World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Harold Pinter's Nobel Prize speech: a brave artist speaks the truth about US imperialism

ஹரோல்ட் பின்டரின் நோபல் பரிசுப் பேருரை: அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றிய உண்மை பற்றி ஒரு துணிவுமிக்க கலைஞன் பேசுகிறான்

By Barry Grey
9 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

இந்த ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றுள்ள பிரிட்டிஷ் நாடகாசிரியர் ஹரோல்ட் பின்டர் புதனன்று ஸ்வீடிஷ் கலைக் கழகத்திற்கு அளித்த ஏற்புரையில் தீவிர ஆர்வம், உண்மை மற்றும் தைரியமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். The Homecoming, The Caretaker போன்ற புகழ்பெற்ற நாடகங்களை இயற்றிய பின்டர், ஈராக்கிற்கு எதிராக நடக்கும் போர், மற்றும் பால்கன்கள், மத்திய அமெரிக்கா மற்ற இடங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட சூறையாடல்கள் பற்றியும் அயராமல், ஆற்றலுடன் எதிர்த்துப் பேசியுள்ளார்.

அத்தகைய போராட்டத்தை விரிவாக்கி வளர்க்கும் முறையில் தன்னுடைய ஏற்புரையை பயன்படுத்தி, இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முழுப் போக்கிற்கும் கடும் தாக்குதலை கொடுக்கும் வகையிலும், வாஷிங்டனுக்கு இளைய பங்காளி, உடந்தை நாடு என்னும் வகையில் பிரிட்டன் பங்கு கொண்டிருந்ததையும் குற்றம் சாட்டினார். சொற்களில் எவ்வித குழப்பத்திற்கு இடமின்றி, புஷ்ஷையும், பிளேரையும் குற்றவாளிகள் என்று பின்டர் கூறியதோடு இராணுவவாதத்திற்கும் போருக்கும் எதிராக பரந்த மக்களின் அரசியல் எதிர்ப்புக்கு உணர்ச்சிகரமான அழைப்பையும் விடுத்தார்.

நாடகாசிரியர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர், நடிகர், போரெதிர்ப்பு செயல்வீரராகிய 75 வயதான பின்டர், பிரிட்டனில் தயாரிக்கப்பட்டிருந்த தன்னுடைய உரையை ஒரு வீடியோ ஒளிப்பேழை மூலம் அனுப்பிவைத்தார்; இது ஸ்டொக்ஹோமில் கூடியிருந்தவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. அண்மையில் esophagus ல் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலம் குன்றிய நிலையில் உள்ளார். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், அவர் ஸ்வீடனுக்குப் பயணத்தை மேற்கொள்ளவில்லை.

ஒரு சக்கர நாற்காலியில் தன்னுடைய முழங்கால்களை சுற்றி கம்பளம் போடப்பட்ட நிலையில் ஒளிப் பேழையில் பின்டர் காட்சியளித்தார். அவருடைய குரல் கரகரப்பாக இருந்தது; ஆயினும் கூட வெளிவந்துள்ள தகவல்களின்படி, அது ஒரு ஆணைக்குரலாகத்தான் அமைந்திருந்தது.

உலகின் பல பகுதிகளில், பல தசாப்தங்களாக நிகழும், அமெரிக்க நாசவேலை, வன்முறை மற்றும் ஆக்கிரமிப்புக்களினால் ஏற்பட்ட பேரழிவுத் தாக்கங்களை பற்றிய தெரிவிப்பில், "கலை, உண்மை மற்றும் அரசியல்" என்று தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்த பின்டரின் உரை, உற்சாகத்தையும், ஏன் அதன் நேர்மை, வெளிப்படையான தன்மை இவற்றில் சுதந்திரமளிப்பதாகவும் புத்துணர்வூட்டுவதாகவும் அமைந்திருந்தது. கார்டியன், நியூ யோர்க் டைம்ஸ் போன்ற பிரிட்டிஷ், அமெரிக்க அரசியல் நடைமுறையின் செய்தி ஏடுகள்கூட, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை மூடி மறைப்பதிலும் பொய்களை பரப்புவதிலும் முழு ஒத்துழைப்பையும் தந்திருந்தவை என்றாலும் கூட, பின்டரின் சொற்களின் சக்திவாய்ந்த தாக்குதல் தன்மையை ஓரளவு பதிவுசெய்து காட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

