World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Democrat Edwards backs war, austerity in vice presidential debate

ஜனநாயகக் கட்சிக்காரர் எட்வார்ஸ் போருக்கு ஆதரவு, துணை ஜனாதிபதி கலந்துரையாடலில் சிக்கனம்

By Bill Van Auken, SEP presidential candidate
6 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

செவ்வாய்கிழமையன்று இரவு துணை ஜனாதிபதி றிச்சார்ட் செனிக்கும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் செனட்டர் ஜோன் எட்வார்ஸுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல், புஷ் நிர்வாகம் கடைப்பிடித்துவரும் பூகோள இராணுவவாதக் கொள்கை நீடிப்பதிலும், ஈராக் மக்களுக்கெதிராக போரை தீவிரப்படுத்துவதிலும் இரண்டு பெரு வர்த்தகக் கட்சிகளுக்குமிடையே நிலவுகின்ற அடிப்படை உடன்பாட்டை வலியுறுத்திக் கூறுகின்றவகையில் அமைந்திருக்கிறது.

இந்த விவாதம் ஆரம்பிக்கப்படுகின்ற நேரத்தில் ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டமை தொடர்பாகவும், தற்போது அங்கு அது சந்தித்துவருகின்ற கொந்தளிப்பான எதிர்ப்பு குறித்தும் அரசியல் நிர்வாகத்திற்குள்ளேயே நிலவுகின்ற வளர்ந்து வரும் பிளவுகள் தொடர்பாக சுட்டிக்காட்டும் அம்பலப்படுத்தல்களால் நிர்வாகம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

இதில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஜூன் மாதம் வரை அமெரிக்க ஆக்கிரமிப்பு நிர்வாகத்திற்கு தலைமை தாங்கிய போல் பிரேமர் வெளியிட்டுள்ள அறிக்கை ஆகும், படையெடுத்து சதாம் ஹூசேன் கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டை பிடித்துக்கொள்வதற்கு போதுமான அளவிற்கு நிர்வாகம் இராணுவப்படையை அனுப்பவில்லை என்று அவர் கண்டித்திருக்கிறார்.

இதே நேரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் (CIA) புதிய இரகசியத் தகவலும் வந்திருக்கின்றன. இவை இரண்டும் நிர்வாகம் போரை தொடக்குவதற்கு நியாயப்படுத்திய முக்கியமான காரணத்தை -ஈராக் ஆட்சிக்கும், அல் கொய்தாவிற்கும் நிலவியதாக கூறப்பட்ட உறவுகளை- மறுப்பதாக அமைந்திருந்தன .

இந்த சம்பவங்களின் விளைவாக ஊடகங்கள் நிர்வாகத்திற்கான மிக சமாளிக்க முடியாத பேச்சாளர் என்று எடுத்துக்கூறி வந்த செனி 90- நிமிடங்கள் எட்வார்ஸ்-உடன் நடத்திய கலந்துரையாடலில் தற்காப்பு நிலைமை மேற்கொண்டது தெளிவாகத் தெரிந்தது.

தொடக்கத்திலேயே பிரேமர் மற்றும் ரம்ஸ் பீல்ட் கருத்துக்கள் பற்றி நேரடியாக கேட்கப்பட்டதற்கு செனி நேரடியாக பதில் தரமுடியவில்லை, மாறாக அவர் அந்தப்போர் நடத்தப்பட்டதை நியாயப்படுத்தினார். ஈராக் குறிவைக்கப்பட்டதற்கு காரணம் "பயங்கர வாதிகளுக்கும், பேரழிவு ஆயுதங்களுக்கும் மிக நெருக்கமான தொடர்புகள் இருக்கக்கூடும் என்ற சாத்தியக்கூறு" காரணமாகத்தான் என்று கூறினார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமாக தோன்றவில்லை ஏனென்றால் அல்கொய்தாவுடன் தொடர்புகளும் இல்லை, WMD-களும் இல்லை.

