World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australia, Timor and oil: the record

ஆஸ்திரேலியா, திமோர் மற்றும் எண்ணெய் வளம்: அதுதான் காரணம்

By Mike Head
6 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

கிழக்கு திமோரில் ஹோவர்ட் அரசாங்கத்தின் மிக அண்மைய ஆயுதத் தலையீடு பற்றிய அனைத்து ஆஸ்திரேலிய ஊடக செய்தி உள்ளடக்கத்திலும் "எண்ணெய்" மற்றும் "எரிவாயு" என்ற சொற்கள் அரிதாகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால், அப்படியிருந்தும் உலகின் எண்ணெய் எரிவாயு விலைகள் உயர்ந்து வருவதால் 30 பில்லியன் டாலர்களுக்கு மேலாக மதிப்புடையதாக இருக்கலாம் என்று கணிக்கப்படும் திமோர் கடலடியில் காணப்படும் ஏராளமான எண்ணெய் வளம்தான்-துருப்புக்களையும் போலீசாரையும், ஆஸ்திரேலியா கிழக்கு திமோருக்கு அனுப்பியதற்கான முக்கிய காரணமாகும்.

ஆஸ்திரேலிய ஆளும் செல்வந்தத்தட்டின் பரவலான மூலோபாய மற்றும் வர்த்தக கணிப்புக்களோடு சேர்த்து திமோர் கடற்பகுதியில், மேலாதிக்கம் செலுத்துவது - மற்றும் அனைத்து வெளிநாட்டு போட்டியாளர்களும் அங்கு புகுவதற்கான வழியை தடுத்து நிறுத்துவது, கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கிழக்கு திமோர் தொடர்பான கன்பராவின் கொள்கையில், ஒவ்வொரு இரட்டைவேட திருப்பத்திலும் தலைசிறந்த கவலையாக இருந்து வந்திருக்கிறது.

தொடர்ந்து வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், தாராளவாத மற்றும் தொழிற்கட்சிகளை சார்ந்த இரண்டு அரசாங்கங்களுமே 1974 போர்ச்சுகலின் பாசிச அரசாங்கம் வீழ்ந்தபொழுது வரை போர்ச்சுகலின் காலனி ஆட்சியை அந்த தீவின் பாதிப்பகுதியில் ஏற்றுக்கொண்டன மற்றும் ஒத்துழைத்தன. அதே நேரத்தில் கடலடி செல்வம் தொடர்பான அடையாளச் சின்னங்கள் முதல் தடவையாக வெளிவரத் தொடங்கின-1970-களின் ஆரம்பத்தில் கடற்பகுதியில் எண்ணெய் வளம் கண்டுபிடிப்பதற்கான கிணறுகள் தோண்டப்பட்டன, அந்த உரிமங்கள் பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த செல்வ வள வாய்ப்பை கருத்தில் கொண்டு, திமோரில் போர்ச்சுகலின் பிடி நொருங்கி வருவதை தொடர்ந்து அங்கு குழப்பம் நிலவும் என்று பயந்து, கான்பரா வாஷிங்டனின் தலைமையை பின்பற்றி இந்தோனேஷியாவில் சுகார்ட்டோ இராணுவ குழுவை ஊக்குவித்து 1975-ல் படையெடுக்க செய்தது மற்றும், அந்த படையெடுப்பு பொதுமக்களை நசுக்கியது. இறுதியாக அடுத்த கால் நூற்றாண்டில் 200,000 மக்களது உயிரை பறித்தது. இதற்கு கைமாறாக, ஜெனரல் சுகார்ட்டோ ஆஸ்திரேலியாவிற்கு மிகுந்த சாதகமாக, கடலுக்கு அடியிலான எல்லையை நிர்ணயிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்த உடன்பட்டார், அதன்மூலம் கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய் கையிருப்புக்களை, 1989 திமோர் இடைவெளி ஒப்பந்தம் மூலம் ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைத்தார்.

1998-ல் சுகார்ட்டோ வீழ்ந்ததும், மற்றும் போர்ச்சுகல் தனது பழைய காலனி ஆதிக்க நலன்களை திரும்ப வலியுறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதும், ஹோவர்ட் அரசாங்கம், 1999-ல் பெயரளவிற்கு ஒரு சிறிய சுதந்திர ஆட்சியை அங்கு அமைப்பதற்கு ஆதரவாக அங்கு துருப்புக்களை அனுப்பியது. இந்தோனேஷியா இராணுவத்திலிருந்து திமோர் மக்களை பாதுகாப்பதும், குடிப்படைகளின் வன்முறைகளில் இருந்து அவர்களை காப்பதும் தான் நோக்கம் என்று அப்போது ஹோவர்ட் அரசாங்கம் கூறியது. ஊடகங்களும் அனைத்து "இடது" நடுத்தர வர்க்க எதிர்ப்பு குழுக்களும் 1999-ல் ஆஸ்திரேலியா தலையிடவேண்டும் என்று கோரிக்கைகளை விடுத்தன, அந்த நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மனிதநேய திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறின.

