World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Historic resonances in German foreign minister's statements

ஜேர்மன் வெளியுறவு அமைச்சரின் அறிக்கைகளில் எதிரொலித்த வரலாற்று சம்பவங்கள்

By Ann Talbot
26 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

அண்மையில் பிரிட்டனுக்கு விஜயம் செய்திருந்தபோது ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஸ்கா பிஷ்ஷர் ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவவதற்கு உத்தேசித்திருப்பதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த D-Day இற்கு ஒப்பானதாக விவரித்தார். ஜேர்மன் நாசிக்கள் ஆக்கிரமித்த ஐரோப்பாவில் 1944-ம் ஆண்டு நோர்மொன்டி கடற்கரையில் நேசநாடுகளின் துருப்புக்கள் இறங்கிய தினத்தை D-Day என்று அழைப்பார்கள்.

இந்த ஆண்டு வரையில், ஜேர்மன் அமைச்சர்கள் D-Day கொண்டாட்டங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மற்றும் அவரை பேட்டி கண்டவர் குறிப்பிட்டதைப் போல் ''ஒரு ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் D-Day பற்றி குறிப்பிட்டது அசாதாரணமான குறிப்பாகும்''.

பிஷ்ஷர் மேலும் ''பயங்கரவாததிற்கு எதிரான போரில் ஐரோப்பாவுடன் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு இஸ்லாமிய நாடு நவீனமயமாதலுக்கு வருவது ஏறத்தாழ ஒரு D-Day இனை போன்றது. இத்தகைய சர்வாதிகாரம் மற்றும் பயங்கரவாத கருத்துக்களுக்கு அது மிகப்பெரிய ஆக்கபூர்வமான அறைகூவலாகும்'' என கூறினார்.

BBC சேவையின்James Naughtie இனால் நடததப்படும் ''டுடே'' நிகழ்ச்சியில் பேசும்போது பிஷ்ஷர் துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ''துருக்கி ஒரு பெரிய பலமான நாடு'' என்பதை பிஷ்ஷர் சுட்டிக்காட்டினார். இங்கேயுள்ள பிரச்சனை ஐரோப்பா ''அத்தகைய ஒரு பெரிய நாட்டை ஜீரணித்துக்கொள்ள தயாராக இருக்கிறதா?'' என்பதுதான் என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியல் சட்டம் குறித்து இப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பா துருக்கியை இணைத்துக்கொள்ளும் ஆற்றலோடு அதைத்தொடர்புபடுத்தி அவர் உரையாற்றினார்.'' வேறுசிலர் அந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள் அல்லது அந்த அரசியல் சட்டத்தை பற்றி சந்தேகம் கொண்டுள்ளார்கள். இது தான் இது நமது பிரிட்டிஷ் நண்பர்களுக்கான கேள்வி'' என்று பிஷ்ஷர் குறிப்பிட்டார்.

இதில் ஒரு முக்கியமான விவாதம் தொக்கிநிற்பதை மோப்பம்பிடித்த James Naughtie அதன் சிறப்பை வலியுறுத்தினார். "ஈராக் எல்லைகள் வரை செல்லுகின்ற ஒரு ஐரோப்பா பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். இத்தகைய ஒரு ஐரோப்பா ஒரு அரசியல் சட்டம் இல்லாமல் அதை செயல்பட செய்யும் திறமை இல்லாததாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளதா?'' என்று கேட்டார்.

