World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

West Bengal Stalinists sign deal with firm tied to ex-Indonesian dictator

முன்னாள் இந்தோனேசிய சர்வாதிகாரியுடன் பிணைந்துள்ள நிறுவனம் ஒன்றுடன் மேற்கு வங்க ஸ்ராலினிஸ்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்

By Ajay Prakash
25 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த மாதம் மேற்கு வங்கத்தின் ஸ்ராலினிச தலைமையிலான இடது முன்னணி கூட்டணி அரசாங்கம், இந்தியாவின் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கான (foreign direct investment FDI) ஒப்பந்தத்தை முன்னாள் இந்தோனேசிய சர்வாதிகாரி தளபதி சுகார்ட்டோவுடன் நெருக்கமான பிணைப்பை கொண்ட இந்தோனேசிய பெருநிறுவனமான சலிம் குழுமத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சலீம் குழுமத்தின் நிறுவனர் லியெம் சியோவி லியோங் ஆவார். இந்தோனேசியாவிலேயே பெரிய பணக்காரர் என்று கூறப்படும் லியெம் அவர் அடைந்துள்ள செல்வத்தில் இருந்து சலுகைகள் வரையிலான அனைத்திற்கும் பெரிதும் சுகார்ட்டோவிற்கு கடமைப்பட்டுள்ளார்; 1940களில் இருந்து இருவருக்கும் நட்பு இருந்தது.

1965க்கும் 1966க்கும் இடையே பத்துலட்சத்திற்கும் மேற்பட்டோர் இறப்பை விளைவித்த, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குருதி சிந்திய களையெடுப்பிற்கு சுகார்ட்டோதான் பொறுப்பானவராவர் ஆனால் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாசார்ஜி விமர்சனத்தை பொருட்படுத்தாமல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை இது ஒன்றும் தடுத்துவிடவில்லை. "நாம் ஏன் பழையனவற்றைப்பற்றி பேசவேண்டும்? அவர்கள் (சலிம் குழுமத்தினர்) சீனாவில்கூட முதலீடு செய்துள்ளனர். எமது நிலைப்பாடு மிகத்தெளிவானது: மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு நமக்கு முதலீடு தேவை. முதலீட்டாளரின் குணநலன்களை பற்றி நமக்கு கவலையில்லை. என்னை பொறுத்தவரையில் மூலதனத்திற்கு நிற வேறுபாடு கிடையாது." என்று அவர் கூறினார்.

முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே பட்டசார்ஜி இந்தியா, சீன முன்மாதிரியை பின்பற்றி இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை ஈர்க்கும் வகையிலும், உலகச் சந்தைகளுக்கு குறைவூதிய உற்பத்தி வகை, வணிக வகைகள் மற்றும் வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

ஜூலை 31ம் தேதி சலிம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பெனி சன்டோசோவும், மேற்கு வங்க அரசாங்க தொழிற்துறை செயலாளர் சப்யாசச்சி சென் மற்றும் மேற்கு வங்க தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேபாசிஸ் சோம் ஆகியோரும் பட்டாசார்ஜியின் முன்னிலையில் FDI உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்ட விழாவில் மேற்கு வங்க முதல் மந்திரி அறிவித்ததாவது: "வங்க மக்கள் நாம் திறமையாகச் செயல்ப்பட வேண்டும் என்ற ஆவலுடன் காத்துள்ளனர்.... அரசாங்கத்திற்கு அவர்கள் இட்டுள்ள கட்டளை விவசாயத்திலும், தொழில்துறையிலும் சமச்சீர்நிலை காத்து மாநிலத்தை முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதுதான்."

200 பில்லியன் ரூபாய்கள் ($4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள இந்த FDI பேரம் நெடுஞ்சாலைகள், பாலங்கள் கட்டமைத்தல், ஹால்டியாவில் ஒரு பல பொருட்கள் தயாரிப்பு, 12,500 ஏக்கர் (20 சதுர மைல், 50 சதுர கிலோமீட்டர்) பரப்பில் குறைவூதிய சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economic Zone SEZ) ஏற்படுத்துதல் மற்றும் அதேபோல் கிழக்கு மித்னாப்பூரில் 10,000 ஏக்கரில் இரசாயன உற்பத்திக் கூடங்கள் நிறுவுதல், சுகாதார, அறிவுசார் "நகரங்களை" அல்லது "வளாகங்களை" இன்னும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்படுத்துதல் ஆகியவை அடங்கும். மொத்தத்தில் கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் நிலம் இவற்றிற்காக தேவைப்படும்.

