World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's tsunami aid: political interests not humanitarian concern

சீனாவின் சுனாமி உதவி: மனிதாபிமான கவலைகளால் அல்லாமல் அரசியல் நலன்களால் உருவானது

By John Chan
18 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜனவரி 6 ல் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஐ.நா ஆதரவிலான சுனாமி உச்சி மாநாட்டை ஒட்டி, பெய்ஜிங் அதிகாரத்துவம் மிகுந்த கவனத்துடன் உடனடியாக அந்தப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு எப்போதும் நடைபெற்றிராத அளவிற்கு மொத்தம் 83 மில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு உதவித் தொகைகளை அறிவித்தது.

சீன அரசாங்கம் ''உதவி தேவைப்படுவோருக்கு தனது அதிகாரத்தின் கீழ் முடிந்த உதவிகளை'' வழங்கும் என்று ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். சீனா இந்த பிராந்தியத்தில் ஒரு ''பொறுப்புள்ள'' அரசாங்கமாக உருவாகி வருகிறது என்பதற்கு ஒரு அடையாளம்தான் இந்த முடிவு என்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் பெருமையடித்துக் கொண்டன.

ஜகார்த்தா போய் சேர்ந்த பிரதமர் வென் ஜியாபோ வெளியிட்ட அறிவிப்பில்: "நான் இந்த முறை என்னோடு ஒரு பெரிய சகாக்களை அழைத்துக்கொண்டு வரவில்லை. ஆனால் என்னோடு 16 தொன் நிவாரணப் பொருட்களையும், சீன மக்களின் அன்பையும் கொண்டு வந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். பிரதமர் தன்னோடு வந்த தூதுக் குழுவினர் தங்களது, பயண மூட்டைகளை குறைத்துக் கொண்டு அதிக அளவில் உதவிப் பொருட்களை விமானத்தில் ஏற்றுவதற்கு வழி செய்ய வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாக, பத்திரிக்கைகளுக்கு தகவல்கள் கசிந்தன.

மாநாட்டில் உரையாற்றிய வென் ஜியாபோ, சீனக் கம்பெனிகள் சம்மந்தப்பட்டிருக்குமானால் உள்கட்டமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்த வட்டிக் கடன்கள் வழங்கப்படும் என அறிவித்தார். அவர் பாதிக்கப்பட்ட சீன சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் சுற்றுலா விடுதிகளை சீரமைக்க உறுதியளித்தார். இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 4.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். உறுதியளிக்கப்பட்டுள்ள உதவியின் பாதி இந்த மாத கடைசியில் கிடைக்கும் என்று வென் அறிவித்தார்.

சீன மக்கள் குடியரசின் 55 ஆண்டு கால வரலாற்றில்லாத அளவிற்கு மிகப்பெரிய உதவித்திட்டம் இது. இதற்கு முன்னர் இந்தோனேஷியா, வியட்நாம் மற்றும் அதேபோல பர்மாவிற்கு பெய்ஜிங் இருதரப்பு உதவிகளை வழங்கியுள்ளது. ஆனால், இப்போதுதான் முதல் தடவையாக ஒரு பெரிய நாடு கடந்த நிவாரண நடவடிக்கைகளில் அது கணிசமான பங்களிப்பு செய்திருக்கிறது.

அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இதர நாடுகளைப் போன்று உதவி செய்வதற்கு பெய்ஜிங் முடிவு செய்தது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களது நிலையைக் கண்டு கவலை கொண்ட உந்துதலால் அல்ல. மாறாக, பொருளாதார மற்றும் அரசியல் கருத்தில் கொண்டுதான் இந்த உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், சீனாவிற்கும் தைவானுக்குமிடையே செல்வாக்கை நிலைநாட்டுவதில் நடைபெற்று வருகின்ற போட்டி இதில் ஓர் காரணியாகும். துவக்கத்தில் 2.62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி தருவதாக உறுதியளித்திருந்த பெய்ஜிங், தைபே 5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு உதவி தருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து சங்கடத்திற்கு உள்ளானது. இரண்டு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு உதவி அறிவிப்புக்களை வெளியிட்டன. தைவான் தனது உதவித் தொகையை 50 மில்லியன் டாலர்களாக உயர்த்தியது.

