World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

The conflict in Lebanon and the standpoint of the working class

லெபனானில் மோதலும், தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடும்

By Chris Marsden
10 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் கிறிஸ் மார்ஸ்டன் கடந்த வாரம் லண்டனிலும், மான்செஸ்டரிலும் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லெபனானில் தற்பொழுது விரிந்துகொண்டிருக்கும் நிலையைப் பற்றிய கொடூரமான சித்திரத்தை நான் தீட்ட வேண்டிய தேவையில்லை. அப்படி நான் செய்வதை தேவைக்கு அதிகமானதாக ஊடகங்கள் செய்யமுடியாதாயினும் அவை காட்டிய காட்சிகள் -- சிதைந்த உடல்கள், பெரும்பாலானவை மகளிர், குழந்தைகள் ஆவர், மற்றும் நகரங்கள் இடிபாடுகளாக மாற்றப்பட்ட இக்காட்சிகள் மிதமிஞ்சியதாக காட்டின. மேலும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்கள் என்றும் முறையில் நீங்கள் அனைவரும் லெபனான் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இஸ்ரேல் எவ்வாறு வேண்டுமேன்றே தகர்ப்புக்களை செய்துள்ளது என்பதை அறிவீர்கள்.

இது எவ்வாறு எதிர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படைப் பிரச்சினை தெளிவாக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு வாஷிங்டன் ஆதரவு கொடுப்பதற்கு பிளேயர் அரசாங்கமும் உடந்தையாக நிற்பதை கண்டு பிரிட்டனில் மில்லியன் கணக்கான மக்கள் வெறுப்படைந்துள்ளனர். அவர்களில் பல்லாயிரக்கணக்காணவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கவும், உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் எனக் கோருவதற்கும் கடந்த சனியன்று லண்டனில் கூடினர்.

போரை நிறுத்துக எனும் கூட்டணி (Stop the War Coalition -STWC) முன்னனெடுக்கும் லெபனானில் நிகழும் பேரழிவை எதிர்க்கும் முன்னோக்கு பயனற்றது ஆகும். இவர்களுடைய பிரச்சாரத்தின் மையத்தானம் பிரதம மந்திரி டோனி பிளேயருக்கு "அமெரிக்க நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கைக்கு முற்றிலும் அடிபணிந்து நிற்பது" மற்றும் "அதையொட்டி நம் நாடு அவமானப்படுத்தப்பட்டு உலகக் கருத்தில் இருந்து நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது மீண்டும் அடிகோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது" பற்றி விமர்சித்து ஒரு கடிதம் எழுதுவதாகும்.

அதில் முடிவுரையாகக் கூறுகிறது: "எனவே, அரசாங்கம் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு உலகின் பெரும்பாலான நாடுகள், ஐ.நா. தலைமைச் செயலர் மற்றும் கான்டர்பரி ஆர்ச்பிஷப்புடன் சேர்ந்து லெபனானில் உயிர்களை காப்பாற்றுவதற்கும், அந்நாடு அழிவதை தடுப்பதற்கும் உடனடியான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைக்க வேண்டும்."

இந்த அழைப்பின் பொருள் என்ன, இது அடிப்படையாக கொண்டுள்ள அரசியல் முன்கருத்துக்கள் யாவை?

புஷ் நிர்வாகத்தின் தான்தோன்றித்தன போக்கு மற்றும் பிளேயரின் தனித் தோல்விகளின் அடிப்படை பிளேயரின் தனித் தோல்விகளின் அடிப்படையில் பிரிட்டன் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பதும் தான் லெபனான் நெருக்கடிக்கு காரணம் என்று அது கூறுகிறது. மேலும் அறிவார்ந்த கருத்துக்கள் செயல்படுத்தப்படுமேயானால், அதாவது கோபி அன்னன் மற்ற உலகத் தலைவர்கள், மத தலைவர்கள் பல பிரிட்டிஷ் அரசியல் வாதிகள், ஆட்சித்துறை ஊழியர்கள் தம் தேசிய அவமானத்தை வெளிப்படுத்தியுள்ள அவர்களின் சொந்த உணர்வுகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டால், விவேகம் மீட்கப்படும் என்றும் கூறுகிறது.

உத்தியோகபூர்வ போர் எதிர்ப்பு இயக்கத்தின் இடது பிரிவாக செயல்படும் சோசலிச தொழிலாளர் கட்சியும் அடிப்படையில் இதேபோன்ற செய்தியைத்தான் கொடுத்துள்ளது. "ஹெஸ்பொல்லா போராளிகளுடன் எமது ஐக்கியத்தையும் அவர்கள் லெபனான்மீதான இஸ்ரேலிய தாக்குதலை முறியடிப்பதில் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறோம்."

ஆனால் அவர்களின் பணி, "மத்திய கிழக்கு மற்றும் பல பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்ப்பவர்கள் அனைவரதும் ஒற்றுமையின்" அடிப்படையில் "போருக்கு எதிரான சாத்தியமுள்ள மிகப் பரந்த அளவிலான இயக்கத்தை" கட்டி அமைப்பதாகும்.

பொருளற்ற அசைச்சொல்லின் ஆபத்து இருந்தாலும், இது உண்மையிலேயே வரலாறு மீண்டும் அதே கூத்தை கொள்வதைத்தான் காட்டுகிறது. 2003ம் ஆண்டு STWC எனும் போரை நிறுத்துக கூட்டணி மில்லியன் கணக்கான மக்களின் வெகுஜன இயக்கத்திற்கு தலைமை வகித்து மக்களிடம் இதே செய்தியைத்தான் கூறியது -- ஐ.நா, ஐரோப்பா, தொழிற்கட்சியில் இருந்து விலகியவர்கள், தொழிற்சங்கங்கள், தாராளவாத ஜனநாயகவாதிகள், கிறிஸ்தவ, முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு கூறியது. அப்பொழுதாவது தங்களுடைய கருத்துக்களை போருக்கு எதிராக முக்கிய ஐரோப்பிய சக்திகளான பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளின் கருத்துக்கள், மற்றும் 39 அதிருப்தி தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 216 உறுப்பினர்கள் அளித்த வாக்குகள் இவற்றையாவது மேற்கோளிட முடிந்தது.

ஆனால் தொழிற்சங்க பேரவை தன்னுடைய போர் எதிர்ப்பு இயக்கத்தை கைவிட்டு விட்டதாக கூறிய அளவில், அது போர் தொடங்குவதற்கு முன்பே மிகக் குறைந்த எண்ணிக்கையாகப் போய்விட்டது. TUC தொழிற்சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் பிரென்டன் பார்பரின் செய்தித் தொடர்பாளர் போர் எதிர்ப்பு அணி ஒன்றில் உரையாற்ற அழைக்கப்பட்டபோது மறுத்துவிட்டார்; "டோனி பிளேயரை பதவியில் இருந்து அகற்றும் நோக்கத்தை கொண்ட எந்த இயக்கத்திலும் ஒரு பகுதியாகத் தான் இருக்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.

