World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The diplomacy of imperialism: Iraq and US foreign policy

Part two: The Iraqi nationalist movements, the permanent revolution, and the Cold War

ஏகாதிபத்தியத்தின் இராஜதந்திரம்: ஈராக்கும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும்

இரண்டாம் பகுதி: ஈராக்கியத் தேசிய இயக்கங்கள், நிரந்தரப் புரட்சி, மற்றும் பனிப்போர்

By Joseph Kay
13 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கின் வரலாறு, அதன் அமெரிக்காவுடனான உறவுகளை ஆராயும் தொடர் கட்டுரைகளில் இது இரண்டாவது ஆகும். மார்ச் 12 (ஆங்கிலத்தில்) வெளிவந்த முதல் கட்டுரையில், நாட்டின் சமுதாய உறவுகளும் அதன் 1950களின் வரையிலான வரலாறும் விவரிக்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதியில், உலகப்போருக்குப்பின், பனிப்போர் காலக்கட்டத்தில் ஈராக்கின் வரலாறு தொடர்பாக ஆராயப்படுகின்றது.

மத்திய கிழக்கில் நிரந்தரப்புரட்சி

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் ஈராக்கில் நிலவிய அடிப்படை சமூக நிலைமைகள், அந்நாட்டில் மட்டும் பிரத்தியேகமானதல்ல. பழைய சமூக உறவுகள், நவீனத் தொழிற்துறை ஏற்றுமதியோடு பிணைக்கப்பட்டிருந்த வளர்ச்சி, இதன் விளைவாக எழுச்சியுறும் தொழிலாளர் வர்க்கம்; முதலாளித்துவத்தின் வலுவற்ற தன்மை, இறுதியில் அது பெரும் ஏகாதிபத்திய சக்திகளை நம்பியிருக்கவேண்டிய நிலை; முடியாட்சிமுறை, பழைய நிலப்பிரப்புத்துவ கட்டமைப்பு, இவற்றிற்கு எதிராக உண்மையான ஜனநாயகப் புரட்சியை நடத்தமுடியாத முதலாளித்துவத்தின் இயலாமை, இவை அனைத்தும் பெரும்பாலான வளர்ச்சிபெறாத நாடுகளில், வெளிநாட்டு சக்திகள் ஆதிக்கத்தில் வளர்ந்திருந்த முதலாளித்துவ உறவுமுறைகளில் பொதுவாகக் காணப்பட்டிருந்த தன்மைகள்தாம்.

இத்தகைய சமுதாய உறவுகளின் ஆய்வு 1917ம் ஆண்டின் ரஷ்யப்புரட்சிக்கு தத்துவார்த்த அடிப்படைக்கு ஆதாராமாக இருந்தது. நிரந்தரப் புரட்சி கொள்கையின் ஆய்வை அபிவிருத்தி செய்கையில் லியோன் ட்ரொட்ஸ்கி, தற்கால ஏகாதிபத்திய சகாப்தத்தில், 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதிகளிலும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினால் செய்யப்பட்டது போன்று முதலாளித்துவத்தின் வளர்ச்சி பின்தங்கியிருந்த நாடுகளில் முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை செய்ய, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தால் இயலாது என குறிப்பிட்டார். இந்த வர்க்கம் வலுவிழந்து நிற்பதனால், பிற்போக்கான சமூக உறவுகள் நீக்கப்படுதல், தேசிய ஒடுக்குமுறையின் முடிவு, ஜனநாயக உரிமைகளை நிறுவனப்படுத்துதல் போன்ற இப்பணிகள் தொழிலாள வர்க்க புரட்சியினால்தான் செயல்படுத்தப்பட முடியும். அத்தகைய புரட்சி, தவிர்க்கமுடியாமல் சோசலிசக் கருத்துக்களுடன் இணைந்து நிற்கவேண்டும், அதாவது உற்பத்தி தனியார் உடைமையாகத் தொடர்ந்து இருத்தல் என்பது, ஏகாதிபத்தியத்திற்கும் அரசியல் பிற்போக்குத்தன்மைக்கும் எதிரான உண்மையான போராட்டத்துடன் இயைந்து நிற்கமுடியாது.