தன்னுடைய நாடகப்படைப்பின் பொருளுரை, கலை பற்றிய தன்னுடைய அணுகுமுறை பற்றிய விவாதப் பொருளுரைக்கு பின்வரும் கருத்தாய்வை முன்னுரையாக வைத்தார்:

"1958ம் ஆண்டு நான் கீழ்க்கண்டவாறு எழுதினேன்: "ஆய்வறிவானது எது, ஆய்வறிவற்றது எது என்பதற்கு இடையில் பற்றிய கடினமான வேறுபாடுகள் கிடையாது; அது போலவே உண்மை, தவறு என்பதற்கிடையேயும் அதிக வேறுபாடு கிடையாது. ஒரு பொருள் உண்மை அல்லது பொய்யாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை; அது உண்மையாகவும், தவறாகவும் கூட இருக்கலாம்"

"இத்தகைய கருத்துக்கள் இன்னும் பொருளுடையவையாக உள்ளன என்று நான் நினைக்கிறேன்; யதார்த்தத்தைப் பற்றி கலை மூலம் கண்டறிவதற்கு இன்னமும் அவை பயன்படும். ஒரு எழுத்தாளர் என்னும் முறையில் அக்கருத்துக்களுடன் உறுதியுடன் இருக்கிறேன்; ஒரு குடிமகன் என்னும் முறையில் நான் அவ்வாறு இருக்க முடியாது. ஒரு குடிமகன் என்னும் முறையில் எது உண்மை?, எது தவறு? என்பதை நான் கேட்டுத்தான் தீரவேண்டும்."

தன்னுடைய நாடகங்களைப் படைப்பதில் இருந்த மிகச்சிக்கல் வாய்ந்த, எளிதில் பிடிபடாத வழிவகை பற்றி பின்டர், இதன் பின்னர் சில உட்பார்வைகளை அளித்தார்; முக்கியமான மனித மற்றும் சமூக உண்மைகளை கண்டறிவதற்கு மொழி, நாடகக் கட்டமைப்பு மற்றும் பாத்திரத்தை பயன்படுத்துதல் என்பதுதான் அவரது பிரதான அக்கறை என்பதை மிகத் தெளிவாக்கியது.

கலை, மொழி, மற்றும் உண்மை இவற்றிற்கு இடையே இருக்கும் உறவுகள் பற்றி அவர் கூறினார்: "எனவே கலையில் மொழியானது, பெரிதும் தெளிவற்ற செயற்பாடாக, ஒரு புதைமணலாக, குதித்தெழச் செய்யும் வலையாக, எழுத்தாளராகிய உங்களை எந்த நேரமும் கைகொடுக்காது விட்டுவிடக்கூடிய உறைந்திருக்கும் நீர்தேக்கமாக இருக்கின்றது."

"ஆனால் நான் கூறியுள்ளது போல், உண்மைக்கான தேடல் என்பது ஒருபொழுதும் நின்றுவிடாது. அது ஒத்திப்போடப்படமுடியாதது; தள்ளிவைக்கப்பட முடியாதது. அதே இடத்தில், அப்பொழுதே எதிர்கொள்ளப்பட வேண்டியது."

உண்மையை தேடி அளித்தல் என்பதற்கான பொறுப்பு பற்றிய இக்கருத்துப்பொருள் நாடகம் பற்றிய அவருடைய கருத்துக்கள், வரலாறு மற்றும் அரசியல் பற்றிய அவருடைய கருத்துக்கள் இரண்டிற்கும் இடையே பிணைக்கும் தொடர்பாகும். அவர் கூறினார்: "அரசியல்வாதிகள் பயன்படுத்தும் அரசியல் மொழி, நமக்குக் கிடைக்கும் சாட்சியங்களின்படி, இப்பகுதி எங்கும் நுழையத் தைரியமற்றது; ஏனெனில் அவர்களுக்கு உண்மையில் ஆர்வம் கிடையாது, அதிகாரத்தை பெறுவதிலும் அதைத் தக்கவைத்துக் கொள்ளுவதிலும்தான் ஆர்வம் உண்டு. அந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு மக்கள் அறியாமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்; உண்மையை பற்றிய அறியாமையில் மக்கள் இருக்க வேண்டும்: தங்களுடைய வாழ்க்கையின் உண்மை பற்றிக் கூட அவர்கள் அறியாமையில் இருக்க வேண்டும். எனவே நம்மைச் சுற்றி நாம் காண்பதெல்லாம் மிகப் பெரிய பொய்களாலான திரைச்சீலை; அதை நாம் வாழ்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுகிறோம்."