TUC யின் லெபனான் பற்றிய ஜூலை 26ம் தேதி அறிக்கை பிளேயரின் போர் ஆதரவு பற்றி ஏதும் கூறவில்லை, "அனைத்து தரப்பினரும் நிதானமாக இருக்க வேண்டும்" என்னும் அன்னனின் அழைப்பு பற்றியும் மற்றும் "இஸ்ரேலிய துருப்புக்கள் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லாவினரால் கடத்தப்பட்டமை மற்றும் இஸ்ரேல் சமமில்லாத வகையில் வன்முறையை பயன்படுத்தியது பற்றிய கடும் விமர்சனம்" மட்டுமே ஆதரிக்கப்பட்டது.

எனவே நாம் ஐ.நா.வை நம்புமாறு மீண்டும் வலியுறுத்தப்படுகிறோம்.

தொழிற்கட்சியை பொறுத்த வரை, வாஷிங்டனுக்கு பிளேயரின் மிக வெளிப்படையான ஆதரவை மந்திரி சபையில் பாதிக்கு மேலானவர் எதிர்க்கின்றனர் என்ற தகவல் இருந்த போதிலும், எவரும் ஒரு மாற்று நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை. தொழிற்கட்சியின் கிளைகள் என்ன கூறுகின்றன? அவற்றின் இறக்கும் தறுவாயிலான தன்மையை பார்க்கும்போது, எவருக்கு அதைப் பற்றித் தெரியும்?

ஐ.நா.வும் ஐரோப்பிய சக்திகளும் முடிவெடுக்க வேண்டிய நேரம் உண்மையில் வரும்போது வாஷிங்டனுக்கு முன் தங்களை தாழ்த்திக் கொள்ளுவதுடன் போர் நிறுத்த அழைப்பு விடுத்தாலும் அதற்கு அனுமதிகொடுப்பதில்லை. ஐ.நா. பாதுகாப்புக் குழு இஸ்ரேலை கண்டிக்கும் எந்தத் தீர்மானத்தை இயற்றுவதிலும் தோல்வியடைந்து விட்டது; ஆனால் ஈரானுக்கு எதிராக ஐ.நா. சாசனத்தின் ஏழாம் அத்தியாயத்தின் கீழ் அதன் அணுசக்தித் திட்டம் பற்றிய, இராணுவ வழிமுறைகள்மூலம் கட்டாயமாய் அமலாக்கும் தீர்மானத்தை இயற்றியது. பிரிட்டனின் எதிர்ப்பு மற்றும் இப்பொழுது அமெரிக்க நிலைப்பாட்டுக்கு ஜேர்மனியும் கொடுத்துள்ள ஆதரவு இவற்றின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் உடனடியான போர்நிறுத்த ஒப்பந்ததத்தைக்கூட கோரவில்லை.

வார இறுதியில் போர்நிறுத்தத்திற்கு மிக அதிக ஆதரவு கொடுத்திருந்த பிரான்ஸ் வாஷிங்டனுடன் சேர்ந்து ஐ.நா பாதுகாப்புக் குழுத் தீர்மானத்திற்கு உடன்பட்டது; அதில் இஸ்ரேலுக்கு ஆதரவான ஆணை ஒன்று அமெரிக்க ஆதிக்கம் நிறைந்த காப்பு நாடாக லெபனானை மாற்றுவதற்கான முன்னுரைதான் இருந்தது.

உத்தியோகபூர்வ தொழிற்கட்சி இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில், கொள்கை அடிப்படையில் எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையினால், பிளேயரை பற்றிய இடதுபுற விமர்சனங்கள் அமைப்பின் பிரதிநிதிகளினால், பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்களால், ஓய்வு பெறாதாரின்தான் மனத்தாங்கல்களை தெளிவாக உச்சரிப்பதில் பாதுகாப்பை உணர்பவர்களால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது. STWC அடையாளம் காட்டும் முறையில்தான் அவர்கள் இதைப் பெரிதும் செய்துள்ளனர்; தங்களுடைய பிரச்சாரத்தின் தன்மைக்கும் அதைத்தான் நம்பியுள்ளனர்; அதாவது நாட்டின் கெளரவம் தாக்கப்பட்டுள்ளது என்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நலன்களை பிளேயர் சிறந்த முறையில் ஆற்றவில்லை என்ற நம்பிக்கையும் அதன் அடிப்படையாகும்.

இவ்விமர்சனங்களில் சில மிகக் கடுமையானவையாகும். ஒரு முன்னாள் தூதராக மாஸ்கோவில் இருந்தவரும் உளவுத்துறை கூட்டுக் குழுவில் தலைவராகவும் இருந்த சேர் ரொட்ரிக் பிரைய்த்வைட், பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில் பிளேயர் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் பிளேயரை ""வெள்ளை மாளிகையின் சொற்களை செயற்கையான ஆங்கில முறையில் கூறுவதற்கு" சிஐஏ-ஆல் திட்டமிடப்பட்ட "மேடம் டுசாட்டின் மெழுகு உருவங்கள் காட்சியகத்திலிருந்து கசங்கி நேரடியாக உயிர்ப்பிக்கப்பட்டுள்ள மெழுகு பிணம்" என்று அழைத்தார், மேலும், "சீர்குலைந்துவிட்ட இரகசிய குறியீட்டகமாக வெளியுறவு அமைச்சரகத்தை குறைத்திருக்கிறார், மற்றும் வெள்ளை மாளிகையுடன் முழுமையாக இணைத்துக் கொண்டுவிட்டதால் தன்னுடைய செல்வாக்கை வாஷிங்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலேயேகூடவும் இழந்துவிட்டவர்" என்றும் எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட நிலைப்பாடு ஸ்தாபனத்தின் ஒரு பிரிவு கொண்டுள்ள கருத்தைத்தான் வெளிப்படுத்துகிறது; குறிப்பாக வெளியுறவு அலுவலகத்தின் இத்தகைய கருத்து ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லெபனான் சங்கடங்களை பார்த்தும், நிகழ்வுகள் இன்னும் மோசமாகக் கூடும் என்ற அனுமானத்திலும் இவ்வாறு நிலவுகிறது. ஆனால் அவர்களின் நிலைப்பாடை, அரசாங்கம் அல்லது பாராளுமன்றத்தின் முழுப் பிரதிபலிப்பாக வெளிப்பாட்டை காண்பது கடினமாகும்.

