கள் இத்தகைய வெளிப்படையான வர்க்க மோதல்களை தவிர்ப்பதற்கு அல்லது தடுத்துநிறுத்துவதற்கு சமூக சலுகைகளை வழங்கியும் சீர்திருத்தவாத இயக்கங்கள் மூலமும் நடவடிக்கைகள் எடுத்தன. அவர்களது கொள்கைகள் மீதான எதிர்ப்பு காரணமாக பழமைவாத கட்சிகள் தோல்வியுற்றபின், அதன்பின் சமூக ஜனநாயகக் கட்சிகள் இந்த இடத்தை நிரப்ப முன்வந்தன. முழு அரசியலமைப்பு முறையையும் கேள்விக்குரியதாக்காமல், மாறிமாறி சமூக ஜனநாயகக் கட்சிகள் தோல்வியடைந்தபோது பழமைவாதிகள் அந்த இடத்திற்கு வந்தனர். கிழக்கு ஐரோப்பாவில், ஆளும் அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுதந்திரமான அரசியல் இயக்கத்தையும் அடக்கியது.

ஸ்ராலினிச ஆட்சிகள் வீழ்ச்சி, சமூக ஜனநாயகத்தின் சரிவு நாடாளுமன்ற அமைப்புக்கள் மற்றும் கட்சிகளின் ஆளுமையின் தோல்வி ஆகியவை ஐரோப்பிய தேர்தல்களில் ஒரு உயர்ந்த கட்டத்தை எட்டிவிட்டது, இதன் பொருள் என்னவென்றால் இதுபோன்ற அமைப்புக்கள் பெருமளவில் தற்போது பயனற்றவையாக ஆகிக்கொண்டு வருகின்றன. முதலாளித்துவ ஆட்சி ஆழமான நெருக்கடியில் உள்ளது.

தொலைநோக்குள்ள அரசியல் பார்வையாளர்கள் இதை ஒரளவிற்கு அங்கீகரித்திருக்கின்றனர். வாரச் செய்தி பத்திரிகையான Die Zeit ஜேர்மன் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சியினர், பெற்றிருக்கும் தோல்வி சமூக ஜனநாயகக் கட்சியில் நிலவுகின்ற நெருக்கடியை மட்டும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கவில்லை, ''கூட்டாட்சிக் குடியரசின் சட்டப்பூர்வமான தன்மையிலும், நெருக்கடி படர்ந்து கொண்டு வருவதை காட்டுவதாக'' எழுதியுள்ளது. வாக்காளர்களது அதிருப்தி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் தலைமையிலான அரசிற்கு எதிராகவும் திரும்பக்கூடும் என்று அந்தப் பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது. நாடு ''ஆட்சி செய்ய இயலாத'' அளவிற்கு மாறிவிடும் என்றும் கூறியுள்ளது.

அத்தகைய நெருக்கடியை சந்திப்பதற்கு முதலாளித்துவ வர்க்கம் திட்டமிட்டு அரசு சாதனங்களை உருவாக்கி வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நிலவுகின்ற கொந்தளிப்புக்கள் அதிகரித்துக்கொண்டு வந்தாலும் ஜனநாயக உரிமைகளை சிதைப்பது நாடுகடந்த போலீஸ்-அரசு அமைப்புக்களை உருவாக்குகின்ற நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாடு என்கிற பெயரால் பொதுமக்கள் அனைவரையும் கண்காணிக்கின்ற நடைமுறைகள் Orwell இன் 1984 என்ற நாவலை வெட்கப்பட வைத்துள்ளது. ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்'' பெயரால் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இன்றைய தினம் வெளிநாட்டவர் மற்றும் பயங்கரவாதிகள் என்று கூறப்படுவோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்க்ைகள் தேவைப்படும் போது நாளைக்கு எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்.

தொழிலாள வர்க்கம் செல்வாக்கை இழந்துவிட்ட சீர்த்திருத்த அமைப்புகளிலிருந்து வர்க்க மோதல்களால் தவிர்க்கமுடியாது பிரிந்தும், சமூக ஜனநாயக கட்சியிலிருந்தும் அமைப்புரீதியாக மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாக முறித்துக்கொண்டு செல்வதற்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளை வாக்குச்சீட்டு மூலம் தண்டித்து அவர்களை புறக்கணிப்பது மட்டுமே போதுமானதல்ல. சமூக சீர்திருத்தவாத போக்குகள் சிதைந்துகொண்டு வருவதிலிருந்து தொழிலாள வர்க்கம் படிப்பினைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் சர்வதேச சோசலிச முன்நோக்கின் பக்கம் திரும்ப வேண்டும். இந்த வழியில்மட்டுமே ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அது சமூக வளர்ச்சிகளில் தலையிட முடியும்.

இந்த அடிப்படையில்தான் நான்காம் அகிலத்தின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PSG) தனது பிரிட்டிஷ் சகோதர அமைப்பான சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணைந்து இந்த தேர்தலில் பங்கெடுத்துக்கொண்டது.

