World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Workers need a new political perspective.

Political issues in the fight against the attacks of Chirac and Raffarin

 தொழிலாளர்களுக்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவை

சிராக் மற்றும் ரஃபரனின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்

Statement of the WSWS Editorial Board

Use this version to print | Send this link by email | Email the author

ஜனாதிபதி ஜாக் சிராக் மற்றும் அவருடைய பிரதம மந்திரி ஜோன்-பியர் ரஃப்ரன் தலமையிலான அரசாங்கம் நவீன தாராளவாத கொள்கைகளின் உந்துதலின் புதிய சுற்றுத் தாக்குதல்களுக்கு எதிராக, பெப்ரவரி 5ம் தேதி, பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலம் மீண்டும் ஒருமுறை தங்களுடைய எதிர்ப்புக்களை தெரிவிக்கவுள்ளனர்.

1995ல் இருந்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இடது மற்றும் வலதுசாரி அரசாங்கங்கள் என பாகுபாடின்றி மீண்டும் மீண்டும் இயற்றிவரும் சமூக மற்றும் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆயினும், இதனால் ஊதியம், ஓய்வூதியங்கள், சமூக நிலைமைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான வீழ்ச்சியை தடுத்துநிறுத்த முடியவில்லை.

2003 வசந்த கால இயக்கத்தின் தோல்வியானது தொழிலாளர்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது முழு அடிப்படை தாக்குதல்களையும் தடையில்லாமல் முன்னெடுத்து செல்வதற்கு கதவை திறந்துவிட்டது. ஓய்வூதிய மசோதா நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை, வேலையின்மையால் நலன்கள் பெறும் உரிமை கடுமையாக குறைக்கப்பட்டமை, தொழிலாளர் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டமை போன்றவை முதலாளிகளை, தொழிலாளர்களது வாழ்க்கை தரங்களையும் வேலை பாதுகாப்பையும் குறைக்க வழிவகை செய்துள்ளது.

குறைந்த சம்பளம் அதிக நேரவேலையை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையெனில் அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்களை இடமாற்றம் செய்வதாக அச்சுறுத்தி பணியவைக்கும் அலைக்கு மத்தியில், இப்பொழு 35 மணிநேர வாரம் என்பது சிதைந்துகொண்டிருக்கிறது. அரசாங்கமும் MEDEF-ம் இதனை "அதிகம் சம்பாதிப்பதற்கு அதிக நேரம் வேலை" க்கான உரிமை என அழைக்கின்றன.

இலவச மருத்துவ வசதி பெறுவதை கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சர் Douste-Blazy (Philippe Douste-Blazy) ன் வேலைத்திட்டம் நன்கு போய்க்கொண்டிருக்கிறது, அதேபோல மருத்துமனையில் சேர்ப்பதற்கும் மருத்துவர்கள் வந்து பார்ப்பதற்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பெர்பன் இரண்டு (நீதி அமைச்சர் Dominique Perben), போலீசிற்கு விதிகளுக்கு கட்டுப்படாத அதிகாரங்களை அதிகரித்திருக்கிறார் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளை குறைத்திருக்கிறார்.

இந் நிகழ்வுப்போக்கு பிரான்சுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இன்று தொழிலாள வர்க்கம் தொடர்ந்த முறையில் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலுக்கு உட்படாத எந்த ஐரோப்பிய அல்லது வேறு முதலாளித்துவ நாடுகளோ கிடையாது.

இத்தாக்குதல்களுக்கு பரந்த மக்களின் எதிர்ப்பு தேவையாக இருக்கும் அதேவேளை, அவை வரவேற்கத்தக்கவையே என்றாலும், முன் எப்போதை காட்டிலும், இப்பொழுது வெற்றிகரமாய் செயற்படக்கூடிய அரசியல் முன்னோக்கு பற்றிய கேள்வி எழுந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளின் அனுபவங்களில் ஒரு பெரிய படிப்பினை பெறப்படவேண்டும் என்றால், அது, இடது என்று அழைக்கப்படும் கட்சிகள் அல்லது அமைப்புக்கள் எவையும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கவில்லை என்பதேயாகும்

சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும்

மித்திரோன் இன் 16 ஆண்டுக்கால ஆட்சியின் போதும், ஜொஸ்பனுடைய ஐந்தாண்டுகால பிரதம மந்திரி ஆட்சியின் கீழும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை செயல்படுத்துவதற்கான கருவிகளாக சோசலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் செயல்பட்டு வந்திருக்கின்றன.