அதைத்தான் பிஷ்ஷர் தெளிவாகச்சொன்னார் அதற்கான காரணங்கள் மிக விரைவில் தெளிவாகின; தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டுள்ள திட்டங்கள் ''கருங்கடல் துறைமுகம் வரை மற்றும் துருக்கி எல்லைகள் வரை ஐரோப்பிய ஒன்றியத்தை விரிவுபடுத்துகிறது'' என்று பொருள்படுவதாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து துருக்கியை விட்டுவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜேர்மனியில் ஏராளமான துருக்கி மக்கள் வாழ்வது துருக்கி மீது பிஷ்ஷர் கொண்டுள்ள அக்கறைக்கு ஒரு காரணமானாலும், வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் அவருக்கு இதர மிக முக்கியமான மூலோபாய குறிக்கோள்கள் உள்ளன. மிக விரைவில் துருக்கியின் மக்கள் தொகை 80 மில்லியனாக உயர்ந்துவிடும். அந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக சேருகின்ற நேரத்தில் ஜேர்மனியைவிட பெரிய நாடாக ஆகிவிடும். அது கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையே ''ஒரு மூலோபாய இணைப்புப்பாலமாக'' இயங்கும் என்று அவர் சொன்னார்.

Kemal Ataturk இன் காலத்திலிருந்து துருக்கி மேற்கு நாடாகவே ஆகிவிட விரும்பியது. அப்போது இன்றைய நிலவரம் போன்று ஐரோப்பாவுடன் பொதுக்கருத்துள்ள ஒரு இஸ்லாமிய நாட்டை ஐரோப்பியமயமாக்குதல் என்றால் அதன் பொருள் நவீனமயமாக்குதல்தான் என்று அவர் குறிப்பிட்டார். 9/11க்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினுள் துருக்கியை கொண்டுவருவது குறித்து தமக்கு ஐயப்பாடு நிலவியதாக குறிப்பிட்ட அவர் ''சிரியா, ஈராக் மற்றும் ஈரானுடன் எல்லைகள் இருப்பதைப்பற்றி குறிப்பிட்ட அவர் தற்போது மூலோபாய நிலவரத்தை பார்க்கும்போது அடுத்த 50 ஆண்டுகளுக்கு நமது பாதுகாப்புக்களை உறுதிப்படுத்தியாக வேண்டும்'' என்று பிஷ்ஷர் கூறினார்.

துருக்கி ஒரு உறுப்பினராகாவிட்டால் மத்திய தரைகடல் பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலை பாதுகாப்பாக இருக்காது என்று அவர் மறைமுகமாக குறிப்பிட்டார். அவர் மேற்கோள்காட்டிய அச்சுறுத்தல் பயங்கரவாதம், ஆனால் ஒழுங்கமைப்பில்லாத இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களால் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியதரைக்கடல் எல்லைகளுக்கு தீவிர இராணுவ அச்சுறுத்தலும் ஏற்படும் என்று அவர் கூறியிருப்பது நம்பத்தக்கதல்ல.

9/11 பற்றி அவர் குறிப்பிட்டது புத்திசாலித்தனத்திற்கு சற்று குறைந்ததாகும். உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராவது மிகவும் உண்மைக்கு பொருத்தமான தேதி என்று அவர் கருதுவது அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தபோதுதான்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினராவதற்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு எதிராக துருக்கியை உறுப்பினராக்கிவிடுவது என்ற பிஷ்ஷரின் உறுதிபாடு ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கையின் நீண்டகால குறிக்கோள்களில் ஒன்றாகும். ஐரோப்பிய நாடுகள் அணியோடு துருக்கியை இணைத்துக்கொள்ளும் ஜேர்மனியின் கொள்கை 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கின்றது.

1890களில் கெய்சர் வில்லியம் துருக்கியோடு ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமென்று கனவு கண்டார். மற்றும் அதன் மூலம் இஸ்லாமிய உலகத்தை புரட்சிகரமாக மாற்றிவிட முடியும் என்றும் கனவுகண்டார். பிஷ்ஷர் தற்போது அதே சொற்களை மீண்டும் கூறுகிறார்.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் கடந்தகால வரலாற்றை மிக சர்வசாதாரணமாக எடுத்துக்கூறிவிட முடியாது. பிஷ்ஷர் கவனமாக இவ்வாறான குரல்களை எழுப்பிக்கொண்டிருக்கிறார். ஏறத்தாழ ஒரு அரை நூற்றாண்டு வரை அமெரிக்காவுடன் ஜேர்மனியின் உறவுகள் பற்றி Zhigniew Brzezinski வார்த்தைகளில் கூறுவதென்றால் ''ஜேர்மனியின் நன்னடத்தை சான்றிதழை'' பொறுத்தே அமைந்தது.

