World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: house arrest proposals widely criticised

பிரிட்டன்: வீட்டுக் காவல் திட்டங்கள் பரந்த அளவில் விமர்சிக்கபப்டுகின்றன

By Richard Tyler
10 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

"ஒவ்வொரு குடிமகனும், குறைந்த பட்சம் கண்காணிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு குடிமகனும், அதிகாரபூர்வ பிரச்சாரத்தைக் கருத்திற்கொண்டு குறைந்தது 24 மணி நேரமாவது ஏனைய தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் வைக்கப்படலாம்." --1984, ஜோர்ஜ் ஓர்வெல்.

ஓர்வெல்லின் சர்வாதிகாரம் பற்றிய திகில் தரும் பார்வையில், குடி உரிமைகள் அகற்றப் படுவதற்கும், ஒவ்வொரு குடிமகனையும் கண்காணிப்பதற்காகவும், நிரந்தரமான போர்க்கால முறை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. 1984ல் கருத்தளவில் வெளிவந்த இந்நூலிற்குப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில், இதே நியாயப்படுத்தல்தான் ஒலிக்கிறது; "பயங்கரவாதத்தின்மீதான போர்" என்ற சொற்றொடரை, ஓர்வெல்லியன் ஓஷியனியாவிற்கும், யூரேசியா/ஈஸ்ட் ஏசியா இவற்றிற்கிடையேயான கற்பனை போருக்குப் பதிலாக பொருத்திப்பாருங்கள்.

ஜனவரி மாத முடிவில், உள்நாட்டு மந்திரியான சார்ல்ஸ் கிளார்க் "கட்டுப்பாட்டு ஆணைகளை" அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தார்: இதன்படி, பயங்கரவாதிகள் என்ற சந்தேகக் குற்றச்சாட்டிற்கு உட்பட்டவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறு பணிக்கப்படாலாம், மின்னணுமுறை கையாளப்பட்டு அவர்கள் எங்கு செல்கின்றனர் என்பது அறியப்படலாம், தொலைபேசிகள், இணையதள வசதிகள் அவர்கள் பயன்படுத்தத் தடைவிதிக்கப்படலாம், மற்றும் அவர்களுடன் மற்றவர்கள் பேசிக்கொள்ள முடியாத வகையில் கடுமையான தடைகள் கொண்டு வரப்படலாம். "நாம் ஒரு அவசரகால நிலைமையில் உள்ளோம்" என்று கூறி மக்களது அடிப்படைச் சுதந்திரங்கள் (Civil liberties) இவ்வாறு அகற்றப்பட்டதை கிளார்க் நியாயப்படுத்தியுள்ளார்.

"கட்டப்பாட்டு ஆணைகள்" ஓர் அரசியல்வாதியான உள்நாட்டு மந்திரியின் உதட்டசைவில் செயல்படுத்தப்படலாம்; பெயரளவு நீதித்துறைக்கட்டுப்பாட்டிற்குத்தான் இது உட்படும். நிறப் பாரபட்சமுடைய தென்னாப்பிரிக்க ஆட்சியின் இனப்பிரிவினை முறையை எதிர்த்தவர்களைத் தனிமைப்படுத்தும் வகையில் இயற்றப்பட்டிருந்த, இழிநிலையான "தடை ஆணைகளுடன்" இணையும் பல பொது விடையங்களைத்தான் இந்த ஆணைத்திட்டங்களும் கொண்டுள்ளன.

"கட்டுப்பாட்டு ஆணைகள்" பயன்பாடு இன்னும் பரந்த முறையியில் சந்தேகப்படத்தக்க சாத்தியங்கள் உள்ளவர்கள்மீதும் பாய்ச்சப்படுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது என்ற கருத்து கிளார்க்கின் ஆலோசகர் ஸ்டீபென் மக்காபேயால் வெளிப்படுத்தப்பட்டது. இந்த தொழிற்கட்சி எம்.பி. Scotsman பத்திரிக்கைக்கு கூறுகையில் "உதாரணமாக இதனை விலங்குரிமை தீவிரப்போக்கினர் மற்றும் தீவிர வலதுசாரியினருக்கும் பயன்படுத்தலாம் என நாம் கருதமுடியும்" என்றார்.

