World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Sunni elite moves toward an accommodation with US occupation of Iraq

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்போடு ஒரு சமரசம் காண்பதை நோக்கி சன்னி செல்வந்தத்தட்டு நகர்வு

By James Cogan
27 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

சதாம் ஹூசேனின் பாத்திஸ்ட் அரசில் இதற்கு முன்னர் மேலாதிக்கம் செலுத்திய சுன்னி முஸ்லீம் அரசியல் மற்றும் மத செல்வந்தத்தட்டினரின் 1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மே 22-ல் பாக்தாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா ஆணையில் நடைபெற்றுவரும் அரசியல் மறு ஒழுங்கமைப்பில் பங்கெடுத்துக்கொள்வது பற்றி விவாதித்தனர். இன்னமும் இது தற்காலிகமானதுதான் என்றாலும், இதற்கு முன்னர், படையெடுப்பிற்கு பிந்திய ஆட்சியில் இணைந்துகொள்வது மற்றும் அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் தருவது தொடர்பாக பிடிவாதத்துடன் செயல்பட்டு வந்த சுன்னி முதலாளித்துவ ஸ்தாபன பிரிவில் ஒரு மாற்றத்தை அந்த மாநாடு குறிக்கிறது.

மே 22-ல் நடைபெற்ற அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் ஈராக்கிய இஸ்லாமிய கட்சியின் (IIP) முன்னணி உறுப்பினர்களும், அமெரிக்கா ஏற்பாடு செய்த ஒரு ''இடைக்கால அரசாங்கத்தை'' உருவாக்குவதற்கான ஈராக்கில் நடைபெற்ற ஜனவரி 31 தேர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த சுன்னி மதபோதகர்களின் தலைமை (குடை) அமைப்பான முஸ்லீம் அறிஞர்கள் சங்கத்தின் (AMS) முன்னணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஈராக் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 20 சதவீதமாக இருக்கும் சுன்னிகளில் மிகப்பெரும்பாலோர் தேர்தலில் வாக்களிக்க மறுத்துவிட்டனர். இதன் ஒரு விளைவாக, தேசிய சட்டசபையில் உள்ள 275 உறுப்பினர்களில் 17 பேர் மட்டுமே சுன்னி உறுப்பினர்கள்.

ஆக்கிரமிப்பிற்கு எதிரான கிளர்ச்சிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வரும் ஈராக்கின் வடக்கு மற்றும் மத்திய முக்கிய மாகாணங்களைச் சேர்ந்த சுன்னி பகுதிகளில் வாழ்கின்ற முக்கிய சில அரபு பழங்குடியினரை சார்ந்த தலைவர்களும் ஈராக் முன்னாள் அதிகாரிகள் பலரும் பங்கெடுத்துக்கொண்டனர். இவர்களில் பலர் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆலோசனைகளை கூறிக் கொண்டிருப்பதாக அமெரிக்க இராணுவத்தால் நம்பப்படுகிறது.

தேர்தல்களின்போது தாங்கள் எடுத்த நிலைப்பாடுகளின் காரணமாக சுன்னி மக்களிடையே AMS மற்றும் IIP தலைமைக்கு கணிசமான செல்வாக்கு நிலவுகிறது. ஆரம்பத்தில் பங்கெடுத்துக்கொள்வது என்ற கருத்திற்கு உடன்படலாம் என்று கருதியிருந்தாலும், சென்ற நவம்பரில் பெரும்பாலும் சுன்னிகள் வாழ்கின்ற நகரமான பல்லூஜாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கிடையில் தேர்தலை புறக்கணிப்பதற்கான அழைப்பு விடுத்தது. அமெரிக்க இராணுவம் நடத்திய பேரழிவுகள் மற்றும் கொலைகள் அனைத்து மத மற்றும் இன பின்னணிகளை கொண்ட ஈராக்கியர்களை குறிப்பாக சுன்னிக்களை ஆத்திரமடைய செய்தது, அமெரிக்காவின் மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறையின் முனைப்பான தாக்குதலை சுன்னி சமுதாயங்கள் தான் தாங்கின. அந்தப் புறக்கணிப்பு ஆக்கிரமிப்பை வெகுஜனங்கள் ஏற்றுக்கொள்ளாத்தற்கான அரசியல் குவிமையப்படுத்துதலாக அமைந்தது.