அதேநேரத்தில், இந்த நாடுகளின் ஒப்புமையில் பொருளாதாரப் பின்தங்கிய நிலைமையைக் கருத்தில் கொண்டால், பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ள நாடுகளில், அதாவது ஏகாதிபத்தியத்தின் மையங்களான அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு சோசலிச புரட்சி நீடிக்கப்படுவதன் மூலம்தான் சோசலிச புரட்சியின் வெற்றி தங்கியுள்ளது. உலக முதலாளித்துவ வடிவமைப்பிற்குள் தேசிய சுதந்திரத்தை அடைய முயற்சிக்கும் எந்தவொரு இயக்கமும் வெற்றியடைய முடியாது. அவ்வியக்கம் ஸ்ராலினிசக் கோட்பாடான "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கோட்பாட்டைப் பின்பற்றினாலும், அல்லது நாட்டினுள் இருக்கும் முக்கிய வளங்களை, உதாரணமாக எண்ணெய் வளங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் தேசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும் பெருக்க முயலுவதாக இருந்தாலும் அது வெற்றியடைய முடியாது. ஒரு தேசிய அடிப்படையை கொண்டுள்ள விடுதலை என்பது இறுதியில் ஏகாதிபத்தியத்திடம் தோல்வியைத்தான் அடைய நேரும்; இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது அமெரிக்காவாக இருக்கும்; ஏனெனில் தன்னுடைய இலக்குகளை அது பொருளாதார அழுத்தங்களின் மூலம் பெறுவதற்கு இராணுவத் தலையீட்டையும் மேற்கொள்ளும். இந்தத் தலையீடு, அதன் இயல்பிலேயே உலக அளவில்தான் மாற்றப்படக்கூடிய உலக முதலாளித்துவத்திற்கு ஒவ்வொரு தேசிய பொருளாதாரமும் அடிபணிந்து நிற்க வேண்டியதின் அரசியல் வெளிப்பாடு ஆகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளின் வரலாறு, நிரந்தரப் புரட்சி தத்துவத்தை எதிர்மாறான வகையில் முற்றிலும் உறுதிப்படுத்துகிறது.

போருக்குப் பின்னான காலகட்டத்தில் எந்த நிலையிலும் கூட, மத்திய கிழக்கு நாடுகளில் தாங்களே பிரகடனப்படுத்திக் கொண்ட ஜனநாயக, தேசிய அடிப்படை இலக்குகளை தொடர்ந்து செயல்படுத்தும் தகமையை கொண்ட தேசிய இயக்கங்களை காணவில்லை. எகிப்தின் ஜெனரல் காமால் அப்துல் நாசர், சிரியாவிலும், ஈராக்கிலும் பாத்திஸ்டு கட்சி தலைமையில் நடைபெற்ற இயக்கங்கள், மத்திய கிழக்குப் பகுதி மக்களை ஒன்றுபடுத்தும் தங்கள் திட்டத்திற்கு பெரும் ஆதரவைப் பெற்றனர். இது பலமுறை அராபிய தேசியம் என்று கூறப்பட்ட வடிவத்தை எடுத்தது. மத்திய கிழக்கு முழுவதும், அராபியர், பாரசீகர்கள், குர்துகள் என்று பல பிரிவினிரிடையேயும், ஏகாதிபத்திய ஆதிக்கத்தை எதிர்க்க ஒரே வழி முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்குப் பின்னர் சுமத்தப்பட்ட செயற்கையான, தீமைகலந்த தேசியத் தடைகள் கடக்கப்படவேண்டும் என்ற உணர்வு இருந்த போதிலும்கூட இந்நிலைதான் தொடர்ந்தது.

