World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

China's "anti-secession law" adds to tension in North East Asia

வட கிழக்கு ஆசியாவில் பதட்டங்களை பெருக்கிவிட்ட சீனாவின் ''பிரிவினை-எதிர்ப்பு சட்டம்''

By John Chan
16 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

தைவான் சுதந்திரப் பிரகடனம் எதையும் வெளியிடுமானால் அதை தடை செய்வதற்கு வகை செய்யும் "பிரிவினைக்கு-எதிரான சட்டம்'' மக்கள் பெருமன்றத்தில் கூடியிருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சீன தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) இறுதிக் கூட்டத்தொடரில் திங்களன்று நிறைவேற்றப்பட்டது. தைவான் பிரிந்து செல்லுமானால் சீனா இராணுவ வலிமையை பயன்படுத்தும் என்று நீண்டகாலமாக விடுத்துவரும் அச்சுறுத்தலுக்கு இந்த சட்டம் முறையான அங்கீகாரம் தருகிறது.

தைவானுக்கு ஒரு ''பொருத்தமான'' அந்தஸ்தை வழங்கவும் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள இராணுவ மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நடத்துவது உட்பட தைவான் வளைகுடாவில் ஒரு ''சமாதான'' கட்டுக்கோப்பை உருவாக்க அந்தச் சட்டம் அழைப்பு விடுக்கின்றது. ஆனால் சீனாவிலிருந்து தைவான் "எந்த வடிவத்தில்" "பிரிவதாக இருந்தாலும்" அதைத் தடுப்பதற்கு சீன அரசாங்கம் "சமாதானம் அல்லாத" வழிமுறைகளையும் கையாளவும் அது முன்னேற்பாடு செய்கிறது. தேசிய மக்கள் காங்கிரசுடன் முன் ஆலோசனை எதுவும் நடத்தாமல் போர் தொடுக்க பிரிவு 8 வகை செய்கிறது.

பெய்ஜிங் மறுத்துக்கொண்டு வந்தாலும், இந்தச் சட்டம் வடகிழக்கு ஆசியாவில் பதட்டங்களை உண்டு பண்ணும். தைவான் ஜனாதிபதி சென்-சுய்-பியான் உடனடியாக அந்தச் சட்டத்தை கண்டித்தார் மற்றும் மார்ச் 26-ல் அதை எதிர்ப்பதற்கு ஒரு மில்லியன் மக்கள் அடங்கிய பேரணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். சென் அந்தத் தீவின் அந்தஸ்து தொடர்பாக ஒரு பொது மக்கள் கருத்தெடுப்பை நடத்துவதற்கு தந்திருந்த உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்கிக் கொண்டாலும், அவரது ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP), தைவானுக்கு முழு சுதந்திரம் என்ற கோரிக்கையை அடிப்படையாக கொண்டது.

போர் அச்சுறுத்தலை குறைத்துக்காட்டும் விதமாக, சீன அரசாங்கம் அந்தச் சட்டம் "போர் அணிதிரட்டலுக்கான கட்டளையல்ல'' என்று அறிவித்தும், சமாதான வழிமுறைகள், "முற்றிலுமாக தீர்ந்து விட்ட பின்னர்தான்" "கடைசி கட்ட நடவடிக்கையாக" இராணுவத்தை பயன்படுத்துவதாகவும் வலியுறுத்திக் கூறியுள்ளது. என்றாலும் இந்தச் சட்டம் உடனடியாக தைவானுக்கெதிரான அச்சுறுத்தல் மட்டுமல்ல, மாறாக பிரிவினைவாத இயக்கங்கள் செயல்பட்டுக்கொண்டுள்ள இதர சீன பிராந்தியங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.

தேசிய மக்கள் காங்கிரசில் சீனாவின் தலைமை இராணுவ பதவியை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ஹூ ஜின்டாவோ இராணுவ பிரதிநிதிகள் கூட்டத்தில் கூறினார்: "நாம் சமாதானத்தை பேணிக்காக்கவும், போர்களை தடுக்கவும், ஏதாவது போர் வந்துவிட்டால் அதில் வெற்றி பெறவும் சாத்தியமான இராணுவ போராட்டங்களுக்கான தயாரிப்புகளை முடுக்கிவிட்டாக வேண்டும் மற்றும் நெருக்கடிகளை சமாளிப்பதற்கான நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்'' என்று குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு தங்களது விமர்சனங்களை தெரிவித்த, மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) பிரதிநிதிகள் தைவானின் "பிரிவினையை நசுக்கும்" அத்தகையதொரு சட்டத்திற்கு தங்களது வலுவான ஆதரவை பகிரங்கமாக அறிவித்தனர்.

