World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US elections: Republicans marshal "poll watchers" to suppress working class vote

அமெரிக்க தேர்தல்கள்: தொழிலாள வர்க்க வாக்கை ஒடுக்குவதற்கு குடியரசுக் கட்சி திரட்டும் வாக்குப்பதிவு கண்காணிப்பாளர்கள்

By Joseph Kay
28 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

வாக்குப்பதிவு தினத்தில், வாக்குவித்தியாசங்கள் குறைவாக இருக்கக்கூடுமென்று கருதப்படுகின்ற பல கடுமையான போட்டி நிலவும் மாநிலங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு குடியரசுக் கட்சி 1000-கணக்கானவர்களை நியமிக்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. ஜனநாயகக் கட்சிக்கு முக்கியமாக ஆதரவாளர்கள் உள்ள நகரப்பகுதிகளில் ''வாக்குப்பதிவு கண்காணிப்பாளர்கள்'' என்றழைக்கப்படும் இவர்களது பணி புதிதாக பதிவு செய்து கொண்டுள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதை ஆட்சேபிப்பதுதான்.

இந்த முயற்சிகள் வாக்குப்பதிவில் மோசடி நடப்பதை தடுக்கும் ஒரு முயற்சி என்றும் ''வாக்குச் சீட்டின் கண்ணியத்தை நிலைநாட்டுவது'' என்றும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் வர்ணித்தனர். ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற புதிய வாக்களார் பதிவு இயக்கங்கள் குறிப்பாக கருப்பர்கள், ஸ்பானியர்கள், மற்றும் நகர்புற தொழிலாள வர்க்க மையங்களில் மிகப்பெருமளவிற்கு அதிகரித்துள்ளது. இவற்றில் மோசடிகள் சட்டவிரோதமான தன்மைகள் அடங்கியிருக்கின்றன என்று அவர்கள் கூறினர். என்றாலும் தங்களது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக எந்தவிதமான கணிசமான ஆதாரத்தையும் அவர்கள் தரமுடியவில்லை.

குடியரசுக் கட்சிக்காரர்கள் வாக்குப்பதிவில் "கண்ணியம்" என்று ஒரு இயக்கத்தை தொடக்கியிருப்பது வெளிப்படையான ஒரு சாக்குப்போக்காகும். வாக்குப்பதிவு அளவை ஒடுக்குவதும், தொழிலாள வர்க்கம் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளை செல்லாது என்று அறிவிப்பதும்தான் இந்த நடவடிக்கையின் தெளிவான நோக்கமாகும்.

குடியரசுக் கட்சியின் இந்த திட்டங்கள் வாக்காளர்களை மிரட்டுவதில் மிக அப்பட்டமான நடவடிக்கை என்பதால் நியூயோர்க் டைம்ஸ் இலேயே ஒரு கடுமையான தலையங்கம் எழுதுகின்ற நிலைக்கு தூண்டப்பட்டிருக்கிறது. செவ்வாயன்று அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ''வாக்குப்பதிவு தகுதியுள்ள வாக்காளர்களை இந்த ஆட்சேபிப்பவர்கள் வாக்களித்துவிடாது தடுக்கும் உண்மையான ஆபத்து உள்ளது. மிக மோசமான அளவிற்கு செல்வதென்றால் மாகாணத்தின் சில பகுதிகளில் வாக்குப்பதிவு கடுமையாக மந்தமாகிவிடும் மக்கள் உணர்ந்துள்ளதைவிட வாக்குப்பதிவு தினத்தில் வாக்குப்பதிவு நடப்பது மிகவும் பலவீனமாகிவிடும். சிறிதளவு எண்ணிக்கை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உட்கார்ந்து கொண்டு 1000-கணக்கான வாக்காளர்களை வாக்குப்பதிவு தகுதியில்லாதவர்களாக ஆக்கிவிடக்கூடும் ஒரு ஜனாதிபதி தேர்தல் முடிவையே மாற்றிவிடக்கூடும்."

