World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

An exchange over the nature of the JHU in Sri Lanka

இலங்கை ஜாதிக ஹெல உறுமயவின் தன்மை பற்றி ஒரு கடிதப் பரிமாற்றம்

7 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

WSWS ல் மே 25 அன்று (ஆங்கிலப்பதிப்பில்) வெளிவந்த "Obscure Sri Lankan group claims responsibility for Tamil journalist's murder" என்ற கட்டுரை பற்றிய கடிதப் பரிமாற்றம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் அவர்களுக்கு:

இந்தச் செய்தி அறிக்கையில் நேர்த்தியற்ற செய்தி அளிக்கும் முறை பற்றி நான் சற்றே வியப்படைகிறேன். JHU வினால் வாதிடப்படும் தீவிர தேசியவாதத்தின்பால் நான் பற்றாளராக இல்லை என்றாலும், "... JVP மற்றும் JHU இரண்டுமே வகுப்புவாத வன்முறை, கொலை என்ற வரலாற்றை கொண்டுள்ளன" என்ற உங்களுடைய "செய்தியாளர்" என்று கூறப்படுபவர் கூறியிருப்பது மிகவும் நியாயமற்றது, சரியற்றது மற்றும் பொறுப்பற்றது ஆகும். நிருபரின் அறிக்கை அவதூறு நிரம்பியது; பொதுவாக இதற்காக அவதூறு வழக்கு என்ற நடவடிக்கையை சந்திக்க நேரிடும்! உங்கள் நிருபர் JHU என்னும் பெயரை (Jathika Hela Urumaya), "Pure Sinhala National Heritag", "தூய சிங்கள தேசிய மரபியம்" என்று மொழி பெயர்த்துள்ளார்: இதுவும் முற்றிலும் தவறானது ஆகும். "தேசிய சிறீலங்கா மரபியம்" என்பதுதான் JHU இன் மொழியாக்கமாகும்; "தூய சிங்கள" என்பது பெயரில் எந்த இடத்திலும் காணப்படவில்லை.

உங்கள் நிருபர்கள் உயர்ந்த தொழில்நெறியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளுமாறு பணிக்கவும்; அவர்கள் எந்த குறிப்பிட்ட நலன்களினாலும் தொழில்தர்மத்தை ஊசலாடவிடவேண்டாம்.

MW

அன்புள்ள MW,

செய்தி ஊடகத்தில் பெரும்பாலனவற்றின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், அதுவும் குறிப்பாக கொழும்பில், உலக சோசலிச வலைத் தளம் (WSWS), தகவலை அளிப்பதில் மிக அக்கறையுடன் தீவிரத் துல்லியத்தைத்தான் காட்டிவருகிறது.

WSWS க்கு நீங்கள் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், நன்கு பிரபல்யமான தமிழ் செய்தியாளர் தர்மரத்னம் சிவராம் கொடூரக் கொலை பற்றிய எங்களுடைய சமீபத்திய அறிக்கைக்கு உங்களுடைய ஒரே எதிர்ப்பு JHU பற்றிய வரலாற்றுத் தன்மையை நாங்கள் கூறியிருப்பதுதான். "JHU இன் தீவிரத் தேசியவாதத்தின் ஆதரவாளர் இல்லை" என்று நீங்கள் கூறினாலும், அவர்களுடைய வகுப்புவாத அரசியல், ஆத்திரமூட்டல் தன்மையுடைய நடவடிக்கைகள், சொல்லப்போனால் குற்றத்தைப் பற்றிக் கூட நீங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

மிக வெளிப்படையாகக் கூறுவேண்டும் என்றால், சிவராமின் கொலைக்குப் பின் வந்துள்ள JHU இன் அறிக்கை, உள்ளத்தை உறைய வைத்துள்ளது. "தமிழ் நெட் வலைத் தளத்தின் ஆசியருடைய மரணம் இந்நாட்டில் அமைதியை எதிர்க்கும் தீவிரவாதிகளின் எதிர்கால விதி எப்படி இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம்" என்று அது அறிவித்துள்ள, இந்தக் கருத்து பகிரங்கமாகவே இன்னும் கூடுதலான வகுப்புவாதக் கொலைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. இருந்தும்கூட, இது எதிர்க்கத் தக்கது என்று நீங்கள் காணவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் மற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்பவே JHU இன் அறிக்கை இயைந்து உள்ளது. சிங்கள உறுமய (SU) அல்லது ஜாதிகா சங்க சம்மேளனய (JSS) அல்லது தேசிய பிக்கு காங்கிரசின் ஒரு பிரிவினால், கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்களுக்கு சற்று முன்னர் JHU தோற்றுவிக்கப்பட்டது. இதனுடைய திட்டம் பெளத்த கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு நாடு அமைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுவதுடன், "சிங்கள தேசத்தின் தேசிய உரிமை" எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவை என்று வலியுறுத்தவும் செய்துள்ளது. இந்த அடிப்படையில் அது எவ்விதமான, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்தாலும்கூட, பேச்சு வார்த்தைகளை கடுமையாக எதிர்ப்பதுடன் LTTE க்கு எவ்விதமான சலுகைகள் கொடுக்கப்படுவதையும் எதிர்க்கிறது; இப்பொழுது, ஏனைய பிற இன பழிப்புவாத அமைப்புக்களான JVP போன்றவற்றுடன் சேர்ந்து கொண்டு, சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கு LTTE உடன் இணைந்திருக்கும் எக்கூட்டு அமைப்பும் ஏற்படுத்தப்படக் கூடாது என்ற தீய வகுப்புவாதப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளது.

