World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israeli war crimes aimed at "cleansing" south Lebanon

தெற்கு லெபனானை "இனத்தூய்மைபடுத்துதலை" இஸ்ரேலிய போர்க்குற்றங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன

By Bill Van Auken
9 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

செவ்வாய் கிழமையன்று, தெற்கு லெபனிய சிறுநகரமான காசியேவை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கியதில் குறைந்தது 14 பேராவது உயிரிழந்தனர். இதற்கு முந்தைய தினம் உறவினர்களையும், அண்டைவீடுகளை சேர்ந்தவர்களுமாக 15 பேரை அடக்கம் செய்ய சென்றிருந்த ஒரு துக்கம் கொண்டாடிய 1,500 மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது அச்சாதாரண மக்களின் இல்லங்களை ஏவுகணைகள் அழித்திருந்தன. இந்த வெடிப்புக்கள், மூடப்பட்டிருந்த சவங்களை தெருவில் போட்டுவிட்டு கூட்டத்தினரை பெரும்பரபரப்புடன் ஓடச் செய்தன.

காசியேவில் சாதாரணமாக உள்ள மக்கட்தொகை 23,000 ஆகும்; இது இப்பொழுது அலையனெ வந்துள்ள அகதிகள் கூட்டத்தால் அதிகமாகிவிட்டது. அது சிடோனுக்கு அருகில் உள்ள ஷியைட் ஆதிக்கம் நிறைந்த சிறுநகரமாகும்; சிடோனோ பெரும்பாலான சுன்னிப் பிரிவினரை கொண்ட பகுதியாகும். இன்னும் தெற்கில் இருந்து பல மக்களும் தங்களுடைய உறவினர்கள், நண்பர்களுடன் பாதுகாப்பிற்காக இங்கு ஓடிவந்துள்ளனர்.

இஸ்ரேல் மீது ராக்கெட்டுக்களை ஏவுவதற்கு இந்நகரம் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை அல்லது இதற்கு எந்த உள்ளார்ந்த மூலோபாய முக்கியத்துவமும் இல்லை. இத்தாக்குதலின் நோக்கம் இடைவிடாத இஸ்ரேலிய தாக்குதலினால் தெற்கு லெபனானில் ஏற்கனவே தங்கள் வீடுகளை இழந்து குடும்பங்கள் படுகொலை செய்யப்பட்டதையும் கண்டுள்ள மக்களை இன்னும் கூடுதலான வகையில் பயமுறுத்த வேண்டும் என்பதேயாகும். இதன் நோக்கம் அவர்கள் இன்னும் வடக்கே தப்பியோட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்பதாகும்.

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய விமானங்களில் இருந்து வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன; இவை மீறினால் ஆகாயத் தாக்குதல் மூலம் மரணம் நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் (IDF) சாலையில் செல்லும் எந்த வாகனங்களும் தாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இந்த உத்தரவுகளை மீறும் எவரும் ஒரு பயங்கரவாதி என்றும் இஸ்ரேலிய குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் எறிகுண்டுகள் ஆகியவற்றிற்கு இலக்காக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெற்கின் மீதாக அதிகரித்துள்ள வான்வழிப்போருடன் சேர்த்து, இந்த அச்சுறுத்தல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மற்ற நிவாரணப் பணி தொடர்பான அமைப்புக்களை மிகவும் தேவையான உணவு, நீர் மற்றும் மருத்து அளிப்புக்கள் கூட சிதைக்கப்பட்டுள்ள தென்பகுதிக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளை நிறுத்தியுள்ளன. சாலைகள்மீது குண்டுவீச்சும், லிட்டனி ஆற்றைக் கடந்து தெற்கேயுள்ள டைர் நகரத்திற்குச் செல்லும் கடைசிப் பாலமும் தகர்க்கப்ப்டுள்ளதும் இப்பகுதி முழுவதையும் லெபனானின் மற்ற பகுதி, மற்றும் வெளியுலகத்தில் இருந்தும் ஒதுக்கி வைத்துவிட்டது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவரான ஜாகப் கெல்லென்பெர்கர், ஜெனிவா மரபுகளை இஸ்ரேல் மீறுவதாக, அதாவது உதவிக்குச்செல்லும் வாகன வரிசைகளை இராணுவத் தாக்குதல் நடத்துவேன் என்று அச்சுறுத்துவது மூலம் ஓரு போர்க்குற்றத்தை செய்வதாகும் என்று குற்றம் சாட்டியுள்ளார். சாதாரண மக்கள்மீது வன்முறைத் தாக்குதலை நடத்துவதற்கு, முன்கூட்டியே எச்சரிக்கை கொடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டுவிட்டன என்று தவிர்க்க முடியாத விமானத் தாக்குதலை நியாயப்படுத்தும் இஸ்ரேலின் கூற்றுக்களை கெல்லன்பெர்கர் உதறித் தள்ளினார். "துண்டுப் பிரசுரங்களை வீசுவதின் மூலம், சர்வதேச மனிதாபிமான நெறிகளின் கீழ் உங்களுக்கு உள்ள பொறுப்புக்களை நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது" என்று அவர் கூறினார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஒரு தொடர் கொலைகளை நிகழ்த்தும் கொலையாளி தான் கொல்லவிருப்பவர்களை அதற்கு முன் தொலைபேசி மூலம் எச்சரித்துவிட்டு, அவர்களுடைய இறப்பிற்கு அவர்களேதான் காரணம் எனக் கூறுவது போல் உள்ளது. ஏனெனில் "அவர்கள் எச்சரிக்கப்பட்டு விட்டனர்."