பாரதிய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான முந்தைய மத்திய அரசாங்கம் முதன் முதலாக (SEZ) என்னும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற கருத்தை 2000ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு அத்தகைய 42 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தவிர, இப்பொழுதுள்ள சிறப்பு ஏற்றுமதி செயல்முறை மண்டலங்கள் (Export Processing Zones) சிறப்பு பொருளாதாரப் பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டன.

பொதுவாக தனியார் துறையின் ஒத்துழைப்புடன் மாநில அரசாங்கங்களால் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படுகின்றன; இவை தன்னிறைவை கொண்ட பகுதிகளாக, சொந்த நீர், மின்சக்தி வசதிகளை கொண்டிருக்கும். முதலாளித்துவ வர்க்கத்திற்கு இவற்றின் பெரும் மதிப்பு வரிவிதிப்புக்கள், தொழிலாளர் தரங்கள் இன்னும் பிற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிடும்.

India together இன் கருத்தின்படி, "இப்பகுதிக்கு முதலீட்டாளர்களை ஈர்த்து வரவேற்கும் வகையில், மத்திய அரசாங்கம் ஏராளமான நிதிய ஊக்கங்களையும், சலுகைகளையும் கொடுத்து வருகிறது. உதாரணமாக மண்டலங்கள் வணிக செயற்பாடுகள், ஏற்றுமதி வரிகள், காப்பு வரிகள் ஆகியவற்றை பொறுத்தவரையில் வெளிநாட்டுப் பகுதிகளுக்கு ஒப்பாக நடத்தப்படும். பகுதியில் உள்ள பிரிவுகள் (100 சதவிகிதமும் ஏற்றுமதிச் சார்பு உடையவை) நடவடிக்கைகளில் முழு வளைந்து கொடுக்கும் தன்மை உடையவை ஆகும். அவைகளுக்கு எல்லாவித நேரடி மற்றும் மறைமுக வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி தீர்வைகள் கிடையாது, கலால் வரி, மத்திய அல்லது மாநில விற்பனை வரி அல்லது சேவை வரிகளும் கிடையாது. இப்பிரிவுகளுக்கு மூலதனப்பொருட்கள் மற்றும் மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் இருந்து உரிமம் தேவையில்லை. இப்பகுதிகளில் 100 சதவிகித வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) அனுமதிக்கப்படுகிறது. அந்தந்த நாடுகளுக்கு இலாபத்தை அனுப்பி வைப்பதும் அனுமதிக்கப்படுகிறது."

SEZ முதலீட்டாளர்களுக்கு எந்த சட்டபூர்வ தடைகளும், குறுக்கீடுகளும் அரசாங்க துறைகளில் இருந்து வராமல் உறுதியளிக்கின்றன. நீலக் காலர் தொழிலாளர்களாயினும், உயர்மட்ட அதிகாரிகளாயினும் ஒரே மாதிரியான வேலை நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர்; நாள் ஒன்றுக்கு 10ல் இருந்து 12 மணி நேரம் குறைந்த ஊதியத்திற்கு, அதிக நேர ஊதியமோ, விடுமுறை ஊதியமோ, ஓய்வூதிய நலன்களோ இன்றி உழைக்கின்றனர். மேற்கு வங்கத்தில் வெளிநாட்டு முதலீடு, உள்நாட்டு பெருவணிகத்தை ஈர்ப்பதற்காக இத்தகைய நிபந்தனைகளைத்தான் ஊழியர்கள்மீது CPI(M) அறிமுகப்படுத்தியுள்ளது.

