World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

Haiti: US Marines expand operations as Washington assembles puppet regime

ஹைட்டி: வாஷிங்டன் பொம்மை ஆட்சியைத் திரட்டுவதால் அமெரிக்கக் கடற்படை நடவடிக்கைகளை விஸ்தரிக்கின்றது

By Keith Jones
11 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை நிர்பந்திப்பதற்கு ஹைட்டியின் முந்திய சர்வாதிகாரிகளின் குண்டர்களால் தலைமை தாங்கப்படும் ''கிளர்ச்சிக்காரர்களின்'' படையைப் பயன்படுத்திக் கொண்டு, இப்போது புஷ் நிர்வாகம் ஒரு அரசியலமைப்பு ஜனநாயக போலி நாடகத்தை நடத்தி, புதிய அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை அமைக்க முயன்று வருகிறது. இதை நியூயோர்க் டைம்ஸ் ''அமெரிக்கா ஆதரவு ஆட்சி'' என்று மிகுந்த அடக்கமாக கூறிவருகிறது.

திங்களன்று ஹைட்டி உச்சநீதிமன்றத் தலைவர் Boniface Alexandre பதவி நீக்கம்செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பதிலாக தற்காலிக ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இது Alexandre இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக புகுமுகம் செய்யும் நிகழ்ச்சியாகும். பெப்ரவரி 29-ல் அமெரிக்க இராணுவம் மற்றும் தூதரக அதிகாரிகள் அரிஸ்டைட்டை ஹைட்டியிலிருந்து கடத்திய பின்னர் அமெரிக்க தூதர், பிரதமர் நெப்டியூன் இல்லத்தில் இந்த பதவியேற்பு நாடகத்தை நடத்தினார். இது தகுதியற்றதாக கருதப்பட்டதால் தேசிய அரண்மனையில் தொலைக்காட்சி காமிராக்கள் முன் மீண்டும் பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.

அடுத்த நாள் ''ஹைட்டி பிரமுகர்கள்'' ஏழு பேர் அடங்கிய குழு ஒன்றை ஐ.நா- அங்கீகாரத்தோடு அமெரிக்கா மற்றும் பிரான்சு நியமித்தது. ஹைட்டியின் பிரதமராக நெப்டியூனுக்கு பதிலாக Gérard Latortue -ஐ அது தேர்ந்தெடுத்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்தக் குழுவில் அரிஸ்டைட்டின் லாவலாஸ் கட்சியைச் சார்ந்த ஒரேயொரு பிரதிநிதி மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்.

Latortue வழக்கறிஞர், வர்த்தக ஆலோசகர் மற்றும் முன்னாள் ஐ.நா- அதிகாரி டுவாலியருக்கு அடுத்து வந்த Lestie Manigat அரசாங்கத்தில் சிறிதுகாலம் பதவி வகித்தவர், 1994-முதல் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். தெற்கு புளோரிடா தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு உரைகோவையை நடத்தினார். அரிஸ்டைட்டுக்கு எதிரான வலதுசாரி குழுவினருக்கு விளம்பரமாக அதுபயன்பட்டது.

ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஹெரார்ட் ஆபரஹாமை தனது பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்போவதாக Latortune குறிப்பிட்டார். ஆப்ரஹாம் டுவாலியர் பில்ஸ் மற்றும் பிராஸ்பர் ஆவிரில் சர்வாதிகாரங்களில் மூத்த அதிகாரியாக பணியாற்றிவந்தார். அதற்குப்பின்னர் 1991- தேர்தல்கள் வரை அவரே தற்காலிகமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தார். அவரது பெயர் எதிர்கால பிரதமர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது என்றாலும் ''கிளர்ச்சிக்காரர்களென்று'' அழைக்கப்படுபவர்களும், அரிஸ்டைட்டுக்கு எதிரான ஜனநாயக மேடையின் பெரும் பகுதியும் ஹைட்டியின் கலைக்கப்பட்ட இராணுவத்தை மீண்டும் கொண்டுவர முயன்று வருவதால், அவரை பிரதமராக தேர்ந்தெடுத்தால் அது மிகுந்த ஆவேசத்தை உருவாக்கிவிடும் என்று மியாமி ஹெரால்ட் பத்திரிகை கூறியுள்ளது.

