WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
School fire in southern India kills 90 children
தென்னிந்தியாவில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ 90 குழந்தைகளைக் கொன்றது
By Arun Kumar and Ram Kumar
22 July 2004
Use this version
to print |
Send this link by email |
Email the author
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 90
குழந்தைகள் இறந்தபோனது நாடுமுழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை பள்ளிகளின் திகைப்பூட்டும் நிலையை
வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றது. இத்துயரமானது பதினைந்து ஆண்டுகால சந்தைச் சீர்திருத்தங்களின் விளைபயன்களுள்
ஒன்றாகும், இச்சீர்திருத்தங்கள் ஏற்கனவே போதாதிருக்கின்ற பொதுக் கல்வி முறையை தொடர்ந்து சீரழிவுக்கும்,
மட்டரகமான மற்றும் பெரும்பாலும் ஒழுங்கு செய்யப்படாத
கட்டிடங்களில் வழமையாய் கூட்ட நெரிசல் மிகுந்த தனியார் பள்ளிக்கூடங்கள் பல்கிப் பெருகுதலுக்கும்
வழிவகுத்திருக்கிறது.
இவற்றுள் ஒன்றில்தான் - கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளிக்கூடம்
- ஜூலை 16ம் தேதி 11 மணியளவில் தீ பற்றிக் கொண்டது. 6 வயது முதல் 14வயதுவரையில் உள்ள குறைந்த
பட்சம் 800 குழந்தைகள் மூன்று அடுக்கு கட்டிடத்தில் அடைக்கப்பட்டிருந்தனர் - அவற்றில் பெரும்பாலானவை
நீண்ட, குறுகலான ஒரே ஒரு வெளியேறும் வழியுடன் கூடிய வகுப்பறைகள் ஆகும். தரைத் தளத்தின் மீதமைந்த சமையலறை
உள்பட, கட்டிடத்தின் ஒரு பகுதி ஓலைக் கூரையினால் வேயப்பட்டிருந்தது.
போலீஸ் மற்றும் நேரில் பார்த்தவர்களின் படி, மதிய உணவு தயாரித்துக்
கொண்டிருக்கையில் சமையலறையில் தீப்பற்ற ஆரம்பித்தது. ஓலைக் கூரையில் தீப்பற்றி, அதுவிரைவில் கட்டிடத்தின்
ஏனைய பகுதிக்கும் பரவியது. அனைத்து ஆசியர்களும் வயதில் மூத்த குழந்தைகளும் ஒருவாறு தப்பித்துக் கொண்டனர்,
190 பிஞ்சுக் குழந்தைகள் இரண்டாவது தளத்தில் உள்ள ஒற்றை வகுப்பறையில் வெளியேறும் ஒரே வழியும்
தீச்சுவாலையினால் அடைபட்ட பின்னர் மாட்டிக் கொண்டனர்.
தீ அணைப்புத் துறையினர் வருவதற்கு முன்னரே, உதவிக்காக அழுது கத்திக்
கொண்டிருந்த குழ்ந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் உள்ளூர் ஆட்கள் விரைந்தனர்.
சம்மட்டிகளை பயன்படுத்தி அவர்கள் துளையிட்டனர், அறைக்குள் தண்ணீரைப் பாய்ச்சினர் இறுதியில்
வகுப்பறைக்குள் நுழையப் போதுமான அளவு இடைவெளியை உருவாக்கினர். சில குழந்தைகளை அவர்கள்
காப்பாற்றினர் ஆனால் அறையின் ஒரே வழிக்கு அருகில் 70க்கும் மேற்பட்ட உடல்கள் குவியலாகக் கிடந்ததைக்
கண்டனர். மொத்தம் 46 சிறுவர்களும் 44 சிறுமிகளும் இறந்தனர். மற்றும் 23 குழந்தைகள் கடுமையாய்
காயமடைந்தனர்.
