World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Terrorist atrocity in Madrid kills at least 192 people

மாட்ரிட்டில் பயங்கரவாதக் கொடூரச் செயல்களால் குறைந்த பட்சம் 192 பேர் பலி

Statement of the WSWS Editorial Board
12 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

வியாழனன்று மாட்ரிட்டில் குண்டு வெடிப்பால் குறைந்த பட்சம் 192 பேர் கொல்லப்பட்ட கிறிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்த எந்த சாத்தியமும் கிடையாது.

ஸ்பானிய தலைநகரத்தின் மத்தியிலுள்ள Atocha ரயில் நிலையத்திலும் மற்றும் இரண்டு சிறிய ரயில் நிலையங்களிலும் ஒருங்கிணைந்த அடிப்படையில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களால் குறைந்த பட்சம் 1400 பேர் காயமடைந்தனர். மருத்துவமனைகள் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்கள் நிரம்பி வழிந்தனர். பஸ்கள் தற்காலிக மருத்துவ வசதிகளாக பயன்படுத்தப்பட்டன. மற்றும் நூற்றுக்கணகான ஸ்பானிய மக்கள் மருத்துவ மனைகள் முன், குருதிக் கொடை தருவதற்காக அணி வகுத்து நின்றனர்.

ஸ்பெயின் அரசாங்க அதிகாரிகளின் தகவல்படி, மொத்தம் 10 குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு மக்கள் பணிகளுக்கு சென்று கொண்டிருந்த நெரிசல் நேரத்தில் இந்த குண்டு வெடிப்புக்கள் நடைபெற்றன.

Atocha மிகப் பெரிய ரயில் நிலையம். நகரங்களுக்கிடையில் ஓடுகின்ற தொடர்வண்டிகளும், நகருக்குள்ளேயே சென்று வருகின்ற மெட்ரோ தொடர்வண்டி நிலையமாகவும் அது இருந்து வருகிறது. மக்கள் மிக அதிகமாக பயணம் செய்து கொண்டிருந்த நேரத்தில் மூன்று குண்டுகள் தாக்கி விட்டன. இளம் மாணவர்களும், தொழிலாளர்களும் பயணம் செய்த தொடர்வண்டி நிலையத்திற்குள் வருகை தரும்பொழுது குண்டுகள் தொடர்வண்டியை அழித்தன. தொடர் வண்டி நிலையத்திற்கு வெளியிலுள்ள ஒரு தெருவில் நாலு குண்டுகள் வெடித்தன. Elpozo மற்றும் Santa Eugenia ஆகிய இரண்டு சிறிய தொடர்வண்டி நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டன.

அழிவும் உயிரிழப்பும் இன்னும் படுமோசமாக ஆகிவிட்டிருந்திருக்கும். போலீஸ் வெடிகுண்டு நீர்ப்புப்படைகள் தக்க நடவடிக்கையெடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல குண்டுகளை செயலிழக்கச் செய்து வெடிப்புக்களை கட்டுப்படுத்தினர்.

தாகுதல் தொடர்பாக, முன் எச்சரிக்கை எதுவுமில்லை.

ஞாயிறன்று பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இந்த நேரத்தில் நடைபெற்ற இந்த கொடூரச் செயல், பிரதமர் Jose Maria Aznar-ன் வலதுசாரி அரசாங்கத்திற்கும் அவரது ஆளும் மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் வலுவூட்டுவதாக அமையும்.

ஸ்பெயினின் அரசியல் கட்சிகள் உடனடியாக, தங்களது தேர்தல் இயக்கத்தை நிறுத்தி வைத்தன. மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அஞ்சலி செலுத்துவதற்காக மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுமென்று அரசாங்கம் அறிவித்தது. தாக்குதல்களைக் கண்டித்து, அமைதி பேரணி நடத்தவும் அழைப்பு விடுத்தது.

ஸ்பெயின் மக்கள் மிகப் பெருமளவில் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஈராக் மீது அமெரிக்கா தலைமையில் நடாத்தப்பட்ட படையெடுப்பின் மிக வலுவான ஆதரவாளர்களில் ஒருவர் Aznar. இப்படி அப்பாவி ஸ்பெயின் மக்கள் கொல்லப்பட்டது, அமெரிக்காவோடும் பிரிட்டனோடும் கூட்டு சேர்ந்து "பயங்கரவாதத்தின் மீது போர்" என்ற Aznar-ன் கூற்றுக்களுக்கு தவறான சட்ட முத்திரையும், மிக அதிகமான குழப்பத்தையும், உருவாக்கிவிடும். ஸ்பெயினில் ஜனநாயக உரிமைகள் மீது புதிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் இது பயன்படுத்திக் கொள்ளப்படும்.

ஸ்பெயின் பயங்கரவாதத்தின் முன்னே மண்டியிட்டுவிடாது என்று வளைந்து விட முடியாதென்று Aznar இத்தகைய பயங்கரவாத குண்டு வெடிப்புக்களுக்கு உடனடியாக பதிலளித்தார். "பொதுமக்களை ஒட்டு மொத்தமாக கொன்று குவித்தவர்கள்" முழுமையாக வீழ்த்தப்படுவர் என்று அவர் உறுதிமொழி அறிவித்தார்.

