World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Foreign capital pours into China's banks

சீன வங்கிகளுக்குள் குவிகின்ற வெளிநாட்டு முதலீடுகள்

By John Chan
8 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

சீனா 2001ல் உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பினராக சேர்ந்தபோது, பெய்ஜிங் 2006 இறுதியில் அதன் வங்கி அமைப்பை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்து விடுவதற்கு சம்மதித்தது. சென்ற ஆண்டு முதல் சீனாவின் அரசிற்கு சொந்தமான மிகப் பெரிய வர்த்தக வங்கிகளுக்குள் (SCBs) வெளிநாட்டு முதலீடுகள் வெள்ளம் போல் குவிந்து கொண்டுவருவது பெரிய பொருளாதார நம்பிக்கையின்மைக்கான ஒரு நிகழ்ச்சிப்போக்கை தொடக்கும் சமிக்கையை காட்டுகின்றது.

2003 இறுதியில், சீனாவின் வங்கி அமைப்புக்களில் வெளிநாட்டு பங்குகளின் அளவு வெறும் 500 மில்லியன் டாலர்களாக அல்லது ஒட்டுமொத்த வங்கி முதலீட்டில் 0.3 சதவீத அளவாக அமைந்திருந்தது. மொத்த வங்கிகளின் சொத்துக்களில் வெளிநாட்டு வங்கிகளுக்கு சுமார் 1 சதவீதம் மட்டுமே அவற்றின் சொத்துக்களாக இருந்தன. இவற்றோடு ஒப்பிடும்போது, சீனாவின் ஐந்து மிகப் பெரிய வங்கிகளான - சீன தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கி, சீனாவின் விவசாய வங்கி, சீனாவின் கட்டுமான வங்கி, சீன வங்கி மற்றும் தகவல் தொடர்புகள் வங்கி---- ஆகியவை நாட்டின் கடன்கள் மற்றும் சேமிப்புகளில் 60 சதவீதத்திற்கு மேல் கட்டுபாட்டில் வைத்திருக்கின்றன.

இந்த நிலைமையை சர்வதேச முதலீட்டாளர்கள் மிக வேகமாக மாற்றிக் கொண்டு வருகின்றனர். சென்ற ஆண்டு, பிரிட்டனை தளமாகக் கொண்ட ஹாங்கொங் மற்றும் ஷங்காய் வங்கி (HSBC) தகவல் தொடர்புகள் வங்கியில் 2.25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 19.9 சதவீத பங்குகளை வாங்கியது. ஜூனில் அமெரிக்க வங்கி சீனா கட்டுமான வங்கியில் (CCB) 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து 10 சதவீத பங்கை பெற்றது. ஜூலையில், ஸ்கொட்லாந்து ரோயல் வங்கி மற்றொரு 10 சதவீத பங்கை சீன வங்கியிலிருந்து 3.1 பில்லியன் டாலருக்கு வாங்கியது, அதே நேரத்தில் சிங்கப்பூரின் Temasek சீனா கட்டுமான வங்கிக்கு 2.5 பில்லியன் டாலருக்கு உறுதியளித்தது. ஆகஸ்ட்டில், அமெரிக்க முதலீட்டு நிறுவனமான Goldman Sachs 3 பில்லியன் டாலர்களை வழங்கி சீனாவின் தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கியில் 10 சதவீத பங்குகளை வாங்கியது

