World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Newly released files show

Postwar German government and CIA shielded Adolf Eichmann

புதிதாக வெளியிடப்பட்டுள்ள கோப்புக்கள் காண்பிக்கின்றன

போருக்கு பிந்தைய ஜேர்மன் அரசாங்கமும் CIA உம் அடோல்ப் ஐஷ்மனை பாதுகாத்தன

By Dietmar Henning
3 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

அண்மையில் வெளிவந்துள்ள 27,000 பக்கங்கள் கொண்ட CIA இரகசிய ஆவணங்கள், போருக்கு பிந்தைய ஜேர்மனிய அரசியல் உயரடுக்கினருக்கும், மூன்றாம் ரைகின் சரிவிற்கு பின்னர் தப்பியிருந்த முக்கிய நாஜிக்களுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.

ஜேர்மனிய மற்றும் ஜப்பானிய போர்க்குற்றங்கள் பற்றிய ஆவணங்கள் வெளியிடுதலை கட்டுப்படுத்துகின்ற 1999 அமெரிக்கச் சட்டம் ஒன்றின் விளைவுதான் இந்த ஆவணங்களின் வெளிடாகும். இது CIA இனால் எதிர்க்கப்பட்டிருந்தது. ஜப்பானை பற்றிய ஆவணங்கள் இக்கோடை காலத்தில் ஆய்வாளர்களின் பரிசீலனைக்கு அளிக்கப்படும்.

இந்த ஆவணங்களை பார்த்துள்ள வெர்ஜீனியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த வரலாற்றாளரான Timothy Naftali, அடோல்ப் ஐஷ்மனின் இரகசிய நடமாட்டங்களை பற்றி கொன்ராட் அடினோவருடைய மேற்கு ஜேர்மனிய அரசாங்கம் 1958ம் ஆண்டில் இருந்தாவது குறைந்த பட்சம் அறிந்திருந்தது என்றும் அதை மூடிமறைக்க முற்பட்டது என்றும் கண்டுபிடித்துள்ளார். அவர்மீது குற்ற விசாரணை நடத்தாமல் பாதுகாப்பதற்கு CIA-ம் துணை நின்றுள்ளது.

யூதர்களை பற்றிய "இறுதித் தீர்வு" பற்றி நாஜிக்கள் திட்டமிட்டு பேர்லினுக்கு வெளியே 1942ம் ஆண்டு நடத்திய Wannsee மாநாட்டில் ஐஷ்மன்னும் பங்கு கொண்டிருந்தார். இதற்கு பின் 4 மில்லியனுக்கும் மேலான யூதர்களை நாடுகடத்துவதற்கு ஒப்புதல் கொடுத்த கொள்கையை செயல்படுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதியில் 1960 மே 11 அன்று அவர் இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளால் ஆர்ஜென்டினாவில் கைதுசெய்யப்பட்டு இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவர் மீது விசாரணை நடந்து மரணதண்டனை விதிக்கப்பட்டது. 1962 ஜூன் 1 அன்று அவர் தூக்கிலிடப்பட்டார்.

நாஜிக் குற்றங்கள் அனைத்தின் மொத்த உருவமாக ஐஷ்மன் விளங்கினார். அவர்மீதான விசாரணை உலகம் முழுவதும் கவனத்திற்குள்ளாகியது; இதில் முக்கியமாக விசாரணையை ஊன்றிக் கவனித்து தகவல் அளித்தவர் Hannah Arendt ஆவார்: இத்தகவல், புதிய தலைமுறையின் மீது பெரும் தாக்கத்தை, குறிப்பாக ஜேர்மனியில் ஏற்படுத்தியது; நாஜிக்களுடைய குற்றங்கள் அனைத்திலும் ஜேர்மனிய ஆளும் வர்க்கம் கொண்டிருந்த பங்கு பற்றி, இப்புதிய தலைமுறை தீவிரமாக பல வினாக்களை எழுப்பியது.