இந்த உண்மைப் பின்னணியில்தான் ஐ.நா.பாதுகாப்புக் குழு போரை நிறுத்துவதற்கான வடிவமைப்பை கொண்டுள்ள அமெரிக்க-பிரெஞ்சு தீர்மானத்தை இயற்றும் வகையை பரிசீலிக்கிறது; இது ஒன்றும் போரை நிறுத்துவதற்கல்லாமல் அமெரிக்க இஸ்ரேல் நோக்கங்கள் அடையப்படும் வரை போர் தொடர்வதைத்தான் அனுமதிக்கிறது. ஹெஸ்பொல்லா ஆயுதங்களை களைய வேண்டும் என்று கூறும் இந்த ஆவணம் லெபனிய நிலப்பகுதியை ஆக்கிரமித்துள்ள 10,000 இஸ்ரேலிய துருப்புக்ககள் அங்கிருக்கவும், இஸ்ரேலியர்கள் தங்கள் "தற்காப்பிற்கான" விமானத் தாக்குதல்கள், மற்றும் பீரங்கித் தாக்குல்களை தொடரவும் அனுமதித்துள்ளது.

லெபனானில் வறிய ஷியைட் மக்களின் வெகுஜன இயக்கமான ஹெஸ்பொல்லா தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் லெபனிய அரசாங்கம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக்கு உட்பட்டுள்ள நாடு என்ற அந்தஸ்த்தை கொள்ள வேண்டும் என்றும் அடிப்படையில் இந்த ஆவணம் கோருகிறது. முற்றிலும் ஏற்கமுடியாத திட்டத்தை அளிப்பதின்மூலம், வாஷிங்டன் இதை லெபனான் நிராகரிக்கத் தூண்டி, அதைப் பயன்படுத்தி இத்தகைய "சமாதானத்திற்கான" எதிர்ப்பு என்று கூறப்படுவதை ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கும் போரை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்துகிறது.

லெபனிய மக்களுக்கு இவர் தயாரித்துள்ள ஐ.நா. ஆணையில் எந்த சமரசத்திற்கும் இடம் இல்லை என்பதை கூடுதலாகக் குறிக்கும் வகையில், புஷ் நிர்வாகம் செவ்வாயன்று, இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்க, 15,000 லெபனிய துருப்புக்களை தெற்கே அனுப்புவோம் என்ற லெபனிய திட்டத்தை நிராகரித்தது. "தன் வலிமையினால் லெபனானின் தெற்குப் பகுதியில் முழுக் கட்டுப்பாட்டையும் செலுத்த முடியாத அமைப்பாகத்தான்" லெபனிய இராணுவம் உள்ளது என்று ஒரு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இந்த "வலிமையான" என்ற சொல் அப்பகுதியில் ஒரு சர்வதேசப் படை அனுப்பும் திட்டத்தை விளக்குவதற்காக பலமுறையும் பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு எதிராக கொலைகார நோக்கை கொண்டுள்ள ஆக்கிரமிப்புப் படை செயல்படுவதற்கும், அமெரிக்க இஸ்ரேலியப் போர் நோக்குகளை அடைவதற்கும் இது ஒரு அலங்காரத் தொடராக பயன்படுத்தப்படுகிறது.