ஓகியோவில் மட்டுமே குடியரசுக் கட்சிக்காரர்கள் 3600- கட்சிக்காரர்களை ஆளுக்கு 100-டாலர்கள்வீதம் ஊதியத்தில் நியமித்திருக்கின்றனர். அவர்கள் கிளிவ்லாந்து மற்றும் Cincennati மற்றும் குறிப்பாக கருப்பர் இன வாக்காளர்கள் மிக அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற புறநகர் பகுதிகளில் இந்த ஆட்சேபிப்பாளர்கள் குவிந்திருப்பார்கள் இதுபோன்ற பகுதிகளில் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.

இதர குறிவைக்கப்பட்டுள்ள மாகாணங்களில் புளோரிடா, மற்றும் அரிஜோனா மற்றும் மிசெளரி ஆகியவை அடங்கும். ஓகியோ, புளோரிடா மற்றும் மிசெளரி ஆகியவை குறைந்த வாக்குகள் வேறுபாட்டில் கடுமையான "போட்டி நிலவும்" மாநிலங்கள் என்று கருதப்படுகிறது. எனவே இது போன்ற மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னர் வாக்குப்பதிவு கண்காணிப்பாளர்கள் செயல்படுவர். எல்லா மாநிலங்களிலும் குடியசுக் கட்சிக்காரர்கள் இதுபோன்ற தந்திரோபாயங்களையே கடைப்பிடிப்பார்கள்.

குடியரசுக் கட்சியின் பிரச்சாரம் மூன்று அம்சங்களை நோக்கமாகக் கொண்டது. முதலில் பல்லாயிரக்கணக்கான பதிவு செய்த வாக்காளர்கள் வாக்குப்பதிவில் கலந்துகொள்ள முடியாதவாறு நேரடியாக தடுப்பது. கட்சி ஏற்கனவே ஓகியோவில் பதிவு செய்யப்பட்டுள்ள 35,000- வாக்காளர்களின் வாக்குகள் செல்லாதவை என்று ஒரு பட்டியலை தாக்கல் செய்திருக்கிறது. இந்தப் பட்டியலில் பதிவுசெய்த விவரம், இ-மெயிலில் அனுப்பப்பட்டு, அந்தக் கடிதங்களும் அடங்கியிருக்கின்றன. இவற்றில் பெரும் பகுதி ஏழைகளும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த வாக்காளர்களும் அடிக்கடி உயர்வருவாய் குடும்பங்களைவிட இடம்பெயருகின்ற முகவரிகள் மாறுகின்ற தன்மையுள்ளவர்கள்.

எந்த பதிவு செய்த வாக்காளர்களுக்கும் அனுப்பப்படுகிற தகவல்கள் தேர்தல் அலுவலகங்களுக்கு திரும்பி வந்து விடுகின்றன. அவை விநியோகிக்க முடியாதவை என்று முத்திரை குத்தப்பட்டு வைக்கப்படுகின்றன. தபால் அதிகாரிகள் அவற்றை அனுப்பவேண்டாம் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள் இப்படிப்பட்ட வாக்காளர்கள் நவம்பர் 2-ல் வாக்குச்சாவடிகளுக்கு வருவார்களானால் குடியரசுக் கட்சி அவர்களை ஆட்சேபிக்க திட்டமிட்டிருக்கிறது.

இரண்டாவது நோக்கம் வாக்குப்பதிவை சீர்குலைப்பது, வாக்குப்பதிவை தாமதப்படுத்துவது மற்றும் வாக்காளர்களை மிரட்டுவது வாக்குச்சாவடிக்கு வருபவர்கள் அச்சத்தால் அல்லது ஏமாற்றத்தால் வாக்குப்பதிவு செய்யாமல் திரும்பிச்சென்றுவிடுவதுதான் நோக்கம். டைம்ஸ் தலையங்கம் குறிப்பிட்டிருப்பதைப்போல் ''மிக தீவிரமான ஆபத்துக்களில் ஒன்று என்னவென்றால் இப்படிப்பட்ட கட்சி நோக்குள்ள குழுக்கள் அனைவரையும் இல்லாவிட்டாலும் பல வாக்காளர்களை ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் ஆட்சேபிப்பதால் வாக்குப்பதிவே நின்றுவிடும். ஓகியோவில் ஒவ்வொரு ஆட்சேபனையும் சம்மந்தப்பட்ட வாக்காளர், வாக்குப்பதிவில் கலந்துகொள்ள தகுதியுள்ளவரா? என்பதை முடிவுசெய்தாக வேண்டும். ஜனாதிபதி தேர்தல்களில் சாதாரண நிலையிலேயே நீண்ட வரிசை மணிக்கணக்கில் காத்திருக்கும் ஒரு வாக்காளரை ஆட்சேபிப்பதற்கு 10- நிமிடங்கள் என்று எடுத்துக்கொண்டால் காத்திருக்கும் நேரம் அளவிற்கு அதிகமாகி ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்காமல் திரும்பு நிலை ஏற்படும்''

