World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German interior minister bans Islamic conference

இஸ்லாமிய மாநாட்டிற்கு தடைவிதித்த ஜேர்மனி உள்துறை அமைச்சர்

By Justus Leicht
4 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பாவில் முதலாவது ''அரபு மற்றும் இஸ்லாமிய மாநாடு'' அக்டோபர் ஆரம்பத்தில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது, அந்த மாநாட்டிற்கு பேர்லின் நகர சட்டமன்றம் தடைவிதித்திருக்கிறது, மத்திய உள்துறை அமைச்சர் Otto Schily ஆல் குறிப்பிடத்தக்க அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து இது விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மாநாட்டின் பிரதான குறிக்கோள் ''ஈராக்கிலும் பாலஸ்தீனத்திலும், ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மறந்துவிட்ட மக்களோடு ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற செய்தியை அனுப்புவதுதான்''. ''தாராளவாத ஜனநாயகத்தில்'' இது ஒன்றும் அசாதாரணமான நிகழ்ச்சியல்ல என்று எவரும் நினைக்கக்கூடும். போலீஸ் மற்றும் இரகசிய சேவைகளைச் சேர்ந்தவர்கள்கூட அந்த மாநாட்டிற்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான தயாரிப்பிற்கும் தொடர்பு எதுவும் இருப்பதாக கோடிட்டுக்காட்டவில்லை. பேர்லின் மாநில உள்துறை அமைச்சர் Erhart Koerting இரண்டு வாரங்களுக்கு முன்னர்: ''பயங்கரவாதிகளை திரட்டுவதாக இந்த மாநாடு என்று எனக்கு எந்த தகவலும் இல்லை.'' மேலும் ''மத்திய அரசாங்கமும் எனக்கு அத்தகைய தகவல் எதையும் தரவில்லை'' என்று கூறியிருந்தார்.

அப்படியிருந்தாலும், அதிகாரபூர்வமாக அந்த மாநாடு நடப்பது தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் ஊடகங்களும், அரசியல் ஸ்தாபனங்களும், அந்த மாநாட்டிற்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை ஆரம்பித்தன. அந்த மாநாட்டில் யார் பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளாமல், சாக்கடை பத்திரிகைகளும், தொலைக்காட்சியும் ''நூற்றுக்கணக்கான இஸ்லாமிய போராளிகள்'' பேர்லினில் திரளுகிறார்கள் என்று குறிப்பிட்டன.

Schily இந்த பிரச்சாரத்தை முன்னின்று நடத்தினார் (சமூக ஜனநாயகக் கட்சி----SPD). ''அந்த மாநாடு நடக்க முடியாதவாறு செய்வதற்கு தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக'' அறிவித்தார். கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்காரர்கள் மற்றும் பேர்லின் நகர சட்டமன்றத்தை சேர்ந்த பசுமை கட்சிக்காரர்களை போன்று பவேரியன் மாநில உள்துறை அமைச்சர் Guenther Beckstein- ம் (CSU) தடைவிதிக்க கோரிக்கை விடுத்தார். ''அத்தகைய மாநாடு ஜேர்மன் மண்ணில் தேவையற்றது'' என்று மியூனிச்சில் Beckstein கூறினார்.

சிலநாட்களுக்குள், பேர்லின் மாநில அரசாங்க உள்துறை அமைச்சர் திடீரென்று தன்போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டார். ''அத்தகைய கிளர்ச்சியை நான் இங்கே சகித்துக்கொள்ளமாட்டேன்'' என்று மிகுந்த கலவர உணர்வோடு Koerting பத்திரிகை மாநாட்டில் தெரிவித்தார். அந்த மாநாட்டு தடையை நியாயப்படுத்தினார். SPD மற்றும் ஜனநாயக சோசலிச கட்சி (PDS) கூட்டணி அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள பேர்லின் நகர சட்டமன்றம்தான் தடைவிதித்ததற்கான அரசியல் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். தனது கருத்தை பசுமை கட்சியை சார்ந்த வெளியுறவு அமைச்சர் Joschka Fischer- ம் பகிர்ந்து கொள்வதாக Koerting சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டிற்கு வர உத்தேசித்திருப்பவர்களுக்கு விசாக்களை நிராகரிக்க வேண்டுமென்று ஜேர்மன் தூதரகங்களுக்கு Fischer கட்டளையிட்டார்.

இத் தடையானது, ஒன்று கூடுவது கருத்து கூறுவது தொடர்பான சுதந்திரத்தின் மீதான ஒரு அடிப்படை தாக்குதலாகும்.