அவர்களின் சமூக சீர்திருத்தவாத வேலைத்திட்டம், பிரெஞ்சு தேசிய அரசின் எல்லைக்குள்ளேயே படிப்படியாக கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களினால், முதலாளித்துவ சொத்துடைமையின் அஸ்திவாரங்களை முற்றிலும் தொடாமல் பாதுகாப்பாக விட்டு வைக்கப்பட்டதானது, உலக உற்பத்தி சக்திகளின் விரைவான பூகோளமயமாக்கலுடன் முரண்படும் தேசிய அரசு அமைப்புமுறை மற்றும் பெரு வணிகர்களது நெருக்கடிக்கு தொழிலாளர்கள் விலை கொடுக்கச்செய்வதை நோக்கமாக கொண்டிருக்கும் சர்வதேச நவீன தாராளவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கு திராணியற்றது என்பதை நிரூபித்தது.

அது உண்மையில் முதலாவது பாதிப்புக்களில் ஒன்றாக இருந்தது: பதவி ஏற்ற 18 மாதங்களுக்கு பின்னரே பிரதம மந்திரி Mauroy "கெடுபிடிகளுக்கு" மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகளின் மேலான தாக்குதல்களுக்கு ஆதரவாக இருந்ததில் காட்டப்பட்டது.

தொழிற்சங்கங்கள்

தொழிற்சங்கங்கள் அளித்த எதிர்ப்புக்களின் சிதறடிக்கப்பட்ட தன்மையானது, அரசாங்கத்திற்கு கொடுக்கும் எந்த தீவிர சவாலையும் தடுத்துவிட வேண்டும் என்ற அவற்றின் உறுதிப்பாட்டைத்தான் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. உண்மையில், தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த தொடர்ச்சியான ஒரு நாள் வேலைநிறுத்தங்கள், அரசாங்கத்தின் சமூகசேவைகள் அழிப்பு, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் அழிப்பு இவற்றிற்கு எந்தவித எதிர்ப்பின் பரந்த சமூக இயக்கத்தையும் முன்கூட்டியே தாக்கி தவிர்ப்பதற்கு வடிவமைக்கப்பட்டு இருந்தன.

இது தொழிற்சங்கங்களின் தேசிய முன்னோக்கின் வெளிப்பாடுதான்: பிரெஞ்சு தொழில்துறை அதன் சர்வதேச போட்டியாளர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில்தான் பிரெஞ்சு தொழிலாளர்களின் பாதுகாப்பு அமைந்துள்ளது என்பதுதான் அந்த முன்னோக்கு. இந்த நிலைப்பாட்டிலிருந்து, பிரான்சின் வணிகமோ அல்லது இதுகாறும் உள்ள அரசியல் நிலைப்பாட்டையோ, தீவிர பாதிப்பிற்கு உட்படுத்தும் எந்தச் செயலையும் அவர்கள் தவிர்க்க விழைகின்றனர்.

MEDEF என்னும் பிரான்சின் முதலாளிகள் கூட்டமைப்பும், அரசாங்கமும் தொழிற்சங்கங்களிடம் இப்பொழுது கோருவதெல்லாம் முழுமையாக அடிபணிந்து நிற்க வேண்டும் என்பதுதான்; இதற்கு தொழிற்சங்கங்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுத்து வருகின்றன. அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்புக்கள் அனைத்தையும் அவர்கள் ஒதுக்கி, ஓரம் கட்டுவதோடன்றி, தொழிலாளர்கள்மீது புதுசுற்று தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்வதில் அரசாங்கத்தோடும் முதலாளிகளோடும் ஒத்துழைத்து வருகின்றனர்.

பிரதான "இடது" தொழிற்சங்க அமைப்புக்களான CGT, FO ஒரு பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதை வெளிப்படையாக எதிர்க்கின்றன, மே 13 உச்சக்கட்டத்திற்குப் பின்னர், ஓய்வூதியங்களை பாதுகாப்பதில் 2003-ன் பரந்த வேலைநிறுத்த இயக்கத்தின் மைய கோரிக்கையாக அது இருந்தது, அப்படிப்பட்ட வேலைநிறுத்தம் அரசாங்கத்தின் அரசியல் சட்டரீதியான தன்மையை கீழறுப்பதில் சம்பந்தப்படும் என்ற அடிப்படையில் அதனை எதிர்க்கின்றன.

