World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

On-the-spot report

Sri Lankan government fails to rebuild tsunami-destroyed hospitals

நேரடி அறிக்கை

இலங்கை அரசாங்கம் சுனாமியால் அழிவுற்ற வைத்தியசாலைகளை மீள் நிர்மானம் செய்யவில்லை

By M. Aravindan and Sarath Kumara
4 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் பொருளாதார ரீதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில், டிசம்பர் 26 சுனாமிக்கு முன்னரும் கூட உட்கட்டமைப்பு தரக்குறைவானதாகவே இருந்து வந்துள்ளது. இரண்டு தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து வந்த பேரலைகள், அம்பாறை மாவட்டத்தின் கரையோரம் பூராவும் சுகாதாரத்துறை மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் குழு, ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தபோது, வைத்தியசாலைகளை மீள்நிர்மானம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகளைக் கூட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம் மேற்கொண்டிருக்கவில்லை. நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய நான்கு அரசாங்க வைத்தியசாலைகளும் பெரிய நீலாவனை, கோமாரி, உள்ளாய் ஆகிய மூன்று மருந்தகங்களும் மற்றும் ஒரு ஆயுர்வேத மருந்தகமும் சுனாமியால் அழிவுக்குள்ளாகியுள்ளன. இவை அனைத்தும் கடற்கரையில் இருந்து 200 நிலப்பரப்பில் அமைந்துள்ளதுடன் (இங்கு அரசாங்கம் எந்தவொரு கட்டிட நிர்மாணத்தையும் தடைசெய்துள்ளது) எல்லா இடங்களிலும் மீள் கட்டுமானம் செய்யப்பட வேண்டியவையாக உள்ளன. அதே சமயம் தற்காலிக வைத்தியசாலைகளும் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதுவரை அரசாங்கம் காரைதீவு ஆஸ்பத்திரிக்கு மட்டுமே நிலத்தை ஒதுக்கியுள்ளது. பெரிய நீலாவனை மத்திய மருந்தகத்திற்காகவும் மகப்பேறு மண்டபத்திற்காகவும் கிராமத்தவர்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு நிலப்பகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள். கல்முனையில் உள்ள சுகாதார சேவை காரியாலயத்தின் மாகாண உப ஆணையாளரின் குமாஸ்தாவான கே. செல்வநாயகம் எமது வலைத் தளத்துடன் உரையாடிய போது: "நிலம் வழங்கப்பட்டால், சில அரசு சாரா நிறுவனங்கள் வைத்தியசாலைகளை கட்டுவதற்கு முன்வருகின்றன. ஆனால் வைத்தியசாலைகளுக்காக நிலம் வாங்குவதற்கு இதுவரை அரசாங்கம் பண ஒதுக்கீடு செய்யவில்லை. அரசாங்கமோ அல்லது சுகாதார திணைக்களமோ எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எங்களிடம் கேட்கவில்லை," என்றார்.

அரசாங்கத்தின் போக்கு ஒரு பக்கம் இருக்க, வைத்தியர்கள், தாதிமார், உதவியாளர்கள் மற்றும் ஏனைய அலுவலக ஊழியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் தீவிர சிரமமான நிலைமைகளின் கீழ் தற்காலிக வைத்தியசாலைகளை நடத்துவதிலும் அத்தியாவசிய மருத்துவ சேவையை வழங்குவதிலும் குறிப்பிடத்தக்க சேவையை செய்துகொண்டிருக்கின்றனர். அதே சமயம் வைதியசாலைகளுக்கு உதவுவதற்காக கிராமத்தவர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

அரசாங்கம் மருந்துகளையும் சம்பளத்தையும் மட்டுமே கொடுப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் எம்மிடம் கூறினார்கள். சுனாமி தாக்கிய போது மிக அதிகளவிலான மருத்துவ உபகரணங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது அரசு சாரா நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட உபகரணங்களிலேயே வைத்தியசாலைகள் இயங்குகின்றன.

"இது நோயாளர்களுக்கு சிகிச்சை செய்ய பொருத்தமான முறையல்ல"

நிந்தாவூர் மாவட்ட வைத்தியசாலையின் விவகாரம் அறிவூட்டுவதாக உள்ளது. சுனாமியின் பின்னர் இந்த வைத்தியசாலை அல் மஸார் மகளிர் உயர் பாடசாலைக்கு நகர்த்தப்பட்டது. அது தவிர்க்க முடியாமல் பாடசாலைக்கு பிரச்சினையை ஏற்படுத்திய போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (ஸ்ரீ.ல.மு.கா) பாராளுமன்ற உறுப்பினரான பைசல் ஹாஸிமுக்கு சொந்தமான ஒரு பயன்படுத்தப்படாத நிலத்தில், எல்லைகள் அற்ற மருத்துவ (Médecins Sans Frontière-MSF) கழகத்தால் அமைக்கப்பட்ட திரைச்சீலை கூடாரங்களுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி அலுவலர்களின்படி, கூடாரங்களில் உள்பக்கத்தில் உள்ள உக்கிரமான உஷ்னத்தின் காரணமாக இவற்றை நோயாளர்கள் பயன்படுத்த விரும்புகிறார்கள் இல்லை.

