World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Why is IG Metall sabotaging the struggle at Opel?

ஓப்பல் போராட்டத்தினை IG Metall நாசவேலை செய்வது ஏன்?

By Ulrich Rippert
25 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜெனரல் மோட்டார்ஸ் ஐரோப்பாவிலுள்ள துணை நிறுவனங்களில் மிகப்பெருமளவிற்கு ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்திருப்பதற்கு எதிராக சென்ற செவ்வாயன்று ஐரோப்பா தழுவிய ஒரு நாள் கண்டனப்பேரணிகளுக்கு தொழிற்சங்கங்களும், தொழிற்சாலைக் குழுக்களும் காட்டிய விரோதத்தை தொழிலாளர்கள் முன்னொருபோதும் சந்தித்ததில்லை.

ஜேர்மனி Russelsheimல் ஓப்பல் கூட்டுபணிக்குழு தலைவர் Klas Frans பேசும்போது Bochumல் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை கண்டித்ததுடன், அவர்கள் தான் என்ற சுயநலத்துடன் செயல்பட்டதாக குற்றம்சாட்டினார். Bochum தொழிற்சாலையில் தொழிலாளர்களின் சுயாதீனமான வேலைநிறுத்தம் ஒற்றுமையை சிதைக்கின்றது என்று அவர் கூறினார். ஏனென்றால் ஐரோப்பிய தொழிலாளர் குழு ''நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்'' என்றும் நிர்வாகத்துடன் உடன்பாட்டு பேச்சுநடத்துவோம் என்றும் முடிவு செய்திருப்பதாக அவர் சொன்னார். 1998ல் ''அர்த்தமற்ற'' போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டதால் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டது எனவும் மிக்சிகன் Flint நகரத்தில் ஏற்பட்ட அதே நிலவரம் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார். அந்த வேலைநிறுத்தம் ஜெனரல் மோட்டார்ஸ் பங்குகளுக்கு ''நிரந்தர'' சேதத்தை ஏற்படுத்திவிட்டது என்று அவர் அறிவித்தார்.

அதே நேரத்தில் செவ்வாயன்று நடைபெற்ற கண்டப்பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் ஏந்திவந்த பதாகைகளில் ''எல்லா இடங்களிலும் அனைத்து வேலைகளையும், தற்காத்து நிற்கவேண்டும்'' என்ற வாசகங்கள் அடங்கியிருந்தன. ''ஆட்குறைப்பு சோதனையிலிருந்து நாம் தப்பிவிடுவோம் என்ற மாயைக்கு எதிராக நான் எச்சரிக்கிறேன். அல்லது சில நூறு பணிகள் இழப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அனைத்து பிரச்சனைகளும் தீர்த்துவைக்கப்படும் என்று மாயைக்கும் எதிராக எச்சரிக்கிறேன்'' என்று Franz சொன்னார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெனரல் மோட்டார்ஸ் நஷ்டத்தை சந்தித்துவருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.

நிறுவனத்திற்கு பரந்த விட்டுக்கொடுப்புக்களை தர முன்வந்த பின்னர் Franz கண்டனம் செய்து கொண்டிருக்கிற தொழிலாளர்களிடம் கூறினார்: ''பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு தீர்வுகாண நாங்கள் தயாராக இருந்தோம் மற்றும் தயாராக இருக்கிறோம்'', ''நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தொழிலாளர்கள் தியாகங்களை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் வருமான வெட்டு 10%சதவீதத்திற்கு மேற்படாத அளவு நிலைநாட்டப்படும் வரை இத்தகைய தியாகத்திற்கு நாம் தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

