World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Venezuela wants CIA terrorist extradited

Bush administration forced to detain Posada Carriles

வெனிசுலா CIA பயங்கரவாதியை கையளிக்க வேண்டுமென கோருகின்றது

பொஷடா காரில்லசை தடுத்து நிறுத்தும் கட்டாயம் புஷ் நிர்வாகத்திற்கு ஏற்பட்டது

By Bill Van Auken
18 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

கியூபாவில் காஸ்ட்ரோவிற்கு-எதிரான பயங்கரவாதி Luis Posada Carriles மியாமியில் செவ்வாயன்று மத்திய அரசாங்க அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டார், அரசாங்கம் தன்னை தேடவில்லை என்றும், தான் மறைவாக வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் நிருபர்களுக்கு தெரிவித்த சற்று நேரத்தின் பின் இவ்வாறு காவலில் வைக்கப்பட்டார்.

பல வாரங்களாக அவர் எங்கிருக்கிறார் என்பது பற்றி எந்தத் தகவலும் தன்னிடம் இல்லையென்று அமெரிக்க அரசுத்துறை பல வாரங்களாக நம்பமுடியாத மறுப்புக்களை கூறி வந்தது அல்லது அவர் இந்த நாட்டில் இருக்கிறாரா என்பது பற்றியும் நம்பகத்தன்மையில்லாத மறுப்புக்களை கூறி வந்தது. அவற்றை தொடர்ந்து பொஷடா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஒரு பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் ஒரு குறிப்பிடப்படாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

1976ல் கியூபாவின் ஒரு பொதுமக்கள் விமானத்தில் குண்டு வைத்து தகர்த்ததில், அதிலிருந்த 73 பயணிகளும் கொல்லப்பட்டமை சம்மந்தமான குண்டு வைப்பை ஏற்பாடு செய்ததாக உள்ள குற்றச்சாட்டுக்கள் மீது விசாரணையை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா, பொஷடாவை கைது செய்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று, வெனிசுலா அரசாங்கம் சென்ற வாரம் முறையானதொரு கோரிக்கையை வெளியிட்டது. அந்த பயங்கரவாதி தாக்குதல்கள் நடைபெற்ற நேரத்தில், கியூபாவிலிருந்து தஞ்சம் புகுந்த அவர், ஒரு நீண்டகால அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் சொத்தாகவும் வெனிசுலாவின் இரகசிய போலீசான DISIP இன் முன்னாள் மூத்த அதிகாரியாகவும் இரண்டு வகைகளிலுமே செயல்பட்டு வந்தார்.

பொஷாடா அமெரிக்காவில் இருக்கிறாரா என்பது பற்றிய கருத்து எதுவும் தனக்கில்லை என்று வாஷிங்டன் நடத்திய நாடகம் செவ்வாய் கிழமையன்று திட்டவட்டமாக சுக்குநூறாக சிதறுகின்ற வகையில் அந்த 77 வயது பயங்கரவாதி, மியாமி ஹெரால்டுக்கு அளித்த பேட்டி முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அலுவலகம் உள்ள இடத்திற்கு சில கட்டிடங்கள் தள்ளியுள்ள மியாமியிலுள்ள ஒரு சொகுசு மாளிகையில் அந்த பேட்டி நடத்தப்பட்டதாக அந்த செய்திப் பத்திரிகை தகவல் தந்திருக்கிறது.

மியாமியில் பொஷாடா இருப்பது தெரியாத செய்தியே அல்ல, ஏனென்றால் மார்ச்சின் இறுதியில் கியூப-அமெரிக்க ஊடகங்களில் அந்த செய்தி பரவலாக வெளியிடப்பட்டது. அவரது சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அந்த பயங்கரவாதியின் வக்கீலுக்கு நிதி திரட்டுவதற்காக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன, ஒரு பத்திரிகையாளரின் மாநாட்டில் அந்த பயங்கரவாதியின் வக்கீல் அமெரிக்காவில் அவருக்கு அரசியல் தஞ்சம் தரவேண்டும் என்று நடவடிக்கையை தொடக்கியிருப்பதாக அறிவித்தார்.