அப்படிப்பட்ட இயக்கம் அரசாங்கத்திற்கும் அதன் நவீன தாராளவாத வேலைத்திட்டத்திற்கும் ஒரு அரசியல் சவாலாக அபிவிருந்தி அடைந்துவிடாமல் தடுப்பதற்கு அவர்கள் விழைந்தனர். ஜொஸ்பனின் பன்மை இடது அரசாங்கம் தயாரித்திருந்த அதே ஓய்வூதிய சீர்திருத்தங்களைத்தான் ரஃபரன் இப்பொழுது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

CFTC, CGT தொழிற்சங்கங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவர் மிசேல் காம்டெசு தலைமையில் நிறுவப்பட்டுள்ள சார்கோசியின் சிந்தனைக் குழுவில் ஒத்துழைத்தன; இக் குழு பூகோளமயமாக்கலை எதிர்கொள்கையில், கூடுதலான நெகிழ்ச்சித்தன்மை மற்றும் வேலைநிலைமைகள் பற்றிய ஒழுங்குமுறைகளை தளர்த்தல் அடிப்படையில் பிரெஞ்சு தொழிற்துறை தன்னுடைய 'போட்டித்தன்மையை' முன்னேற்றிக் கொள்ளுவதற்கு ஒரு திட்டத்தை உருவாக்கியது. சார்க்கோசியின் நித்திரைக்குப் போவதற்கு முன்னரான வாசிப்பாக இருந்தது!

இடது தீவிரவாதிகள் LCR - புரட்சி கம்யூனிஸ்ட் கழகம் மற்றும் LO - தொழிலாளர் போராட்டம்

சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் புரட்சியாளர்கள் என்று தம்மைக் காட்டிக் கொண்டாலும், இந்த அமைப்புக்கள் தொழிலாளர்களை பழைய, திவாலாகிப்போன அமைப்புக்களுடன் பிணைத்துப்போடவே விரும்புகின்றன. இவர்களுடைய தர்க்கத்தின்படி, தேவைப்படுவது எல்லாம் போர்க்குணமிக்க பெரிய தொழிற்சங்கப் போராட்டங்கள்தான்.

இதன் உட்குறிப்பானது, முதலாளித்துவ ஆட்சிக்கு சவால் விடாமல் அரசாங்கத்திற்கு வேறு கொள்கையை ஏற்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான். இவை தொழிலாளர்களை குறைகூறுவதில் முடிகின்றன மற்றும் தோல்விகளுக்கு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கொள்கைகளையும், காட்டிக் கொடுப்புக்களையும் சுட்டிக்காட்டுவதில்லை.

LCR திவாலாகிப்போன ஸ்ராலினிச, சோசலிச அமைப்புக்களின் மிச்சசொச்சங்களை ஒரு புதுவகையிலான சீர்திருத்தவாத "இடது" என்ற அமைப்பிற்குள் ஒட்டுப்போட்டு தைத்துக் கொண்டுவரவேண்டும் என்று முயற்சி செய்கிறது; LO எதுவும் நடைமுறைப்படுத்தமுடியாது என்பதை விளக்குவதற்கு ஒன்றன்பின் ஒன்றாக காரணங்களை கூறுவதைத்தான் அபிவிருத்தி செய்துவருகிறது.

2002ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றில், அனைத்து "இடது" அமைப்புக்களின் முன்னோக்கின் அடிப்படை ஒற்றுமையானது, முழு உருவகமாக திரண்டு நின்றது; அப்பொழுது இவை அனைத்தும் பிரெஞ்சு குடியரசினை, அதாவது பிரான்சின் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் அமைப்பினை பாதுகாப்பதற்கு, சிராக்கிற்கு பின்னால் அணிவகுத்து நின்றன.

அரசியல் ரீதியாக பேசினால், அவர்கள் வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு, அவர்கள் அனைவருமே பொறுப்பாவர். அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தினை நிலை நாட்டக்கூடிய, உலக சோசலிச வலைத் தளத்தினால் எழுப்பப்பட்ட தேர்தலை புறக்கணிப்பதற்கான கோரிக்கையை நிராகரித்தனர்.