''ஈராக்கிற்கும், 9/11-க்கும் இடையில் தொடர்பு இருப்பதாக நான் எப்போதுமே சொன்னதில்லை'' என்று துணை ஜனாதிபதி இயல்புக்கு மாறான கூற்றை வெளியிட்டார். உண்மையிலேயே, செனி பாக்தாத் ஆட்சிக்கும் 2001-பயங்கரவாத தாக்குதல்களுக்குமிடையில் தொடர்புகளை உருவாக்குவதற்கான நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு அவர் தலைமை தாங்கினார். திரும்பத்திரும்ப அவர் ஒரு கூற்றை உலா வரச்செய்தார் -அது அமெரிக்க மற்றும் செக் குடியரசு புலனாய்வு ஏஜென்சிகளால் தெளிவாக மறுக்கப்பட்டபின்னர் - செப்டம்பர் 11- தாக்குதல் விமானக்கடத்தியான Mohammed Atta -வும் ஒரு ஈராக் அதிகாரியும் அந்த தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் Prague-ல் சந்தித்தார்கள்- என்பதுதான் அந்தக்கூற்று. அத்தகைய உறவுகள் பற்றி இரகசியப் புலனாய்வு தகவல்கள் தன்னிடமிருப்பதாக ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அவர் கூறியுள்ளார்.

எட்வார்ஸ் திரும்பத்திரும்ப புஷ் நிர்வாகமும், செனியும், அமெரிக்க மக்களை நம்பவில்லை என்று கூறினாரே தவிர 9/11- சம்பவத்தோடு ஈராக்கை தொடர்புபடுத்தி கடந்த காலத்தில் துணை ஜனாதிபதி வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக நேரடியாக அவருக்கு சாவல் விடத் தவறிவிட்டார்.

ஈராக் போரை ஏற்பாடு செய்ததில் நிர்வாகம் "திறமைக் குறைவுடன்" நடந்து கொண்டதாக எட்வார்ஸ் சாடினார். அதன்மூலம் அவரும் ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும், ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை ஆதரித்ததாக கோடிட்டுக்காட்டினார். ஆனால் அதை "சரியான வகையில் செய்திருக்க வேண்டியது அவசியம்" என்றார்.

போருக்குச் சென்றதற்கான காரணங்கள் அல்லது தற்போது ஈராக்கில் அமெரிக்கா எதிர் கொண்டுள்ள தோல்விகள் ஆகியவைபற்றி "அமெரிக்க மக்களுக்கு செனி உண்மையான காரணத்தை" தரவில்லையென்று கடிந்துகொண்டார், என்றாலும் அவர் தெளிவான ஒன்றை எடுத்துரைக்க தவறிவிட்டார். புஷ் நிர்வாகம் பொய்களை, அடிப்படையாக கொண்டு ஒரு ஆக்கிரமிப்புப்போரை நடத்தியது, அது சர்வதேச சட்டப்படி போர்க் குற்றம்- என்பது தான் அந்த தெளிவான உண்மையாகும், அல்லது கெர்ரி நிர்வாகம் இந்த ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் கூறிவில்லை.

மாறாக, ஈராக்கில் நடைபெற்றுவருகின்ற சம்பவங்கள் தொடர்பாக மிகப்பெருமளவில் கலவர உணர்விற்கு ஆட்பட்டு வரும் அமெரிக்க ஆளும்தட்டை சார்ந்தவர்களுக்கு நேடியாக கோரிக்கை விடுத்தார். அமெரிக்கப் படையெடுப்பில் ஈடுபட்ட துருப்புக்களின் எண்ணிக்கை போதுமானதல்ல, என்ற பிரேமரின் அறிக்கைகளை பிடித்துக்கொண்ட எட்வார்ஸ் அமெரிக்க இராணுவத்திற்கு மேலும் 40,000- துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டுமென்றும் அமெரிக்க சிறப்புப்படைகளின் அளவு இரட்டிப்பாக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.

ஹாலிபர்ட்டன் நிறுவனத்தின் முன்னாள் CEO என்ற முறையில் துணை ஜனாதிபதியின் பங்களிப்பை எட்வார்ஸ் கண்டித்தார். ஈராக்கில் ஏலத்தில் கலந்து கொள்ளாமலே அந்த கம்பெனிக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதை கண்டித்தார். என்றாலும், இதில் மிக குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அமெரிக்க பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கும் செனிக்கும் இடையில் நிலவுகின்ற மிக முக்கியமான நெருக்கமான உறவுகள் குறித்து எட்வார்ஸ் அமைதியாக இருந்துவிட்டார். இதில் ஈராக்கின் பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க எண்ணெய் கம்பனிகள் கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்பது அந்த நிறுவனங்களின் விருப்பமாகும்.

