World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Beiging embraces former arch-enemy

Kuomintang leader visits Chinese mainland

முன்னாள் பெரும் விரோதியை பெய்ஜிங் ஆரத்தழுவுகிறது

கோமிண்டாங் தலைவர் சீனப் பிரதான நிலப் பகுதிக்கு வருகை

By John Chan
7 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

கோமிண்டாங் (KMT), தலைவர் லியென் சான், சீனாவிற்கு மேற்கொண்ட எட்டு நாட்கள் பயணம், எவ்வித பூசலின் அறிகுறியும் இன்றி செவ்வாய்க்கிழமையன்று முடிவுற்றது. உண்மையில், மாவோ சேதுங்கின் விவசாயப் படைகளினால் விரட்டி தைவானுக்கு பறந்தோடுமாறு நிர்பந்திக்கப் பட்டிருந்த, ஓர் ஊழல் நிறைந்த மிருகத்தனமான ஆட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த, ஓர் அரசியல் தலைவர் என்ற முறையில் வரவேற்கப்பட்டதை காட்டிலும் நீண்ட நாட்கள் தொலைந்திருந்த நண்பர் அல்லது சகோதரரை வரவேற்றதுபோல்தான், சீனத் தலைவர்கள் லியெனை வரவேற்று மகிழ்ந்தனர்.

லியெனும் ஜனாதிபதி ஹு ஜின்டாவோவும், பெய்ஜிங்கின் மக்கள் பேரரங்கில் அவர்கள் கைகுலுக்கிக் கொண்டதை பார்த்தபோது, எந்த கறுப்பு நேர்த்தி உடை அணிந்த கனவான் "கம்யூனிஸ்ட்" என்றும், எவர் தைவானினுடைய தலைநகரத்தின் அரசியல் தூதர் என்று கூறுவதும் கடினமாகப் போயிற்று. இது வெறும் தோற்றத்தில் மட்டும் அல்ல: இருவருமே சீனத் தேசியவாதம் பற்றியும், உலக அரங்கில் கூடுதலான வகையில் சீனாவின் பங்கைப் பற்றியும் இறுதியில் தைவான் சீனப் பிரதான நிலப் பகுதியுடன் இணைவதையும் பற்றிப் பெரிதும் பேசினர்.

கோமிண்டாங் தலைவரை ஹு ஜின்டோ ஆரத் தழுவி நின்றமை, சீன ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன்னுடைய பழைய சோசலிச போலிநடிப்புக்களை கைவிட்டுவிட்டதை விளக்கியது மட்டுமல்லாமல், சீனப்புரட்சியுடனேயே தனக்கு இருந்த தொடர்புகளையும் குப்பையில் போடும் நிகழ்ச்சிப்போக்கில் இருக்கிறது. லியென் பெய்ஜிங்கின் "ஒரே சீனாக் கொள்கைக்கு" கோமிண்டாங் இன் ஆதரவை மறு உறுதி செய்யவேண்டியதுதவிர லியென் எதற்கும் மன்னிப்புக் கோரத் தேவையில்லாமலும், எந்த நிலைப்பாட்டில் இருந்தும் பின்வாங்க வேண்டிய தேவை இல்லை என்ற நிலையிலும் இருந்தார்

1949ம் ஆண்டு கோமிண்டாங் தைவானுக்கு தப்பிஓடிச் சென்ற நேரத்தில், முடிந்ததனைத்தையும் அது கொள்ளையடித்திருந்ததுடன், சீன பிரதானநிலப்பகுதியை பெரும் அழிவிற்கும் உட்படுத்திச் சென்றிருந்தது. KMT உடைய வீழ்ச்சி "பழைய சீனா"வின் தீமைகள் முடிவிற்குக் கொண்டு வந்துவிடப்படும் என்ற நினைப்பில் மில்லியன் கணக்கான மக்களை போரிட்டு, உயிரையும் துறந்திருந்தனர். அதன் பங்கிற்கு கோமிண்டாங் தலைமை, 1990களின் முற்பகுதியில்கூட தைவானில் இருக்கும் "சீனக் குடியரசுதான்" சட்டநெறியான சீன அரசாங்கம் என்றும், "கம்யூனிச தகாவழியில் கைப்பற்றியோர்" அல்ல என்றும் வலியுறுத்தி தொடர்ந்து கூறிவந்தது.