Naughtie யுடன் பிஷ்ஷர் கலந்துரையாடியபோது அந்த சான்றிதழை திரும்பத்திரும்ப எடுத்துக்காட்டினார். பிஷ்ஷர் D-Day பற்றி குறிப்பிட்டபோது Naughtie, ஐரோப்பாவும் உங்கள் சொந்த நாடும் விடுவிக்கப்பட்டது பற்றிய குறிப்பு அது என்று நாட்டி சுட்டிக்காட்டினார்.

பிஷ்சர் குறுக்கிட்டு ''எனது சொந்ததலைமுறை''

Naughtie: ''நீங்கள் பிறந்தபோது''

பிஷ்ஷர்: ''1948 ஓ! நாஜி சர்வாதிகாரத்தில் பிறந்திருப்பதே ஒரு சிம்மசொப்பனம்தான்''

ஜேர்மனியை விடுவிப்பதில் சோவியத் யூனியனின் பங்களிப்பும் இரண்டாம் உலகப்போரில் நாசிசத்தை முறியடிப்பதற்கு போரிட்டு மில்லியன் கணக்கான சோவியத் மக்கள் மடிந்ததையும் மிக வசதியாக மறக்கப்பட்டுவிட்டது. சோவியத் படைகள்தான் மிகப்பெரும்பாலான சித்திரவதை முகாம்களை விடுவித்தது. அந்த நேரத்தில் ஜேர்மனி முழுவதுமே சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் விட்டுவிடுகின்ற அவசியம் ஏற்பட்டுவிடும் என்ற நிலையில்தான் நேச நாட்டுபடைகள் பேர்லினில் மட்டுமே நுழைந்தன.

அவர் டேவிட் கெல்லியின் இரகசியங்களை வெளியிட்ட அதே நிகழ்ச்சியில் கோபி அன்னாண் ஈராக் போர் சட்டவிரோதமானது என்று அறிவித்த அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் பிஷ்ஷர் ஈராக் போர் குறித்து எந்த கண்டனத்தையும், தெரிவிக்கவில்லை. அந்தப்போரை கண்டிக்க அவர் விரும்பியிருப்பாரானால் அதற்கேற்ற வகையில் காதுகொடுத்து கேட்பவராக Naughtie இருந்தார்.

அமெரிக்கா தொடர்பாக பிஷ்ஷரின் அனுகுமுறை மிகவும் பரிதாபகரமாக இருந்தது.

''அமெரிக்கா இல்லாமல் உலக ஓழுங்கமைப்பு இல்லை அந்த நாடு ஒன்றுதான் உலக வல்லரசாக தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள முடியும்'' என்று அன்று லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

ஆனால் ''ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்குமிடையே ஒரு மூலோபாய பொதுக்கருத்து உருவாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். சர்வதேச உறவுகளில் பன்முகப்போக்கு என்ற பிரான்சின் நாட்டுக்கருத்து காலாவதியாகிவிட்டது என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்காவிற்கு இணையாக ஐரோப்பா ''இரண்டாவது தூணாக'' விளங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த புதிய மூலோபாய பொதுக்கருத்து அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடு உயிர் துடிப்புள்ளதாக ஆக வேண்டுமென்று ஆலோசனை கூறினார். கொடூரமான பலமல்ல, சட்டபூர்வமான தன்மைதான் புதிய நூற்றாண்டின் மதிப்புள்ள நாணயமாக இருக்க முடியும். ஐ.நா மட்டுமே சட்டபூர்வமான தன்மையைத்தர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது அடுத்த கருத்துக்கள் சட்டபூர்வமான தன்மைபற்றிய அவரது முறையீட்டை பொய்யாக்கின. என்றாலும், ஆப்கானிஸ்தானில் ஜேர்மனி ஒரு கணிசமான இராணுவப்பங்களிப்பு செய்து வருகிறது. ஐ.நா மூலம் எதை சாதிக்கமுடியும் என்பதற்கு அது ஒரு உதாரணமாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். அண்மையில் அங்கு நடைபெற்ற மோசடித்தேர்தல்கள், சிவிலியன்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியது மற்றும் குவாண்டநாமோ பகுதியில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டது ஆகியவை புஷ் இன் புதிய மூலோபாய பொதுக்கருத்தை அழகாக சித்தரிக்கும் ஓவியம் அல்ல.

