World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: state of emergency extended for three months

பிரான்ஸ்: அவசரகாலநிலை மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது

By Pierre Mabut and Antoine Lerougetel
17 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 9ம் தேதி அமல்படுத்தப்பட்ட 12-நாட்களுக்கான அவசரகாலநிலை கூடுதலாக மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட பிரெஞ்சு அராசங்கத்தின் முடிவானது ஜனநாயக மற்றும் குடியுரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும். இப்படி அவசரகாலநிலை அதிகாரத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளுதல் என்பது பிரான்சில் அண்மைக்காலத்தில் முன்னோடி இல்லாத செயலாகும்.

பாரிசை சுற்றியுள்ள சிறுநகரங்கள் மற்றும் பிரான்சின் ஏனைய நகரங்களிலும் வறுமை நிறைந்த சேரிக் குடியிருப்புக்களில் வாடும் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு அலை, இத்தகைய அசாதாரணமான நடவடிக்கைக்கு காரணமாக கூறப்படுகிறது. அக்டோபர் 27 அன்று கலகங்கள் எழுச்சியுற்று, சமீபத்திய நாட்களில் குறைந்துள்ளன.

வேரூன்றியுள்ள வறுமை, பாரபட்சம், போலீசாரின் அத்துமீறல் மற்றும் உள்துறை மந்திரி நிக்கோல சார்க்கோசி வெளிப்படையாக இனவெறிக் கருத்துக்களை கூறியமை ஆகியவற்றிற்கு எதிராக வெடிப்புற்ற இயல்பான சீற்றம், அதிகாரிகளினால் மிகப்பெரிய போலீஸ் அடக்குமுறையால் எதிர்கொள்ளப்பட்டது. கலகம் தொடங்கியதில் இருந்து 3,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்; 1,700 CRS கலகப்பிரிவுப் போலீசார் சேரியை அடுத்த பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் ஆகியோருடைய சோலிச அரசாங்கம், பிரெஞ்சு குடிமக்கள் ஒட்டுமொத்தத்திற்குமான ஜனநாயக உரிமைகளுக்கான பரந்த உட்குறிப்புகளுடன் சர்வாதிகார ஆட்சியின் வடிவங்களுக்கான ஒரு முன்னோடியை ஏற்படுத்த இந்த அமைதியின்மையை இப்பொழுது பற்றிக்கொள்கிறது.

இந்தமாதம் வரை, அரை நூற்றாண்டிற்கும் மேலாக செயல்படுத்தப்படாத 1955ம் ஆண்டுச் சட்டம் ஒன்றை அடிப்படையாக கொண்டு நெருக்கடி நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 அன்று காலை மந்திரிசபையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது; மாலையில் தேசிய சட்டமன்றம் அதற்கு ஆதரவளித்து வாக்களித்தது சாதாரணமாக உள்நாட்டுப் போர் இருக்கும் நிலைமைகளில் தொடர்புடைய ஒடுக்குமுறை அதிகாரங்களுடன் அது பிரெஞ்சு அரசை பலப்படுத்துகிறது.

இச்சட்டம் தேசிய சட்டமன்றத்தில் 346 - 148 என்ற அளவில் இயற்றப்பட்டுள்ளது. கோலிச UMP (Union for a Popular Movement) யும் மைய-வலது UDF (French Union for Democracy) கட்சியும் இதற்கு ஆதரவாக வாக்களித்தன; சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இடது முற்போக்குவாதிகள் மற்றும் பசுமைவாதிகள் இதற்கு எதிராக வாக்களித்தனர். UMP யின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மன்றத்தின் மேல்ப்பிரிவான செனட் இதற்கு வியாழனன்று ஒப்புதல் அளிக்கும்.