இத்தகைய எச்சரிக்கைகள் இதற்கு முன்னரும் தரப்பட்டன. சீனா, தைவானை ஒரு துரோகமிழைத்த மாகாணம் என்று கருதுகின்றது, ஹாங்காங் வழியில் "ஒரு நாடு, இரு முறைகள்" என்ற அடிப்படையில் பிரதானநிலப்பகுதியுடன் அது ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறது. 1949 புரட்சிக்குக் பின்னர் முறியடிக்கப்பட்டுவிட்ட கோமிண்டாங் (KMT) படைகளுக்கு தைவான் ஒரு புகலிடமாக ஆயிற்று. 1972-ல் பெய்ஜிங்குடன் வாஷிங்டன் மீண்டும் நட்புறவு கொண்ட பின்னர் அதன் இராணுவ ஆட்சி சர்வதேச அங்கீகாரத்தை இழந்தது.

தற்போது தைவானின் சர்வதேச அந்தஸ்து நிச்சயமற்ற நிலையில் உள்ளது: அமெரிக்கா, இதர பெரிய வல்லரசுகளுடன் சேர்ந்து இந்தத் தீவு "ஒரே சீனாவின்" ஓர் அங்கமென்று ஏற்றுக் கொள்கிறது, ஆனால், தைவான் உறவுகள் சட்டப்படி வெளிநாட்டு தாக்குதலிலிருந்து தைவானை பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ளது. தைவான் செல்ல வேண்டிய பாதை தொடர்பாக தைப்பேயில் கடுமையான பிளவுகள் நிலவுகின்றன: சீனாவின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பினும் ஆளும் செல்வந்தத்தட்டின் ஒரு பகுதியினரின் முழு சுதந்திரத்திற்கு தள்ளும் ஆதரவும், அவர்களது எதிரிகள் பெய்ஜிங்குடன் ஒத்துப்போகவும் முயற்சிக்கின்றனர்.

சீனாவிற்கும் தைவானுக்குமிடையில் மோதல் உருவாவதற்கான உள்ளார்ந்த தன்மை மீது சர்வதேச ஊடகங்கள் குவிமையப்படுத்தியுள்ளனவே தவிர, தைவான் சுதந்திர நாடாக ஆவதற்கு எதிராக ஒரு திட்டவட்டமான சட்டத்தை ஏன் பெய்ஜிங் இயற்றியிருக்கிறது என்று மிகச்சிறிதளவே குறிப்பிட்டிருக்கின்றன. நடப்பிலுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் சீனாவில் எந்த பிரிவினைவாத இயக்கத்திற்கும் எதிராக இராணுவத்தை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே அதிகாரம் அளித்துள்ளது.

அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்களை பொறுத்தவரை "பிரிவினைவாத-எதிர்ப்பு சட்டம், மக்களது உறுதியான முடிவை அறிவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சீனா டெய்லி பகட்டாக அறிவித்தது: "ஒரு சீனப் பிரச்சனை தொடர்பாக சீனர்கள் ஒரு சட்டம் இயற்றுவார்களானால், அதில் வியப்படைவதற்கு என்ன இருக்கிறது? அதைச் செய்வதற்கு யார் சிறந்த தகுதிபடைத்தவர்கள்? தைவான் சீனாவின் ஒரு பகுதி மற்றும் சீனாவில் சட்டம் இயற்றுபவர்கள் அதற்காக ஒரு சட்டம் இயற்றியிருக்கிறார்கள். அதற்குமேல் எதுவுமில்லை". என்று வெளியிட்டுள்ளது.

