World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Mass strikes by French public sector workers

பிரெஞ்சு பொதுத்துறை தொழிலாளர்கள் நடத்தும் பரந்த அளவிலான வேலை நிறுத்தங்கள்

By our correspondents
22 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சிராக் ஆட்சியின் கொள்கைகள் மீது பெருகி வருகின்ற ஆத்திரத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் இந்த வாரம் பிரான்ஸ் முழுவதிலும் 5 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுத்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையில் இறங்கினர் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். பொதுத்துறை சேவைகள், வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய விகிதங்களை தற்காத்து நிற்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், மருத்துவமனை, அஞ்சல்துறை, மின்சாரம் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள் பாரிஸ் நகரத்தில் அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் ஒன்று: "தரமான பொது சேவை கிடைக்க வேண்டுமென்றால், ஊதியத்தை உயர்த்துங்கள்" என்ற வாசகம் அடங்கியிருந்தது.

பிரான்சின் மாகாண நகரங்களிலும், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. Clermont - Ferrand-ல் 5000-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், Bank of France ஊழியர்கள் மருத்துவமனை அலுவலர், மற்றும் ஆசிரியர்கள் தெருக்களில் அணிவகுத்து வந்தனர்.

3,590 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் திட்டங்களுக்கு எதிராக ரயில்வே தொழிலாளர்கள், எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், 2000 செப்டம்பர் முதல் 12,000 ரயில்வே தொழிலாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டு விடுவர். இதனுடைய விளைவு மிச்சமிருக்கும் ரயில்வே தொழிலாளர்களுக்கு வேலைப் பளுவும் நெருக்கடிகளும் அதிகரிக்கும் மற்றும் சேவையின் தரமும் குறையும். 2004-ல் 3,300 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். 2003-ல் ஏற்கனவே 1,300 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டிருந்தனர். SNCF-ல் மேலும் தொழில் தாவாக்கள் உருவானதை தடுக்கும் வகையில் ரயில்வே ஊழியர்கள் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருக்கின்றனர்.

தற்போதைய வேலைநிறுத்தம் நடைபெற்ற தொடக்க நாட்களில் நகரங்களுக்கிடையில் திட்டமிட்டபடி 4-ல் ஒரு ரயில்தான் ஓடிற்று, 40 சதவீத ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2004 மே, மாதத்தில் நடைபெற்ற கடைசி நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் 25 சதவீத தொழிலாளர்கள் பங்கெடுத்துக்கொண்டனர். ஜனவரி 18 காலையில் இந்த வேலை நிறுத்தத்தால் அட்டவணைப்படி செல்ல வேண்டிய பல ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. TVG ரயில்கள் மூன்றிற்கு ஒன்றுதான் ஓடின. Thalys ரயில்கள் எட்டில் ஒன்றுதான் செல்ல முடிந்தது. Corail தேசிய ரயில்வே சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பிரான்ஸ் - இத்தாலி Artesia ரயில் சேவையில் மூன்றில் ஒரு ரயில்தான் ஓடியது. பிரெஞ்சு சுவிட்சர்லாந்து Lyria சேவையில் 5 ரயில்களில் 3 தான் ஓடின. ஜனவரி 19-ல் பிரான்ஸ் ரயில் நிறுவனமான SNCF, உயர்வேக TGV ரயில்களில் மூன்றில் இரு பகுதியும், நகரங்களுக்கிடையில் ஒடுகின்ற ரயில்களில் 75 சதவீதமும், பாரிஸ் புறநகர் ரயில்களில் 80 சதவீதமும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தனியார்மயமாதலை எதிர்த்து வருகின்ற அஞ்சலக ஊழியர்கள் 300,000 பேர் மூன்று நாட்கள் கண்டனப் பேரணிகளை நடத்தினர். அரசாங்கமானது, தபால் பட்டுவாடாவில் தனியார் போட்டியை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது மற்றும் 10,000 முதல் 17,000 சிறிய அஞ்சல் அலுவலகங்களை மூடிவிட திட்டமிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிசில் ஜனவரி 18 பிற்பகலில் 700 பேர் கலந்து கொண்ட ஒரு பேரணி நடைபெற்றது. நாடாளுமன்ற கட்டத்திற்கு வெளியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர், அவற்றில் ஒன்று "பொது சேவையை வரவேற்கிறோம், தனியார்மயத்தை எதிர்க்கிறோம்" என்பது. Marseille, Nantes மற்றும் Saint - Brieuce, Orleans, Rennes, Lille மற்றும் Tours ஆகிய நகர்களிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. CGT(Confédération Générale du Travail), SUD, FO (Force Ouvrière), மற்றும் CFTC (Conf. Francaise des Travailleurs Chrétiens) ஆகிய தொழிற் சங்கங்களில் அஞ்சல் துறை ஊழியர்களில் 78 சதவீதம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர், அவை ஜனவரி 19 தேசிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. அஞ்சல் துறை தொழிற்சங்க மதிப்பீட்டின்படி அவர்களது உறுப்பினர்களில் 25 சதவீதம்பேர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

