World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : கிழக்கு தீமோர்

Oppose Australia's neo-colonial occupation of East Timor

கிழக்கு திமோரில் ஆஸ்திரேலியாவின் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பை எதிர்க்கவும்

Statement by the Socialist Equality Party (Australia)
1 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஹோவர்ட் அரசாங்கம் மிகச் சிறிய அண்டை நாடான கிழக்கு திமோரில் மேற்கொண்டுள்ள இராணுவத் தலையீட்டை சோசலிச சமத்துவக் கட்சி ஐயத்திற்கு இடமின்றி வன்மையாக எதிர்க்கிறது. கவச வண்டிகள், போர்க்கப்பல்கள், தாக்கும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வலிமையான ஆயுதங்கள் ஏந்திய இராணுவப் படையினருடன் அனுப்பி வைத்துள்ளது, ஆசிய பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை காக்கும் நோக்கத்தை கொண்ட புதிய காலனித்துவ அச்சுறுத்தல் மட்டும் ஆக்கிரமித்தலின் அப்பட்டமான செயலாகும்.

1,300 துருப்புக்கள் ஏற்கனவே கிழக்கு திமோரின் தலைநகரமான டிலியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதுடன், நாட்டின் சிதைவுற்ற நிலையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு பதிலாக அமர்த்தப்பட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பில் நன்கு தீட்டப்பட்ட வழிமுறைகளுக்கு மாறும்வகையில், ஆஸ்திரேலிய இராணுவம் இராணுவச் சட்டத்தை திணித்துள்ளது. கிழக்கு திமோரின் அதிகாரிகளிடம் கலந்து கொள்ளாமல் கூட எவரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் பரந்த அதிகாரங்களை இராணுவத்தினர் கொண்டிருக்கின்றனர்.

தன்னுடைய நலன்களுக்கு இணங்கி, இசைந்து நடக்கும் வேறு ஒருவர் தற்பொழுதுள்ள பிரதம மந்திரி மாரி ஆல்காட்டிரிக்கு பதிலாக இருத்தப்பட வேண்டும் என்ற உண்மையை கான்பெரா மறைக்க இயலவில்லை. கிழக்கு திமோர் "நன்கு ஆட்சி செய்யப்படவில்லை" என்று ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி ஹோவர்ட் பகிரங்கமாக அறிவித்துள்ளார். முர்டோக்கின் Australian நாளேடு மே 30ம் தேதி எழுதியுள்ள தலையங்கம் ஒன்றில், ஆல்காட்டிரி மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை, திமிர்பிடித்தவர், ஊழல் மிகுந்தவர், ஒரு மார்க்சியவாதியும்கூட என்று அரக்கத்தனமாக சித்தரித்ததுடன், நாட்டின் உட்பகை, வன்முறை, பூசல்களுக்கு அவர்தான் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, ஒரு புதிய பிரதம மந்திரி பதவியில் இருத்தப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது.

ஆல்காட்டிரி அரசாங்கத்தால்தான் ஆஸ்திரேலிய படைகள் பெயரளவிற்கு "அழைக்கப்பட்டனர்" என்ற உண்மை இருந்தபோதிலும்கூட, "நடுநிலைமை" என்ற மறைப்புத் திரை மோசடியின்கீழ் ஹோவர்ட் அரசாங்கம், ஆல்காட்டிரி அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்தி எழுச்சி செய்துள்ளவர்களுக்கு எதிராக அதற்கு ஆதரவை கொடுக்கவில்லை. திரைக்கு பின்னால், ஆஸ்திரேலியா கிழக்கு திமோரின் ஜனாதிபதி ஜனனா குஸ்மாவோ, ஆல்காட்டிரியை ஒதுக்கி வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதை "முற்றுகை நிலை" என அறிவித்த வகையில் ஆதரவு கொடுத்துள்ளதோடு, பாதுகாப்புப் படைகள் மீதும் முழுக் காட்டுப்பாட்டைக் கொள்ள முறைபட்டுள்ளது. கான்பெராவைப் பொறுத்தவரையில் ஆல்ட்காட்டிரி வீழ்த்தப்பட வேண்டுமா என்பது பிரச்சினையாக இல்லாமல் எப்பொழுது அகற்றப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினையாக உள்ளது.

