World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

சிஷீறீஷீஸீமீறீ நிணீபீலீணீயீயீவீs றீஷீஸீரீ ழீஷீuக்ஷீஸீமீஹ் ணீஸீபீ tலீமீ நீஷீறீறீணீஜீsமீ ஷீயீ கிக்ஷீணீதீ ஸீணீtவீஷீஸீணீறீவீsனீறிணீக்ஷீt 2

கேர்னல் கடாபியின் நீண்ட பயணமும் அரபு தேசியவாதத்தின் பொறிவும்

பகுதி 1 | பகுதி 2

By Steve James
20 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

லிபியாவின் முஅம்மர் கடாபியின் சமீபத்திய புருஸ்ஸல்ஸ் விஜயத்தின் அடிப்படைக்காரணங்கள் பற்றிய இரு பகுதிக் கட்டுரையின் முடிவுப் பகுதி கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி (ஆங்கிலத்தில்) மே 19 அன்று பிரசுரிக்கப்பட்டது.

முழு அரபு முதலாளித்துவ வர்க்கம் போலவே, புதிய லிபிய அரசாங்கமும், பாலஸ்தீனிய பிரச்சினையை பிரதானமாக தன்னுடைய அதிகாரத்தை உள்நாட்டில் பெருக்கிக் கொள்ளவும், மத்திய கிழக்கு முழுவதும் தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும் துரோகத்தனமான முறையில் உபயோகித்துக் கொண்டது. பாலஸ்தீனிய நலன்களுக்காக முற்போக்குக் கருத்துக்களைக் கூறுவதும், அரபு ஒற்றுமை பற்றி பெரும் சைகை காட்டுவதும், லிபியாவிற்குள்ளே எழும் விமர்சனங்கள் மற்றும் பதட்டங்கள் இவற்றைத் திசை திருப்பும் வழிவகையாயின. இறுதியில் கடாபியின் கொள்கைகள் பேரழிவில் முடிந்து, இன்னும் கூடுதலான முறையில் பாலஸ்தீனியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடாபியின் அரபு ஒற்றுமைக்கான அழைப்பு, மக்களை நோக்கிச் செலுத்தப்படுவதற்குப் பதிலாக அரபு அரசாங்கங்களைத்தான் முற்றிலும் இலக்காகக் கொண்டிருந்தன. எண்ணெய்ப் பணத்தை செலவழித்தல், கெஞ்சுதல் மற்றும் சூழ்ச்சிகளை கையாளல் போன்ற முறைகளை கையாண்டு வேறு வேறு வகைகளைக் கொண்டிருந்த அரபு தலைமையிலான ஆட்சிகளை இஸ்ரேலுக்கு எதிரான ஒரு கூட்டணியில் சேர்ப்பதில் லிபியா நம்பிக்கை கொண்டிருந்தது.

புதிய அரசாங்கம் ஒரு சமய புனிதப் போரை (ஜிஹாத்தை) அறிவித்து, பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவைத்தர முன்வந்தது; 1972 இஸ்ரேலிய ஒலிம்பிக் குழுவின்மீதான தாக்குதல் போன்ற அதன் பயங்கரவாத நடவடிக்கைகள் சிலவை உட்பட இவ்வாதரவு தரப்பட்டது. உலகெங்கிலும் இருந்த இயக்கங்கள், ஐரிஷ் குடியரசு இராணுவம், மேற்கு ஜேர்மனியின் செம்படைப் பிரிவு, மற்றும் அமெரிக்காவில் உள்ள பல கறுப்புத் தேசிய மற்றும் பூர்வீக அமெரிக்கப் பழங்குடி குழுக்கள் இவற்றிற்கும் கடாபி ஆதரவைக் கொடுத்து வந்தார். ஏகாதிபத்தியத்திற்கு எரிச்சலை இக்குழுக்களின் நடவடிக்கைகள் ஊட்டிய அளவிலும், தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக இருந்த முறையில், அவை லிபியாவிற்கு மத்திய கிழக்கில் உரத்த அரசியல் குரலைக் கொடுத்து, ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு ஒரு பகட்டுத் தோற்றத்தையும் கொடுத்தன.

