World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan elections: a conspiracy to prevent Tamils from voting

இலங்கை தேர்தல்கள்: தமிழர்களை வாக்குப் போடாமல் தடுக்கச் செய்யும் சதி

By Deepal Jayasekera
15 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

வகுப்புவாதத்தன்மை நிறைந்த இலங்கையின் அரசியல் சூழ்நிலையில், நவம்பர் 17ம் தேதி நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தல்களில், போரில் பெரும் நாசத்திற்காளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏராளமான தமிழர்களை வாக்குப் போடாமல் தடுக்கும் வகையில் ஒரு சதி தயாராகிக் கொண்டிருக்கிறது. பொதுவாக இருக்க முடியாது என்ற வகையிலான கூட்டணியில், கொழும்பு அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் (LTTE), தத்தம் சொந்த அரசியல் காரணங்களுக்காக, வாக்குப் போடுவதற்கான அடிப்படை உரிமையை தமிழ் வாக்காளர்கள் செய்ய முடியாமல் தடுக்க முற்பட்டுள்ளன.

LTTE இன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தமிழர்கள் ஓட்டுப்போடும் உரிமை மீது தீவிர தடைகளை சுமத்தும் வகையில் நவம்பர் 9ம் தேதி தலைமை நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளுள் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படாது என்றும் வாக்காளர்கள் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளில் நிறுவப்படவிருக்கும் "தொகுப்புச் சாவடிகளுக்கு" செல்லும்படி நிர்பந்திக்கப்படுவர் என்பதை இம் முடிவு உறுதிப்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை அளிப்பதற்கு எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பல தடைகளில் இதுவும் ஒன்றாகும்.

ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி (SLPF) மற்றும் ஸ்ரீலங்கா தேசிய முன்னணி (SLNF) இரண்டினாலும் தாக்கல் செய்திருந்த "அடிப்படை உரிமைகள்" மனு ஒன்றின் மீதான தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து இந்நிலை வந்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி சார்புடையது. அவர்களுடைய செய்தி ஊடக நேரம், வாக்குகள் அனைத்தும் SLFP வேட்பாளர் பிரதம மந்திரி மகிந்தா ராஜபக்சேக்குச் செல்லும்.

ஏராளமான தமிழர்கள் தன்னுடைய எதிர்ப்பாளரான UNP வேட்பாளர் ரனில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்கக்கூடும் என்ற கருத்தில் இயன்ற அளவு தமிழர்களின் வாக்குகள் போடமுடியாமல் போகட்டும் என்பதில் ராஜபக்ச தீவிரமாக உள்ளார். "அமைதிப் பேச்சு வார்த்தைகள்" மீண்டும் வரவேண்டும் என்பதில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டினாலும், ராஜபக்சவோ சிங்கள பேரினவாதக் கட்சிகளான JVP, JHU ஆகியிவற்றுடன் இணைந்து நிற்கிறார்; அவை LTTE யிடம் முன்வைத்த கோரிக்கைகள் மீண்டும் போர் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த மனு அரசியலமைப்பில் உள்ள "அடிப்படை உரிமைகள்" விதியை கேலிக் கூத்தாக ஆக்கியுள்ளது. மனுதாரர்களின் உரிமைகளை காப்பதற்கு பதிலாக, LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில் வாழும் தமிழர்களுடைய உரிமையை பறிப்பதைத்தான் இது வெளிப்படையான இலக்காக கொண்டிருந்தது. வழக்கு விசாரணை நடக்கையில், தேர்தல் ஆணையர் LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிக்குள் வாக்குச் சாவடிகளை அமைக்கும் எண்ணத்தை கொண்டிருக்கவில்லை என்று அறிவித்தார்; ஆனால் அரசாங்கம், LTTE இவற்றின் பகுதிகளை பிரிக்கும் "கட்டுபாட்டுக் கோட்டில்" இருந்து குறைந்தது 500 மீட்டர்கள் தள்ளி சாவடிகள் அமைக்கப்படும் என்று கூறினார். தலைமை நீதிமன்றம் இந்த குறைந்தபட்ச தூரத்தை ஒரு கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

வாக்களிக்க விரும்பும் மக்கள் இப்பொழுது அச்சுறுத்தும் அபாயத்திற்குட்பட வேண்டியிருக்கும். நீண்டதூரம் பயணிக்க வேண்டியது ஒருபுறம் இருக்க, அவர்கள் LTTE மற்றும் இலங்கை படைகள் நிறுவியுள்ள சோதனைச் சாவடிகளையும் கடந்து செல்ல வேண்டும். கடந்த காலத்தில் இராணுவம் வாக்களிப்பதை எவ்வளவு கடினமாக்க முடியுமோ அவ்வளவை செய்திருந்தது; வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்ற பிறகு "பாதுகாப்பு" காரணம் காட்டி அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். பலர் காரணம் கூறப்படாமலேயே வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

வாக்குச் சாவடிக்கு சென்றாலும், வாக்காளர்களுக்கு புதிய தடைகள் காத்துள்ளன. தேர்தல் ஆணையர் திட்டமிட்டுள்ள 10 அம்ச விதிமுறையின்படி, ஒரு வாக்காளரின் வாக்குப் போடும் உரிமை சவாலுக்கு உட்படுத்தப்பட்டால், வாக்காளர் அதிகாரிகளினால் கேள்வி கேட்கப்படுதலுக்கு உட்படுத்தப்படலாம்.