அப்படியிருந்தாலும், மியாமி ஹெரால்டு பேட்டி----அதன் பொருளடக்கம் மற்றும் அது எங்கு நடைபெற்றது என்ற இரண்டு வகைகளிலும் தெளிவான உண்மையை அம்பலப்படுத்தியுள்ளன: பொஷடா தலைமறைவாக இருக்கவில்லை மற்றும் அவர் அவ்வாறு இருக்க வேண்டுமென்று கருதவில்லை, ஏனெனில் அவர் அந்த நாட்டில் இருப்பது அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பின்கீழ்தான்.

"அமெரிக்க அரசாங்கம் என்னை தேடவில்லை என்பதை தெரிந்து கொண்டேன் என்று காஸ்ரோவிற்கு எதிரான தீவிரவாதி குறிப்பிட்டார்" என்பதாக அந்த செய்தி பத்திரிகை தகவல் தந்திருக்கிறது," அமெரிக்காவில் பொஷடாவை கைது செய்ய வேண்டுமென்று கைது ஆணைகள் எதுவும் இல்லாததால் அவரை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கவில்லை என்று உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்." என்றும் அந்தக் கட்டுரை மேலும் கூறுகிறது.

ஏன் அத்தகைய கட்டளைகள் இல்லை என்ற பிரச்சனை எழுப்பப்பட்டது. பொஷடா தப்பியோடி வந்த ஒரு கைதி. அவர் தலைமறைவாக இருந்தார் திடீரென்று பனாமாவின் அன்றைய ஜனாதிபதி Mireya Moscoso அவருக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அது அமெரிக்காவின் செல்வாக்கினால் ஒரு பேரத்தின் அடிப்படையிலும் 4 மில்லியன் டாலர்கள் தரப்பட்டதாகவும் அதனால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

கியூப ஜனாதிபதி உரையாற்ற இருந்த நெரிசல் மிக்க மண்டபத்தில் 20 இறாத்தல்கள் எடைகொண்ட வெடிகுண்டுகளை பிடல் காஸ்ரோவை கொல்வதற்காக சதித்திட்டத்தின் அடிப்படையில் வைத்தார்கள் என்ற வழக்கு தொடர்பாக அவரும் கியூபாவில் இருந்து தஞ்சம் புகுந்த இதர மூன்று பிற வலதுசாரிகளும் பனாமாவில் சிறையில் அடைக்கப்பட்டனர்----அந்தக் குற்றம் நடந்திருக்குமானால் பலர் மடிந்திருப்பர். அவரோடு சேர்ந்த சதியில் சம்மந்தப்பட்டவர்கள் எந்தவிதமான விசாரணை இல்லாமல் அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டது.

பனாமாவிலிருந்து அவர் போலியானதொரு அமெரிக்க கடவுச்சீட்டில் ஹோன்ட்ராசிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் தலைமறைவானதற்கிடையில் நாடு முழுவதும் அவரை தேடுகின்ற வேட்டை நடைபெற்றது. அங்கிருந்து அவர் குவாத்தமாலாவிற்கு சென்றார், அங்கு அவர் தலைமறைவாக வாழ்ந்தார், கியூபாவில் இருந்து வெளியேறியவர்கள் அமைப்புக்களும் குவாத்தமாலாவின் வலதுசாரிகளும் அவருக்கு பாதுகாப்பு தந்தனர்.

சென்ற மாதம் அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்பதை அறிந்த வெனிசுலா அரசாங்கம் பொஷடாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. மேலும் மே, 13ல் வாஷிங்டனுக்கு முறையான கோரிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் 1976ல் விமான குண்டு வைப்பு தொடர்பான தேச துரோக மற்றும் கொலைக்குற்றச்சாட்டுக்களுக்கான வழக்கில் ஆஜர் ஆவதற்காக அவரை கைது செய்து வெனிசுலாவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டது.