1973 ல் அரசாங்க அமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்த பின்னர், கடாபி, லிபியா/எகிப்து ஒற்றுமைக்காக ஒர் உந்துதலைத் தொடக்கினார். 20,000 மோட்டார் கார்கள் அணிவகுப்பு ஒன்றை கெய்ரோவிற்கு ஏற்பாடு செய்தார். இது எகிப்திய எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. நாசருக்குப் பின் பதவிக்கு வந்தவரும் அவருக்கு ஒத்துழைப்புத் தந்திருந்தவருமான அன்வர் சதாத் இந்த நடவடிக்கையை கிறுக்குத்தனமான ஆபத்து என்று கருதியது, லிபியாவை எகிப்து, சிரிய, செளதி நாடுகள் 1973ல் இஸ்ரேல்மீது கொண்ட தாக்குதல் தயாரிப்புக்களில் இருந்து அகற்றிவிட்டது.

பின்னர், சதாத் ஜெருசலேம் பயணத்தை 1977ல் மேற்கொண்டதற்கு விடையிறுக்கும் வகையில், லிபியா உறுதியான முன்னணி என்ற பெயரில் சிரியா, அல்ஜீரியா, தெற்கு ஏமன் மற்றும் PLO வைக் கூட்டி, சதாத் இஸ்ரேலுடன் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளுவதை எதிர்க்கும் வகையில் செயல்பட்டது. கடாபி மத்திய கிழக்கில் பயணம் செய்து உறுதியான முன்னணிக்கு ஆதரவு தேடினார்; பின்னர் PLO உடன் ஒரு கருத்துவேற்றுமை தோன்றியதை அடுத்து, இன்னும் தீவிர பாலஸ்தீனிய அமைப்புக்களான பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (Popular Front for the Liberation of Palestine (PFLP)) க்கு ஆதரவு கொடுக்க முனைந்தது.

ஆனால் 1982ம் ஆண்டு, PLO இஸ்ரேலிய இராணுவத்தால் பெய்ரூட்டில் முற்றுகைக்கு உள்ளானபோது கடாபி ஒன்றும் செய்யவில்லை. தன்னுடைய கொள்கையின் திவால்தன்மையை வெளிப்படுத்தியும், சொல் அலங்காரத்தை யதார்த்தத்துடன் சமன்படுத்த வகை தெரியாத நிலையில், நகரத்தில் இருந்து வெளியேறுவதற்குப் பதிலாக அரஃபாத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற ஆலோசனையைக்கூடத் தெரிவித்தார்.

லிபிய எண்ணெய்ப் பணமும் ஆயுதங்களும் ஆபிரிக்காவிலும் உபயோகப்படுத்தப்பட்டன. 1970களில் தொடக்கத்தில், லிபியா, இஸ்ரேலிய அயல்நாட்டுக் கொள்கை முயற்சிகளை ஆபிரிக்காவில் எதிர்க்க முற்பட்டு அங்கு சியோனிச எதிர்ப்பு ராஜதந்திர அணியை தோற்றுவித்தார். இஸ்ரேலுடன் உறவை முறித்துக்கொண்டு, அரபு மொழியை அவர்கள் மொழியாக ஏற்றுக்கொண்டு, இஸ்லாத்தை அவர்கள் அதிகாரபூர்வ மதமாகவும் ஏற்றுக் கொண்டால் பணம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். 1975ல் லிபியா ஐ.நாவில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது, அதன்படி சியோனிசம் என்பது இனவெறிக்குச் சமமாகும் என்று கூறப்பட்டது. 28 ஆபிரிக்க நாடுகள் லிபியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்தன.

ஆனால், லிபியாவை அண்டை ஆபிரிக்க நாடுகளுடன் இணைத்துக்கொள்ளும் திட்டங்கள் பலன் அளிக்கவில்லை. கடாபி, இராணுவத்தில் வலிமை கொண்டிருந்தாலும், ஆபிரிக்க, அரேபிய மக்களிடையே செல்வாக்கை பெருக்கிக் கொள்ள முடியவில்லை. லிபியாவின் தொடர்ந்த பிராந்தியத் தலையீடு, அதிலும் அண்டைப் பகுதியான Chad ல், லிபியப் படைகள் எண்ணெய்வளம் மற்றும் யுரேனிய வளம் மிகுந்த Aozou Strip-ä கைப்பற்றவேண்டும் என்ற முயற்சி, இறுதியில் பிரான்சின் ஆதரவு பெற்றிருந்த சாடியப் படைகளால் முறியடிக்கப்பட்டது.