குறிப்பாக தொழிலாள வர்க்கம் வாழ்கின்ற இடங்களில் அதனால் தாக்கம் ஏற்படத்தான் செய்யும் ஏனெனில் அவர்கள் வாக்குப்பதிவிற்காக நீண்டநேரம் காத்திருக்க முடியாது.

ஓகியோ மாநில சட்டப்படி, வாக்காளர் நாட்டின் ஒரு பிரஜையல்ல அல்லது குறைந்த பட்சம் 18-வயதானவர் அல்ல அல்லது அந்த வாக்குச்சாவடி இருக்கும் இடத்தில் சட்டபூர்வமாக வாழ்பவர் அல்ல என்பதற்கு நியாயமான சந்தேகம் நிலவுமானால் ஆட்சேபனை எழுப்பலாம். அந்த ஆட்சேபனை சட்டப்படி செல்லுபடியாகுமா? என்பதை அந்த தேர்தல் அதிகாரி எழுப்புகின்ற ஏதாவது கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கின்ற வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படலாம்.

இந்த நடைமுறையிலுள்ள பலத்த மிரட்டுகின்ற அம்சத்தை மத்திய ஓகியோ செய்தி பத்திரிகையான Advocate தெளிவுபடுத்தியுள்ளது. அது குறிப்பிட்டிருப்பதாவது: ''ஆட்சேபிக்கப்படும் வாக்காளர்களிடம் இரண்டுபக்க மனு ஒன்று தரப்படும் அதில் அவர்கள் தங்களது பெயர்கள், அவர்கள் அமெரிக்க குடிமக்களா, எங்கே பிறந்தார்கள், அந்த குறிப்பிட்ட மாகாணத்தில் 30- நாட்கள் வாழ்ந்திருக்கிறாரா? வாழும் இடத்தில் அவருக்கு தெரிந்த இரண்டு நபர்களது பெயர்கள், அவர்கள் வாழ்கின்ற கவுண்டி மற்றும் வாக்குச்சாவடி மற்றும் அவர்கள் சட்டபூர்வமான வாக்களிக்கும் வயதுவரம்பு தகுதி உள்ளவரா? என்று விரங்களை நிரப்ப வேண்டும். அந்த மனுவிற்கு கீழே கொட்டை எழுத்தில் எச்சரிக்கை ஒன்று அச்சிடப்பட்டுள்ளது: ''தேர்தல் சம்மந்தமான தவறான தகவல் எதுவும் தருபவர் கடுமையான குற்றம் செய்தவராக கருதப்படுவார்.''

இதேபோன்ற நீண்ட நடைமுறை புளோரிடாவிலும் அவசியமாகும். புளோரிடா செய்திப் பத்திரிகையான St.Petersburg Times குறிப்பிட்டிருப்பதைப்போல் ''மாகாண சட்டம் கூறுவது என்னவென்றால் வாக்குப்பதிவு கண்காணிப்பாளர்கள் எழுப்புகின்ற ஆட்சேபனைகள் ஒரு குடிமகனுக்கு வாக்குச்சீட்டு தரப்படவேண்டுமா? இல்லையா? என்று அந்த இடத்தில் எழுப்பப்பட வேண்டும். பல சம்பவங்களில் தேர்தல் தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாக்குப்பதிவு பதிவேட்டை மீண்டும் சரிபார்க்க வேண்டும் அல்லது அந்த குடிமகன் மற்றொரு வாக்குமூலத்தில் கையெழுத்திட வேண்டும். அந்த ஆட்சேபனையை சரிசெய்ய முடியவில்லை என்றால் அந்த வாக்காளருக்கு தற்காலிக வாக்குத்தரப்படும் வாக்குப்பதிவு முடிந்தபின்னர் அந்த குடிமகன் வாக்களிக்கும் தகுதியுள்ளவரா? என்பதை கவுண்டி முடிவு செய்யும்''