ஒரு இளைஞர்கள் குழு, ஆஸ்பத்திரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டால் சாதாரண மக்களால் அதை பயன்படுத்த முடியும் என தீர்மானித்தது. ஒரு ட்ரக் வண்டியைக் கொண்டுவந்து அதில் உபகரணங்களை ஏற்றிக்கொண்ட அந்த குழு, ஆஸ்பத்திரியை கே.எம். அஸ் சஃபா வித்தியாலயத்திற்கு மாற்றியது. வைத்தியசாலை தனது நிலத்தில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் ஹாஸிம் அதில் அக்கறை செலுத்துவதை விட்டுவிட்டார் என ஒரு வைத்தியசாலை ஊழியர் தெரிவித்தார்.

டாக்டர் ஏ.எம். ஜாபீர் குறிப்பிட்டதாவது: "உள்ளூர் மக்களின் நடவடிக்கைகளின் காரணமாகவே இந்த வைத்தியசாலை இயங்கிக்கொண்டிருக்கின்றது. முன்னைய இடத்தில் உஷ்ணம் சுட்டெரித்ததுடன் திறந்த வெளியாக இருந்ததோடு எங்களால் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் இருந்து. ஆகவே சில இளைஞர்கள் கட்டாயப்படுத்தி வைத்தியசாலையை இங்கு இடம் மாற்றினார்கள். அவர்கள் வைத்தியசாலை தளபாடங்களையும் உபகரணங்களையும் கொண்டுவந்து சேர்த்ததோடு தற்காலிக மின்சார தொடர்பையும் ஏற்படுத்தினர். சேதமடைந்திருந்த நீர் இறைக்கும் இயந்திரத்தையும் திருத்தி தண்ணீர் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர். ஒரு அரசு சாரா அமைப்பு மலசல கூடங்களையும் குளியலறைகளையும் அமைக்கும் அதேவேளை இன்னுமொன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள் நோயாளர் பிரிவுகளை கட்டுவிக்கின்றது.

தங்குமிட வசதிகளின்றி நோயாளர்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக அவர் கூறினார். "உள்ளே இருக்க வேண்டியவர்கள் மருந்துக்காக தங்கள் வீட்டிலிருந்து அன்றாடம் இங்கு வரவேண்டியுள்ளது. சிலர் குறிப்பாக ஊசி போட்டுக்கொள்வதற்காக மூன்று தடவைகள் வரவேண்டும். அவசியமான முறையில் அவர்களை எங்களால் கண்காணிக்க முடியாது. இது நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான சரியான முறையல்ல. இதற்கும் மேலாக அவர்கள் இங்கு வந்து போவதற்கு முச்சக்கர வண்டிகளுக்கும் செலவு செய்ய வேண்டும்."

40,000 உள்ளூர் கிராமவாசிகளில் முக்கால்வாசிப்பேர் விவசாயத் தொழிலாளர்கள் அல்லது ஒரு சிறு துண்டு நிலத்திற்கு சொந்தக்காரர்களான சிறு விவசாயிகள். மேலும் 10 வீதமானவர்கள் மீனவர்கள். வாடகை வாகனத்தில் ஒரு முறை பயணிக்க 60 அல்லது 70 (60 அல்லது70 சதம் அமெரிக்க டொலர்கள்) ரூபாய்களை செலவிடுவதே மிகக் கடினம்.

தனது ஏழு மாத குழந்தைக்கு சிகிச்சை பெற ஆஸ்பத்திரியில் காத்திருந்த கனபதிபிள்ளை சந்திராதேவி: "நான் மூன்றாவது முறையாக ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளேன். நான் இங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காரைதீவில் இருந்து வந்தேன். நான் இரவுக்கு அடுத்த ஊசியை போட்டுக்கொள்ள மீண்டும் வரவேண்டும். தேவையான மருந்து இங்கு இல்லாததால் நான் அதை 78 ரூபாவுக்கு வெளியில் தான் வாங்க வேண்டும். அது சிரமமானது," என்றார்.