சட்டவிதிகளின் படி, அரசாங்கம் போலீசாருக்கு சோதனைகள் நடத்தவும், ஏராளமானவர்களை கைதுசெய்யவும் உத்தரவு இடலாம். அரசாங்கம் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை தடைசெய்யவும், ஊடகச் செய்திகளை தணிக்கை செய்யவும் முடியும். எந்த சரியான காரணமும் காட்டாமல் வீடுகளில் சோதனை செய்வதற்கு போலீசார் அனுமதிக்கப்படுவதுடன், தனிநபர்களின் நடவடிக்களை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளனர்.

1955ம் ஆண்டு சட்டம் அல்ஜீரியாவில் மிருகத்தனமான காலனித்துவ அடக்குமுறையில் விளைந்த சட்டம் ஆகும்; பிரான்சில் இதுவரை அது செயல்படுத்தப்படவே இல்லை. இப்பொழுது கோலிச அரசாங்கம் இதைப் பயன்படுத்தி தொழிலாள வர்க்கத்தை சமூக மற்றும் அரசியல் முறையில் எதிர்கொள்ளுவதற்கான அடக்குமுறை சக்திகளை தயார் செய்து வருகிறது.

அவசரகால நிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மந்திரிசபைக்கு திட்டத்தை அளித்த ஜனாதிபதி சிராக், இந்த நடவடிக்கை "மிகுந்த தற்காலிகத்தன்மையைத்தான்" கொண்டிருக்கும் என வலியுறுத்தினார். ஆயினும், நீடிப்பு காலம் அசாதாரணமாக இருப்பது இச்சொற்களை பொய்யாக்குகிறது.

சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான Liberation என்னும் ஏடு நவம்பர் 16ம் தேதி, "போலீஸ் அரசு?" என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை எழுதியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எழுச்சியை அடக்கப் போதுமானவை அல்ல என்ற ஆளும் உயரடுக்குக்களின் ஒரு பிரிவினரின் அச்சத்தை இது வெளிப்படுத்தியுள்ளது. "புறநகர்ப் பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் நிலைமக்கு அவசரகால சட்டம் திறமையான மருந்தாகும் என்று உள்துறை மந்திரி நினைப்பது உண்மையில் குருட்டுத்தனமாகும். அல்லது பிரான்சின் உளைச்சலுக்கு வேர்களாக இருக்கும் இனவெறி, வேலையின்மைத் திண்டாட்டம், அநீதிகள் ஆகிய நோய்களை அவசரகால நிலைமை குணப்படுத்த முடியும் என்பதை... நீட்டிப்பது பயனற்றது; சொல்லப்போனால் ஆபத்தை விளைவிக்க கூடியது."

போலீஸ் நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அரசாங்கம் இனவாத, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வுகள் ஆகியவற்றிற்கு எரியூட்டியுள்ளது. தேசிய சட்டமன்றத்தில் அவசரகால நிலைமைக் காலம் நீட்டிக்கப்படவேண்டும் என்பதை கோரும்போது, உள்துறை மந்திரி சார்க்கோசி, கலகத்தில் தொடர்புடைய 10 புலம் பெயர்நதோரை நாடுகடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். தொந்தரவில் தொடர்புடைய எந்த வெளிநாட்டினரையும் வெளியேற்றுவதாக அவர் உறுதிமொழி கொடுத்தார்; அவர்களுக்கு குடியிருப்பு அனுமதிகள் கொடுக்கப்பட்டாலும், கொடுக்கப்படவில்லை என்றாலும் இந்த முடிவுதான் என்று அவர் கூறினார். உண்மையில் கைதுசெய்யப்பட்டவர்களில் வெகு சிலர்தான் வெளிநாட்டினர் ஆவர்.