CIA வெளியிட்டுள்ள ஆவணங்கள், ஜேர்மன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் இரண்டுமே நீண்ட காலம் ஐஷ்மனுக்கு பாதுகாப்பு கொடுத்தன என்பதை தெளிவாக்குகின்றன; இதற்கு காரணம் "குளிர்யுத்தத்தில்" சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அவர்கள் பயன்படுத்தியிருந்த நாஜிக் கூறுபாடுகளை காத்திடல் வேண்டும் என்பதாகும்.

1952ல் இருந்து அர்ஜென்டினாவில் ரிகார்டோ கிளெமென்ட் என்ற புனைப் பெயரில் ஐஷ்மன் வசித்து வந்ததாக, 1958 மார்ச் 19 அன்று ஒரு ஜேர்மனிய உளவுத்துறை செயலர் தனக்கு வந்த தகவல்களின்படி CIA க்கு தெரிவித்ததாக அவர் கொடுத்த குறிப்பு தெரிவிக்கிறது.

1945ம் ஆண்டு அமெரிக்க காவல் முகாம் ஒன்றில் இருந்து ஐஷ்மன் தப்பித்திருந்தார். இதன் பின் போலி ஆவணங்களின் உதவியினால், ஜேர்மனியில் அவர் பல ஆண்டுகள் வசித்து வந்தார். பல நாஜிக்களை போலவே 1950ல் இவரும் ஆர்ஜென்டினாவிற்கு "எலி வழி" என அழைக்கப்பட்ட வகையில் வத்திக்கானுடைய உதவியை பெற்று சென்றிருந்தார். இதற்கு சிலகாலம் பின்னர் அவருடைய குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது; இவர்கள் எவ்வித தொந்திரவும் இல்லாமல் பியூனொஸ் எயர்சில் வாழ்ந்தனர்.

ஐஷ்மன் பற்றிய குறிப்புக்கள் ஜேர்மனிய அல்லது அமெரிக்க உளவுத் துறைகளால் பின்பற்றப்படவில்லை; ஏனெனில் ஹிட்லருடைய உள்துறை மந்திரியில் ஒரு வழக்கறிஞராகவும், நாஜிக்களுடைய இகழ்வான நியூரம்பெர்க் இனச் சட்டங்கள் பற்றிய வர்ணனையை எழுதியிருந்த ஹான்ஸ் க்ளோப்கே ஏனைய தகவல்களை அவர் வெளியிடக்கூடும் என்ற அச்சம் இருந்தது. போருக்கு பின்னர், க்ளோப்கே ஜேர்மன் அரசாங்கத்தில் உதவிச் செயலராக இருந்தார், அடினோவரின் அதிபர் பதவியின் முக்கியத்துவத்திற்கு "அனுபவம் வாய்ந்தவர்" போல (உண்மையில் "ஹிட்லரின் கட்சியைச் சேர்ந்தவராகத்தான்" இருந்தார்) கருதப்பட்டிருந்தார்.

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் Naftali கூறியதாவது: "ஐஷ்மன் கைது செய்யப்பட்டால், அதிபருடன் நெருக்கமாக ஒத்துழைப்பவர்கள் பற்றி என்ன கூறப்படும் என்ற கவலைகள் அடினோவர் அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் இருந்தன என்பதை புதிதாக வெளியிடப்பட்டுள்ள CIA தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன." அமெரிக்க உளவுத்துறை, ஐஷ்மனை தேடுவதில் "அரசின் காரணங்களுக்காக" பங்கு பெறவில்லை என்றும் அவர் கூறினார். ஐஷ்மன் முகத்திரை கிழிக்கப்பட்ட பின்னரும்கூட க்ளோப்கே பற்றிய எக்குறிப்பையும் மறைத்துவிட வேண்டும் என்று CIA அழுத்தம் கொடுத்திருந்தது.

