World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: National Assembly bans Muslim headscarves in schools

பிரான்ஸ்: முஸ்லீம் மாணவிகள் பர்தா அணிவதற்கு தேசிய நாடாளுமன்றம் தடைவிதித்தது

By Alex Lefebvre
18 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

அரசாங்கத்தின் ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி கற்கின்ற மாணவ மாணவியர், தங்களது மதம் சார்ந்த ஆடைகள் மற்றும் அடையாளச் சின்னங்களை அணிந்துகொண்டு படிக்க வருவதற்கு தடைவிதிக்கும் சட்டம் மீது பிரான்சின் நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 10-ல் வாக்களிக்கப்பட்டது. (சட்டத்திற்கு ஆதரவாக 494- உறுப்பினர்களும், எதிராக 36 பேரும் வாக்களித்தனர், 31 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை). இந்தச் சட்டம் பிரான்சு முழுவதிலும் அதன் பல தீவு எல்லைகளிலும் செப்டம்பர் 2004- ஆரம்பத்திலிருந்து செயல்பட தொடங்கும்.

தேசிய நாடாளுமன்றத்திற்குள்ளே, அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள இடதுசாரி கட்சியான சோசலிஸ்ட் கட்சி PS- செய்தது போல், ஆளும் பழமைவாத UMP (Union for a Popular Majority) கட்சியை சார்ந்தவர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் சட்ட முன்வரைவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். சிறிய மைய-வலது UDF (பிரெஞ்சு ஜனநாயகத்திற்கான ஐக்கியம்)- மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி PCF- ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்குகளும் சிதறலாக பதிவாகின.

மேற்போக்காக நடுநிலை சட்டம்போல் தோன்றினாலும் பிரான்சு நாட்டின் அரசாங்க அமைப்புகளில் --பள்ளிகள், மருத்துவ மனைகள் அரசு அலுவலகங்கள் முதலியவற்றில் முஸ்லீம்கள் பர்தா (முக்காடு) அணிந்து செல்வதை தடைசெய்யும் நோக்கில் நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் உந்துதலால்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2003-ஆரம்பத்திலிருந்து பிரதான ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் இந்த பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. தற்போது விவாதம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதர நிறுவனங்களிலும் முஸ்லீம்களது தலை அணியை தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டுமா என்பது குறித்து இப்போது விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இந்தப் புதிய சட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் மிகுந்த இறுமாப்போடு அதை மதச்சார்பின்மை அடிப்படையில் சரியான நடவடிக்கை என்று சமாதானம் கூறியதுடன் பிரெஞ்சுப் புரட்சியின் போது மத ஆதிக்கத்திற்கு எதிராக நிலைநாட்டப்பட்டுவிட்ட சம்பிரதாயங்களைக்கூட தங்களது புதிய போக்கிற்கு ஆதரவாக சுட்டிக்காட்டி வருகின்றனர். வலதுசாரி சக்திகள் இந்த போலி ஜனநாயகப் போர்வையில் முன்முயற்சி எடுத்த இந்த சட்ட நடவடிக்கைகள், பெரும்பாலும் லிபரல் ஊடகங்கள், சோசலிஸ்ட் கட்சி, அதி இடது லுத் ஊவ்றியேர் (தொழிலாளர் போராட்டம்) ஆகியவற்றின் பகிரங்க ஆதரவின் காரணமாகவும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலையற்ற மற்றும் சமரச அணுகுமுறையை மேற்கொண்டதாலும் சாத்தியமாயிற்று.

இந்த சட்டத்தின் ஜனநாயகத்திற்கு புறம்பான தன்மை கல்வியமைச்சர் Luc Ferry - ஆரம்பத்தில் தெரிவித்த எதிர்ப்பின் மூலம் தெளிவாகிறது. தலையை மறைக்கின்ற துணிகளை அணிவதை தடுக்கும் சட்டம் அரசியல் நிர்ணய சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கப்படுகின்ற ஆபத்து உள்ளதாக அவர் தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தார். என்றாலும் அத்தகைய கவலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு Ferry- சென்ற டிசம்பர் மாதம் தடைச்சட்டத்தை எழுதத் தொடங்கினார்.

