World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Romania: New right-wing government slashes taxes, fuels social tensions

ருமேனியா: புதிய வலதுசாரி அரசாங்கம் வரிகளை வெட்டுகிறது, சமூக பதட்டங்களை தூண்டிவிடுகிறது

By Markus Salzmann
2 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

''ருமேனிய சமுதாய நவீனமயமாதல் இன்று தொடங்குகிறது" என்று சென்ற டிசம்பர் கடைசியில் அரசாங்கத் தலைவராக பதவியேற்றதும் தனது முதலாவது உரையில் பிரதமர் Calin Popescu-Tariceanu அறிவித்தார். தமது அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக பணியாற்றும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். ஜனநாயகக் கட்சியின் (PD) தலைவரான புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி Traian Besescu-வால் தேசிய தாராண்மை கட்சியின் (PNL) தலைவர் அரசாங்கத்தின் தலைவராக இப்போதுதான் முன்மொழியப்பட்டிருந்திருந்தார். ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் தொழிற்துறையை தனியார்மயமாக்குவது, வரிகளை குறைப்பது மற்றும் சமூக சேவைகளை குறைப்பது ஆகிய இலக்குகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக ஒத்துழைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

என்றாலும், அரசாங்கம் ஒரு மிகவும் ஆட்டம் காண்கின்ற நாடாளுமன்ற பெரும்பான்மையில் தங்கி நிற்கிறது. நவம்பர் கடைசியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில், Tariceanu-வின் தேசிய தாராண்மைவாதிகளும், Basescu-வின் ஜனநாயகக் கட்சிக்காரர்களும் போதுமான வாக்குகளை பெற முடியவில்லை. திரும்பத் திரும்ப புதிய தேர்தல்கள் பற்றிய அச்சுறுத்தல்கள் மூலம்தான் Tariceanu தனது பக்கம் இரண்டு சிறிய கட்சிகளை சேர்த்துக்கொள்ள முடிந்தது. தொடக்கத்தில், ஹங்கேரிய சிறுபான்மை (UMDR) மற்றும் மனிதநேய கட்சியும் (PUR) சமூக ஜனநாயகவாதிகளுடன் (PSD) கூட்டணி வைத்துக்கொள்வதை ஆதரித்தன, அந்தக் கட்டம் வரை அது தான் பதவியில் இருந்தது.

என்றாலும், இந்த நான்கு-கட்சி கூட்டணி கூட ஒரு அறுதிப் பெரும்பான்மைக்கு போதுமானதல்ல. இதன் விளைவாக, அரசாங்கம் அதிதீவிர-வலதுசாரி கிரேட் ருமேனியா கட்சியை (PRM) சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது, அதன் தலைவர் Vadim Tudor, ஸ்ராலினிச Nicolae Ceausescu ஆட்சியில் இழிபுகழ் பெற்ற இரகசிய சேவை செயலகத்தில் ஒரு முன்னாள் அதிகாரி, அவர் பகிரங்கமாக பாசிச நிலைப்பாடுகளை முன்னெடுத்து வைப்பவர் ஆவார். கூட்டணிக்கு வெளியில் அரசாங்கம் பெற்றிருக்கின்ற 27 வாக்குகளில், அதி தீவிர வலதுசாரி PMR-லிருந்து ஒரு கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

அரசாங்கப் பிரதிநிதிகள் இடைவிடாது தங்களது நாடு ஒரு ''முன்மாதிரி'' என்றும் ''பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்றுமதி'' செய்பவை என்று அறிவித்தாலும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட விதத்தையும் பதவியேற்றதையும் அதன் தொடக்க கட்ட நடவடிக்கைகளையும் மற்றும் 2007 ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவது உள்பட, வரவிருக்கின்ற எதிர்காலத்தையும் ஏற்கனவே பார்க்கிறவர்கள், எதிர்காலம் பெரும் பதட்டங்களாலும் மோதல்களாலும் மேலாதிக்கம் செலுத்தப்படும் என்றே கருதுகின்றனர்.