சலிம் குழுமத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு இரண்டு நாட்கள் முன்னதாக இடது முன்னணியின் (பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிசக் கட்சி, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மற்ற கூறுபாடுகளின் தலைவர்களையும் பட்டாசார்ஜி சந்தித்துப் பேசினார். அவர்களும், சில CPI (M) உறுப்பினர்களும் சலிம் குழுமத்தின் நிலத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பெரும் அளவில் நிலம் தேவைப்படும் நிலையில், அவை ஏழை விவசாயிகளிடம் இருந்து எடுத்துக் கொள்ளுவது பற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்; அதற்கு போதிய இழப்பீட்டுத் தொகை பொதுவாக கொடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.

மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும், வலதுசாரி திரிணாமூல் காங்கிரசின் மமதா பானர்ஜியும் சலிமுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்டார். "வெளிநாட்டவர்களுக்காக" பெரும் அளவு நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தி கொடுப்பதை அவர் கண்டித்து, பென்டோசோவின் வருகையின் போது ஆர்ப்பாட்டங்கள் நடத்த முயன்று அதில் தோல்வியும் அடைந்தார்.

சலிம் குழுமத்துடனான உடன்பாட்டில் இடது முன்னணிக்குள்ளேயே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வெறும் பெயரளவில்தான் உள்ளன. இடது முன்னணித் தலைவரும் (மாநில CPI(M) செயலாளருமான) பிமன் போஸ், இழப்பீட்டு தொகை தொகுப்பு பற்றி சலசலப்பு இருந்தபோதிலும்கூட, இடது முன்னணி பங்காளிகள் தனியார் மூதலீட்டாளர்களுடனான ஒப்பந்தத்தை ஏற்றனர் என்றும் பயன்படுத்தப்படாத நிலங்களை சலிம் குழுமத்திற்கு மாற்றுவதற்கு ஒப்புக் கொண்டனர் என்றும் விளக்கியுள்ளார்.

தன்னை குறைகூறுபவர்களுக்கு விடையிறுக்கும் முயற்சியாக, மாநிலத்தின் தொழில்துறை மந்திரியான நிருபம் சென், மேற்கு வங்க அரசாங்கத்திற்கும் சலிம் குழுமத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தக் குறிப்பின்படி, திட்டத்தை செயல்படுத்துபவர்கள் தரிசு நிலம் அல்லது மிகக் குறைந்த வளமுடைய நிலத்தைத்தான் பயன்படுத்துவர் என்றும் "இயன்ற அளவிற்கு" உற்பத்தித்திறன், இரட்டை மகசூல், பல்வகை பயிர்கள் விளையும் நிலங்கள் ஆகியவற்றை வாங்குவதாக இல்லை என்றும் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும் இடம் பெயரும் விவசாயிகளுக்கு நல்ல அளவு இழப்பீட்டுத் தொகை, மாற்றீடு வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் இழப்பீட்டுத் தொகையின் வட்டியிலேயே குடும்பங்கள் வாழமுடியும் என்றும் கூறினார். பதிவு செய்யப்பட்டுள்ள உற்பத்திப் பங்கு பெறுவோர் அவர்கள் சாகுபடி செய்யும் வரை நில மதிப்பீட்டில் 25சதவிகிதத்திற்கும் அரசாங்கம் உறுதி மொழி கொடுத்துள்ளது என்றும் இது நிலச் சொந்தக்காரர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையோடு தொடர்பு கொண்டது இல்லை என்றும் அவர் கூறினார்.

இடது முன்னணியில் சலசலப்பு எழுந்ததற்கு காரணம் விவசாயிகள் தங்களுடைய நிலங்களையும், வேலைகளையும் இழந்துள்ளது பற்றி சீற்றம் கொண்டுள்ளதால்தான்; அவர்களுக்கு இழப்பீட்டு தொகை மற்றும் வருங்கால வேலை வாய்ப்புக்களை பற்றிய கூற்றுக்களில் சந்தேகங்கள் உள்ளன. தங்கள் நலன்களை CPI(M) பொருட்படுத்தவில்லை என்று பெருகிய முறையில் அவர்களிடையே கருத்து உள்ளது; மாநிலத்தின் கடந்த வசந்தகால தேர்தல்களில் இது பிரதிபலித்தது. ஒரு பகுப்பாய்வின்படி, CPI(M) கிட்டத்தட்ட தன்னுடைய கிராமப்புற வாக்குகளில் 10 சதவிகிதத்தை இழந்து விட்டதாகவும், அதே நேரத்தில் மத்தியதர, செல்வந்தர் வகுப்புக்களில் அது பெற்ற வாக்குகள் 18 சதவிகிதம் உயர்ந்தன. மாநிலம் முழுவதும் இடது முன்னணி தன்னுடைய மொத்த இடங்கள் எண்ணிக்கையை அதிகரித்துள்ள போதிலும், சலிம் குழு ஒப்பந்தத்தால் பாதிப்பிற்குட்பட்ட கொல்கத்தா மாநாகரப் பகுதியில் அது சில இடங்களை இழந்துள்ளது.

இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிடுவதாவது: "இந்திய அரசாங்கத்தை பொறுத்தவரையில் திட்டங்களுக்காக நிலங்களை கட்டாயமாக கொடுக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கான இழப்புத் தொகையை பொறுத்தவரையில் மட்டமான வரலாற்று நிலைதான் உள்ளது." கொல்கத்தா புறநகர் சால்ட் லேக் சிட்டியில் ராஜர்கட் (புதுப் பேருர்) கட்டமைத்ததில், மற்றும் பல வளர்ச்சித் திட்டங்களில் பல ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் "இழப்பீட்டுத் தொகையாக" ஏக்கருக்கு ரூபாய் 45,000 (அமெரிக்க டாலர் 1,000) மட்டுமே பெற்றுள்ளனர்; ஆனால் நிலங்களை பண்படுத்தப்பட்ட பின்னர் அவை நிலவிற்பனையாளர்களால் பின்னர் ஏக்கர் ஒன்றுக்கு 20 லட்ச ரூபாய்க்கு ( $43,000) என்று விற்கப்படுகின்றன.

தன்னுடைய தனி முன்முயற்சியில் மட்டும் பட்டாச்சார்ஜி இயங்கிக் கொண்டிருக்கவில்லை. CPI(M) இன் பொலிட்பீரோ உறுப்பினர்களான பிரகாஷ் காரட், சீதாராம் யெச்சூரி மற்றும் ஜ்யோதி பாசு ஆகியோரும் ஸ்ராலினிச தலைவருக்கு முழு ஆதரவை, கடந்த ஆண்டு சலிம் குழுமத்துடன் அவர் பேச்சு வார்த்தைகளை தொடங்கியதில் இருந்து கொடுத்து வருகின்றனர்; கட்சி உறுப்பினர்களுக்கும் எவரேனும் முதல் மந்திரியின் கொள்கைகளை எதிர்த்தால் ஒழுங்குமுறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்ற எச்சரிக்கையை கொடுத்துள்ளனர்.

2001ம் ஆண்டு முதல் மந்திரி பதவிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே, பட்டாசார்ஜி தன்னுடைய பணி மேற்கு வங்கம் தொழிலாளர் போர்க்குணம் இருக்கும் ஒரு மையம் என்ற கருத்தை அகற்றுதல் என்று கொண்டு, இம்மாநிலத்தை முதலீட்டாளர்களுக்கு உவப்புடையதாக வளர்த்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் மாதம், கொல்கத்தாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சேர்ந்த வணிக வழிவகை நிறுவனங்களின் செயற்பாடுகளை இடது முன்னணியின் ஆதரவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் தடைக்கு உட்படுத்தியபோது, பெரும் சீற்றமடைந்த பட்டாச்சார்ஜி அத்தகைய தடைகள் இனி ஒருபோதும் வராமல் தான் பார்த்துக் கொள்ளுவதாக சபதம் எடுத்துக் கொண்டார். பட்டாச்சார்ஜி கூறியதாவது: "அவர்களுக்கு IT தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்று தெரியவில்லை; அது ஒன்றும் சணல் தயாரிக்கும் ஆலை அல்ல. அது ஒரு 24/7 பணியாகம்; வேலை நிறுத்தங்களுக்கு அதில் சிறிதும் இடமில்லை. இத்தவறான செய்தி நிகழ்ந்துவிட்டதை நான் சரி செய்ய முயலுகிறேன். பெரு IT நிறுவனங்களான IBM, Wipro, Cognizant, PwC போன்றவர்களுக்கு அடுத்த முறை முற்றிலும் அமைதியான முறையில் அனைத்தும் இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்க உள்ளேன்." India Today கொடுத்துள்ள தகவலின்படி மறியலில் ஈடுபட்டவர்களின் பெயர்களை IT நிறுவனங்கள் கொடுத்தால் அவர்களைக் கைது செய்ய ஏற்பாடு செய்வதாக அவர் கூறினார் என்று தெரிகிறது.