2001-ல் செனியின் எரிபொருள் தொடர்பான பணிக்குழு நடத்திய இரகசியக் கூட்டங்கள் தொடர்பாக ஜனநாயகக்கட்சி வேட்பாளர் எதுவும் குறிப்பிடவில்லை. அந்த இரகசியக் கூட்டங்களில் எண்ணெய் தொழில் நிர்வாகிகளும், அரசாங்க அதிகாரிகளும், ஈராக் எண்ணெய் கிணறுகள் தொடர்பான வரைபடங்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவின் போட்டி நாடுகளுக்கு பாக்தாத் எண்ணெய் துரப்பன சலுகைகளை வழங்குவது பற்றி விவாதித்தன. இந்த இரகசிய கலந்துரையாடல்களின் போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் தனது ஊழியர்களுக்கு வெளியிட்ட ஒரு கட்டளையை ஈராக் போன்ற "போக்கிரி நாடுகள் தொடர்பான செயல்பாட்டுக்கொள்கைகளை ஆராயும்போது" பணிக்குழு "புதிய கொள்கைகளை" உருவாக்கி, "புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எண்ணெய் எரிவாயு கிணறுகளை பிடிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்கு" உதவ வேண்டுமென்று கட்டளையிட்டது.

சென்ற வாரம் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஜோன் கெர்ரி இது போன்ற அடிப்படைப் பிரச்சனைகளை தவிர்த்து விட்டதைப்போன்று எட்வார்ஸும் தவிர்த்துவிட்டார். இதற்கான காரணம் மிகத்தெளிவானது: ''ஈராக்கிற்கெதிரான போரில் புஷ் -நிர்வாகம் கடைபிடித்துவரும் அடிப்படை மூலோபாய நோக்கங்களை ஜனநாயகக்கட்சி ஏற்றுக்கொள்கிறது. -பாரசீக வளைகுடா பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகளில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது மற்றும் இந்த உயிர்நாடி பொருளாதார வளத்தின் மீது தனது கிடுக்கிப்பிடியைப் பயன்படுத்தி அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கத்தை தற்போதைய மற்றும் எதிர்கால போட்டி நாடுகள் மீது நிலைநாட்டுவது -இந்தக் கொள்கையில் இரண்டு கட்சிகளுமே உடன்படுகின்றன.

வெளியுறவுக்கொள்கை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் ஜனநாயகக்கட்சி வேட்பாளர், புஷ் நிர்வாகத்தை பெரும்பாலும் வலதுசாரி கண்ணோட்டத்திலேயே கண்டித்தார். உலகிலேயே பயங்கரவாதத்தை, ஊக்குவித்து வளர்க்கின்ற மிகப்பெரிய நாடான ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்கவேண்டுமென்பதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே ஆதரவு காட்டிவருகின்ற துணை ஜனாதிபதியை அவர் கண்டித்தார். ஜனநாயகக் கட்சி நிர்வாகம் இந்தத் தடைகளை நிலைநாட்டுவதுடன், "வலுப்படுத்தவும்" செய்யுமென்று உறுதியளித்தார். வடகொரியாவிற்கு எதிராக கடுமையான நிலையை போதுமான அளவிற்கு மேற்கொள்ளாத நிர்வாகத்தை அதே போன்று கண்டித்தார்.

எட்வார்ஸுடன் சேர்ந்து போட்டியிடுகின்ற அவரது சகா நாட்டின் "தலைமைத் தளபதி" பதவிக்கு தகுதியில்லாதவர் என்று செனி கண்டனம் தெரிவித்ததும், ஜனநாயகக்கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் அதற்கு பதிலளித்தார்: ''ஜோன் கெர்ரி இந்த நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரும் அளவிற்கான நிதி ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். இந்த நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு புலனாய்வு தேவைகளுக்கான செலவினத்தையும், ஏற்றுக்கொண்டார்''.

இந்த கலந்துரையாடலில் எட்வார்ஸின் எண்ணத்தை வெளிப்படுத்தும் மிக முக்கியமான கட்டம் இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலில் தீர்வுகாணும் முயற்சியில் வாஷிங்டன் தீவிர பங்களிப்பு செய்வதற்கு தவறிவிட்டதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது உருவாயிற்று. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதற்கு பதிலளிக்கின்ற வகையில் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனின் ஆட்சி பாலஸ்தீன மக்களுக்கெதிராக கட்டவிழ்த்துவிடும் எந்த ஆக்கிரமிப்பையும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்வதாக அமைந்திருந்தது.