புளோரிடாவிலும் ஓகியோவிலும் அண்மையில் வெளியிடப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கள், இப்படி போடப்படும் தற்காலிக வாக்குகள் தேர்தல் தினத்திற்குப் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். சரியான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் தான் அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இல்லையென்றால் அந்த தற்காலிக வாக்குகள் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த குடியரசுக் கட்சி நடவடிக்கையின் மூன்றாவது நோக்கம் கேந்திர மாவட்டங்களில் அல்லது மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் நிச்சயமற்றதாக ஆக்கப்படுகின்ற அளவிற்கு குழப்பத்தையும் வன்முறையையும் கூட உருவாக்கி ஒட்டுமொத்த நடைமுறையையும் சந்தேகத்தில் வீழ்த்திவிடுவது. ஓகியோ அல்லது இதர உயிர்நாடி மாகாணங்களில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று குடியரசுக் கட்சி கருதுமானால் குறிப்பாக இப்படி குழப்பம் செய்வது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பல மாநிலங்களில் மிகப்பெருமளவிற்கு புதிய வாக்காளர்கள் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர், அதில் ஒன்று ஓகியோவாகும். குடியரசுக் கட்சி தனது சொந்த ஆட்சேபனையை எழுப்பி உருவாகின்ற நிச்சயமற்ற தன்மையுடன் தேர்தலுக்கு முந்திய மோசடி கூப்பாட்டையும் சேர்த்து பயன்படுத்தி தேர்தலையே நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்று இறுதியில் தேர்தல் முடிவையே குடியரசுக் கட்சி ஆட்சேபிக்கக்கூடும்.

வாக்குப்பதிவை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத்தேர்தல் கணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். Nevada- வில் குடியரசுக் கட்சிக்காரர்கள் புதிய வாக்காளர்களை பதிவு செய்வதற்காக நியமித்த ஒரு கம்பெனி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் பூர்த்திசெய்து கொடுத்த மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டார்கள். Colorado உட்பட மிக நெருக்கமான போட்டி நிலவும் மாநிலங்களில் புதிய பதிவுகளை குடியரசுக் கட்சிக்காரர்கள் ஆட்சேபித்திருக்கின்றனர்.

ஏராளமான வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவற்றில் குறிப்புக்கள் இல்லாத வாக்குபதிவு இயந்திர திரைகளை பயன்படுத்துவது, சம்மந்தமாகவும், தற்காலிக வாக்குகளை எண்ணுவது, சம்மந்தமாகவும் வழக்குகள், நிலுவையிலுள்ளன. இந்த வழக்குகள் முடிவு மிக நெருக்கமாக வாக்குப்பதிவு நடந்த மாநிலங்களில் முடிவை பாதிக்கும் அல்லது முடிவுகளையே ஆட்சேபிக்கும் நிலை ஏற்படக்கூடும்.

சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் மிக குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வருகின்றபோது தற்காலிக வாக்குகளை எண்ண வேண்டியநிலை ஏற்படலாம், அப்போது பல்லாயிரக்கணக்கான வாக்குகளை எண்ணுவதற்கும், பட்டியலிடுவதற்கும் பல நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம். இரண்டு தரப்பிலும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை ஆட்சேபிப்பதற்கு வக்கீல்கள் பட்டாளங்களை திரட்டியிருக்கிறார்கள். 2000- தேர்தலில் புளோரிடாவில் நடைபெற்றதுதான், செவ்வாயன்று நடக்கும் வாக்குப்பதிவில் எல்லா மாநிலங்களிலும் இதே போன்றுதான் நடக்கும் என்று பொருள்.