நோய்க் கிருமிகளை போக்கும் வசதிகள் இல்லாததால் மகப்பேறு பிரிவை தொடங்குவதற்கு முடியாமல் இருப்பதாக ஆஸ்பத்திரி அலுவலர்கள் விளக்கினர். கர்ப்பிணி தாய்மார்களை ஏனைய வைதியசாலைகளுக்கு இடம்மாற்ற வேண்டும், ஆனால் அதுவும் ஒரு பிரச்சினைதான். 20 வருடம் பழமைவாய்ந்த அம்புலன்ஸ் இடைநடுவில் பழுதடைந்துவிடுகிறது. ஒரு தாதியான எம்.ஐ. சித்திரஹீலா, "எங்களிடம் அடிப்படை சிகிச்சைகளை வழங்குவதற்கு போதுமான உபகரணங்கள் கிடையாது" என முறைப்பாடுசெய்தார். இன்னுமொரு தாதியான எம்.ஐ. இனுல்ரைலா, அவர்களது எல்லா சீருடைகளும் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்விட்டதாகவும் இன்னமும் அரசாங்கம் மாற்று சீருடைகள் வழங்கவில்லை எனவும் கூறினார்.

கூடாரங்களில் காயங்களுக்கு சிகிச்சை

நாங்கள் காரைதீவு ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அது தற்காலிகமாக ஒரு சிறிய கட்டிடத்தில் இயங்குகிறது. பகீரதி தமிழ்செல்வன் குறிப்பிட்டதாவது: "எங்களுக்கு இங்கு போதுமான வசதிகள் கிடையாது. சுனாமி தாக்குவதற்கு முன்னர் இங்கு இரண்டு மருத்துவ அலுவலர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது ஒரே ஒரு மருத்துவ அலுவலர்தான் இருக்கின்றார். ஒரு தாதியும் ஒரு மருத்துவ உதவியாளரும் சுனாமியில் இறந்துவிட்டனர். ஆனால் வேறு எவரும் பதிலீடு செய்யப்படவில்லை. 60 கட்டில்கள் இருந்த இடத்தில் இப்போது 17 கட்டில்கள் மட்டுமே உள்ளன."

அங்கு ஒரு ஆண்கள் வாட்டும் ஒரு பெண்கள் வாட்டும் மட்டுமே உள்ளன. சிறு பிள்ளைகள் தொற்றுநோய் நோயாளிகளுடன் பெண்கள் வாட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் வாட்டை பார்வையிட்டபோது அது நிரம்பிவழிந்ததுடன் ஒவ்வொரு கட்டிலிலும் இரண்டு நோயாளர்கள் இருந்தார்கள். தனது சிறு பிள்ளைக்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகின்ற ஒரு இளம் தாய் ஏ.ஆர். ரஞ்சனி, நெருக்கமான நிலைமைகளின் காரணமாக "நோயாளர்கள் மத்தியில் நோய்கள் பரவுகின்றன" என கூறினார். மலசலகூட வசதிகள் பற்றாக்குறை பற்றியும் அவர் முறைப்பாடுசெய்தார்.

தற்காலிக கட்டிடத்தில் போதுமான இடவசதியின்மையால் மருந்துகட்டும் வேலைகள் வெளியில் ஒரு கூடாரத்தில் நடைபெறுகின்றது. ஆனால் அதற்குள்ளும் உஷ்ணம் அதிகமாகையால் மர நிழலின் கீழேயே மருந்துகட்டப்படுகிறது.

குடும்ப சுகாதார அலுவலரான மஹேஸ்வரி தட்சனாமூர்த்தி: "எனது வீட்டோடு எனது எல்லா உடமைகளும் சுனாமியால் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஆனால் நான் சுனாமி தாக்கி நான்கு நாட்களின் பின்னர் வேலைக்குவந்துவிட்டேன். நானும் எனது கனவரும் இரண்டு பிள்ளைகளுடன் இன்னமும் தற்காலிக தங்குமிடத்திலேயே வசிக்கின்றோம். எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி வேலைக்கு வருவது கடினமாக இருக்கின்றது. ஆஸ்பத்திரியில் சீருடை மாற்றுவதற்கு கூட இடம் இல்லை," என்றார்.

அரசாங்கம் அவர்களது வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு எதுவுமே செய்யவில்லை என அவர் முறைப்பாடு செய்தார். அது சுனாமியால் பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு வருட சம்பளத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்தது. "நாங்கள் வின்னப்பித்திருந்த போதும் இன்னமும் எங்களுக்கு கிடைக்கவில்லை" எனவும் அவர் தெரிவித்தார்.