வாக்காளர்கள் வாக்களிப்பதை தடுக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், தங்களுடைய அடையாளத்தை போலீசாருக்கும் திருப்திதரும் வகையில் நிரூபிக்காவிட்டால் காவலிலும் வைக்கப்படலாம் என்று உள்ளது; இந்த வழிவகை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு உண்டு; LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதியில் உள்ள பல தமிழர்களுக்கு அதிகாரபூர்வ ஆவணம் ஏதும் கிடையாது. தங்களுடைய வயது 18க்கு மேல் என்று நிரூபிக்க முடியாத இளைஞர்கள் குறிக்காக இலக்குவைக்கப்படுவர்.

தலைமை நீதிமன்ற தீர்ப்பு வந்த மறுநாள், நவம்பர் 10 அன்று, LTTE பாராளுமன்றத்திற்கு தான் நிறுத்தியிருக்கும் TNA என்ற பினாமி அமைப்புடன், கிளிநொச்சியில் கலந்து பேசி தன்னுடைய முடிவை அறிவித்தது. மேம்போக்காக பார்த்தால் LTTE-TNA பெருந்தன்மையுடன் தமிழர்கள் வாக்களிக்கலாம் என அனுமதித்ததைப் போல் தோன்றும். TNA பாராளுமன்றக் குழுவின் தலைவரான ஆர். சம்பந்தன் செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்: "TNA வோ, LTTE யோ, வாக்களிக்காதீர்கள் என்று மக்களிடம் கூறமாட்டார்கள். அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை செலுத்தும் வகையில் நாங்கள் தடுக்க மாட்டோம்."

இப்படி ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகக் கொடுக்கப்பட்டுள்ள முறையான அறிக்கை சர்வதேச சமூகம் என்று கூறப்படுவதை கருத்திற் கொண்டுள்ளதாகும். TNA, LTTE இரண்டும் தமிழ் வாக்காளர்களை வற்புறுத்தி, வெளிப்படையாக தடுத்தல் என்பது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தும் என்பதை உணர்ந்துள்ளனர்; அப்படிச் செய்தால் பெரிய சக்திகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு உதவாமல் போய்விடும். ஆகஸ்ட் மாதம் வெளியுறவு மந்திரி லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலைக்கு தாம் பொறுப்பு என்ற குற்றச்சாட்டை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடும் என்ற நிலைமையை LTTE எதிர்கொண்டுள்ளது.

ஆயினும், LTTE ஒரு வாக்குப் புறக்கணிப்பை விரும்பியது என்பதை ஆர். சம்பந்தனின் கருத்துக்கள் தெளிவாக்கியுள்ளன. "வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல்களில் அக்கறை காட்டுவது தமிழ் மக்களுக்கு எந்த நலனையும் தராது என்று நாங்கள் நம்புகிறோம்... தமிழ் மக்கள் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களில் எந்த அக்கறையையும் கொள்ளவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உரியது அல்ல."

ஒரு கருத்தைப் பற்றி "நம்பிக்கை கொண்டவுடன்", LTTE மற்றவர்கள் தன்னுடைய அரசியல் கருத்துக்களை நம்பவேண்டும் என முயன்ற வழக்கமே கிடையாது; அதேபோல் பேசாமல் கைகளை கட்டிக் கொண்டு நிகழ்வுகளைப் பார்க்கும் வழக்கமும் கிடையாது. மாறாக LTTE அரசியல் எதிராளிகளிடம் சண்டித்தனமாக நடந்து கொள்வதில்தான் இகழ்வுற்றுள்ளது; தமிழ் மக்களை பரந்த அளவில் அச்சுறுத்துவதிலும் அதற்குப் பெயர் உண்டு. வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் வாக்காளர்கள் தேர்தலில் "அக்கறை இழக்க வேண்டும்" என்ற அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதில் அறிக்கை பிழையின்றி உள்ளது. இரு பெரும் கட்சிகளில் எதையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவிற்கு வந்த பின் LTTE இத்தகைய உட்குறிப்பான புறக்கணிப்புதான் "தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி" என்ற மோசடிக் கூற்றை வலுவாக்கும் செயல் என்று திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது.

