World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Joschka Fischer and German Greens defend Israeli bombing terror in Lebanon

லெபனானில் இஸ்ரேல் நடத்தும் பயங்கர குண்டுவீச்சிற்கு ஜோஷ்கா பிஷ்ஷரும் ஜேர்மன் பசுமைக் கட்சியினரும் ஆதரவு அளிக்கின்றனர்

By Ulrich Rippert
28 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

இந்த வார ஆரம்பத்தில் ஜேர்மன் பசுமைக் கட்சியில் பிரதிநிதி ஜேர்சி மொன்டாக், ஒரு ஜேர்மனிய-இஸ்ரேலிய பாராளுமன்ற குழுவின் தலைவராக இஸ்ரேலுக்கு பயணித்திருந்தார். ஒரு செய்தி ஊடகத்திற்கான அறிக்கையில் பேர்லினில் உள்ள அவருடைய அலுவலகம் ஜேர்மனிய-இஸ்ரேலிய சங்கமும் ஹைபாவிற்கு செல்லும் பயணத்தில் பங்கு பெறும் என்று அறிவித்தது.

இந்தப் பயணத்தின் நோக்கம் ஜேர்மனியில் பலராலும், இதைப் பற்றிய "பரந்தளவில் விளங்கிக்கொள்ளாததாலும்" மற்றும் "பலரால் விமர்சிக்கப்படுவதாலும்", "இஸ்ரேலின் தற்போதைய இராணுவ நடவடிக்கை, கொள்கைக்கு ஆதரவு திரட்டுதலாகும்" என்று அறிக்கை அறிவித்துள்ளது.

பசுமைக் கட்சியினருக்கும் ஜேர்மன் பழைமைவாத கட்சிகளுக்கும் நெருக்கமான ஒத்துழைப்பு வேண்டும் என்று வலுவாக வாதிட்ட நிலையில் தனக்கென ஒரு புகழை இதுகாறும் ஏற்படுத்திக் கொண்டுள்ள மொன்டாக், இஸ்ரேலின் போர்ப்பிரச்சாரத்தை சொல்லுக்கு சொல் மீண்டும் எடுத்துக் கூறினார். Spiegel online இற்கு மொன்டாக் கூறியதாவது: "லெபனிய தேசிய எல்லையில் இருந்து வந்த விரோதப் போராளிகளுக்கு தன்னுடைய இராணுவ உறுப்பினரைகளை கடத்தவும் கொல்லவும் இஸ்ரேல் எந்தச் செயலையும் செய்யவில்லை. இஸ்ரேலிய நகர்களின் மீது குண்டுவீச்சிற்காக உந்துதலை எதையும் செய்யவில்லை. தன்னுடைய குடிமக்களை காப்பாற்றும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு. அதைத்தான் அது செய்கிறது."

தெற்கு லெபனானை தொடர்ந்து பல நாட்களும் குண்டுவீச்சிற்கு உட்படுத்தியுள்ள தன்மை, சாலைகள், பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பெய்ரூட்டை சுற்றியுள்ள புறநகர்கள் பலவற்றையும் தகர்த்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய பயங்கரங்கள் அனைத்தும் மொன்டாக்கின் கருத்தில் "தற்காப்பு நடவடிக்கைகள் ஆகும்."

புதன்கிழமை காலை, ஐக்கிய நாடுகள் சபையின் புறக்காவல் நிலையம் ஒன்றை லெபனானில் இஸ்ரேலியப் போர் விமானம் ஒன்று தாக்கி நான்கு ஐ.நா. பணியாளர்களை கொன்றது என்பதை மில்லியன் கணக்கான மக்கள் எழுந்தவுடன் கேட்ட நிலையில், ஜேர்மனியின் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்தில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜோஷ்கா பிஷ்ஷர், Suddeutsche Zeitung பத்திரிகையில் ஒரு கருத்தை வெளியிட்டார். அவருடைய கட்டுரை ஒரு நாள் முன்னதாக கார்டியன் பத்திரிகையில் "பெரிய அளவில் சிந்திப்பதற்கான நேரம் இதுதான்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