சீன அரசாங்கம், வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பெரிய அரச வர்த்தக வங்கிகளின் பங்குகளை விற்பனைக்கு பட்டியலிட்டிருக்கிறது அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது. தகவல் தொடர்புகள் வங்கி ஜூன் மாதம் ஹாங்காங்கில் தனது ஆரம்ப பகிரங்க பங்குகளை (IPO) விற்பனைக்கு விட்டபோது சில்லறை முதலீட்டாளர்கள் அவற்றின் அளவை விட 200 மடங்கு மேலாகவும் நிதிநிறுவனங்கள் 20 மடங்கிற்கு மேலாகவும் முதலீடு செய்தன. அடுத்த ஆண்டு மொத்தம் 20 பில்லியன் டாலர்கள் அளவிற்கு மற்ற மூன்று பெரிய அரசு வங்கிகளும் ஆரம்ப பகிரங்க பங்குகளை வெளியிடத்திட்டமிட்டிருக்கின்றன. 2007 வாக்கில், சீனாவின் வங்கி முறையில் ஆறில் ஒரு பகுதியை வெளிநாட்டு நிதிக்குழுக்கள் தங்களது கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வந்துவிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முரண்பாடானது என்னவென்றால், பிரதான சீன அரச வர்த்தக வங்கிகள் பெரும் திரும்பிபெறமுடியாத கடன்களால் அழுந்திப்போய் கிடக்கின்றன மற்றும் அவை தொழில்நுட்ப அடிப்படையில் பார்த்தால் திவாலாகி விட்டவை. 2003ல் முதலீட்டு வரம்பு விகிதாச்சார அளவு நான்கு பெரிய அரச கட்டுப்பாட்டு வங்கிகளுக்கு 4.6 சதவீதமாக மட்டுமே இருந்தது, இது சர்வதேச தரத்தின் படி அப்போது 8 சதவீதமாக இருந்தது. என்றாலும் சீனப் பொருளாதாரத்தின் முக்கிய மூலோபாய பிரிவை தங்களது பிடிக்குள் கொண்டு வருகின்ற ஒரு முயற்சியாகவும் திறந்து விடப்படுகின்ற நிதி வாய்ப்புக்களை பயன்படுத்தி கொள்கின்ற முயற்சியாகவும் சர்வதேச நிதிநிறுவனங்கள் அரச வர்த்தக வங்கிகளுக்கு பணத்தை குவித்துக் கொண்டிருக்கின்றன.

''உலகின் தொழிற்பட்டறைக்குள்'' கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பன்னாட்டு பெருநிறுவனங்கள் பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கின்றன, அவற்றின் மூலம் கடனும், நிதியுதவி ஆதரவும் தேவைப்படுகின்ற தனியார் நிறுவனங்கள் துரித வளர்ச்சியில் பெருமளவு பெற்றுவிடுகின்றன. தற்போது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள 1600 சீன நிறுவனங்களில் 40 மட்டுமே தனியார் வர்த்தக கணக்குகளில் வருபவை மற்றும் அவை மொத்த வங்கிக் கடன்களில் 10 சதவீதத்திற்கும் குறைந்த தொகையையே பெற்றுவருகின்றன.

மேலும், சீனாவில் மிகஉயர்ந்த அளவிற்கு தனிமனிதர்களது சேமிப்பு விகிதங்கள் அமைந்திருப்பதால் அவை சர்வதேச நிதி சந்தைகளுக்கு புதிய முதலீட்டு வளங்களை தருகின்ற சாத்தியக் கூறு உள்ளது. 2004 இறுதியில், சீனாவின் மொத்த வங்கி சேமிப்புகளின் (Deposits) அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 185.5 சதவீதமாக இருந்தது - மிகப் பெரும்பாலான நாடுகளைவிட இது மிக உயர்ந்ததாகும். என்றாலும், பிரதான அரச வர்த்தக வங்கிகள் முதலீட்டு வங்கியியல் பாதுகாப்பு மற்றும் காப்புறுதி போன்ற இலாபம் தரும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டிருக்கவில்லை. சென்ற ஆண்டு, சர்வதேச அளவில் வங்கிகளின் முதலீட்டு இலாப வரம்பு விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது, இது சீனாவில் கிடைக்கின்ற 0.4 சதவீதத்தைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.

எடுத்துக்காட்டாக, சீன கட்டுமான வங்கியுடன் பங்காளியாக சேர்வதன் மூலம் அது 136 மில்லியன் சேமிப்பு கணக்குகளையும் மற்றும் நாடு முழுவதிலும் 14,500 கிளைகளையும் வைத்துக் கொண்டிருப்பதால் Bank of America கிரெடிட் கார்டுகள் மற்றும் அடமானங்கள் போன்ற நுகர்வோர் வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியும். இதுவரை, வெளிநாட்டு வங்கிகள் சீன உள்நாட்டு வங்கி வணிகத்தில் ஒரு வரையறைக்கு உட்பட்ட பங்களிப்பையே செய்து வந்தன.