உடனடியாக அரிஸ்டைட்டின் ஆதரவாளர்கள் Latortune- தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கண்டித்தனர். பொதுவாக சர்வதேச பத்திரிகைகள் ஜனநாயக மேடையின் பிரச்சார அறிக்கைகளை கிளிப்பிளைகள் போல் வெளியிட்டன. ஜனநாயக மேடையில் அரிஸ்டைடுடன் முன்னர் இணைந்திருந்த சில சக்திகளும் சேந்திருந்தாலும் ஹைட்டியின் பாரம்பரிய சர்வாதிகார வர்த்தக மற்றும் அரசியல் செல்வந்த தட்டு இதற்கு தலைமை வகித்து நடத்திச் செல்கிறது. அப்படியிருந்தும், சில நிருபர்கள் போர்ட்-ஓ- பிரின்ஸ் குடிசைப்பகுதிகளில் அரிஸ்டைட் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்கு மிகப்பெருமளவில் எதிர்ப்பு நிலவுவதை ஒப்புக்கொண்டனர். ஹைட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை ஐ.நா- அங்கீகாரத்தோடு அமெரிக்கா தலைமையிலான ''ஸ்திர தன்மை'' நிலைநாட்டும் படைகள் ஆட்சி கவிழ்ப்பில் இறங்கியதாக அவர்கள் கூறினார்கள். செவ்வாய் அன்று, சுமார் 75- கடற்படையின் நிலப்படைவீரர்கள் அரிஸ்டைட்டுக்கு விசுவாசமுள்ள புறநகர் பகுதிகளின் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது, "அப்பகுதி மக்களால் அவர்கள் தூற்றப்பட்டனர்", அவர்களை நோக்கி , ''எங்களது ஜனாதிபதியை நீங்கள் கடத்தி வீட்டீர்கள்'', ''ஐந்தாண்டுகளுக்கு, அவர் பதவியில் நீடிக்கவேண்டும்'' என்பது போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

அரிஸ்டைட் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தலைநகரில் வன்முறைகள் பெருகிவிட்டன. அசோசியேட் பிரஸ் செய்தி தகவலின்படி அரிஸ்டைட் ஆதரவாளரகள் மீது நடத்தப்பட்ட ''பழிவாங்கும் கொலைமுயற்சியால்'' குறைந்த பட்சம் 300 பேர் மாண்டுவிட்டனர். அதே நேரத்தில் பரவலாக சூறையாடல்கள் நடைபெற்றன. அரிஸ்டைட்டுக்கு விசுவாசமான ஆயுதந்தாங்கிய கும்பல்கள், chimères என்று அழைக்கப்படுகின்றவர்களும் சாதாரண குடிசைப்பகுதி மக்களும் கும்பலாக திரண்டுவந்து கடைகளிலும் இதர வர்த்தக நிறுவனங்களிலும் சூறையாடினர்.

அரிஸ்டைட் ஆட்சிக்கு வர்த்தக செல்வந்த தட்டின் குரோதத்தையும் ஹைட்டியில் மிகக்கடுமையான வறுமையையும் சமூக சமத்துவமின்மையையும் எடுத்துக் கொண்டால்- மக்களில் பாதிபேர் ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர், மூன்றில் ஒரு பகுதியினர் நிரந்தரமாக சத்தூட்டம் குறைந்தவர்கள்- எனவே அரசாங்கம் கவிழும் போது இதுபோன்ற நடவடிக்கைகள் நீடிப்பதில் வியப்பில்லை. ஆனால் ஹைட்டியின் பாரம்பரிய செல்வந்தத் தட்டினர் இந்த நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி தங்களது கட்டற்ற அதிகாரத்தை பரந்த மக்களிடம் மீண்டும் நிலைநாட்ட முயன்று வருகின்றனர்.

அரிஸ்டைட் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முறை குறித்து சர்வதேச விமர்சனங்கள் பெருகிக்கொண்டு வருவதையும், அமெரிக்கப்டைகள் சூறையாடலைத் தடுக்கத் தவறிவிட்டது என்று ஹைட்டியின் செல்வந்தத் தட்டு குறைகூறிவருவது தொடர்பாகவும், பதிலளிக்கிற வகையில் அமெரிக்க கடற்படையின் நிலப்படைப் பிவின் கர்னல் சார்லஸ் குர்கானஸ், செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ''ஸ்திரப்படை'' இனி ''பொது இடங்களில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றைப் பறித்துகொள்ளும்'' என்று விளக்கினார்.