ஆல்காட்டிரி ஒன்றும் மார்க்சிசவாதி அல்ல என உறுதியாகக் கூறலாம். 2002ம் ஆண்டு முறையாக விடுதலை பெற்றபின், டிலியில் உள்ள சிறிய ஆளும் உயரடுக்கின் மத்தியில் உள்ள அவரது போட்டியாளர்களைவிட இவர் ஒன்றும் சாதாரண கிழக்கு திமோரிய மக்களின் விழைவுகளையும், நலன்களையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பார்வையில், ஆல்காட்டிரியின் பெரும் பாவச் செயல் அவர் திமோர் கடலின் பெரும் எண்ணெய் எரிவாயு இருப்புக்களை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்த விரும்பும் கான்பெராவின் கோரிக்கைகளுக்கு உடனடியாக பணிந்து நிற்காமல் இருப்பதுதான். அதே நேரத்தில் அவர் மற்ற இடங்களில் இருந்து, குறிப்பாக அதன் முந்தைய காலனித்துவ சக்தியாக இருந்த போர்த்துகல்லிடம் இருந்து பொருளாதார, அரசியல் ஆதரவைக் கோரிக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக ஐ.நாவின் இருப்பு இத்தீவில் பெரிதும் குறைந்து வரும் நிலையில், கிழக்கு திமோரிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்குப் பதிலாக, ஆரம்பத்தில் இருந்தே ஹோவர்ட் அரசாங்கத்தின் இராணுவத் தலையீடு கிழக்கு திமோரில் தன்னுடைய ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்கள் ஊடுருவிவிடாமல் இருக்க வேண்டும் என்ற அக்கறைகளைத்தான் காட்டியுள்ளது; அதுவும் ஊதியம் மற்ற நிலைகள் பற்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட வீரர்கள் 600 பேரை மார்ச் மாதம் ஆல்காட்டிரி பதவி நீக்கம் செய்ததில் இருந்து அரசியல் பதட்டங்கள் கடுமையாக கூர்மை அடைந்துள்ளன. ஏப்ரல் 28 அன்று அரசாங்க சார்புடைய போலீசார் டிலியில் "கிளர்ச்சிசெய்த" வீரர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள்மீது அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமுற்றனர்.

கிழக்கு திமோரிய பாதுகாப்புப் படைகளுக்குள் உட்பிரிவு பூசல்களை அதிகரிப்பதில் முக்கிய பங்கு, ஆஸ்திரேலியாவில் முன்னாள் புகலிடம் கொண்டிருந்து, அதன் தேசிய பாதுகாப்புக் கூடத்தில் பயின்ற மேஜர் ஆல்ப்ரெடோ ரெய்னடோ என்ற நிழலுரு நபர் கொண்டுள்ளார்; இவர்தான் "எதிர்ப்பாளர்களின் தலைவர்" என்று வெளிப்பட்டுள்ளார். அரசாங்கச் சார்புடைய வீரர்களுக்கும் "எதிர்ப்பு" படைவீரர்களுக்கும் இடையே பூசல்கள் தீவிரமான வகையில், புஷ் நிர்வாகத்தின் ஆதரவை பெற்ற ஹோவர்ட் அரசாங்கம், வெளிவந்த பூசல்களை பயன்படுத்தி மே 12 அன்று திமோர் கடல் பகுதிக்கு இரண்டு போர்க்கப்பல்களையும் மற்ற படைகளையும் அனுப்பி வைத்தது. ஆல்காட்டிரி அரசாங்கத்திற்கு இது பற்றிய தகவல்கூட கொடுக்கப்படவில்லை.

கிழக்கு திமோர் அரசாங்கத்திற்கு உதவுவதற்கு துணைநிலை போலீசாரை அனுப்பக் கருதியிருந்த, மற்ற சக்திகள், குறிப்பாக போர்த்துகல்லின், தலையீட்டை தடுக்க வேண்டும் மற்றும் ஆல்காட்டிரியின் தலைமைக்கு எதிராக ஒரு சவால் பெருகிக் கொண்டிருத்த, ஆளும் பிரேடிலின் கட்சியின் பேரவைக்கு மே 17ல் இருந்து 19 வரை அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதுதான் கான்பெராவின் நோக்கமாகும்.

தலைமையை சவாலுக்கு அழைக்கும் முயற்சி பொறிந்தவுடன், ஆஸ்திரேலிய தலையீட்டிற்கான தயாரிப்புக்கள் உயர்ந்த வகையில் முடுக்கப்பட்டன. கான்பெரா மற்றும் குஸ்மாவோ, வெளியுறவு மந்திரி ஜோஸ் ரமோஸ் ஹோர்ட்டா ஆகியோர் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக மே 24ம் தேதி, ஆல்காட்டிரி இறுதியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா மற்றும் போர்த்துக்கல் நாடுகளைப் படைகளை அனுப்புமாறு முறையாகக் கோரிக்கை விடுத்தார்.

எந்த அடிப்படையில் படைகள் வரவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பது பற்றி முறையான உடன்பாட்டிற்கு கூட காத்திராமல், ஹோவர்ட் "மிகச் சடுதியில்" இராணுவம் அங்கு சென்று கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். சில நாட்களுக்குள்ளேயே ஒரு முழு வடிவமைப்பு கொண்ட ஆஸ்திரேலிய படைகளும் மலேசியா, நியூசிலாந்தில் இருந்து முதற் படைப் பிரிவுகளும் நாட்டை அடைந்துவிட்டன. டிலித் துறைமுகத்தில் போர்க்கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நின்றன; கறுப்பு பருந்து ஹெலிகாப்டர்கள் ஆகாயத்தில் வட்டமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தொடங்கின.