அப்படி எதுவும் நடக்கவில்லை. சில மாதங்களுக்குள், ஹோவர்ட் அரசாங்கம் ஆஸ்திரேலியாவிற்கு கடலடி எண்ணெய் எரிவாயு வளத்தில் பெரும் பங்கை தரவேண்டும் என்று கருநிலையிலிருந்த திலி நிர்வாகத்தை மிரட்டியது மற்றும் வற்புறுத்தியது. இதில் போர்ச்சுகல் அல்லது கிழக்கு திமோர் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. 2000 பெப்ரவரியில் ஆஸ்திரேலியா தலைமையிலான சர்வதேச கிழக்கு திமோர் - இன்டர்பெக்ட் படைப்பிரிவு- சம்பிரதாய முறையில் கிழக்கு திமோருக்கான ஐ. நா. இடைக்கால நிர்வாகத்திடம் (UNTAET), அந்த துருப்புக்களிடம், அதிகாரத்தை ஒப்படைக்கும்போது ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வற்புறுத்தினர்.

இதில் முதலாவது ஒப்பந்தம், திமோர் இடைவெளி ஒப்பந்தத்தை ஐ.நாவுடன் தொடர்வது, இதில் இந்தோனேஷியாவிற்கு பதிலாக ஐ. நா. அந்த கூட்டு வளர்ச்சி பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் பங்குதாரராக சேர்ந்து கொண்டது. இரண்டாவது ஒப்பந்தம், அமெரிக்கா-ஆஸ்திரேலியா-ஜப்பான் நாடுகள் அடங்கிய கூட்டுக்கழகம் பெருமளவில் கடலுக்கடியில் கிடைக்கும் பாயு-உன்டன் நில எண்ணெய் வளத்தை தோண்டி எடுப்பதற்கு வழி செய்தது, 400 மில்லியன் பீப்பாய்கள் திரவ பெட்ரோலியம் எரிவாயு லிறிநி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அதன் மதிப்பு 5 பில்லியன் டாலர்களுக்கு மேற்பட்டதாகும் இந்த எரிவாயுக் கிணறு கிழக்கு திமோரிலுள்ள சுவாய் பகுதிக்கு தெற்கே 250 கி. மீ. அப்பால் உள்ளது மற்றும் டார்வினுக்கு தென்மேற்கே 500 கி. மீ. அப்பால் அமைந்திருக்கிறது. என்றாலும், திலி மீது திணிக்கப்பட்ட மோசடி உடன்படிக்கை டார்வினுக்கு ஒரு குழாய் இணைப்பை கட்டுவதுடன் சம்பந்தப்பட்டது. டார்வினில் அமெரிக்காவின் ஹீஸ்டனில் செயல்பட்டு வரும் கானோகோ பிலிப்ஸ் நிறுவனம் 924 பில்லியன், டாலர்கள் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு ஆலையை தொடங்கியுள்ளது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களுமே ஐ. நா. அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டது அவை புதிதாக வருகின்ற எந்த கிழக்கு திமோர் சுதந்திர அரசாங்கத்தையும், சட்டபூர்வமாக கட்டுப்படுத்துகின்ற ஒப்பந்தங்களாகும். திமோர் மக்களை பொறுத்தவரை அவர்களது பெயரால் ஆஸ்திரேலியா தலையிட்டாலும், அந்த மக்களுக்கு இந்த ஏற்பாட்டில் எந்தவிதமான பங்களிப்பும் இல்லை.

2000 அக்டோபரில் UNTAET கடலுக்கு அடியிலான எல்லையை மீண்டும் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஹோவர்ட் அரசாங்கம் திட்டவட்டமாக, தள்ளுபடி செய்தது. இரண்டு கடற்கரை எல்லைகளில் இருந்தும் சமதூரத்தில் சர்வதேச சட்டப்படி கடலடி எல்லை வகுக்கப்பட்டால் கிழக்கு திமோர் அனைத்து திமோர் கடல்படுகை உரிமைத்தொகைகளையும் வரிகளையும் பெறுவதற்கு உரிமை படைத்தது.