கடந்த வாரம், முன்னாள் கோமிண்டாங் தலைநகரான நான்ஜிங்கிற்கு, லியென், 70 கோமிண்டாங் அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவுடன் தன்னுடைய "அமைதிக்கான பயணத்தில்" வந்திருந்தார். இந்த வரலாற்றுச் சான்றை பற்றி இரண்டு கட்சிகளும் பேசவிரும்பாதது குறித்து வியப்பு ஏதும் இல்லை. "தைவானுக்கும் நான்ஜியாங்கிற்கும் இடையே உள்ள தூரம் அதிகம் இல்லை என்று நீங்கள் கூறலாம்; ஆனால் விமானம் இறங்கியவுடன், கடைசியாக நாங்கள் இங்கு இருந்ததற்கும் தற்பொழுதைய நிலைக்கும், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை கடந்தோம். உங்களை இதற்கு முன்னரே சந்திக்க முடியாதது பற்றி பெரிதும் வருத்தம் அடைகிறேன்" என்று தன்னை வரவேற்கவந்தவர்களிடம் லியென் தயக்கமின்றிக் கூறினார்.

தைவானின் சுதந்திர நிலைக்காக வாதிடுபவர்களை எதிர்த்து "கம்யூனிஸ்டுகளுடன் ஒன்று சேர்வதற்காக" தான் வந்ததாக லியென் விளக்கம் கொடுத்தார். பல தசாப்தங்கள் ஊழல் மலிந்த, சர்வாதிகார ஆட்சிக்கு பரந்த மக்கள் விரோதப் போக்கின் மத்தியில், செல்வாக்கிழந்த கோமிண்டாங், தைவானில் 2000ம் ஆண்டு தன் அதிகாரத்தை இழந்தது. ஆயினும்கூட, பெய்ஜிங் லியெனுக்கு முழு அரசாங்க வரவேற்பு கொடுத்து, தைவானின் எதிர்க்கட்சித் தலைவருக்கு சிகப்பு கம்பளத்தை விரித்து, அவரை தீவின் ஜனாதிபதிபோல் நடத்தியது.

ஹூ ஜின்டாவோவைச் சந்தித்தபின், ஒரு கூட்டு அறிக்கை அறிவித்ததாவது: "தைவானின் சுதந்திரத்தை எதிர்த்தும், தைவான் நீரிணையில் அமைதி, உறுதித் தன்மை இவற்றிற்காக பாடுபடவேண்டியது பற்றி இருதரப்பினரும் 1992ம் ஆண்டு ஏற்பட்ட ஒருமித்தக்கருத்து நிலைநிறுத்தப்படவேண்டியதில் உடன்பாடு கண்டனர். 1992ம் ஆண்டு பெய்ஜிங், கோமிண்டாங் அரசாங்கத்திற்கும் இடையேயான தைவானை பற்றிய "ஒருமித்த உணர்வு" என்பதில் ஒரே சீனாதான் என்ற கருத்துடன் தொடர்பு கொண்டிருந்த, அதன் விளக்கம் இருதரத்தாரும் தனக்கு வேண்டிய வகையில் விளக்கம் செய்து கொள்ளும் நிலையில் விட்டுவைக்கப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை சோசலிசத்துடன் எந்த சம்பந்தமும் கொள்ளவில்லை என்பதை லியென் உணர்ந்துள்ளார். இவர் ஒரு செல்வம் கொழிக்கும் சீனக் குடும்பத்தை சேர்ந்தவராவார்; இன்றும் கூட அது குறிப்பிடத்தக்க வகையில் அரசியல் செல்வாக்கை தொடர்ந்து கொண்டுள்ளது. KMT இன் நிறுவனர், சன் யாட் சென்னின் நினைவாலயத்திற்கும், முன்னாள் ஜனாதிபதி மாளிகைக்கும் லியென் சென்று சுற்றிப் பார்த்ததுடன், சிறுவயதினராக இருக்கையில் எவ்வாறு தான் தைவானுக்குப் புலம் பெயர்ந்து சென்றார் என்பதையும் உணர்வுப் பெருக்குடன் நினைவுகூர்ந்தார்.

