World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

The consequences of eastward expansion of the European Union

ஐரோப்பிய ஒன்றிய கிழக்கு நோக்கிய விஸ்தரிப்பின் விளைவுகள்

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் சோசலிச சமத்துவக்கட்சியின் சார்பில் (ஜேர்மனி) போட்டியிடும் உல்றிச் றிப்பேட் இன் அறிக்கை

1 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EUவின்) கிழக்கு விஸ்த்தரிப்பானது ஐரோப்பிய தலைவர்கள் கலந்து கொள்ளும் பகட்டாரவார விழாவொன்றில் மே 1 தேதியன்று அயர்லாந்து தலைநகர் டப்லினின் மாளிகையில் கொண்டாடப்படுகிறது. அவர்களது உரைகள் ''வரலாற்று சிறப்புமிக்க'' இந்த தருணம் ஐரோப்பாவை ''பெரியதாக மேலும் ஒன்றுபட்டதாக சமாதானம் மிக்கதாக ஆக்கும்'' (Die Zeit) என வலியுறுத்தின.

உழைக்கும் மக்கள் அவர்களது அலங்கார உரைகளை பளபளப்பு வெளியீடுகளை, வானவேடிக்கைகளை கண்டு ஏமாந்து விடக்கூடாது. இந்த விஸ்த்தரிப்பு உழைக்கும் மக்களது நலன்களை முன்னெடுத்து செல்வதற்காகவோ, பயன் தருவதற்காகவோ, வடிவமைக்கப்பட்டதல்ல. இது அதற்கு முரணானது! EU, கிழக்கு நோக்கி விரிவடைந்து செல்வது இந்தக்கண்டத்தின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை தீவிரப்படுத்த மட்டுமே உதவும்.

இந்த விரிவாக்கம் ஏழை மற்றும் பணக்கார ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற இடைவெளியை பெருக்குவதற்கே பயன்படும். இதற்கு முந்தைய சுற்று EU விஸ்தரிப்பின் போது குறிப்பிடத்தக்க நடவடிக்கையான இழப்பீடுகள் வழங்குவதற்கு வகை செய்யப்பட்டிருந்தது, அதுவும் இப்போது இல்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மிகக்குறைந்த ஊதிய விகிதங்கள் நிலவுவதை முதலாளிகள் நெம்புகோலாக பயன்படுத்தி மேற்கிலுள்ள செல்வமிக்க நாடுகளின் வாழ்க்கைத் தரத்தையும், ஊதிய விகிதங்களையும் சீர்குலைக்க பார்க்கின்றனர்.

சாதாரண மக்களுக்கு இந்த விடயத்தில் சொல்வதற்கு எதுவுமில்லை என்ற நிலைமையின் கீழ், புருஸ்சல்சில் இனை அடிப்படையாக கொண்ட EU அதிகாரத்துவம் மறு ஐக்கியத்திற்கான நடவடிக்கை எடுத்திருப்பதானது, இந்த முழுத் திட்டமும் செல்வமிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக செல்வந்த தட்டுகளின் நலன்களை முன்னெடுத்து செல்வதற்கே வடிவமைக்கப்பட்டவை என்ற உண்மையை தெளிவாக்கியுள்ளது. இந்த விஸ்தரிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற 25 அரசாங்கங்களில் எதுவும் உண்மையான உழைக்கும் மக்களின் நலன்களை பிரதிபலிக்கவில்லை. இதற்கு மாறாக, EU வில் சேருகின்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சமூக பிரச்சனைகள் கடந்த மாதங்களிலும், வாரங்களிலும் தீவிரமடையவே செய்திருக்கின்றன. சமூக அதிருப்திகளை, பிற்போக்குத்தனமான தேசியவாத, மற்றும் பேரினவாத வழிகளில் திசை திருப்ப முயலுகின்ற அதிதீவிர வலதுசாரி கட்சிகள் அந்த நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த விஸ்த்தரிப்பை குடித்து கும்மாளம் அடிக்கின்ற வகையில் கொண்டாடுகின்ற ஐரோப்பிய அரசாங்கங்களுக்கோ அல்லது தங்களது சொந்த நோக்கங்களை முன்னிலைப்படுத்துகின்ற வலதுசாரி கட்சிகளின் EU விற்கு எதிரான பிற்போக்கு பிரச்சாரங்களுக்கோ தொழிலாளர்கள் ஆதரவளிக்கமுடியாது. மாறாக உழைக்கும் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பெருவர்த்தக மற்றும் வங்கிகளின் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டு, ஐரோப்பா முழுவதிலும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்கும் சக தொழிலாளர்களின் ஐக்கியத்தின் அடிப்படையிலான ஒரு சுயாதீனமான நிலைப்பாட்டில் மேற்கொள்ளவேண்டும்.

