World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka's new president faces crisis over forming a government

அரசாங்கம் அமைப்பதில் இலங்கையின் புதிய ஜனாதிபதி நெருக்கடியை எதிர்கொள்கிறார்

By K. Ratnayake
23 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, கடந்த சனிக்கிழமையன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ள சில நாட்களுக்குள்ளேய ஓர் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். நவம்பர் 17-ம் தேர்தலில் இவர் பெற்ற குறுகிய வெற்றி இலங்கையின் ஆளும் வர்க்கத்தினுள் இருக்கும் பூசல்களையும் பதட்டங்களையும் தீர்ப்பதற்கு மாறாக, அரசாங்கம் அமைக்க இவர் முயலுகையில் அவை உடனடியாக மீண்டும் தலைதூக்கியுள்ளன.

இராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 225 உறுப்பினர்களை கொண்டுள்ள பாராளுமன்றத்தில் 71 இடங்களைத்தான் கொண்டுள்ளது. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இன்னும் அது திரட்ட வேண்டியுள்ளது. தேர்தலின்போது இராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுத்திருந்த ஜனதா விமுக்தி பெரமுன (JVP) வின் ஆதரவுடன் அரசாங்கம் அமைக்க முடியும் என்று UPFA தெளிவான நம்பிக்கையில் இருந்தது. கடந்த சனிக்கிழமை முன்னாள் மந்திரிசபையில் இருந்த மங்கள சமரவீரா, "மந்திரி சபை மாற்றங்கள் நிகழக்கூடியது" என்று அறிவித்திருந்தார் மற்றும் "இராஜபக்ஷ அரசாங்கத்தில் JVP காபினெட் பதவிகளை ஏற்க உடன்பட்டுள்ளது" என்றும் கூறியிருந்தார். ஆனால் JVP இன் முக்கிய உறுப்பினரான விஜித்தா ஹெரத் இந்து பத்திரிக்கைக்கு திங்களன்று தன்னுடைய கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறியுள்ளார். JVP எதிர்க்கட்சியாக இருந்து, "வெளியில் இருந்து" இராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்று சில தகவல்கள் இப்பொழுது வந்துள்ளன.

புதிய அரசாங்கத்தில் சேருவதற்கு JVP காட்டும் தயக்கம் புதிய ஜனாதிபதியினுடைய பிரச்சினைகள் மட்டுமின்றி, கட்சியின் பிரச்சினைகளையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கூட்டாக இணைந்து சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பை (Post-Tsunami Operational Management structure P-TOMS) நிறுவ குமாரதுங்க எடுத்திருந்த முயற்சிகளை எதிர்த்து முந்தைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் UPFA அரசாங்கத்தில் இருந்து ஜூன் மாதம் JVP வெளியேறியது. அரசாங்கத்தில் தான் கொண்டிருந்த பாத்திரத்தால் பரந்த அளவில் செல்வாக்கிழந்திருந்த நிலைமைகளின் கீழ், அரிக்கப்பட்டுக் கொண்டிருந்த தன்னுடைய தளத்தை நிலைநிறுத்தும் ஒரு முயற்சியாக JVP வெளியேறும் முடிவு இருந்தது. வாழ்க்கைத் தரங்களையும், சமூக வசதிகளையும் பெரும் தாக்குதலுக்கு உட்படுத்தி 2004 பாராளுமன்ற தேர்தல்களின் போது சாதாரண தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அனைத்து உறுதிமொழிகளையும் UPFA முறித்திருந்தது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய பினனர், சமூக அதிருப்தியை வகுப்புவாத திசையில் திருப்பும்பொருட்டு JVP, LTTE-க்கு எந்தவித சலுகைகளையும் கொடுக்கக்கூடாது என்ற சிங்கள பேரினவாத பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது. ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு வந்தவுடன் இது சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை முகாமைத்துவ அமைப்பை இரத்து செய்யவேண்டும், 2002ம் ஆண்டு 20 ஆண்டு உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கு LTTE உடன் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் இராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுப்பதாக உடன்பாட்டை கொண்டது. அந்த நிபந்தனைகள் செயல்படுத்தப்பட்டால், அக்கோரிக்கைகள் இராணுவ பூசல்கள் மீண்டும் தொடங்கப்படலை தூண்டிவிடக்கூடும்.