புதிய தொழிற் கட்சியின் திட்டங்கள் மிகப் பரந்த முறையில் பெரிதும் எதிர்விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன.

சட்ட சங்கத்தின் தலைவரான எட்வர்ட் நால்லி, "எந்தக் குற்றம் சார்ந்த நடவடிக்கைக்கும் சான்று, ஆதாரம் இல்லாமல் மக்களை வீட்டுக் காவலில் வைக்கும் அதிகாரத் துஷ்பிரயோகம்தான் இது." என்று கூறியுள்ளார்.

"சந்தேகத்திற்குட்பட்ட குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்துவதையே தன் முதன்மையான தேர்வு என அரசாங்கம் கூறுகிறது. தனிமனிதர்கள் அவர்களது சுதந்திரத்தை இழப்பதனை முகம்கொடுக்கையில் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு தேர்வும் அதுவாகவே இருக்கமுடியும்" என்று நால்லி குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் குழுக்களுள் ஒன்றான Liberty சந்தேகத்திற்குரியவர்கள் மீது விசாரணை நடத்தப்படவேண்டுமே ஒழிய, அவர்கள் "கட்டுப்பாட்டு ஆணைகளை" எதிர்கொள்ளக் கூடாது; இந்த ஆணைகள் மிகக் குறைந்த சான்று இருந்தாலும் அமுல் படுத்தப்படலாம். "இந்தப் புதிய ஆணைகளுக்கும் மற்றும் அவை ஒவ்வொரு பிரிட்டிஷ் குடிமகனுக்கும் விரிவாக்கப்படும் வகையில் மேற்குள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் மனித உரிமைரீதியில் கடுமையான கண்டனங்கள் உள்ளன" என்று லிபர்ட்டியின் பிரதிநிதி கூறினார்.

முக்கிய வழக்கறிஞரான இயன் மக்டோனல்ட், Q.C. கூறுகையில்; "மக்களை வீட்டுக் காவலிலோ சிறையிலோ வைத்தால் முடிவில் அவர்கள் நிரபராதிகள் என உண்மையிலேயே கணிக்கப்படவேண்டும் இதனை நான் ஒரு அடிப்படைக் கோட்பாடாக கருதுகின்றேன்." என்றார்.

Amnesty International அமைப்பின் UK பிரிவு இயக்குனரான கேட்த் அலன் "நீதிமன்றங்களை ஒதுக்கிவிட்டுத் தன்வழியில் செல்லும் வகையில் அரசாங்கம் இப்போதும் இரகசியச் சான்றுகளின் பேரில் மக்களைக் கைது செய்கிறது என்றும் ஆக இன்று மக்கள் பெல்மார்ஷ் சிறையில் இல்லாமல் இனி தங்களுடைய வீடுகளிலேயே அடைந்திருப்பர்" என்று கூறினார்.

"அவர் எப்படிக் கூறினாலும், உள்நாட்டு மந்திரி, இங்கிலாந்துக் குடிமக்கள் உட்பட, இங்கிலாந்தில் இருக்கும் எவரையும் எந்தக் குற்றச்சாட்டும், விசாரணையும் இல்லாமலும், இரகசியச்சாட்சியத்தின் அடிப்படையில், வீட்டுக்காவலில் வைக்கும் உரிமையைத் தனக்கே கொடுத்துக் கொண்டுள்ளார்." என்று அலன் குறிப்பிட்டார்.