சீன வங்கிகளை திறந்து விட்டிருப்பது பரந்த பொருளாதார ''சீர்திருத்தங்களோடு'' பின்னிப் பிணைந்திருக்கின்றன. Swiss bank UBS இன் தலைமை ஆசிய பொருளாதார நிபுணரான ஜோனாதான் ஆன்டர்சன் Far Eastern Economic Review வில் விமர்சித்திருப்பதைப் போல் ''தனியார் உடைமையாக்குவது தவிர - வங்கியில் தன்னால் முடிந்த அத்தனை காரியங்களையும் அரசாங்கம் செய்திருக்கிறது. மற்றும் நிர்வாகங்கள் அதிகாரபூர்வமான கொள்கையை ஆதரிக்கும் ஒரு கட்டளைக்கு கட்டுப்பட்ட அரசாங்க ஊழியர்களை மட்டுமே கொண்டதாக இருக்குமானால் வங்கிகள் முழுமையாக சந்தை-நோக்குநிலை அமைப்பாக என்றைக்குமே செயல்பட முடியாது. இப்போது சீனாவிற்கு தேவை என்னவென்றால் நிதியமைப்பு முறை சீர்திருத்தத்திற்கும், மறுசீரமைப்புக்குமான கடிவாளத்தை வங்கிகளை நடத்தும் வர்த்தகத்திலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும்.''

வங்கி முறையின் பங்களிப்பு ஒரு பரவலான அடிப்படையில் மாற்றம் செய்யப்படுவதில் மறுசீரமைப்பு அடங்கியிருக்கிறது. புதிய நிர்வாக முறையின் கீழ், வங்கிகள் பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பயன்களுக்காக பணியாற்ற வேண்டும். இதற்கு முன்னர் அவைகள் சமூக சேவைகள், ஓய்வூதியங்கள், அரசுத்துறை, அரசிற்கு சொந்தமான நிறவனங்கள் மற்றும் கிராம மானியங்கள் போன்ற இலாபம் தராத பணிகளை மேற்கொண்டு வந்ததற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். அது போன்ற நடவடிக்கைகளால் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டு செயல்பட்டு வந்தனர்.

வங்கி சீர்திருத்தம்

1978க்கு முன்னர், சீன மக்கள் வங்கி என்ற ஒரே அமைப்புத்தான் விவசாய கூட்டுப்பண்ணை மற்றும் அரசிற்கு சொந்தமான தொழிற்துறை ஆகியவற்றிற்கு அடிப்படையாகக் கொண்ட தேசிய அளவில் நெறிமுறைப்படுத்தப்பட்ட அந்த எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்ட வெளித் தொடர்பில்லாமல் மூடப்பட்டிருந்த பொருளாதாரத்தின் அனைத்து நிதியாதாரங்களையும் வளங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

1980களில் நடைபெற்ற முதல் அலை ''சந்தை சீர்திருத்த'' காலத்தில் சீனாவின் அரசு வர்த்தக வங்கிகள் உருவாக்கப்பட்டன. இந்த வங்கிகள் ''வர்த்தக'' வங்கிகள் என்றழைக்கப்பட்டாலும் அவை அரசிற்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கும், சமூக உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் கிராமப்புற விவசாயிகளுக்கு கடன்கள் என்ற வடிவத்தில் மானியங்களையும் இவை வழங்கி வந்தன. மற்றும் இவற்றால் திருப்பிசெலுத்தப்படாத கடன்கள் மேலும் அதிகமாக குவிந்தன. இதன் விளைவாக பெரும்பாலும் வசூலிக்க முடியாத பெரிய அளவிற்கான திருப்பிசெலுத்தப்படாத கடன்கள் அரசு வர்த்தக வங்கிகளுக்கு பெருகின.

சீன அரசாங்கம் பெருமளவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி வந்ததால் அரசாங்கத்திற்கு சொந்தமான தொழிற்சாலைகள் அதிக அளவிற்கு வரி விகிதங்களை செலுத்த வேண்டி வந்தது மற்றும் பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு கணிசமான அளவிற்கு சமூக பயன்களை வழங்கி வந்தன. அதே நேரத்தில் அரசு வங்கிகள் இலாபம் தருகின்ற வழிகளை தேடின அதன் மூலம் ஊக பேர நில-கட்டிட சந்தையில் ஈடுபட்டன மற்றும் மேலும் அதிக திருப்பிசெலுத்தப்படாத கடன்கள் இவற்றின் மூலம் சேர்ந்தன.

