World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

China and India manoeuvre to secure energy supplies

எரிசக்தி வழங்கீடுகளை அடைய சீனாவும் இந்தியாவும் திட்டமிட்டு முயற்சி

By Parwini Zora and Niall Green
31 January 2006

Use this version to print | Send this link by email | Email the author

"நாங்கள் சீனாவை ஒரு மூலோபாய போட்டியாளராக பார்க்கவில்லை. ஆனால் ஒரு மூலோபாய பங்குதாரராக பார்க்கிறோம்" என்று இந்திய பெட்ரோலிய அமைச்சர் மணிசங்கர் ஐயர் பெய்ஜிங்கிற்கு ஜனவரி 10 முதல் 13 வரை விஜயம் மேற்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார்.

சீனாவிற்கு ஐயருடன் பாரிய இந்திய பெட்ரோலிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உடன் சென்றிருந்தனர். அவர் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் சீர்திருத்த கமிஷனுடன் எரிசக்தி கூட்டுறவு தொடர்பான ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். ஜனவரி 12 அன்று இந்திய தூதுக்குழு சீனாவின் தேசிய பெட்ரோலிய பெருநிறுவனம் (CNPC), சீனாவின் பெட்ரோலிய வேதியல் பெருநிறுவனம் மற்றும் சீனாவின் கடற்பகுதி எண்ணெய் பெருநிறுவனம் உட்பட சீனாவின் பிரதான எரிசக்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்தது.

சீனாவில் இருந்தபோது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஐயர், சீனாவும் இந்தியாவும் பெருகிவரும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு இறக்குமதிகளை பெற வேண்டியிருப்பதால், எரிசக்தி அளிப்புகளுக்காக போட்டியை குறைத்துக்கொள்ள முயற்சிப்பதிலும் மற்றும் புதிய எரிசக்தி அளிப்புகளை கண்டுபிடித்து மேம்படுத்துவதிலும் ஒன்றிணைந்து பணியாற்றுவது இரு நாடுகளின் பொதுநலனுக்கு உகந்தது என்று வாதிட்டார்.

சீனாவும், இந்தியாவும் எரிசக்தி பிரிவில் ஒரே நிலைபாட்டில் உள்ளன என்று ஐயர் கூர்ந்து கவனித்துள்ளார். ---இரண்டும் கணிசமான நிலக்கரி வளங்களை பெற்றிருக்கிறது. ஆனால், எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை பெருமளவிற்கு சார்ந்திருக்கின்றன---- மற்றும் அவர், மூன்றாவது நாடுகளில் எண்ணெய் வளங்களுக்கு பேரம் பேசும்போது அவற்றிற்கிடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இந்தியா தற்போது 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் எரிசக்தி உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்களில் அடிக்கடி பெய்ஜிங்குடன் போட்டியிட்டுக்கொண்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பல நேரங்களில் அங்கோலா, கசகஸ்தான், ஈக்குவடோர் மற்றும் பர்மா உட்பட்ட நாடுகளில் சீனாவுடனான பேரத்தில் இந்தியா தோல்வி கண்டிருக்கிறது. இதற்கிடையில் சீனாவின் எண்ணெய் நிறுவனங்கள் பல பேரங்களில் எரிசக்தி சொத்துக்களுக்காக மிதமிஞ்சிய பணத்தை செலுத்தியிருக்கின்றன. சென்ற ஆகஸ்டில் CNPC கனடாவின் எண்ணெய் நிறுவனமான பெட்ரோ கசக்கஸ்தானை கையகப்படுத்துவதற்கு 4.18 பில்லியன் டாலர்களை செலுத்தியிருக்கிறது. இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு பெருநிறுவனம் (ONGC) 3.9 பில்லியன் ஏலத்திற்கு அதனைக் கேட்டது.

"நாம் தொடர்ச்சியாக போட்டியிட்டுக்கொண்டே இருந்தால் சரியான விலைக்கு மேலாக ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கிறது என்பதை சீனா அறிந்துள்ளது. அப்படி அவர்கள் பெறுகின்ற சொத்துக்கள் ஆபத்தான நாடுகளில் நிச்சயமற்ற மதிப்பை கொண்டுள்ளவை" என்று ஜயர் குறிப்பிட்டார்.