இரண்டாவது தூணாக விளங்குவோம் என்று அவர் விடுத்துள்ள அழைப்பு அமெரிக்காவிற்கு ஜூனியர் பங்காளி அந்தஸ்தில் செயல்படுவதற்கான முயற்சியாகும். அமெரிக்கா ஒரு சர்வதேச சாம்ராஜியத்தை உருவாக்கி உலகின் மூலோபாய முக்கியத்துவம் உள்ள பகுதிகளில் மேலாதிக்கம் செலுத்தும்போது ஒரு ஜூனியர் பங்காளியாக கலந்து கொள்ள அவர் அழைப்பு விடுகிறார். தற்போது மத்திய கிழக்கில் அமெரிக்கா செய்துவருவதைப்போல் ஜேர்மனியின் வரலாற்று அடிப்படையிலான சர்வதேச நலன்களை அமெரிக்கா குறிப்பாக மீறிவிடக்கூடாது என்று பிஷ்ஷர் கேட்டுக்கொள்ள விரும்புகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை உறுப்பினராக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது வேண்டுகோளை அவரது கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. பசுமை கட்சியினர் அண்மையில் ஒரு நாடாளுமன்ற குழுவை துருக்கிக்கு அனுப்பினார்கள், அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பசுமை கட்சியினர் குழு தலைவரான டானியல் கோன் பன்டிட் துருக்கி உறுப்பினராவது தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்று பிரெஞ்சு அரசாங்கம் கோருவதற்கு தனது எள்ளி நகையாடலைக் காட்டினார்.

''அவர்கள் ருமேனிய, பல்கேரியா, பொஸ்னியா ஆகிய நாடுகள் உறுப்பினர் ஆவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தப்போகிறார்களா?'' என்று அவர் கேட்டார். பிரெஞ்சுக்காரர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்!

''இது நகைப்பிற்குரியது 10 ஆண்டுகளில் நடைபெற போவதைப்பற்றி நமது நேரத்தை வீணாக்க வேண்டாம்''

கடந்தகாலத்தில் பசுமை கட்சியினர் துருக்கியை ''குர்திஸ்கள் நிலவரம் தொடர்பாகவும், மற்றும் இதர சிறுபான்மையினர்கள் குறித்தும் பெண்கள் உரிமைகள் ஆர்மீனியர்கள் படுகொலைகள்'' தொடர்பாகவும் கண்டித்ததை கோன் பன்டிட் ஒப்புக்கொண்டார். ஆனால் தற்போது இந்த விவகாரங்களை ''நண்பர்களுக்கிடையில் பகிரங்கமாக விவாதிக்க முடியும்'' என்கிறார்.

பிஷ்ஷரின் கருத்துக்களை எதிரொலிக்கின்ற வகையில் துருக்கியின் பரப்பளவு பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்ற முறையில் கோன் பன்டிட் கூறினார்: ''துருக்கி மால்டா அல்ல, ருமேனியா அல்ல, பல்கேரியா அல்ல, அது ஒரு பெரிய நாடு அது ஒரு பெருமைமிக்க நாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது உறுப்பினராவது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும்''
ஒரு வகையில் பசுமை கட்சியினர் ஜேர்மனி சர்வதேச அரசியலுக்கு திரும்புவதற்கு பெருமளவில் பங்களிப்பு செய்தவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி சேருவது ஜேர்மனி ஒரு உலக சக்தியாவதற்கு எப்படி ஒரு திருப்புமுனையாக இருக்குமோ, அதே அளவிற்கு துருக்கிக்கும் ஒரு திருப்புமுனையாகும் என்பதை பசுமை கட்சியினர் அங்கீகரித்துள்ளனர். இதற்கு எதிராக கிறிஸ்துவ ஜனநாயக கட்சிக்காரர்கள் துருக்கி உறுப்பினராவதை எதிர்கின்றனர்.