இந்த தேசியவாத வெற்றுரைக்கு பின்னால் ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது. 1949 புரட்சிக்கு பின்னர், தைவானில் கோமிண்டாங் சர்வாதிகாரத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கைக்கான சட்டம் இயற்றுவது அவசியமென்று பெய்ஜிங் கருதவில்லை. கோமிண்டாங்கின் ஊழல் மிக்க முதலாளித்துவ ஆட்சியை கவிழ்த்த சீனப் புரட்சியின் ஒரு தொடர் நடவடிக்கையாகவே, "தைவான் விடுதலையை" அது கருதியது.

விவசாயிகளை அடித்தளமாகக் கொண்ட இராணுவங்களால் பெய்ஜிங்கில் ஆட்சி அதிகாரத்தை பிடித்துக்கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம் எப்போதுமே சோசலிஸ்ட்டுகளோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அல்ல. ஆரம்பத்திலிருந்தே, மாவோ சேதுங் முதலாளித்துவ பிரிவுகளோடு ஒத்துப்போகவே முயற்சித்தார்-----அந்த நிகழ்ச்சிப்போக்கு 1970களின் கடைசியில் டெங் சியாவோபிங் மேற்கொண்ட சந்தை ஆதரவு கொள்கைகள் மற்றும் சீனாவை வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்து விடுவதில் போய் முடிந்திருக்கிறது.

டெங் முதலாளித்துவத்தை தழுவிக்கொண்டது, தைவான் தொடர்பாகவும் ஹாங்காங் மற்றும் மக்காவோ தொடர்பாகவும் அவர் விரிவுபடுத்திய கொள்கையில் சுருக்கமாக விளக்கப்பட்டிருக்கிறது. அவரது "ஒரு நாடு, இரு முறைகள்" என்ற சூத்திரத்தின் அடிப்படையில் அந்த நாடுகளிலுள்ள முதலாளித்துவ பொருளாதாரமும், நடைமுறையிலுள்ள அரசு இயந்திரங்களும் அப்படியே நீடிக்கும், அந்தப் பகுதிகள் சீனாவின் ஓர் அங்கமாக இருந்து, அந்த உள்ளூர் ஆளும் செல்வந்தத்தட்டை சேர்ந்தவர்கள் தங்களது அரசியல் விசுவாசத்தை பெய்ஜிங்ற்கு தெரிவிக்கும் நிலை நீடிக்கும்வரை இதே ஏற்பாடு நீடிக்கும் என்று குறிப்பிட்டார்.

சந்தை மறு சீரமைப்புத் திட்டங்களை அவர் அமுல்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் கூட, டெங் மிகுந்த இறுமாப்போடு வாதிடும்போது, பிரதான பகுதியில் நிறைவேற்றி வருகின்ற "சோசலிச முறை" இறுதியாக உயர்வானது என்று நிரூபிக்கப்படும்போது, அதை தைவான், ஹாங்காங் மற்றும் மக்காவோ ஆகியன அரவணைத்துக்கொள்ளும் என்று குறிப்பிட்டார். அதற்கு இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், பெய்ஜிங்கின் முதலாளித்துவ வளைவரை பாதை சீனாவில் சோசலிசத்தை கட்டியெழுப்புவது என்ற எந்தக் கூற்றையும் கீழறுப்பதாக அமைந்திருப்பதால், சீனாவுடன் தைவானை மறு ஐக்கியம் கொள்வதற்கு "ஒரு புரட்சிகரப்போரை" நடத்துவதற்கு எந்தவிதமான நியாயமும் இல்லாமல் போய்விட்டது.

பெய்ஜிங் தைவானை "விடுவிப்பது" பற்றிக் கூட பேசுவதில்லை. எப்படி "எதிர்ப்புரட்சிகர குற்றம்" "சதிவேலையாக" மாறிற்றோ, அதேபோன்று "தைவானை விடுவிப்பது" என்பது சீன தேசியவாதத்தின் அடிப்படையில் "பிரிவினைக்கு எதிரான" சட்டமாக மாறிவிட்டது.

இப்படி கலைச்சொற்களை மாற்றிக்கொண்டிருப்பது பெய்ஜிங் தனது ஆதரவு அடித்தளத்தை பெருக்கிக் கொள்வதற்கு எந்தளவிற்கு சித்தாந்த அடிப்படையில் தேசியவாதத்தை சார்ந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதன் பொருளாதார கொள்கைகள் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பரந்த தட்டினரிடையே பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பரந்த வேலையில்லாதோர் மற்றும் வறுமையை சீர்ப்படுத்துவதற்கு கூட சமூக கொள்கைகளை வழங்க முடியாத நிலையில் ஆட்சி குறிப்பாக புதிய நடுத்தர வர்க்கத்தினரிடையே சீன தேசியவாதத்தை கிளறிவிடுவதை நம்பியிருக்கிறது, அதை வளர்ந்துவரும் சமூக பதட்டங்களிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் ஒரு வழியாக பயன்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக தைவானை ஒன்றிணைப்பது இருக்கிறது.