எரிசக்தி வளங்களுக்கான போட்டி தடுத்து நிறுத்தப்படாவிட்டால், ஆசியாவில் வளர்ந்து கொண்டுவரும் இரண்டு அரசுகளின் உறவுகளை கொழுந்துவிட்டெரியச் செய்துவிடும் என்றும் ஜயர் எச்சரித்தார். "இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே 'பெரிய விளையாட்டை' (Great Game) அப்படியே பின்பற்றுவது அமைதிக்கு ஒரு ஆபத்தாகும். எரிசக்தி பாதுகாப்பிற்கான நமது தேடுதலில் நாம் ஒருவரோடு ஒருவருடைய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடாது" என்றும் ஐயர் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்குமிடையில் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பிற்கான ஐயரின் அழைப்பை சீன எரிசக்தி மூலோபாய அமைப்பான, ஒரு அரசாங்க சிந்தனை குழுவின் இயக்குநர் வழிமொழிந்தார். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு கட்டுப்பாடில்லாத போட்டி நிலவுவது, "சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தீங்கிழைப்பதாகும். இலாபம் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு பன்முக வழியில் செலவினங்களையும் பங்கு ஆபத்துக்களையும் குறைத்துக் கொள்வதற்கு ஒத்துழைப்பு அவசியமாகும்" என்று ஷியா ஈசன் குறிப்பிட்டார்.

அரசிற்கு சொந்தமான சீன மற்றும் இந்திய எரிசக்தி நிறுவனங்கள் ரஷ்யா, ஈரான் மற்றும் சூடான் உட்பட்ட நாடுகளில் பல கூட்டு ஆராய்ச்சி வணிக முயற்சியை ஏற்கெனவே துவங்கியுள்ளன. அவற்றில் சீனா பொதுவாக பெரும்பங்கு பெறும்.

டிசம்பரில் சீனோ-இந்திய (Sino-Indian) எரிசக்தி ஒத்துழைப்பை நோக்கி மேலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது சீனாவின் CNPC யும் இந்தியாவின் ONGC யும், அந்த நாடுகளின் மிகப்பெரிய அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களும் சிரியாவிலுள்ள அல்புரட் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் பெட்ரோ-கனடாவின் (Petro-Canada) 37 சதவீத பங்குகளை கையகப்படுத்துவதற்கு கூட்டாக 573 மில்லியன் டாலர் ஏலம் விலை கேட்பதில் வெற்றிப்பெற்றன.

ஒரு ஆசிய எண்ணெய் மற்றும் எரிவாயு வலைச்சட்டத்தை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளுக்கு இந்திய- சீனா எரிசக்தி பேச்சுவார்த்தை உறுதுணையாக அமைந்திருக்கிறது. இந்த வலைச்சட்டம், உத்திரவாதப்படுத்தும் நம்பகத்தன்மையுள்ள விநியோக வலைப் பின்னல்களையும் ஆசியாவிற்கான ''எரிசக்தி பாதுகாப்பையும்'' நோக்கமாகக் கொண்டதாகும். சென்ற நவம்பர் புதுடில்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அது சம்பிரதாய முறையில் துவக்கி வைக்கப்பட்டது. அதில் ரஷ்யா உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் மற்றும் அவற்றின் எதிர்க் கூட்டாளிகளிள் ஆசிய பிரதான நுகர்வு நாடான சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியா உட்பட வடக்கு மற்றும் மத்திய ஆசிய எரிசக்தி உற்பத்தி நாடுகளின் அமைச்சரவை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

''இந்த சகாப்தத்தில் நமது எரிசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்தி வந்த மற்றவர்கள் தற்போது நமக்கு பின்னால் நின்றுகொண்டிருக்கின்றனர். இதர கண்டனத்தில் வாழும் நுகர்வோரின் பெருமளவு சகாப்தமும் முடிந்து விட்டது" என்று மாநாட்டில் ஐயர் குறிப்பிட்டார்.