ஜேர்மனியின் ஏகாதிபத்திய கடந்தகால களங்க வரலாற்றிலிருந்து முற்றிலும் விலகிநிற்பதால் பசுமை கட்சியினர் ஜேர்மனியின் வெளியுறவுக் கொள்கையை மிகத்தீவிரமாக எந்தவிதமான கட்டுத்திட்டமும் இல்லாமல் கடைபிடிக்க முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால் வரலாறு காட்டுவது என்னவென்றால் நாசிக்களும் தீவிர வலதுசாரி ஜேர்மானிய ஆதிக்கவாதிகள் மட்டும் ஒரு ஜேர்மனிய சாம்ராஜியத்தை உருவாக்கவேண்டும் என்று விரும்பவில்லை. ஆனால் தாராளவாதிகளும் பல்கலைக்கழக சோசலிஸ்ட்டுகளும், ஒரு ஜேர்மனிய சாம்ராஜியம் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவை உள்ளடக்கி பிரான்சும் இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளும் சார்புநாடுகளாக கொண்டு துருக்கிவரை செல்லவேண்டும் என்று கூறினார்கள் ஐரோப்பிய சுங்கத்தீர்வை கட்டமைப்பு அல்லது ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் அமைப்பு என்ற கருத்து இந்த வட்டாரங்களில் 19ம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தை ஆதரித்தவர்களில் சமூகவியல் அறிஞர் Max Weber ம் ஒருவர். அவர் Freiburg பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஆரம்ப உரை இன்றையதினமும் வரலாற்றில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

''ஜேர்மனி ஒன்றுபடுத்துவது ஒரு இளைஞரின் வேடிக்கை விளையாட்டு என்று கருதப்பட்டது. ஒரு நாடு தனது முதுமை காலத்தில் ஒன்றுபடுத்துவது மட்டுமே குறிகோள் என்று கருதப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை கருத்தில் கொண்டு செய்யாமல் விட்டுவிடலாம். ஜேர்மனி ஒரு உலக வல்லரசு என்பதை ஆரம்ப புள்ளியாக கொள்வோமானால் அத்தகைய முயற்சியை நாங்கள் ஆதரிக்கவேண்டும்'' என்று அவர் கூறினார்.

இது 1895ல் முதலாவதாக ஜேர்மனி ஒன்றுபட்ட நேரத்திலேயே தவிர இரண்டாவதாக தற்போது ஜேர்மனி ஒன்றுபட்டபோது கூறப்பட்ட கருத்தல்ல என்பதை தெளிவாக நாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். தற்போது கிழக்கு ஜேர்மனியோடு இணைக்கப்பட்டது நிச்சயமாக பாதிப்பை அதிகம் ஏற்படுத்தியதுதான். ஆனால் பிஷ்ஷரின் பசுமை கட்சியினர் ஒரு பகுதியாக சேர்ந்திருக்கிற இன்றைய அரசாங்கம் ஜேர்மனியை ஒரு உலக வல்லரசாக மாற்றுவதற்கு மீண்டும் முயற்சிப்பதன் மூலமும் சமூகநலத்திட்டங்கள் மூலம் கொடூரமான வெட்டுக்களை கொண்டு வருவதன் மூலமும் முயன்றுவருகிறது.