இந்த ஒற்றுமையைச் செயல்படுத்த தேசிய முதலாளித்துவத்தால் இயலாது என்பதை அது நிரூபித்தது. ஏனெனில் பலநாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கங்கள் பல நாடுகளில் உள்ள ஒரு ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்காக தாம் அடிபணிந்தும், அவற்றை அடித்தளமாக கொண்டும் இருந்தன. 1958ல் சிரியா, எகிப்து இரண்டும் ஒன்றாக ஐக்கிய அரபுக் குடியரசு என்று கொண்டுவரப்பட்ட முயற்சி மூன்று ஆண்டுகளுள் முறிந்து போயின. இப்பகுதியில் எகிப்திய முதலாளித்துவத்தின் ஆதிக்கம் படர்ந்து செழிப்பதற்குத்தான், நாசர் ஐக்கிய அரபுக் குடியரசை பயன்படுத்தப் பார்த்தார்; இதை எகிப்தின் உற்ற நட்பு நாடுகளின் அரசாங்கங்கள்கூட ஏற்க மறுத்தன.

சிரியாவிலும், ஈராக்கிலும் பாத் கட்சி அதிகாரத்திற்கு வந்த போதிலும், இரண்டு நாடுகளும் ஒன்றாக வரமுடியவில்லை. உண்மையில் அவர்கள் கடும் பகையாளிகள் ஆயினர். 1970களின் கடைசியில் சதாம் ஹுசைன் அதிகாரத்தைக் கைப்பற்றிய நேரத்தில், ஈராக், அனைத்து அரபு நாடுகளின் இணைப்பு என்ற வாய்வீச்சை, ஈராக் தேசியவாத இலக்கிற்காகக் கைவிட நேர்ந்தது.

"அராபியப் புரட்சி" சிதைந்தும் தகர்ந்தும் போனமை, நிலவுடமை வர்க்கங்கள், ஏகாதிபத்தியம், உலகச்சந்தை என்று முதலாளித்துவ வர்க்கத்தின் வித்தியாசமான பிரிவுகளின் போட்டியிடும் நலன்களையும் கடந்து, வெற்றிகொள்ளும் சமூக மாறுதலின் அடிப்படையில்தான் ஏற்படுத்தப்பட முடியும், என்ற உண்மையை பிரதிபலித்துக் காட்டுகிறது.

ஜனநாயக சீர்திருத்தங்களை செயல்படுத்துவது என்பது வந்தபோது, தேசிய முதலாளித்துவமும் எதையும் கூடுதலாகச் சாதித்துவிடமுடியவில்லை. ஈராக்கில் பாத்திஸ்ட் ஆட்சி போன்ற தேசிய அரசாங்கங்கள் குறைந்த அளவிலேனும் சமூக வேலைதிட்டங்களைச் செயல்படுத்தி இருந்தபோதிலும், உள் மோதல்கள், குறிப்பாக தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் நடந்த மோதல்கள் குறைந்து விடவில்லை. முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டுள்ள அச்சமும், விரோதப்போக்கும், உண்மையான ஜனநாயக முறைகள் பொறுத்துக் கொள்ளப்படமாட்டா என்பதைத்தான் குறிக்கின்றன. தேசிய இயக்கங்கள் தவிர்க்கமுடியாமல் இராணுவம், போலீஸ் இவற்றைப் பெருமளவு நம்பியிருந்தது என்பது ஒரு விபத்தல்ல: எனவே முதலாளித்துவ ஆட்சி நலன்களை அச்சுறுத்திய எந்தவொரு சுயாதீனமான தொழிலாள வர்க்க அணிதிரளலும் கடும் அடக்கு முறைக்கு உட்பட்டன.

அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு ஒரு முட்டுக்கட்டை

இந்த கட்டமைப்பிற்குள்ளே ஈராக்கின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு, எடுத்த எடுப்பிலேயே முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையில் தேசிய விடுதலை இயக்கங்ஙகளின் வெற்றியை அனுமதிப்பதாய் தோன்றும், போருக்குப் பிந்தைய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பின் தனித்த விசேடமான தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும்.