இஸ்ரேலுக்கு போர் ஆரம்பிக்கப்பட்டதில் பொறுப்பு உள்ளது என்பதை மறுத்த வகையில் பிஷ்ஷரின் கட்டுரை இருந்தது; அவர் எழுதியதாவது; "இஸ்ரேலின் மூன்றாம் பெரிய நகரமான ஹைபாவில் ஏவுகணைகள் செலுத்தியதின் மூலம் ஒரு எல்லை கடக்கப்பட்டுவிட்டது. இப்பொழுதில் இருந்து பிரச்சனை ஒரு நிலப்பகுதி, நிலமீட்பு, ஆக்கிரமிப்பு என்பவற்றை முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை. மாறாக முக்கியமான பிரச்சினை இஸ்ரேலின் நிலைப்பாட்டிற்கு மூலோபாய அச்சம் வந்துள்ளது என்பதாகும்."

பிஷ்ஷருடைய கருத்தின்படி இப்பொழுது நடப்பது டமாஸ்கஸ் மற்றும் தெஹ்ரானில் உள்ள ஹெஸ்பொால்லா ஆதரவாளர்களின் தூண்டுதலால் நடத்தப்படும் ஒரு "மறைமுகப் போர்"; "அங்கிருந்துதான் ஹெஸ்பொல்லா தன்னுடைய பெரும்பாலான ஆயுதங்களை பெற்றுக்கொண்டுள்ளது." ஒரு தீவிரவாத "நிராகரிக்கும் முன்னணியினால்" இஸ்ரேல் தாக்கப்படுகிறது என்றும் அது எச்சமரசத்தையும் இஸ்ரேலுடன் காணவிரும்பவில்லை என்றும், அதில் "ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் பாலஸ்தீனிய புறத்திலும், லெபனான், சிரியா, ஈரானில் ஹெஸ்பொல்லாவும் உள்ளன" என்றும் பிஷ்ஷர் கொதித்துக் கூறியுள்ளார்.

பிஷ்ஷரின் கட்டுரையில் புதிதாக ஒன்றும் கூறப்பட்டுவிடவில்லை. உண்மையை ஓர்வேல்லிய முறையில் அவர் திரித்துக் கூறும் ஒவ்வொரு கருத்தும் ஏற்கனவே பலமுறை இஸ்ரேலிய, அமெரிக்க பிரச்சாரங்களால் கடந்த வாரம் வெளியிடப்பட்டதுதான். இந்தப் பிரச்சினைக்கான பிஷ்ஷரின் ஆலோசனையும் புதிதோ, சிறப்பாக இவரிடம் இருந்து தோன்றியதோ அல்ல. அமெரிக்கா தலைமையில் உள்ள "மத்திய கிழக்கு நால்வர் அணி" (அமெரிக்கா, ரஷ்யா, ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிப்பு) முடிவெடுக்கும் நடவடிக்கையை தொடக்கி இஸ்ரேலுக்கு "அரசியல், பொருளாதார, இராணுவ உறுதிமொழிகளை அளிக்க வேண்டும்" என்று இவர் கோரியுள்ளார்.

பிஷ்ஷருடைய முறையீட்டின் அழுத்தமே இன்னும் கூடுதலான வகையில் அமெரிக்க இராணுவத் தலையீடு மத்திய கிழக்கில் இருக்க வேண்டும் என்பதுதான்; தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் பகுதிகள் பலவும் திட்டமிட்ட முறையில், பாரியளவில் குண்டுவீச்சிற்கு உட்படுத்தப்பட்ட இந்தப் போரே, வாஷிங்டனுக்கும் ஜெருசலத்திற்கும் இடையில் இருக்கும் "அரசியல், பொருளாதார, இராணுவ" ஒத்துழைப்பின் விளைவுதான்.

எந்த நடுநிலை புறநிலை அரசியல் பார்வையாளருக்கும், இஸ்ரேலிய படையினர் ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாசினால் கடத்தப்படுவது இஸ்ரேலிய அரசாங்கத்தால் பென்டகனுடன் மிக நெருக்கமான ஒத்துழைப்பினால் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை தொடங்குவதற்கு ஒரு போலிக் காரணமாக அமைந்து வரவேற்கப்பட்டது என்பது தெரிகிறது.