ஐஷ்மனுடைய நினைவுக்குறிப்புக்களை Life இதழ் பெற்றதன் பின்னர் அப்பொழுது CIA இன் இயக்குனராக இருந்த Allen Dulles 1960 செப்டம்பர் 20, 1960ல் அலுவலக உட்குறிப்பு ஒன்றில் எழுதியதாவது: "முழு விவரங்களும் படிக்கப்பட்டன. நமது கோரிக்கையின் பேரில் ஐயத்திற்கு இடம்தரும் வகையில் க்ளோப்கே பற்றி குறிப்பிடப்படுவது Life இதழால் நீக்கப்பட்டது."

யார் இந்த க்ளோப்கே

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் வழக்கறிஞர் க்ளோப்கே வெளிநாட்டிற்கு ஐஷ்மன் போல் தப்பி ஓடிவிடவில்லை; மாறாக அரசாங்கத்தின் உதவிச் செயலர் பதவிக்கு உயர்ந்து, அதிபர் அடினோவரின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தார். அதிபரின் வலதுகரம் என்று கருதப்பட்டார்; பழைய நாஜிக்கள் பலர் ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசில் (மேற்கு ஜேர்மனி) முக்கிய பதவிகள் பெறுவதற்கு இவர் பொறுப்பாக இருந்தார். தான் பதவியில் இருந்த காலம் முழுவதும், அதாவது 1963 வரை அடினோவர், க்ளோப்கேக்கு உறுதுணையாக நின்றிருந்தார்.

ஒரு கத்தோலிக்க செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த க்ளோப்கே முதல் உலகப் போருக்கு பின்னர் சட்டக் கல்வி பயின்றார். 1922ம் ஆண்டு கலாநிதி பட்டத்தை பெற்று மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஆகென் என்ற இடத்தில் துணைப் போலீஸ் தலமை அதிகாரியானார். 1929ம் ஆண்டு அவர் பிரஷிய உள்துறை அமைச்சரகத்தில் பணியாற்ற தொடங்கினார்; 1932ம் ஆண்டை ஒட்டி ரைகின் உள்துறை அமைச்சரகத்தில் உயர்நிலையில் 1945 வரை செயலூக்கத்துடன் இருந்தார்.

இப்பதவித் தரத்தை ஒட்டி அவர் நியூரெம்பர்க் இனச் சட்டங்களுக்கு William Stuckart உடன் இணைந்து முதல் விரிவுரையை எழுதினார். 1939ம் ஆண்டு நாஜிக்கள் ஸ்லோவாக்கியாவை, ஒரு "பாதுகாப்பிற்குட்பட்ட எல்லைப்பகுதி" எனக்கூறி கைப்பற்றிய பின்னர், "யூதர்கள் பற்றிய சட்டத் தொகுப்பு" என்பதை அங்கு விரிவாக்கம் செய்வதில் ஈடுபட்டிருந்தார்; யூத மக்களின் சொத்துக்களை அபகரித்தல், அடக்குமுறையை ஏவிவிடுதல் ஆகியவற்றின் இடக்கரடக்கலான பெயரே இத்தொகுப்பு ஆகும்.

1945க்கு பின்னர் க்ளோப்கே நாஜி ஆட்சியுடன் நெருக்கமான உறவுகள் இருந்தன என்பதை மறுத்தார். ஆனால் இவர் ஒன்றும் அவர் கூறுவதுபோல் வெறும் "சக பயணியாக" இருந்ததில்லை. 1933ம் ஆண்டு ஹிட்லர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பிரஷிய உள்துறை அமைச்சரகத்தில் வேலைபார்த்து வந்தபோது, "யூதப் பெயர்களை மாற்றிக்கொள்வதன் மூலம் தங்களுடைய யூத தோற்ற மூலத்தை மறைப்பதற்கான யூதர்களுடைய முயற்சிகள் ஆதரிக்கப்படமாட்டாது" என்று க்ளோப்கே உத்தரவிட்டிருந்தார்.

போரில் தங்களுடைய உறவினர்களுக்காக அவரிடம் உதவி கோரியவர்கள் அவரால் கடுமையாக நிராகரிக்கப்பட்டதுடன் யூதர்கள் மற்றும் "போலக்குகளுக்கு" தொடர்ந்த ஆதரவு கொடுப்பவர்கள் அச்சுறுத்தவும் பட்டனர்.