ஹோவர்ட்டும் அவரது அமைச்சர்களும் கிழக்கு திமோருக்கு எதிராக மறைமுக அச்சுறுத்தல்களை விடுத்தனர், கிழக்கு திமோர் அந்த தகராறை, சர்வதேச நீதிமன்றத்திற்கு, கொண்டு செல்லுமானால் பதிலடி நடவடிக்கை என்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் டவுனர் எதிர்கால ஆஸ்திரேலிய உதவித்திட்டத்தை நேரடியாக திலி பெறுகின்ற பங்குவீத உரிமைத்தொகை அளவோடு தொடர்புபடுத்தினார்- ஆஸ்திரேலியாவின் உதவித்திட்டத்தில் 90 சதவீதம் இராணுவ நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டவை ஆகும். டவுனரின் அமைச்சரவை நண்பரான வளங்களுக்கான அமைச்சர் நிக் மிஞ்சின், எல்லை தாவா, தைமூர் இடைவெளியில் "முதலீட்டாளர் நம்பகத்தன்மையை" அழித்துவிடும் என்று எச்சரித்தார்.

2002 மார்ச்சில், கிழக்கு திமோர், "21-வது நூற்றாண்டின் முதலாவது புதிய சுதந்திர நாடு" என்று பிரகடனப்படுத்துவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலக நீதிமன்றத்தின் கடல் எல்லை தொடர்பான தீர்ப்புக்களுக்கு இனி ஹோவர்ட் அரசாங்கம் கட்டுப்படாது என்று அறிவித்தார். கிழக்கு திமோரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாரி அல் காத்தரி அந்த முயற்சியை "நட்புக்கு மாறான செயல் என்றும் பதவிக்கு வரும் தனது அரசாங்கத்தின் "கைகளை கட்டிபோடுவது" என்றும் கண்டித்தார்.

பிரதமர் ஹோவர்ட், சுதந்திரதின கொண்டாட்டத்திற்காக, திலிக்கு விமானத்தில் செல்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், மே மாதத்தில், அல்-காதிரி, கன்பராவிற்கு அழைக்கப்பட்டார், அங்கு ஆஸ்திரேலிய, அரசாங்க அதிகாரிகள் மிரட்டல் பாணியை கடைபிடிக்க முயன்று, 25 பில்லியன் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ளதாக கருதப்படும் கிரேட்டர் சன் ரைஸ் எரிவாயு கிணற்றின் பெரும் பகுதியை ஆஸ்திரேலியாவிற்கு தருவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து செயல்பட்டுக் கொண்டுள்ள வூட்சைட் பெட்ரோலியம் நிறுவனத்தில் 34 சதவீதம் பங்கு ரோயல் டச்/செல் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் கிரேட்டர் சன்ரைஸ் பகுதியில் ஒரு பெரிய பங்குதாரர் ஆகும், கானோகோபிலிப்ஸ் மற்றும் ஜப்பானின் ஓசாக்கா காஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உள்ளது. இந்த பகுதி அருகாமையிலுள்ள வடமேற்கு படுகைக்கு இணையாக எண்ணெய் வளம் கொண்டதாக கருதப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எண்ணெய் வளமேம்பாட்டு திட்டமாகும். இதையும் வூட்சைட் நிறுவனம்தான் செயல்படுத்தி வருகிறது. வடமேற்கு படுகைப்பகுதியில் 100 டிரில்லியன் கன அடி எரிவாயு வளம் கிடைப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது, இதன்மூலம் 2 பில்லியன் டன்கள் லிறிநி உருவாக்க முடியும், இது உலகின் தேவையை ஒரு தசாப்தத்திற்கு மேல் நிறைவேற்றுகின்ற அளவை கொண்டதாகும்.

உடனடியாக முழு உடன்படிக்கையையும் பெற இயலாத நிலையில், டவுனரும் இதர அமைச்சர்களும், ஒரு புதிய நாடடின் முதலாவது "சுதந்திர" நடவடிக்கையாக ஏதாவது ஒரு வடிவத்தில் உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரினர். இந்த கோரிக்கையை அல் காட்டிரி ஏற்றுக்கொண்டார் ஆனால் மே 20 ஆவணத்தில் கையெழுத்திடும்போது கடல்படுகை தொடர்பான இறுதி முடிவிற்கு "எந்தவிதமான குந்தகமும் இல்லாமல்" என்று கையெழுத்திட்டார்.

அந்தக் கட்டத்திலிருந்து, ஹோவர்ட் அரசாங்கம், பாயன் உன்டன் மற்றும் கிரேட்டர்சன் ரைஸ் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்துக் கொண்டு வந்ததால், திமோர் அரசாங்கத்திற்கு அதிகம் தேவைப்பட்ட வருமானம் கிடைக்காமல் செய்வதற்கு முயன்று வந்தது. இந்த முயற்சி திலி தனது எல்லைகள் தொடர்பான உரிமைகளை கைவிடும் வரை அல்லது தாமப்படுத்த சம்மதிக்கும் வரை நீடித்தது.