என்றாலும், மே 22-ல் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ததற்கு இதற்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்தவர்கள், ஈராக்கிலிருந்து நாடு கடத்தப்பட்ட Adnan Pachachi, 2003-ல் ஈராக்கிற்கு திரும்பி வந்து, ஆரம்பத்திலிருந்து ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு காட்டி ஒத்துழைத்தவரின் பிரதிநிதிகளுடன் கலந்தனர். மக்களிடையே மிகக்குறைந்த அளவிற்கு ஆதரவு இருந்ததால், அவரது தேர்தல் பட்டியலைச் சார்ந்த வேட்பாளர்கள் ஜனவரி தேர்தலில் 13,000-க்கு குறைந்த வாக்குகளையே பெற்றனர் மற்றும் நாடாளுமன்றத்தில் எந்த இடத்தையும் பெறவில்லை.

மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்பவர்களை பகிரங்கமாக விலக்கி வைக்கின்ற அளவிற்கு அமைந்திருக்கவில்லை. ``ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து நிற்பது ஒரு சட்டபூர்வமான உரிமை`` என அது அறிவிக்கிறது. என்றாலும், அதே நேரத்தில், அனைத்து ``சட்ட அர்தத்திலும்`` ஈராக்கை விடுவிப்பது பற்றி அது குறிப்பிடுகிறது, அந்தப் பிரிவு ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி குற்றவியல் நடவடிக்கை என்ற அமெரிக்காவின் கூற்றுக்களுக்கு நம்பகத்தன்மையைத் தருகிறது. மிகவும் குறிபிடத்தக்கது என்னவென்றால், அது அண்மையில் அமைக்கப்பட்டுள்ள ஈராக்கிற்கான புதிய அரசியல் சட்டத்தை ஆகஸ்ட் வாக்கில் உருவாக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள குழுவில் 10 முதல் 15 பிரதிநிதிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

அரசியல் சட்ட நகலை தயாரிப்பதில் சம்மந்தப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்பின்கீழ் ஏற்பாடு செய்யப்படும் அடுத்த கட்ட தேர்தல்களை ஏற்றுக்கொள்வதற்கு சமமாகும். அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு கருத்தெடுப்பு அக்டோபர் 15 வாக்கில் நடைபெறவிருக்கிறது மற்றும் புதிய தேர்தல்கள் டிசம்பர் 15-ல் நடக்கிறது. முன்மொழியப்படும் அரசியல் சட்டத்திற்கு IIP-ம் AMS-ம் உடன்படுமானால் மற்றும் கருத்தெடுப்பில் அங்கீகரிக்கப்படுமானால் இந்தக் கட்சிகள் புறக்கணிப்பிற்கு மேலும் அழைப்புவிடாது என்று தோன்றுகிறது.

இந்த முன்னெடுப்பில் பங்கெடுத்துக்கொள்ள உடன்பட்டிருப்பதன் உள்ளார்ந்த பொருள் AMS அதன் கோரிக்கையான எல்லா ஆக்கிரமிப்புத் துருப்புக்களும் உடனடியாக விலக்கிகொள்ளப்பட வேண்டும் மற்றும் தேர்தல்கள் வெளிநாட்டு தலையீடு இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்பதை கைவிட்டுவிடுவதற்கு சமமாகும்.