புதிய நோக்குநிலை

தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக வெற்றிகளின் பாதுகாப்புக்கு இந்த பழைய அமைப்புக்களில் இருந்து அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் முறித்துக் கொள்வது அவசியமானதாக இருக்கிறது. நவீன உலகின் யதார்த்தங்களை --தேசிய அடிப்படையிலான அனைத்து வேலைத்திட்டங்களையும் கீழறுத்திருக்கும், முன்னென்றும் இருந்திரா வகையில் உற்பத்தியும் நிதியும் பூகோளமயமாகியிருத்தலை, மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடி ஆகியவற்றை-- கணக்கில் எடுத்துக்கொண்ட ஒரு புதிய நோக்குநிலையை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நெருக்கடியானது இராணுவவாத வெடிப்பில் மிகவும் அச்சுறுத்தும் வெளிப்பாட்டை கொண்டுள்ளது. இந்த நோக்குநிலையின் மைய அச்சாக, முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் மற்றும் போர் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு பொதுப்போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியமாக அவசியம் இருக்க வேண்டும்.

உற்பத்தியின் பூகோளமயமாக்கல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, தேசிய எல்லைகளை பொருளாதார ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அதிகரித்த அளவில் காலத்திற்கு ஒவ்வாததாக ஆக்கிவிட்டன. முன்னணி முதலாளித்துவ நாடான அமெரிக்கா போருக்கு பிந்தைய முதல் இரு தசாப்தங்களில் அனுபவித்த பூகோள மேலாதிக்கத்தை இழந்து, வளங்களுக்காக, சிறப்பாக மிக மூலோபாய முக்கியத்துவம் கொண்ட வளங்களுள் ஒன்றான-எண்ணெய், எரிவாயு மற்றும் தண்ணீர் ஆகிய வளங்களை பெறுவதற்காக பலருடன் புதிய போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்துள்ள நிலைமையின் கீழ், உலக உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நிதி நாடுகடந்த நிறுவனங்களால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றன.

தன்னுடைய மிகப்பெரிய இராணுவ மேலாண்மையை பயன்படுத்தி, அமெரிக்க முதலாளித்துவம் தன்னுடைய பொருளாதார சரிவையையும், அதையொட்டி விளைந்துள்ள பேரழிவை தரக்கூடிய வர்த்தக பற்றாக்குறை மற்றும், செலுத்துகை சமநிலை பற்றாக்குறைகளை கடக்க முற்படுகிறது. வர்த்தக, பொருளாதார போட்டியானது இராணுவ வலிமையை பயன்படுத்தித்தான் முடிவை காணமுடியும் என்ற நிலைக்கு இப்பொழுது உயர்ந்துள்ளது. எனவே அமெரிக்காவின் புதிய காலனித்துவ படையெடுப்பு மற்றும் மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க பகுதிகளை "விடுவித்தல்" என்ற செயல்திட்டம், அந்நாட்டு முழு அரசியல் அமைப்பு முறையாலும் ஆதரிக்கப்படுகிறது.

உலகின் வளங்களுக்காக, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவங்களும் தவிர்க்கமுடியாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தீவிரப் போட்டியில் முன்னொருபோதும் இல்லாவகையில் இழுக்கப்பட்டுள்ளன; மேலும் அவை நலன்புரி அரசை தகர்ப்பதன் மூலமும், முக்கியமாக உழைப்பு செலவினங்களை குறைப்பதன் மூலமும் தங்களுடைய பொருளாதாரத்தை போட்டித்திறனுள்ளதாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன

ஜொஸ்பனுடைய பன்மை இடது அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது (தனியார்மயமாக்கல், தேர்தல்களுக்கு சற்று முன்னர் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான பார்சிலோனாவில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வாக்களிப்பு) சிராக்கும், ரஃபரனும் அதை வெறுமனே தொடர்ந்துதான் வருகின்றனர்; இது ஷ்ரோடரின் பன்மை இடது சிவப்பு - பசுமை கூட்டணி, முந்தைய ஹெல்மூட் கோலினுடைய வலதுசாரி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தவதை போல் மற்றும் இங்கிலாந்தில் மார்க்கரெட் தாட்சர் மற்றும் ஜோன் மேஜருடைய பழமைவாத அரசாங்கங்களின் கொள்கையை, தொழிற் கட்சியின் டோனி பிளேயர் பின்பற்றுவது போல்தான் உள்ளது.