பிளேயர் தோற்றுவித்துள்ள விரோதத்தன்மையின் ஆழத்தைப் பற்றி பல தொழிற்கட்சி தலைவர்களும் பெரும் கவலையில் உள்ளனர். அவர் இப்பொழுது தாட்சரைவிடவும் அதிகமாக வெறுக்கப்படுகிறார். ஆனால் பிளேயரின் பதவிக்கான பிரதான போட்டியாளரான சான்ஸ்லர் கோர்டன் பிரெளன் செய்யக்கூடியதெல்லாம் தைரியமாக லெபனானை பற்றி எதுவுமே கூறாமல் இருப்பதுதான். ஆதரவாகப் பேசினால் எழுந்திருக்க முடியாத அளவிற்கு வாக்காளர்களிடையே தன்னுடைய தோற்றம் கருமைப்படுத்தப்படுவிடும் என்பதை அவர் அறிவார். வாஷிங்டன், மூர்டோக் மற்றும் புதிய கன்சர்வேடிவ்களுடன் தன்னுடைய போட்டியாளரைப் போலவே இவரும் நெருக்கமாக இருப்பதால் கருத்துக்களை கூறவும் அஞ்சுகிறார்.

விரைவில் ஒன்றும் பதவியை விட்டு பிளேயர் விலகுவதாக இல்லை; அவருடைய புறப்பாடு --வரவேற்கத்தக்கது என்றாலும்-- நிலைப்பாடுகளில் ஒன்றும் அடிப்படை மாறுதல்களை ஏற்படுத்தாது. அவருடைய முக்கிய விமர்சகர்கள் அனைவரும் பிளேயர் வாஷிங்டனில் இருந்து தம்மை தொலைவில் இருத்திக் கொள்ளவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். எவருமே அமெரிக்க கொள்கையுடன் முறித்துக் கொள்ள அழைப்பு விடுக்கவில்லை.

முன்னோடியில்லாத வகையில் மோசமாகிக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியைத்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எதிர்கொண்டிருக்கிறது. கணக்கிலடங்கா ஆபத்துக்களை கொடுக்கக்கூடிய அரசியல் நெருக்கடியில் இது தள்ளப்பட்டுள்ளது; ஆனால் இதில் இருந்து தப்புவதற்கு வழியேதும் புலப்படவில்லை.

பழைய தூதர்கள் மற்றும் டோரி பின் இருக்கைகளில் உட்கார்பவர்களின் சீற்றமானது பிரிட்டனுடைய நிலைக்கு ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் அரசியல் செயலற்ற தன்மை பற்றிய குறைகூறல்களைத்தான் மையமாகக் கொண்டுள்ளது; மேலும் இவர்கள் பலகாலமும் சேகரித்துள்ள அனுபவத் தொகுப்பும் பிளேயரினால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவும் இல்லை என்ற உண்மையும் சேர்ந்து கொண்டுள்ளது. ஆனால் இவர்கள் ஒன்றும் ஒரு தனிநபரின் தோல்விகளுக்கு மட்டும் விடை தேடவில்லை; தற்கால அரசியல் வாழ்வின் அடிப்படைத் தன்மையைத்தான் எதிர்கொள்ளுகின்றனர்.

பிரித்தானிய முதலாளித்துவத்தின் தேசிய நலன்களுக்கு தாம் துணை நிற்பதாக நம்பியுள்ளவர்களின் கெஞ்சல்களுக்கு பிளேயர் செவி மடுப்பதில்லை என்று தோன்றுகிறது; இதற்குக் காரணம் அவர் உலக விவகாரங்களின் போக்கை நிர்ணியிக்கும் நிதியத் தன்னலச் சிறுகுழுவின் பிரதிநிதியாவர்; உலகின் செல்வங்களின்மீது இச் சிறுகுழுவின் கொள்ளைமுறைத் திட்டங்கள் வாஷிங்டன் மற்றும் 10ம் இலக்கம் இரண்டின் கொள்கைக் கட்டாயங்களில் முழுமையான வெளிப்பாடுகளை காண்கின்றன.

ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவினர் தாங்கள் அரசியல் அமைப்புமுறையின் வழிவகைகளில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளோம் என்று உணர்கிறார்கள் என்ற உண்மை அவர்களை லெபனான் மற்றும் காசா சிதைக்கப்படுவதை எதிர்க்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர் மக்களுடன் நட்புக் கொள்ள வைக்கவில்லை. இது மத்திய கிழக்கிலும், சர்வதேச அளவிலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அரசியல் நலன்களை காக்க முற்படும் அவரது விமர்சகர்களுடன் சேர்ந்து கொள்ளுதல் என்ற பிரச்சினையில்லை, மாறாக ஒரு சுதந்திரமான போக்கெடுத்துக்கொள்ளும் பிரச்சினையாகும்.

தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயம் கையிலுள்ள பணிகளின் தன்மை, அளவு ஆகியவற்றால் கட்டாயம் ஆணையிடப்பட வேண்டும். மிக அதிகமான எண்ணிக்கையினரால் ஏற்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதற்காக அது இயற்றப்படக்கூடாது; அது அமெரிக்காவை எதிர்ப்பதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள் மற்றும் அதன் நிறுவனங்களை உண்மையில் பார்க்க வேண்டும் .

இந்த மூலோபாயத்தை இயற்றும்போது, முடிவு எடுக்கும் அதிகாரங்களில் இருந்து அமைப்புமுறையின் ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக அமைப்புமுறையின் பகுதிகளின் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ள கசப்புணர்வு நிதிய தன்னலக்குழுவின் ஆட்சியின் மிக முக்கியமான மங்கிய விளைவுதான் என்பது கட்டாயம் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அனைத்து வகையான ஜனநாயகப் பொறுப்பையும் மூடித்தள்ளிவிட்ட நிலைதான் பிளேயருக்கு ஒரு ஜனாதிபதி தன்மைக் கூறுபாட்டையும் அமெரிக்காவின் கைப்பாவை என்ற நிலையையும் கொடுத்துள்ளது; இதையொட்டி அவர் முதலும் முக்கியமானதுமாக அரசாங்கத்தை தொழிலாள வர்க்கத்தின் கண்ணோட்டம், தேவைகள் மற்றும் விழைவுகளில் இருந்து தனித்துச் செயல்படுத்தும் வகையில் ஊக்கம் கொள்ள வைத்துள்ளது.