பொஷடா, நிர்வாகத்திற்கு அரசியல் பிரச்சனைகளை உருவாக்கிவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது. புஷ் பயங்கரவாதிகளை தேடிக்கண்டுபிடிக்கவும் அவர்களுக்கு தஞ்சம் தரும் நாடுகளை பொறுப்பேற்கச் செய்வதற்கும் உறுதிமொழி தந்திருப்பதை ஒரு கேலிப்பொருளாக்கும் வகையில் சரிசமமான குற்றத்தொடர்புள்ள மிகவும் இழிபுகழ்மிக்க சர்வதேச பயங்கரவாதி மியாமியில் உள்ளார். மியாமிஹெரால்டு பேட்டி வெளியிடப்பட்டது நிர்வாகம் மறுத்திருக்கின்ற கடைசி ஆற்றலை நீக்கிவிட்டது. இனி அவர் எங்கிருக்கிறார் என்று தனக்குத் தெரியாது என்ற கூற்றை அமெரிக்க நிர்வாகம் கூறமுடியாது.

தனது நிலைப்பாட்டை தாங்கி நிற்கமுடியாத அளவிற்கு தனது நிலை சிக்கலாகிவிட்டது என்பதை பொஷடா தெளிவாக தெரிந்துகொண்டார். அமெரிக்காவின் அரசியல் தஞ்சம் கோரும் முயற்சியை கைவிட்டுவிட்டதாகவும் அந்த நாட்டைவிட்டு வெளியேறும் முன்னேற்பாடுகளை செய்து வருவதாகவும் அவர் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிருபர்கள் பேட்டியில் செவ்வாயன்று குறிப்பிட்டார். இந்த தகராறை கியூபாவிலுள்ள காஸ்ட்ரோ ஆட்சி பயன்படுத்திக்கொள்வதை தடுப்பதற்காகத்தான் அவ்வாறு அமெரிக்காவிலிருந்து வெளியேற முடிவுசெய்துவிட்டதாக குறிப்பிட்டார்.

ஹவானாவில் பாரிய பேரணி

மியாமியில் அந்த கைது நடைபெற்ற நேரத்திலேயே கியூபாவின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய பேரணிகளில் ஒன்று நடந்தது. செவ்வாயன்று 1.2 மில்லியன் மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பிடும் பயங்கரவாதத்திற்கெதிரான ஒரு பாரியளவு பேரணி, புஷ் நிர்வாகம் பொஷடாவை கைது செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டது. 1976ல் வெனிசுலாவிற்கு புறப்பட்ட கியூபன் ஏர்லைன்ஸ் DC-8 பயணிகள் விமானம் Barbados இலிருந்து கிளம்பியதும் குண்டு வைத்து தாக்கப்பட்டதில் கொலையுண்ட கியூபா மக்களது புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஹவானாவில் அமெரிக்க நலன்களை பாதுகாக்கும் அலுவலகத்திற்கு முன்னர் பேரணியில் கலந்து கொண்டோர் அணிவகுத்து சென்றனர். அப்போது கொல்லப்பட்ட இளம் கியூபா விளையாட்டு வீரர்களில் பலர் கியூபா நாட்டு வாள்ச்சண்டை விளையாட்டு அணியை சேர்ந்தவர்கள்.

2002 ஏப்ரலில் ஜனாதிபதி ஹூகோ சாவேசின் (Hugo Chavez) அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயன்ற பின்னர் மற்றும் அதற்கு பின்னர் வெனிசுலாவில் தொடர்ந்து அரசியல் தாக்குதல்களை நடத்திக்கொண்டு வருகின்ற மற்றும் வெனிசுலாவிற்கு நெருக்குதல் கொடுத்து வருகின்ற வெள்ளை மாளிகை நிச்சயமாக சாவேசிற்கு ஒரு அரசியல் வெற்றியை தருவதற்கு விரும்பாது வெறுக்கும்.