உண்மையை அபூர்வமாக வெளியிட்ட கணம் ஒன்றில், ஐ.நாவில் கட்டாருடைய வெளியுறவு மந்திரி பாதுகாப்புக் குழுவில் செவ்வாயன்று கூறினார்: "பாதுகாப்பற்ற லெபனிய மக்களின் அன்றாட கசப்பு வாடிக்கையாகிவிட்ட குருதிப் புனலை நிறுத்த முடியாமல் பாதுகாப்புக் குழுவானது முடக்கப்பட்டு, செயலற்று இருப்பதை காண்பது பெரும் வேதனையை தருகிறது."

அமெரிக்க பிரெஞ்சு தீர்மானத்தை ஏற்பது "லெபனானில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் அபாயத்தை" கொண்டுவரக்கூடும் என்று அவர் எச்சரித்தார். இது ஒன்றும் வெற்று அச்சுறுத்தல் அல்ல. ஹெஸ்பொல்லாவை உடைத்தல் என்னும் திட்டம் ஷியைட் மக்களால் அவர்களை அடக்கி, வாக்குரிமை அற்றவர்களாக செய்யப்படும் முயற்சி என்று கருதப்படும்; இதனால் முந்தைய லெபனிய உள்நாட்டுப் போரின் விளைவுகளுக்கு திரும்பவும் மாற்றப்பட்டு, அதிகாரம் லெபனானில் இஸ்ரேலின் மரபாரந்த நட்பு சக்தியாக இருக்கும் மாரோனைட் கிறிஸ்துவ வலதிற்கு மீட்கப்படும் நிலை ஏற்படும்.

ஜோர்ஜ் புஷ்ஷின் கோஷங்களான "சுதந்திரம்", "ஒரு புதிய மத்திய கிழக்கு" இவற்றின் அடிப்படையில் நடத்தப்படும் நாட்டின் சமூக மறுகட்டமைப்புக்கள் ஐயத்திற்கு இடமின்றி கடுமையான குறுங்குழுவாத போர்களின் புதிய சுற்று நாட்டில் நடைபெறுவதற்கு எரியூட்டும்.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் அதன் உடனடி இலக்காக சாதிக்க விரும்புவது தெற்கு லெபனானில் இனவழித் தூய்மை முழுமையாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.

இந்தச் சொற்றொடர் முக்கிய செய்தி ஊடகத்தில் லெபனானில் இப்பொழுது நடக்கும் போர் பற்றிய தகவல்களில் தோன்றுவதே இல்லை. 1999ல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் சேர்பியாவிற்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சுக்களுடன் தலையீடானது, கொசோவோ மாநிலத்தில் இனத்தூய்மை நடவடிக்கையை தடுத்துநிறுத்தல் என்ற போலிக்காரணத்தின் கீழ் நடத்தப்பட்டது. இறுதிவிளைவு அமெரிக்கா ஆதரித்திருந்த கொசோவோ தேசிய வாதிகளால் சேர்பிய மக்கள் முற்றிலும் இனத்தூய்மை செய்யப்பட்டிருந்தனர்.

தெற்கு லெபனானுக்கு எதிராக இஸ்ரேலிய தாக்குதலில், செய்தி ஊடகம் "ஹெஸ்பொல்லா வலுவிடங்கள்" என்ற சொற்றடொரைத்தான் விமான, தரைப்படைத் தாக்குதல்கள் பற்றி பேசும்போது குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட சொல்லாட்சி உண்மையான இலக்கு ஷியைட் மக்கள்தான் என்பதை மறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. ஏவுகணைகள், தொகுப்புக் குண்டுகள் மற்றும் பீரங்கித் தோட்டாக்கள் ஆகியவை ஆடவர், பெண்டிர், குழந்தைகள் அனைவரையும் படுகொலை செய்வதற்கும், மக்கள் அனைவரையும் பயமுறுத்தி வடக்கே ஓடவைப்பதற்காகவும் போடப்படுகின்றன.