1990 களின் நடுவில் ஊகபேர முதலீட்டு குமிழிகள் (Speculative Investment Bubbles) உடைந்து நொருங்கியதும் செயல்படாக்கடன்கள் (NPLs) அளவு கடுமையாக உயர்ந்தது. 1994ல், நில-கட்டிட சந்தையில் மற்றும் பங்குச் சந்தைகளை ஸ்திரப்படுத்துவதற்கு பெய்ஜிங் தலையிட்டு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க டாலரோடு ஒப்பிடும்போது யானின் மதிப்பை 5லிருந்து 8.3 ஆக குறைந்தது. இதன் விளைவாக யான் நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட சொத்துக்களின் மதிப்பு குறைந்தது மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான பொருளாதார பிரிவுகளில் நெருக்கடி ஆழமாயிற்று. 1998 வாக்கில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் செயல்படாக்கடன்களின் விகிதம் (960 பில்லியன் டாலர்கள்) அளவிற்கு ஒரு மலைப்பூட்டும் 20 சதவீதமாக உயர்ந்தது.

இதற்கு பெய்ஜிங் அரசு செலவினங்களை வெட்டுவதன் மூலம் நடவடிக்கை எடுத்தது. 1995ல், அரசாங்கம் சீன மக்கள் வங்கியை நாட்டின் மத்திய வங்கியாக முதலாளித்துவ மேற்கு நாடுகளின் வழிகளில் சம்பிரதாய முறைப்படி நிறுவியது. அதன் பிரதான நோக்கம் என்னவென்றால் வங்கிகள் அரசாங்கத்திற்கு நேரடியாக மானியம் வழங்குவது தடுக்கப்பட்டது அல்லது வர்த்தக நிபந்தனைகளை நிறைவேற்றாத வகைகளில் அரசாங்கத்திற்கு கடன்கள் தருவது தடுக்கப்பட்டது. மானியங்கள் எதுவாக இருந்தாலும் அது மிகக் குறைந்த அரசாங்க வரவு செலவு திட்டத்திலிருந்து வர வேண்டும்.

1997-98ல் ஏற்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடியால் நிலவிய நிதி ஸ்திரமற்ற தன்மை பற்றிய அச்சங்களினால் வங்கி சீர்திருத்த நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. அரசிற்கு சொந்தமான நிறுவனங்களிடம் குவிந்து விட்ட 10 பில்லியன் கணக்கான யான்கள் திரும்பிபெறமுடியாத கடனை இல்லாதொழிக்க நான்கு சொத்து நிர்வாக நிறுவனங்கள் (Asset Management Companies-AMCs) உருவாக்கப்பட்டன. தனியார்மயமாதலும் தொழிற்சாலைகள் மூடலும் அதற்கு முன்னர் நடைபெற்றிராத அளவிற்கு மிகப் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கம் தந்துள்ள புள்ளி விவரங்களின் படி, 1998 முதல் 2005 வரை அரசிற்கு சொந்தமான தொழிற்சாலைகளில் பணியாற்றிய ஊழியர்களில் 60 சதவீதம் பேர் அல்லது 30 மில்லியன் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு வேலையில்லாதோர் வரிசையில் சேர்ந்தனர்.

என்றாலும், அரசாங்கத்தின் நிதிநெருக்கடி நீடித்தது, ஏனெனில் வட்டிகளையும் ஏற்கனவே பாக்கியிருக்கிற கடன்களையும் செலுத்துவதற்கு மேலும் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1998ல் மொத்த் உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீத அளவிற்கு சமமான (33 பில்லியன் டாலர்கள்) மதிப்பில் 270 பில்லியன் யான்களுக்கான கடன் பத்திரங்களை நான்கு பெரிய அரச கட்டுப்பாட்டு வங்கிகளின் முதலீட்டு அடித்தளங்களை வலுப்படுத்துவதற்காக வெளியிட்டது. 1999-2000 திற்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு சொத்து நிர்வாக நிறுவனங்களும் (170 பில்லியன் டாலர்கள்) 1.4 டிரில்லியன் யான்கள் மதிப்பிலான கடன் பத்திரங்களை விநியோகித்தன.