இஸ்ரேல் ''மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கான உரிமை படைத்தவர்கள் மட்டுமல்ல, அவர்கள் தங்களை தற்காத்துக்கொண்டு ஆகவேண்டும். தங்களை தற்காத்துக் கொள்ளும் கடமை அவர்களுக்கு உண்டு'' என்று எட்வார்ஸ் அறிவித்தார்.

பாலஸ்தீன மக்கள் படுகின்ற துன்பத்திற்கு தலையைக்கூட அசைக்காத அவர் ''காசா பகுதியை முன்னோடும் அரங்காக பயன்படுத்தி இஸ்ரேல் மக்களை தாக்குவார்களானால் அது நிறுத்தப்பட வேண்டும். மற்றும் இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு உரிமைபடைத்ததாகும். தற்போது அவர்களுக்கு சமாதான பங்காளி எவரும் இல்லை'' என்று கூறினார்.

காசாவின் வடக்கு பகுதியில் 1,00,000 பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் டாங்கிகள், புல்டோசர்கள் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் சகிதம் இஸ்ரேல் கொடூரமான தாக்குதலை நடத்தி வீடுகளை அழித்து, ஏறத்தாழ 90-பாலஸ்தீன மக்களை கொன்று, சில நாட்கள் நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்திய கொடூரமான தாக்குதல் நடைபெற்ற சூழ்நிலையில், எட்வார்ஸ் இஸ்ரேல்பற்றி தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

செனட்டில் இஸ்ரேலுக்கு வழக்கப்பட்டுள்ள சலுகைகள் பற்றி குறிப்பிட்ட எட்வார்ஸ், இஸ்ரேல் குழந்தைகள் கொல்லப்பட்ட, தற்கொலை குண்டு வீச்சுப்பற்றி கருத்துத் தெரிவித்தார். "பாலஸ்தீனியர்கள்" என்ற சொல்லையே அவரது உதடுகள் உச்சரிக்கவில்லை. பாலஸ்தீனிய மக்களது நிலத்தை சட்டவிரோதமாக இஸ்ரேல் பிடித்துவைத்திருக்கிறது. இந்த ஆண்டு கொல்லப்பட்ட ஒவ்வொரு இஸ்ரேலியருக்கும் பதிலாக ஐந்து பாலஸ்தீனியர்கள் மடிந்திருக்கின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்படைகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்திருக்கின்றனர், ஆயிரக்கணக்கான வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டிருக்கின்றன, இவை அத்னையும் ஜனநாயகக்கட்சி வேட்பாளர்களுக்கு முற்றிலும் அலட்சியப்படுத்தத்தக்க விவகாரங்களாக ஆகிவிட்டன.

ஜபாலியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பிற்கு கெர்ரியும், ஜனநாயகக் கட்சிக்காரர்களும் மேற்கொண்டுள்ள அணுகுமுறைதான் சமாரா, பல்லூஜா போன்ற ஈராக் நகரங்களில் சிவிலியன் மக்கள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திவரும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஜனநாயகக் கட்சியின் கருத்துக்களை துல்லியமாக எதிரொலிக்கும், அளவு கோலாகும். அபு கிறைப் சிறைச்சாலையில் மற்றும் இதர சிறைமுகாம்களில் நடைபெற்ற சம்பவங்கள் போல இந்த நடவடிக்கைகளில் மிகப்பெருமளவிற்கு இரத்தம் சிந்தப்படுவது குறித்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் குறிப்பிடக்கூட இல்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகத் திறமையான ஆலோசனைகளை எடுத்துவைத்த நேரத்தில் எட்வார்ஸ் பொதுமக்களைக் கவருகின்ற வகையில் வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்க்கைத்தர வீழ்ச்சி, சுகாதார சேவைகள் கிடைக்காத நிலை ஆகியவை குறித்து உரையாற்றியிருக்கிறார். அவர் புஷ்ஷின் வரி வெட்டுக்களைக் கண்டித்தார். கோடீஸ்வரர்கள் "தங்களின் நீச்சல் குளத்திற்கருகில் உல்லாசமாக அமர்ந்துகொண்டு" பங்குகள் மூலம் தங்களுக்கு கிடைக்கின்ற லாப ஈட்டுத்தொகையை கணக்கிட்டுக் கொண்டிருப்பதாக சித்தரித்துக்காட்டினார்.