அமெரிக்க போர்த்திட்டங்களுக்கு நேரடிக் கருவியாக இஸ்ரேல் செயலாற்றும் தன்மையின் அளவு மிகத்தெளிவாக இந்த வாரம் ஐ.நா. புறக்காவல் நிலையத்தை இஸ்ரேல் தாக்கி நான்கு ஐ.நா. பணியாளர்களை கொன்றதில் இருந்து தெளிவாகத் தெரியும். அமெரிக்க அரசாங்கம் இதைவிட மிகத் தெளிவாக ஐ.நா. மற்றும் சர்வதேச சமாதான முயற்சிகளுக்கு கொண்டுள்ள மிக இகழ்வான உணர்வை வெளிப்படுத்தியிருக்க முடியாது.

உண்மையில் மத்திய கிழக்குப் போரில் இருக்கும் இந்த "மறைமுக" தன்மை, புஷ் அரசாங்கத்திற்காகவும், அதைக் கேட்டுக் கொண்டதன் பேரிலும் தாக்குதலை நடத்தியதில் பொதித்து கிடக்கிறது; அமெரிக்க ஆயுதங்களால் நிறைந்துள்ள அதன் இராணுவம் ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாசை தாக்கி சிரியா, மற்றும் குறிப்பான வகையில் ஈரானுக்கு எதிராக ஒரு வருங்கால தாக்குதலை இயக்குவதற்கு வழிவகுக்கவும் இஸ்ரேல் செயல்பட்டுவருகிறது.

உலக வரைபடத்தை கண்ணுற்றால், ஈரானுடைய எல்லைகள் கிழக்கில் ஆப்கானிஸ்தானிலும், மேற்கில் ஈராக்கில் இருப்பதும் புலனாகும். இரு நாடுகளிலும் அமெரிக்க படைகளுக்கு எதிர்ப்புக்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பென்டகனில் உள்ள இராணுவ மூலோபாயவாதிகள் ஈரானுக்கு எதிரான ஒரு இராணுவத் தலையீட்டிற்கு அரும்பாடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பகுதியின் மூலோபாய முக்கியத்துவம் அமெரிக்க அரசியல் தட்டினருக்கு நன்கு தெரியும். அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Zbigniew Brzezinski தற்போதுள்ள புஷ் அரசாங்கத்துடன் பல பிரச்சினைகளிலும் கருத்து வேறுபாடு கொண்டாலும், அவர்தான் இப்பகுதியின் முக்கியத்துவத்தை மிகத் தெளிவாக விளக்கியிருந்தார். "மாபெரும் சதுரங்கப் பலகை: அமெரிக்க தலைமையும் அதன் புவியியல் மூலோபாய கட்டாயங்களும்" என்று சோவியத் ஒன்றியம் தகர்ந்த பின்னர், இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட புத்தகத்தில் அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய ஒரே உலக சக்தி என்னும் பங்கை உறுதிபடுத்துவதற்கு சில முறையான நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார். அதையொட்டி அவர் ஈரானின் மூலோபாய முக்கியத்துவம் பற்றி விளக்கியிருந்தார்.

புத்தகத்தின் முதல் அத்தியாயங்களில், அத்தகைய தலைமைக்கு எல்லாவற்றையும் விட பெரும் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள், குழாய்த்திட்டங்கள் கொண்டிருப்பதும், மிக முக்கியமான வகையில் வடக்கில் காஸ்பியன் பகுதி, தெற்கில் இந்து சமுத்திரம் மற்றும் அராபிய கடலை கொண்டுள்ள அதன் மூலோபாய புவியியல் நிலை போன்றவற்றை ஈரான் கொண்டிருப்பது காரணமாக "யூரேசிய நிலப்பகுதிகள்மீது" கட்டுப்பாடு தேவை என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் பகுதியில் ரஷ்ய ஆதிக்கம் இருப்பதை Brzezinski வலியுறுத்தி, இதை முறிப்பதற்கு "காஸ்பியன் கடலில் இருந்து அஜர்பைஜானுக்கும் அங்கு இருந்து துருக்கி வழியாக மத்தியதரை கடல் பகுதிக்கும், மற்றொரு குழாய்த்திட்டம் ஈரானை கடந்து அரேபிய கடலுக்கு செல்லும் வகையில் இருந்தால்தான் முடியும்" என்று கூறினார்.