இரண்டு அமைப்புக்களின் உறுப்பினர்களும் அந்த மாநட்டை பயன்படுத்தி புறக்கணிப்பு தந்திரோபாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று பகிரங்கமாக கேட்டுக்கொண்டனர். AMS பிரதிநிதியான அஹ்மது அப்துல் காபூர் சமரை ``மீண்டும் நாம் அதே தவறை செய்யக்கூடாது. சுன்னிகள் அடுத்த தேர்தலில் கலந்துகொள்வதற்கு ஐக்கியப்பட தயாராக வேண்டும்`` என்று குறிப்பிட்டார். IIP பிரதிநிதியான Tarik al Hashimy ``அடுத்த தேர்தலுக்கு ஒரு தீர்க்கமான கூட்டணியை உருவாக்க நாங்கள் முயன்றுகொண்டிருக்கிறோம்`` என்று குறிப்பிட்டார்.

வரும் மாதங்களில் உருவாக்கப்படும் கூட்டணி எந்த மாதிரியாக அமையும் என்பது பற்றி கோடிட்டுக் காட்டிய பச்சாச்சி நியூயோர்க் டைம்ஸிற்கு தகவல் தரும்போது அண்மையில் தான், அமெரிக்கா நியமித்த முன்னாள் இடைக்கால பிரதமர் இயத் அல்லாவியை சந்தித்ததாகவும் ''மிக மதவாத ஷியைட் கட்சிகளோடு போட்டி போடுகின்ற கூட்டணியோடு சேர சம்மதித்ததாகவும்'' தெரிவித்தார்.

இந்த மாநாடு நடைபெற்ற நேரமும் தொனியும், சுன்னி அதிகார தரகர்களுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையிலான பல பேச்சுவார்த்தைகள் உள்பட, அந்த மாநாட்டு பின்னணியில் பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன என்பதையும் காட்டுகிறது, பெரும்பாலும் அல்லாவியின் ஈராக் தேசிய உடன்படிக்கையுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கலாம். இந்த புதிய அரசாங்கத்தில் சுன்னி ஸ்தாபனத்தை சார்ந்த குறிப்பிடத்தக்க சக்திகளை இணைத்துக்கொள்வதற்கு புஷ் நிர்வகம் முனைப்பான வற்புறுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் அது நடைபெற்றது.

ஜனவரி 31 தேர்தலுக்கு பின்னர் தேசிய சட்டசபையில் பெரும்பான்மை இடங்களை வென்றெடுத்த ஷியைட்டுகளின் ஐக்கிய ஈராக் கூட்டணி (UIA) மற்றும் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமர் இப்ராஹிம் அல்-ஜாபரி தலைமையில் மேலாதிக்கம் செலுத்துவதையும் கண்டு, பகிரங்கமாக அமெரிக்கா தனது விரக்தியை தெரிவித்துக்கொண்டிருக்கிறது.

ஹூசேன் கீழ் அரசியல் அதிகாரத்திலிருந்தும், அதோடு தொடர்புடைய பொருளாதார நலன்களிலிருந்தும் விலக்கி வைக்கப்பட்ட ஈராக் செல்வந்தத்தட்டினரில் மேலாதிக்கம் செய்யும் ஷியைட் தட்டினரின் நலன்களுக்காக UIA குரல் கொடுக்கிறது. அது முன்னணி ஈராக் ஷியைட் மத போதகரான அலி-அல்-சிஸ்தானியால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது மற்றும் அது அடிப்படைவாத தாவாக்கட்சி மற்றும் ஈராக் இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் சபையை (SCIRI) மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. அதில் அஹமத் சலாபியின் ஈராக் தேசிய காங்கிரசும் (INC) இடம்பெற்றிருக்கிறது----இந்தக் குழு அமெரிக்காவில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற ஈராக்கிய வர்த்தகர்கள், நில உரிமையாளர்களின் அமைப்பாகும், அவர்கள் 1958-ல் ஈராக் மன்னர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டபோது அல்லது அதற்குப் பின்னர் பல தசாப்தங்களில் ஈராக்கை ஆண்ட இராணுவ மற்றும் பாத்திஸ்ட் ஆட்சிகளோடு மோதிக்கொண்டவர்கள் ஆவர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின்கீழ் உருவாக்கப்படுகின்ற அரசு இயந்திரத்தின் இராணுவத்திலிருந்து சதாம் ஹூசேனின் முன்னாள் ஆட்சி உறுப்பினர்களை ஒதுக்கித்தள்ளும் கொள்கையை UIA கைவிட வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் புஷ் நிர்வாக அதிகாரிகளும், அமெரிக்க இராணுவ அதிகாரிகளும், மற்றும் அமெரிக்க ஊடகங்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றன----அந்தக் கொள்கை ''பாத்திஸ்ட்டுகளை களையெடுப்பது`` என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. மிக அண்மையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான கொண்டலீசா ரைஸ் மே 15-ல் ஈராக்கிற்கு பறந்து வந்தார், அரசியல் சட்டத்தை உருவாக்கும் நகலில் மேலும் பல சுன்னி அரசியல் பிரமுகர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் ஜபாரியை கேட்டுக்கொள்வதற்காக வந்திருந்தார்.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் பாத்திஸ்ட்டுகளை களையெடுத்தலும்