சீன-இந்திய உறவுகளில் பகைமையினைக் கைவிடுதலும் அமெரிக்காவின் பங்கும்

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எரிசக்தி விவகாரங்களில் நடப்பு ஒத்துழைப்பானது, அண்மைக் காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பகைமையினைக் கைவிடுதல் நிகழ்கிறது. (கெடுபிடிப்போரின் பிந்திய தசாப்தங்களில் சீனா அமெரிக்காவுடனும், மற்றும் பாக்கிஸ்தானுடனும் கூட்டணி கொண்டிருந்தது. அதே நேரத்தில் இந்தியா, சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார மற்றும் புலோக அரசியல் மற்றும் இராணுவ உறவுகளை அனுபவித்து வந்தது) 2003 ல் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்த பின்னர் விரைவிலேயே வலுவான அடிப்படையில் அமெரிக்க-சார்பு இந்து பேரினவாத பாரதீய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான இந்தியாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் சீனாவுடனான உறவுகளை செப்பனிட கூட்டான முயற்சிகளை மேற்கொண்டது. 2005 ஜனவரியில் முதலாவது சீன- இந்திய மூலோபாய கலந்துரையாடல் நடைப்பெற்றது. "பூகோளமயமாக்கல், எரிசக்தி பாதுகாப்பு சர்வதேசியத்தின் ஜனநாயகமயமாக்குதல்'' தொடர்பான பொது பிரச்சனைகளில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

2005 ஏப்ரலில் சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ இந்தியாவிற்கு விஜயம் செய்தார். மற்றும் இருநாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக பிரச்சனைகளில் முன்னெடுத்துச் செல்வதற்கு "ஒரு மூலோபாய பங்குதாரர் முறையை" அறிவித்தன. "இதர நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாய்விற்கான கூட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு நெருக்கமான அரசியல் முன் முயற்சிக்காக'' முயலுவது என்று இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதே மாதத்தில் முதலாவது சீன-இந்திய வர்த்தக ஒத்துழைப்பு மாநாடு, ஆண்டிற்கு தற்போது நடந்துவரும் இருதரப்பு வர்த்தகத்தை 14 பில்லியன் டாலர்களிலிருந்து விரிவுபடுத்துவதற்காக நடைபெற்றது. (சீனா ஏற்கெனவே இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்குதாரராகும்.)

இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக அந்த அரசாங்கங்கள் சமீபத்தில் 2006 ஐ "இந்திய-சீன நட்புறவு ஆண்டு" என்று குறிப்பிட்டன. ஐயர் சீன விஜயம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஷியாம் ஷரன் பெய்ஜிங்கில் இருந்தார். அவர் இருதரப்பு உறவுகளை ஒரு ''மூலோபாய மற்றும் ஒத்துழைப்பு மட்டத்திற்கு மேம்படுத்திய பின்னர் இரண்டாவது சுற்று மூலோபாய கலந்துரையாடல்களை நடத்தினார்.

இந்தியாவின் வெளியுறவு செயலர், ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் பெறுவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு சீனாவின் ஆதரவை வென்றெடுப்பதிலும் மற்றும் நீண்டகாலமாக நீடித்துக்கொண்டிருக்கும் எல்லைத் தகராறை தீர்த்து வைப்பதிலும் தனது கலந்துரையடல்களில் குறிப்பாக குவிமையப்படுத்தியிருந்தார். சீனா மற்றும் ரஷ்யா தலைமையிலான ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சேர்ந்து கொள்வதற்கும் இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் மூலம் மாஸ்கோவும் மற்றும் பெய்ஜிங்கும் ஆசியாவில் குறிப்பாக மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை தோற்கடிக்க முயன்று வருகின்றன.

மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களில் ஒரு மூலோபாய பிடியை பெறுவதற்கு வாஷிங்டன் மேற்கொண்டுள்ள முயற்சி மற்றும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் புஷ் நிர்வாகத்தின் இராணுவத் தலையீடுகள் தொடர்பாக இந்திய மற்றும் சீன ஆட்சிகளின் பொதுவான கவலை இந்த நகர்வுகளுக்கு பின்னணியாக அமைந்திருக்கிறது. இந்த கவலைகளுக்கு மேலும் தூபம் போடுகின்ற வகையில் அண்மையில் ஈரானையும், சிரியாவையும் அச்சுறுத்துகின்ற வகையில் அமெரிக்கா அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது.

சீனாவுடன் நெருக்கமான உறவுகளை பின்பற்றி வருகின்ற நேரத்திலேயே இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இந்தியாவை ஒரு ''பெரிய வல்லரசாவதற்கு'' அமெரிக்கா தருகின்ற உதவியை ஏற்றுக்கொள்வது உட்பட அமெரிக்காவுடன் ஒரு ''மூலோபாய பங்குதாரர் முறையில்'' நுழைவதற்கு முயன்று வருகிறது.