பனிப்போர்க்காலத்தில் இருந்த பொதுவான புவியியில்-அரசியல் நிலைமை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில், சோவியத் ஒன்றியம் இருந்ததால் உருவாக்கப்பட்ட சில தடைகள், சிறிய நாடுகளில் தேசிய அரசாங்கங்களை, சற்று சுதந்திரத்துடன் இருக்கவிட்டதுடன், இரு பெரும் வல்லரசுகளுக்கிடையேயான மோதல்களை பயன்படுத்தி, சோவியத் ஒன்றியத்திடம் பொருளாதார, இராணுவ உதவியைக் கோர வைத்தது.

நேரடித்தலையீட்டிற்கு மாறாக அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை பலதடவை தன்னுடைய அதிகாரத்தை உறுதி செய்துகொள்ளுவதற்கு பல முறைகளைக் கையாளவைத்தது: இவை மறைமுக நடவடிக்கைகள், அரசியல் படுகொலைகள், நிதி உதவி, மக்கள் எழுச்சியை அடக்க உதவுதல், உள்நாட்டு தேசியவாத ஆட்சிகளுடன் நட்புறவு கொள்ளுதல் என்று வெளிப்பட்டிருந்தன.

மத்திய கிழக்கில், ஐசனோவர் கோட்பாட்டிலும் (Eisenhower doctrine), பாக்தாத் ஒப்பந்தத்திலும் அமெரிக்க கொள்கை உறுதியாக இருந்தது. "சர்வதேசக் கம்யூனிசத்திற்கு கட்டுப்பட்டு இருக்கும் எந்த நாட்டிருக்கும் வெளிப்படையான தாக்குதல்" தோன்றினால், அமெரிக்கா பாதிக்கப்பட்ட நாட்டிற்கு தன்னுடைய இராணுவ ஆதரவை அளிக்கும் என்று ஐசனோவர் கோட்பாடு உறுதிமொழி அளித்தது. 1955ல் ஈரான், பாகிஸ்தான், ஈராக் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கிடையே அமெரிக்க ஆதரவில் ஏற்பட்ட ஒப்பந்தம்தான் பாக்தாத் ஒப்பந்தம். இதிலுள்ள மத்திய ஆசிய நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் இப்பகுதியில் அமெரிக்கச் செல்வாக்கு படர அடிப்படையாக இருக்கும் என்று கருதப்பட்டதுடன், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக மொத்தத் தடுப்பு ஆதரவையும் அளித்தன.

அமெரிக்க கொள்கை வெறும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிர்ப்பு என்பதுடன் மட்டும் அமையவில்லை. எந்த சோசலிச அல்லது இடதுசாரி-தேசிய இயக்கத்தையும் நசுக்குவதற்கு அது உறுதி கொண்டிருந்தது. அமெரிக்க, பிரிட்டிஷ் நலன்களுக்கு எதிராக ஏதேனும் உடனடித் தாக்குதலை ஏற்படுத்துமோ என்ற ஆழ்ந்த பயம் மட்டும் இன்றி, ஈரான், ஈராக் மற்ற நாடுகளில் பரந்த அளவில், தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கம் வலுப்பெற்று ஏகாதிபத்திய நலன்களையே கடுமையாக அச்சுறுத்திவிடுமோ என்பதும் இருந்தன.

எனவே ஈரானில் முகம்மது மொசடேக் அந்நாட்டில் எண்ணெய் தொழிலை தேசிய மயமாக்கியவுடன் 1953ல் CIAம் பிரிட்டிஷ் உளவுத்துறையும் ஒன்றிணைந்து அவருடைய தேசியவாத ஆட்சியைக் கவிழ்த்தன. மிகவும் மக்கள் ஆதரவை இழந்திருந்த ஷா மன்னரின் ஆட்சி மீட்பிற்குப்பிறகு, பெப்ரவரி 1979 வரை ஈரான் ஒரு முக்கிய அமெரிக்க உறவுநாடாக விளங்கி வந்தது.