ஆனால் நியூரம்பேர்க் இனச் சட்டங்கள் பற்றிய விளக்கவுரைக்கு, தான் ஆசிரியர் என்று கொண்டிருந்த பங்கை க்ளோப்கே மறுக்க முடியவில்லை; இந்நூல் C.H. Beck பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. (Stuckart/Globke: Kommentare zur Deutschen Rassengesetzgebung [Commentary on the German Race Legislation], Munich and Berlin, 1936). க்ளோப்கே எழுதிய பல கருத்துக்களில் கீழ்க்கண்ட குறிப்பும் உள்ளது; "தீவிரமாற்றம் வருவதற்கு முன்னர் (ஹிட்லர் பதவிக்கு வருவது) பல தசாப்தங்களில் தூய இரத்தம் பற்றிய உணர்வில் ஏற்பட்ட வியத்தகு சரிவு, சமூகத் தலையீட்டிற்கான அவசரத் தேவையாய் தோன்றுகிறது." "ஜேர்மனிய வாழ்வு அமைப்பில் தங்களுடைய செல்வாக்கு நிரந்தரமாகப் போய்விட்டது என்ற உண்மையை யூதர்கள் நன்கு அறிந்து எதிர்ப்பின்றி பணிந்து செல்ல வேண்டும்." என்றும் அவர் எழுதினார்.

யூதத் தன்மைகளில் தரங்களை பற்றி வகைப்படுத்தியும் தன்னுடைய விளக்கவுரையில் க்ளோப்கே எழுதியிருந்தார். "ஒரு முழு யூத, மற்றும் அரை யூதத் தாத்தா/பாட்டிகளை கொண்ட எட்டில் மூன்று பங்கு யூதர், இரு இனப் பெற்றோருக்கு பிறந்தவராக முழு யூதத் தாத்தா/பாட்டியை உடையவராக கருதப்படுவார்; எட்டில் ஐந்து பங்கு யூதர் இரண்டு முழு யூத தாத்தா/பாட்டிகளை கொண்டு மற்றும் ஒரு அரை-யூத தாத்தா/பாட்டியை கொண்டிருந்தாலும், இரு முழு யூத தாத்தா/பாட்டிகளை கொண்ட இரு இனப் பெற்றோருக்கு பிறந்தவவராகத்தான் கருதப்படுவார்."

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், தான் சட்டங்களை பற்றி வெறும் விரிவுரைதான் எழுதியிருந்ததாக க்ளோப்கே வலியுறுத்தி, அதன் வளர்ச்சி அல்லது செயல்படுத்தப்பட்ட முறைக்கு பொறுப்பல்ல என்றும் கூறினார். இது ஒரு பொய்யாகும்.

இவருடைய உயரதிகாரியான நாஜி உள்துறை மந்திரி Wilhelm Frick 1946ம் ஆண்டு நியூரம்பெர்க் விசாரணையில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்; அவர் க்ளோப்கே பற்றிக் கீழ்க்கண்ட பாரட்டுரையை 1938ல் தெரிவித்திருந்தார்: "மூத்த அரசாங்க ஆலோசகரான க்ளோப்கே ஐயத்திற்கு இடமின்றி என்னுடைய அமைச்சரகத்தில் இருக்கும் மிகத் திறமையான, திறனுள்ள அதிகாரிகளில் ஒருவர் ஆவார்." Frick மேலும் கூறியதாவது: "கீழேயுள்ள சட்டங்களை விரிவுபடுத்தியதில் அவர் மகத்தான பங்கை கொண்டிருந்தார். அ) 1935, செப்டம்பர் 15ல் இயற்றப்பட்ட ஜேர்மன் இரத்தம் மற்றும் ஜேர்மனிய கெளரவம் பாதுகாக்கப்பட வேண்டியதற்கான சட்டம்; ஆ)18.10.1935ல் வெளியிடப்பட்ட ஜேர்மனிய மக்களின் மரபியல் நலம் பாதுகாப்புச் சட்டம்; இ) 3.11.1937ல் கொண்டுவரப்பட்ட தனிநபர்களின் குடியுரிமைத் தகுதிச் சட்டம்; ஈ) முதல் பெயர்கள், குடும்பப் பெயர்கள் மாற்றுவது குறித்த சட்டம்."

