World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

World Socialist Web Site
and Socialist Equality Party hold conference on "The 2004 US Election: the Case for a Socialist Alternative"

உலக சோசலிச வலைதளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி "2004 அமெரிக்கத் தேர்தல் : சோசலிச மாற்றீட்டுக்கான பாதை" மாநாட்டை நடாத்தியது.

By Shannon Jones
15 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

மிச்சிகன், அன்ஆர்பரில் உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் சென்ற வார இறுதியில் நடாத்திய மாநாட்டின் சுருக்கமான குறிப்பை இன்று நாம் பிரசுரிக்கிறோம். வரும் நாட்களில் உலக சோசலிச வலைத் தளமானது, அதன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரும், அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளருமான டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்ட தொடக்க உரை மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி சார்பில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கான வேட்பாளர்களான Bill Van Auken மற்றும் Jim Lawrance ஆகியோரது உரைகள் உட்பட, மாநாடு பற்றிய விரிவான விவரங்களை வெளியிடும்.

மார்ச் 13-14-ல், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியன "2004 அமெரிக்கத் தேர்தல்: சோசலிச மாற்றீட்டுக்கான பாதை" என்ற தலைப்பில் மிகவும் வெற்றிகரமான மாநாட்டை நடத்தின. அன்ஆர்பரில் உள்ள மிச்சிக்கன் பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாநாடு நடைபெற்றது. அமெரிக்கா முழுவதிலும் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தொழில் முறை சார்ந்தவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட 135 பிரதிநிதிகள், மாநாட்டில் கலந்து கொண்டனர். கலிபோர்னியா, பசிபிக் வட மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களிலிருந்து பயணம் செய்து பேராளர்கள் வந்த கலந்து கொண்டனர். ஆஸ்திரேலியா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கூட கலந்து கொண்டனர்.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவ கட்சியும் மார்ச் 2003-ல், அன்ஆர்பரில் நடத்திய "சோசலிசமும் ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான போராட்டமும்" என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களில், கணிசமான பிரிவினர் மாநாட்டிற்கு வருகை தந்திருந்தனர், மற்றும் அதற்குப் பின்னர் தொடர்ந்து வலைத்தள பணிகளில் பங்கெடுத்துக் கொண்டு வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் சர்வதேச தன்மையை வலியுறுத்தும் வகையில் ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து (German Partei für Soziale Gleichheit) பீட்டர் சுவார்ட்சும், பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து ஜூலி ஹைலண்ட் மற்றும் ஆஸ்திரேலியாவின் சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து றிச்சார்ட் பிலிப்ஸூம் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

ஜனவரி 27-ல் WSWS மூலம் பிரசுரித்த SEP தேர்தல் அறிக்கைதான் மாநாட்டின் அரசியல் விவாதங்களின் அடிப்படையாக அமைந்தது. (பார்க்க- "அமெரிக்க ஜனாதிபித தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி பங்குபெறுவதாக அறிவிப்பு") இந்த மாநாட்டிற்கான அழைப்பில், அதன் நோக்கம் அமெரிக்க ஏகாதிபத்தியம் வெடித்துக் கிளம்பியதற்கான அடிப்படை பொருளாதார மற்றும் சமூக - அரசியல் ஆணிவேர்கள், அமெரிக்காவில் தாராண்மை சீர்திருத்தவாதத்தின் தோல்வி மற்றும் இரண்டு முதலாளித்துவ கட்சி முறைக்கு ஒரு சுயாதீனமான சோசலிச மாற்றைக் கட்டுவதற்கான தேவை இவற்றை குவிமையப்படுத்தி, அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியாகவும் உள்ள உழைக்கும் மக்களின் முன்னே 2004 தேர்தல் முன் வைத்திருக்கும் அரசியல் பிரச்சினைகள் மீதான முற்றுமுழுதான கலந்துரையாடலை முன்னெடுப்பதாகும் என உலக சோசலிச வலைத் தளம் கூறியது.

அத்தகைய விவாதத்தை நடாத்துவதில் மாநாடு வெற்றிபெற்றது. மாநாட்டு பிரதிநிதிகள் பலர் அமெரிக்கா முன்நின்று தூண்டிவிட்ட ஹைட்டி ஆட்சிக் கவிழ்ப்பு, உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் சமூக நெருக்கடி, ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள், மற்றும் எல்லாவகையான தேசியவாதம் மற்றும் பொருளாதார தற்காப்புவாதம் ஆகியவற்றிற்கு எதிர்ப்பில் ஒரு சர்வதேச வேலைத் திட்டத்திற்குப் போராட வேண்டிய தேவை போன்ற மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து உரையாற்றினர்.

கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் அடிப்படையாக SEP தேர்தல் அறிக்கையை மாநாடு ஒருமனதாக ஏற்றுக் கொண்டது. பல்வேறு லிபரல் மற்றும் "இடது" அமைப்புக்கள், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெரியின் பக்கம் அணிவகுத்து நிற்பதையும், புஷ்-ஐ தோற்கடிப்பதுதான் தலையாய பிரச்சனை என்று சுதந்திரமான பிரச்சாரம் எதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் மாநாடு தள்ளுபடி செய்தது.

மாநாட்டிற்கான தனது ஆரம்ப அறிக்கையில் டேவிட் நோர்த் இந்த பிரச்சனை குறித்து நேரடியாக குறிப்பிடுகையில், "அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் படிப்பினைகள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சோசலிச சமத்துவக் கட்சி 2004 தேர்தலில் மிக முக்கியமான, உயிர்நாடி பிரச்சனை ஜனாதிபதி புஷ்-ஐ தோற்கடிப்பதுதான், வேறு எல்லா கவலைகளும், கருதிப்பார்த்தல்களும் அதற்கு கீழ்பட்டதுதான் என்ற கருத்தை முற்றிலுமாக தள்ளுபடி செய்கிறது.

"இல்லை, மிகவும் நெருக்கடியான அவசரமான பணி சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டம் ஆகும்".

ஈராக் போர் தொடர்ந்து வந்தது "புலனாய்வுத் தகவலின் தவறால்" என சித்தரிக்க அமெரிக்க ஊடகங்களும், அரசியல் நிர்வாகத் தரப்பினரும், திட்டமிட்டு, பொய் கூறும் முயற்சிகள் தொடர்பாக, நோர்த், "இல்லை. அந்தப் போர் 'புலனாய்வுத் தகவலின் தவறால்' ஏற்பட்ட விளைவல்ல. புத்திஜீவித ஊனமடைந்த ஜனாதிபதியின் நடவடிக்கையுமல்ல. மாறாக, ஒரு அரசியல் அர்த்தத்தில் சொல்வதாயிருந்தால், அமெரிக்க ஜனநாயகத்தின் நிறுவனங்கள், ஒரு நிலைமுறியும் புள்ளிக்கு வந்துவிட்ட, ஒரு வரலாற்றுத் தோல்வியின் உற்பத்தி ஆகும்" என்று குறிப்பிட்டார்.

ஈராக் போரைக் கண்டித்த Vermont முன்னாள் கவர்னர் Howard Dean ஜனநாயகக் கட்சி முதல்நிலைத் தேர்தல் பிரச்சாரத்தை தடம் புரளச் செய்த மற்றும் ஈராக்கில் இராணுவரீதியாக தலையிடுவதற்கு புஷ்-ற்கு அங்கீகாரமளித்த, நாடாளுமன்ற தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த செனட்டர் ஜோன் கெரிக்கு வேட்பு மனுவை உறுதிப்படுத்திய, ஆளும் செல்வந்தத் தட்டினர் மேற்கொண்ட செயல்முறையை அவர் ஆய்வு செய்தார். சம்பிரதாய பெரு வர்த்தக நிறுவன அரசியல்வாதியான Dean- னும் ஆளும் செல்வந்தத் தட்டால் ஏற்கமுடியாதவராயிருந்தார், ஏனெனில் அவரது முன்மொழிவு ஜனாதிபதி தேர்தலில் ஈராக் போர் பற்றி விவாதிக்க வேண்டியிருக்கலாம் என்பதால் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டுமே அத்தகைய விவாதத்தை தடுப்பதில் உறுதியாக நின்றன.

கெரி அல்லது ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தொழிலாள வர்க்கத்தின் நலன்கள் எதுவும் எடுத்துரைக்கப்படமாட்டாது என்பதை நோர்த் வலியுறுத்திக் கூறினார். "இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கோட்பாட்டு நிலையை விவரிப்பதாயிருந்தால் அது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். முதலாளித்துவ இருகட்சி அமைப்பு முறையின் வரலாற்று மதிப்பீட்டிலிருந்து ஆரம்பிப்பது அவசியமானதாகும், குறிப்பாக ஜனநாயகக் கட்சியின் வர்க்கத்தன்மையை ஆராய வேண்டும்" என நோர்த் குறிப்பிட்டார்.