"சுதந்திரம்" என்ற கேலிக்கூத்து

கிழக்கு திமோர் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, இந்தோனேசியாவில் இருந்து பாதிக்கும் மேலான தீவுப்பகுதி "சுதந்திரத்தை அடைந்துவிட்டது" என்பதால் ஒரு புதிய சமாதான, செழிப்பு, ஜனநாயக சகாப்தத்தை கொண்டுவந்துவிட்டது என்று 1999ல் தன்னலத்திற்காக உற்சாகத்துடன் கூறப்பட்ட கருத்துக்களில் இருந்த அபத்தத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறை உள்ள சகாப்தத்தில் இந்த மிகச் சிறுநாடு பல உலக, வட்டார சக்திகள், பெரு வணிக நிறுவனங்கள், உலக வங்கி, IMF போன்ற சர்வதேச நிதிய அமைப்புக்கள் ஆகியவற்றில் இருந்து ஒருக்காலும் "சுதந்திரமாக" இயங்கமுடியாது.

இந்த முன்னாள் போர்த்துகீசிய காலனி 1975ல் சுகர்ட்டோவின் சர்வாதிகார படையெடுப்பை எதிர் கொண்டதை அடுத்து, கிழக்கு திமோரிய மக்கள் இந்தோனேசிய அடக்குமுறைக்கு எதிரான தைரியமான போராட்டத்தை தொடங்கினர்; இதில் கிட்டத்ட்ட 200,000 மக்கள் மடிந்து போயினர். ஆயினும், குஸ்மாவோ போன்ற கிழக்கு திமோரிய தலைவர்கள் வளர்க்க விரும்பும் மற்றும் ஆஸ்திரேலிய, சர்வதேச மத்தியதர வர்க்க தீவிரப்போக்கினரால் ஆதரிக்கப்படும் "சுதந்திரம்" பற்றிய முன்னோக்கு அரசியல் முட்டுச்சந்து என நிரூபிக்க இருந்தது. அது கிழக்கு திமோர் மற்றும் இராணுவ ஆட்சிக்கு எதிராக இந்தோனேசிய தொழிலாளர்கள் கூட்டுப் போராட்டம் ஒன்றை நடத்துவதை தடுத்ததுடன், 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கமும் போர்த்துகீசிய அரசாங்கமும் இப்பகுதியில் ஆதிக்கம், செல்வாக்கு இவற்றை நிறுவுவதற்கு போட்டியிட்டபோது அவற்றின் கைகளிலும் நேரடியாக பயன்பட்டன.

இதன் பின் தொடர்ச்சியான அரசாங்கங்கள் கூட்டணி அரசாங்கமாயினும் தொழிற்கட்சி அரசாங்கமாயினும், 1975 சுகார்த்தோ தீவைக் கைப்பற்றியதற்கு ஆதரவைக் கொடுத்ததுடன், 1978ல் திமோர் கடல் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு ஈடாக ஆஸ்திரேலியா கிழக்கு திமோரை இந்தோனேசியா இணைத்துக் கொண்டதை உலகத்திலேயே அதிகாரபூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு என்றும் ஆயிற்று. 1998ல் சுகார்த்தோ வீழ்ச்சியுற்றபின்னரும்கூட, ஹோவர்ட் அரசாங்கம் கிழக்கு திமோரில் வாக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்த்த ஜாகர்த்தாவிற்கு ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் போர்த்துக்கல் வாக்கெடுப்பிற்கு ஐ.நாவின் ஊக்கத்தையும் பெற்றது தெளிவானவுடன்தான் கான்பெரா தன் வழியை மாற்றிக் கொண்டது. திமோர் இடைவெளி உடன்படிக்கை ஜாகர்த்தாவுடன் கொள்ளப்பட்டதில் ஆஸ்திரேலியா பெற்றிருந்த எண்ணெய், எரிவாயு உரிமைகள் "சுதந்திரமான" கிழக்கு திமோர் போர்த்துகீசிய செல்வாக்கிற்குள் இருக்கும்போது அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று உண்மைநிலை இதையொட்டி வெளிவந்தது. வாஷிங்டனில் உள்ள கிளின்டன் நிர்வாகத்தின் உதவியுடன், ஹோவர்ட் அரசாங்கம் வியட்நாம் போருக்குப் பின்னர் வெளிநாடு செல்லும் பெரும் இராணுவ அணிதிரட்டலை மேற்கொண்டது.

1999 செப்டம்பரில் நிகழ்ந்த தலையீடு, பனிப்போர் முடிவடைந்ததை அடுத்து வளர்ந்து வரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளால் தூண்டப்பட்ட இராணுவவாதத்தின் சகாப்தத்தின் ஒரு பகுதியாகும், அதிலும் குறிப்பாக, ஈராக்கிற்கு எதிராக 1990-91ல் அமெரிக்க தலைமையிலான முதல் வளைகுடாப் போரில் இது சுட்டிக் காட்டப்பட்டது. இதற்குச் சில மாதங்கள் முன்புதான் சேர்பியாவிற்கு எதிராக NATO போர் தொடுத்ததில் இருந்து ஹோவர்ட் ஊக்கம் பெற்றார்; அப்போரில் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிளேயரும் முன்னாள் யூகோஸ்லாவிய பகுதியின் தேசிய இறைமையை மிதித்துத் தள்ளியதை நியாயப்படுத்தியதற்கு "அறவழி ஏகாதிபத்தியம்" என்ற பதாகையின்கீழ் செயல்பட்டிருந்தனர்.