"சன் யாட் சென்னின் தேசியவாதம்" மற்றும் "கம்யூனிஸ்ட் கட்சியின் சோசலிசம்" இரண்டிற்கும் இடையே இருந்த பல தசாப்தங்களின் பூசல்கள் பற்றி லியென் பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரை பூசி மெழுகிவிட்டது. இரண்டுமே இப்பொழுது, "நாட்டின் நலனுக்காக" ஒன்றாக வந்துள்ளது என்று அவர் அறிவித்தார். "சந்தைச் சீர்திருத்தத்திற்கு" பெய்ஜிங் நகர்ந்துள்ளதை அவர் பெரிதும் பாராட்டி, கிராம, சிறுநகர அளவுகளில் பூச்சுக்கள் நிறைந்த "தேர்தல்களை" நடத்தும் பெய்ஜிங்கின் முயற்சிகளை அவர் பெரிதும் பாராட்டினார். சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே "இருவருக்கும் வெற்றி" என்ற மூலோபாயம்தான் உள்ளது என்றும் அவர் களிப்படைந்தார்.

கடுமையான விரோதிகள்

பல தசாப்தங்களாக, பெய்ஜிங்கின் ஆட்சியும் கோமிண்டாங்கும் கடுமையான விரோதிகளாக இருந்து வந்தன. 1949ன் புரட்சியை தொடர்ந்து, தைவானுக்கு எதிரான எந்த எதிர்ப்பையும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையை கையாளுவதன் மூலமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவ ஆதரவு மூலமும்தான் கோமிண்டாங் ஆட்சி தப்பித்து வந்தது. வாஷிங்டனுடைய ஆதரவு இருந்த நிலையில், தைவான் சீனாவின் ஐ.நா.பாதுகாப்புக் குழு இடத்தை தக்க வைத்துக் கொண்டு, வெளிநாட்டில் இருந்து செயல்படும் அரசாங்கம் என்ற முறையில், பெரும் அரசு இயந்திரத்தை மாநில அளவிலும் வைத்திருந்ததோடு, சீன பெருநிலப் பகுதியின் மீதான கட்டுப்பாட்டை கொள்ளுவதற்கு தயாராக இருந்தது.

பின்னர், வியட்நாமில் தோல்வி தவிர்க்கமுடியாது என்ற நிலை ஏற்பட்ட பின்னர். வாஷிங்டன் திடீரென்று கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்து, சீனாவின் மறு சமரசத்தை அடைந்தது. அமெரிக்கா பெய்ஜிங்கை முறையான அரசாங்கம் என்று ஒப்புக் கொண்டது; தைவானுக்கு கொடுத்திருந்த முறையான அங்கீகாரத்தையும் முடித்துக் கொண்டது. அதே நேரத்தில் அமெரிக்கா, சீனாவால் தைவான் தாக்கப்பட்டால் அதனை பாதுகாக்கும் என்றும் பிரகடனப்படுத்திற்று; இந்த உறுதிமொழிதான் 1979ம் ஆண்டு தைவானுடனான உறவுகள் என்ற ஒப்பந்தத்தை முறையாக்கியது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பெய்ஜிங் கொண்டிருந்த உடன்படிக்கை, தடையற்ற சந்தை கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு மூலதனத்தை தழுவிடலுக்கும் ஒரு திருப்பமாக அமைந்தது; அந்தச் சார்பு இன்னும் வெளிப்படையாக 1978ம் ஆண்டு டெங் சியாவோபிங்கின் கீழ் நிறுவப்பட்டது. இந்த மாற்றத்திற்கு இணையாக (சமந்தரமாக) சீனாவின் முதலாளித்துவ வர்க்கம் தைவான், ஹாங்காங் மற்றும் மாக்காவுடன் கொண்டிருந்த வெளிப்படையான நோக்குநிலைக்கும் வகைசெய்திருந்தது. "ஒரு நாடு, இரு முறைகள்" என்ற கொள்கையை டெங் இயற்றியிருந்தார் -- இதில் அவர்கள் முறையான வகையில் சீனாவுடன் இணைதலுக்கு பதிலுபகாரமாக பரந்த முறையிலான சுயாட்சியை ஆளும்செல்வந்த தட்டுகளுக்கு தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த கருத்துரு பெய்ஜிங்கால் ஆதிக்கம் செய்யப்படும் பெரும் சீன முதலாளித்துவமாக இருந்தது.