செவ்வாயன்று உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் வெனிசுலாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட கைதிகளை ஒப்படைக்கும் பரஸ்பர ஏற்பாட்டை மீறுவதற்கு முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளது. "குடியேற்றம் மற்றும் குடிவரவு கொள்கை விவகாரங்களில் ICE [Immigration and Customs Enforcement] பொதுவாக கியூபாவின் சார்பில் செயல்படுவதாக நம்பப்படும் நாடுகளுக்கு அப்புறப்படுத்துவது இல்லை" என்று அந்த அறிக்கை அறிவிக்கிறது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூபாவின் காஸ்ட்ரோ அரசாங்கத்திற்கும் மற்றும் வெனிசுலாவில் சாவேஸ் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவுகின்ற நெருக்கமான உறவுகள் "ஒரு நாசவேலையின் அச்சாணி" என்று புஷ் நிர்வாகமும் அதன் ஆதரவாளர்களும் கண்டித்துள்ளனர்.

என்றாலும் அந்த பயங்கரவாதியை என்ன செய்வது என்பது தொடர்பான பிரச்சனை நிர்வாகத்திற்கு ஒரு இருதலைக்கொள்ளி போன்ற சிக்கலை உருவாக்கியுள்ளது. குடியேற்ற அலுவலக அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கின்றனர். அவர்கள் அவரை 48 மணி நேரம் காவலில் வைத்திருக்க முடியும், அதற்கிடையில் அவரது அந்தஸ்து பற்றி முடிவு செய்தாகவேண்டும்.

அவருக்கு தஞ்சம் தருவது அல்லது, அரவம் காட்டாமல் இன்னொரு நாட்டிற்கு தப்பி ஓட அனுமதிப்பது, புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்தின் மீதான பூகோளப்போரின்'' இரட்டை வேடத்தை மேலும் அம்பலப்படுத்தும், அது கடந்த மூன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் பொஷடாவை, வெனிசுலாவில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜர்படுத்துவது வாஷிங்டனுக்கு ஏற்றுக்கொள்ளவியலாத ஆபத்துக்களை உருவாக்குவதாக அமைந்திருக்கிறது.

அண்மையில் வாஷிங்டனில் செயல்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு ஆவணங்கள் பெற்றுள்ள CIA மற்றும் FBI ஆவணங்கள் தெளிவான உண்மைகளை உறுதிப்படுத்துகின்றன. CIA வின் ஒரு ஏஜெண்ட் என்ற முறையில் பொஷடா தனது பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தியிருக்கிறார்.

பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஆவணங்கள் பொஷடாவின் நீண்டகால அமெரிக்க புலனாய்வு உறவை வெளிப்படுத்துகின்றன, கியூபாவின் பிக் வளைகுடாவின் (Bay of Pigs) மீது நடத்தப்பட்ட படையெடுப்பின்போது தோல்வியில் முடிந்த அந்தப்படையெடுப்பிற்காக CIA இன் 2506 பிரிவில் அவர் சேர்க்கப்பட்டது முதல் 1960களில் நடத்தப்பட்ட CIA மற்றும் அமெரிக்க இராணுவ அழிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அதற்குப்பின்னர் CIA ஆதரவில் செயல்படும் கியூபாவிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுக்களின் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் அவர் சம்மந்தப்பட்டது வரை அந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

கியூபானா விமானத்தை குண்டு வைத்து தகர்த்ததில் பொஷடாவின் குற்றத்தை தெளிவாகக் காட்டுகின்ற சான்றும் அந்த ஆவணங்களில் காணப்படுகிறது.