அடினோவருடைய வலது-கர மனிதர்தான் சட்டங்கள் விரிவுபடுத்தப்படுதல், இயற்றப்படுதல் செயல்படுத்தப்படுதல் என்பவற்றில் தொடர்பு கொண்டிருந்தார். இதன் விளைவுதான் "யூதர்களின் பிரச்சனைக்கான இறுதித் தீர்வு" ஆகும், அதாவது அவுஸ்விட்ஸ் மற்றும் பல இடங்களில் நடைபெற்ற இன அழிப்பு ஆகும்.

CIA, அடினோவர் அரசாங்கம் மற்றும் நாஜிக்கள்

ஆனால் பலருள் ஒருவர்தான் க்ளோப்கே என்பதை அறிய வேண்டும். ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசில் தங்களுடைய வேலைகளில் தொடர்ந்திருந்த மூன்றாம் ரைகின் நாஜிக் கட்சி உறுப்பினர்கள், SS பிரிவை சார்ந்தவர்கள், அரசாங்க வழக்கறிஞர்கள், அலுவலர்கள், நீதிபதிகள் என உயர் பதவியில் இருந்தவர்களுடைய பட்டியல், கிட்டத்தட்ட இடையூறின்றி, பல நூல் தொகுப்புக்களாக போகும். இங்கு சிலவற்றைத்தான் கொடுக்கிறோம்.

1938 ல் இருந்து 1945 வரை Deutche Bank நிர்வாகக் குழு உறுப்பினராக Hermann Josef Abs இருந்தார். பல மற்ற தொடர்புகளுடன்கூட, இவர்தான் யூதர்களுடைய வணிகம் மற்றும் வங்கிகளை "ஆரியமயமாக்குதல்", ("Arianisation" அபகரித்தல்) என்பதற்கு கூட்டுப் பொறுப்பை கொண்டிருந்தார். போருக்கு பின் இவர் ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசை நிறுவுவதில் இவர் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தார்; 1948 க்கும் 1952க்கும் இடையே மறுசீரமைப்பு கடன் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையிலும், அதன் பின்னர் கொன்ராட் அடினோவருக்கும் நிதிய ஆலோசகர் என்னும் முறையிலும், Deutsche Bank நிர்வாகக் குழு உறுப்பினர் என்னும் முறையிலும் இவருடைய பங்கு இருந்தது.

நிர்வாக வல்லுனராக இருந்த Reinhard Höhn என்பவர் நாஜிக்கட்சி மற்றும் SS ல் 1933ல் இருந்து உறுப்பினராக இருந்தார். 1950, 1960களில் இவர் Bad Harzburg இல் தான் நிறுவியிருந்த "மூத்த பொருளாதார உயர் அலுவர்கள் பயிற்சிக்கூடத்தில் (Academy for Senior Economic Personnel), 600,000 வங்கி மேலாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.

ஹிட்லரின் கீழ் செல்வாக்கு பெற்றிருந்த அரசியலமைப்பு சட்ட வழக்குரைஞராக இருந்த Theodor Maunz, போருக்குப் பிந்தைய ஜேர்மனிய அரசியலமைப்பு பற்றி முதல் விளக்கவுரையை எழுதினார். தன்னுடைய மாணவரான Roman Herzog உடன் இணைந்து அவர் இதை எழுதினார்; அம்மாணவர் பின்னர் ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசின் ஜனாதிபதியானார். இந்த Maunz மற்றும் Herzog இன் விளக்கவுரை இன்றளவும் மேற்கோளிடப்பட்டுவருகிறது. ஹிட்லரின் பெரும் ஆதரவாளர் என்று தன்னை பறை சாற்றிக்கொண்ட, ஜேர்மனிய மக்கள் சங்கத்தை நிறுவி (German National and Solidiers' Newspaper) என்பதையும் வெளியிட்ட Gerhard Frey-க்கு Maunz தான் சட்ட ஆலோசனைகளை கூறினார். இந்த புதிய நாஜிச செய்தித்தாளுக்கு Maunz பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