கடாபியின் இஸ்லாமியவாதமும், ஸ்ராலிசத்தின் மீதான நம்பிக்கையும்

கருத்தியல் அளவில், கடாபியின் அரசாங்கம் தன்னுடைய உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை நியாயப்படுத்த சமயத்தின்பக்கம் திரும்பியது. புதிய அரசாங்கம், நாட்டின் சட்ட முறையை ஏட்டளவில் திருட்டுக்கு உறுப்புக்களை வெட்டும் வழக்கும் உட்பட, இஸ்லாமிய ஷாரியச் சட்டத்தின் அடிப்படையை ஏற்றது. குடிப்பழக்கம், பொதுவில் களிப்பு ஆகியவையும் தடை செய்யப்பட்டன.

தேசியவாதம் மற்றும் மதம் இவற்றின் அடிப்படையில் "மூன்றாம் உலகதத்துவம்" என்பதை கடாபி கொண்டுவந்து ஒரு "பச்சை நூலில்" எழுத்துவடிவத்திலும் அதைத் தெரியப்படுத்தினார். அரபு தேசியவாதம் ஒரு "தெய்வீக மற்றும் அனைத்துலகச் செய்தி" யைக் கொண்டது என்றும் இஸ்லாத்திடமிருந்து பிரிக்கமுடியாதது என்றும் அது வாதிட்டது. இஸ்லாம்தான் உலக மனித மதிப்பீடுகளும் நாகரிகத்தின் ஆதாரம் என்றும் அறிவிக்கப்பட்டது. 1978ல் எவரேனும் இஸ்லாத்தை நிராகரித்தால், லிபியக் குடியுரிமையை இழக்க நேரிடும் என்பதற்கு அது அடிப்படையாக்கப்பட்டது. கம்யூனிசமும் நாத்திகமும் இயல்பிலேயே ஒவ்வாத கருத்துக்களாக அறிவிக்கப்பட்டன.

இவருக்கு முன்பு நாசர் போல் கம்யூனிச எதிர்ப்பு இருந்தபோதிலும், கடாபி ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் முட்டுக் கொடுத்து நிறுத்தப்பட்டார். முதலில் இருந்தே, புதிய ஆட்சி சோவியத் ஒன்றியத்திற்கும் மேலை நாடுகளுக்கும் இருந்த வேறுபாடுகளைத் தனக்குச் சாதகமான முறையில் பயன்படுத்தி வந்தது. சுதந்திர அதிகாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிய அன்றே, லிபிய வானொலி தங்களின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியை பிரிட்டிஷ் அரசு தடுக்குமானால், சோவியத் கடற்படை தலையிடும் என்று உலகிற்கு அறிவித்தது. இது ஒரு அப்பட்டப் புளுகு. அப்பொழுது இருநாடுகளுக்கும் உறவு மேற்கொள்ளப்பட்டு இருக்கவில்லை. இருந்தபோதிலும் விரைவில் லிபியா, தான் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள மோதலில் "நேர்முறையில் நடுநிலையாளராக" இருப்பதாகக் கூறியது.

சில ஆண்டுகளில், லிபியா மாஸ்கோ ஸ்ராலினிஸ்டுகளின் நவீன ஆயுதங்கள் உறுதிமொழியினால் ஈர்க்கப்பட்டது; அதிலும் 1973க்குப் பிறகு இது அதிகமாயிற்று. சோவியத் பிரதம மந்திரி கோசிஜின் 1975ம் ஆண்டு லிபியாவிற்கு வருகை புரிந்தார்; விரைவில் லிபியா உலகத்தில் இராணுவ ஆயுதங்களுக்கு மிகவும் உயர்ந்தசெலவு செய்யும் நாடுகளில் ஒன்றாக மாறியது. 1978ம் ஆண்டு வார்சோ ஒப்பந்தத்தில் தானும் சேருவதற்கு லிபியா விண்ணப்பித்தது. 1979ல் ஆப்கானிஸ்தானத்தின்மீது சோவியத் படையெடுத்தபொழுது, லிபியா அதற்கு ஆதரவு தந்தது.