ஆனால் அமெரிக்கா, ஜப்பான் இவற்றின் உதவியுடன் தைவான் தன்னை ஏற்கெனவே "ஆசியப் புலிகளில் ஒரு நாடாக, அதாவது நாடுகடந்த நிறுவனங்களின் மூலதனங்களுக்கு குறைவூதிய தொழிலாளர் அரங்காக மாற்றிக் கொண்டிருந்தது. சீனாவின், "ஒரு நாடு, இரு முறைகள்" என்று வழங்க முன்வந்தமை, கோமின்டாங்கை எண்ணிப்பார்க்க மறுத்துவிட மட்டும் செய்யவில்லை, லீ டெங் ஹுயி இன் தலைமையின் கீழ் தைவானிய தேசிய உணர்வுகளுக்கு ஓர் ஊக்கத்தைக் கொடுத்தது. அவர் தைவானை ஒரு சுதந்திர நாடு என்று முறையுடன் அறிவிக்குமாறு பகிரங்கமாக அழைப்பை விடுத்திருந்த ஜனநாயக முற்போக்குக் கட்சி (PPP) என்ற எதிர்க்கட்சிக்கு சட்ட பூர்வ நெறியை அளித்தார்.

1997-98ம் ஆண்டின் ஆசியப் பொருளாதார நெருக்கடியை ஒட்டி, சமநிலையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தைவானின் "பொருளாதார அற்புதம்" முடிவிற்கு வந்து, சீனா வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் மிக முக்கிய நாடாக உலகில் மாறிவிட்டது. சீனாவுடனான அரசியல் பேரத்தின் விளைபொருளாக லியென் இப்பொழுது "வெற்றி-வெற்றி, இருவருக்கும்" என்ற நிலை பற்றிப் பேசும்போது, இவர் அனைத்திற்கும் மேலாக சீன உள் பெருநிலப் பகுதியில் பெரும் முதலீடுகளை கொண்டுள்ள தைவானிய முதலாளித்துவப் பிரிவுகளின் சார்பாகப் பேசுகின்றார். 2000ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் தோல்வியை அடுத்து லீயின் பிரிவை வெளியேற்றிய பின்னர் அவர் கோமிண்டாங் தலைவராகவந்தவர் ஆவார்.

பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட, அமெரிக்க அரசுத்துறையின், தைவானைப் பற்றிய பொருளாதார அறிக்கையின்படி, தீவின் பொருளாதார வளர்ச்சி பெருகிய முறையில் சீனாவை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. "சீனாவை தளமாகக் கொண்டுள்ள தைவான் தொழிற்சாலைகள், தைவான்-தயாரிப்பு உற்பத்தி மூலப்பொருட்களை முடிவுபெற்ற உற்பத்திப்பொருட்களாக மாற்றுவதற்கு, சீனாவின் குறைந்த தொழிலாளர் ஊதியம், மற்றும் நிலத்தை நம்பித்தான், அவற்றை அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா இவற்றில் உள்ள தொழில்நகர சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டி உள்ளது. தைவான் நீரிணைக்கு அப்பால் தைவானுடைய ஆண்டு முதலீடு 1999ல் 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து அமெரிக்க 5.4 பில்லியன் டாலர்களாக 2004ன் முதல் பத்து மாதங்களில் உயர்ந்துள்ளது. இந்தப் போக்கின் விளைவாக, பெரிய சீனா (சீனா மற்றும் ஹாங்காங்), அமெரிக்காவிற்கு பதிலாக தைவானின் மிக அதிக ஏற்றுமதிகளை தாங்கும் சந்தையாக 2001ல் மாறியது; தைவானின் ஏற்றுமதிகளில் 2004 முதல் பத்து மாதங்களில் பெரிய சீனாவின் பங்கு மொத்தத்தில் 36 சதவிகிதமாக, அமெரிக்காவின் 16 சதவிகிதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் 13 சதவிகிதம் இவற்றைவிட அதிகமாக இருந்தது."