2003-லிருந்து தங்களது செல்வத்தையும் அரசியல் அதிகாரத்தையும் இழந்துவிட்ட சுன்னி நடுத்தர வகுப்பினரும் மற்றும் முந்தைய பாத்திஸ்ட் ஸ்தாபன வெறுப்பும்----140,000 அமெரிக்க துருப்புக்கள் கட்டுண்டு கிடக்கவைக்கும் மற்றும் வாரத்திற்கு ஒரு பில்லியன் டாலருக்கு மேல் செலவைப் பிடிக்கும்---- கிளர்ச்சி எழுச்சி நடந்துகொண்டிருப்பதற்கு உந்து சக்திகளில் ஒன்றாக விளங்குகிறது என்ற மதிப்பீட்டின் பின்னணியில்தான், பாத்திஸ்ட்டுகளை களை எடுப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டங்களில் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் திரும்பத்திரும்ப அறிவித்ததைப்போல் அவர்கள் பழைய ஆட்சி மீது ''அசைக்க-முடியாத'' விசுவாசம் கொண்டவர்களை எதிர்த்து போரிடவில்லை, மாறாக சுன்னி செல்வந்தத்தட்டினரின் சலுகைகளை மீட்டுத் தருவதற்காகத்தான் போரிடுகின்றனர்.

அமெரிக்க சிந்தனையாளர்கள் அமைப்பான சர்வதேச மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான நிலையம் மே 19-ல் ஈராக்கிய எழுச்சி பற்றி பிரசுரித்த ஒரு நகலில் எடுத்துக்காட்டாக கீழ்கண்டவாறு கூறுகிறது:

``பாத்திஸ்ட்டுகளும் ஆட்சியின் முன்னாள் விசுவாசிகளும் எழுச்சியின் ஒரு பகுதியாகத்தான் உள்ளனர் என்பதை CIA தனது இரகசிய ஆய்வுகளில் ஒப்புக்கொண்டிருக்கிறது... புதிதாக போர்க்குணம் கொண்டவர்களாக மாற்றப்பட்டுள்ள சுன்னிகள் எழுச்சியில் மிகப்பெரிய சக்தியாக விளங்குகின்றனர். CIA அறிக்கையின்படி, சுன்னிகள் அரசியல் அதிகாரத்தையும், செல்வாக்கையும், பொருளாதார செல்வாக்கையும் இழந்துவிட்டது ஒரு முக்கிய காரணியாகும், அதேபோன்று வேலையில்லாத் திண்டாட்டம் தனிப்பட்ட முறையில் அந்தஸ்தை இழந்தது----- நேரடியாகவும், மறைமுகமாகவும் சதாம் ஹூசேன் ஆட்சி வீழ்ந்த பின்னர் பல பகுதிகளில் 40 முதல் 60 சதவீதம் சுன்னி இளைஞர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்துவிட்டனர். பல கிளர்ச்சிக்காரர்கள் மதக்கடமை மற்றும் தேசியவாதம், குடும்ப மனக்குறைகள் அல்லது தங்களது இன மனக்குறைகளால் உந்தப்பட்டு செயல்படுகின்றனர். மற்றவர்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பினால் உந்தப்பட்டு----குறிப்பாக அமெரிக்கப் படைகளோடு சண்டையிட்டு தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள்----மற்றும் ஆக்கிரமிப்பை தொடர்ந்து வந்த அரசியல் மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்களால் உந்தப்பட்டு செயல்படுகின்றனர்.``