ஆயினும்கூட, எகிப்து, ஈராக் போன்ற நாடுகள், தற்காலிகமாக சோவியத் ஒன்றியத்துடன் தாங்கள் கொண்ட உறவுகளை ஒட்டி அமெரிக்க தலையீட்டை தற்காலிகமாக தவிர்க்க முடிந்தது. சோவியத் ஒன்றியம் இருந்ததால் சிறிய நாடுகளுக்கு இருந்த சுதந்திரமும் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட தன்மைதான் காணப்பட்டது; ஏனென்றால் இது சோவியத் ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கையுடைய இடர்பாடுகளையும், அதன் அமெரிக்காவுடனான உறவுமுறைகளின் மாறுதல்களுக்கும் கட்டுப்பட்டே இருக்க வேண்டியதாயிற்று.

இந்தக்குறைந்த சுதந்திரம் கூட 1980 களில் சோவியத் ஒன்றியம் முதலாளித்துவ மறுசீரமைப்பை தொடங்கியவுடன் காற்றில் கரையத் தலைப்பட்டது. அந்தப் பத்து ஆண்டுகளின் இறுதியில், தேசிய சுதந்திரம் பற்றிய எந்தப் பாசாங்குத்தனமான பெருமையும் முற்றிலும் மதிப்பிழந்தது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன், அமெரிக்காவை தடுத்து நிறுத்துவது என்பது இச்சிறிய நாடுகளின் திறமைக்கு இயலாமற்போய் முழுவதுமாகக் கரைந்துவிட்டது ஒரு பொருளாதார முறையின் மிகத்தீவிரமான வல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்திருந்த சோவியத் ஒன்றியம் சரிந்ததே உலக முதலாளித்துவத்தின் அதிகரித்த அழுத்தங்களின் விளைவாகும்.

1958 ஆட்சிக் கவிழ்ப்பு

இந்த சர்வதேச, மற்றும் சமூக பின்னணியில்தான் ஈராக்கின் முடியரசு, ஜெனரல் அப்துல் கரீம் காசிம் தலைமையில், ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தது. ஒரு முதலாளித்தவ தேசியவாதியாகவும், சுதந்திரமான உயர் அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட அமைப்பின் உறுப்பினருமான காசிம், பாக்தாத் ஒப்பந்தத்திலிருந்த ஈராக்கை வெளியேற்றிக்கொண்டு, சோவியத் ஒன்றியத்துடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டார். தன்னுடைய ஆட்சியில் முதல் ஆண்டில் காசிம், ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார்.

"காசிமுடைய கூட்டு சாரா நிலைப்பாடு வாஷிங்டனால் கசப்புடன் உணரப்பட்டது; அவர் எண்ணெய்வளம் மிகுந்த ஈரான், குவைத், செளதிஅரேபியா, வெனிசுலா இவற்றின் பிரதிநிதிகளுடன் 1960 செப்டம்பர் மாதம், பாக்தாத்தில் ஓபெக் (Organization of Petroleum Exporting Countries -OPEC) அமைப்பதற்காக நடத்திய மாநாடும், அதே நோக்கத்தில்தான் அமெரிக்கவால் கொள்ளப்பட்டது." என்று செய்தியாளரும் வரலாற்று ஆசிரியருமான திலீப் ஹிரோ (Dilip Hiro) குறிப்பிட்டுள்ளார். OPEC எண்ணெய் வளம் கொழித்துள்ள நாடுகள் உலகில் எண்ணெய் விலையை தங்கள் உற்பத்திப் பட்டியலின் அடிப்படையில் கட்டுப்படுத்தும் ஒரு கூட்டு முயற்சியாகும்.