இப்படி ஆயுதங்களை ஆயுத களைவு செய்யும் பிரச்சாரம் தொடர்பாக விவரம் எதையும் கூறாவிட்டாலும், தனது தலைமையில் செயல் பட்டுவரும் 2,300 அமெரிக்க, பிரெஞ்சு, சிலி மற்றும் கனடா துருப்புக்களும், அதிரடிப்படைவீரர்களும் ஹைட்டி தேசிய போலீசோடு இணைந்து செயல்படுவார்களென்று குர்கானஸ் தெரிவித்தார். ''ஆயுதக் களைவு உடனடியாகவும் நடக்கும் சில நிகழ்ச்சிகளுக்குப் பின்னரும் நடக்கும், ஆனால் அதைப்பற்றி மேலும் நான் சொல்லப்போவதில்லை'' என்று அறிவித்தார்.

இதற்கு முன்னர் குர்கானசும் அவரது மேல் அதிகாரிகளும், கிளர்ச்சிக்காரர்கள் அல்லது அரிஸ்டைட்டின் ஆதரவாளர்களிடமிருந்து ஆயுதங்களை களைவு செய்வது ஹைட்டி போலீசாரின் கடமைதான் என்று கூறினார்.

ஹைட்டியின் சமாதானத்தை நிலைநாட்டுவது நீண்டகால மற்றும் கடினமான நிகழ்ச்சிபோக்காகும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். செனட் ஆயுத சேவைகள் குழுவின் முன் CIA- டைரக்டர் ஜோர்ஜ் டென்னட் செவ்வாயன்று சாட்சியமளிக்கும் போது உள்நாட்டுப்போர் சாத்தியக்கூறுகள் பற்றி எச்சரித்தார். '' மனிதப் பேரழிவு அல்லது வெகுஜனங்கள் இடம்பெயர்வது நடப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது. மோதல்கள் மற்றும் பழிவாங்கும் கொலைகள், சக்கரம் போல் சுழல ஆரம்பிக்கலாம். இரண்டு பக்கங்களிலும் வலுவான ஆயுதங்களுடன் ஆத்திரம் கொண்ட மக்கள் அணிவகுத்து நிற்கின்றனர்'' என்று அவர் குறிப்பிட்டார்.

இன்றுவரை, ஹைட்டியில் உள்ள அமெரிக்கத் துருப்புக்கள் நான்கு பேர்களைக் கொன்றுள்ளனர். மூன்று பேர் துப்பாக்கி சுடும் மோதலில் கொல்லப்பட்டனர். மற்றொருவர் போர்ட்- ஓ- பிரின்ஸில் ஏழைகள் வாழும் மாவட்டத்தில் சோதனைச் சாவடியில் தனது வாகனத்தை வேகம் குறைத்து ஓட்ட மறுத்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அரிஸ்டைட் பதவிவிலகலைக் கோரவும் இல்லை, நாட்டின் வடக்குபகுதியில் அரிஸ்டைட்டுக்கு எதிரான ஆயுதங்தாங்கிய குழுக்கள் புகுந்ததை வரவேற்கவுமில்லை என்று புஷ் நிர்வாகம் கூறிவருவதற்கேற்ப, ஆயுதந்தாங்கிய அரிஸ்டைட்டின் ஆதரவாளர்களையும் மற்றும் கிளர்ச்சிக்காரர்களையும் எதிர்ப்பதில் ''ஒரே மாதிரியாக'' நடந்து கொள்வதாக காட்ட அமெரிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இந்த பாவனையின் அரசியல் நோக்கம் என்னவென்றால் தேர்ந்தெடுக்கப்படாத அமெரிக்கா உருவாக்கியுள்ள ஆட்சிக்கு ஜனநாயக முறையில் இல்லாவிட்டாலும், அரசியலமைப்புபடி ஒரு சட்ட முத்திரைபெற்று தருவதுதான் நோக்கமாகும். அரிஸ்டைட் அரசாங்கத்திற்கு எதிராக பல ஆண்டுகள் சீர்குலைவு பிரச்சாரம் நடத்தப்பட்டது, அது ஆயுதந்தாங்கிய வலது சாரிகளின் கிளர்ச்சியில் முடிந்தது.

ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்கு எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது போர்ட்-ஓ-பிரின்ஸ் குடிசைப்பகுதிகளிலும், இதர ஹைட்டி நகரங்களிலும் குறிவைத்தே அமையும். புஷ் நிர்வாகத்தின் மூத்த தலைவர்கள், கிளர்ச்சித்தலைவர்கள், கொலைகாரர்கள் என்றும் குண்டர்களென்றும் கண்டித்துவந்தாலும் அவர்களில் எவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரவில்லை.

போர்ட்-ஓ-பிரின்ஸிக்கு வெளியில் ஹைட்டியின் இரண்டாவது பெரிய நகரான கேப்-ஹைடியன் உட்பட பெரும்பாலான பகுதிகளில் கிளர்ச்சிக்காரர்கள் உண்மையிலேயே அரசாங்கம் போல் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ஜனநாயக மேடையின் தலைவர்களை வாஷிங்டன் ஜனநாயக சீர்திருத்தத்தின் முன்னணிப்படை என்று சித்தரித்து வந்தாலும் பாசிசப் போக்குள்ள கிளர்ச்சிக்காரர்களை அவர்கள் பூரணமாக ஆதரித்து வருகின்றனர்.

கிளர்ச்சி கமாண்டர் Guy Philippe போன்ற ஜனநாயக எதிர்ப்பினர் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள், தங்களை புதிய இராணுவ பலவான் ஆக ஆரம்பத்தில் அறிவித்துக் கொள்வது, வாஷிங்டனுக்கு ஓரளவிற்கு சங்கடங்கொடுப்பதாக அமைந்திருக்கிறது. ஹைட்டியின் பலமான புதிய இராணுவ தலைவரென்று Philippe தனக்கு தானே பிரகடனம் செய்து கொண்டது வாஷிங்டனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் புஷ் நிர்வாகம் கிளர்ச்சியாளர்களின் பின்னணிக்குள் மறைந்துவிட வேண்டுமென்று விரும்புகிறது. அவர்கள் ஹைட்டியின் பாதுகாப்புப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டாலும் அல்லது ஹைட்டி செல்வந்த தட்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளாக செயல்பட்டாலும் அவர்கள் நேரடியாக ஈடுபடுவதை வாஷிங்டன் விரும்பவில்லை. ஹைட்டியின் ஆளும் வர்க்கத்தைச்சார்ந்த பெரும்பாலோர் அத்தகைய வெளிப்பாட்டை எதிர்ப்பர், டுவாலியர் மற்றும் செட்ராஸ் கீழ் தாங்கள் ஆதரித்த அப்பட்டமான வன்முறை ஆட்சி மூலமே அது பொதுமக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

அமெரிக்கா உருவாக்க விரும்பும் பொம்மை ஆட்சியைச் சுற்றி மற்றொரு நெருக்கடியான சர்வதேச முறையாண்மையைப்பெற முடியாத நிலை அதிகரித்துள்ளது. செவ்வாயன்று ஆப்பிரிக்க ஒன்றியம் கரீபியன் நாடுகளின் அமைப்பான CARICOM, அரிஸ்டைட் ''அரசியலமைப்பிற்கு முரணான'' வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கையைக் கண்டித்துள்ளது. அரசியலமைப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எல்லா அரசாங்கங்களுக்குமே அண்மையில் நடைபெற்ற ஹைட்டி சம்பவங்கள் ஒரு ''ஆபத்தான முன்னோடியாக'' அமைந்திருப்பதாக ஆபிரிக்க ஒன்றியம்'' தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

ஒரு அரசியல் கடத்தல்

அரிஸ்டைட் அமெரிக்க இராஜதந்திர மற்றும் இராணுவ அதிகாரிகள் திடீரென்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது அரசை கவிழ்ப்பதற்காக தன்னை கடத்திவந்துவிட்டதாக உலக பத்திரிகையாளர்கள் முன் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார். ''என்னைக் கடத்தியது அரசியல் அடிப்படையில்தான், அதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்'' என்று திங்களன்று மத்திய ஆபிரிக்க குடியரசின் தலைநகரான பான்குய்யில் பேட்டியளித்தார்.