ஆரம்பத்தில் பாத்திஸ்ட்டுகளை களை எடுக்கும் கொள்கையை கடைப்பிடித்து வந்த, அமெரிக்கா நியமித்த இடைக்கால பிரதமர் இயத் அல்லாவி 2004 ஜூனில் ஒரு திருப்பத்தை உருவாக்கினார். அது ''மீண்டும் பாத்திஸ்ட்டுகளை'' அமர்த்தும் கொள்கையாகும். அல்லாவி ஒரு மதச்சார்பற்ற ஷியைட் மற்றும் முன்னாள் பாத்திஸ்ட், அவர் நூற்றுக்கணக்கான முன்னாள் பாத்திஸ்ட்டுகளை இரகசிய போலீசாரின் புதிய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திலும் மற்றும் ஆயிரக்கணக்கான அதிகாரிகளை ஹூசேனின் ஆயுதப் படைகளிலிருந்து புதிய ஈராக் இராணுவத்தில் சேர்ப்பதையும் மேற்பார்வையிட்டார். நவம்பர் 2004-ல், பல்லூஜா நகரத்திற்கு எதிராக பாரியளவு அமெரிக்க தாக்குதலுக்கு அல்லாவி ஏற்பாடு செய்தார், அதில் பெரும்பகுதி இஸ்லாமிய அடிப்படைவாத எதிர்ப்பாளர்கள், ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் மற்றும் முன்னாள் ஆட்சியினரால் கட்டுப்படுத்தப்பட்டது.

என்றாலும், அல்லாவியின் கூட்டணி ஈராக் தேர்தல் பட்டியலில் இடம்பெற்ற வேட்பாளர்கள் ஜனவரி 31 தேர்தலில் 14 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றனர், இது ஷியா கூட்டணி பெற்ற 48 சதவீத வாக்குகளோடு ஒப்பு நோக்கத்தக்கது. புஷ் நிர்வகம் ஒரு இடைக்கால அரசாங்கத்தை UIA கட்சியின் அடிப்படையில் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது பெரும்பாலும் முன்னாள் மேலாதிக்கம் செலுத்திவந்த சுன்னி ஆளும் பிரிவினரை சீர்குலைப்பதன் மூலம்தான் தங்களது நலன்கள் காக்கப்படும் என்ற நோக்கில் செயல்படும் சமூக சக்திகளை பிரதிநிதித்துவம் செய்கிறது.

ஆக்கிரமிப்பிற்கு வெகுஜன எதிர்ப்பு, ஆளும் செல்வந்தத்தட்டின் போட்டிக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட அரசியல் ஆதிக்க போட்டி கிளர்ச்சியோடு இணைந்து, அதற்குப் பின்னர் ஈராக்கில் பல மாதங்கள் திடீரென்று வன்முறை அதிகரித்து ஒரு பெரிய கிளர்ச்சி உருவாகியுள்ளது. ஷியைட்டுகளை குறி வைத்து கொலைகள் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் தெளிவாக குறுங்குழுவாத அடிப்படையில் நடைபெற்றது, சுன்னி பிரமுகர்கள் மீது பதில் தாக்குதல் அதிகரித்தது, உள்நாட்டுப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது. AMS சென்ற வாரம் SCIRI-ன் Badr குடிப்படையை பல சுன்னி மதபோதகர்களை கொன்றதாக குற்றம்சாட்டினார் மற்றும் கண்டனம் தெரிவிக்கிற வகையில் நூற்றுக்கணக்கான சுன்னி மசூதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன.