இந்த உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளில் நடைபெற்ற முரட்டுத்தனமான நடைமுறைகள் மார்ச் 2003-ல் அம்பலத்திற்கு வந்தது. அப்போது 2002 நவம்பரில் டவுனருக்கும் அல்-காட்டிரிக்கும் இடையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் வலைத் தளத்தில் வெளியிடப்பட்டன.

"நாங்கள் எதையும், தடுத்து நிறுத்திவிட முடியும்" என்று டவுனர் திரும்பத்திரும்ப அறிவித்தார். பேச்சவார்த்தைகளை முறித்துக் கொள்வதாக அச்சுறுத்தினார். "உங்களது கவலைகள் அனைத்தையும், ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்க நாங்கள் விரும்புகிறோம், ஆனால், ஏற்றுக் கொள்வது என்பதற்கும், ஒரு கடல்படுகையை விட்டுவிடுகிறோம் என்பதற்கும் வேறுபாடு உண்டு" என்று அல்-காட்டிரி முறையிட்டார். டவுனர் எல்லையை திரும்பவும் வகுக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறி வந்தார். "நான் இப்போது உடனடியாக ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும், அதற்குப்பின்னர் நீங்கள் எப்போதுமே கோரிக்கை விடுத்துக்கொண்டு இருக்கலாம், நீங்கள் தொடர்ந்து கோரிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால், நாங்கள் ஒப்பந்தத்தை விரைவில் முடிக்கவேண்டும்" என்று கூறினார்.

ஹோவர்ட் அரசாங்கம் வேண்டும் என்றே எல்லை பிரச்சினையை இழுத்துக் கொண்டு வந்தது, கிழக்கு திமோர் வறுமையில் ஆழமாக மூழ்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, திமோர் கடற்பகுதியிலிருந்து கிடைக்கும் வருவாய் முழுவதையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. 2003-ல் மட்டுமே ஆஸ்திரேலியா முழுமையாக இயங்கி வந்த, லூமினாலியா-ஹொராலினா எண்ணெய் கிணற்றிலிருந்து 172 மில்லியன் அமெரிக்க டாலர்களை பங்குவீத உரிமை தொகையாக பெற்றது-இது கிழக்கு திமோர் அரசாங்கத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

எண்ணெய் வருவாய் மிகச் சொற்பமாக கிடைத்க்கும் நிலையில், சர்வதேச உதவி வற்றிவிட்டநிலையில், திலி அரசாங்கத்திடம், பள்ளிக்கூடங்கள் பொதுசுகாதாரம் வீட்டுவசதி அல்லது வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களுக்கு செலவிட பணம் இல்லை. கிழக்கு திமோரின் "விடுதலை என்று" அறிவிக்கப்பட்ட நடவடிக்கையை ஆஸ்திரேலியா மேற்கொண்டு 5 ஆண்டுகளுக்கு பின்னர், கிழக்கு திமோர் மக்களில் 40 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 50 அமெரிக்க செண்டுகள் வருவாயில் வாழ்ந்து கொண்டிருந்தனர், உழைக்கும் மக்களில் பாதிப்பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர், வாழ்நாள் எதிர்பார்ப்பு 40 ஆண்டுகளாக இருந்தது உலகிலேயே குழந்தைகள் உட்பட இறப்பு விகிதங்கள் மிக அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக, கிழக்கு திமோர் ஆகிவிட்டது.

2004 ஏப்ரலில் மற்றொரு சுற்று எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, கிழக்கு திமோர் ஜனாதிபதி ஜனானா குஸ்மாவோ பிரதமர் அல்காட்டிரியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் இரக்கமற்ற அணுகுமுறையிலிருந்து ஓரளவிற்கு நிவாரணம் தருகின்ற வகையில் பல்வேறு பொதுக்கோரிக்கைகளை விடுத்தனர். கிழக்கு திமோர் எண்ணெய் வள கடற்கரையிலிருந்து விலகிய பகுதியில் அதிக வருவாய் பெறுவதற்கான புதிய உடன்படிக்கை, தனது நாட்டிற்கு வாழ்வா? சாவா பிரச்சினையாகும், என்று அல்காட்டிரி வலியுறுத்திக் கூறினார். போர்ச்சுகல் செய்தி பத்திரிகையான பப்ளிகோவிற்கு பேட்டியளித்த குஸ்மாவோ, ஆஸ்திரேலியா திருட்டில் ஈடுபட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். கார்டியன் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர் கிழக்கு திமோருக்கு ஒரு சிறந்த பேரம் கிடைக்காவிட்டால், அதனால் ஆபத்தான அரசியல் விளைபயன்கள் ஏற்படும் என்று எச்சரித்தார். "நாங்கள் மற்றொரு தோல்வியுற்ற அரசாக இருக்கவிரும்பவில்லை. இந்த ஒப்பந்தம் இல்லாவிடில் நாங்கள் மற்றொரு ஹைட்டியாக, மற்றொரு லைபீரியாவாக, மற்றொரு சாலமன் தீவுகளாக ஆகிவிடுவோம்."