தான் ஹைட்டியின் ஜனாதிபதியாக இன்னமும் நீடித்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அரிஸ்டைட், ஹைட்டியின் ''அரசியலமைப்பு ஒழுங்கை'' மீட்பதற்கு ''அமைதியான எதிர்ப்பு இயக்கம்'' நடத்தப்பட வேண்டும் என்றார்.

பெப்ரவரி 29-ல் ஹைட்டியிலிருந்து கடத்தப்பட்டு மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், அரிஸ்டைட் முதல் தடவையாக பகிரங்கமாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தது அப்போதுதான். வறுமையில் வாடுகின்ற மேற்கு ஆபிரிக்க நாட்டின் சர்வாதிகாரி முன்னாள் காலனி ஆதிக்க அரசான பிரான்சுடன் நெருக்கமான உறவு வைத்திருக்கிறார்.

மத்திய ஆபிரிக்க குடியரசில் அரிஸ்டைட்டை சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று திரும்பத்திரும்ப செய்திகள் வந்துகொண்டிருந்தன. அமெரிக்காவிலிருந்து வந்த அரிஸ்டைட்டின் ஆதரவாளர்களின் பேராளர் குழு ஒன்று ஞாயிறன்று அரிஸ்டைட்டை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.

அரிஸ்டைட் தங்கியுள்ள ஜனாதிபதி மாளிகை வளாக காவலர்கள் ஹைட்டி ஆதரவு நெட்வேர்க் மற்றும் சர்வதேச செயல்பாட்டு மையத்தின் பிரதிநிதிகளுக்கு, அவர்கள் அந்த மாளிகையில் நுழைய முடியாது என்று தெரிவித்தனர், அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அந்த சுற்று வளாகத்திற்கு வெளியில் வந்து அவர்களை சந்திக்க முடியாதென்றும் கூறிவிட்டனர். அரிஸ்டைட்டுக்கு ஒரு செய்தியை கொடுக்கவும் கூட மறுத்துவிட்டனர். அல்லது அமெரிக்க பார்வையாளர்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் அனுமதிக்கவில்லை.

அன்றையதினம் மத்திய ஆபிரிக்க குடியரசின் வெளியுறவு அமைச்சரான Charles Herve Wenezoui அரிஸ்டைட்டின் மனைவி வெளியில் வந்தபோது அவர் நிருபர்களுடன் பேசக்கூடாது என்று கட்டளையிட்டார். ஒரு தபால் கார்டில் தனது கணவர் இரண்டு வாக்கியங்களை எழுதியிருந்ததைக் கொண்டுவந்து நிருபர்களுக்கு தரும்போது இவ்வாறு அவருக்கு கட்டளையிடப்பட்டது.

திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், மத்திய ஆபிரிக்க குடியரசு அரசாங்கத்தை பகைத்துக்கொள்ளாத அளவிற்கு மிக கவனமாக தனது கருத்துக்களைக் கூறினார். அமெரிக்கா மற்றும் பிரான்சு அரசாங்கங்களுக்கு எதிராக அவர் தொலைபேசியில் விமர்சனங்களை தெரிவித்தது குறித்து மத்திய ஆபிரிக்க குடியரசு அரசாங்கம் தனது அதிருப்தியை அரிஸ்டைட்டிடம் தெரிவித்தது. ''நான் Bangui-யில் எப்போதும் கைதியாக இருந்ததில்லை. இப்போதும் நான் கைதியல்ல'' என்று அரிஸ்டைட் கூறினார்.