நீங்கள் ஆட்சேபித்துள்ள குறிப்பிட்ட எதிர்ப்பை எடுத்துக் கொண்டால், JHU, அல்லது அதன் முந்தைய அமைப்புகளின் வகுப்புவாத வன்முறை வரலாற்றை குறிப்பிடுவது மிகவும் நியாயமற்றது என்றோ அல்லது பிழையானது என்றோ சொல்லமுடியாது; அதேபோல் சிவராமின் கொலை போன்ற இழிசெயல்கள் உருவாகக் கூடிய அரசியல் சூழ்நிலையை உருவாக்குவதில் அதற்கு இருக்கும் பங்கு பற்றிக் கூறுவதும் தவறாகாது. சில உதாரணங்களைக் கொடுக்கிறோம்.

* 2003 செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், JSS மற்றும் SU இரண்டும் கிழக்கு மாகாணத்தில் பெளத்த சிதைவுச் சின்னங்கள் ஆய்வதற்கும் மற்றும் மணிராசகுளத்தில் LTTE இன் இராணுவ முகாம்களை அகற்றக் கோரியும், ஆத்திரமூட்டல் முறையிலான எதிர்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தன. LTTE ஐ நேரடியாக மோதும் நோக்கத்தைக் கொண்ட இரண்டாம் பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு UNF அரசாங்கம் பாதாகாப்புப் படைகளை அனுப்பவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது; இது வன்முறைப் பூசல்கள், பரந்த அளவிலான வகுப்புவாத வன்முறை ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சுறுத்தலை கொண்டிருந்தது.

* 2003ம் ஆண்டில் இரண்டு அமைப்புக்களும், அரசாங்கம் ஒரு ஜனநாயக விரோத முறையிலான சட்டத்தை இயற்றி, கிறிஸ்தவ குழுக்கள் சமய மாற்றத்தை மேற்கொள்ளும் நெறிபிறழ்ந்த செயல் என்று கூறப்படுவதை தடுக்க வேண்டும் என ஒரு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டன. டிசம்பர் 2003ல் ரஷ்யாவிற்கு சென்றிருந்தபோது துறவியார் Gangodawila Soma இறந்த பின் இப்பிரச்சாரம் வலுவுற்றது. சிறிதும் சான்றுகள் இல்லாமல், SU மற்றும் JSS இரண்டும் துறவியாரின் மரணம் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் தீட்டிய சதியின் விளைவுதான் என்று கூறின.

இப்பிரச்சாரத்தின் நடுவில் கொழும்பு, அதன் புறநகர்கள் இன்னும் பல பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ திருச்சபைகள் தாக்குதலுக்கு உட்பட்டன. இதுகாறும் அறியப்பட்டிராத ஏராளமான குழுக்கள் திடீரென்று வெளிப்பட்டு அவற்றிற்கு பொறுப்பேற்றன. அவற்றுள் ஒன்று Therapuththabhaya Brigade ஆகும்; இது இப்பொழுது சிவராமை கொலைசெய்ததற்கு பொறுப்பேற்பதாக கூறியுள்ளது. SU, அதனுடைய உறுப்பினர்களுக்கு தொடர்பு இருக்கும் என்று செய்தி ஊடக தகவல் அறிக்கைகளை மறுத்துவிட்டது. ஆனால் அதன் பிரச்சாரம் இத்தகைய வன்முறைத் தாக்குதல்களை ஊக்குவித்தன என்ற உண்மையை அது மறுக்க முடியாது.

* ஒரு பிற இன பழிப்புவாத (chauvinist ) சிங்கள கும்பல் ஒன்று, SU வினால் முடுக்கிவிடப்பட்ட முறையில், அக்டோபர் 29, 2003 அன்று கொழும்பில் புதிய டெளன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கள, தமிழ் கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை தாக்கியது. பங்கு பெற்றவர்கள் பலர் காயமுற்றனர். SU இதில் தனது தொடர்பை மறுத்த போதிலும்கூட, அதன் துணச் செயலரான Nishantha Warnasinghe மற்றும் முக்கிய JSS இன் உறுப்பினரான Hadigalle Wimalasara இருவரும் அந்தக் கும்பலில் இருந்தனர்.