அப்படியிருந்தாலும், கான்பராவின் மிரட்டல் நடவடிக்கைகள் 2005 ஏப்ரல் வரை நீடித்தன. அப்போது, திலி, இறுதியாக தனது எல்லைக் கோரிக்கைகளை 50 முதல் 60 ஆண்டுகள் வரை கைவிட்டுவிட உடன்பட்டது. இதன் விளைபயன் என்னவென்றால், இரண்டு தலைமுறைகளுக்கு தனது உரிமைகளை கைவிட்டுவிட கிழக்கு திமோர் கட்டாயப்படுத்தப்பட்டது. அந்த நேரம் நெருங்கும்போது பிரதான எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் முழுவதுமே வறண்டு விடுமளவிற்கு எண்ணெய் வளம் எடுக்கப்பட்டுவிடும்.

இதுதான் ஆஸ்திரேலியா வாங்கித் தந்த "சுதந்திரம்", "விடுதலை" ஆகும். கிழக்கு திமோரின் எண்ணெய் எரிவாயு வருவாய் 2004-05-ல் 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வந்தது. இது 2007-08-ல் 75 மில்லியன் டாலர்களாக உயரும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் மிதமிஞ்சிய லாபத்தை பெறுவதுடன் இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் கிழக்கு திமோருக்கு சேரவேண்டிய, பங்குவீத உரிமை தொகையான 550 மில்லியன் அமெரிக்க டாலர்களில் பெரும்பகுதி உலக வங்கியும் மிவிதி-ம் வற்புறுத்தியதால் அமெரிக்க கருவூல கடன்பத்திரங்களில் முடக்கப்பட்டுவிட்டது, நாட்டின் எதிர்காலத்திற்கு வகை செய்வதற்காக என்று கூறப்பட்டது.

புதுபிக்கப்பட்ட தலையீடு

திமோர் கடல்படுகை எண்ணெய் கிணறுகளில் ஆஸ்திரேலியாவின் மேலாதிக்கத்தை குறைந்தபட்சம் மட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு, பிரட்லின் தலைமையிலான திலி அரசாங்கம் மேற்கொண்ட பல முக்கிய முடிவுகளை தொடர்ந்து நடப்பு துருப்புக்களை அனுப்புவது என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. கான்பராவிற்கு, கலவரமூட்டும் வகையில் இந்த முயற்சிகளில், போர்சுகல் சம்மந்தப்பட்டிருக்கிறது. வாஷிங்டனின் ஆதரவை முழுமையாக, நம்பியிருக்கின்ற ஹோவர்ட் அரசாங்கம், சீனாவின் தலையீடு தொடர்பாகவும் கவலை கொண்டிருக்கிறது.

*2004 டிசம்பரில், நாட்டின் இயற்கை வள அமைச்சராகவும் இருந்த அல்-காட்டிரி சீனாவின் மிகப்பெரிய அரசிற்கு சொந்தமான எண்ணெய் குழு நிறுவனமான சீனா தேசிய பெட்ரோலியம் மற்றும் நோர்வே பூகோள புவியற் சேவை நிறுவனமும் இணைந்த ஒரு கழகம், கடல் எல்லையில், திமோர் தரப்பில் ஒரு முழு நிலநடுக்கம் சார்ந்த ஆய்வை நடத்தும் என்று அறிவித்தார். இது உடனடியாக, பொதுவாக போர்சுகலுடன் இணைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய அரசுகளையும், சீனாவையும் சம்மந்தப்படுத்துகின்ற காட்சியை உருவாக்கிவிட்டது. அவை கிழக்கு திமோர் கையிருப்புக்களில் ஓரளவு தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்கு வகை செய்திருக்கிறது.