கொசோவோவில் இனத் தூய்மை என்று கூறப்பட்டதற்கு அமெரிக்க செய்தி ஊடகம் பெரும் சீற்றத்துடன் அறநெறி அலையைத் தவழவிட்டது போல் அன்றி, -- அதுதான் பொதுமக்கள் கருத்தை வரையறுப்பதில் முக்கியமானதாக இருந்தது மற்றும் சேர்பியாவிற்கு எதிராக வாஷிங்டனுடைய போருக்கு போலிக் காரணத்தை வழங்கியது-- ஒரு மக்கட்திரட்டு அனைத்தையுமே படுகொலை செய்துவரும் இஸ்ரேல் பற்றி அத்தகைய கண்டனம் ஏதும் வரவில்லை.

ஒரு பெரிய தொலைக்காட்சி வலைப்பின்னலான, வார்த்தைகளால் வருணிக்க இயலாத Fox News, வடக்கு இஸ்ரேலின் தொலைந்து விட்ட நாய்களை பற்றி, அமெரிக்க உதவியினால் வந்த குண்டுகளை இஸ்ரேலியர்கள் வீசியதால் தங்களுடைய கட்டிடங்களின் இடிபாடுகளிலேயே புதைந்து, மடிந்துள்ள லெபனிய மகளிர், குழந்தைகளை காட்டிலும் அக்கறையைக் காட்டியுள்ளது.

IDF க்கு ஹெஸ்பொல்லாவை தோற்கடிப்பதிலோ, இஸ்ரேலுக்கு எதிரான ராக்கெட் தாக்குதல்களை நிறுத்துவதிலோ அதிக வெற்றி இல்லை; ஆனால் சாதாரண குடிமக்களுக்கு எதிரான அதன் மூலோபாயம் நன்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது. 1,000 லெபனியர்களுக்கும் மேலாக கொல்லப்பட்டு, பெரும்பாலானவர்கள் மகளிரும் குழந்தைகளும் ஆக, கிட்டத்தட்ட 3,500 பேர் காயமுற்ற நிலையில் - ஒரு மில்லியன் லெபனிய மக்கள், நாட்டின் மொத்த மக்கட்தொகையில் கால் பகுதியினர் அகதிகளாக மாற்றப்பட்டுவிட்டனர்; பெரும்பாலானவர்கள் தெற்கே இருக்கும் தங்கள் வீடுகளில் இருந்தே வெளியேறும் நிலை வந்துள்ளது.

இஸ்ரேலை பொறுத்தவரையில் இத்தகைய இனவழித் தூய்மைப்படுத்துதல் ஒன்றும் புதிய செயலல்ல. இஸ்ரேல் நாட்டின் அஸ்திவாரமே பாலஸ்தீனியர்களை மிகப் பெரிய அளவில் அவர்களுடைய வீடுகளில் இருந்தும் பண்ணைகளில் இருந்தும் வெளியேற்றியதுடன்தான் பிணைந்திருந்தது. படுகொலைகள் செய்தல், அச்சுறுத்துல் என்பவற்றைத்தான் சியோனிசத் தலைவர்கள் உள்ளூர் மக்களை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தினர்.

புகழ்பெற்ற இஸ்ரேலிய வரலாற்றாளர் பென்னி மாரிஸ் 2004ம் ஆண்டு இஸ்ரேலிய நாளிதழ் ஹாரேட்ஸ்-ல் ஒப்புக்கொண்டுள்ளபடி, "700,000 பாலஸ்தீனியர்களை குடிபெயர்த்திடா விட்டால் ஒரு யூத நாடு ஏற்படுத்தப்பட்டு இருக்க முடியாது. எனவே அவர்களை வேருடன் அப்புறத்தப்படுவது அவசியமானதாகும். அம்மக்கட்திரட்டை வெளியேற்றுவதை விட வேறு வழியில்லை. உட்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும், எல்லைப் பகுதிகளை தூய்மைப்படுத்த வேண்டும், பிரதான சாலைகளை தூய்மைப்படுத்த வேண்டும்."