Bochumல் வேலைநிறுத்தம் செய்யும் எந்த தொழிலாளியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பல தொழிலாளர்கள் இதர நிறுவனங்களில் இருந்தும் தங்களது ஒற்றுமையை தெரிவிப்பதற்காக வந்திருந்தனர். மற்றும் வேலை நிறுத்தம் செய்வோரின் உரைகளை கேட்கவும் வந்திருந்தனர். மாறாக IG Metall தலைவர்களும் தொழிலாளர் குழுவைச் சேர்ந்தவர்களும் தேவாலய பிரதிநிதிகளோடு சேர்ந்து வேலைநிறுத்ததை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Bochumல் நள்ளிரவு பணிமுறைக்கு பின்னர் அடுத்த பணிமுறையை ஆரம்பிக்க தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர். தொழிற்சாலையின் ஒட்டுமொத்த தொழிலாளர்களிடையே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கோரினர். வழக்கமான தொழிற்சங்க நடைமுறைகளின்படியே கூட பார்தாலும் தொழிலாளர் குழுவும் IG-Metall தொழிற்சங்கமும் ஒரு அதிகாரத்துவ தந்திரோபாயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. ''பகிரங்க விவாதித்தித்திற்கு'' உடன்படிக்கை ஏற்பட்டாலும் சென்ற புதனன்று அந்த நிறுவன தொழிலாளர்களின் பேரவைக் கூட்டத்தில் தொழிலாளர் குழு உறுப்பினர்களும் தொழிற்சங்க நிர்வாகிகளும் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் தொழிலாளர்களை மிரட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். அந்தப்பேரவை நடைபெற்ற மேடை மற்றும் ஒலி வாங்கியை தொழிற்சாலை பாதுகாப்பு காவலர்கள் சுற்றிவளைத்துக்கொண்டு நின்றனர்.

வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட வாக்குச்சீட்டு வாசகம் பின்வருமாறு இருந்தது. ''தொழிற்சாலை தொழிலாளர் குழு நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன் மற்றும் வேலைகள் மீண்டும் தொடக்கப்பட வேண்டுமா?'' என்பதாகும். இதனுடைய பொருள் என்னவென்றால் வேலை நிறுத்தத்தை தொடரவேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள், அதே நேரத்தில் எல்லா உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளையும் நிறுத்துவற்கு சம்மதிக்க வேண்டும். இந்தச்சூழ்நிலைகளில் கூட தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG Metall தொழிற்சங்கமும் வேலைநிறுத்தத்தை சீர்குலைத்து தொழிலாளர்கள் முதுகிலே குத்தியது இதுதான் முதல்தடவையும் அல்ல என்றாலும் மிகப்பெரும்பாலான சந்தர்ப்பங்களில் போராட்ட முடிவில்தான் இதுதான் நடக்கும். அடிக்கடி வாரக்கணக்கில் மோதல்கள் நீடித்த பின்னர் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை காட்டிக்கொடுக்க உடன்படும். ஆனால் இப்போது IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவுடன் பெரும்பான்மையான தொழிலாளர்களின் மோதல்போக்கு முன்னரே ஆரம்பித்து விட்டமை எந்தளவிற்கு அடிப்படையான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

உலகளாவிய தாக்குதலில் புதியதொரு சுற்று

ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் பெரும் எடுப்பில் ஆட்குறைப்பு செய்வதற்கும் மற்றும் ஐரோப்பாவில் 12,000 வேலைத்தலங்களை ஒழித்துக்கட்டுவதற்கான திட்டத்தையும், அறிவித்திருப்பது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான புதியதொரு சுற்றுத் தாக்குதல்களை ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் ஆரம்பித்து வைத்திருக்கிறது.

Bochum தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் Detroit அருகிலுள்ள Pontiac கார் தொழிற்சாலையில் பணியாற்றும் 5500 பேரில் 900 பேரை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்தது. ஜனவரியில் அந்த தொழிற்சாலையில் அனைத்து பணிகளையும் மூடிவிட ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டிருக்கிறது. நிதிச்சிக்கல்கள் மற்றும் அடுத்த ஆண்டிற்கான பாதகமான சந்தை ஊகங்கள் ஆகியவற்றால் ஜெனரல் மோட்டார்ஸ் தனது முயற்சியை நியாயப்படுத்தியது.