பிரச்சாரம் முழுவதும், இராஜபக்ஷ வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவார் என்ற தொடரான வெற்று உறுதிமொழிகளை முன்வைப்பதில் JVP முன் நின்றது. இப்பொழுது புதிய ஜனாதிபதி பதவி ஏற்று, குமாரதுங்க எதிர்கொண்ட அதே பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், புதிய அரசாங்கத்துடன் எந்தப் பங்கெடுத்துக்கொண்டாலும் அதன் அரசியல் நம்பகத்தன்மை மேலும் கீழறுக்கப்பட்டுவிடும் என்று JVP கருதுவதுபோல் தோன்றுகிறது. வெகுஜனங்களுடைய அதிருப்தியை நன்றாக சுரண்டிக்கொள்வதற்கு எதிர்க் கட்சியாக செயல்படுவதுதான் என்றுகூட அது முடிவெடுத்திருக்கலாம்.

தமிழர்-விரோத பேரினவாதத்தின் அடிப்படையில் இராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுத்த, ஜாதிக ஹெல உறுமய (JHU) என்னும் மற்றொரு சிங்களத் தீவிரவாதக் கட்சியும் அதேபோல இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் சேரத்தயாரா என்பது பற்றி அறிவிப்பு எதையும் கொடுக்கவில்லை.

ஆதரவைப் பெறுவதற்காக தன்னுடைய பங்கிற்கு இராஜபக்ஷ இன்னும் திரைக்குப் பின் பேரம் பேசல் நடத்திக் கொண்டிருக்கிறார். அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்தை ஓராண்டு காலத்திற்கு அவர் கலைக்க முடியாது என்பதால் ஒரு பெரும்பான்மையை கொண்டுவருவதில் அவர் தோல்வியுற்றால், பெரிய சங்கடத்தை சந்திக்க நேரிடும். திங்கள் அல்லது செவ்வாயன்று அவர் மந்திரிசபையை அறிவிப்பார் என்று ஆரம்ப தகவல்கள் வந்திருந்தபோதிலும், இது தற்பொழுது தள்ளிவைக்கப்பட்டுள்ளது, நிச்சயமான தேதி ஒன்றும் நிர்ணயிக்கப்படவில்லை.

நவம்பர் 21ம் தேதி இராஜபக்ஷ --UPFA ல் பெரிய கட்சியான-- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) ரத்தினசிரி விக்கரமநாயக்கவை புதிய பிரதம மந்திரியாக நியமித்தார். இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின்படி, பிரதம மந்திரி பதவியானது பெருமளவு பெயரளவிற்குத்தான். இருந்தபோதிலும்கூட, SLFP க்குள் இருக்கும் மிகவும் தீவிர சிங்கள-பெளத்த பேரினவாதிகளில் ஒருவரான விக்கிரமநாயக்க பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளது JVP, JHU இரண்டிற்கும் அரசாங்கத்தில் சேருமாறு விடுத்துள்ள தெளிவான அழைப்பை கொண்டுள்ளது.

1970 களில் இருந்து செயல்பட்டுள்ள SLFP தலைமையிலான அரசாங்கங்களில் விக்கிரமநாயக்க பல மந்திரிப்பதவிகளை வகித்துள்ளார். பெளத்த விவகார மந்திரியாகவும், குமாரதுங்கவின் UPFA அரசாங்கத்தில் துணை பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் முன்னெடுத்த, "மத சுதந்திர பாதுகாப்புச் சட்டம்" என மோசடியாக அழைக்கப்படும் "மத மாற்ற எதிர்ப்பு" மசோதா பெளத்தர்களை ஏனைய சமயங்களுக்கு மாற்றும் முயற்சிகளை குற்றமாக்குகிறது.

குமாரதுங்கவின் சகோதரும் முன்னாள் UPFA வெளியுறவு மந்திரியுமான அனுரா பண்டாரநாயக்காவை பிரதம மந்திரியாக்குவது என்று முதலில் SLFP கொண்டிருந்த முடிவிற்கு மாறாக, ராஜபக்ஷ, விக்கிரமநாயக்காவை பிரதம மந்திரியாக நியமித்துள்ளார்.