சோசலிச சமத்துவக் கட்சி ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் என்றுமில்லாத சிறப்பான முடிவை பெற்றுள்ளது. தேசிய அளவில் 25,824 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. எண்ணிக்கை கணிப்பில், இது அதிகமில்லை. ஆனால் ஐரோப்பாவின் எதிர்காலப்போக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் ஒதுக்கப்படுகின்ற இடங்களைப்பொறுத்து அமையப்போவதில்லை; உழைக்கும் மக்களின் தன்னம்பிக்கை அரசியல் நடவடிக்கையையே அது சார்ந்திருக்கும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் கூடுதல் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகிறது.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள்

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் வேலைத் திட்டத்தின் மையம் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசை உருவாக்கும் முன்னோக்காகும்.

''ஐரோப்பிய எல்லைகளை கடந்து இந்தக் கண்டத்தின் மகத்தான தொழில் நுட்ப, கலாச்சார வளங்கள், சடரீதியான செல்வங்களை கூட்டாக பயன்படுத்திக்கொண்டால், குறுகிய காலத்தில் வறுமையும், பின் தங்கிய நிலையையும் நீக்குவதற்குரிய நிலையை ஏற்படுத்தும், ஐரோப்பா முழுவதிலும் வாழ்க்கைத்தரம் உயரக்கூடும் என்றாலும் ''ஐரோப்பிய ஒன்றிணைப்பு என்பது பெரு வர்த்தக நிறுவனங்களின் இலாப அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதால் அது இயலாத காரியமாக ஆகிவிடும்.--- எனவே முற்போக்கான வழியில் ஒன்றினைப்பு என்பது ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் அடிப்படையிலேயே அமையமுடியும். இதற்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அரசியல் அடிப்படையில் ஒன்றிணைவது அவசியமாகும் என்பது உள்ளடங்கியுள்ளது'' என்று சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த முன்னோக்கு வரவிருக்கும் அரசியல் வளர்ச்சிகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறும். இந்த அடிப்படையில்தான் ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும், அவற்றின் சமூக விரோத மற்றும் ஜனநாயக விரோத கொள்கைகளுக்கும் நிலவும் பரவலான எதிர்ப்பை அடையாளப்படுத்த முடியும் அந்த எதிர்ப்பு இந்த தேர்தல்களில் தெளிவாக எடுத்தக்காட்டப்பட்டன, இதை முற்போக்கு திசையில் வளர்ச்சியடைய செய்யமுடியும்.

சோசலிச அடித்தளத்தில் ஐரோப்பிய தொழிலாள வர்க்க ஒன்றிணைப்பு என்பது அவை எவ்வளவிற்கு முக்கியமானதாக இருந்தாலும் தொழிற்பிரச்சனைகளில் கூட்டு ஆர்பாட்டங்கள், மற்றும் சர்தேச ஒற்றுமையைக் காட்டுவது மட்டும் போதுமானதல்ல. கடந்த நூற்றாண்டின் அரசியல் படிப்பினைகள் அடிப்படையில் அரசியல் நிலைநோக்கை உருவாக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். சென்ற நூற்றாண்டில் பெரிய வர்க்க போர்களும் புரட்சிகளும் மட்டும் நினைவு சின்னங்களாக அமையவில்லை, ஆனால் பெரிய தோல்விகளும், துயர நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ஐரோப்பா வரலாற்று அடிப்படையிலான பிரச்சனைகளை போட்டி தேசிய அரசுகளின் எல்லைக்குள் தீர்த்துவைக்க முடியாது. ஐரோப்பாவில் மிக உயர்ந்த உற்பத்தி சக்திகள் உள்ளன. இந்த பிரச்சனையை முதலாளித்துவ உறவுகள் அடிப்படையில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்தி முற்போக்கான வகையில் தீர்த்து வைப்பது சாத்தியமானதல்ல. இரண்டு உலகப்போர்களும் இந்த காரணத்தினால்தான் உருவாயின. ஐரோப்பாவை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர, இந்தப் பிளவை பலாத்காரத்தின் மூலம் சரிசெய்ய ஜேர்மன் ஏகாதிபத்தியம் முயன்றதால்தான் இரண்டு போர்களும் உருவாயின. இரண்டு சந்தர்ப்பங்களிலும், இந்த முயற்சி பேரழிவு தோல்வியிலேயே முடிந்தது.

இரண்டாம் உலகப்போருக்கு பின், இந்த வரலாற்று பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்டிருப்பதாக தோன்றியது. இறுதி ஆய்வில், ஐரோப்பிய ஒன்றியம் ஒருங்கிணைப்பிற்கான நடவடிக்கைகள் ஐரோப்பிய அரசுகளுக்கிடையே நிலவிய சமாதான உறவுகள் மற்றும் வர்க்க போராட்டத்தை மட்டுப்படுத்த காட்டப்பட்ட சமூக சலுகைகள் அனைத்தும் அமெரிக்க ஒத்துழைப்பை அடிப்படையாக கொண்டது. அமெரிக்கா தனது மகத்தான பொருளாதார வளங்களை, ஐரோப்பாவை அமைதிப்படுத்துவதற்காக செலவிட்டது. சோவியத் யூனியனுடன் மோதல் போக்கு என்ற பொதுவான கொள்கை அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டது. கெடுபிடிப்போரில் மேற்கு ஐரோப்பா, அமெரிக்காவிற்கு தவிர்க்க முடியாத மூலோபாய தடுப்பு அரணாக பயன்பட்டது.