இஸ்ரேல் அரசை கண்டிப்பது செமிட்டிசத்திற்கு எதிரான உணர்வோடு சம்மந்தப்பட்டது என்று தொடர்புபடுத்தி உள்துறை அமைச்சர் Schily அந்த மாநாடு ''செமிட்டிசத்திற்கும்,'' ''இஸ்ரேலுக்கும்'' எதிரானது என்று கூறினார். இந்த அறிக்கையை எந்தவிதமான விமர்சனக் கண்ணோட்டமும் இல்லாமல் மிகப்பெரும்பாலான ஊடகங்கள் ஏற்றுக்கொண்டன, Koerting-ம் அதைப்பயன்படுத்தி தடைவிதிப்பதை நியாயப்படுத்தினார். அதற்கு சான்றாக, ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும் ''அமெரிக்கா மற்றும் சியோனிச பயங்கரவாதத்திற்கு எதிர்த்து நிற்பவர்களுக்கு ஒற்றுமை உணர்வை காட்டவேண்டும் என்றுதான் அந்த மாநாட்டு பிரகடனம் கோருகிறது---- ஜேர்மன் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் வழங்கும் பாதுகாப்புகளின் கீழ் இந்த கோரிக்கை வருகிறது.

மத்திய அரச தலைமை வழக்கு தொடுனர் Kay Nehm, பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு சாத்தியக்கூறுகள் பற்றி விசாரணைகூட தொடங்கியிருக்கிறார், ஆனால் இதுவரை அந்த மாநாட்டிற்கு அல்லது அதன் அமைப்பாளர்களுக்கும், பயங்கரவாத அமைப்புக்களுக்கும் அவர்களது நடடிக்கைகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி எந்தவிதமான சான்றையும் தர தவறிவிட்டனர்.

அதிகாரபூர்வமான வலைத் தளத்தை Koerting மேற்கோள்காட்டி அந்த மாநாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார். அந்த மாநாடு விடுத்திருக்கும் கோரிக்கையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ''அமெரிக்கா மற்றும் சியோனிச பயங்கரவாதம்'' பற்றித்தான் குறிப்பு காணப்படுகிறது மற்றும் அதற்கு "எதிர்ப்பு தெரிவிக்க'' ''தேசபக்தி மற்றும் இஸ்லாமிய விடுதலைகளுக்கு எல்லாவித சட்டபூர்வமான வழிமுறைகளையும், கடைபிடித்து போராட்டத்தை நடத்த பொதுவான கோரிக்கை விடுக்கிறது. இந்த அறிக்கை வாசகத்தை குறிப்பிட்டு பேர்லின் நகர சட்டமன்றம் மாநாட்டிற்கு மட்டும் தடைவிதிக்கவில்லை, அந்த மாநாட்டு பொது ஒருங்கிணைப்பாளர் Fadi Madi- க்கு வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதியையும் விலக்கிக் கொண்டு உடனடியாக லெபனானுக்கு நாடு கடத்தியுள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் அரபு மற்றும் இஸ்லாமிய தேசியவாத முன்னோக்கு தொடர்பாக கொள்கை அடிப்படையில் வேறுபாடுகள் கொண்டது, மற்றும் பயங்கரவாத முறைகளை எதிர்த்து நிற்கிறது. ஆயினும், அது ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிரான எதிர்ப்பு அல்ல, ஈராக் மீதான ஆக்கிரமிப்புத்தான் சர்வதேச சட்டத்திற்கு முரணாகச்செல்கிறது என்ற உண்மையை மாற்றவில்லை ஐ.நா- பொதுச்செயலாளர் கோபி அன்னன் கூட அண்மையில் ஈராக் படையெடுப்பு சட்டவிரோதமானது என்று சுட்டிக்காட்டினார்.

ஈராக்கிய மக்களும், இதர ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் மக்களும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் உரிமைபடைத்தவர்கள் ----அந்த உரிமை சர்வதேச சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் நீண்ட தசாப்தங்களாக பாலஸ்தீனிய ஆக்கிரமிப்புத் தொடர்பாக எண்ணிறந்த ஐ.நா- தீர்மானங்களை மீறி நடந்து வருகிறது. இரு தசாப்தங்களுக்கு முன்னர் ஷரோன் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் ஏனென்றால் லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்ததை தொடர்ந்து பாலஸ்தீன அகதிகள் முகாம்களான Sabra மற்றும் Shatila-களில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அவர்தான் ''தனிப்பட்ட பொறுப்பென்று'' இஸ்ரேல் அரசாங்க விசாரணை கமிஷன் ஒன்று முடிவு செய்ததை தொடர்ந்து அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

மாநாட்டுத்தடை அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஐ.நா- பொதுச்செயலாளர் மீண்டும், பாலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேலிய இராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைளை கண்டித்திருக்கிறார்.