நெற்றியோடு சேர்த்து கேசத்தை மறைக்கின்ற ஆடையை அணிவதைத் தடை செய்வது முதல்கட்டமாக பிரான்சு நாட்டு முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சமான நடவடிக்கை, அது வலதுசாரி சக்திகளை ஊக்குவிப்பதாக அமைந்து இறுதியில் உழைக்கும் மக்கள் அனைவரது ஜனநாயக உரிமைகளுக்கும் எதிராக திரும்பிவிடும்.

சமூக சமத்துவதிற்கான போராட்டத்தின் நிலைப்பாட்டிலிருந்தும் உழைக்கும் மக்களின் புறநிலைரீதியான நலன்களின் நோக்கிலிருந்தும் பார்க்கும்போது அத்தகைய நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதற்கு அடிப்படை கண்ணோட்டம் இதுதான்: அரசியல் நனவுக்கும், சர்வதேச ஐக்கியத்தின் அபிவிருத்திக்கும் தடைக்கல்லாக அந்தச் சட்டம் செயல்படுகிறதா? அல்லது பங்களிப்பு செய்கிறதா? இரண்டிற்கும் எதிராக அந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும் வகுப்புவாத அடிப்படையிலும் உணர்வுகளை தூண்டுகிறது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே பிளவுகளுக்கு தூபம் போடுகிறது.

ஜனநாயக உரிமைகள் என்ற நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும் போது இந்தச்சட்டம் அடிப்படை மத சுதந்திரத்தை மீறுவதாக அமைந்திருக்கிறது. தனி மனிதனது சிந்தனை மற்றும் வெளிப்படுத்தல் தொடர்பாக பிரெஞ்சு அரசாங்கம் குறுக்கிடுவதற்கு புதிய அதிகாரங்களை தருகிறது. முற்போக்கான ஜனநாயக மதச்சார்பற்ற தத்துவத்தையும், மதத்தையும் அரசையும் பிரித்தலையும்- பிறரது உரிமைகளுக்கு எந்த வகையிலும் குறுக்கிடாமல், அவர்களின் தனிப்பட்ட மத நம்பிக்கைகளில் தலையிடாத வகையில் தனிமனிதர்கள் பேசி, எழுதி வெளிப்படுத்துவதற்கான உரிமையை இல்லாமற் செய்ய அரசாங்கம் ஆணையிடுவதையும் சமமாக கருதுவது அடிப்படையிலேயே தவறானது.

இந்த சட்டத்தை கொண்டுவர வேண்டுமென கூறிய பலரின் கூற்று, தலையிலிடும் பர்தா பெண்களை ஒடுக்குவதென்றும் அதற்கு எதிராகவே இந்த நடவடிக்கை வருகிறதென்றும் அமைந்திருக்கிறது. தங்களது மத சம்பிரதாய நடைஉடை பாவனைகளைப் பின்பற்றி வருகின்ற ஒரு பிரிவு முழுவதையும் பழிக்கு ஆளாக்கும் வகையில் இயற்றப்படுகின்ற ஒரு சட்டத்தை ஜனநாயக மற்றும் "விடுதலை" தன்மை கொண்டது என கூறிவிட இயலாது. இந்தத் தடையை ஆதரிக்கின்றவர்கள் பொதுவாகக் கூறுவதைப்போல், இந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அல்லது பெண்களைக் குறைத்து மதிப்பிட்டு புறக்கணிக்கின்ற போக்கிற்கு ஆதரவு காட்டுவதாக எடுத்துக்கொள்வதற்கு எந்தவிதமான அடிப்படையுமில்லை.