Tariceanu-யுடைய 24 உறுப்பினர்களை கொண்ட மந்திரி சபையில் நாட்டின் பெரும்பாலும் வெளியில் தெரியாத பிரதிநிதிகளான மெல்லிய மேல்வர்க்க தட்டினரை சேர்ந்தவர்கள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றனர். ருமேனிய மக்களில் கால்பங்கிற்கு மேற்பட்டவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர், இந்த அரசாங்கம் மிகப் பெரும்பாலான மக்களது நலன்களை அப்பட்டமாக எதிர்த்து நிற்கிறது. 24 காபினெட் அமைச்சர்களில் பத்து பேர் பெருந்தொழில்களின் சொந்தக்காரர்கள். ''பணக்காரர்கள் அரசாங்கம்'' மற்றும் அரசாங்க ''கூட்டிணைப்பு கழகம்'' என்ற கேலிச்சொற்கள் ஏற்கனவே பழக்கத்தில் வந்துவிட்டன.

பிரதமர் Tariceanu 1996 முதல் 1997 வரை வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக பணியாற்றியவர், அவர் ஒரு ''வெற்றி பெற்ற'' வர்த்தகராக கருதப்படுகிறார், அவருடைய தனிப்பட்ட சொத்து மதிப்பீடு 15 மில்லியன் டாலர்கள் ஆகும். துணைப் பிரதமர் George Copos அமைச்சரிகளிலேயே மிகப் பெரிய பணக்காரர், அவருடைய சொத்து மதிப்பு 160 மில்லியன் டாலர்கள் ஆகும். பாதுகாப்பு அமைச்சர் Theodor Atanasiu, பொருளாதார அமைச்சர் Ioan Codrut Seres மற்றும் பிறர் தங்களது வெற்றிபெற்ற தொழில்களை பகட்டாகக்காட்டி நிற்கின்றனர்.

புதிதாக பதவியேற்ற அரசாங்கம் நியமிக்கப்பட்ட சிலமணி நேரத்திற்குள்ளேயே திடீரென்று வரிகளை குறைக்க முடிவு செய்தது. ஜனவரி 1 தேதியில் இருந்து அனைத்து வருமானங்கள் மீதும் தற்போது மொத்தமாக 16 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அந்த நேரம் வரை, வரி விதிப்பு 40 சதவீதமாக இருந்தது. முதலீட்டு லாப வரி வீதம் முன்னர் 25 சதவீதம் ஆக இருந்தது, இப்போது 16 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், முதலாளிகளுக்கான சமூக செலவினங்கள் 10 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நகர்வுகளோடு, தற்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு செயல்திறனுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரிக்குறைப்பு போட்டியில் Bucharest அரசாங்கம் நுழைகிறது. எஸ்தோனியா, ஸ்லோவேக்கியா, மற்றும் ஹங்கேரி பொன்றவை பெரிய மேற்கு நாடுகளின் கம்பெனிகளுக்கு பெரும் மகிழ்ச்சி தருகின்ற அளவிற்கு கணிசமான அளவு வரிகளை வர்த்தகத்திற்கு குறைத்திருக்கின்றன. 2004 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துள்ள நாடுகளிலேயே ருமேனியா மிகக் குறைந்த தொழிலாளர் செலவு உள்ள மூன்றாவது நாடு, (ஒரு மணி நேரத்திற்கு 1.50 யூரோக்கள்), அரசாங்கம் வர்த்தக வரி விதிப்பிலும் மிகக் குறைந்த விகிதம் உள்ளது என்று நிரூபிக்க விரும்புகிறது.

வரி வெட்டுக்கள் மக்கள் மீது இன்னும் அதிகமான அளவிற்கு அதிரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனவரி இறுதியில் புக்காரெஸ்ட்டிற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பிய சர்வதேச நாணய நிதியம் (IMF) கூட வரி வருவாயில் குறைந்த பட்சம் 30 மில்லியன் லெய் (750 மில்லியன் யூரோக்கள்) அளவிற்கு துண்டு விழுவது நீண்டகால அடிப்படையில் பட்ஜெட்டில் துண்டுவிழும் நிலையை உருவாக்கி பண வீக்கத்தை பெருக்கிவிடும் என்று கவலைகளை தெரிவித்திருக்கிறது.