இங்கேயும் கூட வரலாற்று சம்பவங்கள் எதிரொலிக்கின்றன. பிஷ்ஷர் வலியுறுத்தும் மூர்க்கமான வெளிநாட்டுக்கொள்கையை நிலைநாட்டுவதற்கு தகுந்த பொருள்வள ஆதாரமும் அரசியல் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கமும் தேவை என்பதை கோருகின்றார். வெளியுறவுக் கொள்கைக்கும் உள்நாட்டுக்கொள்கைக்கும் இடையில் நேரடி தொடர்புகளை முதல் உலகப்போருக்கு முன்னர் கைசர் பின்வருமாறு எழுதினார்: ''சோசலிஸ்டுகளை முதலில் தேவைப்பட்டால் ஒரு ரத்தக்களரி மூலம் கொன்றுகுவித்து அவர்களை ஒழித்துக்கட்டி விடுங்கள் அதற்கு பின்னர்தான் வெளிநாட்டுப்போர் அதற்கு முன்னர் அல்ல''.

ஒரு அரை நூற்றாண்டுகளுக்கு மேல் சமூக அமைதியை நிலைநாட்டிய உலகிலேயே மிகப்பழமையானது என்று கூறப்பட்டு வருகின்ற ஒரு சமூக நலத்திட்டத்தை சிதைப்பதன் மூலம் ஷுரோடர் அரசாங்கம் ஜேர்மன் வரலாற்றில் ஒரு புதிய கட்டத்திற்கு அல்லது ஒரு பழைய கட்டத்திற்கு திரும்புகிறது. சூழ்நிலைகள் வேறுபட்டவை என்றாலும்- பிரிட்டன் இனி உலக மேலாதிக்க வல்லரசல்ல என்ற நிலையில் முதல் உலகப்போருக்கு முன்னர் இருந்ததைப்போல் பிரச்சனைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஒரே மாதிரியான தன்மை கொண்டதாக உள்ளன.

இப்போதிருப்பதைப் போல் அன்றையதினம் ஜேர்மனி ஒரு வலுவான பொருளாதாரமாக ஐரோப்பாவிற்கு நடுவில் சிக்கியிருந்தது. அதற்கு சந்தைகள், மூலப்பொருள்கள் மற்றும் தொழிலாளர்கள் தேவைப்பட்டது. இப்போது அண்மை ஆண்டுகளில் ஜேர்மனியை ''ஐரோப்பாவின் நோயாளி'' என்று கருதுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு, கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக சராசரியாக 1.4% வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி புள்ளிவிவரத்தைவிட பாதிக்கும் குறைவுதான். இது வரலாற்றின் ஒரு பக்கம்தான். ஜேர்மனி உலகிலேயே மிகப்பெரிய ஏற்றுமதியாளர் என்று Economists பத்திரிகை கருதுகிறது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுப்பு நடத்திய பின்னர் தனது சந்தைகளில் எதுவும் பாதுகாப்பானது என்று அது கருதமுடியாது.

பிஷ்ஷர் ஜேர்மன் முதலீடுகளின் பொருளாதார நலன்களுக்கு குரல் கொடுப்பதன் மூலம் ஐரோப்பா கண்டத்தில் இரண்டு உலகப்போர்களுக்கு காரணமாக இருந்த வரலாற்று உந்து சக்திகளுக்கு மீண்டும் குரல்கொடுக்கின்றார். இப்படிச் சொல்லும்போது அந்த நோக்கங்களை மறைத்தும், ஏமாற்றுக்களுடன்தான் கூறவேண்டும். மத்திய கிழக்கில் ஜேர்மனியின் அபிலாஷைகள் பற்றி பேசிய நேரத்திலேகூட பிஷ்ஷர் மிகுந்த சிரமப்பட்டு ஜேர்மனி தனது கடந்தகால இராணுவமய போக்கிலிருந்து விலகிச்சென்றுவிட்டது என்பதை வலியுறுத்தினார். ஜேர்மனி எப்படி அரவம் காட்டாமல் அடியெடுத்துவைக்கிறது என்பதை நினைவுபடுத்துவது பிரிட்டிஷ் தொலைக்காட்சிதான். ''பாரம்பரிய பிரஷ்யாவின் நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நீங்கள் பிரிட்டிஷ் தொலைக்காட்சியைத்தான் பார்க்க வேண்டும் ஏனென்றால் ஜேர்மனியில் இளையதலைமுறை, ஏன் என்னுடய தலைமுறையை சார்ந்தவர்கள் கூட, எவருக்கும் எப்படி அதை செய்வது என்று தெரியாது'' என்று பிஷ்ஷர் கூறினார்.