மின்சாரம் மற்றும் எரிவாயு ஊழியர்கள் ஜனவரி 19-ல் வேலை நிறுத்தம் செய்தனர். எரிபொருள் சேவைகளில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருவதை அவர்கள் எதிர்க்கின்றனர். தொழிற்சங்கங்களின் மதிப்பீட்டின்படி 2005-லிருந்து 2007 வரை 12,000 முதல் 15,000 வேலைகள் அழிக்கப்பட்டுவிடும். பெரும்பாலான ஊழியர்கள் இடம்பெற்றுள்ள CGT (FNME - CGT) சம்மேளனம் 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. FO தொழிற்சங்கம் தனது உறுப்பினர்களை 4 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

சக்தி தொழில்துறைகளில், வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் 30 முதல் 70 சதவீதமாக காணப்பட்டது. தேசிய மின்சார உற்பத்தியில் இந்த வேலை நிறுத்தத்தால் 10 சதவீதம் குறைக்கப்பட்டது. இதனால் நண்பகல் மின்சார உற்பத்தி சுமார் 10,000 மெஹாவாட்டாக குறைக்கப்பட்டது.

அன்றைய தினம் தொழில் மற்றும் நிதியமைச்சகத்தில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. அதில் 1000 மின்சாரம் மற்றும் எரிவாயு ஊழியர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். Lyon நகரில் மேலும் 170 ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டனர்.

ஜனவரி 18 நண்பகலில் பாரிசிலுள்ள தேசிய சட்டப்பேரவை அருகே நீதித்துறை ஊழியர்களும் அதிகாரிகளும் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டனர். ஜனவரி 19-ல் மாஜிஸ்திரேட்டுகளுக்கான தொழிற்சங்கம், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தது. "தீயவழிக்குத் திரும்புதல் எதிர்ப்பு சட்டம்" நீதிபதிகள் நியமனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்தும் பிரெஞ்சு சிறைச்சாலைகளின் நிலவரத்தை கண்டித்தும் பேரணி நடத்தினர். குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு தருவதில் சிறைச்சாலைகள் பங்களிப்பு செய்யவில்லை என்று அவர்கள் கூறினர்.

ஜனவரி 19-ல் பொது மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் ஊதிய உயர்வையும் பணி நிலை மேம்பாடுகளையும் கோரினர். சிவில் ஊழியர்கள், உளவியல் மருத்துவர்கள், விபத்து மற்றும் அவசர சேவைகளுக்காக பொது மருத்துவமனைகளில் பணிபுரிவோர் வேலை நிறுத்தம் செய்தனர், தங்களது ஊதியத்தை உயர்த்தவும் பணிப்பாதுகாப்பும் கோரினர்.

அரசாங்கம் திட்டமிட்டுள்ள 35 மணி நேர வாராந்திர வேலை சட்ட மாற்றங்களை கண்டித்து தொழிற்சங்கங்கள் பிப்ரவரி 5ல் நாடுதழுவிய கண்டன நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்திருப்பதால் கண்டன பேரணிகளின் வேகம் அதிகரிக்கவே செய்யும். யூரோ நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியமானது, பிரெஞ்சு அரசாங்கம் தனது பொது செலவினங்களையும் கடன் வாங்கும் வரம்புகளையும் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குகின்ற அளவிற்கு குறைத்துக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்திருப்பதை நிறைவேற்ற சிராக் ஆட்சி முயன்று வருகிறது. டாலருக்கு எதிராக யூரோ மதிப்பு உயரும்போது பிரான்சின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அந்த நேரத்தில் பிரான்சின் பெருவர்த்தக அமைப்புகள் தங்களது தொழிலாளர்களுக்கான செலவினங்களை மேலும் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகின்றன. சிராக் தற்போதுள்ள வாரத்திற்கு 35 மணி நேர வேலை என்றிருப்பதை நீடிக்க விரும்புகின்றார். இதன்மூலம் ஒரு புதிய "நீக்குப்போக்குள்ள" வேலை சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு விரும்புகிறார். அது ஊழியர்களை வேலை நீக்கம் செய்வதை எளிதாக்கும். சமூக நலத்திட்ட பயன்கள் கல்வி மற்றும் பொதுத்துறை பணிகள் அனைத்துமே இப்போது அச்சுறுத்தலில் உள்ளன.

Top of page