அயல்நாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு எண்ணெய் எடுத்தலில் கொண்டிருந்த செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகளையும் காசிம் எடுத்தார். அக்காலக் கட்டத்தில், ஈராக்கில் இத்துறையில் முக்கியமாக இருந்த நிறுவனம் ஈராக்கி பெட்ரோலியம் கம்பெனி (IPC) எனப்பட்ட பிரிட்டிஷ், பிரெஞ்சு, டச்சு, அமெரிக்க நாடுகளின் கூட்டு நிறுவனமாகும். காசிம், ஈராக்கி பெட்ரோலியம் கம்பெனி உடைய செயல்முறைகளின் வரம்பைக் கட்டுப்படுத்த முயற்சித்ததுடன், Iraq National Oil Company என்ற நிறுவனத்தை 1961ல் அவர் நிறுவினார். இதனால் எண்ணெய் எடுத்தலின் பெரும் எஞ்சிய பகுதி ஈராக்கிலேயே இருப்பதற்கு அவர் முயற்சி செய்தார்; மேலும், சோவியத் ஒன்றியத்தை, அமெரிக்க, மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து சலுகைகளைப் பெறப் பயன்படுத்திக்கொண்டார்.

ஈராக்கிய தேசிய முதலாளித்தவத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற தன்னுடைய கொள்கைக்கு ஏற்றபடி, ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, காசிம் ஆட்சியின் முதல் ஆண்டில் அவருக்கு முழு ஆதரவையும் கொடுத்தது. தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்திக் கொண்டவுடன், காசிம் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தில் இருந்த அமைப்புக்களையும் தொழிற்சங்கங்கள்மீதும் நடவடிக்கை எடுக்கத்தொடங்கியவுடன், இக்கட்சி மேலும் சற்று வலதுபுறத்திற்கு நகர்ந்தது. சோசலிஸ்ட் கொள்கைகளுக்கான போலிப்பிடிப்பையும் கைவிட்டு, காசிம் வலதுசாரி வன்முறையை இதன் அமைப்புக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்டபோதிலும்கூட அவரை எதிர்க்கவில்லை.

இதன் விளைவாக ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, ஈராக்கிய மக்களின் பரந்த பிரிவுகளிடையே தான் கொண்டிருந்த ஆதரவுத்தளத்தில் பெரும்பகுதியை இழக்கலாயிற்று. இது ஸ்ராலினிச கொள்கைகை பின்பற்றியதின் தர்க்கரீதியான விளைவே ஆகும். தொழிலாள வர்க்கத்திற்காக, சுயாதீனமான சோசலிச முன்னோக்கை முன்வைப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாட்டிலும் ஸ்ராலினிசக் கட்சிகள் தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவது என்ற நிலைப்பாட்டை கொண்டன. இந்த தேசிய முதலாளித்துவ வர்க்கம் அதற்கு எதிராகச் செயல்படத் தொடங்கியவுடன், ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி எவ்வித பாதுகாப்பும் அற்றுப் போயிற்று. இந்தக் காட்டிக் கொடுத்த நிலைகளின் விளைவாக, தொழிலாள வர்க்கம் எந்த விதமான ஒழுங்கைமைக்கப்பட்ட எதிர்ப்பும் இல்லாமல் பாத் கட்சி பல பத்தாண்டுகள் ஆட்சி செய்யும் முறைக்கு வழிவகை ஏற்பட்டது.

1963ம் ஆண்டின் ஆட்சிக்கவிழ்ப்பு

1960களில் நாட்டின் பெரிய அரசியல் சக்தியாக மாறிவிட்ட பாத் கட்சி, காசிமுடைய ஆட்சியைத் தீவிரமாக எதிர்க்கலாயிற்று. அதனுடைய ஆட்சியாளருடன் இருந்த வேறுபாடுகள், குறிப்பாக சோவியத் ஒன்றியம், எகிப்து இவற்றுடன் கொண்டிருந்த உறவுகளைப் பற்றிய ஈராக்கிய முதலாளி வர்க்க்தின் பிளவுகளைப் பிரதிபதிலித்தது. குறிப்பாக பாதிஸ்டுகள் எகிப்துடன் நெருங்கிய உறவு, சோவியத் ஒன்றியத்துடன் சற்றுத் தொலைவான உறவு, ஈராக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி மீது கடுமையான தாக்குதல் என்ற கருத்துக்களை விரும்பியது.