ஹைட்டியைவிட்டு தான் வெளியேறுவதற்காகவும் தனது அரசாங்கத்தை பயங்கரவாதிகள், கவிழ்ப்பதற்கு வழிசெய்வதற்காகவும், வாஷிங்டனும், பாரிசும் அச்சுறுத்தல்களையும் பொய்களையும் பயன்படுத்தியதாக அரிஸ்டைட் குற்றம் சாட்டினார். செய்தியாளர் மாநாட்டில், அரிஸ்டைட் பெப்ரவரி 28, 29-நிகழ்ச்சிகளுக்கான புதிய விவரம் எதையும் தரவில்லை. இதற்கு முன்னர் தன்னையும், தனது மனைவியையும் அமெரிக்க அதிகாரிகள் உடனடி மரணம் நிகழ இருப்பதாகவும், கிளர்ச்சிக்காரர்கள் ஹைட்டி தலைநகர் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், அவர்களின் மரணத்தைத்தடுக்க அமெரிக்கா எதுவும் செய்யாது என்றும் அச்சுறுத்தியதாகக் குறிப்பிட்டார். சான்பிரான்சிஸ்கோவில் செயல்படும் தனது பாதுகாப்பு நிறுவனம் பென்டகனோடும், அமெரிக்க அரசுத்துறையோடும் நெருக்கமான உறவைக் கொண்டது என்றும், எனவே தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைக்கப்பட்டன என்றும் கூறினார்.

பசிபிகா வானொலி நிருபருக்கு அரிஸ்டைட் தந்த பேட்டியில், ''பெப்ரவரி 28-ல் இரவில் திடீரென்று அமெரிக்க இராணுவ அதிகாரிகள் ஏற்கெனவே தலைநகர் முழுவதிலும் நிறைந்திருந்ததாகவும், டபரேப் பகுதியிலுள்ள தனது வீட்டில் புகுந்து, அரசாங்கத்துடன் (ஹைட்டியன்) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள அனைத்து அமெரிக்கப் பாதுகாப்பு ஏஜெண்டுகளுக்கும் இரண்டே வழிகள்தான் உள்ளன என்று கூறினார். அவர்கள் அமெரிக்காவிற்கு உடனடியாக திரும்பிச்செல்ல வேண்டும் அல்லது போரிட்டு மடிய வேண்டும். இரண்டாவதாக மீதமிருக்கும் 25-அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஹைட்டி அரசாங்கத்தினால் பணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் 29-ந்தேதி வருபவர்கள் ஹைட்டியில் தடுத்து நிறுத்தப்பட்டுவிடுவர்'' என்று குறிப்பிட்டனர்.

அவரது வீட்டைவிட்டு வெளியேறியதும், ஒரு செய்தியாளர் மாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக அரிஸ்டைட்டிடம் சொன்னார்கள். அதற்குப் பதிலாக, ''எனது கார் விமான நிலையத்தில் நின்றது. அமெரிக்கர்கள் கட்டுப்பாட்டில் அந்த விமான நிலையம் இருந்தது'' என்று திங்களன்று தெரிவித்தார். அங்கு நின்ற விமானத்தில் என்னை ஏற்றியதும், அவர்கள் கைதி போன்று என்னை நடத்தினர் என்று அரிஸ்டைட் கூறினார். வங்கி தலைநகரில் தனது விமானம் இறங்குகிறவரை தன்னை பிடித்துக்கொண்டவர்கள் எங்கு செல்கிறோம், என்பதைக் கூறவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அரிஸ்டைட்டின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கிற வகையில் அவரை வாயை மூடுமாறு புஷ் நிர்வாகம் கட்டளையிட்டது. ''அரிஸ்டைட் உண்மையிலேயே தனது நாட்டிற்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால்,... அவரது நாடு உண்மையிலேயே எதிர்காலத்தை நோக்கி நடைபோடவேண்டுமென்றால் அவர் கடந்த காலத்தை மீண்டும் கிளறக் கூடாது'' என்று அரசுத்துறை பேச்சாளர் ரிச்சர்டு பெளச்சர் அறிவித்தார்.

அரிஸ்டைட் : ஏற்கனவே அமெரிக்க பிடியில்

கடைசி நேரத்தில் அரிஸ்டைட் தந்திருக்கும் தகவல்கள் பலவற்றை தனிப்பட்ட வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் அரிஸ்டைட்டை வாஷிங்டன் மிரட்டி ஹைட்டியிலிருந்து வெளியேறிச் செல்லுமாறு நிர்பந்திக்க முடிந்ததென்றால் அதற்குக்காரணம் நீண்ட காலத்திற்கு முன்னரே அவர் ஏகாதிபத்தியத்தின் கரங்களில் சிக்கிக்கொண்டார். 1986-க்கும் 1991-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஹைட்டியை உலுக்கிய கிளர்ச்சியை அரசியல் ரீதியில் நீர்த்துப்போகச்செய்து விட்டார், மற்றும் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளைகளை நிறைவேற்றினார் என்பதுதான்.