இரு வசிப்பிடக் கட்டிடங்களுக்கு இடையே அமைந்து பள்ளியை அடையமுடியாத வகையில்
இருந்ததால் தீயணைப்பும் மீட்பு நடவடிக்கையும் தடைபட்டன. அது ஒரே ஒரு நுழைவாயிலையும் ஒற்றைப்
படிக்கட்டுக்களையும் கொண்டிருந்தது. சரியான வழிகளை அடைவதற்கு தீ அணைக்கும் படையினர் கிரேன்களின்
உதவியுடன் சுவர்களை உடைக்கவேண்டி இருந்தது. நேரில்
பார்த்த சாட்சிகளின் படி, தீ அணைப்பு வண்டியில் போதுமான தண்ணீர் இல்லாதிருந்தது மற்றும் பல கிலோமீட்டர்
தள்ளியுள்ள ஒரு குளத்திலிருந்து அதிகம் நீரை சேகரிக்க வேண்டி இருந்தது.
அந்தப் பள்ளிக்கூடம் அத்தகைய நிலையில் பல தசாப்தங்களாக இயங்கிக்
கொண்டிருக்க முடிந்தது என்ற உண்மை அடுத்தடுத்து வந்த மாநில அரசாங்கங்களின் நேரடி பொறுப்புஆகும்.
பள்ளிகளில் ஓலைக் கீற்றுக்களால் கூரை அமைத்திருப்பது சட்டவிரோதமாக இருப்பினும், இந்நடைமுறை பரவலாக
உள்ளதும் பெரும்பாலும் அலட்சியப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது. அது ஒரு நெருப்பு பொறிக்கிடங்காக தெளிவாக
இருந்தபொழுதே, ஜனவரியில் அண்மையில் பள்ளிக்கூடத்தின் உரிமம் புதுப்பிக்கப்படிருந்தது கண்டு பெற்றோர்களும்
உள்ளூர்வாசிகளும் கோபமடைந்தனர். "மாநிலத்திலேயே முதலாவதாக வர விரும்பிய எனது மகனை அவர்கள்
கொன்றுவிட்டார்கள்" என மஞ்சுளா எனும் தாய் பத்திரிகையாளரிடம் கூறினார்.
தீவிபத்து தொடர்பான பொதுமக்களின் கோபத்தை திசைதிருப்பும் முயற்சியில்,
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயராம் ஜெயலலிதா இத்துயரத்திற்கு பள்ளிக்கூட நிர்வாகத்தையும் கல்வித்துறையையும்
உடனடியாகக் குற்றம் சாட்டினார். மாவட்ட அளவிலான கல்வித்துறையின் நான்கு அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்டனர் மற்றும் பள்ளிக்கூட அனுமதி உரிமம் இரத்து செய்யப்பட்டது. உரிமையாளர், புலவர் பழனிச்சாமி,
அவரது மனைவி மற்றும் மகள் மற்றும் இரு சமையற்காரர்கள் உள்பட பள்ளிக்கூடத்தின் ஐந்து பணியாளர்கள் கைது
செய்யப்பட்டனர் மற்றும் கடமையில் தவறி மனிதக்கொலைபுரிதல் மற்றும் ஏனைய குற்றவியல் நடவடிக்கைகளின்
பேரில் குற்றம் சுமத்தப்பட்டனர்.
மாநில கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் ஓலைக் கூரையுடன் உள்ள பள்ளிகளில்
வகுப்புக்கள் ஒருவார காலத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், அத்தகைய கட்டமைப்பை மாற்றும்படியும் அல்லது
மூடுவதை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இடப்பட்டது என்று அறிவித்தார். கட்டளை வலியுறுத்தப்படுவது
பெரும்பாலும் விரும்பத்தகாததாய் இருக்கிறது. ஒரு முன்னாள் கல்வி அதிகாரி இந்து நாளிதழில்
விவரித்தவாறு, அத்தகைய நடவடிக்கை மாநிலத்தின் 75 சதவீத தொடக்கப்பள்ளிகளை மூடுவதற்கே வழிவகுக்கும்.