சுயாதீனமான அரசியல் சக்தியாக செயல்படுவதற்கு தொழிலாளர்களுக்கு ஒரு புதிய கட்சி தேவை. சமூக ஜனநாயக கட்சி அதிகாரத்துவங்களை அல்லது கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச கொள்கை மாறுபவர்களை சிறிதும் நம்ப முடியாது. இதுதான் நான்காம் அகிலத்தின், சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் சிறப்பு அம்சமும், அந்த வகையில் ஐரோப்பிய தேர்தல்களில் தனது சொந்த வேட்பாளர்களை நிறுத்தியும் உள்ளது.

ஐரோப்பா ஐக்கியப்படுவதால் ஏற்படுகின்ற விளைவுகளை தொழிலாளர்கள் சொந்த நனவை அபிவிருத்தி செய்து ஒரு நிலுவை கணக்கை வெளிப்படையாக அன்றிலிருந்து இன்றுவரை வரைவதுதான் இதில் முதலாவதும் முக்கியமானதுமான பணிகளில் ஒன்றாகும். SEP தேர்தல் அறிக்கையில் ["Election statement of German SEP: For the United Socialist States of Europe"] கண்டுள்ள விவரங்கள் அடிப்படையில் கீழ்கண்ட போக்குகளையும் அபிவிருத்திகளையும் தெளிவாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்:-

விஸ்தரிப்பால் EU-வின் மொத்தமக்கள் தொகை ஏறத்தாழ 20 சதவீதமாக உயர்ந்து 45 மில்லியனாக அதிகரிக்கும். EU-வின் உள் சந்தை அளவு 23-சதவீதமாக வளரும். இந்த முரண்பாடு, விஸ்தரிப்பான EU-வின் GDP 5-சதவீதம் மட்டுமே உயரும். புதிதாக சேருகின்ற நாடுகளையும், இணைத்துக் கணக்கிட்டால் ஒட்டுமொத்த GNP ஹாலந்திற்கு இணையாக இருக்கும், என்றாலும் இந்த 10 நாடுகளின் மக்கட்தொகை 5-மடங்கு உயர்ந்திருக்கின்றது. பழைய EU நாடுகளைவிட புதிய நாடுகளில் தலா வருமானம் GDP பாதியிலும் குறைவாகவே உள்ளது.

EU விரிவாக்கத்தை தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதாரமும், கலாச்சார வாழ்வும் மேம்படப் போவதாகவும் புருசல்ஸ் வெளியிட்டுள்ள துண்டறிக்கைகள் பளபளப்பாக வெளியிடப்பட்டுள்ளது, ஆனால் புள்ளிவிவரங்கள் வேறுபட்ட முடிவுகளை தருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் EU புதிய உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு 20-மில்லியன் யூரோக்களை ஆதரவாகத்தரும். ஆனால் இந்த நாடுகளில் நிலவுகின்ற சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியோடு ஒப்பிடும்போது இந்தத்தொகை சமுத்திரத்தில் பெருங்காயம் கரைத்ததை போன்றதுதான். ஜேர்மனி மறு ஐக்கியப்படுத்தப்பட்டபோது, செலவிடப்பட்டதைப் பார்த்தாலே இது தெளிவாகத்தெரியும். 1991-முதல் ஜேர்மனி கருவூலம் ஆண்டிற்கு 50-மில்லியன் யூரோக்களை கிழக்குப்பகுதிக்கு மாற்றித்தந்தது, அதன் மக்கள் தொகை 17- மில்லியன்தான். இப்போது நிகழக்கூடிய சம்பவத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகை 75-மில்லியனாகும். கிழக்கு ஜேர்மனிக்கு இவ்வளவு உதவிகள் கிடைத்தும், மேற்கு ஜேர்மனியைவிட வேலையில்லாத் திண்டாட்டம் கிழக்கு ஜேர்மனியில் இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.