*2005-ல் சில செய்திகளின்படி சீனாவின் பெட்ரோசீனா நிறுவனத்துடன் அல்-காட்டிரி அரசாங்கம், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது இது, திமோரில் சுத்திகரிப்பு திறனை உருவாக்குவதற்கான, பேச்சுவார்த்தைகள் ஆகும். இந்தத் திட்டம் திமோர் கடல் பகுதி கச்சா எண்ணெய் முழுவதையும் ஆஸ்திரேலியா குழாய் மூலம் அல்லது கப்பல்கள் மூலம் எல்லையின் இரண்டு தரப்பில் இருந்தும் கிரேட்டர் சன்ரைஸ் கிணறுகளில் இருந்து திமோருக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருப்பதை, வெட்டி முறிப்பதாக அமைந்திருக்கிறது.

இந்த திட்டம் தொடர்பான விவரங்கள், மேலெழுந்த வாரியாக உள்ளன. இந்த செய்திகள் ஊடகங்களிலும், இராஜதந்திரத்துறை மற்றும் வர்த்தகத்துறை விமர்சனங்களில் இடம்பெற்றது ஆஸ்திரேலியாவின் தலையீட்டிற்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்களாகும் ஆஸ்திரேலியன் பத்திரிகையில் மே 9-ல் கட்டுரை எழுதியுள்ள பிலிப் ஆடம்ஸ், "அல்-காட்டிரி டார்வினுக்கு பதிலாக, திமோரின் சுவாப்பகுதியில் எரிவாயு உற்பத்தி வசதிகளை வைத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருவது, சீனாவிற்கு வழியைத் திறந்து விடுவதாக அமைந்துவிடக்கூடும், பெட்ரோசீனா நிறுவனம், ஒரு பேரத்தை உருவாக்கியிருப்பதாக தோன்றுகிறது. மேற்கு நாடுகளின் இராஜதந்திர மற்றும் பெருநிறுவன சமுதாயங்களை சேர்ந்த பலரும், இந்தப் போக்கினால் திருப்தி அடையவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

திமோரின் வெளியுறவு அமைச்சர், ஜோஸ் ரமோஷ் ஹோர்டாவின் புதல்வரான லோரா ஹோர்டா, மே 27 அன்று ஆசியா டைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருந்தது: "அல்-காட்டிரி, பெட்ரோ சீனா நிறுவனத்திற்கு பல பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டிலான, எரிவாயு குழாய் திட்ட ஒப்பந்ததத்தை வழங்க திட்டமிட்டுள்ளார் என்ற பரவலான ஊகங்கள் நிலவி வருகின்றன, இந்த அழைப்பு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் கோபத்தை கிளறிவிட்டிருக்கக்கூடும்.

கடந்த செப்டம்பரில் கிழக்கு திமோரின் சொந்த கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் 30,000 சதுர கி. மீ. பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபடும் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, ஒரு சர்வதேச, சுற்றுப்பயணத்தை அல்-காட்டிரி தொடக்கினார். அப்போது, "திமோர்-லெஸ்டி வர்த்தகத்திற்கு, திறந்துவிடப்படும்," என்று அறிவித்தார். நவம்பரில் இந்த முயற்சிகள் 20-க்கும் மேற்பட்ட பெட்ரோலிய நிறுவனங்களை ஈர்த்திருப்பதாக அவர் தெரிவித்தார், "அந்த நிறுவனங்களில் உலகின் பெரிய சில நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன" என்று கூறினார்.

*இந்த ஆண்டு ஜனவரியில் 6 ஆண்டுகளுக்கு மேலாக, நடைபெற்ற கசப்பான பேச்சவார்த்தைகளுக்கு பின்னர் அல்-காட்டிரி, இறுதியாக, ஹோவர்ட் அரசாங்கத்திடம் இருந்து ஒரு சிறிய சலுகையை பெற்றார். கான்பரா தயக்கத்துடன் கிழக்கு திமோருக்கு சாதகமாக 90-க்கு 10 என்ற விகிதத்தில் கிரேட்டர் சன்ரைஸ் பகுதியிலிருந்து கிடைக்கும் வருவாயை, பகிர்ந்து கொள்ள சம்மதித்தது. இந்த கிரேட்டர் சன்ரைஸ் திட்ட பகுதியில் 20 சதவீத பகுதி தகராறுக்குரிய எல்லையில் உள்ளது. மிச்சமிருக்கின்ற 80சதவீதம் கிரேட்டர் சன் ரைஸ் பகுதியில் பங்குவீத உரிமை தொகையில் இருதரப்பும் சரிபாதியாக, பகிர்ந்துகொள்ள வகை செய்யப்பட்டது. கிரேட்டர் சன்ரைஸ் பகுதி முழுவதற்கும், ஆஸ்திரேலியா அதன் பிரத்தியேக அதிகார வரம்பை கூறிக்கொள்கிறது.