மாநாட்டுத்தடை அறிவிப்பை வெளியிடுவதற்கு சற்று முன்னர் உள்துறை அமைச்சர் Schily அளித்த ஒரு பேட்டியில் இஸ்ரேல் அரசாங்கத்தின் சட்டவிரோதமான நடவடிக்கைகளை ஆதரித்தார். பாலஸ்தீன பகுதிகளில் கட்டப்படும் தடுப்புச்சுவரை நியாயப்படுத்தினார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் அந்த சுவர் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. ''யாராவது இதை பேர்லின் சுவரோடு ஒப்பு நோக்குபவர்கள் தவறு செய்கிறார்கள் ஏனென்றால் இது மக்களை முடக்கிவிடுவதல்ல, அவர்களது உரிமையை பறிப்பதல்ல, இஸ்ரேல் பயங்கரவாதிகளுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்கிறது...... இந்த தற்காப்பு வேலியை அமைக்க இஸ்ரேல் முயன்றுவருவது, அதன் பலனை நிருபித்துள்ளது, இதை புரிந்து கொள்ளமுடியும், இந்த உண்மையை எந்த விமர்சனமும், கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன்'' என்று Schily கூறியிருக்கிறார்.

சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை, சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து தற்காத்துக்கொள்வது ''புரிந்து கொள்ளக்கூடியது'', ஆனால் அதைக் கண்டிப்போர், எதிர்த்து நிற்பவர்களுக்கு ஆதரவைத் தெரிவிப்பவர்கள் தடைகளையும் நாடுகடத்தலையும் கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று Schily கூறுகிறார்.

ஜேர்மன் அரசாங்கத்தின் "Hartz IV" என்று அழைக்கப்படும் நலன்புரி மற்றும் உழைப்பு சந்தை ''சீர்திருத்தங்களுக்கு'' எதிராக வெகுஜன கண்டனப்பேரணிகள் நடந்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் பிராண்டன்பேர்க் மற்றும் சக்சோனியில் மாநிலத்தேர்தல்கள் நடந்து முடிந்த நேரத்தில் இப்படியானதொரு மாநாட்டிற்கு தடைவிதிப்பதற்கான பிரச்சாரம் நடைபெற்றிருப்பது தற்செயலாக நடந்துவிட்டதொன்றல்ல. கூட்டம் நடத்துகின்ற உரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிராக Schily கருத்துத்தெரிவித்த பின்னர், சென்ற ஆண்டு ஜேர்மனியின் அரசியல் சட்ட நீதிமன்றம் வலதுசாரி தீவிரவாத, ஜேர்மன் தேசிய ஜனநாயகக் கட்சிக்கு (NPD) தடைவிதித்ததை இரத்து செய்தமை குறித்து வருந்தினார்.

அந்தத் தடையை Schily தான் தொடக்கி வைத்தார், ஆனால் அதற்குப் பின்னர் அரசியல் யாப்பு நீதிமன்றம் அந்தத்தடையை இரத்து செய்தது NPD யின் தலைமைக்குள் ஜேர்மன் அரச ஏஜென்டுகள் மிகப்பெருமளவில் ஊடுருவியிருப்பது தெளிவான பின்னர்தான் நீதிமன்றம் அவ்வாறு முடிவுசெய்தது. சக்சோனி சட்டமன்றத்தில் NPD அடியெடுத்து வைத்திருப்பது ''அரசியல் யாப்பு நீதிமன்றம் பிரச்சனைக்குரிய முடிவை செய்ததால்தான்'' என்று Schily அறிவித்தார்.

உண்மையிலேயே பாசிச NPD கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதற்கு பிரதான பொறுப்பு, சமூக ஜனநாயக- பசுமை கட்சி கூட்டு அரசாங்கம் முன்கண்டிராத வகையில் வாழ்க்கை தரத்தின் மீதும், உழைக்கும் மக்களின் சமூக உரிமைகள் மீதும் தாக்குதல்களை தொடுத்தது, அதனால் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ந்தது. ஊடகங்கள் முழுவதும் மற்றும் அரசியல் ஸ்தாபனங்கள், தொழிற்சங்க அதிகாரத்துவம் உட்பட தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற சூழ்நிலையில், பரந்த வெகுஜன உழைக்கும் மற்றும் ஏழை மக்களது முறையான கோப உணர்வுகளை தீவிர வலதுசாரிகள் சுரண்டிக்கொள்ள முடிந்தது.

இதில் அரசாங்கத்தின் அறிவிப்பு மிகத்தெளிவாக உள்ளது. அரசாங்க கொள்கைக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் ஜேர்மன் உள்துறை அமைச்சரின் ஒரே ஒரு பதில் -----அரச அடக்குமுறை, அது எவ்வளவு ஜனநாயக விரோத மற்றும் சட்டவிரோதத்தன்மை கொண்டதாக இருந்தாலும் இதுதான்

Top of page