அவர் தொடர்ந்தார்: "இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்துள்ளபடி, ஈராக்கின் மீதான படையெடுப்பை நியாப்படுத்த சதாம் ஹுசைன் மிக ஆபத்தான பேரழிவு ஆயுதங்களை கொண்டிருந்தார், 45 நிமிஷத்திற்குள் அவை இயக்கப்பெறலாம், பயங்கரமான அழிவைக் கொண்டுவந்துவிடும் என்று கூறப்பட்டது. இது உண்மை என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல. அல் கொய்தாவுடன் ஈராக்கிற்குத் தொடர்பு இருப்பதாக நாம் கூறப்பட்டோம், செப்டம்பர் 11, 2001 நியூ யோர்க் அட்டூழியத்தில் அதற்கும் பங்கு உண்டு என்று கூறப்பட்டோம். அது உண்மை என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல. உலகத்தின் பாதுகாப்பிற்கு ஈராக் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது என்று கூறப்பட்டது. அது உண்மை என்று நமக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல."

இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்த பின்னர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றி பின்டர் கூறினார்: "சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பா முழுவதும் போருக்குப் பின் என்ன நடந்தது என்பது பற்றி அனைவருக்கும் தெரியும்: முறையான மிருகத்தனமான செயற்பாடுகள், பரந்த முறையில் கொடூரங்கள், சுதந்திரச் சிந்தனை இரக்கமற்ற முறையில் ஒடுக்கல் இவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் சரிபார்க்கப்பட்டுள்ளன.

"ஆனால் இங்கு நான் கூறவந்துள்ளது இதே காலத்தில் அமெரிக்க குற்றங்கள், ஆவணச் சான்றுகளாக்கப்படுவது ஒருபுறம் இருக்க, அவை மேம்போக்காகத்தான் பதிவே செய்யப்பட்டுள்ளன; குற்றங்கள் என்று கூட அவை ஏற்கப்படவில்லை... சோவியத் ஒன்றியம் இருந்ததால் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு சில தடைகளுக்கு உட்பட்டிருந்தபோதிலும் கூட, உலகம் முழுவதும் அமெரிக்காவின் நடவடிக்கைகள், தான் விரும்பியதை அது தடையற்றுச் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டதைத்தான் தெளிவாக்குகின்றன.

இதன்பின்னர் சர்வதேச நாசவேலைகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பங்கு பற்றி பின்டர் பேசினார். "முக்கியமாக 'குறைந்த அழுத்தம் உடைய பூசல்' என்று விவரிக்கப்படுவதை அது விரும்பியது. குறைந்த அழுத்தம் உடைய பூசல் என்றால், ஒரே குண்டுத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் அழிந்து போவர், இந்த முறையில் சிறிது சிறிதாக ஆயிரக்கணக்கான மக்கள் மடிவர். அதாவது நாட்டின் இதயத்தை தொற்றுநோய்போல் தாக்கியபின் அதில் நிவாரணம் இல்லாத தீய வளர்ச்சி ஏற்படுத்தப்படும்; அதன் பின்னர் இவர்கள் பெரும் காயம் வளர்வதை காண்பார்கள். மக்கள் அடக்கப்பட்டவுடன், அல்லது அடித்துக் கொல்லப்பட்டபின், இரண்டும் ஒன்றுதான், இவர்களும் இவர்களுடைய நண்பர்களும், இராணுவமும், பெருநிறுவனங்களும், வசதியுடன் அதிகாரத்தில் அமர்வர்; காமெராவிற்கு முன் தோன்றி ஜனநாயகம் வெற்றிபெற்றுவிட்டது என்று கூறுவர். நான் குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இத்தன்மையைத்தான் கொண்டிருந்தது."