காலனித்துவ வகை மாதிரியில் கொள்ளை, இடைவிடாமல் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரங்களை தகர்த்தல் என்ற இரண்டையும் இணைத்து, ஏற்கனவே திகைப்பூட்டும் செல்வத்தை கொண்டுள்ள ஒட்டுண்ணி அடுக்கு இன்னும் செல்வக் கொழிப்பு பெற வெண்டும் என்ற பொருளாதார, அரசியல் செயற்பட்டியலுடன், ஜனநாயகம் என்பது இயைந்து செயல்படமாட்டாதது. போருக்கு எதிரான போராட்டம், ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் சமூக நலன்களை பாதுகாத்தல் என்பது வர்க்கப் போராட்ட வழிவைகள் மூலம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் நலன்களை முன்னெக்கும் ஒரு புதிய கட்சியின் மூலம்தான் நடத்தப்பட முடியும்.

1938ம் ஆண்டு "வரவிருக்கும் போரின் தன்மை பற்றிய ஒரு புதிய படிப்பினை" என்ற தலைப்பு கொண்ட கட்டுரை ஒன்றில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்:

"உலகை ஒரு புதிய முறையில் பங்கீட்டுக் கொள்ளுவது என்பது தற்போதைய நடைமுறையாக உள்ளது. தொழிலாளர்களுக்கான புரட்சிக் கல்வியில் முதற் படியாக உத்தியோகபூர்வ சூத்திரங்கள், கோஷங்கள், பாசாங்குத்தன சொற்றொடர்கள் இவற்றின் கீழுள்ள உண்மையான ஏகாதிபத்திய ஆர்வங்கள், திட்டங்கள், கணக்கீடுகள் ஆகியவற்றை அவர்கள் வளர்த்துக் கொள்ளும் வகை இருக்க வேண்டும்."

இத்தகைய தெளிவுதான் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்வி மற்றும் சோசலிச அஸ்திவாரங்களை கொண்டுள்ள சர்வதேச தொழிலாளர் இயக்கம் மறுபடி ஒன்றுபடுத்தப்படுவதற்கு, ஆரம்பப்புள்ளியாக இன்றும் உள்ளது.

நாம் இப்பொழுது நுழைந்துவிட்ட காலக்கட்டத்தின் அடிப்படை இயல்பு, அதன் அரசியல் உட்குறிப்புக்கள் ஆகியவற்றை முற்றிலும் அப்பட்டமாக காட்டுவதற்குத்தான் உலக சோசலிச வலைத் தளம் முயன்று வருகிறது. "முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் போர்" என்னும் புஷ்ஷின் கொள்கைவழியானது, மத்திய கிழக்கிலும், உலகின் மற்ற பகுதிகளிலும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத்துடன் போரை வெளியுறவுக் கொள்கையின் ஒரு கருவியாக அமெரிக்காவால் கொள்ளப்பட்டிருக்கும் திருப்பத்தை குறிக்கிறது.

உலக அரசியலில் இது ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது; அதாவது இரண்டாம் உலகப் போருக்கு பின் நிலவிய சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பு முறிந்து, ஏகாதிபத்திய அரசியலில் மிக அப்பட்டமான, மிருகத்தனமான வடிவமைப்புகளுக்கு திரும்புவது என்பதே அது.

ஐரோப்பிய சக்திகளின் நடவடிக்கைகளிலும் இதன் வெளிப்பாடு உள்ளது; அவை அமெரிக்காவுடன், அதன் போர் உந்துதலுடன் தங்களை கூட்டுச் சேர்த்துக் கொண்டுள்ளன. புஷ்ஷிற்கு மிக இழிந்த வக்காலத்து வாங்கும் பங்கை பிளேயர் தானே எடுத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் திருப்திப்படுத்திவிட வேண்டும் (அமெரிக்காவை) என்ற அவருடைய கொள்கை ஐரோப்பா முழுவதும் நடைமுறையில் உள்ளது.

இத் திருப்திப்படுத்தும் நோக்கம் முதலில் இராணுவ பலவீனத்தால்தான் கட்டாயப்படுத்தப்படுகிறது --- அமெரிக்க சக்தியை கண்டு ஐரோப்பிய தலைவர்கள் திகைத்து, வியந்து நிற்கின்றனர்; ஏதேனும் எதிர்ப்புக் காட்டினால் அது வாஷிங்டனை உறுதியான முறையில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை மேற்கொள்ளத்தான் தூண்டிவிடும் என்ற பயத்திலும் இந்நாடுகள் உள்ளன. அதே நேரத்தில் இவர்களுடைய சொந்த ஏகாதிபத்திய விழைவுகளாலும் அத்துடன் வாஷிங்டனுக்கு ஆதரவு கொடுத்தால் முக்கியமான எண்ணெய், எரிவாயு இருப்புக்களில் ஒரு பங்கைப் பெறலாம் என்பதாலும் இது நிர்ணயிக்கப்படுகிறது.

எனவேதான் பிரிட்டனிலும், ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் ஆளும் வகுப்பின் எந்தப் பிரிவிடமும் அமெரிக்காவால் ஊக்கம் கொடுத்து நடத்தப்படும் லெபனான் மீதான தாக்குதலை எதிர்க்கும் பொறுப்பு, மத்திய கிழக்கில் இன்னும் பரந்த அளவில் போர் ஏற்படும் அபாயத்தை தவிர்க்கும் பொறுப்பு ஆகியவை கொடுக்கப்பட முடியாததாகும்.

அமெரிக்காவோ, பிரிட்டிஷ் அரசாங்கமோ வெறும் எதிர்ப்பை பார்த்து லெபனானில் இருந்து பின்வாங்காது; ஏனெனில் அவற்றிற்கு அங்கு ஆகவேண்டிய செயல்கள் பல உள்ளன.

இஸ்ரேல் "சமமற்ற" வன்முறையை பயன்படுத்திய சுயாதீன நடவடிக்கையினால் ஒன்றும் இப்பூசல் ஏற்பட்டுவிடவில்லை. இது வாஷிங்டனால் இயற்றப்பட்ட திட்டம் ஆகும்; வன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது அதன் உண்மை இலக்கின் விகிதத்திற்கு ஏற்பத்தான் உள்ளது ---- அதாவது முழு மத்திய கிழக்கையும் அமெரிக்காவின் காலனித்துவ காப்பு பகுதியாக குறைமதிப்பிற்கு உட்படுத்தி, இஸ்ரேல் அவ்வட்டாரத்தில் அதை செயல்படுத்தும் கருவியாக இருக்கும் என்பதே அது. ஏகாதிபத்திய வெற்றி என்னும் இலக்கு அப்பகுதியிலுள்ள அரேபிய, ஈரானிய, ஆப்கானிய மக்களிடையே, மற்றும் யூத தொழிலாள வர்க்கத்தில் இருந்து எழும் கடைசி எதிர்ப்புச் செயல்களையும் முற்றிலும் தகர்த்துவிடாமல் சாதிக்கப்பட முடியாது.