தங்கள் பங்கிற்கு ஸ்ராலினிஸ்டுகள் அப்பகுதியில் வல்லமைச் சமநிலையை மாற்றும் வகையில் அதிக ஆயுதத் திறனோ அல்லது மனித ஆற்றலோ லிபியாவிடம் இல்லாமல்போகும் வகையைக் கடைபிடித்தனர். மாறாக லிபியாவிற்கு விற்கப்படும் ஆயுதங்கள் அமெரிக்காவிடம் சலுகைகள் பெறுவதற்கு அழுத்தம் கொடுக்கத்தான் பயன்படுத்தப்பட்டன. லிபியா, சோவியத் கடற்படைக்கு மத்தியதரைக்கடல் பகுதியில் ஒரு தளத்தையும் கொடுக்க இயலும்.

பெரும்பாலும் அமெரிக்காவிற்கு சொந்தமான எண்ணெய் தொழிலை முற்றிலும் தேசிய மயமாக்குவதை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக, அப்பொழுது செளதி அரேபியாவிற்குச் சமமாக எண்ணெய் உற்பத்தியைக் கொண்டிருந்த லிபியா, எண்ணெய் உற்பத்தி, விலை நிர்ணயிப்பு இவற்றை அரசியல் ஆயுதமாக மேலை நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்த தலைப்பட்டது. லிபியாவில் பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் உடைமைகள், பிரிட்டனின் ஏனைய மத்தியகிழக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசியமயமாக்கப்பட்டன; எண்ணெய் உற்பத்தி பலமுறையும் குறைக்கப்பட்டது அல்லது எண்ணைய் விலை திறமையாகக் கையாளப்பட்டது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டணி அமைப்பான OPEC -ல் லிபியா ஒரு முக்கிய பங்கை ஆற்றியது.

முடிவின் ஆரம்பம்

1980 களில் கடாபியின் கொள்கைகள் அதிகரித்த அளவில் அழுத்தத்திற்கு ஆளாயின. இதற்குச் சில காரணங்கள் இருந்தன. முதலில், உலகச் சந்தையில் எண்ணெய்விலைச் சரிவு, நாட்டின் நிதி நிலைமையை பெரிதும் பாதித்தது. குறிப்பாக 1980 களில் உலகம் முழுவதும் கூடுதல் எண்ணெய் உற்பத்தி ஏற்பட்டதால் எண்ணெய் வருவாய் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் குறைவுற்றது.

இரண்டாவதாக, அமெரிக்காவின் புதிய றேகன் நிர்வாகத்தின் விரோதக் கவனங்களை நாடு ஈர்த்திருந்தது, சோவியத் செல்வாக்கை "திரும்ப சுருட்டிக்கொள்ள" அது ஒப்புக் கொண்டிருந்தது.

அமெரிக்காவுடன் உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் லிபியாவில் இன்னும் தொடர்ந்து இருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்மீது அழுத்தத்தை குறைத்தது, ஆயினும் கூட 1981ம் ஆண்டு வாஷிங்டனில் இருந்த லிபிய தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். லிபிய கடற்கரைக்கு அருகே, சிட்ரா வளைகுடாப்பகுதியில் மிகப்பெரிய அமெரிக்கப் போர்க்கப்பலான நிமிட்சில் தளம் கொண்டிருந்த விமானங்களால், இரண்டு லிபிய போர்விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன. அமெரிக்கா, லிபியாவை விரோத நாடு எனச்சுட்டிக்காட்டியது; அதே நேரத்தில் அமெரிக்கா, லிபியாவிற்கு அருகில் உள்ள துனிசியாவிற்கும், சூடானுக்கும் கூடுதலான உதவியைக் கொடுத்தது. 1982ம் ஆண்டு லிபிய எண்ணெய்மீது தடைவிதிக்கப்பட்டது; அவ்வாறு செய்யுமாறு ஐரோப்பிய அரசுகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

1985ம் ஆண்டு அமெரிக்கா அனைத்து லிபிய எண்ணெய்ப் பொருட்களுக்கும் தடைவிதித்து, அந்நாட்டில் இருந்த தன் குடிமக்களையும் அகற்றிவிட்டது; இது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அமெரிக்கா 1986ம் ஆண்டு, லிபிய இராணுவ விமானங்களை அழித்து மிகவும் இகழ்வான குண்டுவீச்சுக்களை பெங்காழியிலும், திரிபோலியிலும் நடத்தியது. ஒரு பேர்லின் இரவு நடன அரங்கத்தின்மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி என்ற பெயரில் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்; அவர்களில் கடாபியின் மகளும் அடங்கியிருந்தார். பல ஐரோப்பிய தூதரகங்களும் சேதத்திற்குள்ளாயின.