அதேநேரத்தில் பாத் கட்சி அதிகாரத்திற்கு 1960களில் எழுச்சி சர்வதேச நிலைமைகளுடனும் கட்டுண்டிருந்தது, குறிப்பாக இப்பகுதியில் தன்னுடைய கட்டுப்பாட்டை வலுவடையச் செய்யவேண்டும் என்றிருந்த அமெரிக்க முயற்சிகளின் பாதிப்பையும் கொண்டிருந்தது. காசிம் மேற்கொண்ட முயற்சிகளான எண்ணெய் ஏற்றுமதி, சோவியத் ஒன்றியத்துடன், ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியுடன் சுமுகமான உறவுகள், ஆகியவை அமெரிக்க நலன்களுக்கு நேரடியான அச்சம் என்று அமெரிக்காவால் கருதப்பட்டது. எனவே, இவருடைய ஆட்சியின் ஆரம்பத்தில் இருந்தே, CIA இவரைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்தது; ஒரு குறிப்பிட்ட தோல்வியடைந்த சதி முயற்சியில் விஷந்தோய்ந்திருந்த கைக்குட்டை ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்கர்களுடைய நோக்கம், அமெரிக்காவின் நலன்களுக்குக் கூடுதலான பரிவு உணர்வு காட்டி, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்களை நசுக்கும் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது ஆகும். கம்யூனிஸ்ட் கட்சிக்கு விரோதம் காட்டியதால், பாத் கட்சியை அமெரிக்க அரசாங்கம், ஒப்புமையில் சற்று கனிவுடன் விரும்பியது. குறிப்பாக சதாம் ஹுசைனுடன் தொடர்பு கொண்டால் நல்ல முறையில் தனது நோக்கங்களை செயல்படுத்தலாம் என்று அது நினைத்தது. 1958ன் சதியில் ஒரு கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருந்த தன்னுடைய மைத்துனன் கொலை செய்யப்பட்டதுடனையே ஹுசைன் தொடர்பு கொண்டிருந்தார். இவர் காசிமிற்கு எதிரான 1959ம் ஆண்டு படுகொலை முயற்சிகளிலும் தொடர்பு கொண்டிருந்தார்.

1963ம் ஆண்டில், பாத் கட்சி மற்றும் ஓர் இராணுவப்பிரிவு இரண்டும் CIA ஆதரவுடன் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து 3,000 லிருந்து 5000 வரையிலான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் தொழிலாள வர்க்க இயக்க மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களும் கொலையுண்டனர். முதலில் உள்முரண்பாடுகள் காரணமாக இதன் கைகளிலிருந்து அதிகாரம் நழுவிவிட்டபோதிலும்கூட, 1968 ஆட்சிக் கவிழ்ப்பின்போது பாத்திஸ்டுகள் தங்கள் ஆட்சியை அமெரிக்கர்கள் 2003ல் தலையிடும் வரை நிலைநிறுத்திக்கொள்ளவும் முடிந்தது.

1963ம் ஆண்டு ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை, ஈராக்கிய தேசிய முதலாளித்துவம் வலதுபுறம் நகர்ந்ததைக் குறிக்கிறது. பாரிய காட்டிக்கொடுத்தல்களுக்கு பின்னரும் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால் நாட்டின் தொழிலாள வர்க்க அமைப்புக்களிடையே இன்னும் பெரும் செல்வாக்கு இருந்தது. ஆனால் அடிப்படையில் இவ்வன்முறை தொழிலாள வர்க்கத்தின் மீது நேரடியாக காட்டப்பட்டது. இந்த அடக்குமுறை பாத் கட்சியின் வலதுசாரி ஆதரவாளர்கள் அல்லது தோழமையாளர்களால் நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக இது உயரதிகாரிகள் வட்டத்தில் மையம் கொண்டிருந்தது. பின்னர் இவர்கள்தான் அப்துல் சலாம் அரிப் (Abdul Salam Arif) தலைமையில் இறுதியாக முழுக் கட்டுப்பாட்டையும் மேற்கொண்டனர்.