ஆக்கிரமிப்புப் படைகள் மீது நிரந்தரமாக கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துகின்ற ஒரு முயற்சியாக மேற்கு ஈராக்கின் இரண்டு பகுதிகளிலும் பாக்தாத்தின் புறநகர்களில் ஒரு பகுதியிலும் சுன்னிக்கள் வாழும் இடங்களில் இந்த மாதம் மூன்று பெரிய தாக்குதல்களை அமெரிக்க இராணுவம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மார்ச்சில் அமெரிக்க வீரர்கள் 36 பேர் இறந்தனர், அது இதுவரை மே மாதத்தில் 62 ஆக உயர்ந்துவிட்டது, 400க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த புதைசேறு ஆழமாகிக்கொண்டு வருகின்ற நேரத்தில், மே 20-ல் New york Times தலையங்கமாக வாஷிங்டனில் எடுக்கப்படும் முடிவு குறித்து மிகத் தெளிவாக விளக்கியுள்ளது. ஷியைட்டுக்கள் ஆதிக்கம் செலுத்துகிற அரசாங்கம் "கிளர்ச்சிக்கு சுன்னி ஆதரவை தன் பக்கம் ஈர்க்கின்ற வகையில் ஒரு கடுமையான அரசியல் மூலோபாயத்தை தவிர்த்துக்கொண்டே வருமானால், வடக்கு மற்றும் மேற்கு ஈராக்கில் ஒரு நீண்ட இரத்தக்களரி எதிர் புரட்சியில் ஏராளமான அமெரிக்கத் துருப்புக்கள் தங்கியிருந்து போரிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்" என்று அந்தத் தலையங்கம் கூறியுள்ளது.

Times-ன் தீர்வு வெளிப்படையானது: ``ஈராக் ஷியைட்டுக்களும் குர்துகளும் சதாம் ஹூசேன் ஆட்சியில் மிகப்பெருமளவிற்கு பாதிக்கப்பட்டிருந்ததால், அவரது பிரதான மேலாதிக்க சுன்னி ஆட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதில் அதை அனுமதிப்பதில் அதிருப்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் கீழ் மட்டத்திலும், நடுத்தரத்திலும் உள்ள பாத்திஸ்ட்டுகள் பணியாற்ற அனுமதிக்கப்படாவிட்டால் சுன்னி தொழில்முறை சார்ந்த வர்க்கத்தை சேர்ந்த பெரும்பகுதி அரசாங்கத்திலிருந்து ஒதுக்கப்பட்டு கிளர்ச்சிக்காரர்களுக்கு அனுதாபிகளாக மாறுவர்.``

புஷ் நிர்வகத்தின் மீது இத்தகைய முன்னோக்கை கொண்டுவந்து நெருக்குவது, ஈராக் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் நிலவுகின்ற நெருக்கடிக்கு ஒரு அளவுகோலாகும். சதாம் ஹூசேனிடமிருந்து அதன் மக்களை ''விடுவிப்பதற்காக'' ஈராக் மீது படையெடுக்கப்பட்டது என்ற பொய்யை வளர்த்த பின்னர், வாஷிங்டன் தற்போது சதாம் ஹூசேனை பதவியில் அமர்த்தியிருந்த அரசாங்க அமைப்பு மற்றும் பாத்திஸ்ட் செல்வந்தத்தட்டினரின் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினரை அரசியல் பதவிகள் தருவதாக கூறி விலைக்கு வாங்க முயன்று வருகிறது.