உண்மையிலேயே Pontiac தொழிற்சாலை வாகனங்களுக்கான தேவைகள் கணிசமாக உயர்ந்திருக்கின்றன. நிறுவனம் தனது சர்வதேசிய அந்தஸ்தை மிகக்கொடூரமான முறையில் பயன்படுத்தி ஒரு தொழிற்சாலைக்கெதிராக இன்னொரு தொழிற்சாலையை மோதவிட்டு தொழிலாளர்களிடம் சலுகையைகளை பெறுவதற்கு புதிய சுற்று நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. அது தனது உற்பத்தியை போலந்திற்கு அல்லது சீனாவிற்குக்கூட மாற்றக்கூடிய நிலைமையை பயன்படுத்தி தொழிலாளர்களை சுரண்டிவருகிறது. போலந்தில் நிலவுகின்ற அடிமட்ட 5 யூரோ ஊதிய விகிதங்கள் கூட ''மிக அதிகம்'' என்று கூறத்தக்க அளவிற்கு சீனாவில் ஊதியங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த வழியில் செயல்படுகின்ற பெரிய நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் மட்டுமல்ல ஜேர்மனியிலிருந்து இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களான Siemens, DaimlerChrysler மற்றும் Volkswagan போன்ற நிறுவனங்கள் இதே போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. உற்பத்தி இடம்பெயர்ந்து விடும் என்ற அச்சுறுத்தலின் மூலம் விட்டுக்கொடுப்புக்களை தருவதற்கு தொழிலாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். உலகில் எல்லா இடங்களிலும் ஒரு நாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றொரு நாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கு விரோதமாக திருப்பிவிடப்படுகின்றனர்.

இதற்கு மாற்று எதுவும் சமூக ஜனநாயக கட்சியிடமோ (SPD) அல்லது தொழிற்சங்கங்களிடமோ அல்லது தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களிடமோ இல்லை. அவர்களது முன்னோக்கு ''சமூக கூட்டுழைப்பு'' என்ற தத்துவத்தில் வேர்விட்டிருக்கிறது. மூலதனத்தினதும் தொழிலாள வர்க்கத்தினதும் நலன்களை சமரசம் செய்துவைப்பதுதான் அந்தத் தத்துவம். 1960கள் மற்றும் 1970 களில் கூட அவர்கள் தொழிலாளர் மேம்பாட்டிற்காக பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய நேரத்தில் கூட அவர்கள் தொடர்ந்து பெருவர்த்தக நலன்களுக்காக பணியாற்றினார்கள், அந்த நேரத்தில் தொழிற்சங்கங்கள் பரவலாக கூறிய புதுமொழி ''பால்தருகின்ற பசுவை எவரும் கொல்லக்கூடாது'' என்பதாகும்.
தற்போது தொழிற்சாலை தொழிலாளர் குழு ஒவ்வொன்றும் தொழிற்சங்க பிரதிநிதியும் வழக்கமாக தனக்கு நிறுவனங்களின் பிரச்சனைகள் தெரியும் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும், பூகோளமயமாக்கலின் கீழ் நிறுவனங்களின் நலன்களுக்கான இத்தகைய கண்ணோட்டங்கள் தொழிலாளர்களின் பேரழிவிற்கு நேரடியாக இட்டுச்செல்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் Bochum தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டதைப்போல் ''தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை குழந்தை தொழிலாளர் (மிக்ககுறைந்த ஊதியம்) ஆக்குகின்ற அளவிற்கு மிரட்டி விடமுடியும்'' என்பதுதான் இதன் பொருள்.

பங்குதாரர்கள் மிகப்பெருமளவிற்கு சம்பாதிக்கின்றனர். அதை தங்களது செல்வத்தை தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திவருகிறார்கள். ஜோர்ஜ் W. புஷ்ஷின் மறுதேர்தல் பிரச்சார நிதியாதாரங்களில் மிக முக்கியமான மூலாதாரங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் உம் ஒன்றாகும். 2000 ஜனாதிபதி புஷ்ஷை சுற்றியுள்ள முன்னணி வட்டாரங்களில் சேருவதற்கு முன்னர், தற்போது வெள்ளை மாளிகையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவரும் Andrew Card நீண்டகாலம் ஜெனரல் மோட்டார்ஸில் அரசாங்கத்திற்கிடையிலான தரகராக பணியாற்றியவர்.