அமெரிக்க ஆதரவுடன் நடந்த கான்ட்ரா பயங்கவாதத் தாக்குதல்கள் 1980களில் நிக்கரகுவாவில் எப்படி பெரும் மக்கள் கொலை, அழிவு ஆகியவற்றை கொடுத்தது என்பதை அவர் விளக்கிக் கூறினார். "அந்த நேரத்தில் ஜனாதிபதி றேகன் கொடுத்த அறிக்கை பின்வருமாறு இருந்தது என்பதை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்: 'கான்ட்ராக்கள் நம்முடைய நாட்டை நிறுவிய மூதாதையர்களுக்கு அறநெறியில் சமமாவர்.' "

நிக்கரகுவாவிலும் மத்திய அமெரிக்கா முழுதும் அமெரிக்காவின் பங்கு எப்படி இருந்தது என்பதை பின்டர் விவரித்துக் கூறினார். இடது தேசியவாத சான்டினிஸ்டா ஆட்சி எப்படி அமெரிக்க ஆதரவுடைய சமோசாவை 1979ல் அகற்றிய ஆட்சியின் சமூகச் சாதனைகள் பற்றி, மரண தண்டனை அகற்றப்பட்டமை, நிலச் சீர்திருத்தங்கள் கொண்டவரப்பட்டமை, கல்வியறிவில் பெருக்கம், பொதுக் கல்வி வளர்ச்சி, இலவச சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை பற்றி அவர் விளக்கினார்.

"இந்த சாதனைகளை மார்க்சிய/லெனினிச நாசவேலை என்று அமெரிக்கா கண்டனத்திற்குட்படுத்தியது. அமெரிக்க அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில் ஆபத்தான முன்னுதாரணம் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. சமூகப் பொருளாதார நீதிகளின் அடிப்படை நெறிகளை நிக்கரகுவா நிறுவ அனுமதிக்கப்பட்டுவிட்டால், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி இவற்றின் தரங்களை உயர்த்த அது அனுமதிக்கப்பட்டுவிட்டால், அதன் மூலம் சமூக ஒற்றுமை, தேசிய சுய மரியாதை இவற்றை சாதிக்க அனுமதிக்கப்பட்டுவிட்டால், அண்டை நாடுகளும் அதே பிரச்சினைகளை எழுப்பி அவற்றைச் செயல்படுத்தும். அந்த நேரத்தில் எல் சல்வடோரில் இருக்கும் நிலையை மாற்றுவதற்குக் கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பது உண்மையே...

"ஜனாதிபதி றேகன் நிக்கரகுவாவை "சர்வாதிகார குப்பைத் தொட்டி" என்று சாதாரணமாக விவரித்தார். இது பொதுவாக செய்தி ஊடகத்தால் பற்றி எடுக்கப்பட்டது; பிரிட்டிஷ் அரசாங்கமும் அதை துல்லியமான, நியாயமான வர்ணனை என்று ஏற்றது... உண்மையில் சர்வாதிகார குப்பைத் தொட்டிகள் அருகில் இருந்த எல் சல்வடோரும், குவாதிமாலாவும்தான். 1954ல் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அரசாங்கத்தை அமெரிக்கா தகர்த்தது; தொடர்ந்திருந்த இராணுவ சர்வாதிகாரங்களில் 200,000 மக்களுக்கும் மேல் மடிந்தனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

"அமெரிக்கா இறுதியில் சான்டினிஸ்டா அரசாங்கத்தையும் வீழ்த்தியது. பல ஆண்டுகள் கடுமையான போராட்டம், எதிர்ப்பு மற்றும் இடைவிடா பொருளாதார தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 30,000 பேர் இறந்த அளவில் நிக்கரகுவாவின் மக்களுடைய உணர்வு குறையலாயிற்று. அவர்கள் களைத்துப்போயினர்; மீண்டும் வறுமையில் ஆழ்ந்தனர். நாட்டில் பழையபடி சூதாட்ட அரங்கங்கள் கொண்டுவரப்பட்டன. இலவச சுகாதார பாதுகாப்பு, இலவசக் கல்வி ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பெருவணிகம் பழிவாங்கும் குரோதத்துடன் மீண்டும் வந்ததது. 'ஜனநாயகம்' மேலோங்கி இருந்தது.

"ஆனால் இந்த கொள்கை மத்திய அமெரிக்காவோடு மட்டும் நிறுத்தப்படவில்லை. உலகம் முழுவதும் இது செயல்படுத்தப்பட்டது. இது ஒரு முடிவில்லா தன்மையை கொண்டுள்ளது. மேலும் இப்படி நிகழவில்லை என்ற கருத்தையும் தோற்றுவிக்கும்.