* SU, JSS இரண்டும் இணைந்து JHU என வந்த பின்னர் இதே வழிவகைகள் கையாளப்பட்டதில் வியப்பு ஏதும் இல்லை. பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கான் டிசம்பர் 11 அன்று பங்கு பெற்ற இசைத் திருவிழா மண்டபத்திற்கு வெளியே ஆத்திரமூட்டும் வகையில் இருந்த பிரச்சாரத்திற்கு JHU நேரடியாக பொறுப்பை கொண்டது; அப்பொழுது ஒரு குண்டு பார்வையாளர்கள்மீது விசப்பட்டு, இருவர் கொலையுண்டு பலர் காயமும் அடைந்த நிலையில் இந்நிகழ்வு முடிவுற்றது.

டிசம்பர் 2ம் தேதி, இந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்படவேண்டும் என்று கோரி JHU ஒரு பிரச்சாரத்தை தொடக்கியது; இது காங்கோடவிலா சோமா மரணத்தின் ஆண்டுவிழா அன்றே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியது. ஒரு முன்னணி அமைப்பான Soma Himi Chinthana Padanama, நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெளத்தத் துறவிகள் குழு ஒன்று உண்ணாவிரதம் இருப்பதற்கும் ஏற்பாடு செய்தது. இசை நிகழ்ச்சியை பாய்ந்து தடுக்க முற்பட்ட ஏராளமான எதிர்ப்பாளர்களை போலீசார் கைது செய்தனர். JHU இதன் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்ட போதிலும், இத்தாக்குதலுக்கான அரசியல் நிலைமைகளை ஏற்படுத்தியது அதுதான்.

இந்த அல்லது எந்த முந்தைய குற்றங்களுக்காகவும் எவர்மீதும் குற்றம் சாட்டப்படவில்லை; போலீஸ் படையில் காணப்படும் பிற இன பழிப்புவாத மனோபாவம் இருக்கும் நிலையில் இது ஒன்றும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் அல்ல. JHU உறுப்பினர் அல்லது தலைவர் எவருமோ கொலைக் குற்றச் சாட்டிற்கு உட்படுத்தப்படவும் இல்லை, கொலைக்காக தண்டனை பெறவும் இல்லை; எனவேதான் துல்லியமான தன்மையை கருத்திற் கொண்டு, நாங்கள் "மற்றும் கொலை" என்பதை, "JVP, JHU இரண்டுமே வன்முறை மற்றும் கொலை வரலாற்றைக் கொண்டுள்ளன" என்ற சொற்றொடரிலிருந்து நீக்கிவிட்டோம். JVP ஐ பொறுத்தவரையில், அந்த அமைப்பு 1980 களின் கடைசியில் அதன் அரசியல் எதிரிகள் நூற்றுக் கணக்கில் கொலையுண்டதில் அது நேரடித் தொடர்பைக் கொண்டிருந்தது. JVP அல்லது JHU உடன் சிவராமை கொன்றவர்களுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்றால் அது சாத்தியக் கூறு உடையதுதான்.

JHU பெயர் பற்றிய மொழியாக்கத்தைப் பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்தைப் பொறுத்த வரையில், "Hela" என்ற சொல் உறுதியான வகுப்புவாதத் தன்மையைக் கொண்டுள்ளது; அதாவது JHU ஒரு தூய சிங்கள அமைப்பு என்ற பொருளைக் கொடுக்கிறது. நீங்கள் Jathika Hela Urumaya என்பதை National Sri Lankan Heritage என்று கூறிப்பிடுகிறீர்கள்; மற்றவர்கள் National Sinhala Heritage என்று பயன்படுத்துகின்றனர். நாங்கள் அதன் சரியான பொருளைக் கொடுக்க முற்பட்டுள்ளோம். சிங்கள மொழியின் நயங்களை பற்றி நாம் வாதிடலாம்; ஆனால் அதையொட்டி கட்டுரையில் முன்வைத்துள்ள அரசியல் வாதங்களின் தன்மை மாறப் போவதில்லை.

மேற்கூறிய கருத்துக்களை "LTTE ஆதரவுடையது" என்று நீங்கள் உதறித் தள்ள விரும்பும் நோக்கம் கொண்டிருந்தால், இலங்கையில் WSWS உம் சோசலிச சமத்துவக் கட்சியும் LTTE மற்றும் அதன் தேசியவாத வேலைத்திட்டத்தை எதிர்க்கும் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளவை என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். உண்மையான சோசலிஸ்டுகள் என்ற முறையில், நாங்கள் அனைத்து விதமான தேசியவாத, மற்றும் பிற இன பழிப்புவாத வடிவமைப்புக்களுக்கு குரோதமாக இருப்பதோடு, தொழிலாள வர்க்கம் மத, இன அல்லது மொழி வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் தங்களுடைய சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக போராடவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இதுதான் இலங்கையில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நச்சாக்கிக் கொண்டிருக்கும், தொழிலாள வர்க்கத்தின் மீது பேரழிவிற்கு பின் பேரழிவு என்று கொண்டுவரும் இலங்கையின் ஏனைய ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் போக்கு, அவற்றின் வகுப்புவாத அரசியலிலிருந்து எங்களை விலக்கி வைக்கிறது.

உங்கள் உண்மையுள்ள

கே. ரத்நாயக்கா

உலக சோசலிய வலைத்தளம்

Top of page