அப்படியிருந்தாலும், இந்த பிரச்சனைகளிலே கூட ஜனநாயகக்கட்சி வேட்பாளர், புஷ் - நிர்வாகத்தை பிற்போக்குத்தனமான முன்னோக்கில் இருந்து கொண்டு கண்டித்தார். அவரும் கெர்ரியும், "சமச்சீர் நிலையிலான பட்ஜெட்டை தயாரிக்கும் வழிக்கு திரும்பும் கொள்கையை கடைப்பிடிக்க உறுதி கொண்டிருப்பதாகவும், வாஷிங்டனில் நடைபெற்றுவரும் சில அதிகாரத்துவ செலவினங்களை வெட்டப்போவதாகவும் தெரிவித்தார்.

''எங்களது திட்டங்களில் எவை வெட்டுவதற்கு உரியவையோ, எவற்றை வெட்டினால் நிதி நிர்வாக, பொறுப்புணர்வு பாதைக்கு நாங்கள் செல்ல முடியுமோ, அவற்றை வெட்டுவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்'' என்று அவர் சொன்னார். இந்த உறுதிமொழி தெளிவாக்குவது எதை என்றால் மிகவும் மந்தமான ஜனநாயகக்கட்சி பிரச்சார உறுதிமொழிகளான வேலைவாய்ப்பு, வருமானங்கள், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் கூட கெர்ரி நிர்வாகம் பதவிக்கு வருமானால் அவை கைவிடப்பட்டுவிடும் என்பதுதான்.

இந்த வாக்குவாதத்தில் எட்வார்ஸ் தெளிவாக வெற்றிபெற்றிருக்கிறார். இதுதான் ஊடகங்கள் கடைப்பிடித்துவருகிற அளவுகோல், வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வியடைந்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது செனி நிலைகுலைந்து விட்டதாக முற்றுகையில் இருப்பதுபோன்று தோன்றுகிறது. தனது எதிர்க்கட்சி வேட்பாளரின் கருத்துக்களுக்கு பதிலளிக்க ஒன்றுக்கு மேற்பட்ட தடவை செனி மறுத்துவிட்டார்.

என்றாலும், இந்த ''வெற்றி'' புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளான உலக இராணுவ வாதம் மற்றும் சமூக பிற்போக்குத்தனம் ஆகியவற்றிற்கு எதிரான சவாலின் விளைவோ அல்லது ஈராக்கில் போருக்கு பொதுமக்களது நியாயமான எதிர்ப்போ மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே நிலவுகின்ற சீர்குலைந்துவரும் வாழ்க்கைத்தரத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோ அல்ல அதற்கு மாறாக அமெரிக்க ஆளும் ஒருசிலவர் ஆட்சியின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிதான் இது. அதே அடிப்படைக் கொள்கைகளை கடைப்பிடிப்பதற்கு புதிய தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற முயற்சிதான் இது.

இந்த அணுகுமுறை இறுதியில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஜனநாயகக்கட்சியின் வெற்றியாக மாறுமா? என்பது உறுதியாக இல்லை. அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் புஷ் நிர்வாகம் இன்னும் தொடர்ந்து வலுவான ஆதரவைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. தன்னை ஆட்சி அதிகாரத்தில் நிலைநாட்டிக் கொள்வதற்கு புஷ் நிர்வாகம் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைக்கூட பயன்படுத்தக்கூடும்.

விளைவு எதுவாக இருந்தாலும், துணை ஜனாதிபதி தேர்தல் விவாதங்கள் ஒரு புதிய அரசியல் மாற்று தேவை என்ற மிக அவசியமான நிலையை வலியுறுத்தியுள்ளது. மக்கள் தொகையினரில் மிகப் பரந்த பெரும்பான்மையினராகிய, அமெரிக்க உழைக்கும் மக்களுக்காக அவர்களே உருவாக்கிக் கொள்கிற ஒரு கட்சி மிக அவசியமாகும். அத்தகைய ஒரு கட்சிக்கும், அதற்கு தேவைப்படும் சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தை வளர்த்தெடுக்கவும் ஒரு அடித்தளத்தை அமைப்பதற்குத்தான் 2004-தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.

Top of page