1967 ம் ஆண்டில், மேற்குக் கரை மற்றும் காசாவில் ஆக்கிரமிப்பு நடந்த பின்னர், இராணுவ முறை அச்சுறுத்தல் மீண்டும் பயன்படுத்தப்பட்டு நூறாயிரக் கணக்கான பாலஸ்தீனியர்கள் அவர்களுடைய நிலங்களில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்; இதுதான் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சியோனிச குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது; பின்னர் இஸ்ரேல் ஜெருசலம் முழுவதற்கும் சொந்தம் கொண்டாடியது.

லெபனானிலும் இதைவிட மாற்றுமுறை ஏதும் கடைப் பிடிக்கப்படும் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. "பாதுகாப்பு" என்ற பெயரில் மீண்டும் இஸ்ரேல் ஒரு அரபு மக்களை அதன் இடத்தில் இருந்து விரட்டிக் கொண்டிருக்கிறது. இந்த செயல்முறை எங்கு சென்று முடிவடையும்?

IDF இப்பொழுது இஸ்ரேலிய எல்லைக்கும் 18 மைல் வடக்கே உள்ள லிட்டனி ஆற்றிற்கும் இடையே உள்ள லெபனிய பகுதிகளை வெற்றி கொள்ளும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்பதற்கான குறிப்புக்களை காணமுடியும். இன்னும் கூடுதலான வகையில் தரைப்படைத்தாக்குதல் இருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு மூத்த அதிகாரியான துணைத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் மோஷே கப்லின்ஸ்கி லெபனிய செயற்பாடுகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளார். அவருடைய பணி, "பரந்த அளவு தாக்குதல் ஏற்பட்டால், தரைப்படை, விமானப்படை, கடற்படை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகும்" என்று ஹாரெட்ஸ் கூறியுள்ளது.

நாட்டின் ஷியைட் மக்களை இனத்தூய்மைப்படுத்தல் என அகற்றி லெபனிய பகுதியை இணைத்துவிடும் செயலைத் தவிர இஸ்ரேலின் நடவடிக்கையில், தற்போதைய லெபனியப் போரில் இன்னும் கூடுதலான செயற்பாடுகள் உள்ளன. இஸ்ரேலிய அரசாங்கத்தை அதன் தாக்குதல்களில் தூண்டிவிடுவது புஷ் நிர்வாகம் ஆகும். மத்திய கிழக்கில் புதிய ஆக்கிரமிப்புப் போர்கள் நடத்துவதற்கான அரங்கம் வேண்டும் என்ற தன்னுடைய சொந்த குறிக்கோளை மேலும் முன்னெடுப்பதற்கான வழிமுறையாக இத்தகைய IDF தாக்குதல்களை அது பார்க்கிறது. அப்பொழுதுதான் ஈரானிலும், சிரியாவிலும் "ஆட்சி மாற்றங்கள்" கொண்டுவரப்பட்டு, அப்பகுதியில் மிகப் பரந்த அளவில் உள்ள எண்ணெய் இருப்புக்கள் போட்டியற்ற முறையில் அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட முடியும்.

இதுதான் புஷ்ஷின் இப்போர் "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகம்" ஒருபுறமும் "இஸ்லாமிய பாசிசம்" மறுபுறத்திலும் உள்ளது என புஷ் சித்திரித்துக் காட்டும் அவரது வனப்புரையின் பின்னணியில் உள்ள யதார்த்தமாகும்.

இப்போர் பாசிசத்தின் குற்றங்கள் எதனையாவது நினைவுகூர வைக்கிறது என்றால், தங்கள் நிலத்தின் மீது படையெடுத்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தினர்களை எதிர்த்து நிற்கும் லெபனியர்கள் அல்லர், மாறாக, வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஆட்சிகள் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களை வெற்றி கொள்ளுவதற்கு மாபெரும் இராணுவ சக்தியைப் பயன்படுத்துகின்றன என்பதே ஆகும்.

1930 களில் எதியோப்பிய கற்பழிப்பில் இருந்து கூர்னிகா எரியூட்டுதல் வரையிலான நிகழ்ச்சி - உலகத்தின் மனச்சாட்சியை பெரும் அதிர்ச்சிகளுக்கு உட்படுத்திய ஒருதலைப்பட்ச பாசிச ஆட்சிகளை போலவே, லெபனானின் தகர்ப்பு ஒரு உலகப் பேரழிவிற்கான விதைகளை கொண்டுள்ளது.

Top of page