CRS தலைமை அதிகாரியான Christian Lambert செய்தி ஊடகத்திடம் தன்னுடைய படைகள் ஒரு புது வகையான போலீஸ் முறையை செயல்படுத்தும் என்று கூறினார்: "இந்தப் பயங்கரவாதிகளை வெற்றிகொள்ளுவோம்... இது வெறும் போலீஸ் படையாக மட்டும், கடைக்காரர்களுக்கு வெறுமனே ஹலோ சொல்லிக் கொண்டு இருக்காது; ரோந்துப் பணியில் ஈடுபட்டு பகுதிகள் அனைத்திற்கும் காவலாக இருக்கும்... மிகக் கடினமான இடங்களுக்கு CRS ஐ அனுப்ப வேண்டும் என்று உள்துறை மந்திரி விரும்பியுள்ளார். நாங்கள் உயர் பயிற்சியையும் அனுபவத்தையும் கொண்டுள்ளதோடு கடினப்பட்டுவிட்ட பொது ஊழியர்கள்."

இக்கலகம் முழுமையான வகையில் குடியேறியோர் பிரச்சினை என்று சித்தரிக்கப்பட்டுள்ளது; உண்மையில் தொழிலாளர்களிடையே பொதுப் பணித்துறை தனியார் மயமாக்கப்பட்டது, வாழ்க்கைத் தர சரிவு இவற்றிற்கு எதிராக இருக்கும் அமைதியற்ற நிலைமைதான் அரசாங்கத்தின் மனத்தில் நடவடிக்கைக்கு காரணமாக உள்ளது. கடந்த மாதம் நடந்த ஒருநாள் பொது வேலை நிறுத்தம், பிரான்ஸில் பல ஆண்டுகள் இந்த அளவிற்கு தெருக்களில் தொழிலாளர்களும், இளைஞர்களும் கூடியதில்லை என்பதைக் காட்டியது. நவம்பர் 21ம் தேதி, தேசிய இரயில் தொழிலாளர்கள் அரசாங்கத்தின் பொதுவேலை நிறுத்தத் திட்டங்கள், ஊதியங்களை குறைத்தல் இவற்றிற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இளைஞர்களின் எழுச்சியை பயன்படுத்தித்தான் எந்த அளவிற்கு செல்லமுடியும் என்பதை அரசாங்கம் கணிக்கிறது. அக்டோபர் 31 அன்று அமைதியற்ற நிலை தொடரவேண்டும் என்பதற்கு பாரிஸ் புறநகர்ப்பகுதியான Clichy-sous-Boisல் இளைஞர்களை அரசாங்கம் வேண்டுமேன்றே தூண்டியது. அப்பொழுது ஆட்சியானது 12 நாட்கள் அவசரகாலநிலையை அமல்படுத்தியதுடன் ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்தது. இணைய தளங்களையும் அது மூடி வைத்தது. அடுத்து, நவம்பர் 12 அன்றே அனைத்துக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பாரிசில் கூடாது என்ற தடையும் வந்தது. மறுநாள் நெருக்கடி நிலைமை மூன்று மாத காலத்திற்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தக் காலம் முழுவதும், தொழிற்சங்கங்கள், சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர், "அதி இடது" எனப்படும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (Ligue Communiste Revolutionnaire), லுத் ஊவ்றியேர் (Lutte Ouvriere) போன்றவை, கலக போலீஸ்படையை திரும்ப பெறவேண்டும் என்றோ கோலிச ஆட்சி கீழிறக்கப்படவேண்டும் என்றோ கோர மறுத்துவிட்டன; இதன் மூலம் அரசாங்கத்திற்கு தன்னுடைய அடக்குமுறை நடவடிக்கைகளை அதிகப்படுத்த தைரியத்தை கொடுத்துவிட்டன.

See Also:

பிரான்ஸ்: "அதி இடது" எல் சி ஆர் போலீஸ் ஒடுக்குமுறை மீது ஒரு நிலைப்பாட்டை எடுக்க மறுக்கிறது

போலீசார் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதாக பாரிஸ் கலகங்களை நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

பிரான்ஸ்: போலீசிற்கு எதிராக பரவிவரும் கலகங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்கின்றன

போலீசிற்கு எதிரான கலகங்களால் பாரிஸ் கடும் பாதிப்பு

Top of page