இதற்கிடையில், Brzezinskiயே இத்தகைய தன்னுடைய மூலோபாய திட்டங்கள் அமெரிக்காவிற்காக செயல்படுத்தப்பட்டால் அது பேரழிவில் முடியும் என்றுகூட ஒப்புக் கொண்டுள்ளார். இந்த வாரம்தான் அவர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸை அவருடைய ஒரு புதிய மத்திய கிழக்கு உதயம் என்ற பேச்சிற்காக கடிந்து கூறியுள்ளார்.

ஜேர்மனிய செய்தி ஊடகத்திற்கு அவர் கூறியதாவது: "அது ஒரு மகிழ்ச்சி தரும் சொற்றொடர் அல்ல. சில சமயம் பிரசவ வலிகள் சிசுவின் இறப்பில் முடிந்துவிடும். இப்பிரசவ வலிகள் உண்மையில் எதைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் இது ஒரு வெறும் ஊகமாகப் போகக் கூடும்; வரலாற்றுடன் ரஷ்ய சூதாட்டம் ஆடுவது போல் ஆகிவிடும். மத்திய கிழக்கில் இவை அனைத்துமே அமெரிக்காவிற்கு பெரும் அழிவாகக் கூட முடியலாம்."

இப்பகுதியின் மூலோபாய முக்கியத்துவம் பற்றி ஜோஷ்கா பிஷ்ஷரும் நன்கு அறிவார். ஆனால் 1990 களின் தொடக்கத்தில் பசுமைக் கட்சியின் தலைவர் என்னும் முறையில் அப்பொழுது இப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை இவர் எதிர்த்திருந்தார். 1991ம் ஆண்டு முதல் வளைகுடா போரை மூத்த ஜோர்ஜ் புஷ் தலைமையில் அமெரிக்கா தொடக்கியபோது, பிஷ்ஷர் ஒரு சமாதானவாதி என்று ஜேர்மயில் எதிர்ப்புக் கூட்டங்களில் பேசுகையில், "எண்ணெய்க்காக இரத்தம் சிந்தக்கூடாது!" என்று கோரினார். ஆனால் அது கூறப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் பின்னர் பசுமைக் கட்சியினர் தங்களுடைய சமாதானத் தோற்றத்தை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, நிபந்தனையற்ற முறையில் அமெரிக்க இஸ்ரேலிய மத்திய கிழக்கு ஆக்கிரமிப்பிற்கு சரணடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய அமெரிக்க போர்ப் பிரச்சாரத்தில் பிஷ்ஷர் பேரார்வத்துடன் ஈடுபடும் அவலமான காட்சிக்கு பல காரணங்கள் உள்ளன. அவர் தனியே இந்த நிலைப்பாட்டை கொள்ளாமல், தங்களது வாழ்நிலையை உயர்த்திக்கொண்டுள்ள முன்னாள் தீவிரவாத தட்டினர் முழுவதற்குமாக வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்; அவர்கள் அனைவரும் தங்களுடைய சமூக அந்தஸ்து உயர்த்திக்கொண்டுள்ளதுடன், தங்களுடைய கிளர்ச்சிக்கால இளம் வயதில் இருந்ததை விட சமூக, அரசியல் சிக்கல்கள் மோசமான வடிவத்தை எடுத்துள்ள சமூகத்துடன் சமரசம் செய்து கொண்டுவிட்டனர். இத்தகைய தட்டினரின் தன்மையில் பெருகியளவில் ஜனநாயக உரிமைகளுக்கு எதிர்ப்பும், சர்வாதிகார வகையிலான அரசாங்கங்களுடன் பிணைப்பும் காணப்படுகின்றது.