"சுயாதீனமான தொழிலாள வர்க்க கட்சியை உருவாக விடாமல், முதலாளித்துவ இரு கட்சி முறையின் மேலாதிக்கத்தை பேணவும், அரசியல் அதிகாரத்தின் முதலாளித்துவ வர்க்க ஏகபோகத்தை நிலைநாட்டவும், அமெரிக்க முதலாளித்துவத்தின் கைப்பாவையாக நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஜனநாயக கட்சி இருந்து வருகிறது" என்றும் நோர்த் குறிப்பிட்டார்.

அவரது ஆரம்ப அறிக்கையைத் தொடர்ந்து, SEP தேர்தல் அறிக்கை மீது பிரதிநிதிகள் விரிவான விவாதங்களை நடத்தினர். தொழில்களை பொதுச் சொத்துடைமையாக்குவது, பாரபட்சத்தை உறுதிப்படுத்தும் செயல்கள் மற்றும் இனப்பாகுபாட்டின் ஏனைய வடிவங்களுக்கு சோசலிச நோக்கில் நடவடிக்கை எடுப்பது, ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து நிற்பது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்காக போராடுவது, உட்பட பல்வேறு வகையான பிரச்சனைகள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடல் நடத்தினர்.

SEP சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் பில் வான் ஓகென் மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களோடு ஐக்கியப்படுத்தும் ஒரு வேலைத் திட்டத்தை அமெரிக்க தொழிலாள வர்க்கம் அடிப்படையாகக் கொள்வதற்கான தேவையை அவர் வலியுறுத்திக் கூறினார். "தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் அடிப்படையில், ஏகாதிபத்தியத்திற்கெதிராக உலகம் தழுவிய ஒரு உண்மையான இயக்கத்தை உருவாக்குவதில் ஐரோப்பா, தெற்கு ஆசியா, ஆஸ்திரேலியா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள நமது சோசலிச சமத்துவக் கட்சி தோழர்களுடன் சேர்ந்து ஒன்றிணைந்து, இந்த தலையீட்டின் மூலம் நாம் முயன்று வருகிறோம்" என அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஹைட்டி நாட்டின் ஜனாதிபதி அரிஸ்டைட் அமெரிக்க ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு இலக்கானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள வெடிப்பின் மற்றொரு விளக்கிக்காட்டல் ஆகும்.

"வாஷிங்டன் தான் நினைக்கும் யாரையும் ஆட்சியிலிருந்து இறக்க, எந்த நாட்டு எல்லையையும் பிடித்துக் கொள்ள மற்றும் பொம்மை ஆட்சிகளை உருவாக்க தனக்குத்தானே உரிமை கற்பித்துக்கொள்கிறது. புஷ் நிர்வாகம் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும், தலையிட்டது ஏதோ உலக ஜனநாயகத்தை காப்பதற்கு சிலுவைப் போர் நடத்துவதைப் போன்றது எனக் கூறிக் கொண்டதன் கபடத்தன்மையை வேறெதுவும் மிகத்தெளிவாக அம்பலப்படுத்தியிருக்க முடியாது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராட விரும்புபவர்களுக்கு, ஜனநாயகக் கட்சி மாற்று அல்ல, என்பதை வான் ஓகென் விளக்கினார். பாரசீக வளைகுடா எண்ணெயை அடைவதில் தடையில்லா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உரிமையை வலியுறுத்தி, அப்பகுதியில் தனது அதிரடிப்படைகளை நிறுவிய, ஜிம்மி கார்ட்டரின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் முதல், ஈராக்கிற்கெதிராக அந்த நாட்டு மக்களை நசுக்கும் பொருளாதார தடைகளை விதித்து, அதன் மூலம் உணவு மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் 10 லட்சம் பேர் மடிய வழிவகுத்த ஜனநாயகக் கட்சியை சார்ந்த பில்-கிளிண்டன் வரையில் அமெரிக்காவின் இத்தகைய தலையீட்டின் வரலாற்றை அவர் ஆராய்ந்தார்.