2001ல் உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின்னர், பெய்ஜிங்கின் கொள்கை அரசு வங்கிகள் ''பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு வளரும்'' என்பதாக இருந்தது. என்றாலும், அவைகளின் நிதி நிலவரங்கள் ஆபத்தான போக்கிலேயே உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வல்லரசுகள் யான் நாணயத்தின் மதிப்பை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாக யான் நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட நில-கட்டிட மற்றும் தொழிற்துறை திட்டங்களுக்கு அலை போல் ஊகபேர அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டன. யான் நாணயத்தின் மதிப்பு உயருமானால் அதன் மூலம் தங்களுக்கு கொள்ளை இலாபம் கிடைக்கும் என்று முதலீட்டாளர்கள் நம்பினர்.

சர்வதேச நாணய நிதிய பத்திரிகையான Finance & Development செப்டம்பர் மாத இதழில் உயர் சேமிப்பு விகிதங்கள் மற்றும் மலிவான கடன்கள் கிடைப்பது ஆகியவற்றின் காரணமாக சீனாவில் ஊகபேர முதலீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 முதல் 45 சதவீத அளவிற்கு வளர்ந்தது. இதன் விளைவாக உருவான உபரி கடன் வழங்கும் திறன் குறிப்பாக போட்டிகள் குறைவாக உள்ள அரசிற்கு சொந்தமான நிறுவனங்களில் திரும்பிபெறமுடியாத கடன்கள் பெருகுவதற்கு மற்றொரு மூலாதார வாய்ப்பாக ஆகிவிட்து.

''சுருக்கமாக சொல்வதென்றால் சீனாவில் நிலவுகின்ற ஒரு அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் மிக உயர்ந்த அளவிற்கு உருவாக்கப்பட்டு வருகின்ற தனிமனித சேமிப்பு மிக உயர்ந்த அளவிற்கு வேகமாக முதலீடுகளை வளரச்செய்கிறது. அந்த முதலீடுகள் மூலம் கிடைக்கின்ற வருமானம் மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம் சீனப் பொருளாதார சித்திரத்தை ஒன்றாக இணைத்திருக்கும் எளிதில் அறுந்துவிடக்கூடிய நூலிழைகள் தான். தொழிற்சாலைகளுக்கு மலிவான வட்டி விகிதத்தில் குறிப்பாக அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கும் போது குறைந்த வட்டி விகிதங்கள்தான் விதிக்கப்பட்ட வேண்டும். வங்கிகளின் இலாபம் நிலையாக நீடித்திருக்க வேண்டுமென்றால் அதற்கேற்ப சேமிப்புகளுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் செலுத்தப்பட வேண்டும். ஆக பொருளாதார அடிப்படையில் பயணிக்காத அரசுத் தொழில்களை நிலைநாட்டுவது மற்றும் வங்கிக் முறையின் மூலம் அவற்றிற்கு ஆதரவு தருவது இவற்றின் விளைவாக மிகப் பெருமளவிற்கு உள்ளார்ந்த செலவினங்கள் உருவாகின்றன'' என்று சர்வதேச நாணய நிதிய பத்திரிகை எச்சரித்துள்ளது.

அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களின்படி, இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களிலேயே நான்கு பெரிய அரச வர்த்தக வங்கிகளின் செயல்படாக்கடன்கள் (NPLs) அளவு 1,567.1 பில்லியன் யான்கள் (193 பில்லியன் டாலர்கள்) அல்லது மொத்தக் கடன்களில் 15 சதவீதம். என்றாலும் அதிகாரபூர்மற்ற மதிப்பீடுகள் இந்த சதவீதத்தை மேலும் அதிகமாக காட்டுகின்றன. 2003 இல் 20 சதவீதமாக இருந்த அதிகாரபூர்வமான விகிதாச்சாரம் வீழ்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் பாரியளவிற்கு அரசாங்கம் மானியங்களையும் உதவித் தொகைகளையும் வழங்கியதுதான்.