கோசோவிய அல்பேனியர்கள் பெரும் படுகொலைக்கு உட்பட்டது, ஏராளமாக வெளியேறியது ஆகியவற்றை பற்றிய அப்பட்டமான பொய்களை பயன்படுத்தி, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நாடுகளும் சேர்பியாவில் இருந்து கோசோவோவை பிரிப்பதற்கு நிகழ்த்திய கொள்ளைமுறை போரைப்பற்றிய பொதுமக்கள் கருத்தையும் மிதித்துத்தள்ளினர். கிழக்கு திமோரில் கிளின்டன் நிர்வாகத்தின் ஆதரவுடனும் ஐ.நா.வின் அத்தி இலை மறைப்பு போன்ற ஆதரவினாலும், சுதந்திரம் பற்றிய வாக்கெடுப்பிற்கு பின்னர் இந்தோனேசிய ஆதரவைக் கொண்ட போராளிகள் ஏற்படுத்திய வன்முறையை, ஹோவர்ட் அராசங்கம் கிழக்கு திமோரிய மக்களை "பாதுகாக்கிறோம்" என்ற மோசடி போலிக் காரணம் காட்டி தன் படைகளை அனுப்பிவைத்ததை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டது.

தொழிற்கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் ஆதரவு உட்பட ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறையின் உற்சாக ஆதரவை முற்றிலும் சார்ந்துதான் கிழக்கு திமோரை "விடுவிப்பவர்" என்று காட்டிக் கொள்ளுவதற்கான ஹோவர்டின் திறன் அமைந்திருந்தது. NATO தொடுத்த போரில் இருந்தது போலவே முன்னாள் மத்தியதர வர்க்க தீவிரப்போக்கினர், அதிலும் குறிப்பாக ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் Green Left Wekly ஆகியவைதான் கிழக்கு திமோரில் ஆஸ்திரேலிய இராணுவத் தலையீடு வேண்டும் என்பதற்கு உரத்த குரல் கொடுத்து ஆர்ப்பரிப்பவர்களாக இருந்தனர்; ஏற்கனவே தன்னுடைய அரசாங்கம் எடுத்துவிட்ட முடிவை ஹோவர்ட் செயல்படுத்துவதற்கு "அழுத்தம்" கொடுக்கும் வகையில் "படைகளை செலுத்துக" என்ற ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

Fretilin தலைமையிலான (National Council of Timorese Resistance -CNRT) திமோரிய எதிர்ப்பு தேசியக் குழு என்னும் அமைப்பின் அரசியல் திவால்தன்மையையும் இந்தத் தலையீடு அம்பலப்படுத்தியது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்பதை முன்னோக்காக கொள்ளாமல், பெரும் சக்திகள் ஒரு "சுதந்திரமான" முதலாளித்துவ அரசை ஏற்படுத்துவதற்கு ஊக்கம் தரவேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்; இதன்பின் அத்தகைய அரசாங்கம் செயல்படும் என்பது அவர்கள் கருத்தாகும். 1999ல் நிகழ்ந்த இந்தோனேசிய ஆதரவுப் போராளிகள் போராட்டத்தின் உச்சக் கட்டத்தில் குஸ்மாவோ தன்னுடைய Falintil கொரில்லா போராளிகளை பதிலடி கொடுக்க வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினார்; இதன் மூலம் படுகொலைகள் தடையின்றி நடத்தப்பட்டன. CNRT தலைவர்கள் வெளிப்படையான உள்நாட்டுப் போர் நிலை என்பது மேற்கு சக்திகளை வராமல் செய்துவிடும் என்று கணக்குப் போட்டனர்; ஆனால் அவர்களுடைய கருத்தின்படி பாதுகாப்பற்ற மக்களை கொலைசெய்தல், அவர்களுடைய கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றை அழித்தல் என்ற நிலை மேற்கின் தலையீட்டிற்கு உதவும் என்பதாகும்.

ஆஸ்திரேலிய தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பு, மற்றும் அது நிறுவிய கிழக்கு திமோருக்கான இடைக்கால நிர்வாகம் ஆகியவற்றை ஐ.நா. புனிதப்படுத்தியது; கிழக்கு திமோர் விவகாரங்களின் அனைத்து கூறுபாடுகளையும் நடத்தும் காலனிய பாதுகாவல் அரசாங்கம் என்று அதற்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. ஐ.நா. நிர்வாகியான செர்ஜியோ வியிரா டி மெல்லோ அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திற்கான ஒத்திகை பார்க்கப்பட்ட தேர்தல்களைத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்; இதில் Fretilin வெற்றி பெற்றது; ஜனாதிபதி பதவிக்கான ஒரு போலித் தேர்தலில் குஸ்மோவும் பெயரளவிற்கான எதிர்க்கட்சி வேட்பாளர் ஒருவரும் பங்கு பெற்றனர். 2002ல் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது சட்டமன்றம் அரசாங்கத்தை அமைக்கும் என்று விரைவில் பிரெடிலின் அறிவித்தது.