1976 நவம்பரில் FBI வெளியிட்டுள்ள ஒரு ஆவணத்தில் அதன் மூல ஆதாரங்களில் ஒன்றாக வெனிசுலாவின் இரகசிய போலீஸ் அமைப்பான DISIP இன் எதிர் புலனாய்வு பிரிவின் பொறுப்பு வகித்த ஒரு அதிகாரியான Ricardo Morales Navarrete யை மேற்கோள்காட்டியுள்ளது. அந்த மூலாதாரம் கியூப பயணிகள் விமானத்தை குண்டு வைத்து தகர்ப்பதற்காக திட்டமிட்ட குறைந்தபட்ச இரண்டு கூட்டங்களில் பொஷாடா கலந்து கொண்டதாக நிலைநாட்டியுள்ளது. "வெனிசுலாவிலுள்ள Caracas பகுதியைச் சேர்ந்த Anauco Hilton ஹோட்டல் பாரில், ஒரு கியூப பயணிகள் விமானத்தை குண்டு வைத்து தகர்ப்பதற்கான சில திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் கூட்டங்களில் Frank Castro, Gustavo Castillo, Luis Posada Carriles, Morales Navarrete ஆகியோர் இருந்தனர்" என்று அந்த ஆவணம் தெரிவிக்கிறது, " Morales Navarrete அந்த தகவல் ஆதாரத்திற்கு தெரிவித்தது என்னவென்றால் Anauco Hilton ஹோட்டலில் Morales Navarrete குடியிருந்த பகுதியில் ஒரு கியூப விமானத்தை குண்டு வைத்து தகர்ப்பதற்கான திட்டம் தொடர்பாக மற்றொரு கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டம் 1976 அக்டோபர் 6-ல் கியூப பயணிகள் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்படுவதற்கு முன்னர் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் Morales Navarrete, Posada Carriles மற்றும் Frank Castro...."

1976 அக்டோபரில் தேதியிடப்பட்ட வகைப்படுத்தப்படாத CIA கோப்பு ஒன்று தெரிவித்திருப்பது என்னவென்றால், "குண்டுவைத்து தகர்க்கப்பட்டது தொடர்பாக ஒரு நபரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது, இந்த ஏஜென்ஸி அந்த நபரோடு தொடர்பு வைத்திருக்கிறது. அந்த விமானத்தில் வெடிகுண்டுகளை வைக்கத்திட்டமிட்டதாக, Barbados இல் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகிக்கப்பட்ட இரண்டு பேரான Lugo மற்றும் Lozano வை, பணியில் அமர்த்தி வேலை வாங்கியவர் Caracas-ல் இருக்கும் Luis Posada Carriles. அவர் வெனிசுலாவின் சிவிலியன் பாதுகாப்பு சேவையான DISIP என்றழைக்கப்படும் புலனாய்வு மற்றும் தடுப்பு சேவைகளுக்கான இயக்குநரகத்தின் எதிர் புலனாய்வு பிரிவு இயக்குனர் முன்னாள் தலைமை அதிகாரி ஆவார். பொஷடா முன்னாள் CIA ஏஜெண்ட்..."

அந்த ஆவணம் எப்போது பொஷடா CIA இன் ஒரு ஏஜெண்டாக இருப்பதை நிறுத்திக்கொண்டார் என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை, ஆனால் அந்த ஏஜென்சியுடன் பயணிகள் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வரை தொடர்பை நிலைநாட்டி வந்தார் என்பதை தெளிவுபடுத்துகிறது. அவர் வெனிசுலாவின் ஒரு சிறையிலிருந்து 1985இல் தப்பியோடியபின்னர் நிகரகுவாவின் கொண்ட்ராக்களுக்கு ஆயுதங்களை சட்டவிரோதமாக வழங்கியதில் சம்மந்தப்பட்டிருந்தார் என்று அந்த ஆவணம் பதிவு செய்திருக்கிறது, அதன் மூலம் CIA இன் உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பது தெளிவாக கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.

அவரது மிக அண்மைக்கால பயங்கரவாத நடவடிக்கைகளில் 1997ல் ஹவானா ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அடங்கும், அதில் இத்தாலிய சுற்றுலாப்பயணி Fabio di Celmo கொல்லப்பட்டார். மற்றும் பனாமாவில் காஸ்டிரோவிற்கு எதிராக 2000ல் நடைபெற்ற கொலை முயற்சியிலும் அவர் சம்மந்தப்பட்டிருந்தார்.