ஜனநாயகக் கட்சி தலைமைக் கவுன்சில் ஆவணமொன்றை அவர் மேற்கோள் காட்டினார். அது வேட்பாளர் கெரியின் வெளிநாட்டுக் கொள்கைக்கு பிரதான அடிப்படையாக பயன்பட்டது. அந்த ஆவணம் புஷ்-ன் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை எந்தவிதமான விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறது மற்றும் முன்கூட்டிய திடீர் தாக்குதல் கொள்கை விளக்கத்தை அப்படியே பின்பற்றுகிறது. புஷ்-ன் வெளிநாட்டுக் கொள்கைக்கு தெரிவிக்கப்படும் கண்டனங்கள் வெறும் அரசியல் தந்திர அடிப்படையில், ஜனநாயகக்கட்சி கூறி வருவதே தவிர கொள்கை அடிப்படையில் தெரிவிக்கப்படுகின்ற எதிர்ப்பு அல்ல. பல சந்தர்ப்பங்களில் ஜனநாயகக் கட்சி, தற்போதைய நிர்வாகத்தைவிட, மிக உக்கிரமான இராணுவமய கொள்கைக்கு கூட குரல் கொடுத்து வருகிறது என்பதை வான் ஓகென் விவரித்தார்.

"அமெரிக்க தேர்தல்கள் எடுத்து வைக்கும், பிரச்சனைகள், உலகப் பிரச்சனைகளாகும். எனவே அவற்றிற்கு சர்வதேச அடிப்படையில் தீர்வு தேவைப்படுகிறது. சோசலிச சமத்துவக் கட்சியால் நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரமானது, போருக்கு எதிரான உலக ரீதியான ஒரு தாக்குதலின் ஒரு பகுதியாக மற்றும் சமுதாயத்தை சோசலிச ரீதியில் மறுஒழுங்கு செய்வதற்காக, உலக ஏகாதிபத்தியத்தின் மையத்தில், இங்கு அரசியல் சூழலில் தலையிடு செய்வதற்கு, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் நனவுபூர்வமான பகுதிகளுக்கான வழிமுறையாக கட்டாயம் ஆக வேண்டும்" என அவர் உரையை முடித்தார்.

துணை ஜனாதிபதி பதவிக்கான SEP வேட்பாளரான ஜிம் லோரன்ஸ், வேலைகளை மற்றும் வாழ்க்கை தரத்தைப் பாதுகாக்க இலாப அமைப்புமுறைக் கெதிரான ஒரு அரசியல் போராட்டம் நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஓஹியோ மாகாணத்திலுள்ள Dayton பகுதியில் கார் தொழிற்சாலைகளில் பணியாற்றி வந்தார் மற்றும் ஐக்கிய கார் தொழிலாளர்கள் யூனியன் (UAW) உறுப்பினரும் ஆவார்.

"வேலை வாய்ப்புக்களை மற்றும் வாழ்க்கைத்தரத்தை காத்து நிற்பதற்கு, தொழிலாள வர்க்கம் ஓர் அரசியல் மூலோபாயத்தை உருவாக்கியாக வேண்டும். அத்தகைய மூலோபாயம் ஒரு நூற்றாண்டில் கடைசி கால் நூற்றாண்டுகளில் நடைபெற்ற புறநிலை பொருளாதார மாற்றங்களை தெளிவாகப் புரிந்து கொண்டு உருவாக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களது நலனுக்காக பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு வந்தவர்களது கொள்கைகளையும் அவர்களது சாதனைகளையும், விமர்சன நோக்கில் மதிப்பீடு செய்வதையும், உள்ளடக்கியதாக இந்த மூலோபாயம் அமைந்திருக்க வேண்டும்". என்று அவர் சொன்னார்.

AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவம் புரிந்துள்ள துயர்மிக்க செயல்களை மீளாய்வு செய்தார். கம்யூனிச எதிர்ப்பு, பொருளாதார தேசியவாதம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க அதிகாரத்துவம் செயல்பட்டு வந்ததால் ஒரு தொழிற்சாலை மூடுவதைக்கூட தடுக்க முடியவில்லை அல்லது ஒரு தொழிலாளியின் வேலையைக் கூட காப்பாற்ற இயலவில்லை என்று லோரன்ஸ் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க தொழிலாளர்களின் எதிரிகள் பெரு வர்த்தகர்களல்ல ஆனால் அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்புக்களை "களவாடிக்கொண்டு" செல்வதாகக் கூறப்படும் ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள்தான் என்று அமெரிக்கத் தொழிலாளர்களை நம்பச்செய்ய வைக்கும் நோக்கத்துடன் "UAW -ம் இதர தொழிற்சங்கங்களும் பெருமளவிற்கு நச்சுத் தன்மை கொண்ட பழிப்புவாத தேசிய வெறி மற்றும் இன வெறியை வளர்த்தன. .