தற்பொழுதைய உட்பிளவு வன்முறையை பாசாங்குத்தனமாக கண்டித்தாலும்கூட, ஹோவர்ட் அரசாங்கம் கிழக்கு திமோரின் அரசியல், சமூக நெருக்கடிக்கு நேரடிப் பொறுப்பை ஏற்க வேண்டும். தற்பொழுதுள்ள அரசியல் தலைவர்களின் தன்னலக் குழுவை ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் இராணுவத் தலையீடுதான் கொண்டுவைத்துள்ளது. 2002ல் சுதந்திரதின சடங்குகள் நடைபெற்றபோது அனைத்து நல்வாழ்த்துரைகளிலும் சேர்ந்து கொண்ட ஹோவர்ட் கூறினார்: "புதிய ஆயிரமாண்டின் முதல் நாடு, உலகின் புதிய ஜனநாயகம் இது." கடந்த ஐந்து ஆண்டுகளாக கிழக்கு திமோரிய மக்களுடைய நலன்கள் பற்றிய அக்கறைகள் வெளிப்படுத்தப்பட்ட போதிலும், மற்ற நிதியுதவி அளிக்கும் நாடுகளை போலவே, கான்பெராவும் உலகத்தின் மிக வறிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்நாட்டிற்கு அற்ப நிதியுதவிகளை கூடத் தரவில்லை.

திமோர் கடல் எண்ணெய், எரிபொருளில் பெரும்பங்கை பெற்றுவிட வேண்டும் என்பதுதான் ஹோவர்ட் அரசாங்கத்தின் தலையாய அக்கறையாக உள்ளது. சர்வதேச எல்லைகள் சட்டத்தின்படி --இதை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா மறுத்துள்ளது-- கிழக்கு திமோருக்குத்தான் கடல்வள இருப்புக்களில் பெரும்பாலனவற்றிற்கு உரிமை உள்ளது. முறையான சுதந்திர விழா நிகழ்வுகள் முடிவதற்கு முன்னரே, ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஆல்காட்டிரியை கான்பெராவிற்கு விமானம் மூலம் தருவித்து ஆஸ்திரேலியாவிற்கு கடல்வள இருப்புக்களின் பெரும்பகுதியை அளித்துவிடும் எல்லை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட அழுத்தம் கொடுத்தது. இதன்பின் நிகழ்ந்த பேச்சுவார்த்தைகளையும் வேண்டுமேன்றே இழுத்து அடித்தது; பணம் இல்லாத கிழக்கு திமோர் அதிக நாட்கள் காத்திருக்க முடியாது என்பதை கான்பெரா நன்கு அறிந்திருந்தது.

இறுதியில் கடந்த ஆண்டு, கான்பெரா டிலியை மிரட்டி 50, 60 ஆண்டுகளுக்கு கடல் எல்லையை பற்றிய இறுதி ஒப்பந்தம் ஒன்றை தாமதாகுமாறு செய்து, கிழக்கு திமோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் எண்ணெய், எரிவாயு வளங்கள் அதிகமாக இல்லாமற் போகும், பகிர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட வைத்தது. திமொர் கடலில் அறியப்பட்டுள்ள வகையில் எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் குறைந்தது 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருப்புக்களில் மூன்றில் இருபங்கு ஆஸ்திரேலியாவிற்கு அருகில் என்று இல்லாமல் திமோருக்கு அருகில்தான் உள்ளன. சர்வதேச சட்டத்தின்படி இவை டிலிக்கு சொந்தமாக வேண்டும். ஆனால் இறுதி ஒப்பந்தத்தின்படி மிகப் பெரிய எண்ணெய், எரிவாயுத் தளமான Greater Sunrise ல் இருந்து கிடைக்கும் வருவாய் 50-50 என்று பிரிக்கப்படும்; உண்மையில் 80 சதவிகிதம் கிழக்கு திமோருக்குக் கொடுக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தைகள் நீண்டு கொண்டே போனபோது, கான்பெரா 1 பில்லியன் டாலர்கள் உரிமத் தொகை, வரிகள் ஆறாண்டுகளுக்கு என்ற வகையில் Laminaria-Corallina வயலில் இருந்து எடுத்துக் கொண்டுவிட்டது; டிலிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; சர்வதேச சட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்பகுதியே முழுமையாக கிழக்கு திமோர் நீர்ப்பகுதியில்தான் உள்ளது.