பிஷ்ஷர் மற்றும் மொன்டாக்கும், லெபனிய மக்கள், பாலஸ்தீனிய பயங்கரவாதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குண்டுத் தாக்குதல் பயங்கரத்தைப் பெருமைப்படுத்துவது, பசுமைக் கட்யினருக்கும் அங்கேலா மேர்க்கல் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்-CDU) தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்துவிட வேண்டும் என்பதுடனும் பிணைந்து உள்ளது; இது வெளியுறவுக் கொள்கையில் மட்டும் இல்லாமல், உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரையிலான கொள்கைக்கும் பொருந்தும்.

முன்னாள் வெளியுறவு மந்திரி பிஷ்ஷர், தற்போதைய அமெரிக்க-இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எந்த ஐரோப்பிய சக்தியும் அறைகூவல் விடாத உண்மைக்கு உதாரணமாக திகழ்கிறார். அமெரிக்கத் தலைமையிலான ஈராக் போருக்கு முன்னைய ஜேர்மன் அரசாங்கம் காட்டிய வரம்பிற்குட்பட்ட, அரைகுறை மனதுடனான ஆதரவு இப்பொழுது பெருகிய முறையில் தெளிவாகிறது. ஆயினும்கூட, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க போர்க் கொள்கை பற்றி ஐயங்களை தெரிவித்தவர்களில் பிஷ்ஷரும் ஒருவர் ஆவார்.

மூனிச் பாதுகாப்பு ஆண்டு மாநாட்டில் பிஷ்ஷர்தான் அமெரிக்க பாதுகாப்பு மந்திரியான டொனால்ட் ரம்ஸ்பெல்டிடம் அமெரிக்காவின் போருக்கான வாதங்கள் பற்றித் தான் நம்பிக்கை கொள்ளவில்லை என்று கூறினார். "திரு.மந்திரி அவர்களே, எனக்கு நம்பிக்கை தரும் வகையில் உங்கள் வாதம் இல்லை" என்று அப்பொழுது அவர் கூறியிருந்தார்.

இப்பொழுது அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது; ஏஎல் சமீபத்தில் புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பதவியை அவர் பெற்றுள்ளார் என்பதால் அன்று (ஜேர்மனியில் முறையான கல்வியை முடிக்க இவரால் முடியவில்லை என்றாலும்). அமெரிக்க அரசாங்கம் சர்வதேசச் சட்டங்கள், உடன்பாடுகள் ஆகியவற்றை கருணையற்ற முறையில் பெரும் பலத்துடன் மீறி, சர்வதேச விமர்சனங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துள்ளமை ஐரோப்பிய அரசியல் வட்டங்களில் பொதுவாக ஆழ்ந்த மதிப்பை ஏற்படுத்தியுள்ளது; அதிலும் குறிப்பாக, பிஷ்ஷர் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜேர்மனிய குட்டி முதலாளித்துவ பிலித்தீனியர்களிடேயே மதிப்பை ஏற்படுத்தியுள்ளதும் ஒரு காரணமாகும்.

இஸ்ரேலியப் போர்க் கொள்கைக்கு பிஷ்ஷர் கொடுக்கும் ஆதரவு, மற்றும் அமெரிக்காவின் தீவிரத் தலையீடு ஒன்றுதான் மத்திய கிழக்கிற்கு "உறுதித் தன்மையைக்" கொடுக்கும் என்னும் அவருடைய கூற்று இரண்டும், ஐரோப்பாவிற்கு சர்வதேச அரசியலில் வலுவான பங்கு வேண்டும் எனக் கூறும் இவருடைய சொந்த அரசியல் கருத்தாய்வுகளின் திவால்தன்மையை ஒப்புக்கொள்ளும் வகையாக உள்ளன.