மேலும், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் அமைந்த ஓலைக்கூரையே பாதுகாப்பு
பற்றாக்குறையின் மிகவும் பளிச்சிடும் ஒன்றாகும். கட்டிடத்தில் தீக்கு தப்பித்தல் மற்றும் வெளியேறும் வழிகள் மற்றும்
தீ அணைப்புக் கருவிகள் உட்பட மிகவும் அடிப்படைப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் கூட இல்லாதிருந்தது.
பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கிற அதேவேளை, அது அருமையாகத்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கையாளுவதற்கு வசதியான பலியாடுகளை கண்டிபிடிப்பதற்கான அவசரத்தில், அரசு
நிர்வாகிகளும் பத்திரிகைகளும் கூட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தவறிவிட்டனர் என்று ஆசிரியர்களின்
மேல் குற்றம்சாட்ட முயற்சிக்கின்றனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ஜே. ராதாகிருஷ்ணன் அனைத்து 24 ஆசிரியர்கள்
மீதும் "பணியில் கடமை தவறியதாக" குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். செய்தி ஊடகத்தால்
நடத்தப்படும் வேட்டையாடலுக்கும் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்சியும், ஆசிரியர்கள் தங்களின் வீடுகளை விட்டு
ஓடிவிட்டனர்.
ஆயினும், விரைந்து பரவிய தீயால் உண்டு பண்ணப்பட்ட குழப்பமான சூழ்நிலைகளில்
ஆசிரியர்கள் என்ன செய்திருக்க வேண்டும் அல்லது உண்மையில் என்ன செய்திருக்க முடியும் என்பது தெளிவாக இல்லை.
ஒருவர் கூட நெருப்பை எப்படி அணைப்பது என்பது தொடர்பாக எந்தவித பயிற்சியும் பெற்றிருந்ததில்லை. அங்கு
நிலைப்படுத்தப்பட்ட தீ அணைப்புப் பயிற்சி இல்லை மற்றும் தீ அணைக்கும் கருவியும் இல்லை. ஆசிரியர்கள் மேல்
குற்றம் சுமத்த குவிமையப்படுத்துவது பள்ளிக்கூடத்தின் உரிமையாளர், கல்வித்துறை நிர்வாகிகள் மற்றும்
அரசாங்கத்தை தொல்லையிலிருந்து விடுபட்டு எளிதில் தப்பிக்க வைப்பதாகும்.
சீரழிந்து வரும் பள்ளிக்கூட முறை
காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கம் கோபத்தை தணிப்பதற்கான மற்றும்
துயரம் தொடர்பாக கவலை தெரிவிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயாநிதி
மாறன் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டார். அவர் செய்தி ஊடகத்திடம் மாநில அரசாங்கத்திற்கு புதுதில்லியிலிருந்து
உதவி தேவைப்படும் என தான் நினைக்கவில்லை என்று கூறினார், மேலும் "சட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான்
நமக்குத் தேவை" என்றார். போதுமான சோதனை இல்லாமை உள்பட, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களின்
நிலைமைகளுக்கு ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு போலவே, தற்போது மாநில அளவில் எதிர்க்கட்சியாக
இருக்கிறது என்றாலும் திமுகவும் பொறுப்புடையதாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஞாயிற்றுக் கிழமை அந்த இடத்தைப்
பார்வையிட்டார், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு பத்து மில்லியன் ரூபாய்கள் மதிப்புள்ள ஒரு சிறப்பு
பொதியினை அறிவித்தார் மற்றும் பள்ளியின் உணவு மையங்களில் ஓலைக் கூரைகளை மாற்றி சரியான ஒன்றை
அமைப்பதற்காக மற்றுமொரு இருபத்தைந்து இலட்ச ரூபாயை வழங்குவதாக அறிவித்தார். ஆயினும், இந்த
குறைவான உதவிகள் இதற்குப் பின்னே உள்ள காரணங்களை எந்த விதத்திலும் கவனிக்கவில்லை.
1990களின் ஆரம்பத்தில் காங்கிரசால் முன்னெடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு
திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்க பொதுப் பள்ளிகள் அமைப்புமுறையானது முறைப்படுத்தப்பட்ட வகையில் குறைக்கப்பட்டு
வந்திருக்கின்றது மற்றும் பின்னர் பாரதீய ஜனதாக் கட்சி (பிஜேபி) அரசாங்கத்தின் கீழ் அது நீட்டிக்கப்பட்டது.
