World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Victim of smear campaign, worker injured in anti-CPE protest emerges from coma

பிரான்ஸ்: அவதூறுப் பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு, CPE எதிர்ப்பு கண்டனத்தில் காயமுற்ற தொழிலாளர் கோமாவில் இருந்து விழித்து எழுந்துள்ளார்

By Antoine Lerougetel and Pierre Mabut
14 April 2006

Use this version to print | Send this link by email | Email the author | Featured Articles

CPE-க்கு ("முதல் வேலை ஒப்பந்தத்திற்கு") எதிராக பாரிசில் மார்ச் 18 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலிசாரின் தாக்குதலால் கடுமையாக காயமுற்றிருந்த 39 வயது பிரெஞ்சு தொலைத் தொடர்பு தொழிலாளியான சிரில் பெரெஸ் மூன்று வாரம் கோமா நிலையில் இருந்து இன்று விழித்து எழுந்துள்ளார். நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றில் இருந்து அவர் இன்னமும் அவதிப்படுகிறார்; ஆனால் சிறு சிறு அசைவுகளை அவரால் நிறைவேற்ற முடிகிறது. போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலில் பாதிப்படைந்த பெரெஸ் அடியும், மிதியும் பெற்று அவசர மருத்துவ உதவியில்லாமல் கைவிடப்பட்டிருந்தார்.

48 மணி நேரத்திற்கு பெரெஸ் வழக்குப்பற்றி ஒப்புதல் தகவல்கூட போலீசாரால் தெரிவிக்கப்படவில்லை; இவருடைய தொழிற்சங்கம் SUD PTT (Solidairy, Unity, Democracy ---Postal Office and Telecommunications Unition) செய்தி ஊடகத்திடம் தெரிவிக்கும்வரை அவருடைய நிலைமை இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது.

பெரெஸிற்கு ஆறு வயது மகன் உள்ளான்; இவர் பாரிசுக்கு சற்றே வெளியே இருக்கும் டோர்சி (Torcy) யில் வசிக்கிறார். தொலைத்தொடர்பு நிறுவனமான OrangeTM ஊழியராக பணியாற்றி வருகிறார். SUD-PTT சாட்சிகளின் அறிக்கைகள் மற்றும் நிகழ்வு பற்றிய புகைப்படங்களை சேகரித்துள்ளது. "போலீசுக்கு எதிராக அசைக்கமுடியாத முடிவான காரணங்களை" அவை வழங்கியுள்ளதாக அது கூறியுள்ளது.

மார்ச் 22 அன்று வெளியிடப்பட்ட தொழிற்சங்க அறிக்கை கூறுவதாவது: "CPE க்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், சிறில் Place de la Nation ல் இருந்தார். ஒரு தவறான இடத்தில் தவறான நேரத்தில் இருந்த துரதிருஷ்டசாலியான இவர் போலீசாரால் மூர்க்கத்தனமாக மிதித்து தள்ளப்பட்டார். மருத்துவ வசதி கொடுப்பது "பயனுடையதாக இருக்கும்" என்று அவர்கள் கருதவில்லை. இன்று SUD-PTT உறுப்பினரான சிறில், வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கிறார்."

அறிக்கை தொடர்ந்து கூறுவதாவது: "அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களும், அங்கு சென்றவர்களும் நிகழ்வை கண்டனர். போலீசாரின் அணுகுமுறை மேலும் மேலும் அச்சுறுத்தலை கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களையும் மேலும் ஆத்திரமூட்டுவதாகவும் உள்ளது. ஆபத்துக்கள் வரும் நிலைமை பெருகிவிட்டது மற்றும் விபத்துக்கள் நிகழ்வது அதிகரித்துவருகின்றன. மாகாணங்களிலும், பாரிசை போன்றே, போலீசாரால் தாக்குதல் அடிக்கடி நடைபெற்று கைதுகளும் நடைபெறுகின்றன. எவ்விதத்திலும் ஒரு குண்டரல்லாத சிறில், தரையில் வீழ்த்தப்பட்டு போலீசாரால் வெட்கம்கெட்டதனமாக மிதித்து துவைக்கப்பட்டார். அது போதாது என்பது போல், போலீசார் மருத்துவ உதவியை கோரவும் மறுத்துவிட்டனர். எவ்வித உதவியும் இல்லாமல் 20 நிமிஷங்கள் சிறில் கைவிடப்பட்டிருந்தார்."