அதே நேரத்தில், EU கிழக்குநோக்கி விஸ்தரிப்பதால் மேற்கு ஐரோப்பாவில் ஏழ்மை நிறைந்த பிராந்தியங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும், அவை EU பிராந்திய நிதிகளிலிருந்து மிகக்குறைந்த பணத்தையே பெறும்.

விஸ்தரிப்பிற்கு முன்னரே, EU விசாரணை குழு ஏற்கனவே புதிய உறுப்பு அரசுகளில் சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பல்வேறு அடிப்படை நிபந்தனைகள், நிலைமைகள் மற்றும் அடிப்படைகளை உருவாக்கி முன்னாள் கிழக்கு கூட்டணி நாடுகளில் ''நட்பான சுதந்திர சந்தை போட்டிகளை'' உருவாக்குதவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உறுதிப்படுத்திக்கொள்ள வகைசெய்து கொண்டுள்ளது. இதனுடைய பொருள் என்னவென்றால் அரசாங்கங்கள் சமூக சேவைகளுக்கு செலவிடும் தொகையை பெருமளவில் வெட்டவேண்டும், அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்கவேண்டும், மற்றும் இலாபம் அளிக்காது என்று கருதப்படும் விவசாயம் மற்றும் தொழிற்துறை பிரிவுகள் அனைத்தையும் மூடிவிடவேண்டும்.
இத்தகைய விளைவுகளால் சமுதாயத்தின் பரந்த தட்டுகளுக்கு பேரழிவு ஏற்படும். ஒரு சில நகரங்களில் மட்டுமே வெளிநாட்டு முதலீடு மற்றும் EU மானியங்களால் ஒரு சிறிய வளமான பகுதி உருவாகும், அதே நேரத்தில் நாட்டின் இதர பகுதிகள் மேலும் வறுமையிலும் நம்பிக்கையற்ற நிலையிலும் மூழ்கிவிடும்.

போலந்து

இது குறிப்பாக போலந்து நிலைமை பொறுத்தவரையில் தெளிவாக ஆகிவிட்டது, அங்கு 39-மில்லியன் மக்கள் உள்ளனர். இது இதர ஒன்பது பதவியேறும் நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் அதிகமாகும். 1980-களின் இறுதியில், நாட்டின் கனரகத் தொழிற்துறை (எஃகு மற்றும் துறைமுகம்) சுரங்கங்கள் மற்றும் எரிபொருள் துறை, அரசாங்கம் மேற்கொண்ட ''அதிர்ச்சி வைத்திய'' திட்டங்களால் திவாலாகி விட்டன. 1988-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிற்துறை உற்பத்தி ஏறத்தாழ 50 சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டது. அதே காலத்தில், அரசு நடத்துகின்ற தொழிற்துறைகளில் பணியாற்றியவர்களின் உண்மையான ஊதிய விகிதங்கள் 25- சதவீதம் வீழ்ச்சியடைந்துவிட்டன. தற்போது EU தனியார்மயமாக்கலை வேகப்படுத்த அழுத்தம் கொடுத்து வருகிறது மற்றும் மீதமிருக்கும் இலாபமின்றி இயங்கும் ஆலைகளை மூடிவிட வேண்டுமென்று கோருகிறது.