அதற்கு மாறாக இந்த சட்டத்தினால் ஏற்படுகிற, தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால் தாங்கள் தனிமைப்படுத்தி பழிவாங்கப்பட்டு வருகிறோமென்று நியாயபூர்வமாக உணருகின்ற சமுதாயங்களின் பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே வகுப்புவாத உணர்வுகளையும் மத பிரிவினை மனப்பான்மைகளையும் இந்தச் சட்டம் ஊக்குவிக்கும்.

மத துவேஷங்களை அரசியல் வளர்ச்சியாலும் தொழிலாள வர்க்கத்தை சோசலிசம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தில் கல்வியூட்டுவதன் மூலம்தான் போக்க முடியும், ஆதிக்கம் செலுத்தி வருகின்ற சமூகத்தட்டின் நலன்களுக்கு பயன்படும் சட்டங்களை மேலேயிருந்து அரசாங்கங்களால் அரசு ஆணைகளின் மூலம் திணிப்பதனால் போக்கிவிட முடியாது.

பிரதமர் ஜோன் பியர் ரஃப்ரான் அரசாங்கம் கொண்டுவந்துள்ள பல்வேறு ஒடுக்குமுறை நடவடிக்கைக்கேற்ப இந்த பர்தா எதிரான சட்டமும் வந்திருக்கின்றது: சிறிய குற்றங்களுக்குக் கூட பெருந்தொகை அபராதங்கள் விதிக்கப்படுதல், முறைகேடாக அவசர தீர்ப்புக்களை வழங்குகின்ற ஒப்புக்கான நீதிமன்ற தீர்ப்புக்களை திணிக்க "உடனடி நீதிபதிகளை" நியமிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் பிராந்திய தலையீட்டுக் குழுக்களில் (Regional Intervention Groups -GIR) போலீசார் குவித்தல் வரையிலானவை ஆகும். GIR-கள் மூலம் ஏற்கனவே மிகப்பெருமளவில் ஏழைகள் வாழுமிடங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்படுகின்றன மற்றும் மிகப்பெருமளவில் வேலை நிறுத்தங்களை முறியடிக்கின்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ரஃப்ரான் மற்றும் ஜனாதிபதி சிராக் மேற்கொண்டுவரும் உழைக்கும் மக்களுக்கு எதிரான கொள்கைகளுக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பும் சமுதாயத்தில் அதிருப்தியும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் இந்த தடைச்சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. போலீஸ் ஒடுக்குமுறை, சமூக சேவைகள் மீது நடக்கும் தாக்குதல்கள், பென்ஷன்களை வெட்டல் ஆகிய அரசாங்க செயல்பட்டியலிலிருந்தும் சமூக நிலைமைகளில் உருவாகியுள்ள நெருக்கடி ஆகியவற்றிலிருந்து உழைக்கும் மக்களது கவனத்தை திசைதிருப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒரு முயற்சிதான் இந்த நடவடிக்கை. இடது அல்லது வலதுசாரி அரசியலில் நிலைபெற்றுவிட்ட கட்சிகள் எதுவும் தொழிலாளர்களுக்கு எதையும் தரவில்லை. எனவே அரசியல் தட்டைச் சார்ந்த அனைவரும் சட்டம் ஒழுங்கு வெறிக்கூச்சலையும் புலம்பெயர்ந்தோர்க்கு எதிரான கொள்கையை ஊக்குவிக்கிற முறையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் சோதிக்கப்பட்ட பிரித்தாளும் தந்திரத்தை இப்போது பயன்படுத்தி வருகிறார்கள்.