ஆரம்பத்தில் இருந்தே, பெரெஸ்தான் தன்னுடைய நிலைமைக்கு காரணம் என்ற போலீசாரின் அவதூறுப் பிரச்சாரம் இருந்தது; அவர் ஒரு குடிகாரர் என முத்திரைகுத்தப்பட்டார். ஆனால் வீடியோ காட்சிகள், சாட்சியங்கள் ஆகியவை பெரெஸ் Place de la Nation ல் மிக மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு உட்பட்டதை வெளிப்படுத்துகின்றன; அங்கு 350,000 பேர் கொண்ட வலுவான ஆர்ப்பாட்டம் முடிவுற்ற தறுவாயில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழக, உயர்நிலைப் பள்ளி ஆக்கிரமிப்புக்கள், முற்றுகைகள் மற்றும் ரயில்வே பாதைகள், அதிவேக சாலைகள் படையெடுப்புக்கள், தெருக்களில் மறியல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த எதிர்ப்பாளர்களை போலீஸ் நடவடிக்கைகள் மூலம் அகற்றியபொழுது காயமடைந்த மக்களின் எண்ணிக்கை பற்றி அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை. மார்ச் 13ம் தேதி அதிகாலையில் தடியடி பிரயோகிக்கும் ரோந்து போலீசார் கண்ணீர்ப்புகையை பயன்படுத்தி சோர்போன் மாணவர்களை முற்றுகையில் இருந்து அகற்றினர்; இது பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் உத்தரவின்பேரில், உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியின் நேரடிப் பார்வையில் நிகழ்ந்தது. இதுதான் இயக்கம் பின்னர் நசுக்கப்பட்டதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.

கிட்டத்தட்ட 3,400 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது; இதுகாறும் எந்த குற்றத்திலும் ஈடுபட்டிராத மாணவர்களுக்கு எட்டு மாத கால சிறைத் தண்டனை சுமத்தப்படக் கூடும்.

SUD PTT கூட்டமைப்பு, அரசாங்கத்தையும் உள்துறை மந்திரியையும் மூன்று கேள்விகள் கேட்டுள்ளது: சிறில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுவது அவரை மிதித்துத் தள்ளுவதை நியாயப்படுத்துவது எங்ஙனம் சரியாகும்? மருத்துவ சேவையை போலீசார் ஏன் விரைவாக செயலாற்றவில்லை? ஆர்ப்பாட்ட தினத்தன்று மாலையில் ஒரு நபர் தீவிரக் காயமுற்றதாக போலீசார் ஏன் அறிவிக்கவில்லை?

கடந்த வெள்ளியன்று WSWS, SUD PTT யில் இருக்கும் Régis Blanchot உடன் உரையாடியது; அவர்தான் தொழிற்சங்கத்திற்காக சிறில் பெரெஸின் வழக்கின் பொறுப்பை கொண்டிருக்கிறார்.

Blanchot கருத்து கூறியதாவது: "நேற்று மாலை அவர் கண் திறந்துள்ளார். அவரால் பேச முடியவில்லை; ஆனால் அவர் புரிந்துகொள்ளுகிறார், கொடுக்கப்படும் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிகிறார். நுரையீரல் பாதிப்பு முற்றிலும் குணமடையவில்லை. இது இவர் பெற்ற மூர்க்கமான தாக்குதலின் விளைவு ஆகும்; இதன் பின் அவருக்கு மருத்துவ மனையில் குழாய்கள் பொருத்தப்பட்டன.

"கோமாவில் இருந்து முற்றிலுமாக வரும்போது எந்த நிலையில் இருப்பார் என்று நாங்கள் கூறமுடியாது. அவரைப் பற்றிக் கூறப்பட்ட அனைத்து பொய்கள் பற்றிய பிரச்சினையும் உள்ளது. உண்மை வெளியே வரவேண்டும்.

"அனைவரும் அதிர்ச்சியுற்றனர்; தவறான தகவல் பிரச்சாரத்தால் மிகவும் சீற்றம் அடைந்துள்ளனர். சிரில் ஒரு குடிகாரர் என்றும் மருத்துவமனையில் படுக்கையில் இருந்து கீழே விழுந்ததால் காயமடைந்தார் என்றும் அவர்கள் கூறினர். ஒரு CRS (ரோந்து போலீஸ்) அதிகாரி வேறுசில ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரைத் தாக்கியதாக கூறினார். போலீசாரிடம் இருந்து தகவல் வருவதற்கு பதிலாக பல்விதமான கசிவுகள்தான் வந்தன. இப்படி தவறாக தகவல்களை திரட்டிக் கொடுத்ததற்கு ஒரு நோக்கம்தான் இருந்தது; போலீசார் செயலுக்கு மேற்பூச்சுக் கொடுத்தல் என்பதே அது.

"நாங்கள் அவருடைய குடும்பத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறோம். ஒரே வழக்குரைஞர்தான் இருவருக்கும். இந்த பொய்களுக்கு விடையிறுப்பதற்கு என்ன நடந்தது என்ற துல்லியமான தகவல்களுக்கு காத்திருக்கிறோம்---இப்பொய்கள் சிறில்லை அவதூறு செய்வதற்காகும்.