தைவான் ஜகார்த்தா உச்சி மாநாட்டில் இடம் பெறக் கூடாது என்று சீனா வலியுறுத்திக் கூறியது. "ஒரே சீனா" கொள்கையை ஒட்டி பெய்ஜிங் இந்தத் தீவை சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கருதுகிறது. அதனை துரோகம் இழைத்துவிட்ட ஒரு மாகாணமாக நடத்துகிறது. 1972 ல் சீனாவுடன் அமெரிக்கா மீண்டும் சமரசம் செய்து கொண்ட பின்னர், கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தைவான் ஐ.நா உட்பட அனைத்துப் பெரிய சர்வதேச பகுதிகளினாலும் ஒதுக்கி வைக்கப்ட்டிருக்கிறது.

தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சீனா மற்றும் தைவான் ஆகிய இரண்டிற்கும் கணிசமான பொருளாதார நலன்கள் உள்ளன.

கடந்த தசாப்தங்களுக்கு மேலாக, குறிப்பாக இந்தியாவுடன் தைபே நெருக்கமான உறவுகளை வளர்த்து வருகிறது. 1995 க்கும் 2002 க்கும் இடைப்பட்ட காலத்தில் இருதரப்பு வர்த்தகம் திடீரென்று 33 சதவீதம் பெருகியுள்ளது. 2003 ல், அது 16 சதவீதம் உயர்ந்து 1.4 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இருந்து, 2004 ல் மேலும் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தைவான் முதலீடும் பெருகிக் கொண்டிருக்கிறது. 1996 ல் 22 மில்லியன் டாலர்களாக இருந்த தைவான் முதலீடுகள் 2002 ல் 74 மில்லியனாக உயர்ந்தது. 2002 அக்டோபரில், மேலும் தைவான் முதலீடுகளை குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் இதர பெரிய தொழிற்துறைகளில் ஊக்குவிப்பதற்காக இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

சீனா குறிப்பாக இந்தோனேஷியா தாய்லாந்து போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு விரிவான வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறது. கச்சாப் பொருட்களும், உபகரணங்களும் ஆசியாவின் பிற நாடுகளில் இருந்து சீனாவின் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு உற்பத்தி செய்து அங்கு அவை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி பொருட்களாக மாற்றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தாய்லாந்து, "கிழக்கு டெட்ரோய்ட்" என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் சீனாவில் உற்பத்தியாகும் கார்களுக்கு தேவைப்படும் பல பாகங்கள் தாய்லாந்தில் தயாரிக்கப்படுகின்றன.

சீனாவின் எண்ணெய், எரிவாயு தேவைகள் வளர்ந்து வருவது இதில் ஒரு கணிசமான பங்களிப்பு செய்து வருகிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னர், அரசிற்கு சொந்தமான சீன தேசிய கரையோர எண்ணெய் நிறுவனம் (CNOOC) இந்தோனேஷியாவில் 5 கரையோர எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிலையங்களை 585 மில்லியன் டாலரில் விலைக்கு வாங்கியது. சீனாவிற்கு வெளியில் CNOOC மேற்கொண்ட மிகப் பெரிய முதலீட்டு பேரம் இது. இதன் மூலம் இந்த சீனக் கம்பெனி இந்தோனேஷியாவில் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உயர்ந்துவிட்டது.

சுனாமி பாதிப்பு தொடர்பாக பெய்ஜிங் தெரிவித்துள்ள கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்திருக்கும் ஹோங்கோங்கிலுள்ள பேராசிரியர் ஜோசப் செங் சேனல் நியூஸ் ஆசியா வலைத் தளத்திற்கு பேட்டியளித்தபோது, "இதைத்தான் சீனா துல்லியமாக விரும்புகிறது. ஒரு பொறுப்பான பெரிய வல்லரசு என்று தனக்கு ஒரு மரியாதை வேண்டும் என்று விரும்புகிறது. ஒரு ஈகை குணமுள்ள வல்லரசாக, கடந்த இரண்டு, மூன்று வருடங்களில், சினாவின் வெளியுறவுக் கொள்கை அமைதியாக உயர்ந்துள்ளது. அதனுடைய உயர்வு பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தல் அல்ல என்று சீனாவின் வெளியுறவுக் கொள்கை வலியுறுத்தியுள்ளது. மற்றும் சீனாவின் செழிப்பே கூட இந்த பிராந்தியத்திற்கு செழிப்பு என்று பொருள்படும்" என்று விளக்கினார்.

இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதை உணர்ந்து, சீனா அதிவிரைவாக இந்தப் பேரழிவு தொடர்பான உதவிகளை மேற்கொண்டது. டிசம்பர் 27 அன்று சீனாவின் மாகாணங்களில் நிவாரணப் பொருட்களைத் திரட்டுவதற்கு முதல் பணிக்குழு அனுப்பப்பட்டது. டிசம்பர் 29 ல் முதல் நிவாரண உதவி இலங்கை சென்று சேர்ந்தது. ஜனவரி 1 ல் வென் ஜியாபோ பாதிக்கப்பட்ட நாடுகளின் தூதர்களை பெய்ஜிங்கில் சந்தித்தார். தேசிய பாதுகாப்பு அமைச்சகமும் மக்கள் விடுதலை இராணுவமும் பொது இராணுவ உதவித்துறையும் இதில் மையமாக செயல்பட்டன.

ஒரு அனுதாப அலை

உலகம் முழுவதிலும் உள்ள மற்ற நாடுகளைப் போன்று, பெய்ஜிங் தனது உதவியை அதிகரிப்பதில் மற்றொரு குறிப்பிடத்தக்க காரணி, சாதாரண உழைக்கும் மக்கள் காட்டிய ஆர்வமாகும்.

ஆண்டு நபர்வாரி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1,000 அமெரிக்க டாலர்களுக்கு சற்று அதிகமாக உள்ள ஒரு நாட்டில், தனிப்பட்டவர்கள் தந்துள்ள நன்கொடைகள் 18 மில்லியன் அமெரிக்க டாலர்களை தொட்டது. ஜனவரி 1 ல் 24 மணி நேர உடனடி தொலைபேசி தொடர்பு வசதிகளை துவக்கிய பின்னர், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வந்தன. நிதிகளை திரட்டுவதற்காக பல நகரங்களில் சுனாமி நன்கொடை வசூலிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டன.

மாதம் 2000 யென்னில் (241 அமெரிக்க டாலரில்) வாழ்ந்து கொண்டிருக்கும் 74 வயதான ஓய்வு பெற்ற யாங் ஷி என்பவர், தனது வீட்டிலிருந்து 2 மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து சீனா அறக்கட்டளை கூட்டமைப்பிற்கு வந்து 60 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கினார். "நானும் எனது மனைவியும் சுனாமி பாதிப்பிற்கு உள்ளானவர்களுக்கு உதவுவதற்கு நன்கொடை கொடுக்க முடிவு செய்தோம். எங்களது சமுதாயத்தில் நன்கொடை கொடுப்பதற்கு இடமில்லை. நான் நேற்று தொலைக்காட்சியில் இந்த அமைப்பு நன்கொடைகளை ஏற்றுக்கொள்கிறது என்பதை அறிந்ததும் இங்கு வந்திருக்கிறேன்" என்று ஜனவரி 5 ல் அவர் China Daily க்கு பேட்டியளித்தார்.

சீனாவின் மிகப்பெரிய நகரம் ஷாங்காய். அதில் ஜனவரி 4 வரை 3 மில்லியன் யென்கள் அல்லது 362,700 அமெரிக்க டாலர்கள் வந்திருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டவை தனிநபர்களிடமிருந்து வந்திருக்கிறது. ஷாங்காய் செஞ்சிலுவை சங்க நிர்வாகத் துணைத் தலைவர் ஷியாங் பான்ஜி "நகரின் பல்வேறு திசைகளிலிருந்து மக்கள் மிகவேகமாக திரண்டு வந்து உதவிகளை வழங்கினர்" என்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

சீனாவில் உள்ள புதிய செல்வந்தத் தட்டினரை விட சாதாரண மக்கள் தங்களது குறைந்த சேமிப்புகளில் இருந்து மிகத் தாராளமாக உதவிகளை வழங்கினர். கம்பெனிகளது நன்கொடை விதிவிலக்காகத்தான் அமைந்திருக்கிறது. சீனாவின் மிகப்பெரிய கம்யூட்டர் நிறுவனமான Lenovo அண்மையில் IBM ன் பெர்சனல் கம்யூட்டர் பிரிவை 1.75 பில்லியன் டாலர்களுக்கு விலைக்கு வாங்கியது. அந்த நிறுவனம் 500,000 டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான SOHO இந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக செஞ்சிலுவை சங்கத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில், அந்தக் கம்பெனியின் இரண்டு தலைமை நிர்வாகிகள் (CEOs) ஒரு மில்லியன் யென்களை நன்கொடையாக வழங்கினர். (120,000 அமெரிக்க டாலர்கள்)