1976ல் கியூபானா பயணிகள் விமானத்தை குண்டுவைத்து தகர்ப்பதை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் என்று தண்டிக்கப்பட்டவர் Orlando Bosch. அவர் சிறையிலிருந்து வெளியில் வந்ததற்கு காரணமாக இருந்தவர் அன்றைய வெனிசுலாவின் அமெரிக்க தூதரான Otto Reich அவர் புஷ் முதலாவது நிர்வாகத்தில் இலத்தீன் அமெரிக்காவின் தலைமை அமெரிக்க அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

1990TM Bosch சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். புஷ்ஷின் தந்தையும் அன்றைய ஜனாதிபதியுமான H.W.புஷ் அமெரிக்க நீதித்துறையின் கண்டனங்களையும் மீறி அவருக்கு அமெரிக்காவில் வாழ்கின்ற நிரந்தர உரிமையை வழங்கினார். அவர் "ஒரு பயங்கரவாதி என்றும் சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாதவர் என்றும் அல்லது மனித கண்ணியத்திற்கு கட்டுப்பட்டவர் அல்ல என்றும்" நீதித்துறை குறிப்பிட்டது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் CIAஇன் நீண்டகால ஏஜெண்டுகளான இவர்கள் ஏற்பாடு செய்த பயணிகள் விமான குண்டு வீச்சு நடைபெற்ற நேரத்தில் மூத்த புஷ் CIA இன் இயக்குனராக பணியாற்றிவந்தார்.

தற்போதைய ஜனாதிபதியின் சகோதரர் ஆன ஜெப் புஷ், புளோரிடா மாகாண கவர்னராக பதவி பெற்றமைக்கு பெருமளவில் காரணமாக இருந்தது, அதே வலதுசாரி கியூபாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட குழுக்களாகும், இந்த குழுக்கள் பல ஆண்டுகளுக்கு மேலாக பொஷடாவையும் Bosch யும் ஆதரித்து வருகின்றன, இதே காரணத்தினால்தான் கியூபானா விமான குண்டு வைப்பு தவிர சுமார் 30 பயங்கரவாத செயல்களில் உடந்தையாக இருந்ததாக கூறப்பட்ட Bosch இற்கு அமெரிக்காவில் தஞ்சம் புகும் உரிமை வழங்க வேண்டும் என்ற தனது தந்தையின் இயக்கத்திற்கு ஜெப் புஷ் தலைமை தாங்கினார்.

அவர் கவர்னராக ஆன பின்னர் ஜெப் புஷ்ஷின் புளோரிடா மாகாண உச்ச நீதிமன்றத்திற்கான முதலாவது நியமனம் Boschஇன் வக்கீலை நியமித்ததாகும். ஒப்பு நோக்கும்போது அவர் அனுபவம் இல்லாத சட்டத்தரணி Raoul Cantero அமெரிக்காவில் இருந்த முன்னாள் கியூபா சர்வாதிகாரியான Fulgencio Batista வின் பேரனாகும். அவரது சட்டத்துறை பதவி தெற்கு புளோரிடாவில் செயல்பட்டுகொண்டு வரும் காஸ்ட்ரோவிற்கு எதிரான பயங்கரவாத குழுவோடு சம்மந்தப்பட்டதாகும். Canteroவின் தந்தை BRAC என்றழைக்கப்பட்ட கியூபாவின் கம்யூனிச நடவடிக்கைகளை ஒடுக்கும் குழுவில் ஒரு புலனாய்வு அதிகாரியாக பணியாற்றியவர், அந்த அமைப்பின் ஆட்சியாளர்களின் எதிரிகளை ஒடுக்கிய இழிபுகழ் மிக்க அமைப்பாகும்.

பொஷடாவை கைது செய்து வெனிசுலாவிற்கு அனுப்புவதால் CIAஇன் குற்றங்கள் பகிரங்கப்படுவது மட்டுமின்றி புஷ் குடும்பத்தின் விரிவான மற்றும் நெருக்கமான உறவுகளையும் மற்றும் நடப்பு ஜனாதிபதியின் அரசாங்கம் வகுத்தளிக்கும் பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்துவதுடன் குடியரசுக் கட்சியின் புளோரிடாவிலுள்ள வலதுசாரி கியூபா அடித்தளத்திலும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தக் காரணத்தினால் மட்டுமே தனது நீண்டகால ஏஜெண்டான பொஷடாவை வாஷிங்டன் தொடர்ந்து பாதுகாக்க வேண்டி வரலாம் அல்லது குறைந்த பட்சம் அவர் வாய்திறக்காமல் இருக்கச் செய்தாக வேண்டும்.

Top of page