இங்கு நடப்பவற்றிற்கு இணையான நிகழ்வுகள் 1930களில் நாஜிக்களாலும் நிகழ்த்தப்பட்டன; நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

1933க்கும் 1936க்கும் இடையே மூன்றாம் ரைக் தன்னுடைய வெளியுறவு விரிவாக்க கொள்கையை செயல்படுத்துவதற்கான தயாரிப்பாக மறுபடியும் ஆயுதங்களை பெருக்கிக் கொள்ளும் திட்டத்தை தொடங்கியது. மார்ச் 12, 1938ல் ஆஸ்திரியா ஜேர்மன் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது; மறுநாள் அது ரைக்குடன் இணைக்கப்பட்டது. அடுத்த இலக்கு செக்கோஸ்லாவாக்கியாவாக இருந்தது.

Shofar வலைத் தளம் எப்படி ஹிட்லர் மற்றும் போர் மந்திரி வில்ஹெல்ம் கீட்டல் இருவராலும் சிந்தித்து உருக் கொடுக்கப்பட்டது என்பதை விளக்குகிறது.

ஏப்ரல் 22, 1938 அன்று இருவரும் திடீரெனப் பெரும் தாக்குதல் நடத்துவதற்கு போலிக் காரணங்கள் எதைக்கூறலாம் என்று --இவர்களே கற்பனை செய்திருந்த "நிகழ்ச்சி"யான பிரேக்கில் ஜேர்மன் தூதர் படுகொலை செய்யப்பட்டதாக கூறுவது உட்பட, அது போன்றதை-- விவாதித்திருந்தனர். இத்திட்டம் பசுமை விவகாரம் என்று பெயரிடப்பட்டு ஜேர்மனியின் படைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டிருந்தது.

மே 30, 1938 அன்று ஹிட்லர் பசுமை விவகாரத்தில் (Case Green) ஒரு திருத்தப்பட்ட இராணுவ உத்தரவை அனுப்பியிருந்தார்.

அதில் கூறப்பட்டதாவது:

"1. அரசியல் முன்தேவைகள்.

"செக்கோஸ்லாவாக்கியாவை இராணுவ நடவடிக்கை மூலம் அண்மையில் தாக்க வேண்டும் என்பது என்னுடைய மாற்றமுடியாத முடிவு ஆகும். அரசியல் தலைவர்கள் காத்திருக்க வேண்டும் அல்லது இராணுவ, அரசியல் அளவில் தக்க தருணத்தை கொண்டு வர வேண்டும்...

"தக்க முறை மற்றும் உறுதியான, முழுப் பயன்பாடு ஒரு நல்ல தருணத்தில் செய்யப்பட்டால் வெற்றிக்கு அது உறுதியளிக்கும். அவ்விதத்தில் தயாரிப்புக்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.

"2. நடவடிக்கைகள் தொடங்கப்படுவதற்கான அரசியல் வாய்ப்புக்கள்.

"கருத்திற்கொள்ளப்பட்டுள்ள படையெடுப்பிற்கு தேவையான முன்தேவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

"a. வெளிப்படையான தக்க காரணம், அத்துடன்

"b. போதுமான அரசியல் நியாயப்படுத்துதல்

"c. இந்நடவடிக்கை எதிரியால் எதிர்பார்க்கப்பட்டிருக்க கூடாது; அந்நிலையில் மிகக் குறைந்த அளவு தயார்நிலையில்தான் அவர் இருப்பார்.

"ஒரு இராணுவ மற்றும் அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மிக சாதகமான போக்கு ஒரு மின்னல்வேக விரைவு நடவடிக்கையாகும்; அத்தகைய நிகழ்வின் விளைவாக ஜேர்மனி, பொறுத்துக்கொள்ள முடியாத வகையில், உலகக் கருத்தின் பகுதியேனும் இராணுவ நடவடிக்கைக்கு தார்மீக நியாயப்படுத்தலை கொடுக்குமாறு தூண்டிவிடப்படும்."

இது உங்களுக்கு எதையேனும் நினைவுபடுத்துகிறதா? இன்று அதற்கு ஓல்மெர்ட் கொள்கைவழி என்று பெயரிடப்படலாம் அல்லது ஷாலிட் ஆட்டம் எனக் கூறலாம்.

நாம் ஏற்கனவே சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கிள் ஜூலை 2' பதிப்பில் வந்துள்ள அறிக்கை பற்றி கவனத்தை ஈர்த்திருந்தோம்; அதில் ஹெஸ்பொல்லா போராளிகள் இவர்களுடைய துருப்புக்கள் இருவரை சிறைபிடித்ததற்கு இஸ்ரேலின் இராணுவ விடையிறுப்பு பற்றி இருந்தது-- அதை ஒட்டியே ஓராண்டிற்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் முந்தைய காசாப் பகுதி நடவடிக்கையும் இருந்தது.

வரவிருக்கும் நிகழ்வுகளை பற்றிய விரிவான முன்கூட்டிய கருத்துக்கள் இஸ்ரேலால் அமெரிக்க அரசாங்கத்துடன் மட்டுமின்றி அதன் செய்தி ஊடகத்துடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது என்பதை அது காட்டுகிறது. அவர்கள் அனைவருமே தாம் கூறும் ஒவ்வொரு சொல்லைப் பற்றியும் அறிவர், அச்சாகும் ஒவ்வொரு வரியைப் பற்றியும், அதாவது இஸ்ரேல் ஒரு தற்காப்பு நடவடிக்கை எடுக்கிறது எனக் கூறுவது ஒரு பொய் என்று நன்கு அறிவர்.

இப்பொழுது New Statesman சமீபத்திய பதிப்பில், அதன் ஆசிரியர் John Kampfner, "பிளேயர் லெபனான் மீதான தாக்குதல் வரவிருக்கிறது என்பதை அறிந்திருந்தார், ஆனால் அதை நிறுத்த அவர் முயலவில்லை, ஏனெனில் அவ்வாறு செய்ய அவருக்கு விருப்பம் இல்லை" என எழுதுகிறார்.

சற்றே மறைமுகமாக அவர் தொடர்கிறார்: "இஸ்ரேலியர்கள் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம் முன்கூட்டியே ஹெஸ்பொல்லாவை "அழிக்கும்" தங்கள் திட்டத்தை, தெற்கு லெபனானின் கிராமங்களில் குண்டு வீசப்போவதை அறிவித்திருந்தனர். அமெரிக்கர்கள் முறையாக பிரிட்டிஷாரிடமும் தெரிவித்தனர். எனவே பிளேயருக்கு இதுபற்றித் தெரியும்."