இதற்கு முன்னர் ஹோவர்ட் அரசாங்கம், வருவாயை ஆஸ்திரேலியாவிற்கு ஒதுக்குவதில் மூர்க்கத்தனமாக செயல்பட்டது. ஆனால் அதற்கு பதிலடியாக, திமோர் நாடாளுமன்றம் 2005 ஏப்ரலில் உருவான பேரத்தை இரத்து செய்வதாக அச்சுறுத்தியது. அந்த பேரம் எல்லையை மறுபகுப்பு செய்வதில் அல்காட்டிரி அரசாங்கம் தனது கோரிக்கைகளை கைவிட வகை செய்தது.

*பெப்ரவரியில், திலி அரசாங்கம் திமோரிலுள்ள தனது சொந்த எண்ணெய் கிணறுகளுக்கு டெண்டர்களை கோரியது, சீன-நோர்வே ஆய்வு அந்தப் பகுதியில் அரைமில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயும் 10 திரில்லியன் கன அடி எரிவாயும் கிடைப்பதாக மதிப்பீடு செய்த பின்னர், இந்த டெண்டர்கள் கோரப்பட்டன (திமோர் கடற்பகுதிகளில் காணப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த வள இருப்புக்களில் இது 10 சதவீதமாகும்). ஏப்ரல் 19 வாக்கில், 5 நிறுவனங்கள், தனித்தனியாக அல்லது கூட்டு சேர்ந்து டெண்டர்களை தாக்கல் செய்தன. இத்தாலியின் ENI, போர்சுகலின் GALP, (இதில் ENI ஒரு பெரும்பான்மை பங்குதாரர்), பிரேசிலின் பெட்ரோபாஸ் நிறுவனம், மலேசியாவின் ட்ெரோ நாஸ் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் டெண்டர்களை தாக்கல் செய்தன. இவற்றில் எதுவும் அமெரிக்க அல்லது ஆஸ்திரேலிய நிறுவனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த காலகட்டத்தில், பெப்ரவரி ஆரம்பத்திலிருந்து அல்-காட்டிரி அரசாங்கத்தில் குழப்பங்கள் தொடங்கின. பிப்ரவரி 8-ல், 350 அதிகாரிகளும் போர்வீரர்களும் தங்களது பணிப்பொறுப்புக்களை உதறிவிட்டு ஜனாதிபதி மாளிகையை நோக்கி அணிவகுத்து வந்தனர். இராணுவத்திற்குள் பாரபட்ச நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறினர். "மனுதாரர்கள்" மார்ச் மாதம் முழுவதிலும் வேலைநிறுத்தம் செய்தனர். இதற்கு பதிலடியாக திலி அரசாங்கம், ஏறத்தாழ 600 பேரை பதவி நீக்கம் செய்தது-இது கிழக்கு திமூர் ஆயுதப்படைகளில் மூன்றில் ஒரு பகுதியாகும். இப்படி ஒட்டுமொத்தமாக, பதவி நீக்கம் செய்தது, கலவரத்தை கிளப்பிவிட்டது, அது, ஒரு குழப்பமாக, ஆயிற்று, இதை ஆஸ்திரேலியாவினால் பயிற்சி அளிக்கப்பட்ட இராணுவ கிளர்ச்சிக்காரர் மேஜர் அல் பிரட்டோ ஆல்விஸ் ரெய்னாடோ விரைவில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் அவர் குஸ்மாவோ, பிரதமர் அல்-காட்டிரியை நீக்காவிட்டால், ஒரு கொரில்லாப் போர் நடத்தப் போவதாக அச்சுறுத்தினார்.

மார்ச் 22-ல் ஆஸ்திரேலிய படைகள் கடற்பகுதியில் போர் கப்பல்களில் ஏற்கெனவே, இருந்த நேரத்திலேயே, அல்-காட்டிரி வெளியிட்ட அறிவிப்பில் ENI, இத்தாலிய-போர்சுகள் நிறுவனங்களின், கூட்டு அமைப்பு 6 துரப்பணப்பகுதிகளில் 5 துரப்பணப்பகுதிகளின் உரிமைகளை வென்றெடுத்திருப்பதாகவும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம், மிச்சமுள்ள ஒரு கிணற்றின் துரப்பண உரிமைகளை பெற்றிருப்பதாகவும் அறிவித்தார். தனது அரசாங்கம் இந்த ஆண்டு இறுதியில் மேலும், கடற்பகுதி ஆய்வுகளுக்கான பேரங்களை கோரப் போவதாகவும் அறிவித்தார்.