இந்த தாக்குதல்களுக்கு எந்த குழுவும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்றாலும் Basque பிரிவினைவாத குழு ETA- வை உடனடியாக அரசாங்கம் குற்றம்சாட்டியது. Aznarன் உள்துறை அமைச்சர் Angel Acebes தேசிய குழுதான் பொறுப்பு என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லையென்று வலியுறுத்திக் கூறினார். "ETA ஸ்பெயினில் ஒரு படுகொலை நடத்துவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக இன்றைய தினம் அந்த குறிக்கோளை அது நிறைவேற்றி விட்டது" என்று அறிவித்தார்.

ஞாயிறு பொதுத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு மக்கள் கட்சி வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ள Mariano Rajoy, வாக்குக்கணிப்புக்களின்படி Aznar-க்கு பதிலாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுபவர், ETA தான் பொறுப்பு என்று அறிவித்தார். அவருக்கு ஆதரவாக ஸ்பெயின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (PSOE) யை சேர்ந்த Jose Luis Robriguez Zaptero -ம் ETA " ஒரு கிரிமினல் அமைப்பு" என்று அறிவித்தார்.

சென்ற மாதம் மாட்ரிட் நகருக்கு ஒரு லாரியில் வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற ETA உறுப்பினர்கள் என்று சந்தேகிக்ககப்பட்ட இரண்டு பேரை கைது செய்ததாக அரசாங்கம் சுட்டிக்காட்டியது. சென்ற டிசம்பரில் மாட்ரிட் தொடர்வண்டி நிலையத்தில், ஒரு தொடர்வண்டியை குண்டு வைத்து தகர்க்க ETA மேற்கொண்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, இரண்டு வெடிகுண்டுகளை கைப்பற்றி, இரண்டுபேரை கைது செய்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

என்றாலும், ETA தான் பொறுப்பா என்பது நிச்சயமாக தெரியவில்லை. இந்த அளவிற்கு இதற்கு முன்னர், அந்த அமைப்பு குண்டு தாக்குதல்களை நடத்தியதில்லை. எடுத்துக் காட்டாக, சென்ற ஆண்டு, ETA தாக்குதல்களில் மூன்று பேர் மட்டுமே மடிந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் அது தான் மிகக் குறைந்த உயிர்சேத தாக்குதலாகும்.

அல்கொய்தாவோடு தொடர்புடைய குழுக்கள் ஸ்பெயினை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்துவதற்கு Aznar- ன் ஈராக் போர் ஆதரவு காரணமாக இருக்கக் கூடுமென்று சில விமர்சகர்கள், கருத்து தெரிவித்துள்ளனர்.

தடை செய்யப்பட்டுள்ள Basque பிரிவினைவாத கட்சியான ETA யின் அரசியல் பிரிவு Bata Suna தலைவர் Arnald Otegi எடுத்துள்ள நிலையும் இதுதான். ETA இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்திருக்கக் கூடுமென்பதை அவர் மறுத்தார். "அரபு எதிர்ப்பாளர்களின்" நடவடிக்கையாக இந்த குண்டு வீச்சுக்கள் நடந்திருக்க கூடுமென்று அவர் கூறியுள்ளார்.

நேற்று மாலை அளவில், இந்தக் கொடூரங்களுக்கு கேள்விக்கிடமில்லாத சூத்திரதாரி ETA என்ற தங்களின் பயைழ வற்புறுத்தலை ஆதரிப்பதுபோல் ஸ்பானிய அரசாங்க அதிகாரிகள் காணப்பட்டனர். ஸ்பானிய உள்துறை அமைச்சர் டெட்டோனேட்டர்கள் மற்றும் குர் ஆன் வாசகங்கள் அடங்கிய வாகனம் ஒன்று குண்டு வெடித்த இடத்திற்கு அருகில் காணப்பட்டிருந்ததாக அறிவித்தார்.

லண்டனிலிருந்து வெளிவரும், al-Quds al-Arabi எனும் அரபு மொழி பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், அந்த குண்டு வெடிப்புக்களுக்கு பொறுப்பேற்றிருப்பதாக தெரிவித்து தமக்கு ஒரு கடிதம் அல் கொய்தா வலைப்பின்னலின் பகுதியான "அபு ஹஃவ்ஸ் அல் மஸ்ரி படைகளில்" இருந்து கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது.

அல்-கொய்தா உட்பட இதர பயங்கரவாத குழுக்கள் அல்லது ETA இந்த குண்டு வெடிப்புக்களை நடத்தியதா என்பதை திட்டவட்டமாக "இப்போதே கூறுவதற்கு" இயலாதென்று அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.