இதை உறுதியாக Kamfner கூறுவதற்கு காரணம் தன்னுடைய ஆதாரங்கள் குறைகூறமுடியாதவை என்பதை அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இத்தகவல்கள் ஒரு முக்கியமான உண்மையை குறிக்கின்றன. இஸ்ரேல் ஒன்றும் 1930 களில் ஜேர்மனி இருந்த தரத்திற்குச் சமமாக இல்லை. அப்பங்கு அமெரிக்காவிற்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். லெபனானுக்கு எதிராகப் போரை தொடக்கியதில் இஸ்ரேல் இன்னும் பரந்த அளவிலான அமெரிக்க திட்டம் ஒன்று தொடக்கப்படுவதைத்தான், கொண்டலீசா ரைசின் சொற்களில் ஒரு புதிய "மத்திய கிழக்கு" பிறக்க இருப்பதைத்தான் செயலாக்கிக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய மூலோபாயம் அமெரிக்க கொள்கையை உறுதிசெய்யும் வாஷிங்டனின் இதே புதிய கன்சர்வேட்டிவ்களால்தான் திட்டமிடப்பட்டிருந்தது; இந்த உண்மைக்குப் புறத்தே அது விளங்கிக் கொள்ளப்பட மாட்டாதது. இஸ்ரேல் அமெரிக்காவிடம் தன்னுடைய படைகளுக்கும் பொருளாதார நிலைக்கும் மட்டும் நம்பியிருக்கவில்லை; இறுதியில் ஐயத்திற்கு இடமில்லாத வகையில் பிராந்திய சக்தி என்ற நிலைக்காகவும் அமெரிக்காவை நம்பியுள்ளது.

1996 லேயே, ரிச்சார்ட் பேர்லே, டுக்லாஸ் பெய்த் மற்றும் டேவிட் வூர்ம்செர் போன்ற புதிய கன்சர்வேடிவ்கள் Institutie for Advanced Strategic and Political Studies மூலம் அதன் "Study Group on a New Israeli Strategey Towasrd 2000" ஆகியவற்றின் மூலம் வரவிருந்த பின்யமின் நேதன்யாகு தலைமையிலான லிக்குட் அரசாங்கத்திற்கு ஒரு திட்டத்தை தயாரித்தனர்.

அது பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய இறைமையை அச்சுறுத்தும் நிலங்கள் அளிக்கப்படுவதன் அடிப்படையிலான சமாதான பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு விடுத்தது.

"முதலும் முக்கியமானதுமாக, தன்னுடைய தெருக்களை காப்பதற்கு இஸ்ரேலின் முயற்சிகளுக்கு பாலஸ்தீனிய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளில் ஆக்கிரோஷத்துடன் செல்லுவதற்கு, அமெரிக்கர்கள் பரிவு காட்டக்கூடிய வகையில், நியாயப்படுத்தக்கூடிய நடைமுறை ஒன்று வேண்டும்... ஓஸ்லோ உடன்பாட்டின்படி PLO தன்னுடைய விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் இஸ்ரேலும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று இல்லை என உள்ளது. மிகக் குறைந்த நிபந்தனைகளைக் கூட PLO செயல்படுத்த முடியவில்லை என்றால், பின்னர் வருங்காலத்திற்காக ஒரு நம்பிக்கையோ ஒரு தக்க தரகரை இடையில் கொள்ளுவதற்கான வாய்ப்போ அதற்குக் கிடையாது. இந்நிலையை தயாரிப்பதற்கு இஸ்ரேல் அரஃபாத்தின் அதிகார தளத்திற்கு மாற்றீடை தயாரிக்க வேண்டும்."

"வடக்கு எல்லையை பெறல்" என்ற தலைப்பில், "சிரியா லெபனிய மண்ணில் இஸ்ரேலுக்கு அறைகூவல் விடுகிறது. இஸ்ரேல் மூலோபாய முறையில் தன்னுடைய வட எல்லைகளில் ஹெஸ்பொல்லா, சிரியா மற்றும் ஈரான் மீது மோதுவதற்கும், இவை லெபனானில் வலியத்தாக்குதலுக்கு முனைபவர்கள் என்னும் ஒரு வாய்ய்பை காட்டினால், அது ஒரு திறமையான அணுகுமுறை, இதில் அமெரிக்கா பரிவுணர்வு காட்டலாம்."

இதில் முக்கியமான பணி, "சதாம் ஹுசைனை ஈராக்கில் அதிகாரத்தில் இருந்து அகற்றுவது பற்றிக் குவிப்பு காட்ட வேண்டும்; இதுவும் இஸ்ரேலின் மூலோபாய இலக்கில் முக்கியமானதுதான்; இது சிரியாவின் பிராந்திய அபிலாசைகளை சிதைக்கும் வழிவகையாக மாறும்."

"பிறருக்கு வாய்ப்பளிக்கும் முன்னரே தனதாக்கிக் கொள்ளுவது பற்றிய கோட்பாடு மீண்டும் நிலைநாட்டப்படவேண்டும்" என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

1998 ஜனவரி மாதம், இதே தட்டுக்குகள் நன்கு அறிமுகமானமுறையில் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த கிளின்டனுக்கு ஈராக்கின்மீது இரண்டாம் போர் -- "சதாம் ஹுசைனை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்" ஒரு புதிய மத்திய கிழக்கு மூலோபாயம் வேண்டும் என்று ஆலோசனை கூறின.

"சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை செலுத்தும் திறனை பெற்றுவிட்டால்" (இச்சொற்றொடர் பின்னர் அனைவருக்கும் அறிமுகமாகிவிட்டது), "உலகின் குறிப்பிடத்தக்க பங்கு எண்ணெய் ஆபத்திற்கு உட்படுத்தப்பட்டு விடும்" என்ற எச்சரிக்கையையும் இக்கடிதம் கொடுத்தது.

அது தொடர்ந்தது, "இருக்கும் ஐ.நா.தீர்மானங்களின்படி, இராணுவ நடவடிக்கை உட்பட அனைத்தையும் எமது முக்கியமான நலன்களை வளைகுடாப் பகுதியில் காப்பதற்கு அமெரிக்கா அதிகாரம் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எப்படியும் அமெரிக்க கொள்கை ஐ.நா.பாதுகாப்பு குழுவில் ஒருமித்த உணர்வே வேண்டும் என்ற தவறான வலியுறுத்தலினால் முடக்கப்பட தொடர்ந்து அனுமதிக்கப்படக்கூடாது."

2003ல் புதிய கன்சர்வேட்டிவ்கள் ஈராக்கிற்கு எதிராகப் போர் வேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தை, எந்த அடிப்படையில் அவர்கள் வாதிட்டிருதார்களோ, அதே அடிப்படையில் பெற்றனர்.

ஏப்ரல் 2003ல் ஈராக் போர் முடிவடைந்த உடனேயே, Feith ம் மற்றவர்களும் ஈரானுக்கு எதிராக ஒரு போர் வேண்டும் என்று கோரினர்; அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்ட் சிரியாவிற்கு எதிரான போர்த்திட்டங்களுக்கு உத்தரவிட்டார்.