"CPE-எதிர்ப்பு இயக்கத்தின் போது, ஆயிரக்கணக்கான கைதுகள் நிகழ்ந்து, குறுகிய கால விசாரணைகளில் அடுத்தடுத்து கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக சிறிலின் வழக்கிற்கு மூன்று வாரங்களுக்குப் பின்னர் ஒரே ஒரு விசாரணைதான் நடந்துள்ளது; இவ்வழக்கிற்கு விசாரணை நீதிபதி இன்னும் நியமிக்கப்படவில்லை. மார்ச் 24ம் தேதி நாங்கள் புகார் கொடுத்தோம். சார்க்கோசி முழு விசாரணை நடத்தப்படும் என்று உறுதி மொழி கொடுத்தார். அதன் பின் எங்களுக்குத் தகவல் ஏதும் இல்லை; எனவே நாங்கள் இரண்டாம் புகாரையும் கொடுத்துள்ளோம்."

ஆர்ப்பாட்டத்தின்போது இரகசியப் போலீசார், SUD உட்பட பல இடது அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்களின் அடையாளக் குறி (stickers) தாங்கிய ஒட்டிகளை அணிந்து வந்ததைப் பற்றி அவருடைய கருத்தைக் கேட்டபோது, Blanchot கூறிய விடையாவது:

"இதை அனுமதிக்கமுடியாது என நாங்கள் நினைக்கிறோம். இது வன்முறையைத்தான் தூண்டும். போலீஸ் ஒற்றர்கள் இருந்திருக்கலாமோ என்பது பற்றி எங்களுக்கு சந்தேகம் உண்டு, ஆனால் நிரூபணம் இல்லை ---ஆனால் அது நம்பகத்தனமாக உள்ளது. குண்டர்கள் பலநேரமும் பிடியில் தப்பாமல் செயல்களை புரிகின்றனர்; ஆர்ப்பாட்டங்களின் முடிவில் அவர்கள் ஓடிவிடுகின்றனர்; உண்மையான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டு, கடுந் தண்டனை பெறுகின்றனர். ஏப்ரல் 4ம் தேதி [பாரிசில்] ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அப்படித்தான் நடந்தது.

"எங்களில் பலரும் Malik Oussekine [1986ம் ஆண்டு கல்விச் "சீர்திருத்தத்தையொட்டி" நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் (சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் பிரிவினால் தாக்கப்பட்டு இறந்த மாணவர்] ஐ நினைவுகொள்ளுகிறோம். உள்துறை மந்திரியான Charles Pasqua உடன் அப்பொழுது இணைந்து பணியாற்றிய மந்திரியான Robert Pandraud கூறினார்; "கல்லீரல் சிகிச்சை பெற்று வரும் ஒரு மகனை நான் கொண்டிருந்தால், ஆர்ப்பாட்டத்தில் முழு முட்டாள் போல் அவன் நடந்து கொண்டிருக்கமாட்டான்."

"இது மக்களுடைய எண்ணத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தற்போதைய ஜனாதிபதியும் அப்போதைய பிரதம மந்திரியாகவும் இருந்த ஜாக் சிராக் 1988 தேர்தலில் தோற்பதற்கு வழிவகுத்தது. சிறில் போலீசாரால் அவதூறு செய்யப்படுவதை கேட்டபோது எங்களுக்கு அதுதான் ஞாபகத்திற்கு வந்தது."

கண்டன இயக்கம் தீவிரத்தன்மையை கண்டு அச்சமுற்ற நிக்கோலா சார்க்கோசி 1986 நிகழ்வுகளை தெளிவாக மனத்தில் கொண்டுதான் CPE பின்வாங்கப்படுவதற்குத் தான் ஏன் ஆதரவு கொடுத்தேன் என ஏப்ரல் 11 அன்று வலதுசாரி Le Figaro ஏட்டில் வெளியிடப்பட்ட ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

"வலதுசாரி வாக்காளர்களை நன்கு சிந்திக்குமாறு நான் கேட்டுக் கொள்ளுகிறேன். நமக்கு பெரிதும் விசுவாசத்துடன் வாக்களிக்கும் மக்கள், தெருக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு இணங்கக்கூடாது என விரும்புகின்றனர் மற்றும் அவர்கள் விரும்புவது சரி. ஆனால் அவர்கள் பெரும் குழப்பம் முடிவிற்கு வரவேண்டும் என்றும் விரும்புகின்றனர். மற்றொரு Malikj Oussekine போன்ற நிகழ்வு வரக்கூடாது என அவர்கள் விரும்புகின்றனர்; அது பேரழிவிற்கு வகை செய்துவிடும். நான் ஒன்றும் இடதிற்கு எளிதில் செயல்களை முடித்துக் கொடுப்பதற்கு வரவில்லை."

See Also:

தொழிலாளர்கள் அதிகாரத்திற்கான ஒரு சோசலிச மூலோபாயம்: பிரான்சின் "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" ஒரே விடை

Top of page