"கட்டுப்பாட்டு ஆணைகள்" பற்றிய எதிர்விமர்சனங்கள் லேபர் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சிகளான கன்சர்வேடிவ், லிபரல் டெமக்ராட்டுக்கள் உறுப்பினர்களிடம் இருந்தும் வந்துள்ளன. டோரித் தலைவர் மைக்கேல் ஹோவர்ட் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்திற்கு உரியவர்களைக் காலவரையின்றி வீட்டுக் காவலில் வைக்க அரசாங்கம் கருதும் திட்டங்களை கன்சர்வேடிவ்கள் எதிர்ப்பர் என்று கூறினார். தொலைப்பேசி ஒற்று முறை, போன்ற இரகசிய வழிவகைகள், "தடுத்துக் கேட்கப்படும் சான்றுகள்" என அழைக்கப்படுபவை நீதி மன்றத்தில் ஏற்கப்படலாம் என்ற வகையில் சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும் என்றும் அவர் கூறினார். தற்பொழுது நீதிமன்றத்தில் ஏற்கப்படாத நிலையில் இவை ஒரு சில மேலை நாடுகளில்தான் உள்ளது. இங்கிலாந்தும் அதில் ஒன்றாகும்.

மெட்ரோபோலிடன் போலீசின் புதிய ஆணையாளர் பிரிட்டனின் மிக மூத்த போலீஸ் அதிகாரியான சர் இயன் பிளேர் தொலைபேசி ஒற்றுமுறைச் சான்று ஏற்கப்படவேண்டும் என்றும், இது ஏற்கப்பட்டால் போலீஸ் வேலை "பெரிதும் எளிதாகும்" என்றும் ஊடகத்திடம் கூறினார்.

இதுவரை தொலைபேசி ஒற்று முறையை சட்ட பூர்வமாக ஏற்பதை எதிர்த்த கிளார்க்கின் வாதம்: "தனிநபர்களுக்கு எதிராக ஒற்று முறையில் ஒரு சிறிய பகுதிதான் இது; சொல்லப்போனால், சில நேரங்களில், மிகச் சிறிய பகுதிதான் இது." மேலும் அரசாங்கம் அத்தகைய சான்றுகளை ஏற்பதைப் பற்றி கவலை கொண்டுள்ளது; ஏனென்றால் நீதிமன்றத்தில் தன்னுடைய குடிமக்கள் மீது இத்தகைய இரகசிய வழிகளில், அரசாங்கமே ஒற்று அறிந்து சான்றுகள் கொடுக்கப்படுவது அம்பலமாகிவிடும்.

பிரதம மந்திரி டோனி பிளேர் ஹோவர்டைச் சந்திக்க ஒப்புக் கொண்டு, எதிர்க்கட்சிகள் கடுமையான திட்டமிடப்பட்ட குற்றமும் போலீஸ் நடவடிக்கையும் (Serious Organised Crime and Police Bill) என்ற சட்டவரைவிற்குத் திருத்தம் எதிர்க்கட்சிகள் கொண்டுவருவதற்கு முன்பாக எவ்வாறு ஒரு "ஒருமித்த கருத்து" அடையப்படலாம் என விவாதிக்க உள்ளார்.

"கட்டுப்பாட்டு ஆணைகள்" திட்டம் பற்றிய அறிவிப்பில் உள்ள பீதி நிறைந்த சூழ்நிலை கடந்தவாரம் அதிகமாக இருந்தது; கடந்த வாரம் மற்றொரு சந்தேகத்துக்குரிய அயல்நாட்டு "பயங்கரவாதி" முன்னர் 2001 பயங்கரவாதக் குற்றம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின்படி (Anti-terrorism Crime and Security Act -ATCSA) குற்றம் சாட்டப்பட்டவர் எந்த நிபந்தனையும் இன்றிக் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டதை அடுத்து இப்பயம் இருந்தது.

டிசம்பர் 2004ல் பிரபுக்கள் சபை (Law Lords) வெளிநாட்டை சேர்ந்த "பயங்கரவாத சந்தேகத்திற்குட்பட்டவர்கள்" விசாரணையின்றி காலவரையின்றி காவலில் வைக்கப்படுவது சட்டவிரோதமானது என்று ஆணையிட்டுள்ளது. கிட்டத்தட்ட 14 நபர்கள் தொடக்கத்தில் ATCSA படி காவலில் அடைக்கப்பட்டனர்; பிரிட்டனின் குவாண்டநாமோ என்று இகழப்படும் பெல்மார்ஷ் சிறையில் பெரும்பாலானவர்கள் அடைக்கப்பட்டனர். இவர்கள் இரகசிய ஆதாரங்களின் அடிப்படையில் பிடிக்கப்பட்டு, பகிரங்கமாக நீதி மன்றத்தில் தங்களைக் காத்துக்கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்.