பேரலகள் தாக்கியபோது, அம்புலன்ஸ் சாரதி மோகனகுமார் அவர் கடமையில் இல்லாத போதும் ஒரு கடுமையாக சுகயீனமுற்றிருந்து ஒரு நோயாளியை அவர் காரைதீவு ஆஸ்பத்திரியில் இருந்து கல்முனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். "நான் வீட்டில் இருந்திருந்தால் என்னால் எனது மனைவியையும் மகளையும் காப்பாற்றியிருக்க முடியும். அம்புலன்ஸ் காப்பாற்றப்பட்டுவிட்டது ஆனால் எனது குடும்பம் காப்பாற்றப்படவில்லை. இன்னமும் எமது (சுகாதார) திணைக்களம் எமது நிலைமைகளை முன்னேற்ற எதையும் செய்யவில்லை." தனது 8,000 ரூபா (80 அமெ. டொலர்கள்) சம்பளத்தில் உயிருடன் இருக்கும் தனது பாடசாலை செல்லும் வயது பிள்ளைகள் இருவரையும் பேணுவது இலகுவானதல்ல என அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ அலுவலர்களே கிடையாது. இரு பதிவுசெய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களே உள்ளனர். பல் வைதிய நிபுணரான டாக்டர் எம்.ஏ.எச். ஷாருக் தற்காலிக மாவட்ட மருத்துவ அலுவலராக பணிபுரிகின்றார். இந்த வைத்தியசாலை கல்முனை மாநகரசபைக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்குகிறது. இது ஆறு மாதத்திற்குள் மூன்றாவது இடமாகும். முதலில் அது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது பின்னர் சின்ன பள்ளி என்னும் ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தது.

டிசம்பர் 26 அழிவுக்கு முன்னர், இந்த ஆஸ்பத்திரியில் 80 கட்டில்களுடன் நான்கு வாட்டுகள் இருந்தன. கிட்டத்தட்ட 50,000 பேர் நன்மையடைந்தனர். இப்போது இங்கு மூன்று கட்டில்கள் மட்டுமே உள்ளதோடு வெளிநோயாளர் பகுதி மட்டுமே இயங்குகின்றது. மருந்துகட்டும் பகுதி ஒரு கூடாரத்தின் கீழ் இயங்குகிறது.

டாக்டர் ஷாருக் தெரிவித்ததாவது: "வைத்தியசாலையுடன் எல்லா மருத்துவ உபகரணங்களும் சுனாமியால் அழிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கம் அம்புலன்ஸை மட்டுமே வழங்கியது. இன்னமும் எங்களுக்கு ஆஸ்பத்திரியை மீண்டும் கட்டுவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஆஸ்பத்திரியை மீண்டும் கட்டுவதற்காக கல்முனை மாநகரசபை மைதானத்தில் ஒரு பகுதியை வழங்குவதில் தனக்கு எந்த முரண்பாடும் கிடையாது என மாநகரசபை ஆணையாளர் கூறுகின்றார். ஆனால் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வடக்கு கிழக்கு மாகாணசபை ஆளுனரே கொடுக்க வேண்டும். நாங்கள் இன்னும் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை."

அரசாங்கம் இந்த மைதானத்தை ஒதுக்கித் தராவிட்டால் மாற்று இடம் தேடுவது சிரமமாக இருக்கும். பயன்படுத்தப்படாத இடங்களே கிடையாது. வயல்கள் மட்டுமே உள்ளன. அவற்றைப் பெற்றுக்கொள்வதும் நிரப்புவதும் அதிகரித்த செலவை ஏற்படுத்தும்.

ஒரு ஆண் தாதி எல்.எம் நியாஸ் எம்மிடம் குறிப்பிட்டதாவது: "சுனாமிக்குப் பின்னர், ஒரு பிராந்திய சுகாதார நிர்வாகம் வைத்தியசாலையை மூடுவதற்கு முயற்சித்தது. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அருகிலேயே உள்ளது. அதைச் சூழ உள்ள மக்களால் அதைப் பயன்படுத்த முடியும். உள்ளூர் மக்களுக்காகவே இந்த ஆஸ்பத்திரி மீண்டும் திறக்கப்பட்டது என ஒரு அதிகாரதி கூறினார். அவர்கள் இடத்தை ஒழுங்குசெய்துள்ளார்கள். ஆனால் ஒரு மருத்துவ அலுவலர் இன்றி வெளிநோயாளர் பிரிவு மட்டுமே இங்கு இயங்குகிறது. சுனாமி தாக்கி ஆறு மாதங்களாகியும், அரசாங்கமோ அல்லது யாராவது ஒரு அரசியல்வாதியோ வைத்தியசாலையை சரியாக இயங்க வைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை."