பண்டாரநாயக்கவை புறக்கணித்துச் செல்லுவது என்பது, UPFA மற்றும் இலங்கையின் ஆளும் வர்க்கம் முழுவதிற்குள்ளும் இருக்கும் ஆழ்ந்த மோதல்களின் அடையாளம் ஆகும். 2004ல் கூட்டணி உருவாவதற்கு JVP-SLFP உடன்பாடு பற்றிய பேச்சு வார்த்தைகளில் இராஜபக்ஷ ஒரு கருவியாக இருந்தாலும் பண்டாரநாயக்க இந்த தேர்தலில் JVP உடன் இராஜபக்ஷ கூட்டு சேர்ந்தது பற்றி விமர்சித்திருந்தார்; பெருவணிகமும் பெரிய வல்லரசுகளும் கோரும் LTTE உடனான சமாதான உடன்படிக்கையை கொள்ளுவதற்கு அது தடையாக இருக்கும் என்று அவர் அறிவித்திருந்தார்.

பொருளாதார மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுதல், அரசாங்க செலவினங்களை குறைத்தல், இந்திய துணைக் கண்டத்திற்கு பெருகி வரும் வெளிநாட்டு முதலீட்டின் பங்கீட்டை இலங்கைக்கு ஈர்த்தல், ஆகியவற்றிற்கு LTTE உடன் உடன்பாடு காண்பது மிகவும் முக்கியமானது ஆகும். அக்காரணம் பற்றித்தான் பெருவணிகம், UNP ஜனாதிபதி வேட்பாளரான ரனில் விக்கிரமசிங்கவுக்கு ஆதவைக் கொடுத்திருந்தனர்; அவர் அந்த செயல்பட்டியலை நடத்துவதாக உறுதியளித்திருந்தார்.

இராஜபக்ஷவின் வெற்றியைப்பற்றி பெருநிறுவனம் ஏற்கனவே தன்னுடைய ஏமாற்றத்தை அடையாளம் காட்டியுள்ளது. வெள்ளி, திங்கள் அன்று நடந்த பங்குச் சந்தை வர்த்தகத்தில் 103 பில்லியன் ரூபாய்களுக்கும் மேலாக (US 1.3 பில்லியன் டாலர்) அழிக்கப்பட்டுவிட்டது. அனைத்து பங்கு விலைக் குறியீடு (All Share Price Index (ASPI)) 165 புள்ளிகள், அல்லது 7 சதவீதம் சரிந்தது; உயர்மதிப்புடைய மிலங்கா குறியீடு (MPI), இரண்டு நாட்களில், 250 புள்ளிகள் அல்லது 8 சதவீதம் சரிந்தது. திங்கள் அன்று விக்கிரமநாயக்கவின் நியமனமும் சந்தையை பாதித்தது; இராஜபக்ஷவின் கொள்கையின் விளைவாக போரை பழையபடி தொடக்கி பொருளாதார மறுசீரமைப்பிற்கு தடை செய்யக்கூடும் என்ற பயமும் உள்ளது.

டெய்லி மிரர் இன் நிதித் தொடர்பு பக்கங்கள் கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் 63 சதவிகித இலாபம் கொடுப்பதாக கூறியதாகவும், பின் இது வெள்ளி, திங்கள் இரு நாட்களில் 14 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்றும் அறிவிக்கின்றன. "புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் முதலீட்டாளர் நம்பிக்கைகைய மீட்க ஏதேனும் விரைவில் செய்யவேண்டும்" என்று பத்திரிகைக்கு ஒரு பகுப்பாய்வாளர் கூறியுள்ளார். நேற்று பங்குச் சந்தை 3 சதவீதம் முன்னேற்றம் கண்டது; நிதி வர்ணனையாளர்கள் கொந்தளிப்பு நிலை தொடரும் என்று ஊகித்துள்ளனர்.