அதே நேரத்தில் தலைமை நிர்வாகிகளின் வருமானம் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு பெருகிக்கொண்டே போகிறது. இந்த பின்னணியைக் கொண்டு பார்க்கின்ற தொழிற்சங்கங்களும் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் நிறுவனத்தின் கணக்குசீட்டுகளின் நஷ்டக்கணக்கை பார்த்து வாய்மூடி தொழிலாளர்கள் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் குறித்து போதனை செய்கின்றனர்.

Bochum வேலை நிறுத்தம் முடிவுக்குவந்த அதே நாளில் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிற்சாலை நிர்வாகமும் கையெழுத்திட்டு கூட்டாக ஒரு பிரகடனம் வெளியிட்டது. அதில் ''Russelsheim மற்றும் Bochum இலுள்ள தொழிற்சாலைகள் தங்களது கார் தொழிற்சாலைகளை 2010 இற்கு அப்பாலும் நீடித்து வைத்திருக்கச் செய்வதற்குத் தேவையான போட்டித்திறனை உருவாக்குவதற்கு இரண்டு தரப்பும் ஒரே நோக்கத்தில் செயல்பட வேண்டும்'' என்ற வாசகம் அடங்கியுள்ளது. இந்த உடன்பாட்டின் உண்மையான பொருள் மறுநாள் தெளிவாயிற்று Russelsheim தொழிற்சாலையின் அபிவிருத்தித்துறையில் பெரும் எடுப்பில் வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன.

IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிடமிருந்து உடைத்துக் கொள்ளவேண்டியது அவசியம்

தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்து முடிவுசெய்வது மற்றும் வர்க்க ஒத்துழைப்பு ஆகிய கருத்துக்களில் உறுதியாக நங்கூரம் பாய்ச்சியுள்ளனர். அவர்களுக்கு வேறு எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கின்ற விருப்பம் இல்லாததுடன் அதற்கான ஆற்றலுமில்லை. ''சமூக கூட்டுழைப்பு'' ஆபத்து என்று எதிர்காலத்தில் அவர்கள் கருதுவார்களானால் Bochum வேலைநிறுத்தத்தை ஒடுக்குவதற்கு கையாண்ட கொடூரமான முறையை தொழிற்சாலை பாதுகாப்பு காவலர்களையும், போலீசாரையும் பயன்படுத்தி கொள்வார்கள். பல ஆண்டுகளாக அவர்கள் நிர்வாகத்தோடு சம்மந்தப்பட்டிருப்பதோடு இலாபத்தில் பங்கு பெற்று திளைத்தனர். தற்போது அவர்களது முக்கியமான பணி அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதுதான்.

இத்தகைய தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் சிலரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்வது பயனுள்ளது. இந்தவகைப்பட்டவர்களில் மிகவும் அருவருக்கத்தக்க தனித்தன்மைகொண்ட உதாரணமாக விளங்குபவர் தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவர் Klaus Franz. இதுவரை ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ்கா பிஸ்ஸருடன் (பசுமைக்கட்சி) நல்லுறவையே வைத்திருக்கிறார். 1970 களில் இருந்து அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தே இருக்கின்றனர். அவர்கள் இருவரும் பிராங்க்பேர்ட்டில் தீவிரவாத அநார்க்கிஸ்டுகள் வட்டாரங்களில் அப்போது தீவிரமாக இருந்தவர்கள். அவர்களோடு வங்கியாளர்கள் புதல்வரும் மற்றும் பின்னர் நகர பொருளாளர் ரொம் கோனிக் மற்றும் தற்போதைய ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத்தலைவர் டானியல் கோன்-பென்டிட் (பசுமைக்கட்சி) ஆகியோரும் இருந்தனர்.