ஸ்பெயின் அரசாங்கப் படைகள் அல்லது, அரசாங்கத்தோடு, தொடர்புடைய வலதுசாரி சக்திகள், இந்த குண்டு வெடிப்புக்களில் சம்மந்தப்பட்டிருக்கலாம், என்ற சாத்தியக்கூறை தள்ளி விடுவதற்கில்லை. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட ஒரு ஆட்சி தனது, பிடிப்பை மக்களிடம் இறுக்கமாக நிலை நாட்டுவதற்காக இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது இதுதான் முதல் தடவையும் அல்ல.

இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு CIA முன்நின்று, இத்தாலியில் 1970 களில் நடத்திய ஆபரேஷன் "கிளாடியோ" ஆகும், இதில் வரிசையாக வெடிகுண்டு அட்டூழியங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. "பதட்ட மூலோபாயத்தின்" ஒரு பகுதியாக, அரசியலை வலதுசாரி பக்கம் திருப்பவும் இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு வளர்ந்து வருவதை முறியடிக்கவும், இந்த பயங்கரவாத குற்றச் செயல்கள் நடத்தப்பட்டன. 1974-ல் போலோனாவிற்கருகில் இத்தாலிகுஸ் தொடர்வண்டி குறிவைக்கப்பட்டது மற்றும் 1980-ல் போலோனா ரயில் நிலைய பயணிகள் தங்கும் அறையில் குண்டு வெடித்து 85 பேர் கொல்லப்பட்டனர்.

குண்டு வெடிப்புக்களை யார் நடத்தியிருந்தாலும், "அதன் தாக்கம்" ஒன்றுதான். அதுதான் பயங்கரவாதத்தின் பிற்போக்குத் தனமான பங்களிப்பின் இயல்பாகும். எங்கே வெற்று அரசியல் முடிகிறது, எங்கு அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல் தொடங்குகிறது என்பதை பகுத்துப் பார்க்க முடியாது.

மனித வாழ்க்கையின் உச்சக்கட்ட அழிவை இலக்காகக் கொண்ட வகைதொகையற்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு ஆழாமாய் குரோதம் கொண்ட குழுக்களின் அடையாள மட்டக் குறி ஆகும். இதில் பயங்கரவாத அமைப்புக்களும் தேசிய அல்லது மத வகுப்புவாத அடிப்படையில், அரசியலை நடத்துபவர்களும், பயன்படுத்துகின்ற பயங்கர தாக்குதல்களுக்கிடையில் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது.

ETA போன்ற மதச்சார்பற்றவர்களாயினும் அல்லது அல்-கொய்தா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் ஆயினும் ஏகாதிபத்திய அரசாங்கங்களோடு மோதல் போக்குகளை மேற்கொண்டிருப்பது உலக மக்களது விடுதலைக்கான மற்றும் அவர்களது அரசியல் பொருளாதார சமுதாய முற்போக்கு மேம்பாட்டிற்குமான முற்போக்கான போராட்டத்தால் நோக்கங்கொண்டது அல்ல. ETA மற்றும் அல்கொய்தா இவை இரண்டும், ஏகாதிபத்திய அரசுகளோடு தங்களுக்கு சாதகமான சமரசத்தை மட்டுமே நாடும் - தொழிலாளர்களையும் ஒடுக்கப்படும் மக்களையும் சுரண்டுவதன் பலாபலன்களில் பங்கெடுத்துக் கொள்ளவே விரும்பும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ பிரதிநிதிகள் ஆகும்.

இந்த பிற்போக்கான நோக்குநிலையின் கீழ், ஸ்பெயினிலோ, அமெரிக்காவிலோ அல்லது வேறு இடங்களிலோ தங்களது கொடூரமான தாக்குதல்களின் இலக்காக இருக்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகப் பெருமளவில் பாதிக்கப்படுவது குறித்த அவர்களின் உணர்ச்சியற்ற அக்கறையின்மை இருக்கிறது.

இங்கொன்றும் அங்கொன்றுமான அத்தகைய வன்முறைகளும் கொடூரச் செயல்களும் ஆளும் வர்க்கத்தை ஒத்துப்போகச்செய்வதற்கு நிர்பந்திக்கும் என நம்புவது கடந்த பல தலைமுறைகளாக நடந்து வரும் ஒவ்வொரு பயங்கரவாத நடவடிக்கையின் மட்டக்குறியாக இருந்து வருகிறது. அத்தகைய குற்றவியல் அரசியல் முன்னோக்கிலிருந்து முற்போக்கு எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள், ஆளும் குழுக்களுக்குள்ளேயே செயல்படுகின்ற தீவிரமான வலதுசாரி போர் வெறியர்களின் கைப்பாவையாக இந்த நடவடிக்கைகள் அமைந்து விடுகின்றன.

மாட்ரிட் குண்டு வெடிப்புக்கள் Aznar- க்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலுள்ள புஷ் நிர்வாகத்திற்கும், பிரிட்டனிலுள்ள பிளேயர் அரசாங்கத்திற்கும் ஆதரவு தருகின்ற வகையில் அமைந்திருக்கின்றது. இந்த குண்டு வெடிப்புக்களை மட்டு மழுப்பலின்றி கண்டித்தாக வேண்டும்.

Top of page