Prince Warehouse Coopers மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சர்வதேச வளர்ச்சித்துறை ஆகியவற்றில் உள்ள கணக்காயர்களுடைய உதவியுடன், இடது முன்னணி அரசாங்கம் சமீபத்தில் ஒரு பொதுப் பணித்துறை பிரிவின் (public sector unit PSU) உடைய மறுசீரமைப்புத்திட்டத்தின் முதல் கட்டத்தை முடித்துக் காட்டியது; இதையொட்டி 10 PSU க்கள் நிரந்தரமாக மூடப்படுவதற்கும், 15 மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்படுவதற்கும் கொல்கத்தாவின் Great Eastern Hotel என்ற ஒரு நிறுவனமும் தனியார் துறைக்கு மாற்றப்படுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இந்த ஓட்டலில் இருந்த 422 ஊழியர்களை அரசாங்கம் வேலையில் இருந்து நீக்கி, இதை Bharat Hotels தொடர் நிறுவனங்கள் அமைப்பிற்கு 520 மில்லியன் ரூபாய்க்கு (அமெரிக்க $11.4 மில்லியன்) விற்றுவிட்டது.

இரண்டாம் கட்டத்தில் 29 பொதுத்துறை நிறுவனங்கள் மறுசீரமைப்பிற்கு அடையாளம் காணப்பட்டுள்ளன; இதில் மாநிலத்தின் மின்சாரக் குழுவும், மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களும் உள்ளன. கிட்டத்தட்ட 80,000 தொழிலாளர்கள் இதனால் பாதிப்பிற்கு உட்படுதவர். கடற்பிரிவு வணிகக் குழுவான P & O உடன், அரசாங்கம் இந்தியாவின் முதல் தனியார் துறைமுகம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள குல்ப்பியின் ஒரு SEZ ஐக் கட்டமைப்பதற்கான அமெரிக்க $235 மில்லியன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் முதலீட்டாளர்கள் பணிப்பதையெல்லாம் செய்வதற்கு தயாராக உள்ள தன்மை புஷ் நிர்வாகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்மையில் கொல்கத்தாவிற்கு ஒரு நாள் வருகை புரிந்திருந்த அமெரிக்க தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்கள் பிரிவின் துணை செக்ரடரி ஆப் ஸ்டேட் ரிச்சர்ட் பெளச்சர் கூறினார்; நான் சீனாவில் பல காலமும் பணியாற்றியுள்ளேன்; எலிபிடிப்பதில் தீவிரமாக இருந்துவிட்டால் ஒரு பூனை கறுப்பாக இருந்தாலும், வெளுப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்று டெங் சியோபிங் அறிவுரையை பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். ஏதேனும் சாதிக்க துடிக்கும் நடைமுறை வாதிகளுடன் நாங்கள் ஒன்றாக உழைக்க விரும்புகிறோம்.".