கிராமப்பகுதிகளிலும் இதற்கு சமமாக வெடிக்கும் நிலையில் உள்ளது. போலந்தில் உழைக்கும் மக்களில் 20-சதவீதத்தில், விவசாய தொழிலில் ஈடுபடுபவர்கள், மிக குறைவான உற்பத்தித்தியில் ஈடுபட்டுள்ளனர். EU மதிப்பீடுகளின்படி, போலந்தில் தற்போதுள்ள 2-மில்லியன் விவசாயிகளில் 1,00,000- பேர் மட்டுமே EU விஸ்தரிப்பை தாக்குப்பிடித்து நிற்கமுடியும். போலந்து இணைந்த பின்னர், அந்நாட்டு விவசாயிகள் மேற்கு நாடுகளின் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் நடப்பு மானியத்தில் 40-சதவீதத்தை மட்டுமே பெறுவார்கள். இந்தப்பணம் பெரும்பாலும் பணக்கார விவசாயிகள் அல்லது நாட்டின் எல்லைகளில் அமைக்கப்படும் விவசாய நிறுவனங்களுக்கே சென்று சேரும். அந்த நிறுவனங்கள் எல்லைகளில் தொழிற்துறை முறைகளை பயன்படுத்தி போலந்தின் விவசாய நிலப்பரப்பை சுரண்டிக்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் வர்த்தக தடைகள் நீக்கப்பட்டதும் மேற்கு நாடுகளில் தயாராகும் குறைந்த விலை உணவுப்பண்டங்கள் கிழக்கு நாடுகளின் சந்தைகளில் வெள்ளம்போல குவிய ஆரம்பிக்கும்--- இதன் பொருள் என்னவென்றால் போலந்து விவசாயம் பெருமளவில் திவாலாவதை தடுத்துவிட முடியாது.

கிழக்கு நோக்கி விஸ்தரிப்பு அடைவதால் ஜேர்மனியின் வர்த்தக நலன்கள் பயனடையும் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே ஜேர்மனி கிழக்கு நாடுகளை தனது வியாபாரச் சரக்குகளுக்கு சந்தையாகவும், சிறந்த பயிற்சி பெற்ற அதே நேரத்தில் குறைந்த ஊதியம் பெறுகின்ற தொழிலாளர்கள் கிடைக்கின்ற சந்தையாகவும் பயன்படுத்தி வருகின்றது. புதிதாக சேருகின்ற நாடுகளில் ஜேர்மனியின் ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவின் (10-சதவீதம்) ஏற்றுமதி வர்த்தகத்திற்கு இணையாக உள்ளது. EU வின் மொத்த வர்த்தகத்தில் ஜேர்மனியின் வர்த்தகம் இந்த நாடுகளோடு 40-சதவீதமாக உள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் கம்பெனிகள் மிகப்பெரும் அளவில் முதலீடு செய்திருக்கின்றன. ஜேர்மன் கம்பெனிகளில் போலந்து செக் குடியரசு மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த 3,50,000- தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சீமென்ஸ் என்ற ஒரு ஜேர்மன் நிறுவனம் தனது 95-துணை கம்பெனிகளை 25,000- ஊழியர்களுடன் நடத்தி வருகின்றது. 1991-ல் வோல்ஸ்க் வேகன்(Volkswagen) நிறுவனம் செக்(Czech) கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடாவினை (Skoda) தன்வசம் எடுத்துக்கொண்டுவிட்டது.

ஜேர்மனி ஊழியர் ஒருவரின் ஊதியத்தை விட எட்டுமடங்கு குறைவாகவே புதிதாக சேருகின்ற நாடுகளில் பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு ஊதியம் கிடைக்கிறது. ஆனால் மிக விரைவாக ஊதியங்கள் உயருவதற்கு வழியில்லை. ஏனென்றால் மிக உயர்ந்த அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது, அது மட்டுமல்ல புதிய நாடுகள் உறுப்பினராக சேர்ந்த ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் சுதந்திரமாக தொழிலாளர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லுகின்ற நடைமுறை செயல்படத் தொடங்கும்.