மனநோய் பிரச்சினை

அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டுள்ள இன்னுமொரு பகுதி மனநோய் பிரிவாகும். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பல மனநோயாளர்கள் உருவெடுக்கின்றார்கள்.

கல்முனை மாவட்ட வைத்தியசாலையின் சுகாதார வைத்திய அதிகாரியான டாக்டர். பஸால் கூறியதாவது: "சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மனநோய் பிரச்சினைகள் உள்ளன. அவை உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை. இல்லையேல் அவர்கள் மேலும் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். பல நோயாளர்கள் எங்களது மனநோய் பிரிவுக்கு வருகின்றார்கள். அதுவும் சுனாமிக்கு முன்பிருந்தே கரையோரத்தில் 65 கிலோமீட்டர் பிரதேசத்திற்கும் ஒன்றே ஒன்றுதான் இயங்குகிறது.

"கனவன், மனைவி, பிள்ளைகள், மாமா, மாமியார் என ஒரே குடும்பமாக ஒரே அறையில் கூட்டமாக வாழும்போது, அது அவர்களை மன ரீதியில் பாதிக்கின்றது. இந்தப் பிரச்சினைகளில் அக்கறை செலுத்த வேண்டும். பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் முதியவர்களுக்கும் உதவுவதற்கு பல சமூக நிலையங்களும் மன நோய் சிகிச்சை நிலையங்களும் இருக்கவேண்டும்.

"மக்கள் பெரும் அவலத்திற்கு முகங்கொடுத்து ஆறு மாதத்தின் பின்னர், ஒரு அதிர்ச்சிக்குப் பின் ஏற்படுகின்ற மனநோய்க்கு ஆளாகியுள்ளனர் (Post Traumatic Stress Disorder -PTSD) மக்கள் இத்தகைய நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்க்க நனவற்றமுறையில் முயற்சிக்கின்றனர். சிலர் கடலைப் பார்க்க விரும்புவதில்லை. அவர்கள் பேரலைகளை ஞாபகப்படுத்திக்கொள்வதாலும், பயங்கர கணவுகாண்பதாலும் அழுகின்றனர் அல்லது இரவில் விழித்தெழுகின்றனர்.

"வழமையாகவே பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருவதில்லை. அவர்களது நண்பர்களோ அல்லது உறவினர்களோ அவர்களை அழைத்து வரவேண்டும். பெரும்பலானவர்களால் ஆலோசனைகளின் பின்னர் இதிலிருந்து மீள முடியும். ஆனால் பிராந்தியத்தில் உள்ள 400,000 மக்களுக்கும் இரண்டு அல்லது மூன்று பயிற்றுவிக்கப்பட்ட ஆலோசகர்களே உள்ளனர். இங்கு ஒரு மனநோய் நிபுணரும் கிடையாது. ஒரே ஒரு மன நோய் வைத்தியர் மட்டுமே உள்ளார்.

டாக்டர் பஸால் மேலும் தெரிவித்ததாவது: "எங்களது நடமாடும் சிகிச்சை நிலையத்திற்கு ஒரு தொகை உள -- உடல் நோயாளர்கள் வருகிறார்கள். அவர்கள் பலவிதமான சுகயீனங்களைப் பற்றி தெரிவிப்பார்கள், ஆனால் அவர்களுடைய முறைப்பாடுகளுடன் தொடர்புபட்ட உடல் நோய் அறிகுறிகள் எதுவும் இருக்காது. நாங்கள் ஒரு அகதி முகாமில் எங்களது நடமாடும் சிகிச்சையின்போது, அவ்வாறான சுமார் 50--60 நோயாளர்களுக்கு சிகிச்சையளித்தோம்."

"உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, பாதிக்கப்பட்ட மக்களில் 5 தொடக்கம் 10 வீதமானவர்கள் மனநோய்க்கு ஆளாகக் கூடும். பாதிக்கப்பட்டவர்களின் தொகையை பார்த்தால், இது ஒரு பிரமாண்டமான எண்ணிக்கையாகும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு அதிர்ச்சிக்குப் பிந்திய மனநோயாளர்களே சிகிச்சைக்கு வருவார்கள். நாங்கள் செய்த ஆய்வில் பல நோயாளர்கள் நம்பிக்கை தருபவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றார்கள். தற்கொலை வீதமும் அதிகரித்துள்ளது. எனக்குத் தெரிந்த வகையில் 10 தற்கொலை முயற்சி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதோடு இருவர் உயிரிழந்துள்ளனர்."

Top of page