அவற்றை தன்னுடைய தடுப்பு அதிகாரத்தால் புஷ் நிறுத்தினார். ஈராக் ஒரு பெரிய திட்டம்; புதிய போர் இயலாதது. ஆனால் மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதிக்கம் முற்றிலும் அடையப்பட வேண்டும் என்றால் சிரியா அகற்றப்பட வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமாக ஈரான் அழிக்கப்பட வேண்டும் என்பதும் தேவைகளாகும்.

லெபனானில் நடப்பதைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இப்பொழுது புதிய கன்சர்வேடிவ்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும். இஸ்ரேலின் தாக்குதல் ஈரானில் முடிவுறும் ஒரு போரின் முதல் அத்தியாயம்தான் என்பதை அவர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

மத்திய கிழக்குக் கொள்கைகள் ஆய்வு பற்றிய கன்சர்வேட்டிவ் இதழ்களில் முக்கியமானதான Middle East Quarterly என்னும் இதழின் நிர்வாக ஆசிரியர் குழுவின் ஒரு உறுப்பினரான ஜேம்ஸ் பிலிப்ஸ், செனட் வெளியுறவுத் தொடர்பு குழுவின் முன் மே மாதம் "அமெரிக்க கொள்கை மற்றும் ஈரானின் அணுசக்தி அறைகூவல்" விசாரணையில் சாட்சியம் கொடுத்தார்.

"விருப்பமுடையோர் கூட்டுச் சேர்ந்து", "அகமதிநெஜத் ஆட்சியை அகற்ற முயல வேண்டும்... இத்தகைய அழுத்தங்களையும் மீறி, அணுவாயுதங்களுக்கான உந்துதலில் தெஹ்ரான் தொடர்ந்து இருக்குமானால், பின் அமெரிக்கா ஈரானிய அணுசக்தி ஆயுதத் திட்டங்களை தடைக்குட்படுத்தும் இராணுவ நடவடிக்கைகளை சிந்திக்க வேண்டும்... ஈரானிய அணுத்திட்டத்தை, போர் தொடக்காமல் நிறுத்தும் வேறு உறுதியான கொள்கை ஏதும் கிடையாது."

Weekly Standard ஏட்டின் ஆசிரியரான வில்லியம் கிறிஸ்டல், இஸ்ரேல் மீதான ஹெஸ்பொல்லாவின் தாக்குதல்களை "ஈரான் மீதான மறைமுகப் போர்" என்று அழைத்துள்ளார். ஜூலை 24ல் "இது எமது போர். புஷ் ஜெருசலேத்திற்கு போகவேண்டு -- அமெரிக்கா ஈரானை எதிர்கொள்ள வேண்டும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

"ஆட்சிகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். கருத்தியல் இயக்கங்கள் பெரிய நாடுகளில் ஆளும் ஆட்சிகளாக மாறும்போது பெரிய ஆபத்துக்களாக மாறுகின்றன. ரஷ்யாவின் மீது கட்டுப்பாட்டை கம்யூனிசம் கொண்டபோதுதான் அது உண்மையிலேயே ஆபத்து நிறைந்ததாக மாறிற்று.... தேசிய சோசலிசம் ஜேர்மனியில் அதிகாரத்தை கைப்பற்றியபோதுதான் உண்மையில் ஆபத்தானதாக போயிற்று. இஸ்லாம் ஈரான் மீது கட்டுப்பாட்டை கொண்டபோதுதான் உண்மையிலே ஆபத்தானதாக போயுள்ளது... ஈரானிய இஸ்லாமிய குடியரசு இல்லை என்றால் ஹெஸ்பொல்லாவும் இல்லை. ஈரானிய இஸ்லாமிய குடியரசு இல்லை என்றால், சிரியாவில் இருக்கும் அசாத்தின் ஆட்சிக்கு உறுதுணை இல்லை. சிரியாவிற்கு ஈரானிய ஆதரவு இல்லை."

"ஈரானின் இந்த ஆக்கிரோஷ நடவடிக்கையை எதிர்கொள்ளுவதற்கு ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் என்ற இராணுவ நடவடிக்கை மூலம் எதிர்கொள்ளுவதை பற்றி சிந்திக்க வேண்டும். எதற்காக காத்திருக்க வேண்டும்?" என்று அவர் முடிக்கிறார்.

அடுத்து, கார்டியனில் எழுதிய நெட் கிங்ரிச் அறிவித்தார்: "மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது: இஸ்ரேல் மீதான ஹெஸ்பொல்லாவின் தாக்குதல்கள், நாகரிகத்தின் மீதான உலக நெருக்கடியின் ஒரு பகுதிதான்." இந்த அச்சுறுத்தலின் "மையத்தில்" ஈரான் உள்ளது என்று அவர் தொடர்ந்து எழுதியிருந்தார்.

மைக்கல் லெடீன், National Review வில் ஜூலை 13 அன்று எழுதுகையில், இப்பொழுது போர் அமெரிக்க இராணுவத்தால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அப்பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். "இப்போரை வெல்ல நமக்கு ஒரே வழி தெஹ்ரானிலும், டமாஸ்கசிலும் இருக்கும் ஆட்சியை வீழ்த்துதல்தான்; அவற்றின் மறைமுகப் போர்கள் காசா, லெபனான் ஒரு புறத்தில், இஸ்ரேல் மறு புறத்தில் என்ற விதத்தில் நடப்பதால் ஆட்சிகள் கவிழப் போவதில்லை. அமெரிக்காதான் அதைச் சாதிக்க முடியும். வேறு வழியில்லை."

இந்தப் பட்டியலில் உலகின் மிக முக்கிய புதிய கன்சர்வேடிவ்களில் ஒருவரான பிரதம மந்திரி டோனி பிளேயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த வாரம் Los Angeles World Affairs Council வெளியுறவுக் கொள்கையில் "பிற்போக்கான இஸ்லாமை" எதிர்த்துப் போரிட ஒரு "முழுமையான மறுமலர்ச்சி" தேவை என்று அவருடைய உரை அழைப்பு விடுத்தது.

பாலஸ்தீனிய பிரச்சினையில் நியாயமான தீர்வு மற்றும் ஜனநாயக மதிப்பீடுகளுக்கான அரசியல் போராட்டத்தில் நியாயமான தீர்வு போன்ற வாடிக்கையான உயரிய நிலை அக்கறைகளுக்கு இடையே, அமெரிக்காவின் அவருடைய சக சிந்தனையாளர்கள் அவருடைய உண்மை செயற்பட்டியலில் அவர் விவரித்திருந்த "ஷியா ஆரம்" அல்லது "பயங்கரவாதத்தின் ஆரம் என்பது இப்பொழுது பகுதி முழுவதும் வெளிப்பட்டு" பயங்கரவாதத்தின் மீதான போரில் மையக் குவிப்பாக இருந்த அல் கொய்தாவிற்கு பதிலாக வந்துவிட்டது என்று அவர் விளக்கினார்.