இயன் மக்டோனல்ட், QC, பெல்மார்ஷ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கான சட்ட ஆலோசனைக் குழுவில் இருந்து கடந்த ஆண்டு ராஜிநாமா செய்தவர், கைதியை விடுதலை செய்வது, "C" எனக் கூறப்படுதவது பல முக்கிய அக்கறைகளைக் கொண்டுள்ளது என்றார். "ஒரு நிமிஷம் அவர்கள் ஆபத்தானவர்கள் என்று கருதப்படுகின்றனர்: மறுவாரம் அவ்வாறு இல்லை எனக் கூறப்படுகின்றனர்." என்று அவர் BBC இடம் தெரிவித்தார்.

2001ம் ஆண்டுச் சட்டத்தின் கீழ் இப்பொழுது பிடித்துவைக்கப்பட்டுள்ள மூன்று பேர் கடுமையான ஜாமீன் விதிகளை, கிட்டத்தட்ட வீட்டுக்காவலுக்கு ஒப்பனானதை ஏற்று வெளிவரத்தயாராக இல்லை. அவர்களும் தொலைபேசித் தொடர்பு கொள்ளுவதற்கும், நண்பர்களை வரவேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

பெப்ருவரி 7ம் தேதி திங்கட்கிழமையன்று அரசாங்கம் மற்றொரு பின்னடைவைக் கண்டது; அதன் சட்டபூர்வமான முயற்சியில் ஒரு பயங்கரவாதச் சந்தேகத்திற்குட்பட்டவரைச் சிறையில் தள்ளும் முயற்சி தோல்வியடைந்தது.

G என்னும் ஒரு 35-வயதான அல்ஜீரியர், மன நோய் வல்லுனர்களின் பரிந்துரையின் பேரில் பெல்மார்ஷில் இருந்து ஏப்ரல் மாதம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தார்; தன்னுடைய இலண்டன் வீட்டிற்கு இரண்டு "அனுமதி பெறாத" பார்வையாளர்களை வரவேற்று நிபந்தனைகளை முறித்ததற்காக அவர் மீது உள்துறை மந்திரி குற்றம் சாட்டினார். இதை விசாரித்த இலண்டனில் உள்ள ஓர் இரகசிய நீதிமன்றம் இதைத் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றத்தில் G உடைய வக்கீல் காரெத் பீயர்ஸ் மந்திரிகள் நடந்து கொண்ட முறை அவருடைய கட்சிக்காரருக்கு "மனரீதியில் சித்திரவதையாகும்" என்ற குற்றச் சாட்டைக் கூறியிருந்தார். சிறப்புக் குடியேற்ற முறையீட்டுக் குழு, உள்துறை மந்திரி தன்னுடைய வழக்கை நிரூபிக்கவில்லை என்றும் "ஜாமீனைத் தள்ளுபடி செய்வதற்கு, அது எந்த நடவடிக்கையும் எடுக்காது" என்றும் கூறிவிட்டது.

2001ம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் உடன்பாட்டின் சில பிரிவுகள் பிரட்டனுக்குப் பொருந்ததாது என்று நினைக்கப்பட்ட அளவில், ஒரு "கருத்தளவிலான அவசரகால நிலை" விதிக்கப்பட்டிருந்தது: இதன்படி அயல்நாட்டு "பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படுவர்கள்" காலவரையின்றி, நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படாமல் சிறையில் அடைக்கப்படலாம் என்று இருந்தது.

ஓஷியனியாவைப் போலவே பிரிட்டனும் இப்பொழுது நிரந்தரமான அவசரகாலத்தில் இருப்பது தெரிகின்றது.

Top of page