போருக்கு பிந்தைய முதல் ஜேர்மன் கூட்டாட்சி பாராளுமன்றம் கூடியபோது, அதன் பிரதிநிதிகளில் பாதிக்கும் மேலானவர்கள் ஹிட்லரின் NSDAP (நாஜிக் கட்சி) இன் உறுப்பினர்களாக 1945க்கு முன் இருந்தவர்கள் ஆவர்.

1952 ம் ஆண்டு வெளியுறவுத் துறையில் இருந்த மூத்த அதிகாரிகளில் மூன்றில் இரு பங்கு முன்னாள் NSDAP உறுப்பினர்கள் ஆவர். உட்பிரிவுத் தலைவர்களில் ஐந்தில் நான்கு பங்கினர்களும் அக்கட்சியை சார்ந்தவர்களேயாவர்.

ஒரு முன்னாள் NSDAP உறுப்பினரும் Josef Goebbels இன் பிரச்சாரத்துறை அமைச்சரகத்தின் முக்கிய அதிகாரியுமான Kurt Georg Kiesinger கூட்டாட்சியின் அதிபராக 1966ல் இருந்து 1969 வரை இருந்தார். NSDAP மற்றும் SA (பழுப்புச் சட்டையினர்) உறுப்பினராக இருந்த Karl Carstens கூட்டாட்சி தலைவராக 1979ல் இருந்து 1984 வரை இருந்தார்.

1984ல் இருந்து 1994 வரை கூட்டாட்சிக் குடியரசுத் தலைவராக இருந்த Richard von Weizacker தன்னுடைய சட்டத் தொழிலை தன்னுடைய தந்தை எர்லெஸ்ட்டிற்காக வாதாடிய சக வழக்கறிஞர் என்னும் முறையில் நியூரம்பெர்க் போர்க்குற்ற விசாரணைகளின்போது ஆரம்பித்தார். Ernst von Weizsäcker SS பிரிவுத் தலைவராகவும், 1939ல் இருந்து 1943 வரை வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில் அரசாங்க உதவிச் செயலராகவும் இருந்திருந்தார். அவருக்கு பிரெஞ்சு யூதர்களை ஆவுஸ்விட்சிற்கு வெளியேற்றியதில் தீவிரமாய் சம்பந்தப்பட்டிருந்ததற்காக ஏப்ரல் 14, 1949 அன்று ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது.

போருக்கு பின்னர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் (CDU) உறுப்பினராகவும் முன்பு NSDAP உறுப்பினராகவும் இருந்த Hans Filbinger, பாடன் வூர்ட்டெம்பேர்க்கின் பிரதம மந்திரிப் பதவியில் இருந்து 1978ல் இராஜிநாமா செய்தார்: இதற்குக் காரணம் இரண்டாம் உலகப் போரின்போது பல விசாரணைகளிலும் இவர் நீதிபதியாக இருக்கும்போது மரண தண்டனை வழங்கினார் என்பதேயாகும். பாடன் வூர்ட்டெம்பேர்க்கில் இருந்த CDU இதற்கு பின் அவரை 1979ல் ஒரு கெளரவத் தலைவராக நியமித்தது.

முதலாம் உலகப் போரில் இராணுவ சிப்பாயாக இருந்த Hans Speidel. ஹிட்டலரின் கீழ் Wehrmacht இல் ஒரு மேஜர் ஜெனரலானார்; போருக்கு பிந்தைய ஜேர்மனியில் இராணுவம் நிறுவப்படுவதில் அவர் முக்கிய பங்கை கொண்டிருந்தார். மிக அதிக கெளரவங்களை பெற்ற அதிகாரியான இவர் 86வது வயதில் இறந்தார். இவருக்கு 1944ம் ஆண்டு Knight's Cross கொடுக்கப்பட்டு நான்கு நட்சத்திர தளபதி என்னும் உயர் தகுதியும் 1957ல் கொடுக்கப்பட்டது.