சோவியத் யூனியன் சிதைந்த பின்னர், ஏகாதிபத்திய அரசுகளுக்கிடையில் மோதல்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டன. முதலாவது ஈராக்போர், யூகோஸ்லாவியாவிற்கு எதிரானப்போர், தற்போது இண்டாவது ஈராக்போர் ஆகியவை, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால அடிப்படையிலான பொருளாதார மூலோபாய நலன்களின் மோதல் மீண்டும் தலைதூக்கியது.

அமெரிக்காவுடன் நிலவும் கொந்தளிப்புக்கள், ஐரோப்பாவிற்குள் நிலவுகின்ற முரண்பாடுகளையும், வெளியில் கொண்டு வந்திருக்கிறது. தனது இராணுவ வலிமை மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கை அடிமைப்படுத்தி தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றிருப்பது, ஐரோப்பிய நாடுகளிடையே உள், சமச்சீர் நிலையை சீர்குலைத்துவிட்டது. இது ஈராக் போர் தொடர்பாகவும், ஐரோப்பிய ஒன்றிய அரசியல் சட்டமைப்பு தொடர்பாகவும், நிலவுகின்ற மோதல்களில் இருந்து தெளிவாகிறது.

''ஐரோப்பிய ஒன்றிணைப்பு நிகழ்ச்சிபோக்கு'' என்பது எந்த பெரிய வல்லரசு அல்லது முதலாளித்துவ குழுக்கள் ஆதிக்கம் செலுத்துவது என்பதைப் பொறுத்தே அமைந்துள்ளது? ஐரோப்பிய தேர்தல்கள் இந்தப்போக்கை வேகப்படுத்தி விட்டன. பொதுவாக வலதுசாரிக் கட்சிகள் நிலைபெற்றுவிட்ட கட்சிகளோடு இணைந்து கொள்வதால் தேசிய பேரினவாதப்போக்குகள் ஊக்கிவிக்கப்படுகின்றன.

இறுதியாக பார்க்கும்போது உற்பத்தியில் பூகோளமயமாக்கல் என்பது சமுதாய அளவில் சமரசக்கொள்கையை சீர்குலைத்துவிட்டது. இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய கட்டுக்கோப்பிற்குள் சமுதாய மற்றும் பிராந்திய வேறுபாடுகளை தீர்த்துவைப்பது எளிதாக இருந்தது. ஆனால் இப்போது பிரஸ்ஸல்லில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு பொருளாதார சீர்திருத்தம் தொழிலாளர்களின் உரிமைகள் பறிப்போடு அதிகம் சம்மந்தப்பட்டிருந்த்து.

உலகப்போருக்கு பிந்திய சீர்திருத்தவாத அரசியலுக்கு திரும்ப முடியாத அளவிற்கு இந்த அடிப்படை சர்வதேச மாற்றங்கள் சென்று கொண்டிருக்கின்றன. 1970-களில் மேற்கொள்ளப்பட்ட சமூகசீர்திருத்த கொள்கை சாத்தியங்கள்'' திரும்ப வரும் என்ற கூற்று தொழிலாள வர்க்கத்தை ஏமாற்று வேலையாகும். எல்லா சீர்திருத்தவாத உடன்படிக்கைகளையும் மீறிச்செல்கின்ற அளவிற்கு முதலாளித்துவ கட்டுக்கோப்பில் முரண்பாடுகள் நிலவுகின்றன. இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய Willy Brandt காலத்து சமூக ஜனநாயக கட்சியை புதுப்பிக்கும் முயற்சியும், ஸ்ராலினிச ஜேர்மன் ஜனநாயகக் குடியரசை உருவாக்க முயல்வதும் சாத்தியமானவையல்ல. தொழிலாள வர்க்கம் அத்தகைய பிற்போக்கான கண்ணோட்டங்களைக் கண்டு குழம்பிவிடக்கூடாது.

உழைக்கும் மக்கள் தேசிய எல்லைகளைக் கடந்து சோசலிச வழிகளில் ஐரோப்பிய பொருளாதாரத்தை சீரமைத்துக் கொண்டால்தான் தங்களது சமுதாய மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும். ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான முன்னோக்குதான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய அரசுகளுக்கும் எதிராக கிளர்ந்தெழும் எதிர்ப்பிற்கு ஒரு தெளிவான வழியை காட்டமுடியும். இந்த அடித்தளத்தில்தான் ஐரோப்பிய ஆளும் செல்வந்த தட்டினர் மேற்கொள்ளும் சமூகவிரோத பொறுப்பற்ற கொள்கைகளை தடுத்துநிறுத்தி, முதலாளிகளின் இலாப நோக்குகளுக்கு மேலாக மக்களின் நலன்களை இருத்தும் ஒரு சமூகத்தை உருவாக்கமுடியும்.

Top of page