"பல இடங்களிலும் வலதுசாரி இராணுவ சர்வாதிகாரங்களை இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் அமெரிக்கா ஆதரவு கொடுத்துப் போற்றியது, பாதுகாத்தது. இந்தோனேசியா, கிரீஸ், உருகுவே, பிரேசில், பராகுவே, ஹைட்டி, துருக்கி, பிலிப்பைன்ஸ், குவாதிமாலா, எல் சல்வடோர், சிலியும் தான். 1973ம் ஆண்டு சிலி நாட்டின் மீது அமெரிக்கா தாக்கி இழைத்த கொடூரம் மறைக்கப்படமுடியாதது, மன்னிக்கப்படவும் முடியாததாகும்." (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: ஆர்ஜன்டினா, ஈரான், பாகிஸ்தான் போன்ற ஏனைய நாடுகளும் பின்டருடைய பட்டியிலில் சேர்க்கப்படமுடியும்.)

அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தில் நயமான, வனப்பு மிகுந்த பிரச்சார வழிவகைகளை பற்றிக் குறிப்பிடுகையில், பின்டர் கூறினார்: "சிந்தனைகளை ஒதுக்கி வைக்கும் வகையில்தான் உண்மையில் மொழி பயன்படுத்தப்பட்டது. "அமெரிக்க மக்கள்" என்னும் சொற்கள் உண்மையில் தீவிர ஆர்வம் நிறைந்த உறுதியைக் கொடுக்கின்றன... இது வறுமைக் கோட்டிற்கு கீழே அங்கு இருக்கும் 40 மில்லியன் மக்களையோ அல்லது அமெரிக்கா முழுவதும் பரந்துள்ள சிறைகளில் வாடும் 2 மில்லியன் ஆண்கள், பெண்களையோ குறிப்பிடுவதில்லை."

பின்டர் தொடர்ந்து கூறினார்: "இப்பொழுதெல்லாம் குறைந்த அழுத்த முரண்பாடுகள் என்று அமெரிக்கா கவலைப்படுவதில்லை. தயக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் அல்லது சுற்றிவளைத்துச் சாதிக்க வேண்டும் என்றெல்லாம் அது இப்பொழுது நினைப்பதில்லை. என்ன வேண்டும் என்று கருதுகிறதோ, அதை எவருடைய விருப்பு, வெறுப்பையும் பொருட்படுத்தாமல் வெளியிடுகிறது. ஐக்கிய நாடுகள், சர்வதேச சட்டம், திறனாய்ந்த வகையில் விமர்சித்தல் என்று எதையும் கருதுவதில்லை; இவை அனைத்தும் செயலற்றவை, பொருந்தாதவை என்று அது கருதுகிறது. அதன் பின்னாலேயே ஒரு சிறிய ஆடு சன்னமாகக் குரல் கொடுத்துக் கொண்டு அதைத் தொடர்கிறது; அதுதான் பரிதாபத்திற்குரிய, முதுகெலும்பற்ற கிரேட் பிரிட்டனாகும்.

"நம்முடைய ஒழுக்கநெறி உணர்வுகளுக்கு என்ன ஆயிற்று? ...குவாண்டானாமோ குடாவில் நடப்பதைக் காணுங்கள். நூற்றுக்கணக்கான மக்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் குற்றச் சாட்டும் இல்லாமல், சட்ட வழிவகை, நெறியான முறை இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த முற்றிலும் முறையற்ற அமைப்பு ஜெனிவா மரபுகளை மீறி தக்கவைக்கப்பட்டுள்ளது.

"ஈராக்கின் மீதான படையெடுப்பு என்பது ஒரு கொள்ளையனின் செயல், அரச பயங்கரவாத செயல், சர்வதேச சட்டம் என்ற கருத்திற்கு முற்றிலும் இகழ்வைக் காட்டும் நிரூபணம் ஆகும்... இது ஆயிரமாயிரம் நிரபராதி மக்களின் உறுப்புக்களையும் உயிர்களையும் சிதைத்துக் குடித்ததற்கு பொறுப்பு கொண்டுள்ள ஒரு இராணுவ சக்தியின் திமிர்த்தனமான நடவடிக்கை ஆகும்.

"சித்திரவதை, அடுக்கு (தொகுப்பு) குண்டுவீச்சுக்கள், அடர்ந்தி குறைந்த யுரேனியம், கணக்கிலடங்கா தேவையற்ற கொலைகள், துன்பம், இழிவு மற்றும் மரணத்தை ஈராக்கிய மக்களுக்குக் கொடுத்துவிட்டு, அதை "மத்திய கிழக்கிற்கு சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கொண்டுவரும் செயல்" என்று கூறுகிறோம்.