"இந்தப் போர் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இயன்றதை செய்வோம். ஆனால் அப்படி நடந்து விட்ட பின்னர், எமது உத்தியின் முழு மலர்ச்சியும் நம்மை அச்சுறுத்துவோரை தோற்கடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான்" என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது: "இந்தக் குறுக்கீடுகளில் உள்ள முக்கிய கருத்து, இராணுவமோ, மற்றதோ, இவை வெறும் ஆட்சி மாற்றம் என்பதற்கு இல்லாமல் நாடுகளை இயக்கும் மதிப்பீட்டு முறைகளை மாற்றுவதற்கும்தான். பதாகை உண்மையிலேயே "ஆட்சி மாற்றம்" இல்லை, "மதிப்பீடுகள் மாற்றம்" என்பதுதான்.

இப்படி செப்படிவித்தையாக, பிளேயர் ஆட்சி மாற்றம் என்ற சட்ட விரோதக் கொள்கையை மன்னிக்கும் வகையிலும் தன்னுடைய வெளிப்படையான இலக்குகளை காட்டும் வகையிலும் வெளிப்படையாக வேறு கருத்தை தழுவுகிறார். சிரியா மற்றும் ஈரான் பற்றிய அவருடைய குறிப்புக்கள் அடுத்து யார் இலக்குகளாக கொள்ளப்படுவர் என்பதைத் தெளிவாக்குகிறது. ஆனால் அவருடைய கருத்துக்களின்படி இப்பொழுது எங்கும் எவருக்கும் பாதுகாப்பு இல்லை.

புதிய கன்சர்வேட்டிவ்களின் வெறிப்பேச்சுக்கள் பைத்தியக்காரத்தனமாக தோன்றி எள்ளி நகையாடத்தக்க தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் அது தவறாகிவிடும். அவர்களுடைய பைத்தியக்காரத்தனத்தில் தற்காலத்திய சமூக, அரசியல் உறவுகளின் அடித்தளத்தில் உள்ள தர்க்கம் வெளிப்படுகிறது.

மார்ச் 29, 2003 அன்று உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்காவில், "சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்: ஒரு புதிய சர்வதேச தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கான மூலோபாயமும் திட்டமும்" என்று மாநாடு ஒன்றை நடத்தியது.

தன்னுடைய ஆரம்ப உரையில் டேவிட் நோர்த், போரை எதிர்ப்பதற்கான எமது மூலோபாயத்தை, சர்வதேச தொழிலாள வர்க்கம் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலின் அடிப்படையில் கொள்ளுவது பற்றி விளக்கியது கீழே கொடுக்கப்படுகிறது:

"ஆனால் தீர்வு அளிக்காத எந்தப் பிரச்சினையையும் வரலாறு முன்வைப்பதும் இல்லை. உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய பிரச்சினைகளுக்கு ஏகாதிபத்திய கொள்ளை முறை என்ற விடையிறுப்பு மட்டும் இல்லை. இந்த உலக வழிவகைகளுக்குள்ளே இடம் கொடுத்திருப்பது புறநிலைரீதியான ஒரு சர்வதேச சோசலிச தீர்விற்கான வாய்ப்பு வளம் ஆகும்."

இதன் பின்னர் போருக்கு எதிராக மக்கள் எதிர்ப்பின் முக்கியத்துவம் பற்றி நோர்த் கவனத்தை ஈர்த்தார். இது 10 மில்லியன் மக்களுக்கும் மேலான அணிதிரள்வை காட்டியது. அவர் கூறினார்: "கிட்டத்தட்ட தன்னியல்பாய் அபிவிருத்தியடைந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், அனைத்து மரபு வழி முதலாளித்துவ அமைப்புமுறை அரசியல் சக்திகளிடம் இருந்து தனியாகவும், அவற்றை எதிர்த்தும் விளைந்தது என்பது, ஒரு சர்வதேச, சோசலிச விடையிறுப்பு உலக முதலாளித்துவ நெருக்கடிக்கு எதிராக எழுச்சி பெறுகிறது என்ற ஆரம்ப வெளிப்பாடு என்ற வகையில்தான் அறியப்பட முடியும்."

New York Times அந்நேரத்தில் ஒரு வர்ணனையை அளிக்கத் தூண்டப்பட்டதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். "ஈராக் பற்றி மேலைக் கூட்டு சிதைந்தது, மற்றும் உலகம் முழுவதும் இந்த வார இறுதியில் மாபெரும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது இன்னும் உலகில் இரு பெரும் சக்திகள் இருக்கின்றன என்பதை நினைவுறுத்தும் வகையில் இருந்தன : ஒன்று அமெரிக்கா, மற்றொன்று உலக மக்கள் கருத்து."

கடந்த மூன்று ஆண்டுகள், வியத்தகு முறையில் ஈராக் போர் அடிப்படையில் ஒரு திருப்புமுனையாக, ஒரு புதிய புரட்சிகர சமூக அரசியல் போராட்டங்களுக்கு அமையும் என்ற எமது பகுப்பாய்வை உறுதி செய்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்துவரும் இடது பிரிவு மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு உணர்விற்கும் வலதுபுறம் சாயும் உத்தியோகபூர்வ அரசியல் அமைப்புக்களுக்கும் இடையே உள்ள பிளவு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பெரிதாகிவிட்டது.

இக்கணத்தில் சீற்றத்துடன் லெபனானில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு, அதைப் பற்றி ஏதேனும் செய்ய வேண்டும் என்று இருப்பவர்களுக்கு அதைச் செயலாற்றுவதற்கு அரசியல் கருவி எதுவும் கிடையாது.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கம் எழுச்சி பெறுவதற்கான அடிப்படை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்ப்பில் இருந்து புரட்சிகர நடவடிக்கையாக மாறுதல் என்பது புறநிலை நிலைமையோடு பொருந்துமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் நனவைதொடர்ந்து உயர்த்தும் மார்க்சிஸ்டுகளது நீடித்த முயற்சியின் மூலமே சாத்தியமாகும். அதற்குத் தேவை ஒரு வேலைத்திட்டம், ஒரு முன்னோக்கு, ஒரு சர்வதேச அரசியல் கட்சி அதை வழிநடத்த வேண்டும் என்பதுதான். இதைத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், இங்கு பிரிட்டனில் சோசலிச சமத்துவக் கட்சியும் பிரதிநிதித்துவம் செய்ககின்றன.

Top of page