கிழக்கு திமோரிய பகுதியில் சமூக நெருக்கடிகள் கடுமையாக இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. இவற்றை சிறிதும் இரக்கம் இல்லாத தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டு "கிழக்குப் பகுதியினர்", "மேற்கு பகுதியினர்" ஆகியோருக்கு இடையே பூசல்களை ஏற்படுத்தியுள்ளனர். உதவிக்குப் பஞ்சம் வந்த நிலையிலும், எண்ணெய், எரிவாயு வருவாயை இழந்த நிலையிலும், கிழக்கு திமோரிய அரசாங்கம் ஆண்டு ஒன்றுக்கு 50 மில்லியன் டாலர்கள் வருவாயைத்தான் பெறமுடிகிறது; மக்களை எதிர்கொண்டுள்ள மகத்தான பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இத்தொகை சிறிதும் போதுமானது அல்ல. டிலி தெருக்களில் வேலையற்ற இளைஞர்கள் கூட்டமாக வெடித்து தங்களுடைய போட்டியாளர்களுக்கு எதிராக பூசல்கள் நடத்துவது, கொள்ளை அடிப்பது போன்றவை நடப்பது குஸ்மாவோ, ஹோர்ட்டா, ஆல்கட்டிடிரி ஆகியோரின் கொள்கைகளின் விளைவு என்று மட்டும் இல்லாமல், ஹோவர்ட் மற்றும் அவருடைய மந்திரிகளுடைய கொள்கைகளின் விளைவும்தான்.

பிராந்திய மேலாதிக்க சக்தியாக ஆஸ்திரேலியா

தற்போதைய இராணுவத் தலையீட்டை இன்னும் கூடுதலான நிரந்தரமான நவ காலனித்துவ வகையிலான கிழக்கு திமோர் ஆக்கிரமிப்பாக ஹோவர்ட் அரசாங்கம் மாற்றுவதற்கு தயாரிப்புக்களை கொண்டுள்ளது என்பதற்கு ஏற்கனவே அடையாளங்கள் இருக்கின்றன. குறைந்த பட்சம் அடுத்த ஆண்டு தேர்தல்கள் வரையிலேனும் படைகள் அங்கு இருக்கும் என்று ஆஸ்திரேலிய செய்தி ஊடகம் ஊகித்துள்ளது. ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனமான ABC வானொலிக்கு மே 29 அன்று கொடுத்த பேட்டியில், வெளியுறவு அமைச்சர் அலெக்சாந்தர் டெளனர், ஆஸ்திரேலிய இராணுவத்தின் தலையீடு இல்லாவிடின், "கிழக்கு திமோர் தோல்வியுற்ற அரசாக ஆகிவிடும் ஆபத்தை கொண்டுள்ளது" என்று கூறினார்.

1999 தலையீட்டை அடுத்து, ஹோவர்ட் இகழ்வான முறையில் ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்காவிற்கு "துணை ஷெரிப்" போல் ஆஸ்திரேலியா செயல்படும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். பிராந்திய தலைவர்களின் சீற்றத்தையடுத்து அவர் தன்னுடைய கருத்துக்களை பின்வாங்கிக் கொண்டார்; ஆனால் அக்கருத்தில் உள்ளடங்கியுள்ள மூலோபாயத்தில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. அதாவது இரண்டாம் தரமோ, மூன்றாம் தரமோ, ஆஸ்திரேலியா இப்பகுதியில் அமெரிக்காவின் ஆதரவுடன்தான் ஒரு சக்தியாக விளங்கி தன்னுடைய போட்டியாளர்களுக்கு எதிராக செயல்பட்டு தன்னுடைய நலன்களை காக்க முடியும் என்பதே அது. புஷ் நிர்வாகத்தின் போலித்தனமான "பயங்கரவாதத்தின்மீதான போருக்கு" கான்பெரா கொடுக்கும் ஆதரவு, 2003ல் அமெரிக்க தலைமையிலான ஈராக்கின்மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இது கொண்ட பங்கு ஆகியவை, தன் நாட்டிற்கு அருகில் நவ காலனித்துவ வகையிலான தீரச்செயல்களை புரிய அமெரிக்காவின் ஆதரவை பெறுவதை துல்லியமாக நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஈராக்கிய படையெடுப்பு நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே, ஹோவர்ட் அரசாங்கம் சாலமோன் தீவுகளை "ஒரு தோல்வியுற்ற அரசு" என்று முத்திரை கொடுத்து, சர்வதேச குற்றவாளிகள், போதைப் பொருள் கடத்துவோர், பயங்கரவாதிகள் ஆகியோருக்கு உறைவிடமாக அது விளங்குகிறது என்று உரக்கக் கூவியதுடன், தன்னுடைய சொந்த "முன்கூட்டியே தாக்கி தனதாக்கும்" நடவடிக்கையை அங்கு தொடக்கியது. 2003 ஜூலை மாதம் ஆஸ்திரேலிய தலைமையில் வீரர்கள், போலீசார், அதிகாரிகள் ஆகியோரை கொண்ட பணிக் குழு ஒன்று ஹோனியராவில் இறங்கியது. சாலமோன் தீவுகளுக்கு உதவும் வட்டாரப் பணிக்குழு (RAMSI) இச்சிறிய பசிபிக் தீவு-நாட்டின் அனைத்து முக்கிய அதிகார நெம்புகோல்களையும் எடுத்துக் கொண்டது; குறைந்தது ஒரு தசாப்தமாக அங்கு இருக்க வேண்டும் என்ற கருத்தை அது கொண்டிருந்தது. கிழக்கு திமோர் தலையீட்டிற்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஹோவர்ட் அரசாங்கம் 300 வீரர்களையும் போலீசாரையும் வட்டார உதவிக் குழுவை (RAMSI) நிலைநிறுத்த அனுப்பி வைத்தது; ஆஸ்திரேலிய ஆக்கிரமிப்பிற்கு உள்ளூர் மக்கள் பெரும் எதிர்ப்பையும் விரோதப் போக்கையும் கொண்டுள்ளனர்.