உள்நாட்டைப் பொறுத்தவரை, எப்போதுமே சாதாரண லிபியர்களிடையே பெரும் ஆதரவு இல்லாதிருந்த ஆட்சி, இன்னும் கூடுதலான முறையில் சர்வாதிகாரப் போக்கைக் கொண்டது. 1972 லேயே வேலைநிறுத்தங்கள் தடைசெய்யப்பட்டிருந்தபோதிலும், அரசியல் நடவடிக்கைகளும் நாட்டிற்கு எதிரான துரோகங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 1970 களில் எண்ணெய் மூலம் பெரும் வருவாயை ஈட்டியிருந்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க வகையில் உண்மையான சமூக முன்னேற்றங்களுக்கு செலவு செய்திருந்தது; அதிலும் குறிப்பாகக் வீட்டு வசதிக்கும் கல்விக்கும் செலவழித்திருந்தது. சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு உயர்ந்தது. மிகப்பெரிய முறையில், மோசமாகத் திட்டம் இடப்பட்டிருந்தாலும், பாசன வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் மிகப்பெரியதான, Great Manmade River என்னும் நிலத்தடித் தண்ணீரைப் பயன்படுத்தும் முறை, இன்னும் முற்றுப்பெறா நிலையில் உள்ளது, மற்றவற்றைப் பற்றி எவருக்கும் நினைவுகூட இல்லை.

அதேநேரத்தில் 1980 களில் அரசாங்கம் உள்நாட்டு அடக்குமுறையை அதிகரித்தது. அரசாங்கத்தை எதிர்த்த நூற்றுக்கணக்கான அரசியல் எதிராளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 1978க்குப் பின் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டனர். நாடுகடத்தப்பட்ட அரசியல் எதிராளிகள் படுகொலை செய்யப்பட்டனர். 1981ம் ஆண்டு பொது இடத்தில் சவுக்கடி முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

பொருளாதாரத்தில் பெரும்பகுதிகளும், சமூகப் பணிகளும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருந்தன. நெருக்கடிகாலத்தில் அரசாங்கம் இந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை எல்லா தவறுகளுக்கும் காரணமாகக் காட்டப்பட்டனர். 1984-85 ல் மட்டும் 200,000 வெளிநாட்டு தொழிலாளர்களில் 60,000 முதல் 70,000 பேர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1984 ஆட்சி கவிழ்ப்பிற்கு ஒரு முயற்சி நாடுகடத்தப்பட்டிருந்த Libyan National Salvation Front ஆல் மேற்கொள்ளப்பட்டது; கடாபியை அகற்றுவதில் பல முயற்சிகள் தோல்வி அடைந்திருந்தபோதிலும், இதற்கு சற்று உள்நாட்டு ஆதரவு இருந்தது. இதற்குப் பதில் கொடுக்கும் வகையில் கடாபி, அரச இயந்திரத்தில் இருந்த ஏராளமான பணியாளர்களை அகற்றி, தன்னுடைய சொந்த சர்வாதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார்; இளைய தீவிரப் போக்கினரைக் கொண்ட புதிய "புரட்சிக் குழுக்கள்" ஏற்படுத்தப்பட்டு, அவை அதிகாரம் செலுத்த, கடாபியின் சொந்த ஆதரவை நம்பியிருந்தன.

சோவியத் நாட்டில் வெளிப்படைத் தன்மை (Glasnost) மற்றும் மறுசீரமைப்பு (Perestroika) இரண்டும் மிகையீல் கோர்ப்பச்சேவ், பின்னர் பொரிஸ் யெல்ட்சினால் வளர்ந்த நிலையில், அமெரிக்கா லிபியாவிற்கு எதிரான ஆத்திரமூட்ல்களை அதிகரிக்க ஊக்குவிக்கப்பெற்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு என்ற போலிச்சாயல், முறையாக சோவியத் ஒன்றியம் 1991ல் கலைக்கப்பட்டதில் கைவிடப்பட்டது, பழைய சோவியத் ஒன்றிய பகுதிகளில், மீண்டும் முதலாளித்துவ சொத்துடைமை முறை புகுத்தப்பட்டது, அதுவும் உலக ஏகாதிபத்திய முறையுடன் மறு இணைப்பை கொண்டது என்ற செயல்களில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