தனிப்பட்டவர்கள் உதவி நிதி சேர்ப்பதை அனுமதிப்பதற்கு பெய்ஜிங் தயக்கம் காட்டி, 6 நாட்களுக்குப் பின்னர் தனியார் நன்கொடை வசூலுக்கு பச்சை கொடி காட்டியது. தங்களது கட்டுப்பாட்டிற்கு வெளியில் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், சாதாரண மக்கள் திரண்டு வரும்போது அரசியல் எதிர்ப்பிற்கு அது வழி செய்துவிடும் என்று சீன அதிகாரிகள் அஞ்சியுள்ளனர். ஆசியா முழுவதிலும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை எதிர்நோக்கியுள்ளது போன்ற சமூக நிலைமைதான் மிகப் பெரும்பாலான சீன மக்களிடமும் காணப்படுகின்றது.

சுனாமி பேரழிவிற்கு, பாசாங்கு போக்கைக்கொண்ட பெய்ஜிங் அதிகாரத்துவத்தை சேர்ந்தவர்களது அணுகுமுறையானது உள்நாட்டு சமூக சீரழிவுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அவர்கள் தினசரி மக்களை அடக்கி ஆட்சி செய்கின்றனர். தினசரி ஒரு டாலர் அல்லது இரண்டு டாலர் ஊதியத்திற்காக கோடிக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் இருந்து மில்லியன் கணக்கான மக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பல விவசாயிகள் திவாலாகிவிட்டனர். அல்லது நிலங்களை இழந்துவிட்டனர். அவர்கள் நகரங்களில் மிகவும் குறைந்த ஊதிய பணிகளை நாடி குடியேறிவிட்டனர். மில்லியன் கணக்கான குழந்தைகள், தங்களது பெற்றோர் கல்வி கற்பிக்க வசதியில்லாதவர்களாக இருக்கின்ற காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.

தொழிற்துறை விபத்துக்கள், குறிப்பாக சுரங்கங்களிலும் ஏற்றுமதி வளாகங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர்கள் பலியாகிறது அல்லது காயமடைகிறது. சுற்றுப்புற சூழல் சீனாவின் கிராமப் புறங்கள் முழுவதிலும் கடுமையாக தூய்மை கெட்டுப் போயிருப்பதால் பல ''புற்று நோய் கிராமங்கள்" உருவாகியுள்ளன. கட்டுமான நெறிப்படுத்தல்கள் சரியாக அமுல்படுத்தப்படாததால் பல கடுமையான தீ விபத்துக்களும், கட்டிடங்கள் பொறிந்து போவதும் நடந்துகொண்டிருக்கிறது. முறையான உதவியோ அல்லது உள்கட்டமைப்போ இல்லாததால் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகின்றனர்.

தனது போலீஸ்-அரசு ஒடுக்குமுறை மூலம் பரவலான அதிருப்தியையும் கண்டனங்களையும் ஒடுக்கி பெய்ஜிங் தனது அரசியல் பிடியை நிலை நாட்டி வருகிறது. சீனாவிற்குள் வெள்ளம் போல் குவிந்து கொண்டிருக்கிற வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பயன்களை அறுவடை செய்கின்ற புதிய பணக்கார நடுத்தர வர்க்கத் தட்டைச் சேர்ந்தவர்கள், மலிவு ஊதிய தொழிலாளர்களை சுரண்டிக் கொண்டிருக்கின்றனர். ஏழைகளது நிலைகுறித்து அவர்கள் அலட்சியப் போக்குடன் பழியார்ந்த முறையில் நடந்து கொள்கின்றனர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் சீன சமூகத்தின் அடித்தளத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விட, கடைசியாக கிடைக்கின்ற வர்த்தக செய்திகள் அல்லது நடப்பு ஆடம்பரங்களில்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைமக்களது நிலை குறித்து தலைமை அரசாங்க அதிகாரிகளும் செல்வந்தத் தட்டினரும் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கிறார்களோ, அது சீனாவின் ஏழை மக்கள் மீது அவர்கள் கொண்டிருக்கிற அணுகு முறையிலிருந்து மாறுபட்டதல்ல. அவர்கள் இந்தப் பேரழிவை சீனாவின் சர்வதேச தோற்றப்பாட்டை உயர்த்திக் கொள்வதற்கும், சீனா கணிசமான பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டிருக்கும் நாடுகளோடு நெருக்கமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.

Top of page