1970களின் மத்தியில் ஓப்பல் வண்ணப்பட்டறையில் Klaus Franz பணியாற்ற தொடங்கினார். படிப்படியாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஏணிகளில் ஏறி 1980களில் தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினரானார். இன்றைய தினம் கம்பெனி நிர்வாகக்குழுவில் துணைத்தலைவராக இருக்கிறார். அவரே ஒப்புக்கொண்டுள்ளபடி அந்தத் தொழிற்சாலையை பாதுகாப்பாக வைத்திருப்பதை நோக்கமாக கொண்டு தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்கள் உருவாவதற்கு பொறுப்பாக இருந்தவர். அந்த ஒப்பந்தங்களில் கடுமையான ஊதிய வெட்டுக்களும், சலுகைகள் வெட்டும் சம்மந்தப்பட்டிருக்கிறது. ஓப்பலின் ஒலிம்பியா மாதிரி கார்கள் மீண்டும் அபிவிருத்தி செய்யப்பட்டதில் அவரது பணி முத்திரை பதிக்கப்பட்டிருப்பதாக பழைமைவாத Die Welt செய்திப்பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. அவர் திறமை மிக்க இணைநிர்வாகி என்றும் நிர்வாகத்தின் பெரிய மதிப்பை பெற்றிருப்பவர் என்றும் அந்த பத்திரிகை புகழ்ந்துள்ளது.

சென்ற ஆண்டு கிழக்கு ஜேர்மனியிலுள்ள பொறியியல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை காட்டுக்கொடுத்ததில் அவர் ஒரு முக்கியமான பங்களிப்பு செய்தார். அதற்கு பின்னர் IG Metall தலைமையில் தலைமைப்பொறுப்பு பெறுவதற்கு தவறிவிட்ட பின்னர் சில பதவிகள் அவருக்காக வந்தன. ஓப்பலில் தலைமைப்பதவிக்கு தகுதியானவர் என்று அவர் கருதப்பட்டார்.

Bochum வேலை நிறுத்தத்திலிருந்து கிடைத்திருக்கின்ற படிப்பினை தெளிவானது IG Metall மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியே வராமல் நிர்வாகத்தை எதிர்த்து போராடுவது இயலாத காரியம். தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அடிப்படையிலான அணுகுமுறை தேவை. அது தன்னைத்தானே அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் மறுசீரமைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு சோசலிச செயல் திட்டம்

பெருவர்த்தக நலன்களுக்கும், தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்குமிடையில் நிலவுகின்ற முரண்பாடுகளை சமரச அடிப்படையிலோ அல்லது விட்டுக்கொடுக்கும் அடிப்படையிலோ தீர்த்துவைக்க முடியாது. வேலை வாய்ப்புக்கள் மற்றும் சமூக நலன்களை தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் ஒரு சோசலிச முன்னளக்கின் அடிப்படையில் மட்டுமே பாதுகாக்கமுடியும். ஒரு நீண்டகால அரசியல் மோதலுக்கு ஆயத்தமாக வேண்டியது அவசியமாகும். சமூக ஜனநாயகம் மற்றும் அதன் வர்க்க சமரசத்திட்டம் ஆகியவற்றின் வங்குரோத்திற்கு பதில் தருகிற வகையில் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச முன்னோக்கிற்கு திரும்பியாகவேண்டும்.

ஒரு சோசலிச திட்டத்தின் உயிர்நாடி தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அடிப்படையில் ஒன்றுபடுத்துவதுதான். அது இந்த தொழிற்சாலை அல்லது அந்த தொழிற்சாலையின் சாதாரண பிரச்சனை அல்ல. அபிவிருத்தியடையாத நாடுகளிலும், அபிவிருத்தியடைந்த தொழில்துறை நாடுகளிலும் உலகரீதியாக முதலாளித்துவம் தொழிலாள வர்க்கத்தின்மீதும் முழுசமூகத்தின் மீதும் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

பல்வேறுபட்ட தொழிற்சாலைகளுக்கிடையிலுள்ள தகவல் தொடர்புகளும் மற்றும் இணைப்புகளும், ஒற்றுமை பற்றிய பேச்சுடன் பின்கதவு வழியாக ஒரு தொழிற்சாலைக்கு எதிராக இன்னொரு தொழிற்சாலையை ஏவிவிட்டுக்கொண்டிருப்பதற்கு தொழிற்சங்கங்களையும், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களையும் இனி அனுமதிக்கப்போவதில்லை.