அமெரிக்க அரசாங்கம் மற்றும் அதன் உளவுத்துறையின் ஒத்துழைப்பு அல்லது குறைந்த பட்சம் ஒப்புதல்கூட இல்லாவிடின் அடினோவர் அரசாங்கம் இத்தகைய முறையில் நடந்து கொண்டிருக்க முடியாது. அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்து புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பக்கங்கள், அமெரிக்க நிறுவனங்களின் பணி பற்றியும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. குளிர்யுத்த காலத்தில், முன்னாள் நாஜிக்கள் ஏராளமானவர்களை கொண்ட உளவு வலைப்பின்னலை அமெரிக்கா பராமரித்து வந்தது என்பதை இந்த ஆவணங்கள் தெளிவாக்குகின்றன.

இதில் பெரும் முக்கியத்துவம் கொண்டிருந்த நியமனம் ஹிட்லரின் கிழக்கு அணியில் இராணுவத்தின் உளவுத்துறை தலைவராக இருந்த Reinhard Gehlen தான். 1942ல் இருந்து 1945 வரை இராணுவ படைகளின் உளவுத்துறையை அவர்தான் வழிநடத்தியிருந்தார். போர் முடிந்தவுடன், Gehlen மற்றும் SS அல்லது SD (SS security service) ஆட்கள் அமெரிக்க உளவுத்துறையின் கீழ், அதாவது CIA க்கு முன்னோடி அமைப்பான மூலோபாயப் பணிகள் அலுவலகம் (OSS) பணிகளில் அமர்த்தப்பட்டனர்.

ஜேர்மன் வெளிநாட்டு இரகசிய சேவையை, சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக வளர்க்கும் பணி Gehlen க்கு கொடுக்கப்பட்டது. "ஒருவர் கம்யூனிச எதிரியாக இருக்கும் வரை எந்தப் பன்றியும் கூட உபயோகிக்கப்படலாம் என்பது முக்கியம்" என்று சோவியத் ஒன்றியம் பற்றிய CIA செயல்களுடைய தலைவரான Harry Rositzke எழுதினார். "எம்முடன் இணைந்து போராடப் பாடுபடும் சக உறுப்பினர்களின் கடந்த காலம் பற்றி அதிக ஆராய்ச்சி தேவையில்லை." என்றும் அவர் எழுதினார்.

இவ்வாறு ஜேர்மனியின் வெளிநாட்டு இரகசிய சேவை நிறுவனம் (BND) நாஜிக்களின் உளவுத் துறையில் இருந்து முழுப்பிரிவுகளையும் இணைத்துக் கொண்டது.

ஆரம்பத்தில் அடினோவர் அரசாங்கம் Gehlen உடனான CIA ஒத்துழைப்பு பற்றி கூறப்படவில்லை; அவரோ புதிய கூட்டாட்சி அரசுடன் முதல் தொடர்பை 1950 இறுதியில்தான் கொண்டிருந்தார். ஹான்ஸ் க்ளோப்கேதான் தளபதியுடன் முதல் அதிகாரபூர்வ தொடர்பை கொண்டிருந்தார்; தளபதியோ தன்னுடைய உதவியாளர்களுடன் மூனிச்க்கு அருகில் உள்ள புல்லாக்கில் வேலைபார்த்து வந்தார். "உடனடியாக எனக்கு ஒரு நல்ல தொடர்பு கிடைத்தது; என்னுடைய அமைப்பின் முக்கியத்துவத்தை சரியாக அவர் உணர்ந்திருந்தார் என்பது எனக்கு தெளிவாயிற்று" என்று க்ளோப்கேயுடனான முதல் சந்திப்பு பற்றி Gehlen எழுதினார்.

1968 மே மாதம் பதவியில் இருந்து ஓய்வுபெறும் வரை BND க்கு Gehlen தலைமை தாங்கினார். 1970ல் கூட BND ஊழியர்களில் 25ல் இருந்து 30 சதவிகிதம் வரை முன்னாள் SS, கெஸ்டாபோ மற்றும் நாஜி உளவுத் துறையின் உறுப்பினர்களாக இருந்தனர்.