கேரளா மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடது ஜனநாயக முன்னணி மந்திரிசபையும், மேற்கு வங்கத்தில் இடது முன்னணி செயல்படுத்துவதை போன்ற புதிய-தாராள பொருளாதார சீர்திருத்தங்களைத்தான் தொடர்ந்துள்ளது. கடந்த மாதம் கேரளாவின் CPI(M) கட்சியை சேர்ந்த முதல் மந்திரி வி. எஸ். அச்சுதானந்தன் தன்னுடைய அரசாங்கம் தனியார் முதலீட்டை IT, சுற்றுலா மற்றும் விவசாயம் உட்பட அனைத்து துறைகளிலும் வரவேற்கும் என்று கூறியுள்ளார். மேலும் இவர், இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் புதிய தாராள கொள்கை செயற்பட்டியலின் தீவிர ஆர்வலரும், தேசிய திட்டக் குழுவின் துணைத் தலைவரான மோன்டேக் சிங் அலுவாலியாவையும் சந்தித்து விவாதித்துள்ளார். ஸ்ராலினிச தலைமையை கொண்டுள்ள கேரள அரசாங்கம் அரசியல் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களான ஹர்த்தால்களை முற்றிலும் தடை செய்வதற்கும் மாநிலத்தின் அரசியல் நடைமுறையில் இருப்பவர்கள் அனைவருடனும் "அரசியல் ஒருமித்த கருத்திற்காக" தன்னுடைய அரசாங்கம் ஆவன செய்யும் என்றும் கூறியுள்ளார்.

CPI(M) மற்றும் இடது முன்னணி இரண்டுமே தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு காவலர்கள் என்ற தோற்றத்தை கொடுத்துக் கொண்டு, அதே நேரத்தில் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் தூணாகவும், பணியாட்களாவும் இருந்து வருகின்றன.

சுதந்திரம் வந்தபின் முதல் நான்கு தசாப்தங்களில் CPI(M) மற்றும் அதன் முக்கிய இடது முன்னணி பங்காளியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) இந்திய தேசிய வளர்ச்சி மூலோபாயத்திற்கு அவை கொடுத்து வந்த ஆதரவை, தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் நிலமானிய பிற்போக்கிற்கு எதிரகவும் ஏகாதிபத்திய சார்புடைய பூர்ஷ்வாவிற்கு எதிராகவும் நடத்தும் "ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு" தேவை என்பதால் கொடுத்தாக கூறி தம் செயற்பாடுகளை நியாயப்படுத்திக் கொண்டன. இப்பொழுது இன்னும் கூடுதலான மார்க்சிச நெறியை நயமற்ற முறையில் காட்டும் வகையில் ஸ்ராலினிஸ்டுகள், சீனாவை தங்கள் முன்மாதிரியாக காட்டி, சர்வதேச மூலதனத்தை காந்தம் போல் குறைவூதிய தொழிலாளர் தொகுப்பிற்காக ஈர்ப்பதற்கு மேற்கு வங்கம் முயலவேண்டும் எனக் கூறுகின்றனர். "இப்பொழுது உள்ள உண்மை நிலைப்பாட்டை ஏற்பதற்கு நான் உழைத்து வருகிறேன். ....நாங்கள் நடைமுறை வாதிகள் ஆதலால் தற்போதைக்கு முதலாளித்துவ முறையினராக இருப்பது, அதுவும் உலகம் முழுவதும் முதலாளித்துவ முறைக்கு தாழ்ந்து நிற்கையில், முதலாளித்துவத்தினராக இருப்பது அறிவுடைமையான செயல் என்று முயன்று வருகிறேன்." என்று பட்டாச்சார்ஜி கூறினார்.

அனைத்து இந்திய அளவில், இடது முன்னணி, முதலாளித்துவ புதிய தாராளக் கொள்கையை சுமத்தும் வகையில் வரி வெட்டுக்கள், தனியார் மயமாக்குதல், அரசுக் கட்டுப்பாட்டுகளை அகற்றுதல், தொழிலாளர்களின் உரிமைகளை அகற்றல், பண்ணை விவசாய உதவித் தொகைகளை அழித்தல், கட்டுமான திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் வருமான ஆதரவு கொடுத்து நிதியம் அளித்தல் போன்றவை செயல்படுவதற்கு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இடது முன்னணியின் 60க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி சிறுபான்மை அரசாங்கத்திற்கு அதிகாரத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுவதற்கு போதுமான வாக்குகளை கொடுத்தும், பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் சமூக சமத்துவமின்மை பெருக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பை கட்டுப்பாட்டிற்குள், அதாவது தொழிற்சங்க மற்றும் பாராளுமன்ற எல்லைக்குள்ளே வைப்பதற்கும் பேருதவி தந்து வருகிறது.

Top of page