கிழக்கு திமோரின் தேசிய இறைமையை ஆஸ்திரேலியா "மதிக்கிறது" என்ற போலித் தோற்றத்தைத் தக்கவைக்க முயற்சிக்கும்போதே, ஹோவர்ட் வட்டாரக் குழு (RAMSI) மாதிரியிலான நடைமுறை கொண்டுவரப்படலாமா என்ற பரிசீலனையில் உள்ளது என்று கூறியுள்ளார். மே 28 அன்று ABC தொலைக்காட்சியில் அத்தகைய முறை டிலியிலும் நீண்ட கால வகையில் நிறுவப்படமா எனக் கேட்கப்பட்டதற்கு அவர் கூறினார்: "எதையும் இயலாது என்று நான் இப்பொழுது கூறவில்லை."

சாலமோன் தீவுகள் மற்றும் கிழக்கு திமோரில் ஆஸ்திரேலிய தலையீடுகள் இப்பகுதியில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே இருக்கும் போட்டிகள் தீவிரமாகியுள்ளதின் அடையாளம் ஆகும். "எமது கொல்லைப் புறம்" என்று அவர் அழைத்துள்ள பகுதியில் பெருகி வரும் பொருளாதார மற்றும் மூலோபாய அறைகூவல்களுக்கு ஹோவர்டின் விடையிறுப்பு ஆஸ்திரேலியாவிற்கு வடக்குப் புறத்தில் உள்ள "உறுதித் தன்மை அற்ற வளைவுப் பகுதி" முழுவதும் இராணுவ முகாம்களை நிறுவ வேண்டும் என்பதுதான். கிழக்கு திமோரில் தலையீடு பற்றி பாராளுமன்றத்தில் மே 25 அன்று நிகழ்த்திய உரையில், பிரதம மந்திரி, "ஆஸ்திரேலியா, எமது பகுதியில் உறுதித்தன்மையை தக்க வைத்து வளர்ப்பதில் முக்கிய தேசிய நலனைக் கொண்டுள்ளது" என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.

முர்டோக்கின் Australian ஏடு, மே 31 பதிப்பில் "அதிகாரத்தை காட்டுதல்" என்ற தலைப்பில் ஆசிரியர் போல் கெல்லி கிழக்கு திமோரில் மட்டுமில்லாமல், அப்பகுதி முழுவதிலுமே ஆஸ்திரேலியா மேலாதிக்க பங்கைக் கொள்ள வேண்டும் என வெளிப்படையாக கூறியுள்ளார். ஹோவர்டின் "நடுநிலை" என்ற பாசாங்கை உதறித்தள்ளிவிட்டு, கிழக்கு திமோரில் ஏற்கனவே அரசியல் விவகாரங்களை கான்பெரா நிர்ணயம் செய்துவருகிறது என்றும் இதேபோன்ற பங்கை மற்ற நாடுகளிலும் செய்யவேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

"இப்பொருளில், ஆஸ்திரேலியா ஒரு பிராந்திய சக்தியாக, மேலாதிக்க திறனுடைய சக்தியாக செயல்பட்டு பாதுகாப்பு, அரசியல் விளைவுகளை உருவாக்குகிறது. இப்படிக் கூறுவது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆஸ்திரேலியாவிற்கு புதிய சோதனைக்கூட பகுதியாக அது உள்ளது. நாம் ஒரு பிராந்திய சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்; அந்த சக்தியை செலுத்துவதில், அதன் இலாபங்கள், ஆபத்துக்கள் ஆகியவற்றை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். கிழக்கு திமோரின் சட்டம் ஒழுங்கு பொறுப்பை முழுமையாக எடுத்துக் கொண்டுள்ளோம்; அங்கு உள்நாட்டு அதிகார போராட்டம் எமது கூறப்படாத அழுத்தத்தின் பின்னணியில்தான் நடைபெற்று வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