ஸ்லோவேக்கியா மற்றும் செக் குடியரசு

ஸ்லோவேக்கியா நாட்டின் மக்கள் தொகை அடிப்படையில் மதிப்பிடும்போது சில ஆண்டுகளுக்குள் அந்நாடு கார்கள் தயாரிப்பில் உலகிலேயே முன்னணிக்கு வந்துவிடும். சேவை மற்றும் உயர் தொழில் நுட்பத்தொழில்கள் இந்த நாட்டிற்கு மாற்றப்பட்டு வருகின்றன. போக்குவரத்து, வர்த்தக திட்டமிடல் மற்றும் நிர்வாக (Logistics) திட்டங்களை நிறைவேற்றுகின்ற DHL நிறுவனம் செக் குடியரசில் 500 மில்லியன் யூரோக்கள் முதலீட்டில் பெரிய திட்டத்தை நிறைவேற்றவிருக்கிறது. அதே நேரத்தில் அந்த நிறுவனம் தனது பெரிய பிரித்தானியாவின் பண்டசாலைகளையும் (Depots) தொழிற்சாலைகளையும் வெளியேற்ற திட்டமிட்டிருக்கிறது. வரும் சில ஆண்டுகளில் செக் குடியரசில் குறைந்த செலவு பிடிக்கும் தொழிலாளர் கால்சென்டர்களை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது, அவற்றின் எண்ணிக்கை 70-சதவீதமாக உயர்த்தப்படுகின்றது.

இன்றைய பொருளாதார நிலைகள் சுதந்திர சந்தை முதலீடுகளை ஊக்குவிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. 1990-களில் முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மிகத்தீவிரமான கட்டுதிட்டமில்லா முதலாளித்துவத்தின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட தொடங்கினர்.

ஹங்கேரி

ஹங்கேரியில் சமூக-தாராளவாத அரசாங்கம் 1990-களின் நடுவில் மேற்கொண்ட நடவடிக்கைகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். அந்த நேரத்தில் நிதியமைச்சராக இருந்தவரது பெயரால் ''Bokros Package" திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இவற்றின் மூலம் ஓய்வூதியங்கள் சுகாதாரசேவை மற்றும் கல்வி ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டப்பட்டன. அத்துடன் நாணய மதிப்பு கடுமையாக குறைக்கப்பட்டது. இவற்றின் விளைவாக உண்மையான வருவாய் 10-சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இதற்கு இணையாக அராசங்கத் தொழில்கள் படுவேகமாக தனியார் மயமாக்கப்பட்டது. இதனால் புதிய வேலையில்லாதோர் பட்டாளம் உருவாயிற்று.

பிலிப்ஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அவரது கம்பெனி பத்திரிகையில் அளித்த பேட்டியில் இந்த ஆண்டுகளை மன நிறைவோடு நினைவுபடுத்தியிருக்கிறார்கள். ''நாங்கள் சரியாக கணக்கிட்டோம், எமது முழுத்தொகையினையும் பெற்றுக்கொண்டோம். திடீரென்று நாங்கள் ஆசிய- தொழிற்துறையோடு போட்டியிட முடிந்தது'' என்று அவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.

1990-களில் பிலிப்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி பிரிவுகளை பெருமளவிற்கு ஹங்கேரிக்கு மாற்றியது. மேற்கு நாடுகளில் தரப்படுவதைவிட ஐந்தில் ஒரு பங்கு ஊதியத்துடன் ஹங்கேரியில் பணிகளை முடிக்க முடிந்தது. 2001-ல் கம்பனி மேலும் கிழக்கு நோக்கி நகர்ந்து உக்ரைன் பகுதிக்குச் சென்றது. அங்கு ஊதியம் அதைவிட குறைவாகயிருந்தது. இதர பெரிய மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களான சீமன்ஸ் போன்றவை அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் தங்களது பணிகளில் 5000-முதல் 10,000-பணிகளை மலிவான ஊதிய விகிதங்கள் நிலவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்றப்போவதாக அறிவித்தது. இதர நிறுவனங்கள் அதைத்தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கின.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தங்களது உற்பத்திப்பிரிவுகளை மாற்றுகின்ற நிறுவனங்களுக்கு வரிகளை குறைக்கின்ற போட்டி, ஐரோப்பிய நாடுகளில் உருவாயிற்று. இதில் முதல் முயற்சிகள் கிழக்கில் தொடங்கின. மேற்கு ஐரோப்பிய நாடுகள் இப்போது அதைத்தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. பல ஆண்டுகளாக EU விலேயே மிகக்குறைந்த கம்பெனி வரிவிதிப்பு ஆஸ்திரியாவில் நிலவுகின்றது. தற்போது அரசாங்கம் வரிசீர்திருத்தம் ஒன்றை அறிவித்துள்ளது. அந்தச் சீர்திருத்தம் 2005-ல் செயல்படத் தொடங்கும். அதன் மூலம் கம்பெனி வரி 34-சதவீதத்திலிருந்து 25-சதவீதமாக குறைக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு கூடுதல் ஊக்குவிப்புக்களும் தரப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு வருகின்ற வரி வெட்டப்படுவதை ஈடுகட்டுவதற்கு மேலும் தீவிரமான பட்ஜெட் வெட்டுக்கள் வரும்.

ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள்

தனது தேர்தல் அறிக்கையில் ஜேர்மன் SEP எழுதியது:- ''SEP தீர்க்மாக ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் அமைப்புக்களையும் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள அரசியல் சட்டத்தையும், அத்துடன் EU வின் கட்டுப்பாட்டில் கிழக்கு நோக்கிய விஸ்தரிப்பையும் நடைமுறைகளையும் ஏற்க மறுக்கிறது. எங்களது இந்த ஏற்க மறுக்கும் நிலைப்பாடானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லையை கிழக்கு நாடுகளுக்கு மூடிவிட வேண்டுமென்ற நிலைப்பாட்டோடும் அல்லது துருக்கி போன்ற நாடுகளை சேர்த்துக்கொள்வதில் அளவிற்கு ''அதிகமான செலவைத்தரும்'' என்ற கூறி நிராகரிக்கும் நிலைப்பாட்டோடும் எந்த வகையிலும் சம்மந்தப்பட்டது அல்ல''.

ஐரோப்பிய எல்லைகளை புறக்கணித்துவிட்ட மிக பிரம்மாண்டமான தொழில் நுட்ப மற்றும் கலாச்சார வளங்களையும், பொருளாதார வசதிகளையும், ஐரோப்பிய நாடுகளுக்கு முழுவதுமாக பயன்படுத்தும்போது குறுகிய கால அடிப்படையில் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும், பின்தங்கிய நிலையும் நீங்கி ஐரோப்பா முழுவதிலும் வாழ்க்கைத் தரம் உயரும். இது நிரந்தரமாக நீடிப்பது முடியாதகாரியம், ஏனென்றால் பெரு வர்த்தக நிறுவனங்களின் இலாப நோக்கு இத்தகைய ஒற்றுமையை முடிவு செய்கின்ற வரை அந்த நிலைப்பாடு நீடிக்க முடியாது. இன்றைய வடிவதத்தில் ஒன்றுபடுவது முதலீடுகள் இடம்பெயருவதற்கு முழு சுதந்திரத்திற்கான உறுதியை தருகின்றது. ஏனென்றால் ஐரோப்பிய மக்களிடையே ஊதிய விகிதங்களிலும், வாழ்க்கைத் தரத்திலும் மிகப்பெரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. குடியேறியவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகின்றது. ஜனநாயக உரிமைகள் இரத்து செய்யப்படுகின்றன.

ஐரோப்பாவை ஒரு முற்போக்கான வழியில் ஐக்கியப்படுத்துவது என்பது ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் என்ற வடிவத்தின் கீழ் மட்டுமே சாத்தியமாகும். இதற்கு முன்நிபந்தனையாய் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடையே அரசியல் ஐக்கியத்தினை உருவாக்கியாக வேண்டும். பெரு வர்த்தக குழுக்களின் கோரிக்கைகளையும், நோக்கங்களையும், புறக்கணித்துவிட்டு சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப சமூக மற்றும் பொருளாதார வாழ்வை ஒழுங்கமைக்கும் ஒரு புதிய அரசியல் கட்சியை கட்டுவதன் மூலமே இது சாத்தியமாகும்.

Top of page