2000-தேர்தலில் குடியரசுக் கட்சி எடுத்த நடவடிக்கைகளின் ஆழமான ஜனநாயக விரோத தந்திரோபாயங்களின் தொடர்ச்சிதான், குடியரசுக் கட்சி வாக்குப்பதிவை ஒடுக்குவதற்கு தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள். அந்தத் தேர்தலில் குடியரசுக்கட்சி ஒரு திட்டமிட்ட முறையில் வாக்குப்பதிவு ஆட்சேபனையாளர்களை பயன்படுத்தவில்லை, என்றாலும் ஜோர்ஜ் W.புஷ்ஷின் சகோதரர் Jeb Bush-ன் தலைமையிலான புளோரிடா குடியரசுக் கட்சி நிர்வாகம் வாக்காளர்களை மிரட்டுவது குறிப்பாக கருப்பர் இன வாக்காளர்கள் ஜனநாயக் கட்சி வேட்பாளர் அல்கோர்-க்கு வாக்களிப்பதை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது.

இறுதியாக உச்ச நீதிமன்றம் புளோரிடா மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதித்ததால் ஜனாதிபதி பதவி புஷ்ஷிற்கு தரப்பட்டது அந்த நேரத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்திருக்குமானால் மக்களது கட்டளை தெளிவாக தெரிந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் அந்த மாநிலம் ஜனநாயகக் கட்சியின் பக்கம் வந்திருக்கும், தேசிய மக்கள் வாக்குப்பதிவில் 500,000 வாக்குகளை பெற்றிருந்த ஜோர்ஜ் புஷ்ஷை தோற்கடிப்பதற்கு தேவையான வாக்குகளை கோர் பெற்றிருப்பார்.

அந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி Antonin Scalia அமெரிக்க குடிமக்கள் அரசியலமைப்பு சட்டப்படி அமெரிக்க ஜனாதிபதிக்கு வாக்களிக்க உரிமை படைத்தவர்கள் அல்ல என்று வாதிட்டார் மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிலுள்ள புளோரிடா சட்டமன்றம் அந்த மாநிலத்தில் மக்களது வாக்குப்பதிவை புறக்கணித்துவிட்டு, ஜனாதிபயை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறிவிட்டது. Scalia- உச்ச நீதிமன்றத்தில் மிகத்தீவிர வலதுசாரி பிரிவின் கொள்கை அடிப்படையிலான தலைவர்- புளோரிடாவில் நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களில் சட்டபூர்வமான வாக்கிற்கு ''வாக்காளரின் நோக்கம்'' அடிப்படை என்று குறிப்பிட்டிருக்கிறது. வாக்குப்பதிவு செய்யப்பட்டதில் நுட்ப அடிப்படையில் ஏதாவது தவறு இருக்குமானால், குறைபாடு காணப்பட்டால் அந்த ஓட்டுக்களை தள்ளுபடி செய்துவிடலாம் என்ற அடிப்படையில் வாக்காளர் மீது பொறுப்பைச் சாட்டினார்.

2002-ல் நடைபெற்ற இடைகால தேர்தல்களில்தான் குடியரசுக்கட்சி முதல்தடவையாக விரிவான அடிப்படையில் வாக்குப்பதிவு ஆட்சேபனையாளர்களை பயன்படுத்திக்கொண்டது. வாக்குப்பதிவு எண்ணிக்கையை குறைப்பதற்கும், வாக்காளர்களை மிரட்டுவதற்கும் இவ்வாறு செய்தது. குடியரசுக் கட்சியின் ஆத்திரமூட்டல்களால் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதில்லை என்று முடிவு செய்தது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தன.

குடியரசுக் கட்சி தற்போது மேற்கொண்டுள்ள சூழ்ச்சிகள், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை அப்பட்டமாக தானே கண்டித்துக்கொள்கின்ற முயற்சியாகும். இந்த அரசாங்கம் ஜனநாயக வெளிப்பாடுகளை கண்டு அஞ்சுகிறது, அலட்சியப்போக்கில் நடந்துகொள்கிறது. அத்தோடு தனது கொள்கைகளால் உசுப்பிவிடப்பட்டுள்ள ஆழமான மக்களது வெறுப்புணர்வை முழுமையாக அறிந்திருக்கிறது.