இந்த பழைய கட்சிகளில் இருந்து தொழிலாளர்கள் உடைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல, பழைய தேசிய சீர்திருத்தவாத எண்ணப்பாடுகள் மற்றும் அந்த வகையான பார்வைகளில் இருந்தும் முறித்துக்கொள்ள வேண்டும். 80 களுக்கு பின்னர் போர்க்குணமிக்க தொழிலாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒதுக்கி, தற்காலிக "சுயநிர்வாக" முறையிலான வேலைநிறுத்த குழுக்களை அமைத்து, 'இறைமை' பெற்ற பரந்த கூட்டங்களை நடத்தி, தொழிற்சங்க தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்கள் மூலம் அரசாங்கத்திடம் இருந்து சலுகைகள் பெறும் அனுபவங்களும், எப்போதும் தோல்வியில்தான் முடிவடைந்துள்ளன.

இந்தக் குழுக்களும் மக்கள் மன்றங்களும், அவர்களின் உள்ளார்ந்த ஊகங்களின் காரணமாக, ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் இடது தீவிர LCR, LO, PT (தொழிலாளர் கட்சி) என்ற அமைப்புக்களின் முகவாண்மைகள் மற்றும் அவர்கள் ஆதிக்கம் செய்யும் கீழ்மட்ட உறுப்பினர்கள் மூலம் தாங்கள் முதலில் எவர்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று காட்டிக் கொண்டார்களோ, அதே தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இன்னும் இருந்து வருகின்றனர்.

இதுதான் யூப்பே அரசாங்கத்திற்கெதிராக நடந்த 1995ம் ஆண்டு இயக்கத்தின் படிப்பினை ஆகும்; அதில் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்திடம் கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் வேலைநிறுத்தத்தை முடித்துக் கொண்டனர்; அது தொடர்ந்து தனது பணிகளை தொடர அதிகாரத்தில் விட்டுவைக்கப்பட்டது. 2003ம் ஆண்டின் அனுபவமும் இதேபோன்று இருந்தாலும், இன்னும் கூடுதலான பேரழிவு விளைவுகளைத்தான் தந்தன.

ஒரு குறிப்பிட்டதுறை தொழிலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கோரிக்கைகளின் மீது தங்களின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, எஞ்சியிருக்கும் தங்களது சமூக நலன்களை காப்பது கூட இயலாமற் போய்விட்டது என்பதை தொழிலாளர்கள் கட்டாயம் உணரவேண்டும். அவர்களை எதிர்கொண்டுள்ள நெருக்கடி உலக முதலாளித்துவம்தன்னின் நெருக்கடி மற்றும் அது தளமாக கொண்டுள்ள, காலம் கடந்துவிட்ட தேசிய-அரசு முறையின் நெருக்கடி ஆகும். அது தேசிய-அரசு முறை எனும் தளைகளுக்கு எதிரான உலகின் உற்பத்தி சக்திகளின் கலகம் ஆகும், அதுதான் முதலாளித்துவத்தின் நெருக்கடியை இயக்குகிறது.

தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச வர்க்கம், அது உலகின் மிகச் சக்திவாய்ந்த உற்பத்தி சக்திகளுடன் மிக நெருக்கமாக பிணைந்துள்ள வர்க்கமாகும். தன்னுடைய சுயாதீனமான அரசியல் நலன்களுக்கு, ஓர் ஐக்கியப்பட்ட சர்வதேச சக்தியாக போராடுவதன் மூலம் மட்டுமே, இந்த பூகோளத்தின் மீது முதலாளித்துவம் கொண்டுள்ள பிடியை உடைக்க முடியும் மற்றும் இப்பொழுது இருக்கும் அமைப்பு முறையில் உள்ள மிகக் கொழுத்த கோடீசுவரர்களான சிறு தட்டினரின் செல்வக்குவிப்பை பூர்த்தி செய்வதற்காக அல்லாமல், மனிதகுலத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி சக்திகளை விடுவிக்க முடியும். ஒரு புதிய, அறிவார்ந்த முறையில் ஒழுங்கமைக்கப்படும் உலக சோசலிசப் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கான அத்தகைய சர்வதேச முன்னோக்குத்தான், தொழிலாளர்களின் எதிர்கால போராட்டங்களுக்கான அடிப்படையை கட்டாயம் அமைக்கும்.