"படுகொலை நிகழ்த்துபவர், போர்க் குற்றவாளி என்று நீங்கள் தகுதி பெற்று அத்தகைய முறையில் விவரிக்கப்படுவதற்கு முன்னர் எத்தனை பேர்களை நீங்கள் கொல்ல வேண்டும்? நூறாயிரம் பேரா? இன்னும் கூட வேண்டும் போலும் என்று நான் நினைப்பேன். எனவே புஷ்ஷும் பிளேயரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது நியாயமானதே ஆகும். ஆனால் புஷ் கெட்டிக்காரத்தனமாக நடந்துள்ளார். அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஒப்பந்தப்படி ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எந்த அமெரிக்க வீரரோ அல்லது அரசியல்வாதியோ குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவைக்கப்பட்டால், தான் படைகளை அனுப்புவேன் என்று புஷ் எச்சரித்துள்ளார். ஆனால் டோனி பிளேயர் நீதிமன்றத்திற்கு இசைவு கொடுத்துள்ளார்; எனவே அவர் மீது குற்றம் சாட்டப்பட முடியும். நீதிமன்றம் விரும்பினால் நாங்கள் அதற்கு அவருடைய விலாசத்தை கொடுக்கத் தயார். அது 10, டெளனிங் தெரு, இலண்டன் ஆகும்...

2,000 அமெரிக்கர்கள் இறந்தமை ஒரு சங்கடம். அவர்கள் தங்கள் கல்லறைகளுக்கு இருட்டில் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இறுதிச் சடங்குகள் பாதிப்பு கூடாது என்பதற்காக அதிகக் கூட்டமின்றி நடத்தப்படுகின்றன. உறுப்புச் சிதைவுற்றவர்கள் தங்கள் படுக்கைகளில் சிதைந்து வருகின்றனர்; சிலர் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அப்படியே கழிப்பர்."

சுருக்க முடிவுரையாக பின்டர் கூறினார்: "அமெரிக்கா தான் என்ன செய்ய வருகிறது என்பதை இப்பொழுது வெளிப்படையாகவே கூறுகிறது என்று நான் முன்பு தெரிவித்தேன். அது சரியே. அதன் அதிகாரபூர்வ கொள்கை இப்பொழுது "முழு அரங்கையும் ஆக்கிரமித்தல்" "்Full spectrum dominance") என விளக்கப்படுகிறது. அது அவர்களுடைய சொற்றொடர், என்னுடையது அல்ல. "முழு அரங்கையும் ஆக்கிரமித்தல்" என்பதின் பொருள் நிலம், கடல், ஆகாயம் மற்றும் அதன் இருப்புக்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துதல் என்பதாகும்...

"பல ஆயிரக்கணக்கானவர்கள், ஏன் மில்லியன் கணக்கானவர்கள் அமெரிக்காவிலேயே நன்கு அறியக்கூடிய வகையில், ஆழ்ந்த துயரம், வேதனை, கோபம் என்று அரசாங்க செயல்களைப் பற்றி உணர்கின்றனர்; ஆனால் இப்பொழுதுள்ள நிலையில் அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாக இன்னமும் திரளவில்லை. ஆனால் கவலை, உறுதியற்றதன்மை, அச்சம் என்று அமெரிக்காவில் அன்றாடம் பெருகிவரும் நிலையானது குறையும் என்று தோன்றவில்லை...

"மகத்தான இடர்பாடுகளை எதிர்கொண்டாலும், அயராத, பிறழாத, கடுமையான அறிவார்ந்த உறுதிப்பாடு குடிமக்கள் என்னும் முறையில் நமக்கு நம் வாழ்வின் உண்மையை விளக்கும் மற்றும் நம்முடைய சமூகத்திற்கு காட்ட வேண்டிய முக்கியமான கடப்பாடும் நம்மிடையே உறைந்துள்ளது. உண்மையில் இது கட்டாயமாக செய்யவேண்டியது ஆகும்.

"அத்தகைய உறுதிப்பாடு நம்முடைய அரசியல் பார்வையில் பொதிந்திருக்கவில்லை என்றால், மனிதனின் கண்ணியம் என்பதை கிட்டத்தட்ட இழந்துவிட்ட நாம், அதை மீட்பது அரிது."

Top of page