இதையும் தவிர, பெரிய வல்லரசுகளும் இராஜபக்ஷ தங்கள் விருப்பம் போல் நடக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளன. திங்களன்று அமெரிக்க அரசுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஆடம் இரேலி தேர்தலை புறக்கணித்ததற்காக LTTE க்குக் கண்டனம் தெரிவித்தார் ஆனால் இராஜபக்ஷ "பல முக்கியத்துவம் வாய்ந்த உடனடியான அறைகூவல்களை எதிர்கொள்ளுவார்" என்று அறிவித்தார்; இவற்றில் "போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துதலும், சமாதன முன்னெடுப்பை புத்துயிர்ப்புடன் செயல்படுத்துதலும் அடங்கும் அவைதான் பேச்சுவார்த்தைகள் மூலம் காணப்படும் தீர்விற்கு வழிகோலும்" என்றார்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை "மீளாய்தல்", அதன் விதிகளை மாற்றுதல் என்று இராஜபக்ஷ தேர்தல் உறுதிமொழியாக கூறியதற்கு இந்த வலியுறுத்தல் நேரடியாக எதிரானதாக உள்ளது. வாஷிங்டனும் தெற்கு ஆசியாவில் முக்கிய மூலோபாய, பொருளாதார நலன்களை கொண்டுள்ள மற்ற வல்லரசுகளும் கொழும்பு அரசாங்கத்தை சமரசத்தை ஏற்கவிடாது என்பதற்கு இந்தத்தலையீடு ஒரு நினைவூட்டல் ஆகும். இதேபோல், இந்திய செய்தி ஊடகம் உட்பட, சர்வதேச ஊடகமும், இராஜபக்ஷ, விக்கிரமநாயக்க இருவரையும் "பருந்துகள்", "பருந்துக் குணம் உடையவர்கள்" என்றும் "கடின போக்கு உடையவர்கள்" என்றும் சித்தரித்து, சமாதான முன்னெடுப்பு என்று கூறப்படுவதை எதிர்ப்பவர்கள் என்றும் விளக்கியுள்ளன.

சமீபத்திய தேர்தல் கொழும்பில் இன்னொரு அரசியல் முட்டுக்கட்டையை தோற்றுவித்துள்ளது என்பதுதான் உண்மை. இது இலங்கை ஆளும் வட்டாரங்களில் தாங்கள் சர்வாதிகார வடிவிலான ஆட்சியை நடத்துவதை நோக்கி திரும்பியாக வேண்டியது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற மட்டுமே தூண்டிவிடும்.

இலங்கை வெகுஜனங்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு இருக்கும் அச்சுறுத்தலை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இராஜபக்ஷ பாராளுமன்றம் அடுத்த வெள்ளியன்று கூடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்; இவற்றில் ஆகஸ்ட் மாதம் முன்னாள் வெளியுறவு மந்திரி லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமுல்படுத்தப்பட்ட அரசின் அவசரகால நிலையை விரிவுபடுத்துவது ஒப்புதலுக்கு வரும்.

அதே நேரத்தில், எரி சக்தி கம்பெனி Shell, Laughs ஆகியவை பெட்ரோல் விலையை 7 சதவிகிதம் அதிகரித்துள்ளன --இந்த முடிவு இராஜபக்ஷக்கு தெரியாமல் எடுக்கப்பட்டிருக்க முடியாது; ஏனெனில் பெட்ரோல் மற்றும் எரிவாயுவிற்கு அரசாங்கத்தினால் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இவ்விலையேற்றம் புதிய ஆட்சிக்கு மக்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தும்.

அரசியல் உறுதியற்ற தன்மை, எழுச்சி பெறும் வர்க்க பதட்டங்கள் இவற்றிற்கு இடையே அவசர நிலையை தொடர்தல் என்னும் இராஜபக்ஷவின் வலியுறுத்தல் அவர் தன்னுடைய ஏதேச்சாதிகார சக்தியை பயன்படுத்தத் தயாராக உள்ளார் என்பதைக் காட்டுகின்றன. எவரும் பிடி ஆணை இல்லாமல் கைது செய்யப்பட பாதுகாப்புப் படைகளுக்கும், போலீசுக்கும் பரந்த அதிகாரங்களை அவசரகால சட்டங்கள் கொடுத்துள்ளன. எந்த பணித்துறையையும் அத்தியாவசியமானது என அறிவிக்கவும் தொழிற்துறை நடவடிக்கையை சட்டவிரோதமானதாக ஆக்கவும் கூட அவை ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கின்றன.

See Also:

ஜே.வி.பி யும் இலங்கையில் அரசியல் நெருக்கடியும்

 இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: நவ சமசமாஜ கட்சியும் தேசிய சந்தர்ப்பவாதத்தின் முட்டுச் சந்தும்

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page