அமெரிக்கா கணக்கிடுவது என்னவென்றால் ஒரு அமெரிக்க வாடிக்கையாளர்-அரசில் சுன்னி அரசியல் தலைவர்களையும் சேர்த்துக்கொள்வது, அமெரிக்க ஆக்கிரமிப்பின் மீது சுன்னிகளது விரிவான எதிர்ப்பில் குழப்பத்தை ஏற்படுத்தி கிளர்ச்சிக்காரர்களை பிளவுபடுத்தும் என்ற நோக்கத்தில்தான். மேலும் ஈராக் அரசாங்க நிர்வாகத்தில் பொதுமக்களுக்கு எதிராக பயங்கர நடவடிக்கை எடுக்கும் ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டு அந்த நாட்டில் காலவரையற்ற அமெரிக்க மேலாதிக்கத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு அமெரிக்கா திட்டமிடுகிறது. இதில் ஈராக் மக்களை ஒடுக்குவதில் மிகவும் அனுபவம் மிக்கவர்கள், ஹூசேனின் முன்னாள் பாதுகாப்புப் படைகள் 2004-ல் அல்லாவியின் கீழ் நியமிக்கப்பட்ட முன்னாள் பாத்திஸ்ட்டுகள் சில பகுதிகளில் ஏற்கனவே எதிர்க்கிளர்ச்சி கொலைக் குழுக்களில் பணியாற்றி வருகிறார்கள்.

அமெரிக்காவின் சமிக்கைகள் சுன்னி அமைப்புக்களின் கணிசமான ஒரு பிரிவினரை ஆக்கிரமிப்பு தொடர்பாக சமரசம் காண தூண்டிவிட்டிருக்கிறது, அவர்கள் அதற்குப் பதிலாக இதற்கு முன்னர் கிடைத்த சலுகைகளை கோருகின்றனர். இறுதியான ஆய்வின்படி, இந்த ஊழல் மிக்க சுயநல முன்னோக்குதான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுன்னி செல்வந்தத்தட்டினரை ஆயுதந்தாங்கிய கிளர்ச்சி நடந்த ஊக்குவித்திருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமிருந்து சிறந்த ஏற்புடைய நிபந்தனைகளை பெறுவதற்கு பேரம் பேசுவதற்காகத்தான் சுன்னி மக்களிடையே நிலவுகின்ற பரவலான எதிர்ப்பை பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முயன்றிருக்கின்றனர்.

மே 22-ல் நடைபெற்ற மாநாடு, IIP மற்றும் சுன்னி மத போதகர்கள் சுன்னி வெகுஜனங்களிடையே தங்களுக்கு இருக்கின்ற செல்வாக்கை குறுங்குழுவாத பிளவுகள் அடிப்படையிலான பிற்போக்கு வழியில் கொண்டு செல்ல முயலுகின்றனர் என்பது தெளிவாகக் காட்டும் சமிக்கையாகும். மாநாட்டு பிரதிநிதிகளை பொறுத்தவரை, ஒரு புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்த ''தவறு'' என்னவென்றால் தங்களது ஷியைட் எதிரிகளை பாக்தாத்தில் அமெரிக்காவின் பொம்மை அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததுதான்.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான அபரிமிதமான மக்கள் எதிர்ப்பை ஒரு பொதுவான அரசியல் இயக்கத்தில் ஐக்கியப்படுத்துவதற்கு ஈராக் முதலாளித்துவ வர்க்கத்தின் இயலாத்தன்மையானது, தேசிய-அரசு முறையையும், தனியார் சொத்துடைமை நலன்களையும் நிலைநாட்ட முயலும் எந்தவிதமான முன்னோக்கின் முற்றிலும் திவாலானதன்மைக்கு சான்றாகும். அனைத்து ஈராக் ஆளும் வர்க்கத்தை சேர்ந்த சுன்னி, ஷியா மற்றும் குர்து குழுக்களின் அக்கறை - பொதுமக்களை ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலில் இருந்து விடுவிப்பது அல்ல, மாறாக தங்களது சொந்த செல்வத்தையும், சலுகைகளையும் உயர்த்திக்கொள்வதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சூழ்ச்சிமுயற்சிகளை மேற்கொள்வது பற்றியதாகும்.

Top of page