புதிய தேர்தல் சுழற்சிக்கு சற்றுமுன்னர் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்ற பிராந்தியத் தேர்தல்களில் அரசாங்க கட்சிகளுக்கு கடுமையான தோல்விகள் ஏற்படுமென்றும், "அதி இடதுகள்" மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு கணிசமான வெற்றிகள் கிடைக்கும் என்று முன்கூட்டியே ஊடகங்கள் கவலையோடு விமர்சனங்களை மிகப்பெருமளவில் பிரசுரித்திருக்கின்றன. ரஃப்ரான் அரசாங்கம் மக்கள் ஆதரவை பெருமளவில் இழந்து நிற்கிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் படி 65-சதவீத வாக்காளர்கள் ரஃப்ரானுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருக்கின்றனர். அண்மைய மாதங்களில் நடத்தப்பட்ட மற்ற கருத்துக்கணிப்புக்கள் 30-சதவீத வாக்காளர்கள் புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Révolutionnaire) மற்றும் லூத் ஊவ்றியேர் ஆகியவற்றின் பக்கம் சாய்ந்து கொண்டு வருவதை கோடிட்டுக் காட்டுகின்றன.

தலை-அணி தொடர்பான விவாதங்களின் அண்மைக்கால வரலாறு கோடிட்டுக் காட்டுவது என்னவெனில் பெருகிக்கொண்டு வரும் சமுதாய மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மக்களது கவனத்தை திசைதிருப்பவும் சிதறடிக்கவும் கொண்டுவரப்பட்டது என்பதுதான். இதில் முதல் சுற்று விவாதங்கள் 2003-ஏப்ரலில் UMP- உள்துறை அமைச்சர் நிக்கோலா சர்கோஸியாலும் மே, ஜூனில் PS- முன்னணி தலைவர்களான ஜாக் லாங் மற்றும் லோரன்ட் ஃபாபியுஸ் ஆகியோராலும் தொடக்கி வைக்கப்பட்டது. ரஃப்ரான் ஓய்வூதியங்களை வெட்டியதற்கு எதிராக நடைபெற்ற பிரமாண்டமான வேலை நிறுத்தங்கள் மற்றும் கண்டனப்பேரணிகள் நடத்தப்பட்ட நேரத்தில் இந்த விவாதங்கள் தொடக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகள் ஆசிரியர்களால் முன்நின்று நடாத்தப்பட்டன. அவர்களை இந்தப் போராட்டத்தில் இறங்குவதற்கு தூண்டியது, உத்தேச ஓய்வூதிய வெட்டுக்கள் மட்டுமல்ல, அரசாங்கம் பொதுக்கல்வி கட்டுக்கோப்பை பலவீனப்படுத்தவும் பல்வேறு பகுதிகளாக பிரித்துவைக்கவும் உருவாக்கியுள்ள திட்டமும்தான்.

பர்தா கிளர்ச்சியின் இரண்டாவது கட்டம் 2003-அக்டோபரில் தொடங்கியது. அப்போது சிராக்கும் அவரது வலதுகரமான UMP தலைவர் ஜூப்பேயும் சட்டபூர்வமான தடைக்கு ஆதரவாக ஒரு நிலை எடுத்தனர். 2003-ஆகஸ்டில் நடைபெற்ற வெப்ப அலைவீச்சுக்களால் 15,000-மக்கள் மடிந்த நேரத்தில் ரஃப்ரான் அரசாங்கம் நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்த நிலையை தொடர்ந்து அந்த நேரத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ரஃப்ரான் அரசாங்கம் நிலைகுலைந்தது.

சோசலிஸ்ட் கட்சி (PS)- ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இந்த நடவடிக்கையை ஆதரித்து வந்தது. மைய-இடது ஊடகங்கள், குறிப்பாக முன்னணி நாளிதழான Le Monde - உட்பட பிரெஞ்சு அரசாங்க நிர்வாகத்தின் இன வெறி முகமூடி கொள்கைக்கு ஜனநாயக சட்ட முத்திரை குத்தும் பங்களிப்பை செய்வதில் முக்கிய பங்காற்றின.