புதிய அரசாங்கத்தின்படி, அரசு நடத்துகின்ற நிறுவனங்களை விற்று விடுவது, தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோர் மீது வரிகளை இரட்டிப்பாக்குவது மற்றும் சிறிய கம்பெனிகளுக்கு மானியங்களை வெட்டுவது இவற்றின் மூலம் பட்ஜெட் பற்றாக்குறை தடுத்து நிறுத்தப்பட இருக்கிறது.

இந்தச் சூழ்நிலைகளில், நலிவுற்றிருக்கும் பொது கலாச்சாரம், கல்வி மற்றும் சமூக அமைப்புக்களில் முதலீடு செய்வதற்கு ஒன்றுமிருக்காது. முந்திய அரசாங்கம் தொடக்கி வைத்த ஓய்வூதியங்களில் குறைந்தபட்ச உயர்வு, பள்ளி குழந்தைக்கான சமூகத் திட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெறுவதற்கான சமிக்கைகள் ஏற்கனவே தோன்றிவிட்டன. பொது சேவை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காதிருக்க ஏற்கனவே உடன்படிக்கை இருந்து வருகிறது.

பக்கத்து நாடான ஸ்லோவேக்கியாவில் அத்தகைய நடைமுறைகள் ஏற்கனவே துவங்கி அவற்றின் விளைவுகளை காணமுடிகிறது, அங்கே மொத்தமாக 19 சதவீதம் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சொத்துகள் மறு விநியோகத்தில் அளவுகடந்த நிலைக்கு வழிவகுத்திருக்கிறது. அழுத்துகின்ற பட்ஜெட் பற்றாக்குறைகளை சரிக்கட்டுவதற்காக நுகர்பொருட்கள் மீது மதிப்பு கூடுதல் வரி 5 சதவீதம் உயர்த்தப்பட்டதால், வாழ்க்கைச் செலவு நெருக்கடி கட்டத்திற்கு உயர்ந்து கொண்டு செல்கிறது.

ருமேனியா ஐரோப்பாவில் 2007-ல் உறுப்பினர் ஆவதற்குரிய அடிப்படை தகுதிகளில் ஒன்று "வர்த்தக தாராளமயமயமாக்கலை விரைவுபடுத்துதலும்", விலைக்கட்டுப்பாடுகளை கைவிடுவதும்தான் அவற்றால் ஒரு புதிய அலை போன்ற விலை உயர்வுகள் ஏற்படும். இது தவிர, ஐரோப்பிய ஒன்றியம் நிலக்கரி மற்றும் சுரங்கத்தொழிலில், "மிதமிஞ்சிய உற்பத்தி திறனை'' குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. இந்த பகுதிகளில் மட்டுமே ஏறத்தாழ 50,000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவர்.

வரிகள் குறைப்பு மற்றும் தனியார்மயமாக்குதலால் உள்நாட்டு சமூக அமைப்பு திவாலாகிவிடும் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், Tariceanu அரசாங்கம் நாட்டை ராணுவமயமாக்குவதை அதிகரித்து வருகிறது. பதவியேற்பு உரையில் பேசிய பிரதமர், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினராவதற்கு நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இருப்பினும் அமெரிக்கா, ருமேனியாவின், "சலுகை பெற்ற பங்காளியாக", நீடிக்குமென்று குறிப்பிட்டார். முந்திய சமூக ஜனநாயக அரசாங்கங்களான Iliescu-வாலும், Nastase-வாலும் தொடக்கப்பட்ட அமெரிக்காவுடனான நெருக்கமான உறவுகள், புதிய தலைமையின் கீழ் தொடரும் என்றும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அரசின் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.