1980 கள் முழுவதும் அமெரிக்க அழுத்தம் அதிகரித்தது. 1988ல் Pan Am Flight 103, ஸ்காட்லாந்தில் உள்ள லாக்கர்பீக்கு மேலாகப் பறக்கையில் அழிக்கப்பட்டமை ஒரு காரணமாகக் கொள்ளப்பட்டு லிபிய அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்டது; மற்றைய அரபு நாடுகளைப்போலில்லாமல், அது 1991ல் அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுத்ததை எதிர்த்திருந்தது. 1992ல் ஐ.நா பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது சுமத்தப்பெற்று, எண்ணெய் தொடர்பு உடைய கருவிகளும், ஆயுதங்களும் லிபியாவிற்கு விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டது.

அமெரிக்காவின் வழியை பிரிட்டனும் பின்பற்றி, 1984ம் ஆண்டு, லிபியத் தூதரகத்திற்கு வெளியே லண்டனில் ஒரு போலீஸ் பெண்மணி சுடப்பட்டதை அடுத்து, தூதரக உறவுகள் முறித்துக் கொள்ளப்பட்டன.

இதற்கு விடையிறுக்கும் வகையில் லிபிய அரசாங்கம் அமெரிக்காவுடன் தணிந்து போகும் முறையில் பல முயற்சிகளை மேற்கொண்டதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு என்ற தன்மையையும் முற்றிலும் கைவிட்டது.

1990 களில் கடாபியின் உயிர்நிலை ஐரோப்பாவாக இருந்தது; அமெரிக்காவுடன் அதன் உறவுகள் துண்டிக்கப்பட்டது போன்ற நிலை, ஐரோப்பாவில் இல்லை. 1986ம் ஆண்டு அமெரிக்க குண்டுவீச்சை ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தன. இத்தாலிய காரின் பெரு நிறுவனமான Fiat ல் லிபியா பெரும் உடைமைப் பங்கைக் கொண்டிருந்தது; அதன் எண்ணெய் ஏற்றுமதிகளும் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் செலுத்தப்பட்டு இருந்தன.

1997ம் ஆண்டு, டோனி பிளேயருடைய தொழிற்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது, லிபிய எண்ணெய் வளத்தில் ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி ஆகியவற்றோடு பிரிட்டனும் அமெரிக்காவும் போட்டிகொள்ளும் நடவடிக்கைகளின் தொடக்கக் கட்டமாயிற்று. நீண்ட பேரங்களுக்கு பின்னர், ஒல்லாந்தில் Camp Zeist என்ற இடத்தில் Lockerbie தாக்குதல் பற்றிய ஒரு திட்டமிட்ட விசாரணைக்காக 1999ம் ஆண்டு இரு லிபிய அதிகாரிகளை கடாபி ஒப்படைத்தார். ஐ.நா. தடைகள் தற்காலிகமாக நீக்கப்பட்டன; ஐரோப்பிய முதலீட்டுக்கான அரசியல் தடைகள் சிறிது சிறிதாக அகற்றப்பட்டன.

ஐரோப்பாவிடம் தான் கொண்டுள்ள உறவுகளைப் பயன்படுத்தி கூடுதலான சலுகைகளை அமெரிக்காவிடம் இருந்து பெறுவதற்கு லிபியா முயன்றது. 2001ம் ஆண்டு, அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் லிபியத்தள வளங்களைப் பயன்படுத்தாவிட்டால், லிபியாவில் இருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களும் அவற்றின் உடைமைகளும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. எப்படியும் அமெரிக்க நிறுவனங்கள் வரவேண்டும், இல்லாவிடில் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு நேர்ந்த கதி தனக்கும் நேரும் என்ற அச்சம் கடாபியின் ஆட்சிக்கு இருந்தது; மேலும் அமெரிக்க உடைமையில் இருக்கும் நிறுவனங்களின் வசதிகள் தக்க பராமரிப்பையும் அமெரிக்க உதிரிபாகங்களையும் நாடி நிற்கின்றன.