''தாராளவாத இறையியற் கொள்கை'' விளக்குநராக முதலில் அரிஸ்டைட் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கண்டனம் தெரிவிப்பவராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். அப்படியிருந்தும் 1991-ல் தனது எட்டுமாத ஆட்சி இராணுவத்தால் கவிழ்க்கப்பட்ட போது ஹைட்டி மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்தியத்திற்கும் அவர்களது ஹைட்டிய ஏஜென்டுகளுக்கும் எதிராக அணிதிரட்டி போராட்டம் நடத்த அவர் சம்மதிக்கவில்லை. அதற்கு மாறாக, ''ஜனநாயகத்தை மீட்பதற்காக'' டுவாலியர்களை அழைத்த பழைய ஏகாதிபத்தியமான வாஷிங்டனுக்கு மனுச்செய்வதற்காக ஹைட்டி மக்களைக் கேட்டுக்கொண்டார்.

அரிஸ்டைட் சீனியர் புஷ் நிர்வாகத்தின் ஆதரவைப் பெறமுடியவில்லை. 1991-ல் செட்ரஸ் ஆட்சிக்கவிழ்ப்பு கிளர்ச்சிக்கு பச்சைகொடி காட்டியது அந்த நிர்வாகம். ஆனால் கிளிண்டன் நிர்வாகம், சீரமைப்பு, தனியார் மயம், பொதுப்பணிக்கு செலவுகள் குறைப்பு, அமெரிக்க வேளாண்மை ஏற்றுமதிகளுக்கு காப்புவரிகள் தடைகளை அகற்றல் உள்பட IMF- ஆல் கோரப்பட்ட மறுசீரமைப்புக் கொள்கைகளை திணிப்பதற்கு அரிஸ்டைட்டிடமிருந்து உறுதியைப் பெற்றுக் கொண்ட பின்னர், அரிஸ்டைட்டை மீண்டும் பதவியில் அமர்த்தியது.

2001- தேர்தலில் அரிஸ்டைட் மீண்டும் வெற்றிபெற முடிந்தது. அதேசமயம், அவரது வலதுசாரி கொள்கைகள் வேண்டியவர்களுக்கு சலுகைக்காட்டும் போக்கு அதிகரித்தது, தனது ஆட்சியை நிலைநாட்ட வன்முறையை நாடியது ஆகியவற்றால் அவரது மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்தது. எனவே சென்ற மாதம் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியை எதிர்கொள்ளுகின்ற நேரத்தில் அவர் ஏகாதிபத்திய அரசுகள் தனது அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்று விண்ணப்பம் விடுக்கின்ற நிலைக்கு வந்துவிட்டார். மாறாக புஷ் நிர்வாகமும், வாஷிங்டனுடன் நட்புறவுகளை மீட்க வேண்டுமென்ற ஆர்வத்தில் பிரான்சும், தங்களது அடிவருடிகளில் ஒருவரான பழைய சர்வாதிகாரத்தின் எடுபிடிகளைப் பயன்படுத்தி ஹைட்டியை மீண்டும் கொந்தளிப்பில் ஆழ்த்தி, ''ஆட்சி மாற்றம்'' செய்வதற்கு தயாராகிவிட்டது என்பதை அவர் நேரில் உணர்ந்துகொண்டார்.

See Also :

ஹைட்டி: அமெரிக்க ஆதரவினால் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போர்ட்-ஒ-பிரின்சில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி

அமெரிக்கா ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து ஹைட்டியில் பயங்கர நடவடிக்கைகள்

அரிஸ்டைட் கடத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கிடையில் அமெரிக்க கடற்படையினர் ஹைட்டி தலைநகரை ஆக்கிரமித்துக் கொண்டனர்

ஹைட்டியின் அரிஸ்டைட் தூக்கிவீசல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு

ஹைட்டியின் "அகிம்சை வாத" எதிர்க்கட்சி போர்ட்-ஒ-பிரின்சில் ஓர் இரத்தக் களரியை விரும்புகிறதா?

வலதுசாரி தலைமையிலான கிளர்ச்சிஎழுச்சி ஹைட்டியை அதிரவைக்கிறது

 

Top of page