மே 2000 இல் பேர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக் கழகத்தில் ஐரோப்பிய வருங்காலம் பற்றிய இவருடைய உரை "பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது" என்று விவரிக்கப்பட்டது. "ஐரோப்பிய ஒருமைப்பாட்டின் இறுதி பற்றிய சிந்தனைகள்" என்பதுதான் இவருடைய உரையின் பகட்டான தலைப்பாகும். அந்த நேரத்தில் ஐரோப்பாவிற்கு ஒரு பொது நாணயம் ஏற்கப்பட்டு, தயாராகியிருந்தாலும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இவருடைய உரையில் பிஷ்ஷர் மீண்டும் மீண்டும் ஐரோப்பிய ஒருமைப்பாடு "மகத்தான அளவில் வெற்றியடைந்துள்ளதாக" வலியுறுத்திப் பேசியிருந்தார்.

ஆனால் வரலாற்றில் பலமுறையும் நடப்பது போலவே, ஐரோப்பா பற்றிய பிஷ்ஷரின் பெரும் களிப்புத் தோற்றம் ஒரு காலம் கடந்துவிட்ட பார்வையும், ஒரு அரசியல் காலகட்டம் முடிவிற்கு வந்துவிட்டதைத்தான் பிரதிபலித்தது. இதே விதிதான் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை எதிர்க்க ஒரு பலத்தை கொண்டுள்ள ஐரோப்பாவை ஒன்றுபடுத்தி ஐரோப்பிய உள்நாட்டு சந்தையை "லிஸ்பன் மூலோபாயத்தின்கீழ்" ஒழுங்குபடுத்தவேண்டும் என்ற கருத்துக்கும் ஏற்பட்டது. ஆனால் அதை இயற்றியவர்களும் ஐரோப்பாவிற்குளேயே இடைப்பட்ட காலத்தில் பல அடிப்படை மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன என்பதை ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று.

அமெரிக்காவின் ஆதரவுடனும், கூட்டுழைப்புடனும் ஐரோப்பாவை ஒரு பொதுச்சந்தையாக உருவாக்குவது ஒரு விடயம். ஐரோப்பாவை அமெரிக்காவிற்கு எதிரான ஒரு கொத்தளமாக கட்டியெழுப்புவது என்பது ஒரு வித்தியாசமான பணியாகும். அமெரிக்க அரசாங்கம் ஐரோப்பா மீதான தனது அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தை பிரயோகிக்க ஆரம்பித்தவுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயான நெருக்கடிகள் அதிகரிக்கின்றன.

ஏகாதிபத்திய வல்லரசு அரசியலுக்கு திரும்பிவிட்ட நிலையில், அதுவும் இராணுவ ஆக்கிரமிப்பு, காலனித்துவ சுரண்டல்களும் இணைந்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கு மட்டும் இது பொருந்தவில்லை. தற்போதைய ஐரோப்பிய அரசாங்கங்கள் அத்தகைய அரசியலை எதிர்கொள்ள முடியாத இயலாமை தவிர்க்க முடியாமல் தேசிய தன்முனைப்பு மற்றும் ஐரோப்பாவிற்குள்ளேயே தேசிய மோதல்களின் வளர்ச்சி ஆகியவை பெருகுவதற்குத்தான் வழிகோலும்.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு பிரச்சினையில் இப்படிப்பட்ட இழிவான வகையில் ஐரோப்பிய சக்திகளும் அதன் முக்கியமான அரசியல்வாதிகளும் சரணடைந்துள்ளது ஐரோப்பாவை ஒரு பூர்ஷ்வா அடிப்படையில் ஒன்றுபடுத்தமுடியும் என்ற திட்டத்தின் திவால்தன்மையை முற்றிலும் தெளிவாக்கியுள்ளது. ஐரோப்பா இன்னும் புதிய போர்கள், இராணுவ பேரழிவுகள் என்ற அச்சுறுத்தல்களுக்கு ஒரே முற்போக்கான விடையிறுப்பு கண்டத்தை தொழிலாள வர்க்கம் ஒரு போராட்டத்தின் மூலம் ஐக்கிய ஐரோப்பிய சோசலிச நாடுகளை நிறுவுவதுதான்.

See Also :

அமெரிக்க-இஸ்ரேலிய போர்க் கொள்கையை எதிர்க்க முடியாத ஐரோப்பாவின் இயலாமை

Top of page