புஷ்-நிர்வாகம் கிரிமினல் வழிமுறைகளிலேயே ஆட்சிக்கு வந்தது, அத்தகைய வழிமுறைகளிலேயே ஆட்சி செலுத்தியது, அத்தகைய வழிமுறைகள் மூலமே ஆட்சியில் நீடிக்க எல்லா வகையிலும் கருதியிருக்கிறது. புஷ்- நிர்வாகத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சமூக தட்டுக்களை பொறுத்தவரை, வாக்களிப்பது ஒரு உரிமையல்ல ஆனால் அது முடிவு "சரியான ஒன்றாக'' இருப்பதற்காக வழங்கப்படும் ஒரு தனிச்சலுகை.

குடியரசுக் கட்சி, ஆட்சியில் நீடிக்க பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கும் வழிமுறைகளில் ஆட்சேபிப்பவர்களை பயன்படுத்துவது மட்டுமே அடங்கியிருக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் நிர்வாக அதிகாரிகள் ஒரு பயங்கரவாத தாக்குதல், நடக்குமென்றால் தேர்தல்களையே தள்ளிப்போடலாம் என்ற கருத்தை உலாவவிட்டார்கள் அந்த சாத்தியக்கூறு இன்னமும் உள்ளது.

குடியரசுக் கட்சிக்காரர்கள் வாக்குப்பதிவை ஒடுக்குவதற்கு முன்னணியில் நிற்கின்ற அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சிக்காரர்களோ, மூன்றாவது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குப்பதிவு தகுதியை மறுப்பதற்கு திட்டமிட்ட பிற்போக்குத்தனமான முயற்சிகளை மேற்கொண்டனர். அத்தகைய நடைமுறைகளில் பல குடியரசுக் கட்சியால் பயன்படுத்தப்பட்டது. சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை ஜனநாயகக் கட்சியினர் ஆட்சேபித்தார்கள், சோசலிச சமத்துவக் கட்சி தாக்கல் செய்த நியமன மனுக்களை மற்றும் ரால்ஃப் நாடார் நியமன மனுக்களை தள்ளுபடி செய்வதற்கு அதே நடைமுறைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

புஷ் நிர்வாகம் 2000- தேர்தலையே கடத்திசெல்ல முடிந்தது ஏனென்றால், ஜனநாயகக் கட்சிக்காரர்களின் கோழைத்தனத்தாலும், சரணாகதி போக்கினாலும் மற்றும் புஷ் நிர்வாகம் தனது பிற்போக்குத்தனமான கொள்கைகளை ஜனநாயகக் கட்சியிடமிருந்தும் மற்றும் "தாராளவாத" அமைப்புமுறையின் எந்தவிதமான கடுமையான எதிர்ப்பும் இல்லாமலும் நிறைவேற்றியது. ஜனநாயகக் கட்சி அதே ஆளும் மேல்தட்டின் போட்டி பிரிவைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியின் ஜனநாயக விரோத சூழ்ச்சிகளைவிட, உழைக்கும் மக்களின் சமூக நலன்களை முன்னிறுத்துகின்ற இடதுசாரி தரப்பிலிருந்து ஒரு எதிர்ப்பு இயக்கம் தோன்றுவதை பற்றித்தான் அதிகம் கவலைப்படுகிறார்கள்.

இந்தத்தேர்தலில் குடியரசுக் கட்சி பயன்படுத்திவருகின்ற தந்திரோபாயங்கள் முற்றிலும் புதுமையானவை அல்ல. பல தலைமுறைகள் Jim Crow South பயன்படுத்திய நடைமுறைகளை நினைவுபடுத்துகிறது. அப்போது ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் அந்த நிர்வாகம் இருந்தது. கருப்பர்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு அந்த நடைமுறைகளை பயன்படுத்தினார்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி William Rehnqnist அவரது அரசியலை ஒரு குடியரசுக் கட்சி வக்கீலாக தொடக்கினார். அரிஜோனா, ஸ்பானிய வாக்காளர்களுக்கெதிராக அவர் எழுத்தறிவு தகுதியை பயன்படுத்திய வக்கீலாவர்.