ஷாங்காயில் சற்றே தங்கியிருந்தபோது, "சீனா என்பது ஒரு பெரும் வாய்ப்பு: இதை யார் ஆட்சியில் இருந்தாலும் தவறவிடக்கூடாது. ... சீனா உலகின் தொழிற் பட்டறையாகும்; மேலும் மிகப் பெரும் சந்தையும் ஆகும். இதுதான் உண்மை; நாம் இதை எதிர்கொண்டாகவேண்டும். கருத்தியல் வேறுபாடுகளினால் இந்த உண்மையை புறக்கணிக்கக்கூடாது" என்று லியென் அறிவித்தார். மேலும் தைவானுக்கும், சீனாவிற்கும் இடையே ஒரு பொதுச் சந்தை வேண்டும் என்றும், இது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பது போல் அமைக்கப்படலாம் என்றும் கருத்துத் தெரிவித்து, அழைப்பு விடுத்தார்.

தைவானில் அரசியல் பிளவுகள்

ஆனால் தைவானின் ஆளும் வட்டங்களில் இதைப் பற்றிய பெரும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. நாடுகடந்த நிறுவனங்களின் மூலதனத்தைத்தான் தைவான் பெரிதும் நம்பியுள்ளது. அமெரிக்க அறிக்கையின்படி, நேரடி வெளிநாட்டு முதலீடு, 2003ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.8 சதவிகிதப் பங்கை கொண்டிருந்தது; இது பெரும்பாலும் மின்னணு, மற்றும் மின் தொழில்களில் குவிப்பைக் கொண்டிருந்தது. அமெரிக்காவும், ஜப்பானும் 60 சதவீத உள்நோக்கு முதலீட்டு வரவை இத்தொழில்களில் கொண்டுள்ளன. மொத்தத்தில் அமெரிக்கா 22 சதவீதமும் ($13 பில்லியன்) என்று அனைத்து வெளிநாட்டு தைவான் முதலீடுகளிலும், ஜப்பான் 20 சதவீதமும் ($12 பில்லியனும்) கொண்டுள்ளன.

உலக உற்பத்திக்கு ஓர் அரங்காக அமைந்து, அதே நேரத்தில் முழு இறைமை கொண்ட ஒரு அரசாக அங்கீகாரம் இல்லாததால், தைவான் பொருளாதாரம், அரசியல் இவற்றில் தீவிரப் பின்னடைவில் உள்ளது. தைவானிய ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி சீனாவுடன் அமைதியான முறையில் ஒத்துப் போகவேண்டும் என்று விரும்பினாலும், மற்றொரு பகுதி சுதந்திரம் வந்தால் தைவான் "சமமான" நாடு என்ற முறையில் சர்வதேச சமூகத்தில் நிலைக்கும் என்று வலியுறுத்துகின்றது. பிந்தைய கருத்து ஜனாதிபதி ஷென் ஷூய்பியனுடைய ஆளும் கட்சியான ஜனநாயக முற்போக்கு கட்சி (DDP) மற்றும் சுதந்திர ஆதரவு, "அடிப்படைவாதிகளான" தைவானின் சாலிடரிட்டு ஒன்றியம் (TSU) இவற்றால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது.

சீனத் தலைமையோ தைவானுக்கு சுதந்திரம் என்ற நடவடிக்கை எதிர்ப்பதில் ஆழ்ந்த விரோதப் போக்கை காட்டுகிறது; ஏனெனில் அத்தகைய நிலை, திபெத் மறும் Xinjing மேற்கு பகுதி உட்பட சீனாவின் மற்ற பகுதிகளில் பிரிவினைவாத உணர்விற்கு ஊக்கம் கொடுத்துவிடும் என்று அது கருதுகிறது. மேலும், பெய்ஜிங் தைவானை சீனத் தேசியத்தின் - அதாவது இப்பொழுதுள்ள ஆட்சி கொண்டுள்ள கருத்தியல் போக்கின் சக்திவாய்ந்த அடையாளமாக உயர்த்தியுள்ளது. தைவானிய சுதந்திரம் பற்றி எந்த அறிவித்தலுக்கும் எதிராக இராணுவ வலிமையை பயன்படுத்துவதை சட்டரீதியாக்கும் "பிரிவினை-எதிர்ப்பு சட்டம்" ஒன்றை இந்த ஆண்டு ஆரம்பத்தில் அது நிறைவேற்றியது.