ஈராக் போரின்போது ருமேனியா எந்தவிதமான நிபந்தனையுமின்றி புஷ் அரசாங்கத்தின் பக்கம் நின்றது. மக்கள் கருத்துக்கள் எடுக்கப்பட்டதில் 71 சதவீத ருமேனிய மக்கள் போரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாக இருப்பினும், அமெரிக்க இராணுவம் ஒரு விரிவான இராணுவத்தை இந்தநாட்டில் தொடர்ந்து வைத்திருக்கிறது. ருமேனிய இரணுவ பிரிவுகள் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றி வருகின்றன. ஈராக்கில் இந்த நாட்டின் படைகளை நிறுத்திவைப்பது நீடிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் Atanasiu ஏற்கனவே, அறிவித்திருக்கிறார்.

இதற்கு மாறாக, இலாபம் தரும் பேரங்களை தருவதாக அமெரிக்க பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர். ருமேனிய தொழிற்துறை உபகரண பாகத்தை ஈராக்கிய இராணுவத்திற்கு வழங்குகிறது. அதற்கும் மேலாக, ருமேனியாவிற்கு 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இராணுவ உதவி கிடைக்கும். அமெரிக்க இராணுவ பிரதிநிதிகள் கருங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள இராணுவ தளங்கள் விரிவுபடுத்தப்படும், கூடுதலாக போர்வீரர்கள் அனுப்பப்படுவர் என அறிவித்தனர். இதுவரை 32 ருமேனிய கம்பெனிகள், பிரதானமாக எண்ணெய், எரிவாயு நிறுவனங்கள் ஈராக்கில் சுரண்டலில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கின்றன.

எல்லா மட்டங்களிலும் ருமேனிய கொள்கைகளில் அமெரிக்கா தனது செல்வாக்கை செலுத்தி வருகிறது. சென்ற ஆண்டு அமெரிக்க வட்டாரங்களிலிருந்து ருமேனிய இரகசிய சேவையான SRI-ன் தலைவர் Radu Timofte 150,000 டாலர்களைப் பெற்றார் என்று அண்மையில் அம்பலத்திற்கு வந்த தகவல் தெரிவிக்கிறது. ஜனாதிபதி Basescu-ன் முதலாவது வெளிநாட்டு விஜயம், பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை சந்தித்ததில், ஈராக் பிரச்சனை ஆதிக்கம் செலுத்தியது மற்றும் பிரிட்டிஷ் தலைமையில் ஈராக்கில் செயலாற்றி வருகின்ற ருமேனிய துருப்புக்களை அதிகரிப்பது பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டது. இந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு ருமேனியத் தலைவர்கள் விஜயம் செய்யும்போது உரையாடல்களில் முக்கிய விஷயமாக ஈராக்கும் இருக்கும் .

என்றாலும், அமெரிக்க நலன்கள் நடப்பு இராணுவ படை வீரர்களை நிறுத்தி வைப்பதற்கும் அப்பாற்பட்டதாகும். தனது ருமேனிய சகாக்களோடு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் சந்திப்பு நடத்தியதை தொடர்ந்து வெளியிட்ட அறிவிப்பில், கருங்கடல் பிராந்தியத்தில் "ஸ்திரத்தன்மை" பிரதான கவலையாகும் என விளக்கினார். ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நீண்டகால அடிப்படையில் அமெரிக்காவின் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்வது விவாதங்களில் இடம் பெற்ற முக்கிய அம்சமாகும். பிளேயருக்கும், Baseseu-விற்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளில் தெளிவாக்கப்பட்டிருப்பதை போன்று, ருமேனியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதுதான் குறிக்கோள்.

வாஷிங்டனுடன் ருமேனியாவின் நெருக்கமான உறவு ஏற்கனவே இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தில் மோதல்களுக்கு இட்டுச்சென்றது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய கமிஷனின் முன்னாள் தலைவர் Romano Rodi குறிப்பிட்டிருந்ததைப்போல், ருமேனியா பொருளாதார அடிப்படையில் ஐரோப்பாவிற்கும் இராணுவ அடிப்படையில் அமெரிக்காவிற்கும் சொந்தமாக இருக்க முடியாது.

Top of page