என்றாலும் 2004- ஜனநாயக உரிமைகள் மீது வாக்களிக்கும் உரிமை மீது தாக்குதல் நடத்தப்படும் ஒரு புதியகட்டம் பகிரங்கமாகவும், விரிவான அடிப்படையிலும் வந்திருக்கிறது. அமெரிக்க அரசியலில் குடியரசுக் கட்சிக்காரர்கள் வாக்களிக்கும் உரிமைமீது நடத்தி வருகின்ற தாக்குதல் பிரச்சாரம் தற்செயலாக நடந்துவிட்ட ஒரு சம்பவம் அல்ல. ஒட்டுமொத்த அரசியல் கட்டுக்கோப்பில் நிலவுகின்ற ஆழமான நெருக்கடியை கோடிட்டுக்காட்டுவதாகும். இனி அமெரிக்கத் தேர்தல் "வழக்கமாக" நடைபெறுவதற்கு சாத்தியக்கூறு எதுவுமில்லை இதில் சம்மந்தப்பட்டிருப்பது அமெரிக்க ஜனநாயகத்தின் ஓர் அடிப்படை சிதைவைக்காட்டுகிறது.

இந்த சிதைவிற்கு பின்னணி என்ன? இந்த விவகாரம் ஊடகங்களிலோ அல்லது ஜனநாயகக் கட்சியிலோ, கடுமையாக விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. அமெரிக்க சமுதாயத்தில் இழையோடிக்கொண்டிருக்கின்ற ஆழமான சமரசம் காணவியலாத மோதல் போக்குகளின் விளைவுதான் தேர்தல் நடைமுறையில் உருவாகிக்கொண்டிருக்கின்ற நெருக்கடியாகும். மகத்தான சமூக ஏற்றத்தாழ்வுகள் பெருகிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆளும் ஆதிக்க குழுவினர் மேலும் கொடூரமாக இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் சமூக பிற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதால் ஜனநாயக வடிவங்களை நிலைநாட்டுவது இயலாத காரியமாகும்.

குடியரசுக் கட்சி, வாக்களிக்கும் உரிமை மீது தொடுக்கின்ற தாக்குதல்கள் சாதாரணமாக ஜனநாயகக் கட்சிக்கு எதிரானது மட்டுமல்ல, மேலும் அது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதே தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும். அமெரிக்காவில் இரண்டு கட்சி அமைப்புமுறை பகிரங்கமாக நிதியாதிக்க குழுவின் கைப்பாவையாக இயங்குகிறது. மிகப்பரவலான வெகுஜனங்களிடமிருந்து தனித்து விடப்பட்டிருக்கிறது, இட்டு நிரப்ப முடியாத வர்க்க இடைவெளி உருவாகியுள்ளது. இந்த இரு கட்சி அமைப்பு முறையில் தொழிலாள வர்க்கம் தங்களது தேவைகளையும், கவலைகளையும் பிரதிபலிக்கவோ அல்லது பதிவுசெய்யவோ இயலாத நிலையில் உள்ளனர்.

இறுதியில் இந்த ஆதிக்கக்குழு, தனது கட்டளையை செயல்படுத்துகின்ற முறை ஒடுக்குமுறையாகவும், சர்வாதிகாரமாகவும் தான் செயல்படமுடியும். அடிப்படை ஜனநாயக உரிமைகளை தற்காத்து நிற்பது நேரடியாக உழைக்கும் மக்களது ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை உருவாக்குவதில் பின்னிபிணைந்து நிற்கிறது. அந்த இயக்கம் சோசலிச சமத்துவ கொள்கைகள் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மாற்றியமைக்க போராடுவதாக இருக்கும். 2004- தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களும் மேற்கொண்டுள்ள பிரச்சாரத்தின் முன்னோக்கு இந்த அடித்தளத்திலேயே தங்கியுள்ளது.

Top of page