புதிர்தரும் வகையில், சீனாவிற்கு லியென் பயணத்தின் உடனடி நோக்கங்களில் ஒன்று, தைவானில் கோமிண்டாங் இன் அரசியல் செல்வாக்கிற்கு ஏற்றம் கொடுப்பது ஆகும். சீனத் தலைமை தன்னுடைய பழைய பிரதான விரோதிக்கு அரசியல் கொடைகளை வாரி வழங்கியுள்ளது. லியெனுடன் உடன்பட்டு தைவானிய விவசாய ஏற்றுமதிகளுக்கு இனி இறக்குமதிக் காப்பு வரிகளை தளர்த்த பெய்ஜிங் சம்மதித்துள்ளது. Taipei Times சுட்டிக் காட்டியுள்ளபடி, "இது தெற்பகுதி விவசாயிகளின் ஆதரவை வெல்லும் முயற்சியாகும் இதன்மூலம் அங்கே ஜனநாயக முற்போக்கு கட்சியின் தேர்தல் தளத்தை கீழறுப்பதாகும்."

சீனாவிற்கு லியெனின் பயணம் ஜனாதிபதி ஷென் ஷூயிபியனுக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. லியென் தைவானுக்கு திரும்பிய பின்னர், மற்றொரு சீன சார்புடைய எதிர்க்கட்சியான மக்கள் முதன்மைக் கட்சி (PFP) இன் தலைவர் ஜேம்ஸ் சூங், தன்னுடைய சொந்த சீனப் பயணத்தை மேற்கொண்டார். சென் பெய்ஜிங்குடன் "பேச்சு வார்த்தை" நடத்துவதற்கு சமநிலையை காணவிரும்பி, அதே நேரத்தில் தன்னுடைய கட்சித் தளத்தையும் விரோதித்துக் கொள்ளாமல் வழிகாண விரும்புகிறார். அவர் பெப்ரவரி மாதம் தன்னுடைய சுதந்திரம் வேண்டும் என்ற சொல்லலங்காரத்தை குறைத்துக் கொண்டு அதற்குப் பதிலாக, உட்குறிப்பாக பாராளுமன்ற ஆதரவை நாடினார், ஆனால் இதன் மூலம் TSU வின் ஆதரவு இழப்பதன் பேரில் அடையும் பேரத்தை அவர் PFP உடன் செய்தார்.

லியெனுடைய பயணத்தின் தாக்கத்தை மழுங்கச் செய்யும் வகையில், சென் முறையாக சீனத் தலைவரை தைவானுக்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்து, "விரைவில் இராணுவ, பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைத்திடலுக்கு" வகை செய்ய வேண்டும் என்றும் கோரினார். ஆனால் சென்னின் அழைப்பை பெய்ஜிங் நிராகரித்து, "அவருடைய கட்சி அதன் தைவான் சுதந்திரக் கட்சி அரசியல் யாப்பை கைவிட்டு, பிரிவினை செயல்களையும் நிறுத்த வேண்டும்" என்று கோரியது. அது தற்சமயத்தில் கூட -- சென் நிறைவேற்ற முடியாத கோரிக்கை ஆகும்.

இதற்கிடையில், TSU வேறு ஒரு இடத்தில் ஆதரவை நாடுகிறது. தைவானிய ஆளும் செல்வந்த தட்டின் ஒரு பிரிவு இன்னும் அது 1895ல் இருந்து 1945 வரை ஜப்பானியக் காலனிநாடாக இருந்த பழைய கால நாட்டத்தில் திளைக்கிறது. கடந்த மாதம்தான் TSU தலைவரான சூ சின் ஷியாங், போர்க்குற்றவாளிகள் உட்பட ஜப்பானிய போரில் இறந்த போர்வீரர்கள் அடையாள முறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும், இழிநிலையான யாசுகுனி நினைவாலயத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். இவர் அங்கு சென்று ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்காக இரண்டாம் உலகப் போரில் இறந்திருந்த பல்லாயிரக்கணக்கான தைவானிய துருப்புகளுக்கு அஞ்சலி செலுத்தியமை பெய்ஜிங்கீன் சீற்றத்தை தூண்டியுள்ளது.

தைவானிய ஆளும் செல்வந்தத்தட்டுக்களை பிளவு செய்து கொண்டிருக்கும் கடுமையான பூசல்களை லியெனின் பயணம் தீவிரப்படுத்தும், ஒரு நெருக்கடிக்கு பின் அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தும்.

Top of page