எடுத்துக்காட்டாக 2004ல் பெய்ஜிங் தனது வெளிநாட்டு நாணய கையிருப்பிலிருந்து 45 பில்லியன் டாலர்களை (இவை பெரும்பாலும் அமெரிக்க டாலர்களை அடிப்படையாக கொண்ட சொத்துக்கள்) சீனா வங்கிற்கும் சீன கட்டுமான வங்கிக்கும் பெய்ஜிங் வழங்கியது. இந்த ஆண்டு ஏப்ரலில் சீன தொழிற்துறை மற்றும் வர்த்தக வங்கி அதே வட்டாரத்திலிருந்து 15 பில்லியன் டாலர்களை பெற்றது. கடந்த 18 மாதங்களுக்கு மேலாக, சீனாவின் மத்திய வங்கி திரும்பபெறமுடியாத கடன்களை ரத்துச் செய்யவும் அல்லது மறுமுதலீட்டிற்காகவும் 10 பில்லியனுக்கு மேற்பட்ட டாலர்களை செலவிட்டிருக்கிறது. இந்த ''தூய்மைப்படுத்தும்'' நடவடிக்கை எதுவும் இறுதிக்கடனாளி சீன அரசாங்கம்தான் என்பதில் எதையும் மாற்றிவிடவில்லை.

சீனப் பொருளாதாரம் வெளிநாட்டு முதலீட்டளர்களுக்கு திறந்து விடப்படுகின்ற நடவடிக்கைகள் பெருகும் போது அரசாங்கத்தின் குறைந்தபட்ச கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் போது கடுமையான நிதி ஸ்திரமற்ற தன்மை ஆபத்து ஏற்படுவது அதிகரிக்கிறது. ஜூலையில் பெய்ஜிங் அமெரிக்க டாலருக்கு எதிராக யான் நாணயத்தின் மதிப்பை 2 சதவீதம் உயர்த்தியது. அத்துடன் டாலரை ஒரு அச்சாணியாக கொண்டு நடத்தப்பட்டு வந்த நாணய புழக்க முறைக்கு பதிலாக சில குறிப்பிட்ட சர்வதேச நாணயங்களை அடிப்படையாக கொண்டு யான் நாணயத்தின் மதிப்பை நிர்ணயித்து அறிவித்தது. ஆனால் இந்த முடிவு ஊக பேர முதலீடுகள் சீனாவிற்குள் குவிவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை, அல்லது முதலீட்டு குமிழிகள் வீழ்ச்சியடையும் போது முதலீடுகள் சீனாவிலிருந்து வெளியேறுகின்ற ஆபத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

தற்போது, சீன அதிகாரிகள் சீன மக்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை நிலைநாட்டி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, அரசிற்கு சொந்தமான வங்கிகளில் தனக்கிருக்கும் கட்டுப்பாட்டு அதிகாரங்களை பெய்ஜிங் பயன்படுத்தி ஊக பேரங்களை மட்டுப்படுத்துவதற்கு முயன்றது, அதன் மூலம் அளவிற்கு அதிகமாக முதலீடு செய்ப்பட்டிருக்கும் எஃகு போன்ற துறைகளில் முதலீடுகளை நிறுத்தியது. ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் சீன வங்கிகளுக்கு வந்து சேரும்போது அரசாங்கம் இந்த நிதி நிறுவனங்களை முதலீட்டை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்துகின்ற ஆற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடும்.

பூகோள பொருளாதாரத்தின் மீது ஒரு உடனடியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நிதி நெருக்கடி, சீனாவை அதிகரித்தளவில் அதன் பிராதன மலிவு கூலித் தொழிலாளர் புகலிடமாக பயன்படுத்தி வருகிறது. சென்ற ஆண்டு சீனா 61 பில்லியன் டாலர்கள் அளவிற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றது. ஜப்பானுக்கு அடுத்து சீன வங்கிகள்தான் அமெரிக்காவின் பிரமாண்டமான வரவுசெலவுத்திட்ட மற்றும் வர்த்தக பற்றாக்குறைகளை ஈடுகட்டுவதற்கு இரண்டாவது பெரிய மூலாதாரங்களாக பயன்படுகின்றன. அமெரிக்க மற்றும் ஜேர்மனிக்கு அடுத்து உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளரான சீனா மூலப் பொருள்களையும் எரிபொருள்களையும் மிகப்பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளுகின்ற நாடுகளில் ஒன்று. இவை அத்தனையுமே பெருகி வரும் நிலையற்ற அடித்தளங்களை சார்ந்திருக்கின்றன.

Top of page