தைவானுடன் இராணுவ மோதல் ஏற்படுமானால் அது உடனடியாக அமெரிக்காவை ஈடுபடுத்தும் என்பதில் பெய்ஜிங் கவலை கொண்டிருப்பது தெளிவாகிறது. அதே நேரத்தில், சீனாவில் பிற இடங்களில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களின் சங்கிலி போன்ற எதிர்விளைவுகளை உசுப்பிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக தைவான் பகிரங்கமாக பிரிந்து செல்வதை அது அனுமதிக்க முடியாதுள்ளது. பெய்ஜிங்கின் கடுமையான நடவடிக்கை முறைகள் திபெத்திலும் எண்ணெய் வளம் மிக்க மேற்கு மாகாணமான Xinjiang-லும் தொடர்ந்து பிரிவினை உணர்வுகளை கிளறிவிட்டுக்கொண்டேயிருக்கிறது மற்றும் ஹாங்காங்கில் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.

புதிய ''பிரிவினைவாத-எதிர்ப்பு'' சட்டத்தை விமர்சிப்பதாக இருந்தாலும், தேசிய மக்கள் காங்கிரசில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு திங்களன்று வாஷிங்டனிடமிருந்து மட்டுப்படுத்தப்பட்ட பதில்களையே வெளிப்படுத்தியிருக்கிறது. அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றி கருத்துத் தெரிவித்த வெள்ளை மாளிகை பேச்சாளர் ஸ்கொட் மெக்கிலேலன் அதை ''துரதிர்ஷ்டவசமானது'' என்று வர்ணித்தார். "நீரிணையின் குறுக்கே உறவுகளில் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கெதிராக" அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். ''ஒருதலைப்பட்சமாக தைவான் இதுகாறும் உள்ள நிலையை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும்'' அமெரிக்கா எதிர்ப்பதாக குறிப்பிட்டார்-----இது தைப்பே தன்னிச்சையாக சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டுவிடக்கூடாது என்று மறைமுகமாக குறிப்பிடுவதாகும்.

2000 தேர்தலில் புஷ், சீனா தொடர்பாக அமெரிக்க கொள்கை அதிக தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டுமென்று பிரச்சாரம் செய்தார், அதை ஒரு "மூலோபாய போட்டியாளர்" என்று முத்திரை குத்தினார். பதவியில் அமர்ந்ததும், புஷ் நிர்வாகம் தனது வாய்வீச்சின் வேகத்தை குறைத்துக்கொண்டது-----சீனாவில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ள அமெரிக்க பெருநிறுவன செல்வந்தத்தட்டை சேர்ந்த பிரிவுகளின் ஒரு பாகமாக இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டது. 2001 செப்டம்பர் 11-க்கு பின்னர், வாஷிங்டன் முதலில் ஆப்கானிஸ்தான் மீதும், அதற்கு பின்னர் ஈராக் மீதும் முன் கூட்டியே படையெடுப்பதிலேயே ஈடுபட்டிருந்தது. பெய்ஜிங்கை பொறுத்தவரை, அதன் பங்கிற்கு ''பயங்கரவாதத்தின் மீதான பூகோள போர்'' என்பதை பிடித்துக்கொண்டு அமெரிக்காவோடு எந்தவிதமான மோதலுக்கும் இடம் கொடுக்காமல் புஷ் நிர்வாகத்தோடு ஒத்துப்போனது.

ஆயினும், தைவான் தொடர்பான எந்தவகையிலாவது உக்கிரமடையும் பதட்டங்கள், பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்குமிடையே உள்ள அமைதிப்படுத்த உறவுகளை, 2000-ல் தெளிவாய் அறிவிக்கப்பட்ட மோதல் போக்கிற்கு திரும்பச் செய்துவிடும்.

Top of page