கல்விக்கு அரசாங்கம் செலவழிப்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3 சதவீதமாக வீழ்ச்சியுற்றிருக்கிறது, இது
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததில் ஏறத்தாழ அரைப் பகுதியாகும். இதன் விளைவாக, பொதுப் பள்ளிக்கூடங்கள்,
குறிப்பாக கிராமப்புறங்களில், அடிப்படை வசதிகள் பல இல்லாமல் இருக்கின்றன அல்லது எப்படி ஆயினும் பள்ளிகளே
இல்லாமல் இருக்கின்றன.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக முதலாளித்துவ தனியார்
பள்ளிக்கூடங்களுக்கு திரும்பும்படி நிர்பந்திக்கப்பட்டு வருகின்றனர். சிலவகைகளில், இந்தப் பள்ளிக்கூடங்கள் ஆங்கிலத்தில்
கற்பிப்பது - தங்களின் குழந்தைகள் நல்ல சம்பளம் உள்ள வேலைகளைப் பெறுவதற்கு ஆர்வம் கொண்டுள்ள பெற்றோர்களுக்கான
கூடுதல் ஊக்கியாக இருக்கிறது. இந்தப் பள்ளிக்கூடங்களில் பல தெளிவாகவே தேவைக் குறைவுகளைக் கொண்டிருக்கின்றன,
முறைப்படி பதிவு செய்யப்படாததாக இருக்கின்றன மற்றும் அடிப்படை பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித்தரங்களை
அலட்சியம் செய்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமே 13,000 தனியார் பள்ளிக்கூடங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது.
பிபிசி செய்தி அறிக்கை குறிப்பிட்டதாவது: " மாவட்ட நகரங்களில் உள்ள இந்தியாவின்
தனியார் பள்ளிக்கூடங்களில் பெரும்பான்மையானவை மந்தமானதாக, ஒதுக்குப்புறம் என்றாலே அஞ்சக் கூடியதாக,
நெரிசல்மிக்கதாக மற்றும் தீ பாதுகாப்பு முறைகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது நூலகங்கள் இல்லாத
பெரும்பாலும் கைவிடப்பட்ட கட்டமைப்புக்களாக இருக்கின்றன. மாவட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான இந்தத்
தனியார் பள்ளிக்கூடங்கள், பள்ளங்கள் நிறைந்த, நெரிசல் மிகுந்த ஒடுக்கமான சந்துகளில் மற்றும் குறுக்குச் சந்துகளில்
அமைந்திருக்கின்றன மற்றும் பள்ளி நிர்வாகிகள் வகுப்புக்கள் தொடங்கியதும் குழந்தைகள் போக்குவரத்தில் சிக்கிக்
கொள்ளாது வைத்திருப்பதற்காக அடிக்கடி வாயிற்கதவுகளைப் பூட்டி விடுகின்றனர்.
"தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், மாநில அரசின் பாடத்திட்ட வழிகாட்டு முறையில்
இணைந்துள்ள அப்படிப்பட்ட ஆங்கிலம் பயிற்றுமொழிப் பள்ளிக் கூடங்கள், பகலோடு பகலாகத் தோன்றிமறையும்
நடவடிக்கைகளாக இருக்கின்றன. அவர்கள் வாடகை கட்டிடங்களில் சிறிய பள்ளிக் கூடங்களைத் திறக்கிறார்கள்
ஆண்டுக் கட்டணங்களை வசூலித்ததும் நிர்வாகிகளும் ஆசிரியைகளும் மறைந்து விடுகிறார்கள்.
1972 ஒட்டிய காலப் பகுதி முதல் அத்தகைய ஆங்கில
வழிப்பள்ளிகள் இருந்திருந்தாலும், விதிமுறைகள் கண்டிப்பில்லாததாக இருந்து வருகின்றன, மிக அண்மையில் சட்டங்கள்
கடுமையாக்கப்படும் வரை தமிழ்நாட்டில் அத்தகைய பள்ளிக்கூடங்களுக்கு நான்கு ஆய்வாளர்களே இருந்தனர்.