எனவே 1960ல் க்ளோப்கே பற்றி மூடிமறைப்பதில் CIA ஆர்வம் கொண்டிருந்தது இயல்பானதுதான். "க்ளோப்கேயுடன் மிக நெருக்கமாக ஒத்துழைத்திருந்த CIA, மேற்கு ஜேர்மனியர்கள் ஐஷ்மன் தொடர்பானதில் தங்கள் நபரை பாதுகாப்பதற்கு உதவினர்" என்று Naftali எழுதியுள்ளார்.

அமெரிக்க செய்தி ஊடகத்தின் நிருபரால் ஜனவரி 1963ல் ஹான்ஸ் க்ளோப்கே போன்ற நபர்களை தன்னுடன் நெருக்கமாக ஒத்துழைக்கவிடுவது ஒரு தவறில்லையா என்று அடினோவர் கேட்கப்பட்டார். அடினோவர் கொடுத்த விடையாவது: "இன்னும் பல பெயர்கள் பற்றி இந்தக் கேள்வியை, அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய பிரியமான ஐயாக்களே, இதைக் குறித்துக் கொள்ளுங்கள்: ஒரு ஜனநாயக அரசை வளர்ப்பதற்கு திறமையான, நம்பிக்கையான நபர்கள் வேண்டும். சட்ட ஒழுங்கிற்குள், உரிமையையும் அறநெறியையும் உத்திரவாதப்படுத்தும், மக்களுடைய விருப்பம், தயார்நிலை மற்றும் திறமைகள் இவற்றால்தான் ஜனநாயகம் உயிர்வாழ்கிறது."

இதுதான் இன்றளவும் ஜேர்மன் அரசாங்கங்களின் பார்வையாக உள்ளது போல் தோன்றுகிறது. வரலாற்றாளர் Naftali விமர்சிப்பதாவது: "சர்வதேச வரலாற்றை ஒரு புறத்தில் இருந்து மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது கடினமாகும். கூட்டாட்சிக் கூடியரசு இது பற்றிய தகவல்களை வெளியிட மறுப்பது உண்மையான கேவலமாகும். ஐஷ்மன் வழக்கை பொறுத்தவரையில் BND கோப்புக்களை பேர்லின் வெளியிட ஏன் விரும்பவில்லை என்று எனக்குப் புரியவில்லை. வெளியிட்டால் என்ன? மேற்கு ஜேர்மன் அரசாங்கம் ஐஷ்மன் பற்றி என்ன தகவலை கொண்டிருந்தது என்பது பற்றி அறிய நான் ஆவலாக உள்ளேன்; அடினோவருக்கும் க்ளோப்கே க்கும் இடையே மிக உயர்மட்ட அளவில் ஐஷ்மனுக்கு என்ன நடக்க வேண்டும் என்ற முடிவு எப்படி எடுக்கப்பட்டது என்பது பற்றியும் அறிய ஆவல்தான்."

ஜேர்மன் அரசியல் ஸ்தாபனத்திற்கு ஜேர்மனிய வரலாற்றின் இந்த அத்தியாயம் மீண்டும் பகிரங்கமாக விவாதிக்கப்படுவது பற்றி அக்றை இல்லை. ஐஷ்மன், க்ளோப்கே பற்றிய புதிய அம்பலங்கள் ஜேர்மன் செய்தி ஊடகத்தில் அதிக இடம் பெறவில்லை. அதுவும் ஜேர்மனிய அரசாங்கம் மீண்டும் உலகம் முழுவதும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், 60 ஆண்டுகள் "ஜனநாயகத்துடனான அனுபவங்களின் அடிப்படையில்", "ஒரு ஆரோக்கியமான தேசபக்தியை" வளர்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அவை அனைத்தும் மிகவும் தொந்திரவிற்குரியதாக இருக்கின்றன.

Top of page