"இப்படி பொருளாதார தேசியவாதத்தை வளர்த்ததால் விளைந்ததென்ன? நான் முதலில் UAW தொழிற்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தபோது இச்சங்கம் அடிப்படைத் தொழில் துறையில் 2.25 மில்லியன் தொழிலாளர்களை பெற்றிருந்தது. இன்றோ இது 6,38,000 உறுப்பினர்களாக குறைந்துவிட்டிருக்கிறது.

அவர் மேலும் கூறினார், "இப்படி வேலைவாய்ப்புக்கள் ஒழிக்கப்பட்டதற்கு வர்த்தகமோ அல்லது பூகோளமயமாக்கலோ கூட காரணமல்ல. மனிதனது தேவைகளை, தனி மனிதர்கள் செல்வக் குவிப்பிற்கு கீழாக்கும் பொருளாதார அமைப்பினால்தான், இந்த நிலை உருவாயிற்று. இந்த அமைப்புமுறையானது 587 பேர் 1.9 டிரில்லியன் டாலர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்கும் அதே நேரத்தில், உலக மக்களில் பாதிப்பேர் ஒரு நாளைக்கு 2 டாலருக்கும் குறைந்த வருமானத்தில் வாடிக் கொண்டிருக்கிறார்கள், எனவே அது வரலாற்று அடிப்படையில் தனது இறுதிக் கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது."

தேர்தல் பிரச்சார இயக்கத்தின் நடைமுறைப் பணிகள் பற்றிய அறிக்கையை WSWS ஆசிரியர் குழு உறுப்பினர் பட்ரிக் மார்ட்டின் வழங்கினார். அமெரிக்க தேர்தல் சட்டங்களின் ஜனநாயக விரோத தன்மையை அவர் அழுத்தமாக சுட்டிக்காட்டினார்.

"மூன்றாவது கட்சிக்கு வாக்குச் சீட்டில் இடம் கிடைக்க வேண்டுமென்ற நிலை வருகின்றபோது, ஜனநாயகத்தின் சிறப்புகளுக்கெல்லாம் மாதிரி என்று அதன் ஆளும் செல்வந்தத் தட்டுக்களின் வெளிப்படையான அறிவிப்புக்களுக்கு மாறாக நடைமுறைகள் உள்ளன. ஆஸ்திரேலியா நீங்கலாக, வளர்ந்து விட்ட உலகில் வேறு எந்த நாட்டிலும், நீண்ட நெடுங்காலமாக நிலைபெற்றுவிட்ட அரசியல் கட்சிகளின் ஏகபோக உரிமைகளுக்கு சவால்விட்டு, எதிர்த்து நிற்கும் கட்சிகளுக்கு அமெரிக்காவைப் போன்று இவ்வளவு தடைக்கற்கள் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களான பில் வான் ஓகென் மற்றும் ஜிம் லோரன்ஸ் 50 மாநிலங்களிலும் வாக்குச் சீட்டில் இடம் பெறுவதற்கு 7,50,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களது கையெழுத்துக்களை சேகரித்தாக வேண்டுமென்று அவர் குறிப்பிட்டார். கையெழுத்துக்களை சேகரித்ததுடன் SEP ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் முதல்நிலையில் கலந்து கொள்கின்ற எலக்டர்களையும் பதிவு செய்தாக வேண்டும் மற்றும் பல்வேறு சட்டநுட்ப தேவைகளையும் நிறைவேற்றியாக வேண்டும் என்று சுட்டிக் காட்டினார்.

இந்தச் சங்கடங்களுக்கிடையிலும் SEP முடிந்தவரை பல மாநிலங்களில் வாக்குச் சீட்டு அந்தஸ்தை பெறுவதற்குப் போராடும் மற்றும் அமெரிக்க கீழ்சபைக்கான போட்டிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

விவாதங்களைத் தொடர்ந்து நிதியுதவி தேவையென்று விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று WSWS பணிகளுக்கு உதவுவதற்காக பேராளர்கள் தாராளமாக நன்கொடைகளைத் தர முன் வந்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட பலர் SEP-ல் உறுப்பினராக சேருவதற்கு மனுச் செய்தனர். நாடாளுமன்ற கீழ்சபை மற்றும் செனட் தேர்தல்களில் வேட்பாளர்களாக போட்டியிட முன் வந்தனர்.

See Also :

சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்கின்றது

Top of page