இதர பிரெஞ்சு இடதுசாரிகள் அவர்களை தொடர்ந்து நடவடிகையில் இறங்கினார்கள். மரி ஜோர்ஜ் புஃவ்வே (Marie-George Buffet)-யின் கம்யூனிஸ்ட் கட்சி சட்டத்தை அதிகாரபூர்வமாக எதிர்த்து வந்தாலும் 2003-ல் அவர் அதற்கு ஆதரவாக திரும்பினார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள PCF- ன் பிரதிநிதிகளில் கணிசமான பிரிவினர் சட்டத்தை ஆதரித்தனர். "அதி இடதுகள்" இந்தப் பிரச்சனையில் பிளவுபட்டு நின்றனர். லூத் ஊவ்றியேர் அரசாங்கத்தின் பிரச்சாரத்தை பகிரங்கமாக ஆதரித்தது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சட்டம் தேவையில்லை என அறிவித்ததுக்கொண்டு கட்சிக்குள்ளே பிளவுபட்டு நின்றது. சம்பிரதாய முறையில் அந்தக்கட்சி பர்தா தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) பிராந்திய வேட்பாளரான தெற்கு பிரான்சில் உள்ள Aix-en-provonce- பகுதியைச்சார்ந்த வழக்கறிஞர் Benoit Hubert, சட்டத்திற்கு எதிரான கண்டனப்பேரணியில் கலந்து கொண்டார் என்பதற்காக அவரை பதவியிலிருந்து விலகுமாறு கட்டளையிட்டது.

UMP -ன் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்களைகளில் அரசாங்கத்தை ஆதரிக்கும் இடது சாரிகள் மேற்கொண்ட முயற்சி அவர்களது அரசியல் வாதத்தின் வெற்றுத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்தது, 2002-ஜனாதிபதி தேர்தலில் பிரெஞ்சு வாக்காளர்கள் முன்னர் இரண்டு தீங்குகளில் எது குறைந்த தீங்கு என்ற வாதத்தை அவர்கள் எடுத்து வந்தனர். அப்போது சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரும் அன்றைய பிரதமருமான ஜோஸ்பன் வாக்குப்பதிவில் மூன்றாவது இடத்திற்கு வந்து முதல் சுற்றில் அவரது பெயர் நீக்கப்பட்டது. அப்போது UMP-ன் சிராக், புதிய பாசிச தேசிய அணியின் (FN) வேட்பாளர் லூ பென்னை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சிக்காரர்கள் சிராக்கிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். இனவெறி மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ஆவேசங்கொண்ட பாசிச லூ பென்னுக்கு எதிராக நின்று குடியரசை காப்பாற்றக்கூடியவர் என்று சிராக்கை தாங்கிப்பிடித்து நின்றார்கள்.

தற்போது சிராக்கும் UMP- யும் லூ பென்னின் வித்தைகளில் ஒன்றை தங்கள் வசமாக்கிக் கொண்டு புலம்பெயர்ந்தோருக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். உத்தியோகபூர்வ இடதுகள் இதற்கு ஆதரவுகாட்டுவதன் மூலம் தங்களது துரோகச்செயலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அனுபவம் சந்தர்ப்பவாத அரசியலின் தார்மீக முடிவு எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு விளக்கிக்காட்டலாக உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் நனவில் ஒரு புத்தொளியை உருவாக்குவதாக அமைந்திருக்க வேண்டும்.

பிரான்சில் ஆளும் வட்டாரங்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும் -ஓரளவிற்கு அதுபற்றி அவர்கள் கவலையுமடைந்திருக்கிறார்கள்- பிரான்சில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக அவர்கள் நடத்தி வருகின்ற பிரச்சாரம் தேசிய முன்னணிக்கு மார்ச் தேர்தல்களில் ஆதரவைத் திரட்டித்தருவதாக அமைந்துவிடும். பர்தா சட்டத்திற்கு ஆதரவாக Le-Monde- எழுதிக் கொண்டிருந்தாலும் இந்தப் பிரச்சனையில் திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்துகொண்டே வருகிறது. டிசம்பர் 18-ல் அந்தப் பத்திரிகை ''ஒரு விவாதத்தின் முடிவுகளை தொலைநோக்கோடு FN- எதிர்பார்க்கிறது, தனக்கு பயன் கிடைக்குமென்று நம்புகிறது'' என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையில், FN- தலைவர்களின் உற்சாகமான எதிர்காலத்திட்டங்கள் பற்றிய பேட்டிகளை விமர்சனங்கள் எதுவுமில்லாமல் அப்படியே வெளியிட்டிருக்கிறது.