இந்து பத்திரிகையில் வந்த ஒரு ஆசிரிய தலையங்கம் கல்வி அமைப்புமுறையின்
நிலை பற்றி வருந்தத்தக்க முறையில் கூறுகிறது: "அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என ஆக்குதலுக்கு அரசிற்கு அப்பால்
சுதந்திரமான மாபெரும் முன்முயற்சியும் அதிக பள்ளிக்கூடங்களும் நிச்சயம் தேவைப்படுகின்றவேளையில், அரசாங்கங்களின்
தற்போதைய போக்கானது தேவைப்படும் வளங்களை ஒதுக்கத்தவறுவதுடன், சிறப்பாக அதிக ஆசிரியர்களை
வேலைக்கு அமர்த்துவதில், வசதியான உட்கட்டமைப்பை வழங்குவதில், மற்றும் கற்றலின் தரத்தை உயர்த்துவதற்கானதில்
கையை விரிப்பதாகவும் இருக்கிறது
"மாறாக, மூலை முடுக்குகளில் கல்விக்கூடங்கள் நிறுவ, தண்டனைகளிலிருந்து விலக்கீட்டு
உரிமையுடன் சட்டங்களையும் விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிடுவதற்கு பகிரங்க பொது உரிமம் கொடுக்கப்படுகிறது.
கல்விமுறையில் பல்வேறு மட்டங்களில் பல்வேறு வகையிலான நம்பத்தகாத செயல்பாட்டாளர்கள் பூத்துக் குலுங்குவதை
ஊழல் சாத்தியமாக்குகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்துகொள்வது நிச்சயமாக குறைந்த செலவிலான
தரமான கல்விக்கான வழி ஆகாது. பள்ளிக் குழந்தைகளை கவனத்தில் கொள்கையில், அத்தகைய சமரசமானது
ஒன்றும் செய்யாதிருப்பதைவிடவும் மோசமானதாகும்."
பத்திரிகையானது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய 2 சதவீத மேலதிக
வரிவிதிப்பு இந்தப் பிரச்சினைகளை கவனிக்க பயன்படுத்தப்படலாம் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ஆனால்
ஓலைக் கூரையை மாற்றுவதற்கு சோனியா காந்தி வழங்கும் உதவிபோல, ஆண்டுக்கு 40-50 பில்லியன் ரூபாய்கள்
(சராசரியாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் புதிய வரி, கடலில்
விழும் ஒரு சொட்டுக்கும் சற்று அதிகமானதாகும். அது அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் "சமைக்கப்பட்ட
சத்துள்ள மதிய உணவுக்கு" ஒதுக்கப்படும் தொகை உள்பட, அடிப்படைப் பொதுக் கல்விக்கான ஒரு அடையாள
முத்திரையாகும்.
கும்பகோணம் தீவிபத்து பற்றி அக்கறைப்படும் தற்போதைய அனைத்து வெளிப்படுத்தல்களையும்
பொறுத்தவரையில், உடனடிக் கோபம் தணிந்துபோன உடனேயே, மாநிலம் மற்றும் தேசிய அளவில் உள்ள அரசியல்வாதிகள்,
பிரச்சினையை விரைவில் கைவிட்டுவிடுவார்கள். ஜனவரிமாதம் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 50
பேர்கள் இறந்த பின்னர், தமிழ்நாடு மாநில அரசாங்கம் அனைத்து பொதுக் கட்டிடங்களிலும் தீ அணைப்புக் கருவிகள்
பொருத்தப்பட வேண்டும் மற்றும் நீர்தெளிக்கும் முறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. மாநிலம்
முழுவதும் உள்ள எண்ணற்ற ஏனைய கட்டிடங்களுடனும் சேர்ந்து, கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளிக்கூடமும்
ஒன்றும் செய்யவில்லை என்பதை சொல்லத் தேவை இல்லை.
Top of
page |