ஒரு சர்வதேச மூலோபாயம் நேரடியாக ஒரு சோசலிச முன்னோக்கோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும். Seimens, Daimler Chrysler Volkswagan மற்றும் Karstadt போன்று ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் ஆரம்பித்துள்ள தாக்குதல் ஒன்றைத் தெளிவுபடுத்துகிறது; பெரிய நிறுவனங்களினதும் வங்கிகளினதும் இலாப முயற்சி மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் நலன்களோடு இனி ஒவ்வாதுள்ளது. இந்தத் தேவைகளும் நலன்களும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

எல்லா பெரிய நிறுவனங்களும் பரந்த சமூக மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் வர வேண்டும். உற்பத்திமுறைகள் முழு சமூக நலன்களுக்கு முரணாக செல்லுகின்ற போது அவற்றின் தனிச்சொத்துடைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

தொழிற்சாலைகளுக்கு உள்ளேயும் கூட நியாயமான ஜனநாயகக் கட்டுப்பாடு இருக்க வேண்டும். தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இரகசியமாக நிர்வாகத்துடன் பேச்சு நடத்துவதை தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும், மற்றும் அத்தகைய பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை முன் கூட்டியே தள்ளுபடி செய்துவிட வேண்டும்.

நிறுவனங்களின் கட்டளைகளுக்கெதிராக மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து தொழிலாளர்களது நலன்களையும், நிபந்தனையற்று பாதுகாத்து நிற்கின்றவர்களையும், நிர்வாகத்தின் கட்டளைகளை எதிர்த்து நிற்க தயாராக இருப்பவர்களையும் மட்டுமே தொழிலாளர்களின் பிரதிநிதியாக அனுமதிக்க வேண்டும்.

ஒவ்வொரு மட்டத்திலும் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் பற்றி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து தகவல் தரவேண்டும். ஜேர்மனி தொழிற்துறை சட்டத்தில் எழுதப்பட்டுள்ள 'அமைதிகாப்பு உறுதிமொழியை'' இல்லாதொழிக்கவேண்டும். நிர்வாகம் தொழிலாளர்களை பாதிக்கின்ற கணக்குப்புத்தகங்கள் மற்றும் திட்டங்கள் பகிரங்கமாக வெளியிடப்படவேண்டும்.

இங்கே சம்மந்தப்பட்டுள்ள பிரச்சனை என்னவென்றால் இது ஒரு அரசியல் போராட்டமாகும். அதாவது ஒரு புதிய கட்சியை கட்டுவது தேவை. ஒரு புதிய சர்வதேச சோசலிச கட்சியை உருவாக்குவதற்கு மிக முக்கியமான கருவியாக உலக சோசலிச வலைதளம் (WSWS) உள்ளது. அது தொழிற்சாலைக்குள் நடக்கின்ற கிளர்ச்சியை உலகளாவிய முக்கியமான மாற்றங்களோடு தொடர்புபடுத்துவதுடன் தொழிலாள வர்க்கத்திடையே அரசியல் மேம்பாட்டிற்கு ஒரு புதிய கட்டத்தை ஆயத்தம் செய்கிறது.

ஓப்பல் தொழிலாளர்களை WSWS ஐ வாசிக்குமாறும், மற்றும் அதன் வேலைகளில் பங்கெடுத்துக்கொள்ளுமாறும் நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். ஆசிரியர் குழுவுடன் தொடர்பை ஏற்படுத்தி முக்கிய அரசியல் நிகழ்ச்சிகளை தெரிந்து கொள்ளுங்கள். சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்யும் வாசகர் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்.

See Also :

வேலை வெட்டுகளுக்கு எதிராக ஐரோப்பா தழுவிய ஜெனரல் மோட்டார்கள் தொழிலாளர்களின் கண்டனப்பேரணிகள்

ஓப்பல் தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சனைகள்

ஜேர்மன் ஓப்பல் தொழிலாளர்கள்: 3, 4 யூரோக்கள் ஊயதித்தோடு ''நாங்கள் போட்டிபோட முடியாது''

ஜேர்மனி: ஓப்பல் 10,000 பேரை வேலைநீக்கம் செய்கின்றது

Top of page