அரிப், பாத்திஸ்ட் உறுப்பினர் அல்லர். ஆயினும்கூட, அவருடைய கருத்துக்களுக்கு அக்கட்சியில் பரிவு உணர்வை கொண்டிருந்தவர்களுக்குதான் இவருடைய ஆட்சியின் முதல் ஆண்டில் அக்கட்சியினர்தான் பெரும் செல்வாக்கு உடைய பதவிகளில் இருந்தனர்.

அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனே அரிப் அறிவித்தார்: "கடவுளுடைய விரோதியான காசிம் இழைத்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த கம்யூனிஸ்ட் கையாட்கள் மேற்கொண்டுள்ள கடும் முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, அதாவது மக்களின் அடித்தளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தல், அதிகாரபூர்வ உத்தரவுகளை மக்கள் மதிப்பளிக்காதிருத்தல் போன்றவற்றால், இராணுவப்பிரிவின் தளபதிகள், போலீஸ், தேசியப் பாதுகாப்புப்படை ஆகியோர் எவர் அமைதிக்குப் பங்கம் விளைவித்தாலும் அவர்களை அழித்துவிட அனுமதி பெறுகின்றனர். நம்பிக்கைக்குரிய மக்கள், குற்றவாளிகளை பற்றித் தகவல் தெரிவித்து அதிகாரிகளுடன் ஒத்துழைத்து குற்றவாளிகளை பூண்டோடு அழிப்பதற்கு அழைப்பு விடுக்கப்படுகிறார்கள்."2

புதிய ஆட்சியாளர்கள், ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மாவட்டங்களில் எல்லாம், பொதுவாக அவை கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பரந்த ஆதரவு கொடுத்திருந்த ஏழ்மை மிகுந்தவை, அலசித்தேடி ஏராளமான மக்களைக் கைது செய்தனர். கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத் தலைவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்.

ஜோர்டான் மன்னர் ஹுசைனுடைய கூற்றின்படி, இந்த நடவடிக்கைகள் அமெரிக்க உளவுத்துறையின் ஆதரவைக் கொண்டிருந்தன. "பாத் கட்சியினருக்கும், அமெரிக்க உளவுத்துறையினருக்கும் இடையே ஏராளமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன, முக்கியமானவை குவைத்தில்... பெப்ரவரி 8, 1963, பின்னர் இரகசிய ரேடியோ தகவல் மூலம் ஈராக்கிற்கு, ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரானவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினருடைய பெயர், முகவரிகள், கொடுக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலிடுவதற்கு வகைசெய்யப்பட்டது." 3

அரிப், பின்பு அவர் ஒரு ஹெலிகாப்டர் பயண விபத்தில் 1966ல் இறந்த பின்னர், ஜனாதிபதி பொறுப்பை ஏற்றிருந்த அவருடைய சகோதரர் மேஜர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் அரிப் என்ற இருவருடைய ஆட்சிக்காலங்களும், இராணுவக் கட்டுப்பாடு நாட்டின் அனைத்து விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்திய தன்மையைக் கொண்டிருந்தன. வலுவற்ற நிலையில் இருந்ததால் தேசிய முதலாளித்துவத்தால் தொடர்ச்சியான ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கைகளை முன்வைக்க முடியாத நிலையில் இருந்தது. எனவே அரசியல் மிகக் குறுகிய பிராந்திய விசுவாசங்களின் அடிப்படையில் பிளவடையத் தலைப்பட்டது. மக்களிடம் ஆதரவு இல்லாததற்கு ஏற்றமாதிரி ஒற்றைக் கட்சி முறை, மட்டும் இராணுவ, போலீஸ் சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்லும் போக்கை முதலாளித்துவம் கொள்ளலாயிற்று.

தொடரும்.....

See Also :

முதல் பகுதி: ஈராக்கிய முடியாட்சியும், சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியும்

 

Top of page