FN- தலைவர் ஜோன் மேரி லூ பென்னின் மகளும் அரசியல் வாரிசுமான Marine Le pen அளித்த பேட்டியை Le monde பிரசுத்திருக்கிறது: "பர்தா விவகாரம் நமது நாட்டில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விவகாரங்களை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. மற்றும் ஆண்டுக்கணக்கில் அதைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்...... நடப்பு சூழ்நிலைகளிலிருந்து FN பயனடையும் என்று அரசியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்களென்றால், அவர்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன்''.

பிரெஞ்சு பத்திரிகைகள் இந்தப் பிரச்சனையை தேசிய கண்ணோட்டத்தில் மட்டுமே எடுத்து வைக்கின்றபோதிலும், ரஃப்ரான் அரசாங்கம் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் விரிவான ஐரோப்பிய செயல்திட்டத்தின் ஒரு பகுதிதான். ஐரோப்பிய அராசங்கங்கள் உலகச் சந்தையில் போட்டியிடுவதற்காக தொழிலாளர்களது வாழ்க்கைத்தரத்தின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன மற்றும் சமூக நலத்திட்டங்களை வெட்டிக் கொண்டிருக்கின்றன அதேவேளை இராணுவத்திற்கு அதிகம் செலவிட்டு வருகின்றன, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நடவடிக்கைகளை பெருமளவில் எடுத்து வருகின்றன மற்றும் சட்டம் ஒழுங்கு பற்றி கூப்பாடு போட்டு பெருகிவரும் சமூக கொந்தளிப்புக்களை மட்டுப்படுத்த முயன்று வருகின்றன. இதர ஐரோப்பிய அரசாங்கங்கள் பிரான்சின் அபிவிருத்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அந்த நாடுகளும் அதேபோன்ற சட்டங்களை இயற்றுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன.

2003-டிசம்பர் 17-ல் இந்தச் சட்டத்திற்கான முன்னேற்பாடுகளை செய்யுமாறு சிராக் கட்டளையிட்டுப் பேசிய பின்னர் பல பெல்ஜிய அதிகாரிகள் அவரைப் பாராட்டியதுடன் பெல்ஜியமும் பிரான்சை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்குமென்று குறிப்பிட்டனர். பெல்ஜிய உள்துறை அமைச்சர் Patrick Dewael -குறிப்பிட்டார்: '' எங்கள் நாட்டிலும் அதே அளவிற்கு நாங்களும் செய்ய வேண்டும். அரசாங்கப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவ மாணவிகள் முகமூடிகளையோ அல்லது பகட்டாக வெளியில் தெரியும் சின்னங்களையோ அணியக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.'' பெல்ஜிய பிரதமர் Guy Verhofstadt அரசாங்கத்துறைகளில் பணியாற்றுகின்ற முஸ்லீம்கள் பர்தா எதையும் பயன்படுத்துவதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

ஜேர்மனியின் பல்வேறு பிராந்தியங்கள் (Sarre, Hesse மற்றும் Berlin) முஸ்லீம்களது தலை-அணி சட்ட விரோதமானது என்று அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் பிரகடனப்டுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றன, அல்லது பள்ளி ஆசிரியர்களுக்கு ( Bade- Wuttemberg, Bavaria மற்றும் Lower Saxony- TM ) மட்டுமே தடைவிதிக்க ஆராய்ந்து வருகின்றன.

See Also :

பிரான்ஸ்: முஸ்லீம்களுக்கு எதிரான இயக்கமும் மதசார்பின்மை பற்றிய போலி விவாதங்களும்

Top of page