2001, செப்டம்பர் 11 க்கு பின்னர், கடாபியும் அவருடைய உளவுத்துறைத் தலைவரான மூசா கூசாவும் தங்கள் வாய்ப்பைக் கண்டறிந்து, அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" முழு ஆதரவை சொற்களிலும் செயல்களிலும் தருவதாக உறுதி கூறினர். லாக்கர்பீ (Lockerbie) பாதிப்பாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய இழப்புத்தொகை பற்றிய பேரங்களை ஒட்டி, இஸ்லாமிய போராளிகள் பற்றிய ஆயிரக்கணக்கான உளவுத்துறை ஆவணங்களை, கூசா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவுத்துறைக்கு கொடுத்தார். 1970 களில் IRA க்கு விற்கப்பட்ட ஆயுதங்களின் பட்டியலும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது. 2004 தொடக்கத்தில், தன்னுடைய பேரழிவு ஆயுதத் திட்டம் எனக் கூறுப்படும் திட்டத்தையும் கைவிடுவதாக, அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் பிரச்சாரத்திற்கு உதவும் வகையில் கூறினார்; இந்த அழிவு ஆயுதங்கள் ஈராக் மீதான போரை நியாயப்படுத்த பிரச்சார முறையாக இருந்திருந்தன. இதுவும் சிரிய, பாலஸ்தீனிய இராஜதந்திர தனிமைப்படுத்தலுக்கு ஒரு காரணம் ஆயிற்று.

உள்நாட்டைப் பொறுத்தவரையில், 1990 களிலும் 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஆட்சி, செய்தித் தணிக்கையை தொடர்ந்து கொண்டுள்ளது; வெளிநாட்டு தொழிலாளர்களும் வெளியேற்றப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டுள்ளன. 1996ம் ஆண்டு பெரும்பாலும் முஸ்லீம்கள் இருந்த சிறையில் ஏற்பட்ட கலகத்தில், 1000 கைதிகள் கொல்லப்பட்டனர். ஒரு வளர்ந்து வரும் இளைய சமுதாயம் தொடர்ந்து அரசாங்கம் நடத்தப்படும் முறைபற்றி அதிருப்தி அடைந்துள்ளது; அரசாங்கமோ எப்பொழுதேனும் பழைய நாசர் முறையில் அலங்காரச் சொற்களைக் கூறி, பழங்குடியினருக்கு ஆதரவு அளித்து எண்ணெய் தொடர்புடைய நலன்களைக் குறிப்பிட்டவர்களுக்கு அளிக்கும் முறையில் தன்னுடைய கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது. புதிய பிரதம மந்திரியாகிய ஷுக்ரி கானெம் (Shukri Ghanem) கிட்டத்தட்ட 300 நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதாக உறுதிமொழி கூறியுள்ளார்; அரசாங்கம் நடத்தும், பல தொழிலாளர்கள் நம்பியுள்ள, பொதுத் துறையையும் தனியார் இலாபத்திற்கு விடுவதாகக் கூறியிருக்கிறார்.

கடாபி நீண்ட பயணத்தைத்தான் முடித்துள்ளார். தற்பொழுது அவருடைய பங்கு ஏகாதிபத்தியத்திற்கு உளவு சேர்ப்பவர், எல்லைப் போலீஸ்காரர், எண்ணெய் விற்பனையாளர் என்றும் 1969ல் அவர் அகற்றிய அரசர் இட்ரிஸ் போலத்தான் இருக்கிறது; இது அவருடைய பழைய உறுதிமொழிகளான அரபு ஒற்றுமை, பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவு என்பதற்கெல்லாம் முற்றிலும் எதிராக உள்ளது. சமீபத்தில் அவரே இக்கருத்தைக் கூறினார்; "அரபு தேசியவாதம், ஒற்றுமை என்ற காலமெல்லாம் போய்விட்டது... இந்த எண்ணங்கள் மக்களை திரட்டியிருந்தபோதிலும், இப்பொழுது செல்லாக் காசுதான்."

ஆனால் கடாபியின் தீவிரப்போக்கின் உருவை விடக் கூடுதலான சரிவும் ஏற்பட்டுள்ளது. அதாவது அவருடைய பாதை, மக்களை ஈர்த்து ஒன்றுபடுத்துவதற்காக அரபு முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முன்னோக்கை முன்வைக்க முடியாது என்பதைத் தெளிவாக்கியுள்ளது. இந்தப்பணி வருங்காலத்தில் தொழிலாள வர்க்கத்திற்குத்தான் வர இருக்கிறது.

See Also :

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

பி.எல்.ஓ வின் அரசியல் தோல்வியும் ஹமாஸ் இன் தோற்றமும்
பகுதி1|பகுதி2|பகுதி3

Top of page