சீனாவிற்கு ஒரு உள்ளார்ந்த எதிரிடையாக இந்தியாவை வாஷிங்டன் அடையாளம் கண்டுள்ளது என்ற உண்மையை மிகத்தெளிவாக இந்திய செல்வந்தத் தட்டினர் உணர்ந்திருக்கின்றனர். மற்றும் தனது ஆதரவை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதிலிருந்து பயனடைய முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். என்றாலும், அமெரிக்காவை சார்ந்திராமலும் அல்லது கீழ்படியாமலும் அந்த உதவியை பெறமுடியும் என்று அது கணக்கிடுகிறது.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ஷியாம் ஷரன் பெய்ஜிங்கில் இருந்தபோது, பூலோக அரசியல் முயற்சிகளை நேரடியாக குறிப்பிட்டார். என்றாலும், சீனாவும் இந்தியாவும், "எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்தும் அளவிற்கு அல்லது அதிகமான மிகப் பெரிய நாடுகள் ஒன்றையொன்று அடக்கும் அளவுக்கு," மற்றும் ஒன்றையொன்று அடக்கிவிட இரண்டு நாடுகளும் முயலும் என்பது காலாவதியாகிவிட்ட புலன்காட்சி ஆகும் என்று அறிவித்தார். "ஒரு கிழக்கு ஆசிய சமுதாயத்தை படிப்படியாக அடைதலை நோக்கி சீனாவுடன் நெருக்கமாக பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது, மற்றும் இறுதியாக ஒரு பரந்த ஆசிய பொருளாதார சமுதாயமாக உருவாக விரும்புகிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும், சீனாவும் இந்தியாவும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பிற்கான ஒரு செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல முயலுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அமெரிக்கா தயாராக இல்லை.

தெற்கு ஆசியாவிற்கு ஈரானின் இயற்கை வாயுவை கொண்டு வருவதற்கு பாக்கிஸ்தானுடன் கூட்டாக ஒரு குழாய் இணைப்பை உருவாக்குவதற்கான திட்டங்களை இந்தியா கைவிட்டுவிட வேண்டும் என்று புஷ் நிர்வாகம் ஏற்கெனவே வலுவான அழுத்தங்களை கொடுத்து வருகின்ற நிலையில், இந்த மாதம் புதுதில்லிக்கு ஒரு குறிப்பை அனுப்பி ONCG-வினால் சிரியாவில் முதலீடு பற்றி "மறு ஆலோசனை" செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களை இந்தியாவினால் வாங்கும் அடிப்படை தொடர்பான இந்த நடவடிக்கை, ஐ.நா. வினால் கீழறுக்கப்படும் என்று நியாயப்படுத்தப்படுகிறது. ---ஐக்கிய நாடுகள் என்றால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் என்று வாசியுங்கள்--- அவை சிரியா ஆட்சியை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

அமெரிக்காவின் முயற்சி குறித்து ஒரு மூத்த இந்திய அதிகாரி வெளியிட்ட ஆத்திரத்தை ஹிந்து பத்திரிகை வெளியிட்டிருக்கிறது; "இன்றைய தினம், அது ஈரானும், சிரியாவும் நாளை அது சூடான் அல்லது மியான்மர் அல்லது வெனிசுலா அல்லது வேறு எந்த நாடாகவும் இருக்கலாம். இதில், தொக்கி நிற்பது, எங்களது எரிசக்தி பாதுகாப்பு மட்டுமல்ல, ஆனால் நாங்களே முடிவுகளை எடுக்கின்ற எங்களது உரிமையும் கூட சம்மந்தப்பட்டிருக்கிறது".

****

சென்றவாரக் கடைசியில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டதில் மணி சங்கர் ஐயர் பெட்ரோலிய அமைச்சர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு அவருக்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை தரப்பட்டிருக்கின்றது. இந்திய பத்திரிக்கைகள் அனைத்துமே ஒருமனதாக இது பதவி இறக்கம் என்று வர்ணித்துள்ளன. மற்றும் ஈரான்-பாக்கிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய் இணைப்புத் திட்டத்திற்கு ஐயர் வெளிப்படையாக வாதிடுவது அதில் தொடர்பு கொண்டுள்ளது. இந்த அபிவிருத்தி குறித்து விரைவில் உலக சோசலிச வலைத் தளம் கருத்து வெளியிடும்.

Top of page