முதலாளித்துவம் தன்னுடைய ஆட்சியை நிலைக்க வைத்துக் கொள்ளுவதற்காக முற்றிலும் நம்பியிருக்கும் அனைத்துக் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் --முதலாளித்துவ வர்க்க பழமைவாத கட்சிகள், பழைய இடது கட்சிகள் (சோசலிஸ்ட் கட்சி மற்றும், கம்யூனிஸ்ட் கட்சி)-- தொழிற்சங்கங்கள், LCR, LO மற்றும் PT-ல் உள்ள அவற்றின் தீவிர இடது வக்காலத்துவாங்கும் போக்கினர் ஆகியவற்றில் இருந்து முழுமையாக சுயாதீனமாக, தொழிலாளர்களின் நலன்களை காக்கக் கூடிய தலைமையை நிறுவுவதற்கே, இன்று தொழிலாளர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அத்தகைய கட்சியானது, தேசியம் அல்லது யூரோ சோவினிசம் (தீவிரப்பற்று) ஆகியவற்றால் மாசுபடுத்தப்படாத தன்மையை கொண்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கட்சியாக இருக்க வேண்டும். அது, உலக ஏகாதிபத்தியத்தின் ஒரு பிரிவு மற்றொரு பிரிவை தாக்குவதை ஆதரிக்கும் ATTAC போன்ற, மற்றும் இடதுசாரி கட்சிகளையும் திட்டவட்டமாக எதிர்க்க வேண்டும். இந்தக் காரணத்தை ஒட்டியே, ஐரோப்பிய ஒன்றியத்தை, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கருவியாகவும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தங்களது போட்டி அரசுகளுக்கு எதிரான பிரதான ஐரோப்பிய அரசுகளதும் பெருநிறுவனங்களதும் ஒரு கருவியாகவும் வரையறுக்கப்பட்டு, முன்மொழியப்பட்டுள்ள ஐரோப்பிய அரசியல் அமைப்பை நாம் எதிர்க்கிறோம். ஐரோப்பாவின் முற்போக்கான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஒருங்கிணைப்பு என்பது, தொழிலாள வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளின் வடிவில்தான் சாத்தியமாகும்.

ட்ரொட்ஸ்கிசம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சியான போராட்டத்தால் பிரதிபலிக்கப்படுகின்றவாறு மற்றும் அதன் நாளாந்த வலைத் தளமான உலக சோசலிச வலைத் தளமும் 1953ம் ஆண்டில் இருந்து மார்க்சிச கொள்கைகளை பேணி வளர்த்து வந்துள்ளன. இப்போராட்டத்தின் உள்ளடக்கமானது, தொழிலாளர்கள் இயக்கங்களில் உள்ள, சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தில் குறுக்கு வழி எடுக்க விரும்பும், எப்போதும் எளிதான விடைதர விழையும், அதனால் தோல்விகளுக்கு இட்டுச்செல்லும், அனைத்து வகையான சந்தர்ப்பவாத வடிவங்களுக்கும் எதிரானது ஆகும்.

உலக முதலாளித்துவத்தையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் பொறுத்தமட்டில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டிருப்பது என்ன என்ற ஒரு ஒத்திசைவான ஆய்வு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால்தான் வழங்கப்பட்டு வருகிறது. சோசலிச கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய தொழிலாளர் கட்சிகளை (நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சோசலிச சமத்துவக் கட்சிகள் பல நாடுகளில் ஏற்கனவே செயலாற்றிவருகின்றன) கட்டியமைக்கவேண்டிய மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் வட்டத்தை விரிவாக்க வேண்டிய உடனடிப் பணியில் எங்களுடன் இணையுமாறு உங்கள் அனைவரையும் அழைக்கிறோம். உலக சோசலிச வலைத் தளத்தை வாசிப்பதற்கும் அதனுடைய வளர்ச்சியில் பங்கு பெறுவதற்கும் உங்களை நாங்கள் அன்புடன் அழைக்கிறோம்.

Top of page