ஆஸ்திரேலிய துருப்புக்கள் நடமாட்டத்தால், சீனாவிற்கு குஸ்மாவோ தனது பயணத்தை இரத்து செய்தார். சீனாவின் ஜனாதிபதி ஹீ ஜிந்தாவோ அழைப்பின் பேரில் மே 29 முதல் ஜூன் 3 வரை சீனாவில் பயணம் செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். அந்த பயண நிகழ்ச்சி நிரலில், எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண நடவடிக்கைகளில் பெய்ஜிங்கின் அக்கறைகள் இடம்பெற்றிருந்தன.

துருப்புக்களையும், போலீசாரையும் அனுப்பியதன் மூலம் ஹோவர்ட் அரசாங்கம் திமோர் கடல்பகுதியிலும், விரிவான இந்தோனேஷிய தீவுப்பகுதிகளிலும் தனது நலன்களை பாதுகாக்க முயன்றது. திமோரின் "இறையாண்மையை" மதிப்பதாக ஒப்புக்கு வாய்வீச்சு காட்டினாலும், கடைசியாக அதன் தலையீடு நீடித்திருப்பதும், பெருகிக்கொண்டு வருவதும் திமோர் மக்கள் நெடுங்காலமாக துன்பத்தில் தவிப்பதன் மீதான ஆஸ்திரேலிய ஏகாதிபத்திய சூழ்ச்சிகளின் நீண்ட வரலாறாகும்.

இதற்கு அடிப்படையாக அமைந்துள்ள செயல்திட்டம் சென்ற வாரம் புல்லட்டின் செய்தி இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் (ADF) ஒரு இரகசிய, குறிப்பிலிருந்து அம்பலத்திற்கு வந்திருக்கிறது. 2001 மே 10-ல் வெளியிட்டுள்ள, பாதுகாப்பு படையின் தலைவருக்கான இந்த இரகசிய குறிப்பில் விளக்கப்பட்டிருக்கிறதாவது, தத்தி தளர்நடை போட்டுக் கொண்டுள்ள திமோர் அரசாங்கம் மற்றும் அதன் இராணுவத்தை, ஆஸ்திரேலியாவின் நலன்களை போதுமான அளவிற்கு பேணிக்காக்கின்ற வகையில் வளைப்பது இப்போது ஆஸ்திரேலிய இராணுவம் அங்கு அனுப்பப்பட்டிருப்பதன் பிரதான குறிக்கோளாகும் என்பதை தெளிவாக சந்தேகத்திற்கு இடமின்றி தெரிவிக்கிறது.

"முதலாவது குறிக்கோள்" ஆஸ்திரேலியாவின் விரிவான மூலோபாய நலன்களை கிழக்கு திமோரில் பின்பற்றுவது அதாவது, மறுப்பது, இடம்கொடுப்பது, மற்றும் ஈர்ப்பது. மறுப்பது என்ற மூலோபாய அக்கறை என்னவென்றல், எந்த வெளிநாட்டு வல்லரசும், கிழக்கு திமோரில் ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு செல்வாக்கை பெற முடியாதவாறு செய்வது, அதோடு சேர்த்து துணை குறிக்கோளாக, கிழக்கு திமோர் மீது, ஆஸ்திரேலியாவிற்கு அதிக அளவில் தனது செல்வாக்கை பயன்படுத்தும் நிலையை உருவாக்குவது, குறிப்பாக, ADF-க்கு அந்த வழியை ஏற்படுத்துவது. கிழக்கு திமோரின் முடிவெடுக்கும் நடைமுறைகளில் ஓரளவிற்கு, தனது செல்வாக்கை ஆஸ்திரேலியா நிலைநாட்டுமானால் ஆஸ்திரேலியாவின் மூலோபாய அக்கறைகள் பாதுகாக்கப்படவும் முடியும் பின்பற்றப்படவும் முடியும்" என்று அந்த இரகசிய குறிப்பு தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்தபடி ஊடகங்கள் இந்த இரகசியக் குறிப்பு மற்றும் அதன் விளைபயன்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் இருட்டடிப்பு செய்துவிட்டன. அந்த இரகசிய குறிப்பு, ADF-ன் மூலோபாய சர்வதேச கொள்கைப் பிரிவினால் எழுதப்பட்டது. அது ADF, கிழக்கு திமோர் பாதுகாப்பு படை வளர்ச்சியை வடிவமைப்பதில் "பாதுகாப்பு ஒத்துழைப்பு" வழங்குவதற்கான திட்டமாகும். அப்படியிருந்தாலும் அது, இரத்தினச் சுருக்கமாக, ஹோவர்ட் அரசாங்கமே வகுத்துள்ள ஆஸ்திரேலிய கொள்கையின் ஒட்டுமொத்த நோக்குநிலையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

Top of page