அக்டோபர் 30 அன்று, மக்கள் படை (People's Army) என்று தன்னை அழைத்துக் கொண்ட, இதற்கு முன் அறியப்பட்டிராத அமைப்பு ஒன்று சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்திருந்த அரங்கின் மூடிய கதவுகளில் ஓர் அறிவிப்பைச் செருகியிருந்தது. தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த இந்த அமைப்பு தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் பற்றி எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியது; அப்படிச் செய்தால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அது கூறியிருந்தது. இன்னும் தெளிவாக விஷயத்தை கூறும் வகையில் மோட்டார் பைக் ஒன்றில் வந்த இரு குண்டர்கள், கூட்டம் நடத்தப்பட்டால் எறிகுண்டுகள் அரங்கிற்குள் வீசப்படும் என்றும் அச்சுறுத்தினர். எந்த அமைப்பும் இதற்குப் பொறுப்பு ஏற்கவில்லை என்றாலும் இந்நிகழ்வு LTTE இன் செயற்பாடுகளின் முத்திரையை உறுதியாகக் காட்டுகிறது; தமிழர்கள் தேர்தலில் எந்த அக்கறையும் காட்டக்கூடாது என்ற கருத்திற்கு இணங்கவும் இந்நிகழ்வு உள்ளது.

LTTE உடன் இணைந்துள்ள, யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்கள் அமைப்பு (Students Organisations of Higher Education Institutions), UNP, SLFP கட்சிகளின் வேட்பாளர்களை நம்பிக்கை துரோகத்திற்காக கண்டனத்திற்கு உட்படுத்தியது. தமிழர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தது; "சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களின் நாடு சிங்களத் தலைவர்களை இனியும் நம்பவில்லை" என்று இது அறிவிப்பது போலாகும் என்றும் குறிப்பிட்டது. இத்தகைய அறிக்கைகள் அடிக்கடி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் மொழி செய்தி ஊடகங்களில் மற்ற LTTE தொடர்புடைய அமைப்புக்களினாலும் வெளியிடப்படுகின்றன. மக்கள் படையை போன்றே, இவ்வச்சுறுத்தல்களை தொடர்ந்து உண்மையாக வன்முறை ஏற்படாது எனக் கூறுவதற்கு இல்லை.

LTTE-TNA அறிக்கைக்கு பின்னர் வார இறுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகள் இன்னும் கூடுதலான இடர்பாடுகளை ஏற்படுத்தி அறிக்கை வெளியிட்டனர்; இவை "பாதுகாப்பு காரணங்களுக்காக" என்றும் கூறப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க முகவரான கே. கணேஷ், Sunday Times இடம் தெரிவித்தார்: "யாழ்ப்பாண மாவட்டத்தில் 624ல் இருந்து 220 ஆக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது." தேர்தலில் பங்கு பெறும் அனைத்துக் கட்சிகளும் இந்த முடிவிற்கு ஒப்புதல் தெரிவித்ததாகவும் கணேஷ் கூறினார்; SEP இடம் இதுபற்றி தொடர்புகூடக் கொள்ளப்படவில்லை ஆகையால் இந்தக் கூற்று பொய்யானது ஆகும்.

தமிழ் வாக்களார்களை தடுக்கும் இம்முயற்சிகளுக்கு இடையே, எதிர்க்கட்சியான UNP நிலையான மெளனத்தை காக்கிறது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தின் 10 அம்சத் திட்டத்தை ஏற்றிருந்தது. தேர்தல் முடிவு எப்படியாயினும்கூட, UNP கொழும்பு வகுப்புவாத தர்க்கத்தை கொண்டு தடைமுயற்சிகள் செய்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தவில்லை; ஏனெனில் அதே தீவிர நாட்டுவெறி உணர்வு அரசியல் என்ற சகதியில்தான் இதுவும் ஆழ்ந்துள்ளது.

தமிழ் வாக்காளர்களின் வாக்குகளை இழப்பதற்காக பலவகையிலும் செய்யப்படும் முயற்சி அனைத்துக் கட்சிகளும் சாதாரண தொழிலாளர்களின் உரிமைகளை எந்த அளவிற்கு இழிவாக கொண்டுள்ளன என்பதைத்தான் காட்டுகிறது. "சமாதான வழிவகைகள்" மூலமோ வேறுவிதத்திலோ அவர்களுடைய நோக்கம் அனைத்துமே தொழிலாளர்களின் இழப்பில் ஆளும் வர்க்கத்தின் பல பிரிவுகளின் நலன்களையும் முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதுதான். அனைத்து வாக்காளர்களும், அடிப்படை உரிமையாகிய வாக்குரிமையை, அதிகாரத்துவ தடைகளில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும், அச்சமின்றி வாக்களிக்க வேண்டும், இராணுவம், LTTE அல்லது எந்த சக்தியின் மிரட்டலும் கூடாது என்று தெளிவாகக் குழப்பத்திறகு இடம் இல்லாமல் அறிவிப்பது சோசலிச சமத்துவக் கட்சி ஒன்றுமட்டுந்தான்.

See Also :

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page