பிஷ்ஷர் ஜேர்மன் ஏகாதிபத்தியம் பற்றி பேசும்போது மிகுந்த பிரிட்டிஷ் தாராளவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகாரர்களை சங்கடத்திற்குள்ளாகிறார். ஏனென்றால் அவர்கள் ஒருகாலத்தில் உலகில் காற்பகுதியை ஆதிக்கம் செலுத்தும் நாட்டிலிருந்து வருபவர்கள். அவர் மறைமுகமாக கூறியிருக்கிற கருத்து இதுதான். இராணுவமயம் பற்றி எங்களை குற்றம் சாட்டாதீர்கள். அப்படி செய்வீர்களானால் நீங்கள் ஐரோப்பிய எதிர்பாளர்கள் அல்லது மன்னராட்சிக்கு ஆதரவானவர்களாக கருதப்படுவீர்கள். அதுதான் அவரது நோக்கம் என்றால் அதில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஏனென்றால் மறுநாள் தாராளவாத பத்திரிகைகளில் இதே கருத்துள்ள கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

Zbigniew Brzezinski, ''The Grand Chessboard " என்ற தனது நூலில் ஜேர்மனியை பூகோள மூலோபாய பங்குவகிக்கும் நாடுகள் ஐந்தில் ஒன்று என்று அடையாளப்படுத்தியுள்ளார். அவரது மதிப்பீட்டின்படி துருக்கி அதன் பூகோளநிலை அடிப்படையில் ஒரு பூகோள அரசியல் அச்சாணியாகும். காக்கஸ் பகுதியில் அதன் நலன்களை கருத்தில்கொண்டு பார்க்கும்போது ஓரளவிற்கு துருக்கி மூலோபாய பங்களிப்பு செய்கிற நாடாகும்.

அவர் துருக்கியின் மூலோபாய முக்கியத்தும் பற்றி குறிப்பிட்டிருப்பது அது மேற்கு விளிம்பில் உள்ளதுதாகும். அவர் விளக்கியுள்ளபடி ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடைப்பட்ட பரப்பான யூரேஷிய நிலபரப்பில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு நடைபெறும் போராட்டத்தில் ஒரு பெரிய போர்களமாக மாறக்கூடும். அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ள போர் ஏற்கெனவே நடந்துவருகிறது. அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்கள் ஆப்கனிஸ்தானிலும், ஈராக்கிலும் நடைபெற்றுக்கொண்டுள்ளன. வரலாற்றிலேயே முதல் தடவையாக யூரேஷியா அல்லாத ஒரு அரசு இந்த மண்டலத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. ஜேர்மனியின் பொருளாதார அக்கரைகள் ரஷ்யா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, பால்கன் மத்திய கிழக்கு மற்றும் தூரகிழக்கு ஆகிய அனைத்திலும் அச்சுறுத்தப்படுகின்றன.

பிஷ்ஷர் அமெரிக்காவின் இராணுவ வலிமை கண்டு தெளிவாக மலைத்து நிற்கிறார். ஆனால் ஈராக்கில் இப்போது புஷ் நிர்வாகம் சந்தித்துக் கொண்டிருக்கிற சங்கடங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதன் தலைமையின் கீழ் ஊர்ந்து சென்று இந்த மண்டலத்தில் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை நடைமுறைப்படுத்த முயன்றுவருகிறார்.

Top of page