இன்னும் கூடுதலான வகையில் ஆசிய பசிபிக் பகுதியில் இராணுவத் தலையீட்டிற்கு தயாரிப்பு நடத்துவது பற்றி ஆளும் வட்டங்களுக்குள் நடக்கும் பரந்த விவாதங்களின் ஒரு பகுதிதான் கெல்லியின் வர்ணனை ஆகும். முன்னாள் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான போல் டிப், மே 16 ஆஸ்திரேலியன் பதிப்பில் எழுதினார்: "அண்மையில் ஒரு மூத்த பாதுக்காப்பு பிரிவு சக ஊழியர் என்னிடம் கூறியதுபோல், உறுதித் தன்மையற்ற வளைவு என்பது 'மிக உறுதியாக உறுதியற்ற தன்மையில்தான்' உள்ளது. கிழக்கு திமோர், சாலமோன் தீவுகள், பாப்புவா நியு கினியா, வானுவாடு, பிஜி ஆகியவற்றிற்கான எதிர்காலம் -- இந்தோனேசிய பாப்புவ மாநிலத்தின் உறுதியற்ற வருங்காலம் ஒருபுறம் இருக்க -- மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. உலகின் இப்பகுதியில் நம்முடைய நலன்களை எவரும் கவனிப்பவர் இலர் என்பதை நீண்ட காலமாகவே அறிந்துள்ளோம். ஜோன் ஹோவர்ட் குறிப்பிடுவது போல் நாம்தான் தலைமை எடுக்கும் பொறுப்பைக் கொள்ள வேண்டும்; நம்முடைய நட்பு நாடான அமெரிக்கா உள்பட மற்றவர்கள், நாம் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்க்கின்றனர்."

ஆஸ்திரேலிய இராணுவவாதத்தின் வெடிப்பு கிழக்கு திமோர், சாலமன் தீவுகள் மற்றும் இப்பகுதியிலுள்ள மற்ற நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு என்று மட்டும் இல்லாமல், ஆஸ்திரேலிய தொழிலாளர்களுக்கும் பல ஆபத்துக்களை கொண்டுள்ளது; அவர்கள்தான் இந்த இராணுவ சாகசச் செலவுகளின் சுமையை தவிர்க்க முடியாமல் ஏற்க நேரிடும். மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, பசிபிக் ஆகிய பகுதிகளுக்கு ஆஸ்திரேலிய படைப் பிரிவுகளை அனுப்பியுள்ளது நீண்ட காலமாக நடைமுறையில் இருக்கும் ஜனநாயக குடி உரிமைகளின் மீதான முன்னோடி இல்லாத தாக்குதல்களால் பின்தொடரப்படுகிறது. ஆசிய பசிபிக் பகுதி முழுவதும் காலனித்துவ வகையிலான புறக் காவல் நிலையங்களை நிறுவுதல் என்பது ஆஸ்திரேலியா ஒரு போலீஸ் நாடாக மாறுகிறது என்பதை இலக்காகக் கொண்டுள்ளது; எல்லாவற்றிற்கும் மேலாக, ஆஸ்திரேலியாவிற்குள் அரசாங்கக் கொள்கைகளுக்கு எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதை ஒடுக்க வேண்டும் என்பதாகும். ஆஸ்திரேலியாவிலும் சர்வதேசரீதியாகவும் உள்ள தொழிலாளர்கள் ஹோவர்ட் அரசாங்கத்தின் கொள்ளை திட்டங்களை கட்டாயம் எதிர்க்க வேண்டும். மேலும் கிழக்கு திமோர் மற்றும் சாலமோன் தீவுகளில் இருந்து அனைத்து வெளிநாட்டுப் படைகள் மற்றும் போலீசார் நிபந்தனை ஏதும் இன்றி உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கோர வேண்டும்.

கடந்த 7 ஆண்டுகளில் தாங்கள் பெற்றுள்ள அனுபவங்களில் இருந்து கிழக்கு திமோரிய தொழிலாளர்கள், கிராம வாசிகள், இளைஞர்கள் உறுதியான அரசியல் முடிவுரைகளை காணவேண்டும். பெரும் வல்லரசுகள் மற்றும் உலக மூலதனத்தின் மேலாதிக்கத்தின் கீழ், "சுதந்திரம்" என்பது சமூக துன்பங்களை அதிகப்படுத்தியுள்ளதுடன், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் ஆழப்படுத்தியுள்ளது. பிரிவினை வாதத் தர்க்கம் டிலியின் தெருக்களில் வெடித்தெழுந்துள்ள இந்த சகோதர மோதல்களில், காணப்படலாம். கிழக்கு திமோரின் மக்களை அவர்களுடைய அண்டைப்பகுதியில் உள்ள இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் இப்பகுதி முழுவதும், உலகம் முழுவதும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு அரசியல் போராட்டம்தான் ஒரே முற்போக்கான தீர்வு ஆகும். பூகோள மூலதனம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதின் மூலம்தான் இந்நாடுகளில் உள்ள பெரும்பான்மை மக்களை பீடித்துள்ள கொடூரமான வறுமையை அகற்றுவதற்கு தேவையான வளங்களை கிடைக்கச்செய்ய முடியும்.

Top of page